20 அக்டோபர், 2008

சாரு டிகிரி - வேற்றுக்கிரக வாசி!


அன்பில்லாத வாசுகி!

வா சுகி என்று உன்னை அழைக்க ஆசைதான், செருப்பால் அடிப்பாயோ என்று பயந்து 'வா'வுக்கும் 'சு'வுக்கும் இடைவெளி விடாமல் வாசுகி என்றே அழைக்கிறேன். நீ இப்பிரதியை வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில் என்னை கட்டியணைத்து உதடுகளில் முத்தமழை பொழிய நினைத்திருக்கலாம். முதுகில் கத்தியால் குத்த நினைத்திருக்கலாம். உன்மத்தம் பிடித்து என் தலைமுடியை உலுக்கி தவடையில் அறைய நினைத்திருக்கலாம். நீ தோழியா இல்லை காதலியா என்று பாட்டுப்பாடி பெண்ணிடம் தன் உள்ளத்தினை திறந்தவனை காவல்துறை கைது செய்திருக்கிறது. எக்சிஸ்டெண்சியலிஸ்ட் முனியாண்டியின் பிரதிகளை ஒன்பதாவது நூற்றாண்டு செத்த மூளை கலைத்துப் போட்டதைப் போல என்னுடைய பிரதிகளையும் பதினெட்டாம் நூற்றாண்டின் பழுதடைந்த கிட்னி சீட்டுக்கட்டின் சீட்டுகளைப் போல சிதறவிட்டிருக்கிறது. சரியாக ஒன்பது சீட்டுகள். மீதி எங்கே? நல்லவேளை பூக்கோ அயல்நாட்டில் பிறந்து, வாழ்ந்து, மடிந்துவிட்டார். பூக்களே பூக்களே என்று மரத்தை சுற்றி டூயட் பாடும் தமிழ்பட கதாநாயகன்களை பார்த்து ஏன் தெலுங்குகாரர்கள் சிரிக்கிறார்கள். பூக்கு என்ற வார்த்தைக்கு தெலுங்கில் என்ன பொருள் என்று யாராவது அழகிய இளம் தெலுங்குப் பெண்ணிடம் கேட்டுப்பார்த்தால் நாணுவாளா? சினம் கொள்ளுவாளா? சிணுங்குவாளா?. இவ்வார்த்தைக்கு என்ன பொருளென்று பொதுவெளியில் தமிழில் எழுதினால் என்னை தமிழர்கள் கல்லெடித்து அடிப்பார்களா? பூவால் வருடுவார்களா? நான் ஏன் மனநோயாளியாக படைக்கப்படவில்லை? உலக மகிழ்ச்சியையெல்லாம் ஒரு கோப்பை மதுவில் அடக்கி ஒரே மூச்சில் குடித்து கள்வெறி கிளர்த்தெழ ஆனந்த தாண்டவம் ஆடியிருக்கலாமே? எல்லாம் சரி. எழுத்துக்களை எழுத்துக்களால் எழுத்தாய் எழுத முயற்சித்து எழுத இயலாமல் எழுத்தை பயிற்சித்து எழுத்தை பரிட்சீத்து எழுத்துக்களாய் நானே மாறினாலும் எழுத முடியாமல் தோற்று வெட்கி தலைகுனிந்து எழுதி எழுதி செத்துக்கொண்டிருக்கிறேன். நான் சோம்பேறி. யாராவது எழுத்தாய் மாறி எழுத்துக்களை எழுதுங்கள். வாசிக்க மட்டும் செய்கிறேன்.


* - * - * - * - * - * - * - *


சாருவை நான் பதிவர் சந்திப்புக்கு சாட்டிங் மூலமாக அழைத்திருந்ததால் ஏற்பட்ட சர்ச்சையின் போது சாருவே போன் செய்திருந்தார். 'நான் அழைத்ததில் என்ன தவறென்று' நான் கேட்டிருந்ததை பார்த்து ரொம்ப பாவமாகிவிட்டது என்று சொல்லியிருந்தார். 'அழைப்பு' குறித்த மரபுகள் குறித்தும் போதித்தார். அவர் வாழ்வில் நடந்த சில பல உதாரணங்களை சுட்டியும் காட்டினார். நான் உங்களை எதற்காகவாவது அழைப்பதாக இருந்தால் நான் கடைப்பிடிக்கும் தார்மீக மரபுகளை கடைப்பிடிப்பேன் என்றும் சொல்லியிருந்தார். அதன்படியே கடந்த சனிக்கிழமை நடந்த ஜீரோ டிகிரி ஆங்கில பதிப்பின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தொலைபேசி அழைத்தார். நிகழ்ச்சிக்கு இருதினம் முன்பாக தொலைபேசி இன்னொரு முறை நினைவுறுத்தவும் செய்தார். ஒரு வாசகனுக்கு எழுத்தாளன் தரும் உயர்ந்தபட்ச கவுரவம் இதுவென்றாலும் அவரை பதிவர் சந்திப்புக்கு அழைத்தபோது நான் செய்த தவறு எதுவென்பதை அவரது செயலால் செருப்பால் அடித்தது மாதிரி சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏற்கனவே அவரது எழுத்துக்களுக்கு ரசிகன். இப்போது அவருக்கும் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன், ஆத்திகம் - திராவிடம் மாதிரியான விஷயங்களில் அவரது கருத்துக்கள் பிடிக்கவில்லையென்றாலும் கூட.


ஒரு காலத்தில் டிகிரி என்ற சொல்லைக் கேட்டதுமே டிகிரி காப்பி தான் நினைவுக்கு வரும். அம்மாவழி சின்னப் பாட்டனார் சிறுவயதில், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த ஒரு அய்யர் மெஸ்ஸில் டிகிரி காப்பி வாங்கித் தருவார். அவரும் அனுபவித்துக் குடிப்பார். தஞ்சையில் பிறக்கவேண்டிய உல்லாசவாசி. தப்பித்தவறி உத்திரமேரூருக்கு அருகில் பிறந்து தொலைத்தார். அவரால் நானும் காஃபி பிரியனானேன். வீட்டில் அனைவருக்கும் தேநீர் பிடித்தாலும், எனக்கு மட்டும் எப்போதும் காஃபி தான். காஃபியை குடிக்கும்போது கசப்பாக உணரவேண்டும். குடித்து முடித்தபின் உதடுகளை நாக்கால் தடவினால் லேசாக தித்திக்க வேண்டும். எனக்குப் பிடித்த காஃபிக்கான இலக்கணம் இது. எனக்காகவென்று அம்மா ஸ்பெஷலாக ஃபில்டர் கூட வாங்கி வைத்திருந்தார். இப்போது இன்ஸ்டண்ட் காஃபிக்கு மாறி சில ஆண்டுகளாகிறது.


எனவே இப்போதெல்லாம் டிகிரி என்ற வார்த்தையைக் கேட்டால் காஃபிக்குப் பதிலாக சாரு நினைவுக்கு வருகிறார். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் சாருவின் ஸீரோ டிகிரியை முதல்முறை வாசித்தபோது மனநிலை சில வாரங்களுக்கு பாதிக்கப்பட்டது. மூளை லட்சம் தடவை கிறுகிறுத்தது. ஒரு கோடி அபின் வில்லைகள் தரக்கூடிய போதையை அப்பிரதி தந்தது. இதன் ஆங்கில மொழியாக்கமும் அதே வாசனையோடு, அதே போதையோடு, அதே கிறுகிறுப்பை அட்சரம் பிசகாமல் தருகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ஸீரோ டிகிரியை வாசித்து தலைமுடியை பிய்த்துக் கொண்டு அலைகிறேன் என்று சொன்னார். சாருவை புதியதாக வாசிக்க நினைப்பவர்கள் ராஸலீலாவை முடித்துவிட்டு ஸீரோ டிகிரிக்கு வருவது நலம். மனதளவில் யதார்த்த அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கு தயாராக முடியும். அதிர்ச்சி = ஷாக். புத்தகம் ஷாக்கடிக்குமா என்று கேட்டால் ஸீரோ டிகிரி ஷாக்கடிக்கும் என்றே சொல்லுவேன். அப்போது ராஸலீலா? சில சமயம் தலையை தடவிக் கொடுக்கும். சில சமயம் தலையை நீருக்கடியில் அழுத்தி மூச்சு திணறவைக்கும்.


ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் பிளாஃப்ட் பப்ளிகேஷன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. ஸீரோவும் சூன்யம் தான். சூன்யத்தின் நிறம் கருப்பு. அதனாலோ என்னவோ நிகழ்ச்சியின் தீமும் கருப்பு. மேடையில் 'நெப்போலியன்' பாட்டிலில் செடியோடு மலர்ந்திருந்த ரோஜாவின் நிறமும் கருப்பு. மேடையின் பேக்டிராப் கருப்பு. சாரு அணிந்திருந்த சட்டையும் கருப்பு. ஐம்பத்தி நான்கு வயதான கமலஹாசனின் இளமைத்தோற்றத்துக்கு சிலிர்க்கிறோம். அவரை விட மூன்று வயது அதிகமான சாரு கமலை விட இளமையாக தெரிகிறார். இன்னும் ஏன் இவரை சினிமாக்காரர்கள் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடித்த பாத்திரத்தைப் போன்ற பாத்திரங்களில் சாரு நடித்தால் அள்ளிக்கொண்டுப் போகும்.
புத்தகத்தின் சில அத்தியாயங்களை தமிழில் எழுதிய சாருவும், மலையாளத்தில் எழுதியவரும், ஆங்கிலத்தில் எழுதியவர்களும் வாசித்துக் காட்டினார்கள். மொழிமாற்றமாக (Translation) இல்லாமல் மொழியாக்கமாக (Transcreation) செய்யப்பட்டிருப்பதாக விழாவுக்கு வந்திருந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டார்கள். கலாஸ்ரீ, நிலாஸ்ரீ அத்தியாயத்தை வாசிக்கும்போதெல்லாம் சாரு சரியான பிக்கப்பில் இல்லை. சாருவின் கம்பீரத் தோற்றத்துக்கு ஏற்ற சிம்மக்குரல் அவருக்கு இல்லையோ என்ற தோற்றம் எழுந்தது. மனிதர் மென்மையாக, மெதுவாகப் வாசித்தார். சாரு ரசிகர்கள் பட்டா போட்டு அடிக்கடி வாசிக்கும் அந்த 'எலக்ட்ரிக் சுடுகாடு' அத்தியாயம் வந்தபோது குரலை உயர்த்தி ஏற்ற இறக்கத்தோடு தமிழின் புனிதவார்த்தைகளை சாரு உச்சஸ்தாயியில் வாசித்தபோது அப்ளாஸ் அள்ளிக்கொண்டு போனது. அந்த அத்தியாயத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தது ஆச்சரியமல்ல. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டார்கள். Pussy, Bastard, pitch, fuck, மானே, தேனே போட்டு எப்படியோ அசல் பிரதியில் இருந்த அம்சங்களை கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். அந்த அத்தியாயத்துக்கு மட்டும் மூன்று பாட்டில் ரம் செலவாகியிருக்கும் என்று தெரிகிறது. அதுபோலவே 1930களின் பிராமண குடும்பத்து தமிழை மலையாளம் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்வதற்குள் டவுசர் கிழிந்திருக்கிறது.


ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பதிப்பை மட்டும் லத்தின் அமெரிக்க எழுத்தாளர் கேத் ஆக்கருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். தமிழ் பதிப்பை அவரது 'அம்முவுக்கு' சமர்ப்பித்திருந்தார் என்பதாக நினைவு. கேத் ஆக்கர் தன் உடலையே பரிசோதனையாக்கி, விளைவுகளை எழுத்தாக்கியவர் என்று சாரு குறிப்பிட்டார். ராஸலீலா படித்தவர்கள் சாருவும் அத்தகைய எழுத்தாளர் தான் என்பதை உணர முடியும். ஸீரோ டிகிரி ஆங்கிலப் பிரதியை வாசித்த அமெரிக்கர்கள் சிலர் சாரு நிவேதிதா ஒரு பெண் எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இப்பிரதி மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளில் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்கள் நூற்றி சில்லறை தான் இருந்ததாம். ஸீரோ டிகிரி மலையாளத்தில் வந்தபின் தீவிர இலக்கிய வெறி கொண்ட மலையாளிகள் தமிழிலும் தீவிர இலக்கியம் குறித்த சில முயற்சிகள் நடந்து வருவதாக அறிந்தார்களாம். ஸீரோ டிகிரிக்கு பின்னர் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கை கடந்த ஒன்றரை நூற்றாண்டு கால மொழிமாற்ற நூல்களை விட அதிகம் என்று மலையாள எழுத்தாளர் சக்காரியா குறிப்பிட்டார். தமிழிலக்கியத்தில் சாருவுக்கான இடம் எதுவென்பதை சக்காரியாவின் அந்த கருத்து திடமாக வெளிப்படுத்தியது.

18 அக்டோபர், 2008

ஹாய்.. ஹாய்.. ஹாய்..

சில நாட்களாக பதிவெழுத முடியவில்லை என்றில்லை, பதிவெழுத பிடிக்கவில்லை. இதுவரை எழுதிய நானூற்றி சொச்சம் பதிவுகளை அபவுட் டர்ன் எடுத்து திரும்பிப் பார்த்தபின், அங்கு கொட்டிய குப்பைகளை வேறு வேறு தினுசில் தான் புதியதாக கொட்டப்போகிறேன் என்று தோன்றியது. புதிய வார்த்தைகளோடு, புதிய நடையில் எழுத எல்லோரையும் போல ஆசையாக இருப்பதால் கொஞ்சம் விரல்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று எண்ணம். சங்க காலத்திலிருந்தே வாசி, வாசி என்று கூறி சில ஆபாச வார்த்தைகளில் தொடர்ந்து திட்டி வருகிறார் பாலா அண்ணா.

கடந்த ஒரு ஆண்டாக படுக்கையறை லைப்ரரியில் சேர்ந்துவிட்ட புத்தகங்களை ஒட்டுமொத்தமாக வாசிக்க முடியாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாகவாவது வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. அதுவுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சிக்கொள்ளத்தக்க நிறைய பிரமோஷன்கள். அடுத்த ஆண்டு மே மாதம் இறுதியிலோ, அல்லது ஜூன் ஆரம்பத்திலோ கிடைக்கப் போகும் பெரிய பிரமோஷனுக்காக தவம் இருந்துகொண்டிருக்கிறேன்.

இந்த ஒருவாரமாக தொடர்ச்சியாக பதிவெழுதாததால் என்னென்ன மாற்றங்கள் விளைந்திருக்கிறது என்று பார்த்தோமானால்...

- உலகம் வழக்கம் போலவே சூரியனை சுற்றி வருகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

- ரேஷன் கடையில் அரிசி ஒரு ரூபாய்க்கு தான் இன்னமும் கிடைக்கிறது.

- பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது.

- ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் சரியான நேரத்தையே காட்டுகிறது.

- ராஜபக்‌ஷே திருந்திவிடவில்லை.

- அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

- பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.

- தமிழ்மணத்தில் 'பெருசு' பதிவரால் வழக்கம்போல உயர்சாதியுணர்வு ஊட்டி வளர்க்கப்படுகிறது.

- நந்தனம் சிக்னலில் டிராபிக் ஜாம் குறைந்தபாடில்லை.

- ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை விட அதிகமாக தீபாவளிக்கூட்டம்.

எல்லாமே வழக்கப்படிதான் நடந்து வருகிறது. 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்' ரேஞ்சுக்கு எதுவும் நடந்துவிடவில்லை என்பதால் நான் எழுதாவிட்டால் யாருக்கும் நஷ்டமுமில்லை, லாபமுமில்லை. பிரபுசங்கர் என்ற நம்பர் எஸ்.எம்.எஸ். மூலமாக ஏன் எழுதவில்லை என்று கேட்டார். பெங்களூரிலிருந்து ஒரு வாசகியும் (நிஜமாத்தான்) தொடர்ந்து எழுதச்சொல்லி வற்புறுத்தினார். அவர்களுக்காக மட்டும் இந்தப் பதிவு...

பின்னூட்டத்தை வெளியிட முடியாத அளவுக்கு சோம்பேறித்தனமாக இருப்பதால் நண்பர் ஒருவரிடம் பாஸ்வேர்டு கொடுத்து பின்னூட்டங்களை வெளியிட சொல்லப்போகிறேன். எனவே இங்கு பின்னூட்டம் போடுபவர்கள் லக்கிலுக் பின்னூட்டத்தை வெளியிடாமல் ஆணவமாக செயல்படுகிறார் என்று தனிப்பதிவு போட்டு திட்டிக்கொள்ள முழு சுதந்திரத்தையும் மனமுவந்து அளிக்கிறேன்.


* - * - * - * - * - * - * - * - * - *

அக்டோபர் 16, நள்ளிரவு 11:59 மணிக்கு ஒரு அனானி நண்பர் மின்னஞ்சலில் அனுப்பிய கேள்வி :

தோழர்! அவ்வப்போது 'தானே கேள்வி தானே பதில்' எழுதி வருகிறீர்கள். மற்றவர்களை கேள்வி கேட்க சொல்லி வாரம் ஒருமுறை பதில் சொல்லலாமே?

பதில் : தங்கள் ஆலோசனைக்கு நன்றி தோழர். வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் என்னிடம் கேள்வி கேட்பதைத் தவிர்த்து நிறைய உருப்படியான வேலைகள் இருக்குமென நம்புகிறேன். நீங்கள் கேட்டதைப் போல ஒரு கேள்வி பதில் பகுதியை அறிவித்துவிட்டு யாரும் கேள்வி கேட்காமல் நானே பதினைந்து, இருபது ஐடி கிரியேட் செய்து, அதோடு அனானியாகவும் நானே என்னை கேள்வி கேட்டு நானே பதில் சொல்ல நான் என்ன செஃல்ப் எடுக்காத வயாகரா கேஸா?

வீரத்தோடும், தீரத்தோடும் நாமே நம்மை கேள்வி கேட்டு, நாமே பதிலையும் சொல்லிவிடுவோம் தோழர்...

* - * - * - * - * - * - * - * - * - *

ஆர்னிகா நாசர் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் என்று எங்கோ எழுதியிருந்ததை படித்தேன். ஆர்னிகா நாசர் ஒரு நல்ல Pulp Fiction எழுத்தாளர் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். தினமலர் டி.வி.ஆர் நினைவுப்போட்டியில் பரிசுபெற்ற அவரது முதல் கதையில் இருந்து, தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது விட்டு விட்டு அவரை தொடர்ந்து வாசித்து வருகிறேன். சில விஞ்ஞான சிறுகதைகள் மற்றும் நாவல்கள் கூட முயற்சித்திருக்கிறார். புதிய புதிய வார்த்தைகளை (உதா : கையளித்து) போட்டு சுவாரஸ்யமாக எழுதுவார். ஆனால் அவர் மேஜிக்கல் ரியலிஸம் எழுதினார், அதனால் அவர் போஸ்ட் மார்டனிஸ்ட் என்று சொல்லியிருந்தது மாதிரி அபத்தமான ஸ்டேட்மெண்ட் எதுவுமே இல்லை. போஸ்ட் மார்டனிஸமும் நூற்றுச் சொச்சம் இஸங்களில் ஒரு இஸம் தான். இஸம் எல்லாமே போஸ்ட் மார்டனிஸம் என்று யாராவது புரிந்துகொண்டிருந்தால் அவர்கள் கன்பூசியஸத்தையும் போஸ்ட் மார்டனிஸம் லிஸ்டில் சேர்த்துத் தொலைத்துக் கொள்ளலாம்.

போஸ்ட் மார்டனிஸம் என்பது ஒரு சூழல். இதை புரிந்துகொண்டால் யாராவது ஒரு கோடி ரூபாய் பரிசோ, புரிந்துகொள்ளாவிட்டால் மரணத்தண்டனையோ கிடைக்கப்போவதில்லை. ரொம்ப புரிந்துகொண்டது மாதிரி எக்ஸ்பிரஷனிஸம், இம்ப்ரெஸனிஸம் கந்தாயங்களை விக்கிபீடியாவில் படித்து, தானே சிந்தித்தது மாதிரி அதையெல்லாம் கொடூரமாக தமிழாக்கம் செய்து, "இதெல்லாம் போஸ்ட் மார்டனிஸம்" என்று எழுதி தன்னை அறிவுஜீவி என்று காட்டிக்கொள்ள யாராவது முயற்சித்தால் அவர்களை விட பெரிய காமெடியன்கள் தமிழ் வலையுலகில் வேறு யாரும் இருந்துவிட முடியாது. எம்.ஜி.சுரேஷ் எழுதிய பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் தொடர் வரிசை புத்தகங்களை கூட இன்னும் வாசிக்காததால் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கக்கூட எனக்கு
அருகதையில்லை என்று நினைக்கிறேன்.

போஸ்ட் மார்டனிஸம் குறித்து வலையில் வளர்மதி விளக்கமாக எழுதியிருக்கிறார். ஓரிருமுறை அப்பதிவுகளை வாசித்தால் புரியும். பைத்தியக்காரனும் கொஞ்சம் எளிமைப்படுத்தி உதாரணங்களோடு எழுதியிருக்கிறார். பைத்தியக்காரன் பதிவுகளை புரியும்படி எழுதினாலும், பின்னூட்டங்களை மட்டும் டவுசர் கிழிக்கும் வகையில் எழுதுவார். மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் என்பது மாதிரி சுகுணாதிவாகரும், ஜ்யோவ்ராம் சுந்தரும் மண்வாசனையோடும், தண்ணி வாசனையோடும் அவ்வப்போது எழுதிவருகிறார்கள். ஜமாலன், நாகார்ஜூனன் போன்றவர்கள் எழுதுவதை தமிழ் அகராதி வைத்துக்கொண்டு வாசிக்கலாம். என்னைப் பொறுத்தவரை செந்தழல் ரவி தான் சூப்பர் டூப்பர் போஸ்ட் மார்டனிஸ்ட். கொடுமை என்னவென்றால் அவர் ஒரு போஸ்ட் மார்டனிஸ்ட் என்பது அவருக்கே தெரியாது.

14 அக்டோபர், 2008

உண்மையாரின் புனிதப்போர்!

கன்னிராசி படத்தில் ஒரு காட்சி.

ஜனகராஜ் ஒரு பாடகர். தூர்தர்ஷனில் மிக அருமையாக ஒரு நிகழ்ச்சியில் பாடியிருப்பார்.

மறுநாள் தெருவில் நடந்து செல்லும்போது ஒருவன் உடைந்துப் போன அவனது டிவியை சைக்கிளில் வைத்து எடுத்து வருவான். அவனிடம் ஜனகராஜ் கேட்பார்.

“என்னய்யா ஆச்சி? டிவி உடைஞ்சிப் போயிருக்கு!”

“நேத்து எவனோ ஒருத்தன் டிவியிலே பாடியிருக்கான். அதைப் பார்த்து டென்ஷன் ஆயி என் பொண்டாட்டி டிவியை போட்டு உடைச்சிட்டா. பாட்டு பாடுனவன் மட்டும் நேர்லே கிடைச்சான்னா...” என்று சைக்கிள்காரர் பல்லை நறநறத்துக் கொண்டே போவார்.

* - * - * - * - * - * - * - * - * -



இதுவரை எப்படியெல்லாமோ டவுசர் கிழிந்து தாவூ தீர்ந்திருக்கிறது.. ஆனால் இந்த லெவலுக்கு ஆனதில்லை :-(

உலகத் திரைப்படங்கள் குறித்து ஐம்பது, அறுபது பக்கங்களுக்கு மிகாமல் விமர்சனம் எழுதுபவர், பல திரையுலக ஆட்களோடு நட்பு கொண்டவர், நீண்ட ஆண்டுகளாக கலைத்துறையோடு தொடர்புடையவர்.. இப்படிப்பட்டவர் எடுத்திருக்கும் படம் என்பதால் அமர்க்களமாக இருக்கும் என்று நினைத்தேன், நினைப்பில் மண்ணை வாரி போட்டுவிட்டார் உண்மையார்.

ரொம்ப சிக்கனமாக எடுத்திருந்ததால் கொஞ்சம் சுமாராக வந்திருக்கும் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கான்செப்டே இல்லாமல் பண்ணிரண்டு நிமிடமும் வெறும் வாய்கள் மட்டும் பேசிக்கொண்டேயிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல? க்ளைமேக்ஸை நச்சென்று முடிக்க உண்மையார் நினைத்திருக்கலாம், ஆனால் பார்ப்பவர்களுக்கு 'நச்சு'வாக தான் முடிகிறது.

ஒளிப்பதிவை சுமார் என்று கூட சொல்லமுடியாத வகையில் மொக்கையாக வந்திருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பு என் சித்திக்கு கல்யாணம் நடந்தபோதே இதைவிட சூப்பரான ஒளிப்பதிவை அந்த காலத்து வீடியோ கேமிராமேன் எடுத்திருந்தார். வாய்களை மட்டுமே காட்டுவது ஒரு நவீன யுக்தி என்று உண்மையாருக்கு யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. சில வாய்களை குளோசப்பில் பார்க்க ரொம்ப கண்ணறாவியாக இருக்கிறது.

கொக்கோ கோலா, பெப்ஸி, இளநீர் என்று ஒவ்வொரு குளிர்பானத்தையும் ஒரு குளோசப் அடித்து காட்டும்போது பெரியதாக ஏதோ இதைவைத்து கும்மியடிக்கப் போகிறார் என்று நினைத்தால் க்ளைமேக்ஸில் ஆஸிட்டை காட்டுவதற்கான முன்னோட்ட காட்சிகளாம். என்ன கொடுமை சார் இது?

மொக்கை கான்செப்ட், மோசமான ஒளிப்பதிவு, உணர்ச்சியே இல்லாத ஒலிப்பதிவு, நாடகத்தனமான நடிகர்கள் என்று எல்லாவற்றையும் கூட மன்னித்துவிடலாம், முழம் முழமாக உண்மையார் எழுதிய வசனங்களை மட்டும் மன்னிக்கவே முடியாது. பண்ணிரண்டு நிமிடமும் கொடூரமாக நாலு பேர் பேசிக்கொண்டேயிருப்பதை குறும்படம் என்று சொன்னால் குறும்படங்களை எல்லாம் என்னவென்று சொல்வது? :-(

க்ளைமேக்ஸில் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவரைப் பார்த்து இயக்குனர் உண்மையாரின் குரல் சொல்கிறது, “மவனே, உனக்கு ஆசிட்டு தாண்டா!”. நியாயமாக பார்க்கப் போனால் இந்த குறும்படத்தை எடுத்த இயக்குனர் மீது தான் பார்வையாளர்கள் ஆசிட் வீச்சு நடத்த வேண்டும்.

குறும்படத்தின் தலைப்பை ‘புனிதப்போர்' என்று வைத்து பெண்களுக்கு எதிரான மனோபாவம் கொண்ட கதாபாத்திரங்களை சித்தரித்திருப்பதின் மூலம் உண்மையாரின் முகமூடி கிழிந்து, உண்மையான அவரது இந்துத்துவா கோரமுகம் பல்லிளிக்கிறது. எது எதற்கோ நுண்ணரசியலை கண்டறிந்து கண்டிப்பவர்கள் இன்னமும் உண்மையாரின் சிறுபான்மையினருக்கு எதிரான நுண்ணரசியலை கண்டிக்காதது வெட்கக்கேடு மட்டுமல்ல, வேதனையானதும் கூட.

* - * - * - * - * - * - * - * - * -

நல்லவேளை, உண்மையாரின் புனிதப்போரை இன்றுதான் அவரது வலையில் பார்த்தேன். டிவியில் பார்த்திருந்தால் கன்னிராசி கதை தான் ஆகியிருக்கும், என் வீட்டு டிவி தப்பித்தது :-)

23 செப்டம்பர், 2008

பரபரப்பான பத்து நிமிடங்கள்!



ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை பார்த்தவர்கள் மின்னலை கண்டதாக சொல்கிறார்கள். சபாஷ் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை. ஷூமேக்கர் வேகத்தில் ஒரு போலிஸ்காரர் காரை ஓட்டிச்செல்ல காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு உயிரைக் காக்க...

ஹிதேந்திரன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன். அப்பா அசோகனும், அம்மா புஷ்பாஞ்சலியும் மருத்துவர்கள். மகாபலிபுரத்துக்கு அருகில் இருக்கும் திருக்கழுக்குன்றத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அப்பாவின் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பனை சந்தித்து திரும்பியவனுக்கு எமன் ஒரு மீன்பாடி வண்டி ரூபத்தில் வந்தது. எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தில் தலையில் ஹிதேந்திரனுக்கு அடிபட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டவன் நினைவிழந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவுக்கு கொண்டு செல்லப்பட்டான்.

பரிசோதித்த மருத்துவர்கள் கை விரித்தார்கள். ஹிதேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டது (பிரைன் டெத்). கிட்டத்தட்ட மரணம். இதயம் மட்டுமே துடிக்கும். பெற்றோரும் மருத்துவர்கள் ஆயிற்றே? பிரச்சினையை புரிந்துகொண்டார்கள். தன் மகனின் உடல் உறுப்புகளை தானமாக தர விரும்பினார்கள். கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டன. புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா நகரில் இருக்கும் செரியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனுக்கு இதயம் அவசரமாக தேவைப்பட்டது. ஹிதேந்திரனின் இதயம் அகற்றப்பட்டு 20 நிமிடங்களில் அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் 20 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் அடைவது சாத்தியமா?

மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையை அணுகினார்கள். பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்ட கூடுதல் ஆணையாளர் சுனில் உடனடியாக ஒரு உதவி ஆணையாளரை அனுப்பி வைத்து உதவுமாறு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் மனோகரன் இந்த ஆபரேஷனுக்கு திட்டமிட்டார். தன் சக அதிகாரிகளோடு தொடர்புகொண்டவர் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு போக்குவரத்து சிக்கல் இல்லாதவாறு திட்டம் தீட்டினார். சிக்னல்கள் முழுக்க போலிசாரின் கட்டுப்பாட்டுக்கு சில நிமிடங்களில் வந்தது. ஒரு ஆம்புலன்ஸில் இதயத்தை எடுத்துச் செல்லவும், அந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட ஆக்சண்ட் காரில் ஏ.சி. மனோகரனே முன்செல்லவும் திட்டம் தீட்டப்பட்டது.

ஹிதேந்திரனின் இதயத்தை ஒரு பெட்டியில் வைத்து படபடப்போடு மருத்துவர்கள் ஓடிவந்தார்கள். படபடப்பில் இருந்ததால் ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு பதிலாக ஏ.சி.யின் காரில் ஏறிவிட்டார்கள். ஒரு நொடியை கூட வீணடிக்க விரும்பாத ஏ.சி. தனது டிரைவரான கான்ஸ்டபிள் மோகனை புயல்வேகத்தில் ஓட்ட சொன்னார். ஏ.சி.யின் கார் இலகுவாக செல்ல வழியெங்கும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டிருந்தது. போனில் போலிஸ்காரர்களிடம் பேசியபடியே வழியில் இருந்த தடங்கல்களையெல்லாம் அகற்றினார் ஏ.சி.

மேட்லி ரோடு, தி.நகர் புதிய மேம்பாலம், லயோலா, சூளைமேடு, அமைந்தகரை, அண்ணா வளைவு வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் மோகன் காரை விரட்டினார். திருப்பங்களில் கூட பிரேக்கில் மோகன் காலை வைக்கவில்லை. ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்கவேயில்லை. பொதுவாக போக்குவரத்தில் இந்த தூரத்தை கடக்க சுமார் 50 நிமிடங்களில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை பிடிக்கும். மருத்துவர்கள் கொடுத்திருந்த டார்கெட் 20 நிமிடம். பத்தே நிமிடங்களில் செரியன் மருத்துவமனையை ஏ.சி.யின் கார் அடைந்திருந்தது. ஆறு மணி நேரம் நடந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்!

இனி ஹிதேந்திரனின் இதயம் வாழும்!!

மருத்துவத்துறை காவல்துறையோடு இணைந்து இந்த சாதனையை செய்திருக்கிறது. சென்னையில் மருத்துவத்துறை சாதனைகள் புரிவது ஒன்றும் அதிசயமல்ல என்றாலும், காவல்துறையின் இந்த அதிரடி சாதனை சென்னை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் எங்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு சல்யூட்.

5 செப்டம்பர், 2008

விகடன் தாத்தாவின் பரிசு



பரிசு பெறுவது என்றாலே மகிழ்ச்சி தானே? சிறுவயதில் எவ்வளவோ நாட்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வருவார், ஒரு பேனாவாவது தருவார் என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா ஏமாற்றியிருந்தாலும் இப்பொது விகடன் தாத்தா பரிசு தந்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறார். என் தாத்தா கூட எனக்கு பரிசு எதுவும் தந்ததில்லை. பரிசு என்பதை விட பலரும் உயர்வாக மதிக்கும் பத்திரிகையின் அங்கீகாரம் என்பது தான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. இப்போது நான் கையில் கட்டிக்கொண்டிருக்கும் பாஸ்ட் ட்ராக் வாட்ச் விகடன் தாத்தா பரிசாக தந்தது. நேரம் பார்க்கும்போதெல்லாம் வாட்சுக்குள் இருந்து ‘நேரத்தை ஒழுங்காக பயன்படுத்து' என்று விகடன் தாத்தா அட்வைஸ் செய்வது போலவே இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் கவிதை (?) போன்ற தோற்றமளிக்கும் எனது எழுத்து கால் பக்கத்துக்கும் குறைவான இடத்தில் வந்திருந்தது. புத்தகத்தை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருந்த ஒவ்வொரு வீடாகப் போய் “விகடனில் என் எழுத்து வந்திருக்கிறது” என்று ஜம்பம் அடித்துக் கொண்டேன். வாசித்த சில பேர் பாராட்டுவதற்கு பதிலாக (என் குடும்ப உறுப்பினர்கள் உட்பட) நல்லவேளையாக காறி உமிழாமல் விட்டதே பெரிய விஷயமாக போய் விட்டது. ம்ம்ம்.. ஞானச்சூனியங்களுக்கு எங்கிருந்து பின்நவீனத்துவ இலக்கியங்கள் புரியப் போகிறது? அதன் பின்னர் அப்படி ஒரு கவிதை எழுதியதையே மறந்துவிட்டிருந்தேன்.

இன்று மதியம் சாப்பிட்டு முடித்தபிறகு கண்ணை திறந்துகொண்டே தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு போன். ”விகடனில் இருந்து ஜி.எம். சீனிவாசன் பேசுறேன். நீங்க ரெண்டு வாரத்துக்கு முன்னாடி யூத் செக்‌ஷனில் எழுதியிருந்த கவிதைக்கு ஒரு வாட்ச் ப்ரைஸ் கிடைச்சிருக்கு. ஆபிஸ் வந்து கலெக்ட் பண்ணிக்குங்க”. தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையோடு மரியாதையாகவே “சரிங்க சார்.. ஓக்கே சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்..” என்று சொல்லி போனை வைத்தேன். எல்லாரும் திட்டுன ஒரு கந்தாயத்துக்கு விகடனாவது, பரிசு கொடுப்பதாவது என்று நினைத்தேன். அதுவும் விகடனின் ஜி.எம். (மார்க்கெட்டிங்) போன் செய்து ஒரு சாதாரண வாசகரோடு பேசுவாரா?

இருந்தாலும் ஒரு நப்பாசை. விகடனோடு தொடர்புடைய வேறொரு நண்பருக்கு தொலைபேசி, ”விகடனில் சீனிவாசன் என்ற பெயரில் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டேன். “இருக்கிறார். அவர் தான் ஓனர்” என்றார் நண்பர். “ஹலோ சீரியஸா கேட்குறேன்” என்று சொல்லி மேட்டரை சொன்னபின்பு, விகடனில் ஜி.எம்.மாக இன்னொரு சீனிவாசன் இருப்பது உறுதியானது. என் அலுவலகத்திலிருந்து பத்து நிமிட இருச்சக்கர வாகன பயண தூரம் தான், ஆனால் வழக்கமாக டிராபிக்கில் முப்பது நிமிடமாகும். ஆர்வம் தாங்காமல் நேராக விகடன் அலுவலகத்துக்கே சென்று விட்டேன்.

பரிசு கிடைத்திருப்பது உண்மைதான் என்று விகடன் ஊழியர் சொன்னபோது நம்பவே முடியவில்லை. முகத்தில் அந்த பிரமிப்பை காட்டாமல் 'எவ்வளவோ பாத்துட்டோம், இதெல்லாம் ரொம்ப சாதாரணம்' என்பது போல நடிப்பது கொஞ்சம் கடினம் தான். விருந்தினரை உபசரிப்பது போல வாசகர்களையும் உபசரிப்பதில் விகடனின் பாரம்பரியம் இன்னமும் கில்லி மாதிரி நின்று ஆடுகிறது. பரிசுக்கு பொறுப்பான அந்த ஊழியர் விகடனின் புதிய வடிவம் பற்றி கருத்து கேட்டார். விலை பதினைந்து ரூபாய்க்கு எகிறிவிட்டதால் சர்க்குலேஷன் குறைந்திருக்கிறதா என்று கேட்டதுக்கு, ”இல்லை, கூடியிருக்கிறது” என்று சொல்லி அதிர்ச்சி அளித்தார்.

பரிசுகள் வழங்குவதில் எப்போதுமே விகடன் குழுமத்துக்கு இணையாக யாருமே இல்லை. பவளவிழா கொண்டாட்டத்தின் போது ஒரு கோடி ரூபாய்க்கு பரிசு வழங்கியிருந்தார்கள். இதெல்லாம் பத்திரிகைத் துறையில் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. இப்போது விலை கூடியிருந்தாலும் லேப்டாப், செல்போன் என்றெல்லாம் அதிரடியாக பரிசுகள் வழங்குவதால் வாசகர்கள் அதிகரித்திருக்கிறார்களாம். சென்னையில் இருக்கும் வாசகர்களுக்கு அவர்களது அலுவலகத்துக்கே வரவழைத்து பரிசு கொடுத்து வருகிறார்கள்.

ஜி.எம். அறையில் விகடனின் உயரதிகாரி ஒருவர் எனக்கு பரிசினை கையளித்தார். ஜி.எம்.மும் விகடனின் புதிய வடிவம் குறித்து கேட்டார். அதுவுமில்லாமல் “புதிய விகடன் குறித்த கருத்துக்களை நேரடியாக விகடன் ஆசிரியரிடமே சொல்லிவிடுங்கள்” என்று போனில் லைனை போட்டு வேறு கொடுத்துவிட்டார். பத்திரிகையாளர்களிடம் பேசுவது என்றாலே எனக்கு கொஞ்சம் உதறல் தான். “விகடன் குறித்த எண்ணங்களை தயவுசெய்து எழுதியோ, நேரம் கிடைத்தால் அலுவலகத்துக்கு வந்து நேரிலோ சொல்லுங்கள். வாசகர்களது விருப்பு, வெறுப்புகளை என்றுமே விகடன் புறந்தள்ளியது இல்லை” என்று விகடனின் ஆசிரியர் அசோகன் சொன்னார். இருவருக்கும் நன்றி சொல்லி வெளியே வந்தேன்.

எனக்குப் பிடித்த கருப்பு நிறத்தில், அசத்தல் ஸ்டைலான டைட்டனின் பாஸ்ட் ட்ராக் வாட்ச் தான் பரிசு. சிலந்தி வலை படமெல்லாம் போட்டிருக்கிறது. ஸ்பைடர் மேன் ட்ரெஸ் போட்டுக்கொண்டு இந்த வாட்ச்சை கட்டிக்கொண்டால் செம மேட்ச்சாக இருக்கும். ஒரே ஒரு குறை. இதில் ஆனந்த விகடன் லோகோ இல்லை. யாரிடமாவது ஆனந்த விகடனின் பரிசு என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். விகடன் தாத்தா படம் பொறித்திருந்தால் கொஞ்சம் கெத்தாக இருந்திருக்கும்.