14 அக்டோபர், 2008

உண்மையாரின் புனிதப்போர்!

கன்னிராசி படத்தில் ஒரு காட்சி.

ஜனகராஜ் ஒரு பாடகர். தூர்தர்ஷனில் மிக அருமையாக ஒரு நிகழ்ச்சியில் பாடியிருப்பார்.

மறுநாள் தெருவில் நடந்து செல்லும்போது ஒருவன் உடைந்துப் போன அவனது டிவியை சைக்கிளில் வைத்து எடுத்து வருவான். அவனிடம் ஜனகராஜ் கேட்பார்.

“என்னய்யா ஆச்சி? டிவி உடைஞ்சிப் போயிருக்கு!”

“நேத்து எவனோ ஒருத்தன் டிவியிலே பாடியிருக்கான். அதைப் பார்த்து டென்ஷன் ஆயி என் பொண்டாட்டி டிவியை போட்டு உடைச்சிட்டா. பாட்டு பாடுனவன் மட்டும் நேர்லே கிடைச்சான்னா...” என்று சைக்கிள்காரர் பல்லை நறநறத்துக் கொண்டே போவார்.

* - * - * - * - * - * - * - * - * -



இதுவரை எப்படியெல்லாமோ டவுசர் கிழிந்து தாவூ தீர்ந்திருக்கிறது.. ஆனால் இந்த லெவலுக்கு ஆனதில்லை :-(

உலகத் திரைப்படங்கள் குறித்து ஐம்பது, அறுபது பக்கங்களுக்கு மிகாமல் விமர்சனம் எழுதுபவர், பல திரையுலக ஆட்களோடு நட்பு கொண்டவர், நீண்ட ஆண்டுகளாக கலைத்துறையோடு தொடர்புடையவர்.. இப்படிப்பட்டவர் எடுத்திருக்கும் படம் என்பதால் அமர்க்களமாக இருக்கும் என்று நினைத்தேன், நினைப்பில் மண்ணை வாரி போட்டுவிட்டார் உண்மையார்.

ரொம்ப சிக்கனமாக எடுத்திருந்ததால் கொஞ்சம் சுமாராக வந்திருக்கும் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கான்செப்டே இல்லாமல் பண்ணிரண்டு நிமிடமும் வெறும் வாய்கள் மட்டும் பேசிக்கொண்டேயிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல? க்ளைமேக்ஸை நச்சென்று முடிக்க உண்மையார் நினைத்திருக்கலாம், ஆனால் பார்ப்பவர்களுக்கு 'நச்சு'வாக தான் முடிகிறது.

ஒளிப்பதிவை சுமார் என்று கூட சொல்லமுடியாத வகையில் மொக்கையாக வந்திருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பு என் சித்திக்கு கல்யாணம் நடந்தபோதே இதைவிட சூப்பரான ஒளிப்பதிவை அந்த காலத்து வீடியோ கேமிராமேன் எடுத்திருந்தார். வாய்களை மட்டுமே காட்டுவது ஒரு நவீன யுக்தி என்று உண்மையாருக்கு யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. சில வாய்களை குளோசப்பில் பார்க்க ரொம்ப கண்ணறாவியாக இருக்கிறது.

கொக்கோ கோலா, பெப்ஸி, இளநீர் என்று ஒவ்வொரு குளிர்பானத்தையும் ஒரு குளோசப் அடித்து காட்டும்போது பெரியதாக ஏதோ இதைவைத்து கும்மியடிக்கப் போகிறார் என்று நினைத்தால் க்ளைமேக்ஸில் ஆஸிட்டை காட்டுவதற்கான முன்னோட்ட காட்சிகளாம். என்ன கொடுமை சார் இது?

மொக்கை கான்செப்ட், மோசமான ஒளிப்பதிவு, உணர்ச்சியே இல்லாத ஒலிப்பதிவு, நாடகத்தனமான நடிகர்கள் என்று எல்லாவற்றையும் கூட மன்னித்துவிடலாம், முழம் முழமாக உண்மையார் எழுதிய வசனங்களை மட்டும் மன்னிக்கவே முடியாது. பண்ணிரண்டு நிமிடமும் கொடூரமாக நாலு பேர் பேசிக்கொண்டேயிருப்பதை குறும்படம் என்று சொன்னால் குறும்படங்களை எல்லாம் என்னவென்று சொல்வது? :-(

க்ளைமேக்ஸில் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவரைப் பார்த்து இயக்குனர் உண்மையாரின் குரல் சொல்கிறது, “மவனே, உனக்கு ஆசிட்டு தாண்டா!”. நியாயமாக பார்க்கப் போனால் இந்த குறும்படத்தை எடுத்த இயக்குனர் மீது தான் பார்வையாளர்கள் ஆசிட் வீச்சு நடத்த வேண்டும்.

குறும்படத்தின் தலைப்பை ‘புனிதப்போர்' என்று வைத்து பெண்களுக்கு எதிரான மனோபாவம் கொண்ட கதாபாத்திரங்களை சித்தரித்திருப்பதின் மூலம் உண்மையாரின் முகமூடி கிழிந்து, உண்மையான அவரது இந்துத்துவா கோரமுகம் பல்லிளிக்கிறது. எது எதற்கோ நுண்ணரசியலை கண்டறிந்து கண்டிப்பவர்கள் இன்னமும் உண்மையாரின் சிறுபான்மையினருக்கு எதிரான நுண்ணரசியலை கண்டிக்காதது வெட்கக்கேடு மட்டுமல்ல, வேதனையானதும் கூட.

* - * - * - * - * - * - * - * - * -

நல்லவேளை, உண்மையாரின் புனிதப்போரை இன்றுதான் அவரது வலையில் பார்த்தேன். டிவியில் பார்த்திருந்தால் கன்னிராசி கதை தான் ஆகியிருக்கும், என் வீட்டு டிவி தப்பித்தது :-)

3 கருத்துகள்:

  1. Unga TV thappicahthu sari... unga computer onnum akalaiyaaaa?

    பதிலளிநீக்கு
  2. உங்களாலதான் நான் பாத்தேன். அவ்வ்வ்வ்வ்!

    பதிலளிநீக்கு
  3. எத்தனை வருசமானாலும் விடாம போட்டு தாக்குறீங்களே... அதுவும் மீள்பதிவு போட்டு..

    பதிலளிநீக்கு