29 அக்டோபர், 2008

இட்லிவடை - இப்போது இத்துப்போன கடை!


இட்லிவடை வலைப்பூ ஆரம்பித்து ஐந்தாண்டுகள் நிறைவு பெறுவதைத் தொடர்ந்து வலைப்பதிவர்களை தன் வலைப்பூவுக்கு விமர்சனம் எழுதச் சொல்லி இட்லிவடை கேட்டுவந்தார். எனக்கு வந்த ஸ்பெஷல் அழைப்பைத் தொடர்ந்து நான் எழுதியிருக்கும் விமர்சனம் இட்லிவடையிலும் வெளிவந்திருக்கிறது. இங்கேயும் வெட்டி ஒட்டுவது வரலாற்று அவசியமென்பதால் ஒட்டிவிடுகிறேன். 2005 வரை வலைப்பதிவுகள் என்றொரு புண்ணிய ஷேத்திரம் இருந்ததே நமக்கு தெரியாது. சிஸ் இண்டியா, தட்ஸ் தமிழ் இணையங்களில் மட்டுமே தமிழர்கள் ஜீவித்திருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தேன். தட்ஸ் தமிழ் கருத்துக் களத்தில் ரஜினி சார்பாக ஒரு தரப்பு கடுமையாக மோதிக்கொண்டிருக்க, பாமக சார்பாக இன்னொரு தரப்பு மும்முரமாக மோதிக்கொண்டிருந்தது. 2006 சட்டமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் அங்கிருந்த உறுப்பினர்கள் பலரும் பல கட்டுரைகளை எங்கிருந்தோ சுட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சில பேர் நாகரிகமாக சுட்ட சுட்டியை தருவார்கள். அதுபோல ஒருநாள் யதேச்சையாக கிடைத்த சுட்டி தான் இட்லிவடை.பிலாக்ஸ்பாட்.காம்.

எனக்குப் பிடித்த நாஷ்டா இட்லிவடையும், ஜமாவான வடகறியும். ஆட்டுக்கால் பாயாவோடு யாராவது இட்லிவடை சாப்பிட்டிருக்கிறீர்களா? உலகின் எந்த நாட்டு சிற்றூண்டியும் இந்த காம்பினேஷனிடம் பிச்சையெடுக்க வேண்டும். இட்லிவடை பெயரைக் கேட்டதுமே ஏதோ சமையல் குறிப்பு எழுதப்படும் இணையம் என்று உடனடியாக நினைத்தேன். அதில் ஏதோ அரசியல் கட்டுரை வந்ததும் ஆர்வத்தில் எட்டிப் பார்த்தேன். விகடன், குமுதம், தந்தி, தினமலர், துக்ளக், தினமணி என்று தமிழகத்தின் பத்திரிகைகள், நாளேடுகளில் இருந்து முக்கியச் செய்திகளை சுட்டுப் போட்டு வந்தது அப்போது தான் தெரிந்தது. அவ்வப்போது அதிரடி நகைச்சுவைக் கட்டுரைகளும், பதிவர்வட்ட பதிவுகளுமாக பட்டாசாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் இட்லிவடை மீது அப்போது எனக்கு நடுநிலையான ஒரு பார்வை இருந்தது. ஆனாலும் இட்லிவடை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல தன்னுடைய அதிமுக - பாஜக - இந்துத்துவ கும்பலுக்கு ஆதரவான சிந்தனைகளை பரப்பி வருகிறதோ என்ற சந்தேகமும் ஒரு புறத்தில் இருந்தது.

தொடர்ந்து இட்லிவடை துக்ளக் மற்றும் தினமணி கார்ட்டூன்களையே தன்னுடைய அடைப்பலகையில் இடம்பெறச் செய்துக் கொண்டிருந்த வேளையில் இட்லிவடைக்கு ஒரு மடல் அனுப்பினேன். முரசொலி கார்ட்டூனெல்லாம் வராதா என்று கேட்டேன். நான் கேட்டதற்காக ஒன்றோ இரண்டோ முரசொலியிலும், தினகரனிலிருந்தும் போட்டிருந்தார். வாசகர் குரலுக்கு அப்போதைக்கு இட்லிவடை நல்ல மதிப்பு கொடுப்பவர்(கள்) என்பதற்கு இது ஒரு சான்று. இட்லிவடையோடு எனக்கு பிரச்சினை ஆரம்பித்தது ஒரு பதிவர் சந்திப்பின் போது. இட்லிவடை ஒரு உளவாளியை அச்சந்திப்புக்கு அனுப்பி போட்டோக்களாக சுட்டுத்தள்ளி சென்சேஷனல் ஆக்கியது. அந்நேரத்தில் பல பதிவர்கள் போலி பிரச்சினை காரணமாக தங்கள் படங்கள் எங்கேயும் வெளிவந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் என்னுடைய புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் இடம்பெறச் செய்ததும் இட்லிவடை தான். அதுவரை தொடர்ந்து இட்லிவடையை வாசித்து பின்னூட்டம் இட்டுக்கொண்டிருந்த நான் அதன்பிறகு இட்லிவடைக்கு பின்னூட்டம் இடுவதை நிறுத்தினேன். அப்பிரச்சினைக்கு பிறகு அனேகமாக ஓரிரண்டு பின்னூட்டங்களை மட்டுமே தவிர்க்க இயலாத நேரங்களில் இட்டிருப்பதாக நினைவு.

இட்லிவடையின் கருத்துக்கணிப்புகள் ஆஹா.. ஓஹோ..வென்று புகழுபவர்கள் நிறைய. என்னைப் பொறுத்தவரை இட்லிவடையின் வாசகர்கள் 95 சதவிகிதம் 'சாம்பார்' பார்ட்டிகள் தான். சாம்பார்கள் மெச்சிக்கொள்ளும் விதமான செய்திகளும், கணிப்புகளும் தான் இட்லிவடையில் வெளிவருகிறது. உதாரணத்துக்கு 2006ல் இட்லிவடை எடுத்திருந்த இந்தக் கருத்துக் கணிப்பை சொல்லலாம் - http://idlyvadai.blogspot.com/2006/01/blog-post_30.html. இக்கணிப்பு எந்தளவுக்கு நடந்தது என்பதை நாமனைவரும் அறிவோம். இட்லிவடையின் கருத்துக் கணிப்புகள் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, நங்கநல்லூர் ஆகிய பகுதிகளின் கணிப்பாக கொள்ளலாம்.

இட்லிவடையின் நகைச்சுவையுணர்வு அபாரமானது. ஒருமுறை பதிவர்களை சினிமாப்படங்களோடு ஒப்பிட்டு எழுதிய பதிவு, உலகம் அழிந்தால் பதிவர்கள் என்ன ஆவார்கள் என்று எழுதிய பதிவெல்லாம் நான் பலமுறை படித்து மகிழ்ந்தது. இட்லிவடையின் ஜிமெயில் ஹாக் செய்யப்பட்ட சம்பவம் ஒரு அட்டகாசமான க்ரைம் நாவலுக்கு உரித்தான மர்ம முடிச்சுகள் நிறைந்தது. யார் ஹாக் செய்தார்கள் என்று கண்டறிந்துவிட்டதாகவும், அதுகுறித்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இட்லிவடையார் சொல்லியிருந்தார். ஆனால் வழக்கம்போல லீஸில் விட்டுவிட்டார்.

இட்லிவடை ஒரு குழு என்றும் அதில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் கிளம்புவதுண்டு. எனக்கு இந்த கிசுகிசுக்களில் அதிக ஆர்வம். இட்லிவடைக்கு ஓரிரு ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கலாம். பல பதிவர்கள் அனுப்பும் விஷயங்களை தன் பாணியில் இட்லிவடை வெளியிடலாம் என்பது தான் என் கணிப்பு. ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக ஹரன்பிரசன்னா இருக்கலாம் என்று நினைக்கிறேன். இட்லிவடையில் வெளிப்படையாக தெரியும் கருணாநிதி வெறுப்புக்கு அவர் காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் கலைஞரை பாராட்டிவரும் செய்திகளுக்கு கிருபாஷங்கர் காரணமாக இருக்கலாம். நிச்சயமாக பாஸ்டன் பாலாவுக்கு பங்கிருக்கும் என்று நம்புகிறேன். பெனாத்தல் இருப்பதாக சொல்லப்படுவது அநியாயம்.

இதெல்லாம் எனது கணிப்புதான். உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால் இட்லிவடை மெயிலை ஹாக் செய்தவராக நம்பப்படுபவர் தேசிகன் தான் இட்லிவடை என்று சொல்லுவதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை. பத்ரி கூட இட்லிவடை குழுவில் இருப்பதாக சொல்லப்படுவது நல்ல நகைச்சுவை. வேண்டுமானால் பாரா இருக்கலாம் என்று நம்புகிறேன். நான் கூட இட்லிவடைக்கு அவ்வப்போது செய்திகளை பார்வேர்டு செய்திருக்கிறேன். இதனால் நானும் இட்லிவடை குழுவில் ஒருவனா என்று தெரியவில்லை. ஆனால் இக்குழுவில் இணைய எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் ‘இட்லிவடையிலும் திராவிடக்குரல்' எழும்பும். என்றாவது இட்லிவடையில் கருணாநிதி வாழ்க என்று கோஷம் கேட்டால் லக்கியும் இட்லிவடைக் குழுவில் இருப்பதாக நீங்கள் நம்ப ஆரம்பிக்கலாம்.

இட்லிவடையின் முகமூடி (பதிவர் அல்ல) நிஜமாக கிழிந்தது என்றால் அது 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பாக என்று சொல்லலாம். கலைஞர் மீண்டும் அரியணை ஏறிய எரிச்சல் அதன்பிறகு தொடர்ந்து இட்லிவடை பதிவுகளில் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. தன்னை வெளிப்படையாக இந்துத்துவா ஆதரவோடு இட்லிவடை வெளிப்படுத்திய காலமென்று 2008ஐ சொல்லலாம். திரட்டிகளில் இருந்து விலகுவது என்று இட்லிவடை எடுத்த முடிவு மிகச்சரியானது. ஆனால் அதற்கு பின்னால் என்ன என்ன காரணத்தை இட்லிவடைக்குழு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. முன்பெல்லாம் தினமும் எனக்கு இட்லிவடை பார்க்கும் வழக்கம் இருந்தது. இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. ஒவ்வொரு பிரச்சினையின் போதும் இட்லிவடை என்ன சொல்லுவார் என்பதை யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் இருப்பதில்லை. இட்லிவடை ஒரு வெப் போர்ட்டலாக இன்னமும் மாறாதது ஆச்சரியம். ஆனால் இப்போதைய பாணியையே இட்லிவடை தொடர்ந்து கொண்டிருந்தால் வர வர மாமியார் கதை தான் ஆகும். உடனடியாக இட்லிவடைக்குழுவில் பழைய ஆட்களை தூக்கிவிட்டு வேறு ஆட்களை போடவேண்டும். ஈழப்போராட்டத்தைப் பற்றிய இட்லிவடையின் ஒருதலைபட்சப் பார்வை கடுமையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் விஷமமும் நிறைந்தது.

ஐந்தாண்டுகளை ஒரு வலைப்பூ துடிப்புடன் நிறைவு செய்வது என்பது இன்றைய தமிழ் வலையுலகைப் பொறுத்தவரை பெருத்த சாதனை. இவ்வகையில் திமுகவோடு இட்லிவடையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஒரு பிராந்தியக்கட்சி உலகளவில் அரைநூற்றாண்டை கடந்தது ஒரு சாதனை என்பதால். இட்லிவடை கால்நூற்றாண்டு காலத்தையாவது நிறைவு செய்ய இந்த ஐந்தாண்டு நிறைவு காலத்தில் ஒரு எதிர்விமர்சகனாக வாழ்த்துகிறேன்.

2 கருத்துகள்:

  1. சாரி சார். இவ்வளவு நாள்., எனக்கு இது தெரியாம போச்சே!! உங்க கிட்ட பேசும் போது இட்லிவடை பத்தி கொஞ்சம் பேசிட்டேன்...

    ஈழப்பிரச்சனையில எனக்கும் இட்லி மீது கோபம் இருக்குது தான் சார்...

    பதிலளிநீக்கு
  2. சாரி சார். இவ்வளவு நாள்., எனக்கு இது தெரியாம போச்சே!! உங்க கிட்ட பேசும் போது இட்லிவடை பத்தி கொஞ்சம் பேசிட்டேன்...

    ஈழப்பிரச்சனையில எனக்கும் இட்லி மீது கோபம் இருக்குது தான் சார்...

    பதிலளிநீக்கு