29 ஜனவரி, 2009

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

சென்னை புத்தகக்காட்சி நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் நண்பர்கள் தமிழ்பாரி, நரசிம், முரளிகண்ணன் ஆகியோரோடு அரங்குகளில் உலவிக்கொண்டிருந்தேன். 'பெண்ணே நீ' அரங்கில் அவர்களது பொங்கல் மலருக்கான போஸ்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த என் பெயரை நண்பர்களிடம் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த போது அங்கிருந்த இளைஞர்,

"ஆத்தர் காப்பி வாங்கிட்டீங்கள்லே?" என்றார்.

"முதல் நாளே வாங்கிட்டேன் பாஸ்"

"உங்க நண்பரோட போட்டோவெல்லாம் வந்திருக்கு. நீங்களும் ஆளுக்கொரு புக் வாங்கலாமில்லே?" என்று சிரித்துக் கொண்டே நரசிம்மிடம் கேட்டார்.

அவர் முத்துக்குமார்.

தென் மாவட்ட இளைஞர்களுக்கு உணர்வு அதிகம். சாதாரணமாகப் பேசும்போதே இதுபோல செண்டிமெண்டலாக தான் பேசுவார்கள்.

'ஆட்டோ டிரைவர்' என்று ஏதாவது கட்டுரையில் எழுதியிருந்தோமானால் 'தானி ஓட்டுநர்' என்று அனிச்சையாகவே தட்டச்சிடுவார் முத்துக்குமார். சில மாதங்களுக்கு முன்பாக தான் ஒரு நாளிதழிலிருந்து வெளியேறி பெண்ணே நீ அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தார்.

கடந்த வாரம் பெண்ணே நீ அலுவலகத்துக்கு சென்றபோது கூட முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அவர் கூகிளில் தேடிப்பார்க்கும் விஷயங்கள் வித்தியாசமானதாக இருக்கும். நான் சென்றபோது நீருக்கடியில் சுவாசிப்பதற்கான நவீன கருவிகளின் படங்களை தேடிப் பார்த்துக் கொண்டிருந்தார். தேடல் மிக்க இளைஞர். தேவைக்கதிகமாக ஒரு வார்த்தை கூட பேசமாட்டார். சராசரி தோற்றம். சாதாரணமானவராக தெரிந்தவர் அசாதாரமான‌ தியாகத்தை செய்து தமிழின வரலாற்றில் தாளமுத்து நடராசன் போன்றவர்கள் வரிசையில் இடம்பெறப் போகிறார் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை.

உண‌ர்வாள‌ர்க‌ள் உயிரோடிருப்ப‌தே இன‌விடுத‌லைக்கு செய்யும் உப‌கார‌ம். உண‌ர்வாள‌ர்க‌ள் உயிர்மாண்டால் நாளை த‌மிழ்நில‌ம் ஓருயிர் மிஞ்சாது வெறும் சுடுகாடாக‌வே அறிய‌ப்ப‌டும். த‌மிழெதிரிக‌ள் ஒன்றுப‌ட்டு த‌மிழின‌ அழிப்புக்கு துணைபோய்க் கொண்டிருக்கும் நிலையில் இவ‌ர்க‌ளை அடையாள‌ங்காட்டி த‌னிமைப்ப‌டுத்த‌ வேண்டிய‌ நிலையிலிருக்கும் ந‌ம் த‌லைவ‌ர்க‌ள் அர‌சிய‌ல் மாறுபாடுக‌ளால் ஒருவ‌ரையொருவ‌ர் எதிர்த்து ம‌ல்லுக்க‌ட்டிக் கொண்டிருக்கிறார்க‌ள். த‌மிழெதிரிக‌ளுக்கு அடிவ‌ருடிக‌ளாக‌ செய‌ல்ப‌ட்டுக் கொண்டிருக்கிறார்க‌ள். த‌மிழெதிரிக‌ளை ம‌ட்டும‌ன்றி எதிரிக‌ளுக்கு துணை செல்லுப‌வ‌ர்க‌ளையும் துரோகிகளாக வரலாறு கட்டாயம் பதிவு செய்யும். முத்துக்குமார் உயிர்நீத்து நம் தலைவர்களுக்கு சொல்லியிருக்கும் பாடமிது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் தமிழினத்துக்கு கேடு

20 ஜனவரி, 2009

வில்லு ‍- பார்ப்பவனையெல்லாம் கொல்லு!


முன்பெல்லாம் சூப்பர் ஸ்டாரை ஃபாலோ செய்துக்கொண்டிருந்த இளையதளபதி இப்போது மக்கள் திலகம் பாணிக்கு மாறியிருக்கிறார். பின்னே சூப்பர் ஸ்டார் என்ன தமிழ்நாட்டின் முதல்வராகவா இருந்தார். 2021க்கு இன்னொரு முதல்வர் ரெடி. விஜய் மன்றக்கொடியோடு உன்னால் முடியும் என்ற வாசகத்தோடு தொடங்குகிறது படம். 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று டைட்டில் பாடுகிறது. ஒரு ஆயா எனக்கு பிடித்த ஹீரோ என்று எம்.ஜி.ஆரை சொல்லிவிட்டு அடுத்து விஜய்யை சொல்லும்போது தடாலடி ஓபனிங்.

எல்லாம் சரி. இந்த கும்மாளங்களில் காட்டிய கவனத்தை படத்தில் கொஞ்சமாவது இயக்குனர் காட்டியிருக்க வேண்டாமா? இப்படத்தைப் பார்ப்பவர்கள் குருவியே சூப்பர் படம் என்கிறார்கள். படத்தில் கதை என்ற ஒரு வஸ்து கடைசிவரைக்கும் தென்படவேயில்லை. குசேலனை விட ஒரு மோசமான படத்தை இனிமேல் பார்க்கமுடியுமா என்று தவித்திருந்த வேளையில் மாமருந்தாய் வந்து சேர்ந்திருக்கிறது வில்லு. பாடல்கள் மட்டும் ஹிட்டு. மீதியெல்லாம் கமர்கட்டு.

அழகிய தமிழ்மகன் மூலமாக சாய்மீராவின் சாம்ராஜ்யத்தை நிலைகுலைய வைத்தவர் விஜய். இப்போது அய்ங்கரனுக்கும் பலமாக ஆப்பு வைத்திருக்கிறார். அய்யோ பாவம். வடிவேலுவுக்கு நேரம் சரியில்லை. சிரிப்பு மூட்ட எவ்வளவோ மெனக்கெடுகிறார். சாரி பாஸ். வடிவேலு நிலைமையாவது பரவாயில்லை. நயன்தாரா நிலைமை ரொம்ப மோசம். அழகாக இருந்தும் என்ன பிரயோசனம்?

இந்த கோராமையில் விஜய் டபுள் ஆக்சன் வேறு. அப்பா விஜய்க்கு ஜோடி ரஞ்சிதா. கொடுமையோ கொடுமை. பிரபுதேவா பேசாமல் டான்ஸ் மட்டும் ஆடிவிட்டு போகலாம். எதற்கு டைரக்சன் கருமமெல்லாம்? கதையே இல்லாமல் துண்டு துண்டாக காட்சிகளை எடுத்து இரண்டரை மணி நேரத்துக்கு எடிட் செய்துவிட்டால் படமாகிவிடுமா?

இவ்வளவு கொடுமையிலும் விஜய் மட்டும் மிளிர்கிறார். அழகாக இருக்கிறார். ஆக்சனில் அனல் பறக்கிறது. ஆட்டத்தில் சுறுசுறுப்பு. நடிப்பில் விறுவிறுப்பு. க்ளைமேக்ஸில் பசித்த சிங்கத்தின் வெறியை கண்களில் கொண்டு வருகிறார். சண்டைக்காட்சிகளும், ஆகாய விமான ஆக்சனும் ஹாலிவுட் தரம்.

இளகிய மனம் படைத்தவர்களாக இருந்தாலும் சரி. இளகாத மனம் படைத்தவர்களாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் இந்த கருமாந்திரத்தைப் பார்த்துத் தொலைக்க வேண்டாம். 'வில்லு ‍- பார்ப்பவனையெல்லாம் கொல்லு' என்று முடிவெடுத்துவிட்டு படமெடுத்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இரட்டை அர்த்த காமெடிகள் வேறு. த்தூ..

16 ஜனவரி, 2009

படிக்காதவன்


முன்பு எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் போன்ற கரம் மசாலா இயக்குனர்கள் தமிழில் இருந்தார்கள். ரஜினி, கமல் போன்றவர்களை முன்னணிக்கு கொண்டு வந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள். இவர்களது வரிசையில் சுராஜையும் சேர்க்கலாம். காரம், புளி, உப்பு எல்லாவற்றையும் கலக்க வேண்டிய விதத்தில் கலக்கி நன்றாக மசாலா அரைக்கிறார். படிக்காதவனிலும் குத்து குத்துவென பி அண்ட் சி குத்துவை அழுத்தமாக குத்தியிருக்கிறார்.

எந்த காலத்திலோ வந்த சிரஞ்சீவி படம் ஒன்றின் ரீமேக். தெலுங்கில் 'சூடவாலி'யோ என்னவோ பெயர் சொன்னார்கள். அதனாலோ என்னவோ படம் முழுக்க அக்மார்க் தெலுங்கு ரத்தவாசனை. தனுஷ் மாமனார் நடித்த படிக்காதவனுக்கும் இந்த படிக்காதவனுக்கும் எந்த ஸ்நான பிராப்தியும் இல்லை. மலை எங்கே? மடு எங்கே?

படித்த குடும்பத்தில் படிக்காத தறுதலை. வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு நண்பர்களோடு அரட்டை அடிக்கும் தனுஷ் திருடா திருடியை நினைவுபடுத்துகிறார். குண்டு ஆர்த்தியை பெண்பார்க்கச் செல்லும் இடத்தில் ரியாக்ச‌னில் பின்னுகிறார். அண்ணியிடம் தகராறு செய்யும் ரவுடியை ஆக்சனில் அடி பின்னுகிறார். படித்த பெண்ணை காதலித்து கைப்பிடிக்கும் லட்சியத்தில் தமன்னாவை சுற்றுகிறார். பர்ஸ்ட் ஹாஃப் ஓக்கே.

தமன்னாவை கொல்ல ஆந்திராவிலிருந்து வரும் ரவுடிப் பட்டாளம் சென்னையில் சர்வசாதாரணமாக துப்பாக்கி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களோடு வலம் வருகிறது. எதிர்கோஷ்டியும் துப்பாக்கிகள் சகிதகமாக முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். தமிழகம் பீகாரை மிஞ்சுகிறது என்று சொன்ன தலைமை தேர்தல் கமிஷனர் இந்தப் படத்தைப் பார்த்தால் மகிழ்ச்சியடைவார். போலிஸூ, போலிஸூ என்றொரு அமைப்பு இருப்பதை துணை இயக்குனர்கள் யாராவது இயக்குனருக்கு நினைவுபடுத்தியிருக்கலாம்.

கதையை எப்படி கொண்டு செல்வது என்று செகண்ட் ஹாஃபில் இயக்குனர் பேய்முழி முழித்திருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. விவேக் வந்து காப்பாற்றுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார். நிறைய வடிவேல் வாசனை. இண்டர்வெலுக்குப் பிறகு தான் எண்ட்ரி ஆகிறார். அதன்பிறகு ஹீரோ தனுஷா, விவேக்கா என்ற சந்தேகம் வருகிறது. செகண்ட் ஹாஃப் வெயிட்டை விவேக்கும், பனிவண்ண தேகம் கொண்ட பேரழகி தமன்னாவும் சுமக்கிறார்கள். செகண்ட் ஹாஃப் சுமார்.

சுமன், சாயாஜி ஷிண்டே போன்ற சிறந்த நடிகர்கள் அநியாயத்துக்கு வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள். ராங்கு ரங்கம்மா பாட்டுக்கு தியேட்டரில் ஆயாக்கள் கூட கரும்பு கடித்துக்கொண்டே குத்தாட்டம் போடுகிறார்கள். கல்லுப்பட்டி கல்பனாக்கள் சன் மியூசிக்கில் யாருக்காவது பர்த்டே விஷஸ் சொல்லி பாடல்களை டெடிகேட் செய்யலாம். எல்லாப் பாட்டும் செம குத்து.

க்ளைமேக்ஸ் பயங்கர‌ ஆச்சரியம். சமீபத்தில் வந்த படங்களில் மிகச்சிறந்த க்ளைமேக்ஸ். டோனிங் அபாரம். ராக்கி ஸ்டைலில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதுல் குல்கர்னியும், தனுஷும் கடுமையாக மோதிக்கொள்ளும் இக்காட்சியில் புலன்விசாரணை இறுதிக்காட்சி நினைவுக்கு வருகிறது.. குல்கர்னியின் கழுத்தை நெரித்து 'ஹஹ்.. ஹஹ்..' என்று கத்திக்கொண்டே கொடுக்கும் ரியாக்சனில் காதல் கொண்டேன் காலத்து தனுஷ் தெரிகிறார். க்ளைமேக்ஸ் சூப்பர்.

படிக்காதவன் ‍- ஜஸ்ட் பாஸ் ஆகிவிடுவான்.

14 ஜனவரி, 2009

சாரு, தலையணை, திருமங்கலம்


சாரு சந்தேகமில்லாமல் இந்த வருடத்தின் ஹீரோ. ஆண்டின் ஆரம்பத்திலேயே அதிரடியாக பத்து புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் இல்லாத வகையில் நன்றாகவும் அவரது புத்தகங்கள் விற்று வருகிறது. சரியாக சேல்ஸ் ஆகவில்லை என்று இம்முறை புலம்பமாட்டார் என நம்புகிறேன். ரூபாய் தொள்ளாயிரத்துக்கு மொத்தமாக பத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. உயிர்மை அரங்குக்கு வருபவர்களெல்லாம் கையில் சாரு இல்லாமல் திரும்புவதில்லை. உயிர்மையில் மட்டுமல்ல ஜீயே பப்ளிகேஷனிலும் சாரு சக்கைப்போடு போடுகிறார். ‘ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பு முப்பது ரூபாய்க்கும், கோணல் பக்கங்களின் ஒரு தொகுதி பத்துரூபாய்க்கும் அள்ளிக்கொண்டு போகிறது.

முன்பெல்லாம் எல்லோரையும் விட்டு ஒதுங்கி தனியாகப் போய்க்கொண்டிருந்தவர் இப்போது பெரும்பாலும் ஒத்துப் போகிறார் என்று நினைக்கிறேன். புத்தக வெளியீடுகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். பொறுமையாக பேசுகிறார். உயிர்மை அரங்கில் இரண்டு நாட்கள் இருந்தார். கையெழுத்து கேட்பவர்களிடம் எல்லாம் முகம் சுளிக்காமல் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார். ”எக்சிஸ்டென்ஷியலிஸம்னா என்ன?” என்று கேட்ட இளைஞர் ஒருவருக்கு பொறுமையாக பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். விகடன் ஜாலி ஸ்பெஷலுக்கு ஜாலியாக இண்டர்வியூ கொடுக்கிறார். டப்ளினுக்கு போவதெற்கெல்லாம் நேரம் கிடைப்பது இப்போது அரிதாகியிருக்கலாம்.

(குட்டிக்கதைகளைத்) காமரூபக் கதைகளைத் தொடர்ந்து அடுத்த தடாலடி பிராஜக்டைத் தொடங்கிவிட்டாராம். அடுத்தாண்டு தொடக்கத்தில் அவரது எழுத்துக்களை இருபது புத்தகங்களாக ஒருசேர வெளியிடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

சாருவின் புத்தக வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நரசிம் ஏற்பாட்டில் நடந்த தேநீர் விருந்து சிற்சில சலசலப்புகளுக்கு இடையில் சிறப்பாகவே நடந்தது. நரசிம்மும் இன்னொரு நல்லி செட்டியாரா என்று நண்பரொருவர் காதில் கிசுகிசுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அந்த டைமிங் சென்ஸுக்காக அப்போதைக்கு ரசிக்க முடிந்தது. இதுகுறித்த அதிஷாவின் பதிவில் இளவஞ்சி நடத்திய விவாதம் யாராலும் முன்னெடுத்து செல்லப்படவில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. ரோமில் ரோமானியனாக இரு என்ற கட்சிதான் நானும் என்பதால் இளவஞ்சியோடு ஒத்துப்போகிறேன். என்னுடைய ஆல்டர் ஈகோவான அதிஷாவோடு இவ்விஷயத்தில் கடுமையாக முரண்படுகிறேன். அப்பதிவு குறித்த என்னுடைய கண்டனத்தை அதிஷாவிடம் நேரிலேயே தெரிவித்திருக்கிறேன்.

நான்கு பேர் குடிக்கும் இடத்தில் ஐந்தாமவன் ஒருவன் குடிக்காமல் வேடிக்கை பார்ப்பது என்பதே வன்முறைதான். பொண்டாட்டி பிரச்சினை, வைகுண்ட ஏகாதசி போன்ற நியாயமான காரணங்களுக்காக குடிக்காத ஒழுக்கசீலர்களை மன்னித்து விடலாம். அதிலும் குடித்துவிட்டு அடித்த கும்மிகளை பொதுப்பார்வைக்கு கேலிக்குரிய ரீதியில் கொண்டு செல்வது பாசிஸ்ட்டுத்தனம் என்பதால் அதிஷாவை மிக வன்மையாகவும், செல்லமாகவும் கண்டிக்கிறேன்.

அப்புறம் ’சாருவின் தொண்டரடிப்பொடியாழ்வார்’ என்ற இளவஞ்சியின் விமர்சனம் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. ஒன்றுமில்லாத ரஜினியையே புனிதப் பிம்பமாக்கி மகிழும், முரட்டுத்தனமாக ரசிக்கும் ரசிகமனோபாவம் கொண்ட தமிழ் குமுகாயத்தை சேர்ந்தவர்கள் நாம். சாருவை தூக்கி வைத்துக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. நாத்திகம்-ஆத்திகம் தொடர்பான அவரது கருத்துக்கள் எனக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக (உவகையளிப்பதாக) தோன்றாத போதிலும் சாருவை ஏனோ ரொம்பவும் பிடித்திருக்கிறது. அதிஷாவுக்கும் பிடித்திருக்கலாம். என் கருத்து எனக்கு என்று இருக்கும் சாருவிடம் எதிர்கருத்து வைத்து பிரயோசனம் இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்புறம் மனிதர் மம்மி-ரிட்டர்ன்ஸ் ரேஞ்சில் எதுவாவது நம்மைப் பற்றி எழுதுவானேன், வேலியில் போகும் ஓணாணைப் பிடித்து வேட்டிக்குள் விட்டுப்பானேன்.

* - * - * - * - * - * - *

மெகாசைஸ் புத்தகங்கள் பெரும்பாலும் காலச்சுவடில் கிடைக்கும். பிரபல எழுத்தாளர்களின் தொகுப்பு நூல்கள் ஆகாசவிலையில் என்னைப் போன்ற ஏழைகள் தொட்டுப் பார்க்கும் ரேஞ்சிலேயே அரங்குகளை அலங்கரிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணுபுரம், கொற்றவை என்று ஜெயமோகன் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். சாருவும் தன் பங்குக்கு ராஸலீலா மூலமாக திகிலடைய வைத்தார். இப்போது பாராவின் முறை. மாயவலை தடிமனாக கிழக்கு அரங்கை சிங்கள ராணுவம் மாதிரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் ஆக்கிரமிக்கிறது. அவரே மாயவலையை தூக்கமுடியாமல் தூக்கி காலில் போட்டுக் கொண்டதால் தான் எலும்புகளுக்கிடையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாக பி.பி.சி. செய்திகளில் சொன்னார்கள். தமிழினியில் வெளியாகியிருக்கும் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் சொல்லவே தேவையில்லை. பார்த்தாலே சும்மா அதிருது. அடுத்தாண்டு மீண்டும் ஜெமோ அட்டகாசம் ‘அசோகவனம்’ ரூபத்தில் தொடரும் எனத் தெரிகிறது. (மூவாயிரம் பக்கமாம்).

இந்த நூல்கள் டூ-இன்-ஒன் பர்ப்பஸ் கொண்டவை. வாசிப்புக்கும் உதவும். வாசிப்புக்கு இடையில் தூக்கம் வந்தால் முண்டுக் கொடுத்து உறங்க தலையணையாகவும் உதவும். அட்டையில் ஸ்பாஞ்ச் வைத்து பைண்ட் செய்யும் வசதியை ஏற்படுத்தித் தர பதிப்பாளர்கள் முன்வரவேண்டும்.

* - * - * - * - * - * - *

திருமங்கலம் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கிறது. போர்க்காட்டார் புண்ணியத்தில் ஒண்ணுக்கு அடிக்கவேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்று பயந்திருந்த நேரத்தில் அஞ்சாநெஞ்சன் ஆறுதல் அளித்திருக்கிறார். பணம் விளையாடியது, பிணம் விளையாடியது என்று புலம்பும் புண்ணியக்கோடிகள் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக என்னென்ன உளறிக் கொட்டினார்கள் என்பதை கவனமாக கவனித்துத் தொலைக்க வேண்டும். சில ஆயிரம் பிரதிகளே விற்றுக் கொண்டிருக்கும் தினமணி தூக்கு மாட்டிக் கொள்ளுமா என்பதை அதன் தலையங்கம் மூலமாக தெளிவுப்படுத்த வேண்டும்.

திமுகவை பணரீதியாக எதிர்க்கமுடியாது என்பதால் அதிமுகவுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தோம் என்று சொன்ன வைகோ தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது கைப்புள்ள பாணி நகைச்சுவை. “திருமங்கலம் மக்கள் பணத்துக்கு விலை போகமாட்டார்கள்”. இப்போது அதே கைப்புள்ள முடிவுகளைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்பதை தினத்தந்தி படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

”திமுக ஆட்சியிலிருக்கும் வரை தேர்தல் என்பதே தமிழ்நாட்டில் கேலிக்கூத்தாக இருக்கும்” என்று தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் சொன்ன ஜெயலலிதா எந்த கருமத்துக்கு தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார். அதுவும் மதிமுகவிடமிருந்து அடாவடியாக பிடுங்கி. கம்யூனிஸ்டுகள் பாவம். அவர்கள் இன்றைய நிலையில் செத்தப் பாம்புகள் கூட இல்லை. அவர்களைப் போய் என்னத்தைச் சொல்வது?

அதிமுக கூட்டணியில் இம்முறை தேர்தல் கமிஷனும் இணைந்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “பீகாரை விட மோசமாக திருமங்கலம் இருக்கிறது” என்று ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதி சொல்லலாம். தேர்தல் கமிஷனர் சொல்லலாமா? அப்புறம் எதற்கு துணைராணுவப் பாதுகாப்போடு தொகுதியை தேர்தல் கமிஷன் தன் கையில் எடுத்துக் கொண்டது? எனவே, “தேர்தல் கமிஷன் தேவையா?” என்ற கலைஞரின் கேள்வி நியாயமானதே. ஆட்டுக்கு எதுக்கு தாடி?

திமுக கூட்டணி இந்த இடைத்தேர்தலில் படுவீக்காக இருந்தது என்பது உண்மைதான். காங்கிரஸின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததாக தெரியவில்லை. பொதுவாக காங்கிரஸின் மேல்மட்டம் திமுகவுக்கு அனுசரணையாக இருந்தபோதிலும் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் அதிமுக கூட்டணிக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிறார்கள் என்று நினைக்கிறேன். வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் துட்டு பார்க்க வேணாமா? திமுகவிடம் அஞ்சு பைசா பெயராது என்று அவர்களுக்கு கடந்தகால அனுபவம் பாடம் கற்றுத் தந்திருக்கிறது.

விஜயகாந்தைப் பொறுத்தவரை டெபாசிட் இழந்தாலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. திமுக - அதிமுக மும்முரமாக நேருக்கு நேர் அனல்பறக்க மோதிக்கொண்ட தேர்தலில் அவர் பெற்ற ஒன்பது சதவிகித வாக்குகள் ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது. ‘கூட்டணி இல்லை. என் வழி தனி வழி’ என்ற இப்போதைய பாதையையே அவர் தொடர்ந்தால் 2016ல் அல்லது 2021ல் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சரத்குமார் சுயேச்சை வேட்பாளரை விட குறைவாக வாக்கு வாங்கியது எதிர்ப்பார்த்த ஒன்றே. அஇசமக துணைத்தலைவர் ராதிகாவின் ஒரு பேச்சு குறிப்பிடத்தக்கதாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. “என் கணவர் குடிகாரர் என்று பெயரெடுத்தவர் இல்லை. ஆனால் சில பேர் குடித்துவிட்டே சட்டமன்றத்துக்கு வருகிறார்கள்”.

வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு, வேட்டி சேலை ஆகியவை தற்காலிகமாக திமுகவை கரை சேர்த்திருக்கிறது. இதே ஹைப் பாராளுமன்றத் தேர்தல் வரை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

* - * - * - * - * - * - *

சென்னை புத்தகக்காட்சி மூலமாக மீண்டும் காமிக்ஸ் புரட்சி. ஸ்டால் எண் 35, இன்ஃபோ மேப்ஸ் அரங்கில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் ஐந்துரூபாய், ஆறு ரூபாய் விலைக்கு ஏராளமாக கிடைக்கிறது. ரூபாய் நூறு விலையில் பெரிய சைஸ் கவுபாய் ஸ்பெஷலும் அங்கேயே கிடைக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பதிப்பாளர் பத்ரி, மருத்துவர் ப்ரூனோ, கவிஞர் யெஸ்.பாலபாரதி உள்ளிட்ட ஏராள பிரபலங்கள் காமிக்ஸ் புத்தகங்களை மொத்தமாக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வரங்கில் இருக்கும் அருண் என்ற நண்பரை தொடர்பு கொண்டால் புத்தகங்களை விலை மற்றும் தரம் வாரியாக பிரித்து செட்டாக எடுத்துக் கொடுப்பார்.

மர்ஜானே சத்ரபி வரைந்த சித்திரக்கதை வடிவிலான சீரிய இலக்கியம்ஒன்று இரு நூலாக விடியல் மற்றும் கீழைக்காற்றில் கிடைக்கிறது. சிம்புதேவனின் ’கி.மு.வில்...’ முழுநீள கார்ட்டூன் தொடர் புத்தகம் நர்மதாவில் கிடைக்கிறது. நர்மதாவில் கிடைக்கும் குறிப்பிடத்தக்க இன்னொரு புத்தகம் வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம். ஹார்ட்பவுண்ட் அட்டையில் 400 பக்கத்துக்கும் மேலான இந்நூலில் கொக்கோக சாஸ்திரமும் இணைக்கப்பட்டிருக்கிறது. விலை ஜஸ்ட் ருபீஸ் ஒன்ஃபிப்டி ஒன்லி.

11 ஜனவரி, 2009

பேசுங்க.. பேசுங்க.. பேசிக்கிட்டே இருங்க!!


“நல்ல பொண்ணு தான். என்ன வாய் கொஞ்சம் அதிகம்!” யாருக்காவது பெண் பார்க்கப் போகும்போது, அக்கம் பக்கத்தில் விசாரித்தால் இதுபோல எந்தப் பெண்ணைப் பற்றியாவது சொல்லியிருப்பார்கள். வாய் இருப்பது பெரிய குற்றமில்லை தான். வாயாடியாக இருப்பது மட்டும் குற்றமாகி விடுமா என்ன?

சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு கூட வாயே இல்லாமல் தானிருந்தது. கணவன் ‘கிணற்றில் குதி’ என்று சொன்னாலும் கூட, முட்டாள்தனமாக குதித்துவிட தயாராக இருந்த பத்தினித் தெய்வமாக தான் அவளை இளங்கோவடிகள் சித்தரித்திருந்தார். சைநாயகியை நாடிப்போனவ கணவனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருப்பாளா? சைநாயகி அலுத்துப்போய் திரும்பியவனை பார்த்தாவது ஏதாவது சொன்னாளா? சாகிறவரைக்கும் கண்ணகி அப்படியே வாழ்ந்திருந்தால் கண்ணகிக்கு கோட்டம் அமைத்திருப்போமா? சென்னை கடற்கரைச் சாலையில் சிலை தான் வைத்திருப்போமா?

பாண்டிய மன்னனிடம் பக்கம் பக்கமாக ‘தேராமன்னா செப்புவதுடையேன்’ என்று வசனம் பேசியதால் தானே கண்ணகிக்கு பெருமை. நீதி வழுவியது புரிந்து “யானோ மன்னன்? யானே கள்வன்!’ என்று சொல்லி பாண்டியன் உயிர்நீத்தான். அதன்பிறகு கண்ணகி மதுரையை எரித்தாள். அவளுக்கும், அவள் கணவனுக்கும் வானுலகில் இடம் கிடைத்தது. இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் தேவையான இடத்தில் தேவையான விஷயத்தை தேவையான அளவு பேசியே தீரவேண்டும். பேசாதவர்கள் தோல்வி அடைகிறார்கள். அதிகம் பேசுபவர்கள் படுதோல்வி அடைகிறார்கள்.

பேசாவிட்டால் தோல்வி. அதிகம் பேசினால் படுதோல்வி. என்னதான் செய்வது என்கிறீர்களா? பேசுங்கள். எதைப் பற்றியும் நாலு பேரிடம் அதிகம் பேசுங்கள். பதிலுக்கு அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேளுங்கள். பேசுவதற்கு தானே வாய்? கேட்பதற்கு தானே காது?

ஒரு இழவு வீட்டுக்குப் போன மாமியாரும் மருமகளும் அதிகம் பேசிக் கெட்ட கதையைப் பார்ப்போம். இழவு வீட்டில் பெண்கள் எதிரேதிரே அமர்ந்து ஒப்பாரி பாடி மாரிலடித்துக் கொண்டு அழுவார்கள். இறந்து கிடப்பவனை நினைத்து அழுவதைக் காட்டிலும் தத்தம் சொந்த சோகங்களை நினைத்து இழவு வீடுகளில் அழுபவர்களே அதிகம்.

அந்த ஊரின் தெருக்கோடி முனைவீட்டில் ஒரு கிழவன் செத்துத் தொலைத்தான். வீட்டின் முகப்பில் பாகற்காய் பந்தல். பந்தல் முழுக்க பாகற்காயாய் காய்த்து தொங்குகிறது. ஒப்பாரி வைக்க வரும் பெண்களுக்கெல்லாம் பாகற்காய் மீது கண். இழவு விசாரிக்கப் போன நம் மாமியாரும், மருமகளும் ஒப்பாரி வைத்து எப்படி அழுதார்கள் தெரியுமா?

‘பந்தலிலே பாவக்கா,
பார்த்து அறு மாமியாரே!’

- ஒப்பாரி ராகத்தில் மருமகள் மாமியாருக்கு சுட்டிக் காட்டுகிறாள்.

அதே ராகத்தில் மாமியாரும் பதில் சொல்கிறாள்.

‘போகும்போது பார்த்துக்கலாம்.
பொறுத்திருடி மருமகளே’

மாமியாரும், மருமகளும் பாகற்காயை ட்டை போட நினைத்ததை கவனித்துவிட்டாள் இழவு வீட்டுக்காரி. மாமியார், மருமகள் இருவருக்கும் பதிலளிக்கும் வண்ணம் அவளும் ஒப்பாரி வைத்து சத்தமாக பாடுகிறாள்.

‘விதைக்கல்லோ விட்டிருக்கேன்
விரலாலே தொட்டிடாதே’

அக்கம் பக்கம் பார்க்காமல் மாமியாரிடம் பாகற்காயை சுட்டிக்காட்டியது மருமகளின் தவறு. பக்கத்தில் பாகற்காய்க்கு சொந்தக்காரி நிற்கிறாள் என்பது தெரியாமல் மருமகளுக்கு பதில் சொல்லியது மாமியாரின் தவறு. மாமியார் - மருமகள் நோக்கத்தை சோகத்துக்கு இடையிலும் கண்டறிந்து சரியான பதிலடி கொடுத்தது பாகற்காய்காரியின் சாமர்த்தியம். நேரம் கெட்ட நேரத்தில் எதையாவது பேசி மாட்டிக் கொள்வானேன்? அவலை நினைத்து உரலை இடித்துக் கொள்வானேன்?

எதை பேசவேண்டும், எங்கு பேசவேண்டும், என்ன பேசவேண்டும், எப்படி பேசவேண்டும் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். மகிழ்ச்சி, குதூகலம், அன்பு, காதல், வெற்றி, காதல், கத்தரிக்காய், இத்யாதி.. இத்யாதி எல்லாம் உங்களைத் தேடி வரும். நீங்கள் எதையும் தேடி அலைய வேண்டியதில்லை.

பேசுவது தான் பல பேருக்கு தொழிலே தெரியுமா?

வாத்தியாரம்மா பேசாவிட்டால் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிட்டு போய்விட வேண்டியது தான். டாக்டரம்மா பேசாவிட்டால் நோயாளிகளின் கதி அதோகதி தான். காய்கறிகாரனிடம் பேரம் பேசாவிட்டால் அஞ்சரைப் பெட்டியில் சேர்த்து வைத்த காசு சீக்கிரமே கரைந்துவிடும். அரசியல்வாதி பேசாவிட்டால் ட்சியை யார் பிடிப்பது?

பால்காரர், கண்டக்டர், டெய்லர், கறிகடைக்காரர், வாட்ச்மேன், ட்டோக்காரர், மேனேஜர், கிளார்க், ரிசப்ஷனிஸ்ட்... இதுபோன்றவர்களிடமெல்லாம் பேசாமல் ஏதாவது காரியம் சாதிக்க முடியுமோ? வேலைக்காரப் பெண்ணிடம் அக்கம் பக்கம் புரளி பேசாவிட்டால் நமக்கு தூக்கம் வருமா? வேதாளத்துக்கு பதில் சொல்லாவிட்டால் விக்ரமாதித்தனின் தலையே சுக்குநூறாகி விடுமாம். பேசவேண்டிய இடங்களில் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவதே நலம்.

முன்பெல்லாம் கணவனோடு தனிமையில் கிசுகிசுவென்று பேசுவார்களாம் இல்லத்தரசிகள், ‘தலையணை மந்திரம்’. இப்போதெல்லாம் பைக் பில்லியனில் உட்கார்ந்து கொண்டு காதோரம் தெருவெங்கும் கிசுகிசுத்துக் கொண்டே போகிறார்கள், ‘பில்லியன் தந்திரம்?’. நல்லவேளையாக கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு கொண்டு வந்ததோ இல்லையோ.. ஏகப்பட்ட இல்லத்தரசர்களின் காது தப்பியது.

கைப்பேசி வந்து தொலைத்தாலும் தொலைத்தது. எல்லோரும், எப்போதும், எதையாவது, எங்கேயாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நின்றால் பேச்சு, நடந்தால் பேச்சு, படுத்தால் பேச்சு. செல்போன் கம்பெனி முதலாளிகள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். பெட்ரோல் விலையேற்றம், விலைவாசி உயர்வு, காவிரி பிரச்சினை எந்தப் பிரச்சினையையாவது எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்ப்பதற்கு நாடு தழுவிய பந்த் நடத்தப்படுகிறது. ஏதாவது பிரயோசனம் இருக்கிறதா? ஒரே ஒருநாள் யாரும், யாரோடும் பேசவே மாட்டோம் என்றொரு பந்த் நடத்தினால் என்னவாகும்? எவ்வளவு கோடிகள் நஷ்டமாகும்? டிவியில் செய்தி வாசிப்பவர் சாடை மொழியில் செய்தி வாசித்தால் எப்படியிருக்கும்?

காலையில் இரண்டு இட்லியை விண்டு வாயில் போட்டுக்கொண்டு நாள் முழுக்க உண்ணாவிரதம் கூட இருந்துவிடலாம். இப்போதெல்லாம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணியை வெட்டு வெட்டென்று வெட்டி உண்ணும் விரதம் கூட இருக்க ரம்பித்து விட்டார்கள். மவுனவிரதம் இருப்பது ஒன்றே இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லாததும், மிகக்கடுமையானதாகவும் இருக்கக்கூடும்.

உரிமைகளை கேட்கவும், உணர்வுகளை சொல்லவும், உறவாடவும், நட்பினைக் கொண்டாடவும், மகிழ்ச்சியையும் சோகத்தையும் பகிர்ந்துக் கொள்ளவும்.. எதற்கெடுத்தாலும், எல்லாவற்றுக்கும் நாம் பேசியாக வேண்டியிருக்கிறது. ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்?

பாருங்கள். உங்களிடம் சமயசந்தர்ப்பம் தெரியாமல் எதையோ வெட்டியாக பேசிப்பேசி எனக்கு வாய் வலிக்கிறது. தொண்டை கட்டிக் கொண்டது. எனக்குப் பதிலாக நீங்களாவது சத்தமாக பேசுங்கள்.. மன்னியுங்கள்.. கத்துங்கள்.. விண்ணதிர கோஷமிடுங்கள்.. “பொங்கலோ பொங்கல்!”

('பெண்ணே நீ' பொங்கல் சிறப்பு மலர் 2008)