29 ஜனவரி, 2009

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

சென்னை புத்தகக்காட்சி நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் நண்பர்கள் தமிழ்பாரி, நரசிம், முரளிகண்ணன் ஆகியோரோடு அரங்குகளில் உலவிக்கொண்டிருந்தேன். 'பெண்ணே நீ' அரங்கில் அவர்களது பொங்கல் மலருக்கான போஸ்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த என் பெயரை நண்பர்களிடம் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த போது அங்கிருந்த இளைஞர்,

"ஆத்தர் காப்பி வாங்கிட்டீங்கள்லே?" என்றார்.

"முதல் நாளே வாங்கிட்டேன் பாஸ்"

"உங்க நண்பரோட போட்டோவெல்லாம் வந்திருக்கு. நீங்களும் ஆளுக்கொரு புக் வாங்கலாமில்லே?" என்று சிரித்துக் கொண்டே நரசிம்மிடம் கேட்டார்.

அவர் முத்துக்குமார்.

தென் மாவட்ட இளைஞர்களுக்கு உணர்வு அதிகம். சாதாரணமாகப் பேசும்போதே இதுபோல செண்டிமெண்டலாக தான் பேசுவார்கள்.

'ஆட்டோ டிரைவர்' என்று ஏதாவது கட்டுரையில் எழுதியிருந்தோமானால் 'தானி ஓட்டுநர்' என்று அனிச்சையாகவே தட்டச்சிடுவார் முத்துக்குமார். சில மாதங்களுக்கு முன்பாக தான் ஒரு நாளிதழிலிருந்து வெளியேறி பெண்ணே நீ அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தார்.

கடந்த வாரம் பெண்ணே நீ அலுவலகத்துக்கு சென்றபோது கூட முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அவர் கூகிளில் தேடிப்பார்க்கும் விஷயங்கள் வித்தியாசமானதாக இருக்கும். நான் சென்றபோது நீருக்கடியில் சுவாசிப்பதற்கான நவீன கருவிகளின் படங்களை தேடிப் பார்த்துக் கொண்டிருந்தார். தேடல் மிக்க இளைஞர். தேவைக்கதிகமாக ஒரு வார்த்தை கூட பேசமாட்டார். சராசரி தோற்றம். சாதாரணமானவராக தெரிந்தவர் அசாதாரமான‌ தியாகத்தை செய்து தமிழின வரலாற்றில் தாளமுத்து நடராசன் போன்றவர்கள் வரிசையில் இடம்பெறப் போகிறார் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை.

உண‌ர்வாள‌ர்க‌ள் உயிரோடிருப்ப‌தே இன‌விடுத‌லைக்கு செய்யும் உப‌கார‌ம். உண‌ர்வாள‌ர்க‌ள் உயிர்மாண்டால் நாளை த‌மிழ்நில‌ம் ஓருயிர் மிஞ்சாது வெறும் சுடுகாடாக‌வே அறிய‌ப்ப‌டும். த‌மிழெதிரிக‌ள் ஒன்றுப‌ட்டு த‌மிழின‌ அழிப்புக்கு துணைபோய்க் கொண்டிருக்கும் நிலையில் இவ‌ர்க‌ளை அடையாள‌ங்காட்டி த‌னிமைப்ப‌டுத்த‌ வேண்டிய‌ நிலையிலிருக்கும் ந‌ம் த‌லைவ‌ர்க‌ள் அர‌சிய‌ல் மாறுபாடுக‌ளால் ஒருவ‌ரையொருவ‌ர் எதிர்த்து ம‌ல்லுக்க‌ட்டிக் கொண்டிருக்கிறார்க‌ள். த‌மிழெதிரிக‌ளுக்கு அடிவ‌ருடிக‌ளாக‌ செய‌ல்ப‌ட்டுக் கொண்டிருக்கிறார்க‌ள். த‌மிழெதிரிக‌ளை ம‌ட்டும‌ன்றி எதிரிக‌ளுக்கு துணை செல்லுப‌வ‌ர்க‌ளையும் துரோகிகளாக வரலாறு கட்டாயம் பதிவு செய்யும். முத்துக்குமார் உயிர்நீத்து நம் தலைவர்களுக்கு சொல்லியிருக்கும் பாடமிது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் தமிழினத்துக்கு கேடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக