5 ஜனவரி, 2009

அபியும், நானும்!


சீக்கிரமாக ஒரு கல்யாணம் காட்சி செய்துகொண்டு ஒரு பெண்குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது. முன்பெல்லாம் தேவதைகள் என்றாலே அத்தைகளுக்கு மகள்களாக பிறப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. ‘அபியும் நானும்’ படம் பார்த்தபிறகு தேவதைகள் நமக்கும் மகள்களாக பிறக்கக்கூடும் என்ற இன்னொரு சாத்தியம் புரிந்தது. எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும்போது மண்டையைப் போட்ட என்னுடைய ஆயா கோயிந்தம்மா எனக்கு மகளாக பிறக்க வேண்டும். அவளுக்கு திருமண வயதாகும்போது எவனோ ஒரு சர்தார்ஜி பயலை லவ்வித் தொலைத்து, வயிறு எரிந்துகொண்டே கன்னிகாதானம் செய்துத் தரவேண்டும்.

மங்கி குல்லாவோடு ஊட்டியில் வாக்கிங் செல்லும் பிரகாஷ்ராஜில் படம் தொடங்குகிறது. தன் குட்டிக் குழந்தையோடு பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்கும் பிருத்விராஜிடம் பேச ஆரம்பிக்கிறார் பிரகாஷ்ராஜ். நர்ரேஷன் ஸ்டைலில் அபியும், நானும் தொடக்கம். பெண்ணை பெற்று, வளர்த்து, கட்டிக் கொடுத்தது வரைக்கும் முழுவதையும் நகைச்சுவைப் பொங்க சொல்கிறார். சின்ன வயதில் திண்ணையில் சிவராம் பெரியப்பாவிடம் கேட்ட கதையை விட பன்மடங்கு சுவாரஸ்யம்.

ரோஜாப்பூ மாதிரி பிறந்த மகளை கையில் ஏந்தும் காட்சியில் பிரகாஷ்ராஜ் காட்டும் ரியாக்‌ஷன். அடடா. பிறவி நடிகனய்யா நீர். ஸ்கூல் சேர்க்கும்போதும், அடம்பிடிக்கும் பெண்ணுக்காக பிச்சைக்காரரை வீட்டில் சேர்த்துக் கொள்ளும் போதும், பெண்ணுக்கு சைக்கிள் வாங்கித் தர மறுக்கும்போதும், மகளுக்கு முதல்முதலாக வந்த காதல் கடித மேட்டரை டீல் செய்வதும், மேற்படிப்புக்காக டெல்லிக்கு அனுப்ப மறுத்து அடம்பிடிக்கும் போதும் படம் முழுக்க பிரகாஷ்ராஜ்யம்.

கனவுதேவதை திரிஷா உருப்படியாக ஒரு படம் நடித்துவிட்டார். எல்லோரும் கைத்தட்டலாம். அழகான அம்மாவாக ஐஸ்வர்யா. நடிப்பு ஓக்கே. குரல் தான் பயமுறுத்துகிறது. தம்மாத்தூண்டு கேரக்டராக இருந்தாலும் படம் முழுக்க வரும் மனோபாலா. பிச்சைக்காரராக அறிமுகமாகும் குமாரவேலு நார்த் இண்டியன் ஃபிகரை மடக்கும்போது காட்டும் காதல் சென்சேஷன். ஒரே ஒரு குழந்தைக்காக ஏங்கும் தலைவாசல் விஜய் என்று படம் முழுக்க கேரக்டர்களாக செதுக்கித் தள்ளியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். இவர் கேரக்டர்களை உருவாக்கி விட்டு அதன் பின் காட்சிகளை பிடிப்பார் போலிருக்கிறது.

படத்தின் கதையை விமர்சனத்தில் வாசிப்பதை விட திரையில் பார்ப்பதே நியாயம். “என்னம்மா பேங்குலே மேனேஜரா இருக்குறாரு என்பது மாதிரி எங்க ஸ்கூல் வாசலிலே பெக்கரா இருக்குறாருன்னு சொல்றே” வசனங்கள் அநியாயத்துக்கு ஜாலி. இந்தப் படத்துக்கு பாடல்களே தேவையில்லை. முதல் பாதியின் சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதிக்கும் நீட்டியிருக்கலாம். செகண்ட் ஹாப்பில் கமர்ஷியல் காம்ப்ரமைஸுக்காக செருகப்பட்ட பாடல்களின் போது வெளியே சென்று கோன் ஐஸ் வாங்கி சாப்பிடலாமா என்றிருக்கிறது.

பிரகாஷ் ராஜ் - ராதாமோகன் கூட்டணியிடம் எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. எப்போது பார்த்தாலும் மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸுகளை குறிவைத்தே படங்களை எடுத்துத் தொலைக்கிறார்கள். அபியும் நானும் படத்தின் கதாபாத்திரங்களை லோயர் மிடில்க்ளாஸ்களாக சித்தரித்திருந்தால் படம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கக் கூடும். மேல்தட்டு வர்க்க கதாபாத்திரங்களை உபயோகிப்பதன் மூலம் ரிச்சாக காட்ட முடியும். அதுமட்டுமன்றி லொக்கேஷன்களிலும், காட்சியமைப்புகளிலும் ஆடம்பரத்தை ரசிகனுக்கு பரிசளிக்க முடியும் என்றாலும் சினிமா என்பது வெகுஜன ரசிகர்களின் உணர்வுகளோடு பேசாவிட்டால் என்ன பிரயோஜனம்?

இதே கூட்டணியின் ’மொழி’யை விட சிறந்த படமாக ’அபியும் நானும்’ எனக்கு தோன்ற இப்போதைய வயதும், வாழ்வின் காலக்கட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு அப்பனும், அப்பனாகப் போகிறவனும் கட்டாயம் பார்த்து தொலைக்கலாம்.

அபியும் நானும் - அழகானது வாழ்க்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக