14 ஜனவரி, 2009

சாரு, தலையணை, திருமங்கலம்


சாரு சந்தேகமில்லாமல் இந்த வருடத்தின் ஹீரோ. ஆண்டின் ஆரம்பத்திலேயே அதிரடியாக பத்து புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் இல்லாத வகையில் நன்றாகவும் அவரது புத்தகங்கள் விற்று வருகிறது. சரியாக சேல்ஸ் ஆகவில்லை என்று இம்முறை புலம்பமாட்டார் என நம்புகிறேன். ரூபாய் தொள்ளாயிரத்துக்கு மொத்தமாக பத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. உயிர்மை அரங்குக்கு வருபவர்களெல்லாம் கையில் சாரு இல்லாமல் திரும்புவதில்லை. உயிர்மையில் மட்டுமல்ல ஜீயே பப்ளிகேஷனிலும் சாரு சக்கைப்போடு போடுகிறார். ‘ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பு முப்பது ரூபாய்க்கும், கோணல் பக்கங்களின் ஒரு தொகுதி பத்துரூபாய்க்கும் அள்ளிக்கொண்டு போகிறது.

முன்பெல்லாம் எல்லோரையும் விட்டு ஒதுங்கி தனியாகப் போய்க்கொண்டிருந்தவர் இப்போது பெரும்பாலும் ஒத்துப் போகிறார் என்று நினைக்கிறேன். புத்தக வெளியீடுகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். பொறுமையாக பேசுகிறார். உயிர்மை அரங்கில் இரண்டு நாட்கள் இருந்தார். கையெழுத்து கேட்பவர்களிடம் எல்லாம் முகம் சுளிக்காமல் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார். ”எக்சிஸ்டென்ஷியலிஸம்னா என்ன?” என்று கேட்ட இளைஞர் ஒருவருக்கு பொறுமையாக பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். விகடன் ஜாலி ஸ்பெஷலுக்கு ஜாலியாக இண்டர்வியூ கொடுக்கிறார். டப்ளினுக்கு போவதெற்கெல்லாம் நேரம் கிடைப்பது இப்போது அரிதாகியிருக்கலாம்.

(குட்டிக்கதைகளைத்) காமரூபக் கதைகளைத் தொடர்ந்து அடுத்த தடாலடி பிராஜக்டைத் தொடங்கிவிட்டாராம். அடுத்தாண்டு தொடக்கத்தில் அவரது எழுத்துக்களை இருபது புத்தகங்களாக ஒருசேர வெளியிடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

சாருவின் புத்தக வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நரசிம் ஏற்பாட்டில் நடந்த தேநீர் விருந்து சிற்சில சலசலப்புகளுக்கு இடையில் சிறப்பாகவே நடந்தது. நரசிம்மும் இன்னொரு நல்லி செட்டியாரா என்று நண்பரொருவர் காதில் கிசுகிசுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அந்த டைமிங் சென்ஸுக்காக அப்போதைக்கு ரசிக்க முடிந்தது. இதுகுறித்த அதிஷாவின் பதிவில் இளவஞ்சி நடத்திய விவாதம் யாராலும் முன்னெடுத்து செல்லப்படவில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. ரோமில் ரோமானியனாக இரு என்ற கட்சிதான் நானும் என்பதால் இளவஞ்சியோடு ஒத்துப்போகிறேன். என்னுடைய ஆல்டர் ஈகோவான அதிஷாவோடு இவ்விஷயத்தில் கடுமையாக முரண்படுகிறேன். அப்பதிவு குறித்த என்னுடைய கண்டனத்தை அதிஷாவிடம் நேரிலேயே தெரிவித்திருக்கிறேன்.

நான்கு பேர் குடிக்கும் இடத்தில் ஐந்தாமவன் ஒருவன் குடிக்காமல் வேடிக்கை பார்ப்பது என்பதே வன்முறைதான். பொண்டாட்டி பிரச்சினை, வைகுண்ட ஏகாதசி போன்ற நியாயமான காரணங்களுக்காக குடிக்காத ஒழுக்கசீலர்களை மன்னித்து விடலாம். அதிலும் குடித்துவிட்டு அடித்த கும்மிகளை பொதுப்பார்வைக்கு கேலிக்குரிய ரீதியில் கொண்டு செல்வது பாசிஸ்ட்டுத்தனம் என்பதால் அதிஷாவை மிக வன்மையாகவும், செல்லமாகவும் கண்டிக்கிறேன்.

அப்புறம் ’சாருவின் தொண்டரடிப்பொடியாழ்வார்’ என்ற இளவஞ்சியின் விமர்சனம் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. ஒன்றுமில்லாத ரஜினியையே புனிதப் பிம்பமாக்கி மகிழும், முரட்டுத்தனமாக ரசிக்கும் ரசிகமனோபாவம் கொண்ட தமிழ் குமுகாயத்தை சேர்ந்தவர்கள் நாம். சாருவை தூக்கி வைத்துக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. நாத்திகம்-ஆத்திகம் தொடர்பான அவரது கருத்துக்கள் எனக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக (உவகையளிப்பதாக) தோன்றாத போதிலும் சாருவை ஏனோ ரொம்பவும் பிடித்திருக்கிறது. அதிஷாவுக்கும் பிடித்திருக்கலாம். என் கருத்து எனக்கு என்று இருக்கும் சாருவிடம் எதிர்கருத்து வைத்து பிரயோசனம் இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்புறம் மனிதர் மம்மி-ரிட்டர்ன்ஸ் ரேஞ்சில் எதுவாவது நம்மைப் பற்றி எழுதுவானேன், வேலியில் போகும் ஓணாணைப் பிடித்து வேட்டிக்குள் விட்டுப்பானேன்.

* - * - * - * - * - * - *

மெகாசைஸ் புத்தகங்கள் பெரும்பாலும் காலச்சுவடில் கிடைக்கும். பிரபல எழுத்தாளர்களின் தொகுப்பு நூல்கள் ஆகாசவிலையில் என்னைப் போன்ற ஏழைகள் தொட்டுப் பார்க்கும் ரேஞ்சிலேயே அரங்குகளை அலங்கரிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணுபுரம், கொற்றவை என்று ஜெயமோகன் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். சாருவும் தன் பங்குக்கு ராஸலீலா மூலமாக திகிலடைய வைத்தார். இப்போது பாராவின் முறை. மாயவலை தடிமனாக கிழக்கு அரங்கை சிங்கள ராணுவம் மாதிரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் ஆக்கிரமிக்கிறது. அவரே மாயவலையை தூக்கமுடியாமல் தூக்கி காலில் போட்டுக் கொண்டதால் தான் எலும்புகளுக்கிடையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாக பி.பி.சி. செய்திகளில் சொன்னார்கள். தமிழினியில் வெளியாகியிருக்கும் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் சொல்லவே தேவையில்லை. பார்த்தாலே சும்மா அதிருது. அடுத்தாண்டு மீண்டும் ஜெமோ அட்டகாசம் ‘அசோகவனம்’ ரூபத்தில் தொடரும் எனத் தெரிகிறது. (மூவாயிரம் பக்கமாம்).

இந்த நூல்கள் டூ-இன்-ஒன் பர்ப்பஸ் கொண்டவை. வாசிப்புக்கும் உதவும். வாசிப்புக்கு இடையில் தூக்கம் வந்தால் முண்டுக் கொடுத்து உறங்க தலையணையாகவும் உதவும். அட்டையில் ஸ்பாஞ்ச் வைத்து பைண்ட் செய்யும் வசதியை ஏற்படுத்தித் தர பதிப்பாளர்கள் முன்வரவேண்டும்.

* - * - * - * - * - * - *

திருமங்கலம் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கிறது. போர்க்காட்டார் புண்ணியத்தில் ஒண்ணுக்கு அடிக்கவேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்று பயந்திருந்த நேரத்தில் அஞ்சாநெஞ்சன் ஆறுதல் அளித்திருக்கிறார். பணம் விளையாடியது, பிணம் விளையாடியது என்று புலம்பும் புண்ணியக்கோடிகள் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக என்னென்ன உளறிக் கொட்டினார்கள் என்பதை கவனமாக கவனித்துத் தொலைக்க வேண்டும். சில ஆயிரம் பிரதிகளே விற்றுக் கொண்டிருக்கும் தினமணி தூக்கு மாட்டிக் கொள்ளுமா என்பதை அதன் தலையங்கம் மூலமாக தெளிவுப்படுத்த வேண்டும்.

திமுகவை பணரீதியாக எதிர்க்கமுடியாது என்பதால் அதிமுகவுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தோம் என்று சொன்ன வைகோ தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது கைப்புள்ள பாணி நகைச்சுவை. “திருமங்கலம் மக்கள் பணத்துக்கு விலை போகமாட்டார்கள்”. இப்போது அதே கைப்புள்ள முடிவுகளைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்பதை தினத்தந்தி படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

”திமுக ஆட்சியிலிருக்கும் வரை தேர்தல் என்பதே தமிழ்நாட்டில் கேலிக்கூத்தாக இருக்கும்” என்று தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் சொன்ன ஜெயலலிதா எந்த கருமத்துக்கு தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார். அதுவும் மதிமுகவிடமிருந்து அடாவடியாக பிடுங்கி. கம்யூனிஸ்டுகள் பாவம். அவர்கள் இன்றைய நிலையில் செத்தப் பாம்புகள் கூட இல்லை. அவர்களைப் போய் என்னத்தைச் சொல்வது?

அதிமுக கூட்டணியில் இம்முறை தேர்தல் கமிஷனும் இணைந்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “பீகாரை விட மோசமாக திருமங்கலம் இருக்கிறது” என்று ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதி சொல்லலாம். தேர்தல் கமிஷனர் சொல்லலாமா? அப்புறம் எதற்கு துணைராணுவப் பாதுகாப்போடு தொகுதியை தேர்தல் கமிஷன் தன் கையில் எடுத்துக் கொண்டது? எனவே, “தேர்தல் கமிஷன் தேவையா?” என்ற கலைஞரின் கேள்வி நியாயமானதே. ஆட்டுக்கு எதுக்கு தாடி?

திமுக கூட்டணி இந்த இடைத்தேர்தலில் படுவீக்காக இருந்தது என்பது உண்மைதான். காங்கிரஸின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததாக தெரியவில்லை. பொதுவாக காங்கிரஸின் மேல்மட்டம் திமுகவுக்கு அனுசரணையாக இருந்தபோதிலும் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் அதிமுக கூட்டணிக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிறார்கள் என்று நினைக்கிறேன். வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் துட்டு பார்க்க வேணாமா? திமுகவிடம் அஞ்சு பைசா பெயராது என்று அவர்களுக்கு கடந்தகால அனுபவம் பாடம் கற்றுத் தந்திருக்கிறது.

விஜயகாந்தைப் பொறுத்தவரை டெபாசிட் இழந்தாலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. திமுக - அதிமுக மும்முரமாக நேருக்கு நேர் அனல்பறக்க மோதிக்கொண்ட தேர்தலில் அவர் பெற்ற ஒன்பது சதவிகித வாக்குகள் ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது. ‘கூட்டணி இல்லை. என் வழி தனி வழி’ என்ற இப்போதைய பாதையையே அவர் தொடர்ந்தால் 2016ல் அல்லது 2021ல் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சரத்குமார் சுயேச்சை வேட்பாளரை விட குறைவாக வாக்கு வாங்கியது எதிர்ப்பார்த்த ஒன்றே. அஇசமக துணைத்தலைவர் ராதிகாவின் ஒரு பேச்சு குறிப்பிடத்தக்கதாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. “என் கணவர் குடிகாரர் என்று பெயரெடுத்தவர் இல்லை. ஆனால் சில பேர் குடித்துவிட்டே சட்டமன்றத்துக்கு வருகிறார்கள்”.

வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு, வேட்டி சேலை ஆகியவை தற்காலிகமாக திமுகவை கரை சேர்த்திருக்கிறது. இதே ஹைப் பாராளுமன்றத் தேர்தல் வரை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

* - * - * - * - * - * - *

சென்னை புத்தகக்காட்சி மூலமாக மீண்டும் காமிக்ஸ் புரட்சி. ஸ்டால் எண் 35, இன்ஃபோ மேப்ஸ் அரங்கில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் ஐந்துரூபாய், ஆறு ரூபாய் விலைக்கு ஏராளமாக கிடைக்கிறது. ரூபாய் நூறு விலையில் பெரிய சைஸ் கவுபாய் ஸ்பெஷலும் அங்கேயே கிடைக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பதிப்பாளர் பத்ரி, மருத்துவர் ப்ரூனோ, கவிஞர் யெஸ்.பாலபாரதி உள்ளிட்ட ஏராள பிரபலங்கள் காமிக்ஸ் புத்தகங்களை மொத்தமாக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வரங்கில் இருக்கும் அருண் என்ற நண்பரை தொடர்பு கொண்டால் புத்தகங்களை விலை மற்றும் தரம் வாரியாக பிரித்து செட்டாக எடுத்துக் கொடுப்பார்.

மர்ஜானே சத்ரபி வரைந்த சித்திரக்கதை வடிவிலான சீரிய இலக்கியம்ஒன்று இரு நூலாக விடியல் மற்றும் கீழைக்காற்றில் கிடைக்கிறது. சிம்புதேவனின் ’கி.மு.வில்...’ முழுநீள கார்ட்டூன் தொடர் புத்தகம் நர்மதாவில் கிடைக்கிறது. நர்மதாவில் கிடைக்கும் குறிப்பிடத்தக்க இன்னொரு புத்தகம் வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம். ஹார்ட்பவுண்ட் அட்டையில் 400 பக்கத்துக்கும் மேலான இந்நூலில் கொக்கோக சாஸ்திரமும் இணைக்கப்பட்டிருக்கிறது. விலை ஜஸ்ட் ருபீஸ் ஒன்ஃபிப்டி ஒன்லி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக