29 ஆகஸ்ட், 2009

QUICK GUN முருகன்!


QUICK GUN முருகன் ஒரு மாட்டுப்பையன். அதாவது கவ்பாய். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை அப்பட்டமாக, அபத்தமாக காப்பி அடிப்பவன். அவனுடைய செயினில் தொங்கிக் கொண்டிருக்கும் லாக்கெட்டுக்குள்ளிருந்து, முருகனின் காதலி திட்டிக்கொண்டே இருக்கிறாள். ரைஸ்ப்ளேட் ரெட்டி என்ற மொக்கை வில்லனோடு கேணைத்தனமாக மோதிக் கொண்டிருப்பது முருகனின் வாடிக்கை. மேங்கோ டாலி என்ற குஜால் ஃபிகரும் முருகனை பிராக்கெட் போட முயற்சிக்கிறாள். ரைஸ் பிளேட் ரெட்டியிடம் வித்தியாசமான அடியாட்கள் உண்டு. கன்பவுடர் என்பவன் முருகனை மாதிரியே இன்னொரு முரட்டு கவ்பாய். ரவுடி, எம்.பி.ஏ, என்ற நவீன அடியாளும் ரைஸ்பிளேட் ரெட்டிக்காக உழைக்கிறான்.

முதல் பத்தியை படித்ததுமே குயிக்கன் முருகன் ரொம்ப சுவாரஸ்யமானவன் என்று நீங்கள் நினைத்துவிடலாம். சுவாரஸ்யமான் தீம் கிடைத்தும் ரொம்ப மொக்கையான பிரசண்டேஷனை தான் இயக்குனர் சஷாங்காகோஸால் தரமுடிந்திருக்கிறது. உடைகள், செட்டிங், கிராபிக்ஸ் எல்லாமே உலகத்தரம் என்று ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் தொழில்நுட்பத்தில் காட்டிய கவனத்தை உள்ளடக்கத்தில் காட்டத் தவறியதால் குயிக்கன் முருகன் அந்தோ பரிதாபமாகி விட்டிருக்கிறார்.

ஷாருக்கின் ஓம் சாந்தி ஓம் பார்த்திருப்பீர்கள். ஒரு போலி படப்பிடிப்புக் காட்சியில் நம்ம ரஜினிகாந்தை நக்கலடித்து கவ்பாயாக தூள் கிளப்பியிருப்பார் ஷாருக். அக்காட்சி குயிக்கன் இயக்குனருக்கு ஒரு முழுநீளப்படத்தை உருவாக்க இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம். நன்கு கவனிக்கவும். ஓம் சாந்தி ஓமில் பரோடி செய்யப்பட்டது நம்ம சவுத் இண்டியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். குயிக்கன்னிலோ க்ளிண்டன் ஈஸ்ட்வுட்டை பரோடி செய்ய முயன்றிருக்கிறார்கள். நம்ம ஊரு ஆட்கள் லட்சத்தில் ஒருவர் கூட ஈஸ்ட்வுட் படங்களைப் பார்த்திருக்க மாட்டார்கள். இதனாலேயே நம்ம படம் என்ற நேட்டிவிட்டி மிஸ்ஸிங் ஆகிறது. லுங்கி கட்டிக்கொண்டு தப்பாங்கூத்துதான் ஆடவேண்டும். பரதநாட்டியம் ஆடினால், செல்லாது.. செல்லாது..

டாக்டர் ராஜேந்திரபிரசாத் மிகச்சிறந்த நடிகர். காமெடி அனாவசியமாக முகபாவங்களில் எப்போதுமே தொக்கி நிற்கிறது. நடையும், உடையும், நடிப்பும் அபாரம். நீண்டநாள் கழித்து ரம்பா. அறிமுகப்பாடலில் இன்னமும் அவரது தொடை, பதிமூன்று ஆண்டுகள் கழித்தும் அதே பழைய வனப்போடு, கட்டுக்குலையாமல் இருப்பதை உணர்ந்து தமிழர்கள் உவகை அடைகிறார்கள். இரண்டு மூன்று காட்சிகளில் வெளிப்படும் அவரது திறந்த முதுகு பரந்த புல்வெளி மாதிரி மனசுக்கு மகிழ்ச்சி தருகிறது. பார்பீ பொம்மை மாதிரி அழகோ அழகாக இருக்கிறார் ரம்பா. ரைஸ்ப்ளேட் ரெட்டி நாசர் கெட்டப்புகளில் அசத்துகிறார். அவரே டப்பிங் கொடுக்காதது பெரிய மைனஸ் பாயிண்ட். கன்பவுடர் சண்முகராஜனுக்கு இன்னும் சில காட்சிகள் எக்ஸ்ட்ராவாக கொடுத்திருக்கலாம்.

படத்தின் இரண்டு பாடல்களும் சூப்பரோ சூப்பர். படமாக்கிய விதமும் அட்டகாசம். எல்லாமே இருந்தும் நல்ல கதையோ, திரைக்கதையோ அமையாததால், படக்குழுவினரின் உழைப்பு பீருக்கு தண்ணீர் மிக்ஸ் பண்ணி ஊற்றியது மாதிரி ஆகிவிடுகிறது. இந்த கேரக்டர்களை சிம்புதேவனிடம் தந்திருந்தால் அடி பின்னியிருப்பார். அடுத்து அவர் இயக்கும் ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’ கவ்பாய் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.

இப்படம் லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் படவிழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறதாம். ஒருவேளை ஆங்கிலத்தில் பார்த்தால் பக்காவாக இருக்குமோ என்னவோ. தமிழ் டப்பிங் படுமோசம். இந்தி விளம்பரப் படங்களை தமிழில் டப்புவார்களே அதுபோல த்ராபையாக வந்திருக்கிறது. வழக்கமாக ஆங்கிலப்படங்களை டப்படிக்கும் நம் ஆட்களிடமே கொடுத்திருந்தால் தூள் கிளப்பியிருப்பார்கள்.

குயிக்கன் முருகன் - சிக்கன் க்ரேவியோடு தரப்பட வேண்டிய தலப்பாக்கட்டு பிரியாணிக்குப் பதிலாக தயிர்சாதமும், வடுமாங்காயும் பரிமாறியிருக்கிறார்கள்!

28 ஆகஸ்ட், 2009

முதல் பாவம்!


ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற மரங்களை ஒப்பிடும்போது அந்த மரத்தில் தானே கனிகள் அதிகமாக காய்க்கின்றன. நல்ல சிகப்பில் பெரிய பெரிய கனிகளை கண்டதுமே சாப்பிட அவளுக்கு நாவூறுகிறது. ஆனாலும் கடவுளின் எச்சரிக்கை காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“உங்களுக்காக நான் படைத்த இந்த உலகில் நீங்கள் எங்கும் போகலாம், எதையும் சாப்பிடலாம். ஆனால் அதோ அந்த ஆப்பிள் மரத்தின் கனிகளை மட்டும் பறித்துவிடக்கூடாது. அதை பறித்து உண்டால் புனித உயிரிகளாய் வாழும் நீங்கள் சராசரி மனிதர்களாகி விடுவீர்கள். மனித உயிரிக்கு என்றிருக்கும் சில உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டு விடும். அது நல்லதல்ல, மீண்டும் சொல்கிறேன். அந்த மரத்து கனிகளை மட்டும் எடுத்து உண்ணாதீர்கள்”

கடவுள் சொன்னதில் 'சராசரி மனிதர்' என்ற வார்த்தைக்கு மட்டும் ஏவாளுக்கு இன்னமும் அர்த்தம் புரியவில்லை. ஆதாமுக்கு இதுகுறித்த எந்த பிரக்ஞையும் இல்லை. கடவுள் என்ன சொன்னாலும் அதை வேதவாக்காக எடுத்துக் கொள்கிறான். யோசனையுடன் நடந்தாள் ஏவாள்.

“ஏவாள். உங்களை நீங்களே எவ்வளவு காலத்துக்கு ஏமாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்?” புதரிலிருந்து குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள் ஆளில்லை ஒரு அரவம் மட்டும் புதருக்குள்ளிருந்து வெளிவந்தது.

“நீ எந்த வகையிலான உயிரி? இதுவரை உன்னை பார்த்ததில்லையே?”

“என் பெயர் சாத்தான். கடவுளுக்கு நிகரான சக்தி படைத்தவன்”

“அப்படியா? வணக்கம். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆதாமும் உன்னை சந்தித்தால் மகிழ்ச்சியடைவான்!”

“ஒரு நிமிடம். ஆதாம் ஒரு முட்டாள், உன்னைப்போல அவன் புத்திசாலி இல்லை. நான் சொல்லுவதை உன்னால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்!”

ஆதாமை முட்டாள் என்றதுமே ஏவாளுக்கு கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது. “சரி சொல். என்ன சொல்லப்போகிறாய்?”

“ஆப்பிள் மரத்தில் இருந்து கனிகளை பறித்து உண்ணக்கூடாது என்று கடவுள் சொன்னானில்லையா? அது ஏனென்று தெரியுமா?”

“தெரியாது!”

“இப்போது நீங்கள் கடவுளின் அடிமையாக இருக்கிறீர்கள். அந்த கனியை உண்டால் என்னைப் போல நீங்களும் சுதந்திர உயிர்களாக பரிமாணம் பெற்றுவிடுவீர்கள். உங்களுக்கு வெட்கம், கோபம், சூடு, சொரணை என்று எல்லா உணர்ச்சிகளும் வந்துவிடும். நீங்களும் கடவுளுக்கும், எனக்கும் இணையான சக்தி பெற்றுவிடுவீர்கள்!”

“அப்படியா? நீங்கள் சொன்ன உணர்வுகள் இல்லாமலேயே வாழ்வது சாத்தியமில்லையா?”

“சாத்தியமில்லை. இப்படியே எவ்வளவு நாட்களுக்கு நீயும், ஆதாமும் செக்குமாடு மாதிரி சுற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆதாமை காதலிக்கும் எண்ணமே உனக்கு இல்லையா?”

”காதலா? அப்படியென்றால்?”

”அண்டத்தில் இருக்கும் உணர்வுகளிலேயே புனிதமான உணர்வு. இது கொடுக்கும் மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சியை யாராலும் தர இயலாது”

“காதல் உணர்வை அடைய நானென்ன செய்யவேண்டும்?”

“அந்த மரத்திலிருந்து ஆப்பிள் கனியை பறித்து உண்ணவேண்டும்”

ஏற்கனவே ஏவாளுக்கு அந்த கனியை உண்டால் என்ன என்ற எண்ணம் இருந்தது. அரவத்துடன் பேசிய பின்னர் காதல் உணர்வை அடையவேண்டுமென்ற ஆவலும் அதிகரித்தது. அம்மரத்தின் கனிகளை பறித்து உண்ண ஆதாமை வற்புறுத்தினாள்.

“வேண்டாம் ஏவாள். கடவுள் தான் நம்மை படைத்தார். அவர் அறிவுரையை நாம் பின்பற்ற வேண்டும்”

“கடவுள் நம்மை அவர் விளையாடும் பொம்மைகளாக தான் படைத்திருக்கிறார். காதல் உணர்வு உனக்கு வேண்டாமா ஆதாம்!”

“காதல் உணர்வா? அப்படியென்றால்?”

“கனியை பறித்து தின்போம். அதன் பின்னர் புரியும்!”

அரைகுறை மனதோடு ஆதாம் சம்மதித்தான். ஒரு கனியை பறித்து ஏவாளிடம் தந்தான். அவள் பாதி கடித்து தந்ததுமே இவன் மீதியை கடித்தான். உடனடியாக அவர்களுக்கு காதல் உணர்வு வரவில்லை. இதுவரை ஏவாளை சக உயிரியாக மட்டுமே பார்த்த ஆதாம் அவளை பெண்ணாக கண்டான். அவள் எதிரில் தான் ஆடையில்லாமல் இருப்பது குறித்து வெட்கம் கொண்டான். இதே நிலைதான் ஏவாளுக்கும், ஆதாமை விட அதிகமாய் வெட்கப்பட்டாள்.

ஆதாம் சில ஆப்பிள் இலைகளை பறித்து ஏவாளிடம் தந்தான், தானும் சில இலைகளை பறித்துக் கொண்டான். தங்களது அந்தரங்கப் பகுதிகளை ஆப்பிள் இலைகளால் மறைத்துக் கொண்டார்கள் இருவரும். உலகின் முதல் ஜட்டி ஆப்பிள் இலைகளால் உருவானது.

தியாகம்?


“ஏன் அந்த தாத்தா வித்தியாசமா டிரெஸ் பண்ணியிருக்காரு?” டிவியில் ஏதோ செய்திகளுக்கு இடையில் காட்டப்பட்ட அந்த தேசத்தலைவரை பார்த்ததும் கேள்வி கேட்டான் நவீனன். பத்து வயது தான் ஆகிறது. பதினாறு வயதுக்கான அறிவு அவனுக்கு. கண்டது, கேட்டது எதையுமே கேள்விக்குள்ளாக்குவான்.

“அது ஒரு பெரிய கதை நவீனா!” மஜூம்தார் பதிலளித்தார். சமகால புரட்சி தமிழ் எழுத்துக்களை வாசித்தவர்கள் யாரும் மஜூம்தாரை புறக்கணிக்க முடியாது. மிகப்பிரபலமான மாற்று சிந்தனை எழுத்தாளர்.

“கதை கேட்பது எனக்கு பிடிக்கும் என்பது உனக்கு தெரியாதா? சொல்லு.. சொல்லு!” பேரன் கேட்கும் எல்லா கேள்விகளுக்குமே விடையளிப்பது மஜூம்தாருக்கு பிடித்தமான விஷயம். எழுதிக் கொண்டிருந்தவர் பேனாவை மூடிவிட்டு, கண்ணாடியை சரிசெய்து கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

“நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு 25 ஆண்டுகள் முன்பாக நடந்த விஷயம் அது. நீ பார்த்த தேசத்தலைவர் அப்போதெல்லாம் முழுமையான உடையை தான் அணிந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவர் நம்முடைய மதுரைக்கு வந்திருந்தார். மதுரை தெரியுமில்லையா உனக்கு? ஒரு கோயிலுக்கு கூட கூட்டிச் சென்றிருக்கிறேனே?”

“தெரியும். மேலே சொல்லு!”

“மதுரையில் அப்போது நிறைய பேர் இப்போது நீ பார்த்தாயே அந்த தலைவரை போல தான் உடையணிந்திருந்தார்கள். அவர்களை பார்த்ததுமே அவருக்கு மனம் உடைந்துப் போனது. எனது நாட்டில் உடலை முழுமையாக மறைக்க உடை கூட இல்லாமல் மனிதர்கள் இருக்கிறார்களே? என்று நொந்துப் போனவர், நானும் இனி இவர்களை போல தான் உடையணியப் போகிறேன் என்று தனது வழக்கமான உடைகளை துறந்தார்”

“சாகும் வரை இப்படித்தான் உடையணிந்திருந்தாரா?”

“ஆம். அரசியல் பேச்சுவார்த்தை நிமித்தமாக அயல்நாடுகளுக்கு சென்றபோது கூட இதே உடையோடு தான் சென்றார். எப்பேர்ப்பட்ட தியாகம் பார்!”

“இதிலென்ன தியாகம் இருக்கிறது? அவரது உடையை அவர் துறந்து விட்டதால் நாட்டில் எல்லோருக்கும் முழுமையான உடை கிடைத்து விட்டதா என்ன? அவர் உடையை துறந்து எண்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்தும் நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லையே? சென்ற வாரம் கூட ஒரு கட்டைவண்டி கிழவர் வெறும் கோவணத்துடன் வண்டி இழுத்துச் சென்றதை நீயும் தானே பார்த்தாய்?”

“மாற்றம் வந்துவிடவில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும் அவரது தியாகம் மெச்சக்கூடியது தானே? இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனின் நிலையை தன் உடையில் கூட அவர் பிரதிநிதித்துவப் படுத்தினாரே?”

“ரெட்டைமலை சீனிவாசன் என்பவரை பற்றி உங்களுக்கு தெரியும் தானே? இதே தலைவர் சென்ற அயல்நாடுகளுக்கு அவர் கோட்டும், சூட்டும் அணிந்து சென்றாரே? அம்பேத்கர் என்றதுமே நீலக்கலர் கோட், சிகப்பு கலர் டை அணிந்த உருவம் தானே நமக்கு நினைவு வருகிறது? இவர்களெல்லாம் அவர்கள் சார்ந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்கிறீர்களா?”

“உன்னிடம் பேசி என்னால் கூட ஜெயிக்க முடியாது. அந்த தலைவர் இந்த உடையில் இருந்ததில் உனக்கு என்ன பிரச்சினை?”

“எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. நல்லவேளையாக நான் இப்போது இருக்கும் கோலத்தை கண்டு எந்தத் தலைவராவது உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது என்று விரும்புகிறேன்”

நவீனன் அப்போது ஜட்டி மட்டுமே அணிந்திருந்தான். ஒரு நாளைக்கு அறுபது முறை மின்சாரம் தடைபடும் நாட்டில் அவனுக்கு இந்த உடையோடு வீட்டில் இருப்பதுதான் வசதியாக இருக்கிறது.

27 ஆகஸ்ட், 2009

சவிதா அண்ணி!


விதா பாபி ஒரு நடுத்தர வயது குடும்பப் பெண். கொஞ்சம் மாடர்னாக இருப்பாள். சேலைதான் அணிவாள். கோதுமை நிறம். நல்ல உயரம். மதமதர்த்த உடல்வாகு. அந்தக் காலத்து கர்ணன் பட கதாநாயகிகள் மாதிரி மாராப்பு விஷயத்தில் தாராளம். திருமணமான இவருக்கு தனிப்பட்ட தாம்பத்ய வாழ்க்கையில் போதிய திருப்தி இல்லை. எனவே சவிதா எப்போதும் செக்ஸுக்காக அலைந்துக் கொண்டிருக்கிறாள். சவிதா என்பது அவள் பெயர். பாபி என்றால் இந்தியில் அண்ணி என்று பொருள்.

அவளுடைய காமத்தேவைகளுக்கு இரையாவது வீடு வீடாக பிரா விற்கும் சேல்ஸ்மேன், கிரிக்கெட் விளையாடும் ஸ்கூல் பசங்க, பேமிலி டாக்டர், கஸின்... இப்படியெல்லாம் வக்கிரமாக, வரைமுறையற்ற காம சிந்தனைகளோடு சித்தரிக்கப்படும் படக்கதைத்தொடர் (காமிக்ஸ்) ஒன்று இந்தியாவில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது தெரியுமா?

வேறெங்கு? நம்ம இண்டர்நெட்டில் தான். பல வருடங்களாக ‘பிட்டு, பிட்டாக’ ஆங்காங்கே போடப்பட்டு வந்த இந்த கதைத்தொடர், கடந்த மார்ச் 2008ல் பிரத்யேக தனி இணையத்தளம் ஒன்றில் தோன்றி சக்கைப்போடு போட்டது. குறிப்பிட்ட அந்த இணையத்தளத்தில் வெகுவிரைவில் ஐம்பதாயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்தார்கள். மாதத்துக்கு ஆறு கோடி முறை அந்த இணையத்தளம் ரசிகர்களால் சுடச்சுடப் பார்வை இடப்பட்டது. இந்தியாவில் அதிகம் பார்வையிடும் இணையத்தளங்களின் பட்டியலில் 82வது இடத்தைப் பிடித்த இணையத்தளம் அது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட பத்து இந்திய மண்டல மொழிகளிலும் இந்த களத்தில் கதைகளை படிக்கலாம்.

அப்படி என்னதான் சவிதாபாபி இணையத்தளத்தில் இருக்கிறது என்று குறுகுறுப்பு வருமே?
சவிதா ஒரு ஆடம்பரமான அபார்ட்மெண்டில் வசிக்கிறாள். அவளது கணவன் அசோக் ஒரு தேவாங்கு. கம்பெனி ஒன்றில் நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். வீட்டு வேலை பார்ப்பதில்லை. தாம்பத்யம் அவனுக்கு எப்போதாவது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி.

சவிதாவோ தாம்பத்திய சுகத்துக்கு ஏங்குகிறாள். வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரனில் தொடங்கி, அவளுடன் பழகும் பல ஆண்களோடு திகட்ட, திகட்ட உறவு கொள்ளுகிறாள். கடைசியாக ஒரு பிரபல நடிகனோடும் கூட. சவிதாவின் செக்ஸ் அனுபவங்கள் மட்டுமே சதைகள். மன்னிக்கவும், கதைகள். கதைகளுக்கான தலைப்புகள் கூட வித்தியாசமாக இருக்கும். உதாரணத்துக்கு, சேல்ஸ்மேன் கதைக்கு “பிரா விற்பனையாளனின் விசிட்”,
நம்மூரின் வழக்கமான மூன்றாந்தர பிட்டு படங்களின் கண்ணறாவி கதைகள் தான் சவிதா பாபி கதைகளும். மொத்தம் பண்ணிரண்டு கதைகள் இந்த தொடரில் வண்ணச் சித்திரங்களோடு வெளிவந்திருக்கிறது. சவிதா கதை சொல்வதைப் போன்ற பாணியிலேயே எல்லாக் கதைகளும் அமைந்திருக்கின்றன. நகைச்சுவையும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.

ஆனால் பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்த பார்வையை தருகிறோம், ‘இந்தியப் பெண்களுக்கும் செக்ஸ் ஆசைகள் உண்டு’ (?) என்கிற யதார்த்தத்தை உலகுக்கு சொல்கிறோம் என்ற போர்வையில் அருவருக்கத்தக்க, வரைமுறையில்லாத செக்ஸ் கதைகளாக போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இந்தியக் கலாச்சாரத்தில் மதிப்போடு பார்க்கப்படும் ‘அண்ணி’ என்ற உறவுமுறையை இதற்காக பயன்படுத்திக் கொண்டதும் ஆபாசத்தின் உச்சம்.

யிரக்கணக்கான செக்ஸ் இணையத்தளங்கள் இருக்க, சவிதா பாபி தளம் அடைந்த பரபரப்பான புகழுக்கு ஒரே ஒரு காரணத்தை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். “எல்லா இணையத் தளங்களிலும் எடுத்த உடனேயே ‘முழுக்க’ காட்டி விடுகிறார்கள். ஒரேயடியாக எல்லாமே புஸ்ஸென்று அடங்கிப் போய்விடுகிறது. ஆனால் சவிதா பாபியோ கதைகளின் ஆரம்பத்தில் புடவை அணிந்திருக்கிறாள். செந்தூரம் வைத்திருக்கிறாள். தாலி கட்டியிருக்கிறாள். ஒவ்வொரு கதையிலும் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏற்றுகிறாள். ஒவ்வொன்றாக அவிழ்க்கிறாள். இந்தப் போதை அளப்பறியது. அனுபவித்து பார்த்தால் தான் புரியும்” என்கிறார்கள்.

இத்தனைக்கும் மற்ற செக்ஸ் தளங்களில் நேரடியாக பெண்களின் அரை மற்றும் முழு நிர்வாணமாக போட்டோக்களே உபயோகப்படுத்தப் படுகிறது. சவிதா பாபியிலோ ஓவியரால் வரையப்பட்ட படங்கள்தான். “டைரக்ட் போட்டாவா இருந்தாலும் கூட சில ஆங்கிள்ஸை ரசிக்க முடியாது. சவிதா பாபியிலே வரையப்படுற ஆங்கிள்ஸ் நாம சற்றும் எதிர்பார்க்காதது. நம்ம கற்பனைக் குதிரைய தட்டிவிட்டு, தடதடன்னு ஆர்வத்தை தூண்டுது” என்று கிறங்கிப்போய் கிசுகிசுக்கிறார்கள் ரசிகர்கள்.

சவிதாபாபியை நடத்துபவர்கள் ஐரோப்பாவில் இருக்கிறார்கள் என்கிறார்கள். இந்தியாவில் போர்னோ சைட்டுகள் (செக்ஸ் இணையத்தளங்கள்) நடத்த தடை இருப்பதாலேயே, வெளிநாட்டு சர்வரில் இருந்து நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இண்டியன் போர்ன் எம்பயர் என்ற நிறுவனத்தின் பேரில் இந்த தளம் பதியப்பட்டிருக்கிறது. இந்த அற்புதமான இலக்கியத்தை எழுதுபவர் தேஷ்முக் என்றும் ஓவியங்கள் வரைபவர்கள் டெக்ஸ்டார் மற்றும் மேட் என்றும் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இவை பொய்யான புனைபெயர்கள்.

இந்த தளம் சரியாக சர்ச்சைக்கு கச்சை கட்டியது ஒரு நடிகனோடு சவிதா சல்லாபித்த கதை வந்தபோது. நடிகராக சித்தரிக்கப்பட்டு வரையப்பட்டது அமிதாப் பச்சனின் உருவம் என்பதால் வட இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு செக்ஸ் கதையில் எப்படி அமிதாப்பை தவறாக சித்தரிக்கலாம் என்று அவரது ரசிகர்கள் பாய்ந்தார்கள். ஆனால் தளத்தை நடத்துவது யாரென்றே தெரியாத நிலையில், காற்றில் கத்தி சுத்துவதைப் போல சில நாட்களுக்கு கொந்தளித்துவிட்டு பிறகு வேறு வழியில்லாமல் அடங்கிப் போனார்கள். இதே நேரத்தில் மும்பை மீடியாக்கள் பலவும் சவிதாபாபி தளம் குறித்த ஆபத்தை இந்திய கலாச்சார அமைச்சகத்துக்கு அலாரம் அடித்தார்கள். வழக்கம் போல பிரச்சினை கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

விதாபாபிக்கு இரையானவர்கள் பெரும்பாலும் டீனேஜர்கள். குறிப்பாக மாணவர்கள். இந்த கதைவரிசையை தொடர்ந்து வாசித்து வந்த பள்ளி மாணவன் ஒருவன், தனது ஆசிரியைக்கு ஆபாசமான எம்.எம்.எஸ். ஒன்றினை அனுப்பியபோது பெங்களூரே அதிர்ந்துப் போனது. இத்தனைக்கும் பயல் ஐந்தாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான். அவசர அவசரமாக கர்நாடகா காவல்துறையின் சைபர் கிரிம் பிரிவு சவிதாபாபி தளத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதுமட்டுமன்றி தொடர்ந்து வந்த பல புகார்களின் அடிப்படையிலும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் சவிதாபாபி தளத்தை தடை செய்தது. ஆபாசம், ஆணாதிக்கம், பெண்களை பலவழிகளிலும் கொச்சைப்படுத்துவது என்று காரணங்களை அடுக்கியது. இந்த தளம் பொதுமக்கள் பார்வைக்கு தெரியப்படுத்தப்படக் கூடாது என்று இண்டர்நெட் சர்வீஸ் வழங்கும் சேவை நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டது.

சவிதாபாபியை தரிசிக்கும் கோடிக்கணக்கானவர்களில் 80 சதவிகிதம் பேர் இந்தியர்களாகவே இருந்தார்கள். இந்தியாவில் முடக்கப்பட்டதால் தளம் ஆட்டம் கண்டு விட்டது. உடனே தளத்தை நிர்வகித்து வந்தவர்கள் ‘சேவ் சவிதா’ (சவிதாவை காப்பாற்றுங்கள்) என்றொரு அமைப்பை இண்டர்நெட்டில் நிறுவி, இந்திய அரசுக்கு எதிராக போராடத் தொடங்கினார்கள்.

“ஆயிரக்கணக்கான செக்ஸ் தளங்கள் இந்தியாவில் காணக்கிடைக்கையில் சவிதாபாபிக்கு மட்டும் ஏன் தடை என்று இந்தியர்களில் யாராவது ஒருவர் தகவல் அறிமை உரியும் சட்டத்தைப் பயன்படுத்தி அரசை கேள்வி கேட்கவேண்டும். நாங்கள் ஐரோப்பாவில் இருப்பதால் இதுபற்றி இந்திய அரசிடம் பேசமுடியவில்லை” என்று தளத்தை நிர்வகித்து வந்ததாக கூறப்பட்ட தேஷ்முக் கேட்டுக் கொண்டார்.

இதுவரை தளத்தை ரசித்து வந்தவர்களாக இருந்தாலும், தடை என்றதும் பலரும் பதுங்க ஆரம்பித்தார்கள். சவிதாவுக்கு ஆதரவாக அரசை எதிர்த்து யாரும் சவுண்டு விட தயாராக இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் பொறுத்துப் பார்த்த நிர்வாகம் பூனைக்குட்டி மாதிரி நைசாக வெளியே வந்தது. புனீத் அகர்வால் என்பவர் தளத்தை தான் நடத்தி வந்ததாக ஒத்துக் கொண்டார். சவிதாபாபி தளத்தின் சேவைகளை உடனடியாக நிறுத்திக் கொள்வதாக அறிக்கையும் விட்டார். இவர்தான் தேஷ்முக் என்ற பெயரில் தளத்தின் நிர்வாகியாகவும், கதையாசிரியராகவும் இருந்தவர்.

“சவிதாபாபியின் சொந்தங்களே! கனத்த இதயத்தோடும், கண்களில் வழியும் கண்ணீரோடும் சவிதாபாபி தளத்தின் சேவைகளை நிறுத்திக் கொள்கிறேன். இதுவரை ஆதரவு கொடுத்த வந்தவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை. சொந்த குடும்பப் பிரச்சினைகளால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்!” என்று செண்டிமெண்டலாக அறிக்கை விட்டு தப்பித்துக் கொண்டார். கொஞ்சநஞ்ச நம்பிக்கையோடு மீண்டும் சவிதாபாபி வருவாள் என்று ஆவலோடு ஜொள்ளு விட்டு, கணினி மேல் விழிவைத்து காத்திருந்தவர்கள் நொந்துப் போனார்கள்.
சவிதாபாபியின் சகாப்தம் இந்த ஜூலை மாதத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது.

செக்ஸ் தளங்கள் எதுவும் இந்தியாவிலிருந்து அனுமதி பெற்று செயல்பட முடியாது. அதே நேரம் அயல்நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான தளங்கள் அஜால் குஜாலாக , புதிது புதிதாக, புற்றீசல் மாதிரி தொடங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சவிதாபாபியின் வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, குறிப்பாக இந்தியப் பெண்களை ஆபாசமாக சித்தரித்து ஏராளமான தளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் இணையத் தளங்கள் இவ்வகையில் இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கிறது. இவற்றில் மூவாயிரம் தளங்கள் தொடர்ந்து கொலைவெறியோடு இயங்கி வருகிறது என்பது முக்கியமானது. ஒரு சவிதாபாபியை முடக்கிவிட்ட இந்தியா, மீதியிருக்கும் முப்பதாயிரத்து சொச்சம் தளங்களை என்ன செய்யப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

நம்ம ஊரில் கூட சில வருடங்களுக்கு முன்பாக பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையத்தளங்களில் பிரசுரித்ததாக கூறி ஒரு டாக்டர் கைதானார். அவர் மேல் பல பிரிவுகளிலு வழக்கு தொடரப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கிறார். எல்லாம் ஓக்கே. ஆனால் அவர் நடத்தி வந்த இணையத்தளம் இன்னமும் வெற்றிகரமாக நடந்துகொண்டு தானே இருக்கிறது? டாக்டர் எடுத்த செக்ஸ் படங்கள் இன்னமும் அத்தளத்தில் இருக்கத்தானே செய்கிறது? காரணம். அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படும் தளம் அது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அனுமதி பெற்று செக்ஸ் தளங்களை நடத்திக் கொள்ளலாம். இண்டர்நெட் பாவிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் பன்மடங்காக பெருகி வருவதால், இந்தியர்களை குறிவைத்து அயல்நாடுகளில் இருந்து ஆபாசத்தளங்களை நடத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்தத் தளங்களை இங்கே இருப்பவர்கள் பார்வைக்கு தடை செய்வதுதான் இதற்கிருக்கும் ஒரே தீர்வு. அப்படியில்லாமல் ஏதோ ஒரு தளத்தை அப்போதைக்கு தடை செய்து, ஆயிரம் தளங்களை சுதந்திரமாக விட்டு வைத்திருப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.

வளைகுடா நாடுகளில் வழங்கப்படும் இண்டர்நெட் சேவையில் இப்பிரச்சினைக்கு சரியான முன்னுதாரணம் உண்டு. அந்நாடுகளில் ஆபாச இணையத்தளங்களை பயனாளர்கள் பாவிக்க முற்றான தடை உண்டு. இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களே இணையத்தளங்களை வடிகட்டி அனுப்புவதால் தடை வெற்றிகரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவும் வளைகுடா நாடுகளை இவ்விஷயத்தில் பின்பற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய நேரமிது.


(நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்)

24 ஆகஸ்ட், 2009

சென்னை-பை-நைட்


'பாரிஸ் பை நைட்' என்பார்கள். அந்த லெவலுக்கெல்லாம் சென்னை எப்போதும் இருந்ததில்லை, எதிர்காலத்தில் மாறலாம். பத்து, பதினைந்து ஆண்டுகளாக சென்னையின் இரவுகளை உன்னிப்பாக கவனித்ததில் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. சென்னைவாசிகளுக்கு தூக்கம் முக்கியம். பத்து மணி ஆனாலே அலாரம் அடித்தது மாதிரி தூங்கப் போய்விடுகிறார்கள் அல்லது சன் டிவியில் பத்தரை மணிக்கு படம் பார்க்கத் தொடங்குகிறார்கள். கால் சென்டர்களிலும், பிபிஓக்களிலும், பத்திரிகைகளிலும், சினிமாக்களிலும், விளம்பரத்துறையிலும், அச்சுத்துறையிலும், இன்னும் சில துறைகளில் பணிபுரியும் கோட்டான்கள் தவிர்த்து மீதி அனைவருமே தூக்கப் பிரியர்கள். செக்யூரிட்டிகளும், காவலாளிகளும் கூட உட்கார்ந்த இடத்திலேயே இங்கு தூங்கிப் பழகியவர்கள்.

ஓவராக குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வழி தெரியாதவர்களும், வானமே கூரையாய் வாழ்பவர்களும் பிளாட்பாரங்களில் ஒதுங்கி வாழ்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாலை பிளாட்பார தூங்குமூஞ்சிகளை நிறைய கண்டிருக்க முடியும். 'சென்னை ஈஸ் எ காஸ்மோபாலிட்டன் சிட்டி, நேஸ்ட்டி அக்லி சிடிசன்ஸ்' என்று முகஞ்சுளித்தவர்கள் புண்ணியத்தால் இப்போது அண்ணாசாலை பிளாட்பார்ம்கள் வெறிச்சோடிப் போயிருக்கிறது. கே.கே.நகர், வடபழனி பிளாட்ஃபார்ம்கள் பரபரப்பாகியிருக்கிறது.

தினமலர் காலத்தில் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் தின அண்ணாசாலை பரபரப்புக்கும், இப்போதிருக்கும் அண்ணாசாலை பரபரப்புக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அப்போதும் சரி, இப்போதும் சரி ஸ்பென்சர்ஸ்க்கு எதிரில் இருக்கும் காவல்நிலையத்தை தாண்டுவது அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். அப்போதாவது பரவாயில்லை “ப்ரெஸ்சுங்க” என்று மிதப்பாக சொன்னால் சலாம் விட்டு அனுப்பி வைப்பார்கள். இப்போது “ப்ரெஸ்” என்று சொன்னாலும் டவுசரைக் கயட்டி செக் செய்து தான் அனுப்புகிறார்கள். பேருந்து நிலையம் கோயம்பேடுக்கு போய்விட்டதால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை, மைக்கேல் ஜாக்சனை உச்சபட்ச ஒலியில் அலறவிட்டுப் பறக்கும் நவீனரக கார்கள் வெற்றிகரமாக நிரப்புகின்றன. இரவுகளில் டூவீலர் மாதவன்கள் லேன் மாறி ஓட்டுவது உயிருக்கு ஆபத்து.

பிலால் இருந்தவரை நைட்டு ஒரு மணிக்கெல்லாம் கூட பிரியாணி சுடச்சுட கிடைக்கும். பிலால் இல்லாத குறையை அண்ணாசாலை மசூதிக்கு எதிரிலிருக்கும் ஒரு ஹோட்டல் சரிகட்டுகிறது. மதுரையில் அதிகாலை ஒரு மணிக்கு கூட இட்லி கிடைக்கும் என்பார்கள். சென்னையில் பொதுவாக பதினொன்று, பதினொன்றைக்கு மேல் உணவு கிடைப்பது சிரமம். பாண்டிபாஜார் டீலக்ஸை மட்டும் நம்பிப் போகலாம். தெருவோர பிரியாணி கடைகளும், கையேந்தி பவன்களும் கூட குடிகாரர்கள் தொல்லையாலும், போலிஸின் அதிகாரத்தாலும் பத்தரை மணிக்கே மூட்டை கட்டிவிடுகிறார்கள்.

கமிஷனர் சேகர் பதவி ஏற்றாலும் ஏற்றார், பலராம் நாயுடுவுக்கு வந்த சிக்கல்கள் மாதிரி சிக்கலோ சிக்கல். பிரஸ்மீட்களில் கம்பீரமாக முழங்கினாலும் சைக்கோ கொலைக்காரன் தண்ணி காட்டுகிறான். போதாக்குறைக்கு பெங்களூர், ஆமதாபாத் குண்டுவெடிப்புகள் போலிசாருக்கும், சென்னைவாசிகளுக்கும் பீதியையும், பேதியையும் சமவிகிதத்தில் கொடுத்திருக்கிறது. பெண் போலிசாரை நைட் ரவுண்ட்ஸில் முன்பெல்லாம் காணமுடியாது. ஆள் பற்றாக்குறை போலிருக்கிறது. பெண் போலிசாரும் ஆங்காங்கே ”வாயை ஊது!” என்று சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பையை நோண்டி டிபன்பாக்ஸை திறந்து பார்க்கிறார்கள். குண்டுகள் கடத்த டிபன்பாக்ஸ் தான் சவுகரியம் போலிருக்கிறது.

இரண்டு நாட்கள் முன்னதாக நீண்டநாள் கழித்து சென்னையை இருசக்கர வாகனத்தில் ஒரு ரவுண்டு அடிக்க முடிந்தது. சைக்கோ பீதி, வெடிகுண்டு பயம் இதையெல்லாம் நேரில் காண ஆவல். பண்ணிரண்டரை மணிவாக்கில் தேவி தியேட்டருக்கு அருகிலிருந்து கிளம்பியவன் அண்ணாசாலை காவல்நிலையத்தை தவிர்க்க வேண்டி (வாயை ஊத சொல்லிட்டாங்கன்னா சங்காச்சே?) லெப்ட் அடித்து மணிகூண்டை அடைந்தேன். இடதுபுறம் திரும்பி ராயப்பேட்டை மருத்துவமனை வழியாக போயிருக்க வேண்டும். அங்கிருக்கும் ராயப்பேட்டை காவல்நிலையத்தை தாண்டிச் செல்லவேண்டுமென்ற விதி இருந்ததால் நேராக திருவல்லிக்கேணிக்கு வண்டியை விட்டேன். ராயப்பேட்டையில் மாட்டினால் உடனடியாக ராயப்பேட்டை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று டிரிங் & ட்ரைவ் சர்ட்டிபிகேட் வாங்கிவிடுவார்கள். பீச் ரோட்டில் பொதுவாக ஓவர்ஸ்பீடாக வருகிறானா என்றுதான் பார்ப்பார்கள், நார்மல் ஸ்பீடில் செல்பவனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் பீச் ரோடை தேர்ந்தெடுத்தேன்.

முன்பெல்லாம் இரவுகளில் பீச் ரோட்டில் ஆட்டோ ரேஸ் நடக்கும். போலிஸ்காரர்களின் நெருக்கடியால் பீச் ரோட்டில் நடந்த ரேஸ் இப்போது சாந்தோமில் இருந்து சத்யா ஸ்டுடியோ வரை நடக்கிறதாம். அதிவேக கொலைவெறி ஆட்டோக்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் சாந்தோமில் இருந்து ரைட் அடித்து மயிலைக்கு வந்தேன். மயிலாப்பூர் போலிஸ் ஸ்டேஷனை தவிர்க்க தினகரனுக்கு முன்பாக வந்த ஏதோ ஒரு சந்தில் நுழைந்து கபாலீஸ்வரர் கோயிலை தொட்டு, குளத்தை சுற்றி மந்தைவெளியை நோக்கி வண்டியை முறுக்கினேன். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. மேற்கு மாடவீதியும், வடக்கு மாடவீதியும் சந்திக்கும் சந்திப்பில் போலிஸ் செக்கப். ஒரு பெண் போலிஸ் சுறுசுறுப்பாக வண்டி டாக்குமெண்டுகளை டார்ச் அடித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஃபோர்டு ஐகானில் இருபதுகளில் ஆறு பேர் அதிவேகமாக வந்து பிரேக் அடித்து நின்றார்கள். ‘கண்களிரண்டால்' பாட்டை சத்தமாக அதிரவிட்டிருந்தார்கள். டிரைவர் சீட்டில் இருந்தவர் காரிலிருந்தபடியே டாக்குமெண்ட்களை காட்டினார். ”வாயை ஊதுங்க” என்று சொன்னதுமே “டாக்குமெண்ட்ஸ் சரியா இருக்கில்லே? அப்புறம் எதுக்கு வாயை ஊதச்சொல்றே?” என்று ஒருமையில் போலிஸ்காரரை கேட்டதுமே, கோபமடைந்த போலிஸ்காரர் வண்டிச்சாவியை பிடுங்கிக் கொண்டுப் போனார்.

பயத்தில் ஹெல்மெட்டை கழட்டாமலேயே டாக்குமெண்ட்ஸை காட்டினேன். ”பாலிசி பேப்பர் வர ஒரு வாரமாகும். இன்சூரன்ஸ் ரிசீப்ட் மட்டும் இருக்கு” என்று சொல்லிவிட்டு என் கம்பெனி ஐடெண்டிகார்டை காட்டினேன். நல்ல வேளையாக அந்த பெண் போலிஸ் வாயை ஊத சொல்லவில்லை. மாணிக்சந்தையும், பாஸ் பாஸையும் சரிவிகிதத்தில் மிக்ஸ் செய்து போடுபவன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவன். ஃபோர்டு ஐகான் காரரிடம் “பேரு சொல்லுங்க சார்!” என்றவாறே நகர்ந்தார் அந்த பெண் போலிஸ். “நான் அட்வகேட்” என்று ஃபோர்டு சொல்ல, “பேரை தான் கேட்டேன், ப்ரொபஷனை கேட்கலை!” என்று கடித்துக் கொண்டிருக்க நூறு ரூபாய் மிச்சமான குஷியில் வண்டியைக் கிளப்பினேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்புகூட மந்தைவெளி பஸ்ஸ்டாண்டை சுற்றி நிறையப் பேர் பிளாட்பார்ம்களில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது வெறிச்சோடியிருக்கிறது. சைக்கோ பீதி. அடையார் பிரிட்ஜ் அமைதியாக இருந்தது. வழியெங்கும் பிளாட்பார்ம் வாசிகளை எங்கேயுமே காணமுடியவில்லை. மத்திய கைலாஷை தவிர்க்கவே முடியவில்லை. சாதாரண நேரத்திலேயே அங்கே வசூல்ராஜாக்கள். இரவில் சொல்லவும் வேண்டுமா?

பத்து கார்கள், இருபது டூவீலர்கள் மடக்கப்பட்டிருந்தன. கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று நினைத்தவாறே பைக்கை ஓரம் கட்டினேன். கார்களின் டிக்கிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ப்ரகாஷ்ராஜ் ஜாடையில் இருந்த போலிஸ்காரர் ஒருவர் ஹெல்மெட்டையெல்லாம் கழட்ட சொல்லவில்லை. ”ஐடெண்டி கார்டு மட்டும் காட்டு, குடிச்சிருக்கியா, ஆர்சி புக் இருக்கானெல்லாம் கேட்கமாட்டேன்” என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ஐடெண்டி கார்டை காட்டியதுமே நன்றி சொல்லி அனுப்பிவைத்தார்.

சென்னையில் ஒரு பிரச்சினை. பதினொரு மணிக்கு மேல் தம் அடிப்பதற்கும், பாக்கு போடுவதற்கும் பொட்டிக்கடைகளே இருக்காது. ரெகுலர் தம்மர்கள் பாக்கெட்டாக வாங்கி ஸ்டாக் செய்துகொள்வார்கள். திருட்டு தம்மர்கள் பாடு தான் திண்டாட்டம். ஏதாவது பொட்டிக்கடை இருந்தாலாவது லூசில் வாங்கி அடிக்கமுடியும். தரமணி ரோட்டில் டிசிஎஸ் அருகே இருபத்தி நாலுமணி நேர பொட்டிக்கடை ஒன்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்குகிறது. எந்த நேரத்திலும் டீ, சமோசா, சிகரெட், பாக்கு தாராளமாக கிடைக்கிறது.

வேளச்சேரி விஜயநகரில் ஆட்டோக்காரர்களை தவிர்த்து யாரையுமே காணோம். போலிஸ் விழிப்பாக இருக்க வேண்டிய ஜங்ஷன் அது. வேளச்சேரி மேம்பாலத்தில் முன்பெல்லாம் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும், (அறிந்தும் அறியாமலும், வேட்டையாடு விளையாடு, பரட்டை (எ) அழகுசுந்தரம் etc.) இரவுகளில் பரபரப்பாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் இயங்க ஆரம்பித்தப் பிறகு சினிமாக்காரர்கள் ஏனோ அந்த மேம்பாலத்திடம் பாராமுகம் காட்டுகிறார்கள்.

மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சுடுகாட்டுக்கு அருகே இருக்கும் சொறி நாய்கள் எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் அனாயசமாக ஓடுகின்றன. டூவீலர்காரர்கள் சிகாகோ பேண்டோடு வீட்டுக்கு போகவேண்டியிருக்கிறது. ஒன்றரை மணிக்கு வீடு போய் சேர்ந்தேன். சென்னை மாநகர, புறநகர காவலர்களிடம் மாணிக்சந்த் உதவியால் தப்பினாலும் வீட்டில் மாட்டிக்கொள்ளும் ஆபத்து அதிகம். திக்கற்றவர்களுக்கு கொய்யா இலையே துணை. வீட்டிற்கொரு கொய்யா மரம் வளர்ப்போம்.