5 செப்டம்பர், 2009

உதிரத்துணி!

”இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் கொல்கிறார்கள்!” என்ற ஒற்றைவரியினை தவிர்த்து, ஈழப்பிரச்சினை குறித்த போதுமான அறிவும், தீவிரமான புரிதலும் இல்லாமலேயே முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களாக இணையமும், புலம்பெயர் தமிழர்கள் எழுதும் சில புத்தகங்களும் ஓரளவுக்கு நடந்தவற்றையும், தற்போதைய நடப்பையும் தெளிவாக்கி வருகின்றன.

இலங்கையில் போலிசார் என்றாலே சிங்களவர்கள் மட்டுமே என்றுதான் இன்றுவரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன். பலாலி வங்கிக்கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய போலிசார் தமிழர்கள் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள் என்பதை எல்லாம் வாசிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

புஷ்பராஜாவின் சகோதரி புஷ்பராணியை, ஷோபாசக்தி எடுத்திருக்கும் நேர்காணல் இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமானது.

“விசாரணை என்ற பெயரில் நான் உயிரோடு தூக்குக்கு அனுப்பப்பட்டேன். நான் பொதுவாக பாவாடை, சட்டை அணிவதுதான் வழக்கம். பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒருபெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். தொடர்ந்து இருபத்துநான்கு மணிநேரம் வதைக்கப்பட்டேன். எனது அலறல் பொலிஸ் குவாட்டர்ஸ்வரை கேட்டதாகப் பிறகு சொன்னார்கள். கல்யாணியும் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார். இரண்டு நாட்களில் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்றவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.

என்னை அடித்த தடிகள் என்கண் முன்னேயே தெறித்து விழுந்தன. நான் அரைநிர்வாணமாக அரைமயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்குத் உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. வழிந்துகொண்டிருந்த உதிரத்தைத் தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது.”


ஏராளமான அதிர்வுகளையும், கேள்விப்பட்டிராத பல தகவல்களையும் ஒருங்கே கொண்டது அந்நேர்காணல். முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்!

3 செப்டம்பர், 2009

சைபர் க்ரைம்!

வலைப்பதிவொன்றினில் சைபர் கிரிமினலான போலி டோண்டு என்பவருக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. போலி டோண்டுவோடு எனக்கு எந்த ஸ்நானப்ராப்தியும் இல்லையென்று எனது ஏழேமுக்கால் லட்சம் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

2 செப்டம்பர், 2009

சாருவுக்கு பணம் தேவை!

“நண்பரே நலமாக இருக்கிறீர்களா? என்னை மன்னிக்கவும். நான் மலேசியாவுக்கு வர இருப்பதை உங்களிடம் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும். இளைஞர்களை இனவெறிக்கு எதிராக ஊக்குவிக்கும் மாநாடு ஒன்றிற்கு அவசரமாக கிளம்பி வந்திருக்கிறேன். இங்கே மாநாட்டை முடித்து வந்தபிறகு ஒரு துரதிருஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆம். என்னுடைய கைப்பை ஒன்றினை நான் பயணித்த டாக்ஸியில் மறதியாக விட்டுவிட்டேன். என்னுடைய பணம், பாஸ்போர்ட் மற்றும் இதர முக்கியமான சமாச்சாரங்களை அந்த பையில் வைத்திருந்தேன். எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஹோட்டல் பில் கட்ட 1400 டாலரும், இந்தியாவுக்கு திரும்பிச்செல்ல 1800 டாலருமாக மொத்தமாக 3200 டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய்) உடனடியாக தேவைப்படுகிறது.

ஒரு நூலகத்திலிருக்கும் இணைய இணைப்பிலிருந்து இந்த மடலை உங்களுக்கு அனுப்புகிறேன். உங்களால் எவ்வளவு முடியுமோ அதை உடனே கொடுத்து உதவவும். ஊருக்கு சென்றதுமே கண்டிப்பாக திருப்பித் தந்து விடுகிறேன். உங்களால் பணம் தரமுடியுமென்றால் உடனடியாக வெஸ்டர்ன் யூனியன் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்கிறேன்.
நன்றி!

அன்புடன்
சாரு நிவேதிதா”

இப்படி ஒரு மின்னஞ்சல் கடந்த ஆண்டு, தமிழின் பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதாவின் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் வந்ததுமே பதறிப் போனார்கள். தங்களுடைய அபிமான எழுத்தாளர் பணமின்றி தவித்துக் கொண்டிருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. உடனடியாக வெஸ்டர்ன் யூனியன் (மணியார்டரில் பணம் அனுப்புவது போல நவீன இணைய முறை) மூலமாக பல பேர் பணம் அனுப்பினார்கள்.

உண்மையில் சாருநிவேதிதா மலேசியாவில் பணத்தை தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் நின்றாரா? இச்சம்பவம் குறித்து அவரே அவரது இணையத்தளத்தில் விலாவரியாக எழுதியிருக்கிறார்.

“என்னுடைய ஹாட்மெயில் மற்றும் ரீடிப்மெயிலில் திருட்டுத்தனமாக நுழைந்த ஆள் ஒருவன் என்னுடைய இரண்டாயிரம் வாசகர்களுக்கு இதுபோன்ற மெயிலை அனுப்பியிருக்கிறான். என் அன்பான வாசகர்கள் பலரும் முடிந்த அளவு பணம் அனுப்பியிருக்கின்றனர். அல்லது அனுப்ப முயற்சித்திருக்கின்றனர். யாருக்குமே அவசரத்தில் என்னைத் தொடர்பு கொண்டு பேசத் தோணவேயில்லை.

விஷயம் தெரிந்ததுமே என்னுடைய மெயில் ஐடி பாஸ்வேர்டை மாற்ற முயன்றேன். ஆனால் அந்த கிரிமினல் பலே கில்லாடி. என்னுடைய மின்னஞ்சலில் நுழைந்ததுமே அதை மாற்றிவிட்டிருக்கிறான்.

கொடுமை என்னவென்றால், அந்த கிரிமினல் மின்னஞ்சல் அனுப்பிய இரண்டாயிரம் பேரில் என் மகன் கார்த்திக்கும் ஒருவன். அப்போது கப்பலில் பயிற்சியில் இருந்திருக்கிறான். பயிற்சி முடிந்ததும் தான் சம்பளம். இப்படிப்பட்ட நிலையில் தன் தந்தைக்கு இப்படி ஒரு நிலையா என்று பதறிப்போய், கப்பல் கேப்டனிடம் ‘என் தந்தையை காப்பாற்ற ஆயிரம் டாலர் உடனடியாக தேவை. என் இரண்டு வருட சம்பளத்தை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறான்.

நல்லவேளையாக இந்த மோசடி என்னுடைய கவனத்துக்கு வந்ததுமே என்னுடைய இணையத்தளத்தில் அறிவிப்பு கொடுத்தேன். என்னுடைய வாசகர் ஒருவர் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்துக்கு புகார் செய்து, வாசகர்களும் அன்பர்களும் அனுப்பிய பணம் அந்த மோசடிப்பேர்வழி கைக்கு சென்று சேர்வதை தடுத்துவிட்டார்.

ஒருவரின் மின்னஞ்சல் பெட்டிக்குள் நுழைந்து, அவரோடு தொடர்பில் இருப்பவர்களுக்கு அவர் போலவே மின்னஞ்சல் செய்து, இரண்டாயிரம் டாலர் கொடு.. மூன்றாயிரம் டாலர் கொடு என்று மிரட்டுவது எவ்வளவு பெரிய கிரைம்?

தமிழ் சினிமாவில் டபுள் ஆக்ட் பார்த்திருக்கிறேன். அதுபோல் நிஜ வாழ்விலும் நடக்கும் என்று என்னுடைய எளிய மனதுக்கு இப்போதுதான் புரிகிறது. என்னுடைய வேஷத்தில் ஒரு வில்லன் சாரு! இனிமேல் பாஸ்வேர்டை தினசரியும் மாற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.”

இவ்வாறாக எழுதியிருக்கிறார். என்ன மோசடி நடந்திருக்கும் என்று இப்போது உங்களுக்கே புரிந்திருக்குமே? சாருநிவேதிதாவின் பெயரைப் பயன்படுத்தி, அவர் போலவே மின்னஞ்சல் செய்து, அவரோடு தொடர்பில் இருந்தவர்களிடம் பணம் பிடுங்கி ஏமாற்ற முயற்சித்திருக்கிறான் இந்த சைபர் கிரிமினல்.


மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் அல்-நசீர்-ஜக்கரியா மும்பை சைபர் க்ரைம் பிரிவைத் தொடர்பு கொண்டு ஒரு புகார் அளித்தார். அப்புகாரில் “என் மின்னஞ்சலை தவறாகப் பயன்படுத்தி 1,800 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து இருபத்தேழாயிரம் ரூபாய்) பணத்தை என் உறவினர்களிடம் யாரோ மோசடி செய்ய முயற்சிக்கிறார்கள்” என்று புகார் கொடுத்தார். இதே காலக்கட்டத்தில் இதே மாதிரியான பல்வேறு புகார்களும் வந்து சேர சைபர் கிரைம் போலிசார் திணறித்தான் போனார்கள்.

விசாரித்துப் பார்த்ததில் அந்த மோசடி மெயில் அனுப்பியவன், பணத்தை லண்டனில் இருக்கும் வீடு ஒன்றின் முகவரிக்கு அனுப்புமாறு கோரியிருக்கிறான். போலிசார் மேற்கொண்டு விசாரணையை நீட்டித்தபோது, சம்பந்தப்பட்ட ஃப்ராடு, அந்த லண்டன் வீட்டை காலிசெய்துக் கொண்டு ஓடிப்போனது தெரியவந்தது. அதாவது மோசடியில் யாராவது ஏமாந்து லம்பாக பணத்தை கொடுத்ததுமே வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை காலிசெய்துவிட்டு ஓடிவிடுவது இவர்களின் வழக்கம்.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு பணம் அனுப்பவேண்டுமானால், பணத்தை பெறுபவரின் வங்கி கணக்கு எண்ணும், ஏன் பணம் கைமாறுகிறது என்பதற்கான காரணமும் வழங்கப்படவேண்டும். நேரடியாக ஒரு முகவரிக்கு பணத்தை அனுப்பிவிட முடியாது. ஆனால் வெளிநாடுகளில் இதுபோன்ற நிர்ப்பந்தம் இல்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பணத்தை கைமாற்ற கட்டுப்பாடுகள் இல்லாத எளியமுறை இருக்கிறது. வங்கிக்கணக்கு எண் இல்லாமலேயே ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு பணத்தை அனுப்ப இயலும். எனவேதான் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை குறிவைத்து இந்த மோசடி மெயில் சமாச்சாரம் தொடர்ந்து நடக்கிறது.

சைபர் கிரைம் போலிஸார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜக்காரியாவின் மின்னஞ்சல் முகவரி, மேலதிக மோசடிகள் நடக்காத வண்ணம் உடனடியாக முடக்கப்பட்டது.

சாருநிவேதிதா, ஜக்காரியா போன்ற பலரின் மெயில் ஐடியும் இதுபோல களவாடப்பட்டு தினம் தினம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருகிறது. பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் பெரும்பாலும் ஏனோ புகார் செய்வதில்லை. யார் பெயரை சொல்லி மோசடி செய்கிறார்களோ, அவர் இந்தியாவில் இருப்பார். பணத்தை அனுப்பி வைத்தவர் ஏதாவது வெளிநாட்டில் இருப்பார். இதையெல்லாம் விளக்கி ‘எப்படி ஏமாந்தோம்?’ என்று புகார் அளிக்க பலருக்கும் வெட்கமாக இருப்பது இம்மோசடி தொடர்ந்து நடைபெற ஏதுவாக இருக்கிறது.

எப்படி உங்கள் மின்னஞ்சலின் பாஸ்வேர்டு அவர்களுக்கு கிடைக்கிறது?

மின்னஞ்சலில் பாஸ்வேர்டை திருட கேப்மாறிகள் புதுப்புது தந்திரங்களை கையாளுகிறார்கள். உதாரணத்துக்கு ஒரு அரதப்பழசான முறையைப் பார்க்கலாம்.

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் எனில், கூகிள் மெயில் நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு ஒரு மெயில் வரும். ”உங்கள் மெயில் அக்கவுண்டில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் குளறுபடியாகியிருக்கிறது. எனவே உங்கள் மின்னஞ்சல் பாஸ்வேர்டை கீழ்க்கண்ட பொட்டியில் டைப் செய்யவும். எல்லாம் சரியாகிவிடும்” என்றொரு மெயில் வந்திருக்கும்.

“அய்யய்யோ, மெயில்லே ஏதோ ப்ராப்ளமாமே?” என்று நினைத்துக் கொண்டு அவசர அவசரமாக பாஸ்வேர்டை டைப்புவீர்கள். முடிஞ்சது ஜோலி. உங்களுக்கு வந்தது மோசடி மெயில்.

கொஞ்சநாட்கள் கழித்து ஐரோப்பாவில் இருக்கும் உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ ‘உங்களிடம்’ இருந்து கீழ்க்கண்டவாறு ஒரு மெயில் போகும், நீங்கள் அறியாமலேயே. “நான் லண்டனில் நடுரோட்டில் நிற்கிறேன். கையில் அஞ்சு பைசா கூட இல்லை. பிச்சை எடுக்காததுதான் பாக்கி. உடனடியா இந்த அட்ரசுக்கு துட்டு அனுப்புங்க”.

பாஸ்வேர்டு கேட்டது கூகிள் நிறுவனம் தானே? எப்படி கொடுக்காமல் இருப்பது என்று கேட்பீர்கள். கூகிள் உள்ளிட்ட மின்னஞ்சல் சேவை வழங்கும் எந்த நிறுவனமும் தனது பயனாளர்களிடம் எக்காலத்திலும் பாஸ்வேர்ட் கேட்பதில்லை. பாஸ்வேர்டை டைப் செய்யச்சொல்லி கோரிவரும் எந்த ஒரு மெயிலுமே மோசடி எண்ணத்தோடு அனுப்பப்பட்ட மெயில் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நகையை திருடுவார்கள், பணத்தைத் திருடுவார்கள், ஏன் சொம்பைக் கூட திருடுவார்கள். போயும், போயும் ஈமெயிலையா திருடுவார்கள் என்று கேட்டால், ஆம். திருடுவார்கள். திருடப்படும் ஈமெயில் ‘வெயிட்டான’ நபருடையது என்றால், மற்ற திருட்டுகளில் கிடைக்கும் லாபத்தைவிட அதிக லாபத்தை உட்கார்ந்த இடத்திலிருந்தே அசால்ட்டாக அடித்துவிட முடியும். கன்னம் வைத்து, சுவரேறிக் குதித்து, போலிஸ் துரத்த மூச்சிறைக்க ஓடி... இதெல்லாம் தேவையே இல்லாமல் மவுஸை சொடுக்கி, லட்சங்களை ஆட்டை போட முடியும்.

சில பேர் தங்கள் மெயில் பாக்ஸில் ஏடிஎம், கிரெடிட் கார்டு போன்றவற்றின் எண்களையும், பாஸ்வேர்டுகளையும் இணையத்தில் பயன்படுத்தும் வசதிக்காக சேமித்து வைத்திருப்பார்கள். இதுபோன்றவர்களின் ஈமெயில் திருடப்பட்டால் போயே போச்சு. ஒட்டுமொத்தமாக டவுசரை உருவிவிடுவார்கள்.

உங்கள் ஈமெயில் பாஸ்வேர்டை திருடுபவன் உடனடியாக வெளிப்பட்டு விடமாட்டான். உங்கள் மின்னஞ்சல் நடவடிக்கைகளை வெகுகாலமாக நைசாக நோட்டமிட்டு, உங்களுக்கு யார் நெருக்கமானவர்கள், யாரெல்லாம் பண உதவி செய்யக்கூடியவர்கள் என்றெல்லாம் உங்களுக்கு தெரியாமலேயே உளவுப்பார்த்துக் கொண்டிருப்பான். தக்க சமயம் வந்துவிட்டால் டக்கராக கும்மியடித்துவிட்டுப் போய்விடுவான். இப்போதெல்லாம் பல பிஸினஸ் டீலிங்கே மின்னஞ்சலில் நடந்துவருகிறது என்பதால் ஈமெயில் எவ்வளவு முக்கியமானது என்பதை அதன் பயனாளிகள் உணரவேண்டும்.

உங்களுக்கு தெரியாத அநாமதேயம் யாராவது உங்களைப் பற்றிய பர்சனல் விவரங்களையோ, பாஸ்வேர்டையோ அல்லது உங்கள் வங்கி தொடர்பான தகவல்களையோ கேட்டால் உடனடியாக உள்ளூர் இணைய குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அந்த மின்னஞ்சலை பார்வேர்டு செய்யுங்கள்.

ஒருவர் மற்றொருவர் பற்றிய தகவல்களை எடுத்துக் கொண்டு, அந்தத் தகவல்களை கொண்டு பொருளாதார ஆதாயம் பெற உபயோகப்படுத்தினால் அது அடையாளத் திருட்டாக எடுத்துக் கொள்ளப்படும். இது கிட்டத்தட்ட ஆள்மாறாட்டம் போன்றது. வேறொருவரின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவது.

இணைய வழி பொருள் வாங்கும்போது, நீங்கள் உங்களது வங்கி, வங்கி கணக்கு எண் அல்லது உங்களது தாயாரின் முதல் பெயர் ஆகியவற்றை கொடுக்க வேண்டியதில்லை. அப்படி நீங்கள் கோரப்பட்டால், எச்சரிக்கையாக இருங்கள். அந்த இணையத்தளம் மோசடியான ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

முன்பின் தெரியாத மின்னஞ்சல்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் கிளிக் செய்வதை தவிருங்கள், நீங்கள் தவறுதலாக கிளிக் செய்து விட்டால், அதில் கேட்கப்படும் எந்த தகவல்களையும் நிரப்பாதீர்கள்.

உங்களது கடவுச்சொற்களையோ அல்லது முகவரி, வங்கி விவரம் மற்றும் கடன் அட்டை விவரம் போன்ற சொந்த விவரங்களையோ எப்போதும் அரட்டை அறையில் யாருக்கும் கொடுக்காதீர்கள்.

இதெல்லாம் பொதுவான எச்சரிக்கைகள். நீங்கள் ஏமாறப்படாமல் இருக்க நீங்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.

உங்களது தனிநபர் தகவல்கள் தவறாக உபயோகப் படுத்தப்பட்டிருப்பதாக நீங்கள் கேள்விபடும் பட்சத்தில், சோம்பேறித்தனப் படாமல் சைபர் கிரைமை அணுகுங்கள். இதனால் குற்றவாளி பிடிபடுவதற்கான வாய்ப்பு மட்டுமன்றி, உங்கள் நற்பெயரும் காப்பாற்றப்படும்.

(நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்)

ஸ்வீட் சிக்ஸ்டீன்!


சிக்ஸ்டீன் என்ற சொல்லே சிக்கென்று கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? கூடவே ஸ்வீட்டும் சேர்ந்தால் டூபீஸ் நமீதா மாதிரி கும்மென்று எஃபெக்ட்.

கிழக்கு டூரிங் டாக்கீஸில் இம்மாதம் திரையிடப்படும் படம் ‘ஸ்வீட் சிக்ஸ்டீன்!’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படம் அடல்ட்ஸ் ஒன்லியா என்று தெரியவில்லை. இப்படத்தில் மொத்தமாக முன்னூற்றி சொச்சம் முறை FUCK என்று உச்சரிக்கப்படுகிறதாம். ரசிகர்களின் ’எதிர்ப்பார்ப்பு’ முழுமையாக பூர்த்தியாகுமா என்பதை திரையிடுதலில் தான் தெரிந்துகொள்ள முடியும்.

இப்படம் பற்றிய விவரங்களை அறிய விக்கிப்பீடியா சுட்டிக்கு இங்கே அமுக்கவும்!

இம்மாதம் சிறப்புப் போனஸ் வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி மாதாமாதம் உலகப்படத்தோடு ஒரு ஆவணப்படமும் திரையிடப்படுமாம். எழுத்தாளர் மெளனி குறித்த ஆவணப்படமும், ஸ்வீட் சிக்ஸ்டீனுக்குப் பிறகு திரையிடப்படும் என்று உரையாடல் அமைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு டூரிங் டாக்கிஸில் படம் பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம். திரையிடுதலுக்கான ஏற்பாடுகளை செய்யும் பைத்தியக்காரன், பத்ரி ஆகியோரும் தரை டிக்கெட் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். எனவே தரையில் உட்கார்ந்தும் பார்க்கக்கூடிய வசதி கடந்த திரையிடுதலின் போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நாள் : 06-09-2009, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணி

இடம் : கிழக்குப்பதிப்பகம் மொட்டை மாடி
எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை.

அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்!

1 செப்டம்பர், 2009

மூன்று சம்பவங்கள்!


வலையுலகப் பெருசு ஒருவரோடு வழக்கமாக டீ குடிக்கும் கடை அது. டீ குடிக்க போனால் ரெண்டு மூன்று தம்மை பற்றவைத்து விட்டு அரைமணி நேரம் ஏதாவது மொக்கை போடுவோம். அன்றும் அப்படித்தான். கடந்து போன சேட்டு ஃபிகர் (ஆண்டி?) ஒன்றின் வெள்ளைவேளேர் சதைப்பிடிப்பான இடுப்பை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தேன்.

திடீரென அவருக்கு பெண்ணுரிமை சிந்தனைகள் கிளர்த்தெழுந்து என்னை திட்டிக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணை எப்படி பார்க்கவேண்டும் என்று ஆவேசமாக கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது பெரியார் சொன்னவற்றை இடை இடையே உதாரணமாக காட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு பேர் எங்களை நெருங்கினார்கள். அவர்களை கவனிக்காமல் அண்ணாத்தையோ ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். எங்களை நெருங்கியவர்களில் ஒருவர் லுங்கி கட்டிக் கொண்டிருந்தார், இன்னொருவர் வெள்ளைச்சட்டையை கருப்புப் பேண்டில் டக்-இன் செய்திருந்தார்.

லுங்கி கட்டிக் கொண்டிருந்தவர் எங்களை சுட்டிக் காட்டி, “சார் நான் சொன்னேன்லே? இவங்க ரெண்டு பேரு தான்!” என்றவுடனே எனக்கு அடிவயிறு கலக்க ஆரம்பித்தது. வண்டி சாவியை இக்னீஷியனில் செருகி வண்டியை கிளப்ப மனதளவில் தயாரானேன். அண்ணாத்தையை லைட்டாக சீண்டி அவர்களை காட்டினேன்.

வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் போட்டவர் சினேகமாக சிரித்துக் கொண்டு எங்கள் அருகில் வந்து கை கொடுத்தார். “சார் உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன், உங்க முகம் எனக்கு நெருக்கமா தெரியுது, நான் ஞாபக மறதிக்காரன். உங்களை எங்கே பார்த்தேன்னு மறந்துடிச்சி” யாரைப் பார்த்தாலும் கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் அண்ணாத்தை சொல்லும் முதல் டயலாக் இது.

“எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க, இங்கே தான் பார்த்திருப்பீங்க. உங்க ரெண்டு பேரையும் ஒரு ரெண்டுமாசமா நான் வாட்ச் பண்ணி இருக்கேன்” லுங்கி ஆசாமி.

“ஆமாங்க. நீங்க ரெண்டு பேரும் வித்தியாசமா ஏதோ பேசிக்கிறீங்கன்னு இவன் சொன்னான். என்னதான் பேசுறீங்கன்னு இன்னைக்கு இங்கே ஒருமணி நேரமா வெயிட் பண்ணி பார்த்தோம்” வெள்ளை சட்டை.

“பாருங்க, பெரியார் பேரை நம்ம மாதிரி யூத்துங்க (அவர்கள் இருவருக்கும் தலா 40, 42 வயதிருக்கலாம்) சொல்லவே பயப்படுறாங்க. ஆனா நீங்க ரெண்டு பேரும் தைரியமா பப்ளிக்லே பேசுறீங்க. அதுமட்டுமில்லே நிறைய சமுதாயப் பிரச்சினைகளை போட்டு அலசு அலசுன்னு அலசுறீங்க. ஒருமுறை நீங்க ரெண்டு பேரும் ஓட்டலுக்குள்ளே பரோட்டா சாப்பிட்டுக்கிட்டிருந்தீங்க. நீங்க என்ன பேசுறீங்கன்னு கேட்குறதுக்காகவே ஓட்டலிலே உங்க பக்கத்து டேபிளுக்கு வந்து உட்கார்ந்து மசாலா தோசை சாப்பிட்டேன்!”

இருவரும் எங்களை பேசவிடாமல் வெள்ளமாய்க் கொட்டினார்கள். பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு வெள்ளைச் சட்டைக்காரர் லுங்கியை காட்டி, “பக்கத்து தெருவிலே பெரியார் சிலை பார்த்திருப்பீங்க. அதை நிறுவுனவரு இவரு தான். நான் வக்கீலா இருக்கேன், பெரியார் போட்ட பிச்சை!” என்றார்.

இரண்டு பேரும் ‘சமுகத்துக்கு ஏதாவது செஞ்சாகணும்!' என்ற வெறியில் இருந்தார்கள். கொஞ்ச நேரம் சம்பிரதாயமாக பேசிக்கொண்டிருந்து பின்னர் கிளம்பினோம்.

“ங்கொய்யால, இனிமே இந்த டீக்கடைப் பக்கமே வரக்கூடாதுடா, டெய்லி ஒரு மணி நேரம் மொக்கைய போட்டு டவுசரை கயட்டிடுவாங்க போலிருக்கு!” என்றார் அண்ணாத்தை.

* - * - * - * - * - * - * - * - * - *

அவர் நல்ல துடிப்பான இளம்பெண். நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். என்னோடு அதே வலையுலகப் பெருசு தானிருந்தார். இணையத்தில் தமிழ், வலைப்பூக்கள் என்றும் பல டாபிக்குகளுக்கு நடுவில் பேசிக்கொண்டிருந்தோம்.

திடீரென்று அந்தப் பெண் கேட்டார், “வலைப்பூக்களில் எழுதுவதால் சமூகத்துக்கு என்ன நன்மை?”

அண்ணாத்தை கொஞ்சம் திணறி, உடனே சுதாரித்து, “நேற்று ஏதோ படம் பார்த்தேன்னு சொன்னீங்கள்லே? அதனாலே சமூகத்துக்கு என்ன நன்மை செஞ்சிருக்கீங்க?” என்றார்.

“படம் என் திருப்திக்கு பார்க்குறேன்!”

“அதுமாதிரி தான் வலைப்பூக்களில் எழுதுறவங்க அவங்கவங்க திருப்திக்கு எழுதறாங்க?”

“சினிமா பார்க்குறதும், எழுதறதும் ஒண்ணா? என்ன சார் சொல்றீங்க? எழுத்துங்கிறது...” ஆவேசமாய் கேட்டார், கொஞ்சம் விட்டால் ‘ஏய் மனிதனே!' என்று ஆவேசக்கவிதை படிப்பார் போலிருந்தது.

“நீங்க மொதல்லே கேட்டதே ஒரு கோயிந்துத்தனமான கேள்வி. உலகத்துலே எவ்வளவோ விஷயம் நடக்குது. ஒவ்வொண்ணாலயும் சமூகத்துக்கு என்ன பயன்னு கேட்டுக்கிட்டிருந்தா எதுவுமே நடக்காது”

“அப்போ நீங்கள்லாம் எழுதறதால பயனேதும் இல்லைன்னு சொல்றீங்க?”

“அதுமட்டுமில்லே, நீங்க படம் பார்க்குறது, இப்போ நாம பேசிக்கிட்டிருக்கிறது இதனால எல்லாம் கூட சமூகத்துக்கு எந்த பயனுமில்லே!”

'ம்ஹூம், இது வேலைக்கு ஆகாது!' என்று அப்பெண் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, உடனேயே பேச்சை துண்டித்துவிட்டு கிளம்பி விட்டார்.

* - * - * - * - * - * - * - * - * - *

கொஞ்ச நாட்களுக்கு முன் தண்டையார்ப்பேட்டை மணிக்கூண்டு அருகில் ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்புக்கு சென்றேன். லைட் ம்யூசிக்கில் பாடிக்கொண்டிருந்தவர் மிகக்கொடூரமாக பி.எஸ்.வீரப்பா குரலில் ‘உலக நாயகனே' பாடிக்கொண்டிருந்தார். இவர்களது அவஸ்தையில் இருந்து தப்பிக்க நினைத்து மிரண்டுப் போயிருந்த மணமகனிடம் மொய்க்கவரை திணித்துவிட்டு எஸ்கேப் ஆனேன். வண்டியை மண்டபத்துக்கு எதிரில் ஒரு டீக்கடைக்கு அருகில் நிறுத்தியிருந்தேன்.

வண்டியை எடுத்தபோது ஒருவர் என் தோளை சீண்டி “நீங்கதான் லக்கிலுக்கா?” என்று கேட்டார். எனது வண்டியில் லக்கிலுக் என்ற ஸ்டிக்கர் ஒட்டிவைத்திருந்ததை கவனித்திருப்பார் போலிருக்கிறது. நான் தான் என்று தெரிந்தால் அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது தெரியாததால் ”இல்லைங்க. என் பேரு குமார்” என்றேன்.

“உங்க வீடு எங்கே இருக்கு?”

அனிச்சையாக “மடிப்பாக்கம்” என்றேன்.

“மாட்டிக்கிட்டீங்களா, நீங்க தான் லக்கிலுக்கு, நான் இங்கே தான் மிண்டுலே வேலை பார்க்குறேன்” அவர் பெயரோடு, அவர் பணிபுரியும் பிரபலமான அந்த அச்சகத்தின் பெயரை சொன்னார். இந்தியாவின் நெ.1 டயரியை தயாரிப்பவர்கள் அவர்கள். தொழில்நிமித்தமாக அவர்களோடு எனக்கு முன்பு தொடர்பு இருந்தது. மனிதர் பார்க்க வடிவேலுவிடம் ‘செத்து செத்து விளையாடலாமா?' என்று கேட்ட முத்துக்காளை கெட்டப்பில் இருந்தார்.

“நெட்டுலே இமேஜஸ் தேடுவேன் சார். அப்போ யதேச்சையா எப்படியோ தமிழ்மணம் மாட்டிச்சி. உங்க பிலாக் எல்லாம் எனக்கு அப்படித்தான் அறிமுகம். ஒரு வருஷமா தொடர்ந்து உங்க பிலாக் படிக்கிறேன்”

“ரொம்ப நன்றிங்க!”

“ஆனா பாருங்க. உங்களை மாதிரி பெரிய எழுத்தாளர்கள் (யாரும் நகைக்க வேண்டாம், அவர் சீரியஸாக தான் சொன்னார்) அன்றாட மக்களின் பிரச்சினைகளை பத்தி எழுதறது இல்லே!”

”அன்றாட மக்களின் பிரச்சினைன்னா எதுங்க?”

“நான் திருவொற்றியூர் போகணும். ஒருநாள் மகாராணி ஸ்டாப்பிங்க்லே நின்னிக்கிட்டிருந்தேன். 28ஆம் நம்பர் பஸ்காரன் பஸ் ஸ்டேண்டுலே நிறுத்தாம ரொம்ப தள்ளிப்போய் நிறுத்தினான். இதுமாதிரி பிரச்சினைகளை எழுதணும் சார்! அப்போதான் சமூகத்துலே மாற்றம் வரும்!”

“நான் எழுதினா கூட 28ஆம் நம்பர் பஸ் ட்ரைவர் பிலாக்கெல்லாம் படிக்கமாட்டாரே?”

“அட என்ன சார், உங்க பிலாக்கையெல்லாம் கலைஞரே படிப்பாருன்னு (?) கேள்விப்பட்டிருக்கேன். இதுமாதிரி நீங்கள்லாம் எழுதினீங்கன்னா உடனே அரசு அதிகாரிங்கள்லாம் நடவடிக்கை எடுப்பாங்களே?”

“தோழா. நாமல்லாம் சமூகத்தை புரட்டிப் போடவெல்லாம் முடியாதுங்க. சமூகம் எப்பவும் ஒருக்களிச்சு தான் படுத்துக்கிட்டிருக்கும். அதுவா புரண்டு படுத்தாதான் உண்டு”

“என்ன சார் இப்படி சொல்றீங்க? எழுத்தாளர்கள் நினைச்சா எது வேணும்னாலும் பண்ண முடியும் சார்! பிரெஞ்சுப் புரட்சி எப்படி நடந்தது?”

“இது இந்தியாவாச்சே? அதுவுமில்லாம நானெல்லாம் வால்டரோ, ரூசோவோ கிடையாது!”

நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை, தொடர்ந்து அடம்பிடித்தார். சரி இனி அன்றாட மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை எழுதறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனேன். இதோ 28ஆம் நம்பர் பஸ் மகாராணி ஸ்டாப்பிங்கில் நிற்பதில்லை என்று எழுதிவிட்டேன். ஏதாவது புரட்சி ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.

இன்னும் கூட எங்களையெல்லாம் இவங்க நம்பிக்கிட்டிருக்காங்களே? :-)