8 ஜூன், 2010

ஈழம் - ஆன்மாவின் மரணம்!

இனப்படுகொலை வரலாற்றில் தமிழன் பெயரும் இடம்பெறும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சம உரிமையும், சக வாழ்வும் கேட்டுப் போராடிய ஈழத் தமிழினத்துக்கு ஆயுதவழிப் போராட்டம் என்பது வேறு வழியற்ற இறுதித் தேர்வு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் காரணம் அல்ல, அவர்கள் விளைவுகள். ஒடுக்குமுறைக்கு எதிரான விளைவுகள். அந்த உரிமைச் சமரின் பின்னுள்ள நியாயங்களை உலகம் புரிந்துகொள்ளும் முன்னரே நந்திக்கடலோரம் போராட்டம் முடித்து வைக்கப்பட்டுவிட்டது.

பொருளாதார அதிகாரத்தை மைய அச்சாகக் கொண்டு கட்டமைக்கப்படும் நவீன பொருளாதாரத்தில் அனைத்துமே சந்தையாகத்தான் பார்க்கப்படுகின்றது. சந்தை வியாபாரத்துக்கு எப்போதுமே கூச்சல்கள் பிடிப்பது இல்லை. எதிர்ப்பியக்கங்களின் போராட்டங்கள் அற்ற சந்தைதான் நிறுவனங்களுக்குத் தேவை. தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டப் பின்னரான இலங்கை இப்போது எதிர்ப்புகளும், கூச்சல்களும் அற்ற அமைதியான சந்தையாக இருக்கிறது. அதனால்தான் இந்திய பெரு முதலாளிகள் இலங்கையை நோக்கி படை எடுக்கின்றனர்.

ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே ஈழத்தின் இன அழிப்பை தங்களின் சுய லாபங்களுக்கு மடைமாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இத்தகைய கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்துவதில் தொடங்குகின்றன பாலாவின் கார்ட்டூன்கள். தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் இந்த கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.

'ஈழம் என்னும் ஆன்மாவை மரணமடைய வைத்தது இவர்தான்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த மக்கள் படுகொலையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், எழுத்தாளர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கை நனைத்துள்ளனர். மக்களின் மறதியால் யாவற்றையும் கடந்து சென்றுவிடலாம் என நினைக்கும் இந்த நேர்மையற்றவர்களை மக்களின் முன்பு அம்பலப்படுத்த இத்தைய தொகுப்புகள் உதவக் கூடியவை. எழுத்துக்களால் அல்லாது கோடுகளால் ஒரு குறிப்பான பிரச்னையை அணுகும் முதல் தமிழ் தொகுப்பு என்ற அடிப்படையில் இது கூடுதல் கவனம் பெறக் கூடியது.

பாலாவின் ‘ஈழம்: ஆன்மாவின் மரணம்’ என்ற இந்த தொகுப்பின் அறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 11 -6-10 அன்று, மாலை 6 மணிக்கு, இக்ஸா மையத்தில் (கன்னிமரா நூலகம் எதிரே, 107 பாந்தியன் சாலை, சென்னை-8) நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அன்போடு அழைக்கிறோம்!

(எழுத்து : பாரதிதம்பி)

பாலாவின் முந்தைய நூலான நாட்டு நடப்பு குறித்த சிறு அறிமுகம்!

’ஈழம் - ஆன்மாவின் மரணம்’ நூலில் இருந்து சில தூரிகைத் துளிகள் :

பெண் சிங்கம்!

அரைடவுசர் போட்டுக் கொண்டிருந்த வயது அது. குடும்பத்தோடு கலைஞரின் ‘தென்றல் சுடும்’ போயிருந்தோம். நங்கநல்லூர் ரங்கா, இன்றைய வெற்றிவேல் ஏ/சி, டி.டி.எஸ். நல்ல கூட்டம். “டோரி டோரி டொமக்க டோரி” என்ற செம்மொழிப்பாடல் இடம்பெற்றிருந்த படமது. ஆர்வத்தோடு படம் பார்க்க வந்தவர்கள், படத்தின் மொக்கையான போக்கைக் கண்டு நெளிந்து கொண்டிருந்தார்கள். க்ளைமேக்ஸில் மனோகரா கண்ணாம்பா ஸ்டைலில் நீளமான வசனத்தை ராதிகா ஏற்ற இறக்கத்தோடு பேசி நடிக்க, அப்பா உள்ளிட்ட ஓரிருவர் மட்டும் சவுண்டாக கைத்தட்டினார்கள்.

அந்த வயதில் முடிவெடுத்தேன். இனி கலைஞர் எழுதும் எந்தப் படத்தையும் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது. துரதிருஷ்டவசமாக என்னுடைய இரு தசாப்த சபதம் நேற்று ஒரு சங்கடமான தருணத்தில், மறுக்கவே இயலாத சூழலில் கைவிடப்பட வேண்டியதாயிற்று.

ஒரு ஊர்லே ஒரு ஃபாரஸ்ட் ஆபிஸர். இவர்தான் ஹீரோவென்றால் வில்லன் காட்டில் திருட்டுத்தனமாக மரம் வெட்டும் கடத்தல்காரன் என்பதை யூகித்து விட்டிருப்பீர்கள். ஹீரோயின் ஹீரோவின் ஆபிஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர். ஐ.பி.எஸ். படிக்கிறார். வில்லனின் சூழ்ச்சியில் கொலைக்கைதியாக ஹீரோ மாற, ஐ.பி.எஸ். ஹீரோயின் அந்த வழக்கை கையில் எடுத்து உண்மையான குற்றவாளி யாரென்று கண்டறிந்து நிரூபிக்கிறார்.

அனேகமாக கலைஞர் கடந்த முப்பதாண்டுகளில் வந்த தமிழ் சினிமா எதையும் பார்த்திருக்க மாட்டாரென்றுதான் இந்த படத்தை கண்டதும் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. சமகால தமிழ் சினிமாவென்ன, சமகால மெகாசீரியல்கள் கூட இதைவிட உள்ளடக்கத் தரத்தில் உயர்ந்தவை.

படா திராபையான கதை, திரைக்கதை, வசனத்தை கொண்டு பாவம் இயக்குனர் படாத பாடு பட்டிருக்கிறார். ’ட்ரெண்ட் கேப்’ தெரியக்கூடாது என்ற பதட்டம் அவருக்கு இருந்திருக்கும். எனவே பாடல் காட்சிகளை ஃபாரினில் படமாக்கியிருக்கிறார். ஆங்கிலம் கலக்காத தூயத்தமிழ் பாடல்களை ஃபாரின் லொக்கேஷன்களில் பார்க்கவே சகிக்கவில்லை. படத்தின் முதல் பாதியில் மட்டும் நான்கு பாடல்கள். படம் பார்க்கும் ரசிகன் கிழிந்த நாராகிறான்.

படத்துக்கு நடுவில் ‘நாடகம்’ காட்டும் பாணி எல்லாம் 70களிலேயே காலாவதியாகி விட்டது. கலைஞரின் வேலுநாச்சியார் நாடகம். பின்னணிக்குரல் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன். வேலுநாச்சியாராக மீராஜாஸ்மினை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. ஹீரோ அவரைவிட பாவம். தெலுங்குக்காரரான அவரை அழைத்து வந்து அடுக்கடுக்காக செந்தமிழ் வசனங்கள் பேசவைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் “பொண்ணு பொறந்ததுன்னு கலங்கலாமா?” என்று ஆரம்பித்து, வரலாற்று கீர்த்தி மிக்க பெண்களின் பட்டியலை வாசித்து, கடைசியாக “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒரு பொண்ணுதானே?” என்று முடிக்கும்போது ஆலந்தூர் நகர எட்டாவது வார்டு அன்னை சோனியா மன்ற செயலாளர் மட்டும் தியேட்டரில் கைத்தட்டுகிறார்.

கலைஞரின் வசனம் எப்படியிருக்கிறது?

ஒரு காட்சி. வன அலுவலகத்தைச் சேர்ந்த ஓட்டுனரான விவேக் ஜீப்போடு டீக்கடையில் நிற்கிறார்.

அப்போது அங்கே வரும் ஒருவர், “அண்ணே கட்டையை தூக்கிட்டுப் போகணும். வண்டியிலே ஏத்திக்கிட்டு வர்றீங்களா?”

“டேய் இது ஜீப்புடா. கட்டைய எல்லாம் லாரிலேதான் கொண்டு போகணும். சைஸ் சின்னதா இருந்தா ஏத்திக்கலாம். கட்டைய கண்ணுலே காட்டு!”

அந்த நபர் ஒரு நாட்டுக்கட்டையை அழைத்து வருகிறார்.

“டேய். இதுவாடா கட்டை?”

“ஆமாண்ணே. வைரம் பாய்ஞ்ச நாட்டுக்கட்டை. எம்பேருதான் வைரம்!”

இப்படியாக இளைஞர்களுக்காக டபுள்மீனிங் சமகால டயலாக்குகளை எழுத கலைஞர் முயற்சித்திருக்கிறார். நல்ல வசனம். நன்றி பத்ரி. “மாடசாமி. உனக்கு கால் எடுத்துட்டா நீ மடசாமி ஆயிடுவே!” மாதிரியான ‘நர்சிம் டச்’ வசனங்களும் உண்டு.

ஜே.கே.ரித்தீஷ், எம்.பி., ரம்பா, லாரன்ஸ் ராகவேந்திரா, லட்சுமிராய் என்று கவுரவ நட்சத்திரப் பட்டாளம் ஏராளம். எல்லாம் இருந்து என்ன பிரயோசனம்?

ஐ.பி.எஸ். ஆபிஸரான பெண்சிங்கம் சண்டை போடுவார், இரண்டாம் பாதியை தலையில் தூக்கி சுமப்பார் என்று நினைத்தால்.. ம்ஹூம்.. ஒரு டூயட் பாடுகிறார். போலிஸ் யூனிபார்ம் போட்ட சோளக்கொல்லை பொம்மை மாதிரி அங்கும் இங்கும் நடக்கிறார். க்ளைமேக்ஸில் மட்டும் ஒப்புக்குச் சப்பாணியாய் எல்லாம் முடிந்தபிறகு வந்து வில்லனை சுடுகிறார். டைட்டிலுக்கு இருக்கும் முக்கியத்துவம் கொஞ்சம் கூட கேரக்டருக்கு இல்லையே? திமுக தொண்டனுக்கு அந்த காலத்து கலைஞரின் ‘பூ ஒன்று புயலானது’ எல்லாம் நினைவுக்கு வந்து கண்ணில் நீர் கசிகிறது.

படம் முழுக்க தேவையில்லாமல் அள்ளித் தெளிக்கப்பட்ட கவர்ச்சி. சமகாலத்து சண்டை போடும் ஹீரோயிஸம் என்று பல கூறுகள் இது பெண்ணுரிமைக்கான படமல்ல என்று கட்டியம் கூறுகிறது. எந்த காட்சியிலுமே பெண்ணினத்தின் தனித்துவம் எடுத்து காட்டப்படவில்லை. சும்மா வெட்கப்படாமல் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன்.

பெண்சிங்கம் - போலி பெண்ணியம் பேசும் அக்மார்க் ஆணாதிக்கவாதிகளின் இத்துப்போன பழைய ரீல்!

7 ஜூன், 2010

மனிதம் மிச்சமிருக்கிறது : ஹமீதே சாட்சி!

அவருக்கு சர்வநிச்சயமாக தெரியாது. இறந்தவர்கள் எந்த சாதி, மொழி, என்ன மதம், நம் மாநிலமா வெளிமாநிலமா? எதுவுமே தெரியாது. ஆனாலும் இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமல் வென்லாக் அரசு மருத்துவமனையின் பிணவறை அருகில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தார். மங்களூர் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அங்குதான் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தது.
தேசமே சோகத்தில் மூழ்கிக் கிடக்க, இறந்தவர்களின் உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கவும், அவர்களுக்கு ஆறுதல் கூறவும் செய்தியைக் கேள்விப்பட்டதுமே, தன்னார்வலராக ஓடிவந்த அவரின் பெயர் அப்துல் ஹமீத் அலி. வயது 60.
விபத்தில் இறந்தவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மொழி புரியாமல், என்ன செய்வதென்று அறியாமல் பிணவறை வாசலில் விக்கித்து நின்ற உறவினர்களை ஆசுவாசப்படுத்தி, குடிக்க நீர் கொடுத்து, தகவல்களை அவர்களிடம் பெற்று அதிகாரிகளுக்கு உதவினார் ஹமீத். மரணமடைந்தவர்களின் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு ஹமீதின் இந்த சேவை மிக்க உதவியாக இருந்திருக்கிறது.
ஊடகவியலாளர்கள் அவரை படம் எடுக்க முனைந்தபோது, “நிறைய வேலை இருக்குப்பாஎன்று அன்போடு மறுத்தார். மங்களூருக்கு அருகில் மஞ்சேஸ்வர் நகரைச் சேர்ந்த ஹமீதுக்கு ஆறு குழந்தைகள். “எல்லோருக்கும் ஆண்டவன் புண்ணியத்தில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டேன். சும்மாதானே இருக்கிறேன். ஒரு அவசர ஆபத்துக்கு உதவுவதில் என்ன குறைந்துவிடப் போகிறேன்!என்று படபடப்பாக பேசிக்கொண்டே, ஸ்ட்ரெச்சரோடு ஓடுகிறார். அடுத்த ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கிறது.
இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட அறுபது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஹமீது வேலை பார்த்ததாக பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் சொல்கிறார். அவராகவே வந்தார். யாரும் எதுவும் சொல்லாமல் அவராகவே புயல் மாதிரி எங்களோடு வேலை பார்க்கிறார் என்று மருத்துவமனை சிப்பந்திகள் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஊரே ஓலமிட்டுக் கொண்டிருக்க, வீட்டில் ஓய்வெடுக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை” – இந்த மீட்புப் பணிக்கு தாமாகவே முன்வந்த்தற்கு ஹமீத் சொல்லும் காரணம் இது.
சாதி சண்டைகள், மதக்கலவரங்கள், பிரிவினை கோஷங்கள் அவ்வப்போது அச்சமூட்டும்போது ஹமீத் போன்றவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு விடையாக, இவரை நோக்கி நாம் கைகாட்டலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)

சைக்கிள் மிதிக்க ரெடியா?

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினை இது. ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் ஒரு பகுதிக்கு செல்ல வேண்டும். இன்றைய போக்குவரத்து நடந்து செல்வதற்கு கூட வாகாக இல்லாத நிலை. ஆட்டோ ரிக்‌ஷாவைதான் நாடவேண்டும். அதற்கும் அநியாயக் கட்டணம்.

சைக்கிள் மட்டும் இருந்தால்.. ஒரு மிதி மிதித்து விடலாமே?என்று யோசிக்கத் தோன்றுமில்லையா?
மோட்டர் சைக்கிள், கார், பஸ், ஆட்டோ ரிக்‌ஷாவென்று போக்குவரத்துக்கு நிறைய வசதிகள் வந்துவிட்ட காலத்தில் சைக்கிளா.. ச்சே!என்றுகூட நினைப்பீர்கள். ஆம். சைக்கிள்தான் குறைந்ததூரப் போக்குவரத்துக்கு உகந்த சரியான வாகனமென்று ஐரோப்பாவிலும், சீனாவிலும் முடிவுகட்டி விட்டார்கள். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக மிதிமிதியென்று சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்த நாம்தான் அதை ஒட்டுமொத்தமாக ஏறக்கட்டி வைத்துவிட்டோம்.
புவிவெப்பப் பிரச்சினை அதிகபட்ச சூட்டினை கிளப்பியிருக்கிறது. சுற்றுப்புறச்சூழல் தாறுமாறாக கெட்டு கிடக்கிறது. பெட்ரோல் விலை விண்ணைத் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. எனவே கொஞ்சதூரம் சைக்கிளை மிதிப்பதால் என்ன குடியா மூழ்கிவிடப் போகிறது? சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் நல்ல பயிற்சிதானே?
இன்றைய நிலையில் குறுகிய தூரப் பயணங்களில் நாம் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன?
வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தூரமே அருகிலிருக்கும் ரயில் நிலையத்துக்கோ அல்லது பஸ் நிலையத்துக்கோ செல்வதற்கு குறைந்தபட்சம் 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாவது நாம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
இந்த தூரத்தை கடக்க நாம் பயன்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுப்புறச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகிறது.
பஸ்சுக்காகவும், ஆட்டோவுக்காகவும் காத்திருக்கும் நேரமும் வீண். காத்திருக்கும் நேரம் மட்டுமன்றி சிக்னல்களிலும், போக்குவரத்து சிக்கல்களிலும் கூடுதல் நேரத்தை செலவழித்து அலுவலகத்துக்கோ அல்லது செல்லவேண்டிய இடத்துக்கோ சரியான நேரத்தில் போய்ச்சேர முடியாத நிலை.
இத்தகைய சிக்கல்களுக்கு மாற்றாக மும்பையின் புறநகரான தானேவில் களமிறங்கியிருக்கும் நிறுவனம் ஃப்ரீ-மோ (Fre-mo – Freedom to move). ஒரு நாளைக்கு சுமார் ஏழு லட்சம் பேர் தானே ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் பகுதிகளில் இருந்து வருகிறார்கள். இங்குவர அவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களால் நகரத்தின் போக்குவரத்து சிக்கல் இடியாப்பச் சிக்கலாகி விட்டது. பணமும், அதைவிட பொன் போன்ற நேரமும் தண்ணீராய் செலவழிகிறது. எனவேதான் சைக்கிளை இந்தப் பிரச்சினைக்கு மாற்றாக முன்வைக்கிறது ஃப்ரீ-மோ. இந்தியாவிலேயே முதன்முறையாக தானே நகருக்கு சமீபத்தில் வந்திருக்கும் திட்டம் இது.
ஃப்ரீ-மோ திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்பவர்கள் மேற்சொன்ன பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். சுற்றுப்புறச்சூழலை காப்பதாகவும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். இதற்காக சொந்தமாக சைக்கிள் வாங்க வேண்டியதில்லை. எனவே அதை பராமரிக்கும் சிக்கலும் இல்லை. இதை ஃப்ரீ-மோ பார்த்துக் கொள்ளும்.
மேலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை சைக்கிள் ஓட்டுவதால் பயணத்தோடு சேர்ந்து உடற்பயிற்சியும் இலவசமாக கிடைக்கிறது. ஜிம்முக்கும், பயணத்துக்கும் மாதாமாதம் ஆயிரங்களை கொட்டி அழத் தேவையில்லை.
அலுவலகங்களுக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், குறைந்தபட்ச தூரத்துக்கு பயணிப்பவர்கள் என்று பலருக்கும் இதனால் விளையும் பயன்கள் ஏராளம்.
சரி. இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது?
நகரின் முக்கியமான பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஃப்ரீ-மோ நிறுவனத்தின் சைக்கிள் நிலையங்கள் இருக்கும். ஓர் உறுப்பினர் தன்னுடைய வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நிலையத்திலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கோ, பஸ் நிறுத்தத்துக்கோ அல்லது செல்லவேண்டிய இடத்துக்கு அருகிலிருக்கும் நிலையத்தில் சைக்கிளை விட்டு விட்டு ஹாயாக சென்றுகொண்டே இருக்கலாம். சைக்கிளை இரவு முழுக்க வைத்திருக்கவோ அல்லது தேவையில்லாமல் வீட்டிலோ, தியேட்டரிலோ, வேறு இடத்திலோ நிறுத்தி வைத்திருப்பதற்கு அனுமதியில்லை. பயணத்துக்கு மட்டுமே உறுப்பினர்கள் சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம்.
உறுப்பினராக பதிவு செய்துகொள்ள நிறுவனம் சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை விதித்திருக்கிறது. செல்ஃபோனுக்கு சிம்கார்ட் வாங்குவதைப் போல சுலபமான வழிமுறைகள்தான். நிறுவனம் கேட்கும் தகவல்கள், ஆவணங்கள் மற்றும் உறுப்பினர் கட்டணத்தை செலுத்திவிட்டால் உறுப்பினர் ஆகிவிடலாம்.
உறுப்பினருக்கு கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மாதிரி ஒரு அட்டை கொடுக்கிறார்கள். இந்த அட்டையை பயன்படுத்திதான் சைக்கிளை எடுக்க முடியும். ஐந்து லட்ச ரூபாய்க்கு பர்சனல் ஆக்சிடெண்ட் இன்சூரன்ஸ் பாலிசியும் உண்டு. ஆண்கள் – பெண்கள் இருவருமே ஓட்டக்கூடிய ‘யூனிசெக்ஸ் வகை சைக்கிள்களே இங்கு கிடைக்கிறது. ஹெல்மெட் கொடுக்கிறார்கள். மழைக்காலத்தில் ரெயின்கோட் கூட பயனாளிகளுக்கு உண்டு. வசதிகள் இவ்வளவு இருப்பதால் உறுப்பினர் கட்டணம் அதிகமாக இருக்குமே என்று நினைப்பீர்கள்.
அதிகமில்லை ஜெண்டில்மேன்! ஆண்டுக்கு ரூபாய் இருநூறு மட்டுமே. ஆயுள் பதிவுக்கட்டணம் ஐநூறு. திரும்பப் பெறத்தக்க டெபாசிட் ரூபாய் இரண்டாயிரம். இவ்வளவு மட்டுமே!


ஃப்ரீ-மோவை தொடங்கியிருப்பவர் 48 வயதான வி.ரமேஷ். ஒரு பைனான்ஸ் கம்பெனியில் தலைமை செயல் அலுவலராக பணியாற்றியவர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தனது பணியை எழுதிகொடுத்து விட்டு இத்திட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
“2008ஆம் ஆண்டு பார்சிலோனாவுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பியபோது பெட்ரோல் விலை உயர்வை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பெட்ரோல் பயன்படுத்துவதை குறைப்பது தொடர்பாக நிறைய பேர் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த அடிப்படையிலேயே எனக்கு சைக்கிளை போக்குவரத்துக்கு மாற்றாக பயன்படுத்துவது குறித்த யோசனை வந்தது.
சைக்கிளா? என்று ஆரம்பத்தில் கார், மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சுகம் கண்டவர்களுக்கு தயக்கம் இருந்தது. ஆனால் ஒருமுறை எங்களிடம் உறுப்பினராக சேர்ந்துவிட்டவர்கள் சைக்கிள் கொடுக்கும் பரம சுதந்திரத்தை விரும்ப ஆரம்பித்து விடுகிறார்கள்!என்று தான் ஃப்ரீ-மோ தொடங்கிய கதையை சொல்கிறார் ரமேஷ்.
ஒரு பைனான்ஸ் நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர் சைக்கிள் கடை வைக்க போகலாமா என்று முதுகிற்குப் பின்னால் நிறைய பேர் ஆரம்பத்தில் கேலி பேசியிருக்கிறார்கள். நிறுவனத்தை தொடங்க இரண்டு கோடி ரூபாய் பணத்துக்காக பேயாய் அலைந்திருக்கிறார். தொழிலில் முதலீடு செய்வதில் ஆர்வமிருப்பவர்கள் கூட ஒரு சுற்றுச்சூழலுக்கு ஏதுவான திட்டத்தால் லாபம் என்ன இருக்கப் போகிறது என்று முதலீடு செய்ய மறுத்துவிட்டார்களாம். கடைசியாக பேங்க் ஆஃப் பரோடா கைகொடுக்க ஃப்ரீ-மோ ரெடி.
இத்திட்டம் ஏற்படுத்தப் போகும் சமூக மாற்றங்களை முன்வைத்து பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோருகிறார் ரமேஷ். என்னென்ன மாற்றங்களை விளைவிக்க முடியும் என்று ஒரு பெரிய கனவுப் பட்டியலையும் போடுகிறார்.
  1. நகரப் போக்குவரத்துச் சிக்கலை குறைக்கலாம். பெரும்பாலானவர்கள் சைக்கிளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் சிக்கல் ஏது? காற்று மற்றும் ஒலியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துவிடுமில்லையா?
  2. சுற்றுச்சூழல் சீரடைவதால் அனைவரும் சுத்தமான காற்றை சைக்கிள் மிதிக்கும்போது சுவாசிப்பார்கள். சைக்கிள் மிதிப்பது உடற்பயிற்சிக்கு ஒப்பானது என்று மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
  3. சிறுதூரப் போக்குவரத்துக்கு ஆகும் செலவு கட்டுப்பாட்டுக்குள் வருவதால் மக்கள் இந்த பணத்தை வேறு வகையில் உபயோகமாக செலவழித்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
  4. இன்று நகரங்களில் இருக்கும் பெரிய பிரச்சினை ‘பார்க்கிங் இத்திட்டத்தால் பார்க்கிங் பிரச்சினையை முற்றாக களையமுடியும். இது நகரக் கட்டமைப்புக்கும் வசதியானது.
  5. கார், பஸ் போன்ற வாகனங்களால் சாலை சீக்கிரம் பாதிப்படைகிறது. சைக்கிள்கள் அதிகம் செல்லும் சாலை நீண்டகாலத்துக்கு பாதிப்படையாமல் இருக்கும்.
  6. இதனால் சேமிக்கப்படும் நேரத்தை மக்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க முடியும். கூடுதலாக வருவாய் ஈட்டவோ அல்லது குடும்பத்தோடோ மகிழ்ச்சியாக இருக்கவோ நேரம் நிறைய கிடைக்கும்.
  7. கடைசியாக எந்திரம் போல இயங்கும் நம் வாழ்க்கையை சைக்கிள் பயணம் மாற்றும்.
எல்லாம் சரி. இதுவெல்லாம் ‘தானேவுக்குதானே? நம்ம ஊருக்கு எப்போ வரும் என்று நீங்கள் ஏக்கத்தோடு நினைப்பது புரிகிறது.
மிகவிரைவில் புதுடெல்லி, புனே, பெங்களூர், சென்னைக்கு ஃப்ரீ-மோ திட்டத்தை விரைவுபடுத்த இருக்கிறார் ரமேஷ். இதையடுத்து இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களையும் சைக்கிள்மயமாக்குவதுதான் அவரது லட்சியம்.
சைக்கிள் மிதித்துக்கொண்டு தோழனோடு ‘பசுமை நிறைந்த நினைவுகளே என்று நாம் பாடிச்செல்லும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும்.

4 ஜூன், 2010

நாளை.. நாளை மறுநாள்..


நாளை..

ஜூன் 5, சனிக்கிழமை, மாலை 5 மணியளவில், சென்னை மெரீனா கடற்கரை, காந்தி சிலைக்கு பின்புறம்.

மூத்தப் பதிவரும், ஜெமோ ரசிகருமான சிரில் அலெக்ஸ் சென்னையில் இருக்கும் சாரு ரசிகர்களையும், மற்ற பதிவர்களையும் சந்தித்து உரையாட வருகிறார்.

சந்திப்பு காந்திய அறவழியிலேயே நடைபெறும் என்பதால் அனைவரும் அச்சமேதுமின்றி, கூச்ச நாச்சம் பார்க்காமல் வந்து சேரலாம்.



நாளை மறுநாள்..

ஜூன் 6, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில், கிழக்கு டூரிங் டாக்கிஸில் உலகத் திரைப்பட திரையிடல்.

Paradise Now – பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படுகிறது. அனைவரும் வரலாம்.

இயக்கம் : Hany Abu-Assad
எழுத்து : Hany Abu-Assad – Bero Beyer
ஒளிப்பதிவு : Antoine Heberle

2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. உணர்ச்சிகரமான, அற்புதமான திரைக்கதையைக் கொண்டது. உள் அரசியல்களால் ஆஸ்கர் விருது பெறாமல் போன படம் இது.

மனித வெடிகுண்டுகளாக டெல் அவிவுக்குள் நுழையும் இரண்டு பாலஸ்தீனிய இளைஞர்களைச் சுற்றி நிகழும் கதை என்று மேலோட்டமாக ஒரு வரியில் இப்படத்தைப் பற்றிச் சொல்வது அபத்தமாக இருக்கும். இடமும் இருப்பும் லட்சியங்களும் மயக்கங்களும் உறவும் உணர்வுகளும் முட்டிமோதும் அற்புதத்தை சொற்களில் விவரிக்க இயலாது. பார்க்கத்தான் வேண்டும்.

அனைவரும் வருக.

இனி ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு கிழக்கு மொட்டை மாடியில் ‘கிழக்கு உலக சினிமா திரையிடல்’ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

05-06-10 பிற்சேர்க்கை : காப்புரிமை பிரச்சினை தொடர்பாக இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு பத்ரி!

ஞாயிறு அன்று காலை 8.30 மணியலவில் இந்திராபார்த்தசாரதியின் சிறுகதை தொகுதிகள் வெளியீடும் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த பத்ரியின் எச்சரிக்கைப்பதிவு இங்கே! இந்நிகழ்ச்சிக்கும் அனைவரும் வரலாம் என்று அழைக்கப்படுகிறார்கள்.