2 ஜூலை, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!

’செம்மொழி மாநாடு - முதல்வர் கொடுத்த பறக்கும் முத்தம்’ என்ற தலைப்பில் மாநாடு குறித்த என்னுடைய 6 பக்க கட்டுரை, இன்று கடைகளில் விற்பனையாகும் (08 ஜூலை 2010 இதழ்) 'புதிய தலைமுறை' வார இதழில் வெளிவந்திருக்கிறது.

அரசியல் கலக்காமல் ஊடகங்களில் மாநாடு குறித்து வெளிவந்திருக்கும் ஒரே கட்டுரை அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். மாநாட்டில் இரண்டே இரண்டு இடத்தில் திமுக கொடி காணப்பட்டது என்று சகபத்திரிகையாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதில் ஒரு கொடி வைத்திருந்தவரை நம் புகைப்படக் கலைஞர் படம்பிடித்திருந்தார். அப்படம் லே-அவுட்டிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

வலைப்பதிவில் கட்டுரையை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லை. ஒருவாரம் கழித்து பதிந்தால் ‘ராஜீவ்காந்தி படுகொலை’ மாதிரி பழைய நியூஸ் ஆகிவிடும். எனவே படிக்க விரும்புபவர்கள் கடையில் வாங்கிப் படிக்கலாம்.

1 ஜூலை, 2010

காமிக்ஸ் வடிவில் இலக்கியங்கள்!


செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளில் அரசும், தமிழார்வலர்களும் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிந்த நேரத்தில், சத்தமில்லாமல் செம்மொழி இலக்கியங்களை நடைமுறைத் தமிழுக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது கிழக்கு பதிப்பகம்.

மாநாட்டையொட்டி சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை நாவல் வடிவிலும், குழந்தைகளுக்கான படக்கதை (காமிக்ஸ்) வடிவிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். அனேகமாக தமிழிலக்கியம் இந்த வடிவங்களில் வருவது இதுவே முதன்முறை.

கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இந்த காப்பியங்களுக்கு உரைநூல்கள் ஏற்கனவே நிறைய உண்டு. உரைநூல்கள் பெரும்பாலும் பண்டித மொழியில், பாமரர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய நடையில் இல்லாததால் இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள் கிழக்கு பதிப்பகத்தார்.

இப்புதிய வடிவங்களால் சங்க இலக்கியத்தின் வீச்சு நீர்த்துப் போய் விடக்கூடிய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வியோடு கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் பா.ராகவனை சந்தித்தோம்.

“உரைநூல்களற்ற சங்க இலக்கியங்கள் மிகவும் குறைவு. அவற்றின் அர்த்தம், கவித்துவம் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உரை எழுதுபவர்கள் மிக அடர்த்தியான மொழியில் எழுதியிருக்கிறார்கள். நம்முடைய சமகால வாசகர்களின் வாசிப்புக்கு இந்த அடர்த்தி இடையூறு செய்யும்.

பாரதியில் தொடங்கிய நவீன உரைநடை, பிற்காலத்தில் பத்திரிகைகளின் வளர்ச்சியால் எளிமை, அழகு, சுவாரஸ்யத்தோடு வளர்ந்தது. எனவே இந்த உரைநடை வசீகரம், பண்டித தமிழ் மற்றும் பழங்கால இலக்கியங்கள் மீதான வாசிப்பு ஆர்வத்தை வாசகர்களிடம் குறைத்துவிட்டது. இதையடுத்து தமிழிலக்கிய வாசிப்பு என்பது ஆர்வம் சார்ந்ததாக மாறிவிட்டது. கல்வி அடிப்படையில் பார்த்தாலும் கூட சில செய்யுள்களையும், இலக்கியத்தின் சில பகுதிகளையும் நாம் கட்டாயத்தின் அடிப்படையில்தான் மாணவப் பருவத்தில் வாசிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் பண்டிதர்களின் கையில் இருந்த காலம் மலையேறி விட்டது. இப்போது பாமரர் வசம் வந்திருக்கிறது. இந்நிலையில் நம்முடைய பேரிலக்கியங்கள் கடுமை மொழி சார்ந்த பிரச்சினையால் சமகால, எதிர்கால வாசகர்களுக்கு கிட்டாமல் போய்விடக் கூடாது என்று யோசித்தோம். எனவே நாவல் வடிவில் காப்பியங்களை கொண்டுவருவது என்ற திட்டத்துக்கு வந்தோம். இதிகாசங்கள் குழந்தைகளுக்கு படக்கதைகளாக தரப்படுவதைப் போல இலக்கியங்களையும் தந்தால் என்ன என்றொரு கூடுதல் யோசனையும் வந்தது.

ஏற்கனவே நாவல் வடிவம் என்பது வாசிப்பவர்களுக்கு நன்கு பழகிய வடிவமாக இருக்கிறது. சமகாலத் தமிழில் அப்படியே மீண்டும் இலக்கியங்களை புத்தகங்களாக கொண்டு வந்திருக்கிறோம். எதையும் கூட்டவோ, குறைக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. எனவே இலக்கியம் நீர்த்துப் போகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நம் மொழியின் முக்கியத்துவத்தையும், தொன்மையையும் உலகுக்கு உரத்துச் சொல்லும் வகையில் உலக செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மாநாட்டையொட்டி இந்நூல்களை வெளியிடுவதில் கிழக்கு பதிப்பகம் பெருமை கொள்கிறது.

இவற்றை வாசிப்பவர்கள் சுவையுணர்ந்து மேலதிக வாசிப்புக்கு மூலநூல்களை தேடிப்போகக் கூடிய வாசலை நாங்கள் திறந்துவைக்கிறோம்” என்றார்.

வெகுவிரைவில் ‘முத்தொள்ளாயிரம்’ நூலையும் கொண்டுவர இருக்கிறார்கள். சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் எளிமைப்படுத்தி வித்தியாச வடிவங்களில் கொண்டுவரும் முயற்சியில் கிழக்கு பதிப்பகம் முனைப்பாக இருக்கிறது.

30 ஜூன், 2010

டிபன் பாக்ஸ் ரொம்ப சின்னது!

நான் டவுசர் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் வந்த படமது. ஊர்முழுக்க ஏதோ ஒரு படத்தைப் பற்றி பேச்சு. எங்கள் ஏரியா இளைஞர்கள் அந்தப் படத்தைப் பார்க்க மவுண்ட்ரோட்டுக்கு தினமும் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்தவர்கள் பரவசத்தோடு கண்கள் விரிய கண்டவர்களிடம் எல்லாம் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு படம் இப்படிப்பட்ட சொல்லவியலா பரவச உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எனக்கு அப்போதே வந்தது.

இப்போதும் கூட அப்படமோ, காட்சிகளோ தொலைக்காட்சியில் திரையிடப்பட்டால் நாற்பதை தாண்டியவர்கள் அதே பரவசத்தோடு விழிகள் விரிய பார்ப்பதை காண்கிறேன். அவ்வியக்குனரின் அடுத்தப் படமும் அதே பரவச அலையை முன்பைவிட அதிக காத்திரத்தோடு ஏற்படுத்தியது. முதல் படம் கன்னிராசி. இரண்டாவது படம் ஆண்பாவம். டீனேஜுக்கு வந்த நேரத்தில் நானும் ஒரு படத்தைப் பார்த்து இதே பரவசத்தை அடைந்தேன், வைகாசி பொறந்தாச்சி. இளைஞன் ஆனபிறகு துள்ளுவதோ இளமை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் திரையில் கிடைத்த பரவசம் ‘களவாணி’. புதுமுக தொழில்நுட்பக்குழு, அவ்வளவாக பிரபலமில்லாத நாயகன் என்று, பெரிய பின்புலமோ, பலத்த எதிர்ப்பார்ப்போ இல்லாமல் அமைதியாக வெளிவந்து மனசை அள்ளித் திருடிச் செல்கிறான் இந்த களவாணி.

கதை ரொம்ப சாதாரணமானதுதான். ஒரு பொறுப்பற்ற வெட்டிப்பயல் ஒரு பெண்ணை காதலிக்கிறான். படத்தின் ஸ்பெஷல், தொய்வில்லாமல் பந்துக்கு பந்து ரன் அடித்துக் கொண்டேயிருக்கும் திரைக்கதைதான். கண்ணை உறுத்தாத இயல்பான ஒளிப்பதிவு. இசை மட்டும் மேன்மை நிலையை எட்டவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. கிடைத்த பெனால்டி கார்னரை பயன்படுத்தி, மிகச்சரியாக துல்லியமாக ‘கோல்’ போட்டிருக்கிறது களவாணி படக்குழு.

“என்னடி உன்னோட டிஃபன் பாக்ஸ் இவ்ளோ சின்னதா இருக்கு?” (நிஜமாகவே கொஞ்சம் சின்னதுதான்)

“மாமா! நீ பாட்டுக்கு பாலிடாலை குடிச்சிட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்துக்கிட்டே. அத்தையை வெச்சி நாங்க எவ்ளோ வேலை செஞ்சோம் தெரியுமா?”

சென்சாரின் கண்ணில் மண்ணைத்தூவி வந்திருக்கும் டைரக்ட் மீனிங் வசனங்கள் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட எஃபெக்ட்டை தருகிறது. இளவட்டங்கள் விசிலடித்து விசிலடித்து, வாய் வீங்கிப்போய் கிடக்கிறார்கள்.

ஹீரோ விமலின் இயல்பு. ஹீரோயின் ஓவியாவின் அழகு. மற்ற பாத்திரங்களின் அசலான கிராமத்தனம் என்று இயக்குனருக்கு பலம் சேர்க்க நிறைய ப்ளஸ் பாயிண்டுகள். தஞ்சையை ஒட்டிய பேராவூரணி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய சிறுநகரங்களிலும், ஒட்டியிருக்கும் கிராமங்களிலும் ஏற்பட்டிருக்கும் கலாச்சார அதிர்வுகள் மிக நுணுக்கமாக இயக்குனரால் அவதானிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ரீட்டாவின் திருவிழா டேன்ஸ் காட்சிகள் அட்டகாசம். கிராமப்படமென்றால் மிகைப்படுத்தப்பட்ட கிராமமொழியினை பாத்திரங்கள் பேசுவது தமிழ்ப்படங்களின் சாபக்கேடு. இப்படம் அதற்கு விதிவிலக்கு.

படத்தின் கதையை ஒட்டியே வரும் காமெடி டிராக் விலாநோக சிரிக்க வைக்கிறது. சமீபத்தில் இதுபோல வயிறுகுலுங்க சிரித்து நிரம்ப நாளாகிறது. அபூர்வசகோதரர்கள், ஜனகராஜூக்கு எப்படி ஒரு உயரத்தைக் கொடுத்ததோ, அதைப்போல கஞ்சாகருப்புவுக்கு சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு கிடைத்திருக்கும் இன்னொரு மாஸ்டர்பீஸ் களவாணி.

படைப்பு அடிப்படையில் எல்லாவகையிலும் வென்றிருக்கும் இப்படம், வசூல்ரீதியாகவும் வெல்லுவது இன்றைய தமிழ் சினிமா சூழலுக்கு மிகவும் முக்கியமானது. பட்ஜெட் காரணமாக போதுமான விளம்பரம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் சிறுபடமிது. படம் பார்த்தவர்கள் வாய்மொழியாக பரப்புரை செய்துதான் பரவலாக்க வேண்டும். சினிமா ஆர்வலர்களின் கடமையும் கூட இது.

களவாணி - குமுதத்தனமான குறும்புப் படம்!

29 ஜூன், 2010

மே 18

இருதினங்களுக்கு முன்பு தமிழ்தேசிய நண்பரொருவர் என்னுடைய தமிழுணர்வு குறைபாடு குறித்து தொலைபேசியில் காரசாரமாக நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தார். செம்மொழி மாநாட்டுக்கு நான் சென்றிருந்தது குறித்து அவருக்கு வருத்தம். தொழில்நிமித்தமாக போகவேண்டியிருந்தது என்று நான் சப்பைக்கட்டு கட்டினாலும், புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் ஏசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக, நான் தமிழுணர்வற்றவன் என்று நிரூபிக்க “இந்த மே 18 அன்றைக்கு என்னடா செய்துக் கொண்டிருந்தாய்?” என்று கிடுக்கிப்பிடி கேள்வி ஒன்றினையும் கேட்டார். கடந்த 2009ல் அதே தினத்தில் ஈழத்தில் கொத்து கொத்தாய் மனிதப் படுகொலை நிகழ்ந்ததையும், வெட்டப்பட்ட முகம் ஒன்று பிரபாகரன் என்று காட்டப்பட்டதையும் நினைவுறுத்தி, அந்நாளை நான் நினைவில் கொண்டிருந்தேனா என்று அறிவது அவரது நோக்கம். ”நினைவில்லை, பிறகு சொல்கிறேன்” என்று அப்போதைக்கு சமாளித்துவிட்டு லைனை ‘கட்’ செய்தேன்.

இந்த ஆண்டு மே 18 அன்று நான் என்ன செய்துக் கொண்டிருந்தேன்? யோசித்துப் பார்த்தேன். நினைவில்லை. பின்னர் டயரியைப் புரட்டிப் பார்த்தபோது நிஜமாகவே கொஞ்சம் வெட்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. அன்று வெளியாகியிருந்த புதுப்படமான ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ ஈவ்னிங் ஷோ பார்த்திருக்கிறேன். இரண்டரை மணி நேரம் வயிறுகுலுங்கச் சிரித்திருக்கிறேன். நண்பரின் பார்வையில் நான் தமிழுணர்வற்றவன் என்று பார்க்கப்பட நிஜமாகவே நியாயமான காரணம் இருக்கிறது என்றுதான் உணர்கிறேன்.

இப்போது என்னுடைய முறை. வேறு சில நெருங்கிய நண்பர்களுக்கு போன் போட்டு, “கடந்த மே 18 அன்று என்ன செய்துக் கொண்டிருந்தாய்?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழுணர்வு நிறைந்த தமிழர்கள் குறித்த ஒரு சின்ன கணிப்புக்காக. என்ன கொடுமை? பலரும் அதே நாளில் அதே படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள். இதில் ஓரிரு ஈழத்தமிழர்களும், புலி ஆதரவாளர்களும் கூட அடக்கம். படம் பார்க்காத ஒரு சிலரும் வேறு ஏதோ கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலும் மூழ்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

எனக்கு இது வரை ஒரே ஒரு ‘ஒரிஜினல் உணர்வாளன்’ கூட கிடைக்கவில்லை. எப்படியாவது ஒரு தமிழுணர்வாளராவது மாட்ட மாட்டாரா? அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். ப்ளீஸ் நீங்களாவது கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன். “கடந்த மே 18 அன்று நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்?”

21 ஜூன், 2010

புலிகள் வாழ்த்து - இணையப் புலிகள் நிலை என்ன?

நம் ஐபாடு புகழ் நவீன இணையப் புலிகளின் செம்மொழி மாநாட்டு புறக்கணிப்புக்குப் பின்னான அரசியலை ஏற்கனவே ஒரு பதிவில் சுட்டிக் காட்டியிருந்தோம். இம்மாநாடு கருணாநிதியால் நடத்தப்படுவது மட்டுமே அவர்களுக்குப் பிரச்சினை. ஈழத்தமிழர் துயரமெல்லாம் வெறும் சாக்கு என்பதே அப்பதிவில் நாம் அடிநாதமாக சொல்லியிருந்த விஷயம்.

குறிப்பாக டாக்டர் ராமதாஸ் திமுக பக்கமாக சாயும் நிலை கடந்த மாதம் ஏற்பட்டது. நம் இணையப்புலிகளின் செம்மொழி மாநாட்டு புறக்கணிப்பு ஸ்ருதி அப்போதே கொஞ்சம் குறைந்து காணப்பட்டது என்பதையும் இங்கே கணக்கில் எடுத்துக் கொண்டு இவர்களை இனம் காணவேண்டும்.

அடுத்ததாக மாநாட்டை வரவேற்று எழுதியவர்கள், பேசியவர்கள் அனைவரையும் பீட்ஸா, பர்கர் சாப்பிட்டபடியே ட்விட்டரிலும், பிளாக்கரிலும் தமிழின துரோகிகள் என்றும், பிரியாணி குஞ்சுகள் என்றும் முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள்.

இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தமிழர்களின் அத்தாரிட்டியான புலிகள் அமைப்பே வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கலைஞரும் இந்த அறிக்கையை மகிழ்ச்சியோடு வரவேற்று ‘உண்மை ஒரு நாள் வெளிவரும்’ என்று பஞ்ச் டயலாக் அடித்திருக்கிறார்.

புலிகளின் சம்பந்தப்பட்ட அறிவிக்கை வந்தபிறகு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழுணர்வாளர் ஒருவர், இவ்வமைப்பு கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் புதிய விடுதலைப்புலிகள் அமைப்பாக இருக்கலாம் என்று ஐயம் தெரிவித்தார். மேலும் இது ‘ரா’வின் சதியாகவும் இருக்கக்கூடும் என்று அச்சமும் தெரிவித்தார். எனக்கென்னவோ அவ்வாறு தெரியவில்லை. புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலியான புலிகளின் குரலும், இது புலிகளின் அறிக்கையென்று யூன் 19 செய்திகளில் உறுதி செய்கிறது.

இச்சூழலில் நம் இணையப் புலிகள், விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் தமிழினத் துரோகிகளாக அறிவிப்பார்களா அல்லது செம்மொழி மாநாட்டை வரவேற்பார்களா என்று ஏமாந்த தமிழுணர்வு சோணகிரிகள் சங்கத்தின் சார்பில் கேள்வி எழுப்புகிறோம்.

எனவே இணையப்புலிகளும் லெக்பீஸோடு பிரியாணி சாப்பிட கோவைக்கு வருவார்களா அல்லது வழக்கம்போல இணையத்தில் கண்ணறாவியாக கவிதைகள் எழுதுவார்களா என்று தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறோம்.