3 ஆகஸ்ட், 2010

வாய்தாராணியா நம் தங்கத்தாரகை?

சிங்காரச் சென்னை என்று அறிவிக்கப்பட்டு திராவிடத் திம்மிகளின் கொடுங்கோல் கோர ஆட்சியில் சீரழிக்கப்பட்டு வரும் பாவப்பட்ட சென்னைநகர வாசிகளாக நீங்களிருக்கும் பட்சத்தில் இந்த ஃப்லெக்சு பேனர்களை கண்டிருக்கலாம். “வாய்தாராணி ஜெயலலிதாவை கண்டித்து திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்!”.

உலகமே போற்றும் உத்தம அம்மாவின் பெயரை அமெரிக்காவே தனது வீதிகளுக்கு சூட்டி பெருமைப்பட்டு வருகிறது. ஆனால், கொடநாடு தவிர்த்து வசிக்கும் உள்ளூர் திம்மிகளுக்குதான் அம்மாவின் பெருமையும், அருமையும் தெரியவில்லை. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சும்மாவா சொன்னார்கள்?

முதலில் அம்மா ஏன் வாய்தா வாங்குகிறார் என்று விளக்கிவிடுகிறோம்.

எந்த சட்டத்தையும் (மதமாற்ற தடை சட்டம் உட்பட) ஒழுங்காக நடைமுறைப்படுத்த துப்பில்லா திம்மியின் ஆட்சியில் வழக்காடுமன்றங்களில் நீதி கேலிக்கூத்தாக ஆகிவருகிறது என்பதை அம்மா பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். நமது எம்.ஜி.ஆரில் கட்டுரைகள் தீட்டியிருக்கிறார். ஆர்ப்பாட்டங்களில் மக்களுக்கு விளக்கியிருக்கிறார்.

அப்படிப்பட்ட திம்மியின் ஆட்சியில் அம்மா மீது நடைபெறும் வழக்கு எப்படி நியாயமானதாக இருக்கும். அம்மாவே ஒருவேளை அவருக்கு தெரியாமல் குற்றம் செய்திருந்தாலும் கூட அந்த குற்றத்தை எடுத்துக்காட்டி திறமையாக வழக்காட திம்மியின் வக்கீல்களுக்கு யோக்கியதை இருக்குமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அப்படியேதேனும் குற்றம் நடைபெற்றிருந்தால் அம்மாவின் திறமையான வழக்கறிஞர்கள் திறம்பட வாதாடி அம்மாவுக்கே தண்டனை வாங்கித்தரும் ஆற்றல் பெற்றவர்கள். இதுபோல நியாயமாக, நேர்மையாக வழக்கு நடைபெறுவதுதான் ஜனநாயகத்துக்கும், நீதிபரிபாலனத்துக்கும் அழகு.

அம்மா ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்கள் என்று திம்மி அரசால் போடப்பட்ட கலர் டிவி வழக்கு, சுடுகாட்டு ஊழல் வழக்கு என்று பலவழக்குகளில் திம்மியின் திக்கை வக்கீல்களின் திறமைக் குறைவால் அம்மா கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லோருமே வெளிவந்துவிட்டனர். வெளிவந்தவர்கள் அதற்கு நன்றிக்கடனாக நேராகப் போய் திம்மியின் கட்சியிலேயே சேர்ந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலம் இடிஅமீன் ஆட்சியில் நடந்ததாககூட உகாண்டு நாட்டின் வரலாற்றில் சான்று இல்லை.

இப்போது அம்மாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்துவருகிறது. இந்த வழக்கிலும் திம்மியின் வக்கீல்கள் கோட்டைவிட்டால், அம்மாவே போய் திம்மி கட்சியில் சேர்ந்துவிடவேண்டிய கொடூரச்சூழல் உருவாகிவிடாதா? அவ்வாறு நடந்துவிட்டால் இந்த நானிலம் தாங்குமா? மக்கள் நாண்டுக்கிட்டு மாண்டுவிட மாட்டார்களா? வாய்தாராணி என்று புரட்சித்தாயை, அல்குவைதா ராஜாக்கள் ஏசுவது நியாயம்தானா?

எனவேதான் இந்த திம்மியின் ஆட்சியில் நீதி கேலிக்குரிய பண்டமாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் அம்மா வாய்தாக்களுக்கு மேல் வாய்தாவாக வாங்கிவருகிறார். இவ்வாறு வாய்தா வாங்கி தாமதப்படுத்துவதின் மூலமாக விரைவில் மலர இருக்கும் அம்மா ஆட்சியில் வழக்கினை திறம்பட நடத்தி நீதித்தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் கருப்புத்துணியை அவிழ்க்க அம்மா திட்டமிட்டிருக்கிறார். உலகமே போற்றும் உத்தம அம்மா இப்படியெல்லாம் வாய்தா வாங்கி நீதியைக் காக்கவில்லை என்றால்தான் அது ஆச்சரியம்.

மாறாக அவசரக்கொடுக்குத்தனமாக திம்மியின் இளையமகனான தளபதித்திம்மி ஒரு ஆர்ப்பாட்டத்தை சட்டவிரோதமாக நடத்த முன்வந்திருப்பதாக ப்ளெக்ஸ் பேனர்களை தீயசக்திகள் ஆங்காங்கே மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன பின்னணி என்னவென்று அம்மாவின் விசுவாசியான ஸ்ரீமான் ராமசாமி அய்யங்கார் அவர்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு, எண்பது கோடி ஹிந்து பெருமக்களின் ஒரே புனிதப் பத்திரிகையாம் ஸ்ரீதுக்ளக்கில் விரைவில் கட்டுரை எழுதுவார்.

நாம் சந்தேகப்படும் பின்னணியும் ஒன்று இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக தலைமையே தாங்க துப்பில்லாத ஒருவர் எப்படி தளபதி ஆவார் என்று நம் சமூகநீதி காத்த வீராங்கனை போர்க்குரல் எழுப்பியிருந்தார். ஏனெனில் திம்மி கட்சியின் ஆர்ப்பாட்டமோ, பாராட்டுக் கூட்டமோ எது நடந்தாலும் ‘தலைமை : உதவிப்பேராசிரியர்’ என்று அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. தளபதி என்று அவர்களால் விதந்தோதப்படும் நபரோ டம்மிபீஸாக ஒரு ஓரம் உட்கார்ந்து நகத்தை கடித்துக் கொண்டிருப்பார். இந்த அடிப்படையில்தான் நம் தெய்வத்தாய் அப்படியொரு போர்க்குரலை எழுப்பவேண்டிய அவசியமேற்பட்டது.

தெய்வத்தாயின் போர்க்குரல் கண்டு அஞ்சிய கூட்டம் அவசர அவசரமாக தாங்கள் தளபதி என்று சொல்லக்கூடியவர் தலைமை தாங்கும் ஆற்றல் பெற்றவர் என்று பொய்யான மாயைத் தோற்றத்தை மக்கள் மனதில் கட்டியெழுப்பவே இந்த சட்டவிரோத, மக்கள்விரோத, தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.

மைனாரிட்டி திம்மிகள் அரசு செய்துவரும் இந்த அநியாயங்களை எல்லாம் அடுத்த ஆண்டு வரை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அடுத்த ஆண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளும் பொறுத்துக் கொள்ளவேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்தும் மீண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளும்....

திம்மிகளின் இந்த அராஜகங்களை எல்லாம் எதிர்த்து இணையத்தில் பதிவுபோட்டு பதிவர்களான நாம் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்த வேண்டும். இதற்கு இணைய அம்மா பேரவை தலைவரான கோவி.கண்ணனார் தலைமை தாங்க வேண்டும். இடதுசாரித் தோழர்களும், தமிழ்த்தேசிய சொந்தங்களும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

அண்ணா நாமம் வாழ்க. அம்மா நாமம் வாழ்க. தம்பி நாமம் வாழ்க. தங்கச்சி நாமம் வாழ்க.

2 ஆகஸ்ட், 2010

மொழி!

விமான அறிவியலின் பிரபலமான கோட்பாடு ஒன்று உண்டு. ‘கனமான உடம்பும், மிக லேசான இறக்கைகளும் கொண்ட கருவண்டால் இயந்திரவியல் தர்க்கத்தின்படி பறக்கவே இயலாது’. இந்த கோட்பாடு அறிவியலாளர்களுக்கு தெரியும். ஆனால் கருவண்டுகளுக்கு தெரியாது. எனவே அவை எப்படியோ பறந்துகொண்டுதான் இருக்கிறது.

பாலவித்யாலயா குழந்தைகளும் அப்படித்தான். அறிவியல் கருத்துபடி பிறவியிலேயே செவிக்குறைபாடு கொண்ட குழந்தைகள் வாய்பேச இயலாது. இந்தக் கருத்து அக்குழந்தைகளுக்கு தெரிவதற்கு முன்னரே பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இக்கருத்தை பாடத்தில் பயிலும்போது “நிஜமாவா?” என்ற கேள்வியோடு சிரித்துக்கொண்டே ஆச்சரியப்படுகிறார்கள்.

குழந்தை இயற்கை தரும் வரம். என்ன கோபமோ தெரியவில்லை. சிலருக்கு மட்டும் முழுமையான வரத்தை இயற்கை நமக்கு வழங்கிவிடுவதில்லை. செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது இவ்வகையில்தான். ‘மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்று நாம் வாளாவிருந்துவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் அதோகதிதான்.

’மொழி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கதாநாயகி ஜோதிகா வாய்பேச இயலாதவராக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அக்கதாபாத்திரத்தின்படி பார்த்தோமானால் அவர் வாய்பேச இயலாதவர் அல்ல. பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு கொண்டவர் என்பதால், ‘மொழி’யை பேசிப்பழக வாய்ப்பில்லாமல் ‘சாடை’ மொழி பேசுபவராக மாறிவிடுகிறார். இதுதான் எல்லோருக்குமே நடக்கிறது. வாய்பேச இயலக்கூடிய ஒருவர், செவித்திறன் குறைபாட்டால் வாழ்க்கை முழுக்க பேசாமலேயே வாழ்வது எவ்வளவு பெரிய அவலம்? பேச்சுமொழியற்றவர்கள் கல்வி கற்க இயலாமல் வாழ்வை தொலைப்பது சகிக்க இயலாத துயரம் இல்லையா?

2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி செவித்திறன் குறைபாடுள்ளோர்களில் 68 சதவிகிதம் பேர், மொழித்திறன் இல்லாததால் பள்ளிக்கே சென்றதில்லை. இவர்களில் 19.5 சதவிகிதம் பேர் மட்டுமே ஆரம்பப்பள்ளிக்கு செல்கிறார்கள். 7.6 சதவிகிதம் பேர் மட்டுமே நடுநிலைக்கும், 2.5 சதவிகிதம் பேர் மட்டுமே உயர்நிலைக்கும், 1.1 சதவிகிதம் பேர் மட்டுமே மேல்நிலைக்கும் போகிறார்கள். பட்டம் பெறுபவர்கள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே.

பாலவித்யாலயா இந்த துயரத்தையும், அவலத்தையும் போக்குகிறது. அ, ஆ, இ, ஈ-யும், ஏ, பி, சி, டி-யும் கற்றுத்தரும் வழக்கமான பள்ளியல்ல இது. செவித்திறன் குறைந்த குழந்தைகளுக்கு மொழியை சொல்லித்தரும் பள்ளி. குழந்தை தமிழ் படிக்க வேண்டுமா அல்லது ஆங்கிலம் படிக்க வேண்டுமா என்று பெற்றோர் தேர்வு செய்துக் கொள்ளலாம். செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் ஒரே ஒரு மொழியில் கல்வியை பட்டம் வரை பெறலாம் என்று அரசு சலுகை தந்திருக்கிறது. மொழி மற்றும் பேச்சுத்திறனை கற்றுக்கொண்டால் மற்ற குழந்தைகளைப் போல கல்வியில் இவர்கள் எத்தகைய உயரத்தையும் எட்டலாம்.

பாலவித்யாலயாவின் நாற்பதாண்டு சேவையின் மூலமாக இன்று டாக்டரேட் முடித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள், நிர்வாகத்தில் உயர்கல்வி பெற்றவர்கள், ஆர்க்கிடெக்டுகள் மற்றும் ஏராளமான பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள்.

பிறந்த குழந்தையிலிருந்து, இரண்டரை வயதுக்குள் இருக்கும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் மொழிகற்க பாலவித்யாலயாவில் சேரலாம். பிறந்து 52 நாட்களே ஆன குழந்தை கூட இங்கே சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. இங்கே கற்றுக்கொள்ள வேண்டியது குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும்தான். இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளுக்கு எப்படி பால் கொடுப்பது, அவர்களோடு எவ்வகையில் தகவல்களை பரிமாறிக் கொள்வது போன்ற விஷயங்களை அம்மா, அப்பாவுக்கு ‘கவுன்சிலிங்’ கொடுக்கிறார்கள். அதிகபட்சமாக ஐந்து வயது வரை ஒரு குழந்தை இங்கே மொழியை கற்கும். பின்னர் மற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்து கல்வி கற்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலவித்யாலயாவுக்கு வந்த மூன்று வயது ஹரிணி இப்போது நன்றாக வாயாடுகிறாள். ’ஹாய்’ சொல்கிறாள். காலையில் இரண்டு இட்லி சாப்பிட்டதையும், அம்மா சட்னியில் கொஞ்சம் உப்பு குறைவாக போட்டுவிட்டதையும் பற்றி சளசளவென சலம்புகிறாள். அவளோடு பேசிவிட்டு விட்டு விடைபெறும்போது தெரியாத்தனமாக ‘சாடை’ மொழியில் டாட்டா காட்டுகிறோம். “இங்கிருக்கும் குழந்தைகளோடு தயவுசெய்து சைகை மொழி பேசாதீர்கள். ஹியரிங் எய்டு போன்ற கருவிகளின் துணையோடு இப்போது அவர்களுக்கு ஓரளவு ஒலியை உணர்ந்துக் கொள்ள முடியும். உங்கள் உதட்டசைவை அவதானித்து, லிப் ரீடிங் முறையில் நீங்கள் பேசுவதையும் அவர்கள் புரிந்துக் கொள்வார்கள்” என்கிறார் பள்ளியின் முதல்வர் வள்ளி அண்ணாமலை.

முதலில், இங்கே சேர்க்கப்படும் குழந்தைகளின் செவித்திறன் பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டு, தகுந்த ‘ஹியரிங் எய்ட்’ பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு ஹியரிங் எய்டின் முழுப்பலனையும் குழந்தை பெற வல்லுனர்கள் வழி செய்கிறார்கள்.

பின்னர் முன்பே சொன்ன பெற்றோருக்கான பயிற்சி. குழந்தை பள்ளிப் பருவத்தை முடிக்கும்வரை பெற்றோர்தான் குழந்தைக்கேற்ற உதவிப் பணியாளராக மாறியாக வேண்டும்.

இதற்குப் பின்னரே குழந்தைக்கு கேட்கும் திறன், மொழி, பேச்சு மற்றும் அறிவுத்திறன் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இவற்றை கற்றுத்தேறும் குழந்தைகள் ப்ரீ-கேஜி (பள்ளி முன்பருவக் கல்வி) நிலைக்கு உயர்கிறார்கள். இங்கே மற்ற திறன்களோடு மொழியை படிப்பது, எழுதுவது மற்றும் கணக்கு போடுவது ஆகியவற்றை சொல்லிக் கொடுக்கிறார்கள்.

மொத்தமே அவ்வளவுதான். பாலவித்யாலயாவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், அதிகபட்சம் 5 ஆண்டுகள் பயிற்சி பெறும் குழந்தைகள் நேரடியாக சாதாரணப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்துவிடலாம். மற்ற குழந்தைகளோடு சாதாரணமாகப் பேசவும், பழகவும், விளையாடவும் ஏற்றமுறையில் ஏற்கனவே அவர்கள் தயாராகி விட்டிருப்பார்கள். அவர்களது எதிர்காலத்தைப் பற்றி பெற்றோர் இனி கவலைப்பட வேண்டியதில்லை.

இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் என்பதை சொல்ல மறந்துவிட்டோமே? “முழுக்க இலவசம். ஐந்து பைசா செலவழிக்க வேண்டாம். ஹியரிங் எய்ட் வாங்குவது மற்றும் பராமரிப்பதை மட்டும் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பேச்சுத்திறனையும், மொழித்திறனையும் வளரச்செய்து அவர்களை சாதாரணக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து ஒருங்கிணைய தகுதியுள்ளவர்களாக ஆக்கும் நோக்கத்தில் பாலவித்யாலயா டிரஸ்ட் இப்பள்ளியை நடத்துகிறது” என்கிறார் டாக்டர் மீரா சுரேஷ். இவர் இப்பள்ளியின் கவுரவ துணை முதல்வர்.

இப்போது எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற சிறப்புப் பள்ளிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. ஆயினும் நாற்பதாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்ட பாலவித்யாலயாதான் அனைத்துக்கும் முன்னோடி. அரசு தொடங்கும் பள்ளிகள் சரியான முறையில் இயங்குகின்றனவா என்பதை கண்காணிக்கும் அந்தஸ்தில் பாலவித்யாலயா இருக்கிறது.

சென்னையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் இங்கே தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம். ஆலோசனை பெறலாம். வெளியூரில் இருந்து வந்து சென்னையிலேயே தங்கி, தங்கள் குழந்தைகளுக்கு இங்கே மொழியைக் கற்றுத் தரும் பெற்றோர்களும் உண்டு. அதிகபட்சமாக 200 குழந்தைகள் வரை இங்கே படிக்கலாம். குழந்தைகளை சேர்க்க குறிப்பிட்ட காலமெல்லாம் கிடையாது. வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இத்துறையில் ஆசிரியப் பணியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ஒரு டிப்ளமோ பயிற்சியையும் பாலவித்யாலயா நடத்துகிறது. 12ஆம் வகுப்பு தேறியவர்கள் இந்த டிப்ளமோவை படிக்கலாம். ஒரு வருட படிப்புக்கு தோராயமாக ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆங்காங்கே அரசு ஆதரவோடு இதுபோன்ற பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டிருப்பதால் வேலைவாய்ப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

பாலவித்யாலயா அலுவலகத்தில் பேசிவிட்டு வெளியே வரும்போது சில குழந்தைகள் வாசலில் இருக்கும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வயது ரித்திகா நமது புகைப்பட கலைஞரைப் பார்த்து, “Uncle want me to take photograph?” என்று ஆங்கிலத்தில் கேட்டவாறே அட்டகாசமாக போஸ் கொடுக்கிறாள். ரோஜா என்றால் ரோஜாதான் என்பதைப் போல குழந்தைகள் என்றால் குழந்தைகள்தான்!


தொடர்புக்கு :
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை மவுனச்சிறைகளில் அடைக்காதீர்கள். உங்களுக்கு தெரிந்த குழந்தைகள் யாருக்காவது செவித்திறன் குறைபாடு இருப்பதாக தெரிந்தால் உடனே பாலவித்யாலயாவை தொடர்பு கொள்ளுங்கள்.

பாலவித்யாலயா
18, 1வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20.
தொலைபேசி : 044-24917199 ஃபேக்ஸ் : 044-24982598
மின்னஞ்சல் : hear@balavidyalaschool.org
இணையத்தளம் : www.balavidyalaschool.org

(நன்றி : புதிய தலைமுறை)

30 ஜூலை, 2010

’ஓ’ ஞாநி!

குமுதத்தின் நிறுவனர் அமரர் எஸ்.ஏ.பி.க்கு மிகவும் பிடித்தமான தலைவர் ராஜாஜி. அவர் மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் எஸ்.ஏ.பி.க்கு உண்டு. குமுதம் வளர்ந்து வந்த நேரத்தில் பெரும்பாலான தலையங்கங்கள் தனது சவுக்கடியை தொடர்ச்சியாக முதல்வர் ராஜாஜி மீது வீசி வந்தது.

ஓர் உதவியாசிரியர் எஸ்.ஏ.பி.யிடம் கேட்டாராம். “நீங்கள் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒருவரை, அவரது ஆட்சியை இப்படியெல்லாம் விளாசலாமா?”

எஸ்.ஏ.பி. சொல்லியிருக்கிறார். “பெரிய பத்திரிகையான நாம் யானையிடம்தான் மோதவேண்டும். திமுக போன்ற கொசுக்களிடம் மோதுவதில் நமக்கென்ன பெருமை?”

திமுக பின்னாளில் புலியாக வளர்ந்து பாய்ச்சல் நிகழ்த்தியபோது எஸ்.ஏ.பி. துப்பாக்கி கொண்டு தலையங்கம் தீட்டவேண்டியிருந்ததாம்.

- எஸ்.ஏ.பி. மறைந்தபோது, ஏதோ ஒரு பத்திரிகையில் (ஆ.வி. என்பதாக நினைவு) ரா.கி.ரங்கராஜன் எழுதியது இது. என் நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.

இந்தப் பதிவில் நான் சொல்லவிரும்பியது இதை மட்டும்தான். ஏன் சொல்ல விரும்பினேன் என்பதை இங்கே வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஞாநி மீது பலருக்கும் பல்வேறு குறைபாடுகள் உண்டு. குற்றச்சாட்டுகள் இருக்க வாய்ப்பில்லை. குறைபாடுக்கும், குற்றச்சாட்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர் எழுதுவது எல்லோருக்கும் பிடிக்காது. அதுபோலவே எல்லோருக்கும் பிடிக்கும்படிதான் அவர் எழுதவேண்டும் என்று அவசியமும் கிடையாது.

முப்பதாண்டுகளுக்கு முன்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் பணியாற்றியவர். அந்நிறுவனம் இவரை ஏதோ காரணத்தால் – என்ன காரணமென்று தெரியவில்லை – நீக்கியதால், தொழிலாளர் உரிமை என்ற அடிப்படையில் கோர்ட்டுக்குச் சென்று வழக்கில் வென்றவர். இந்த மனத்திடம் இப்போது பத்திரிகைகளில் பணிபுரிபவர்களில் எத்தனைப் பேருக்கு இருக்கும் என்பது சந்தேகமே. நிச்சயமாக எனக்கு இல்லை.

பிற்பாடு அவர் தமிழ் பத்திரிகைகளுக்கு வந்தபின்னர்தான் ‘டேபிள் ஒர்க்’ என்ற ஒரு பணி, தமிழ்ப் பத்திரிகையுலகில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று சொல்வார்கள். டேபிள் ஒர்க் என்பது இன்றைய பத்திரிகையுலகில் மிகவும் அத்தியாவசியமானப் பணியாக இருக்கிறது. வேறொன்றுமில்லை. பிறர் எழுதும் கட்டுரைகளையும், கதைகளையும் மெருகேற்றி, தேவையான திருத்தங்கள் செய்து அச்சுக்கு அனுப்புவது. மாவட்டங்களில் பல்வேறு நிருபர்கள் தரும் தகவல்களை அலசி, ஆராய்ந்து, தொகுத்து முழுமையான கட்டுரையாக எழுதுதல் போன்றவையே டேபிள் ஒர்க். இதில் வேறு சில பணிகளும் உண்டு. அவை இங்கே அவசியமில்லை.

ஆங்கிலப் பத்திரிகைகளில் இருந்த இந்தமுறையை தமிழ்ப் பத்திரிகையுலகில் பரவலாக்கிய முன்னோடி என்பதாக ஞாநி பத்திரிகை வட்டாரங்களில் அறியப்படுகிறார். அனேகமாக தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் இந்தப் பாணியில் தமிழ்ப் பத்திரிகைகளின் எடிட்டோரியல் இயங்கத் தொடங்கியது. அதற்கு முன்பாக வரும் கட்டுரைகளையோ கவிதைகளையோ கதைகளையோ – கிட்டத்தட்ட அப்படியே – வெறுமனே பிழைத்திருத்தி அனுப்புவதுதான் வழக்கமாம்.

ஆனந்த விகடனில் ஞாநியின் பங்கு இருந்த காலக்கட்டத்தில் அவர் எப்படி எழுதுவார் என்று சுவாரஸ்யமாக சொல்வார்கள். ஒரே ஒரு பிரச்சினையையோ அல்லது சம்பவத்தையோ நான்கைந்து நிருபர்கள் எழுதி அனுப்புவது வழக்கம். நிறைய ஃப்ரீலான்ஸர்கள் அப்போது இருந்தார்கள். எழுத்து மற்றும் பிரச்சினையைப் பார்க்கும் விதத்தில் ஒவ்வொருவரும் வேறுபடுவார்கள். ஒருவர் சார்புநிலையெடுத்து எழுதியிருப்பார். இன்னொருவர் எதிர்ப்புநிலையை கறாராக கைக்கொண்டிருப்பார். இன்னுமொருவர் நடுநிலை என்ற பெயரில் கத்திமீது நடக்க முயன்றிருப்பார்.

எடிட்டோரியலில் இருப்பவர் இந்த நான்கு கட்டுரைகளையும் வாசித்ததும் நிச்சயமாக குழம்பிப் போய்விடுவது என்பது இயல்புதான். ஞாநி நான்கையும் எடுத்து பொறுமையாக வாசிக்க ஆரம்பிப்பாராம். வாசித்து முடித்ததும் மூடிவைத்துவிடுவாராம் (என்னிடம் சொன்னவர் கிழித்து எறிந்துவிடுவார் என்று சொன்னார்). பிறகு வெள்ளைத்தாளை எடுத்து எந்தவித ரெஃபரென்ஸுமின்றி மடமடவென்று நறுக்குத் தெறித்தாற்போல எழுதிமுடிப்பாராம். கட்டுரையை வாசித்தவர்கள் அது நேரடி ரிப்போர்ட்தான் என்று கையில் அடித்து சத்தியம் செய்யக்கூடிய நேர்த்தி அவரது எழுத்தில் இருக்குமாம்.

கடந்த ஐந்தாண்டு தமிழ்ப்பத்திரிகையுலக வரலாற்றில் ஞாநியின் ‘ஓ’ பக்கங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடமுண்டு. பெரும்பாலும் திமுகமீதான – குறிப்பாக கலைஞர் – கொலைவெறி எதிர்ப்புதான். பலநேரங்களில் கலைஞர்மீது இவருக்கு சொந்தப் பகை ஏதோ உண்டோவென்று ஐயம் வரும் வகையில்தான் எழுதியிருக்கிறார் (சாருநிவேதிதா தொடர்ச்சியாக ஜெயமோகனை எழுதிவருவதைப் போல).

ஆனால் இதையும் மீறி, தொடர்ச்சியாக நான் ‘ஓ’ பக்கங்களை வாசித்து வந்தேன். ஒரு பிரச்சினையை ஒரு பத்திரிகையாளன் எத்தனை விதமான கோணங்களில் பார்க்கலாம் என்பதை ‘ஓ’ பக்கங்கள் பாடமாகவே நடத்தி வந்தது.

இனி ‘ஓ’ பக்கங்கள் குமுதத்தில் வராது என்று அறிவித்திருக்கிறார். சமீபக்கால விகடனின் எழுத்துகளை வாசிக்கும்போது, மீண்டும் விகடனில் வர வாய்ப்பிருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் விகடன் டூ குமுதம் டூ விகடன் என்று ஊஞ்சலாட ஞாநி விரும்புவாரா என்று தெரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை குமுதமும், விகடனும்தான் இன்றையத் தேதியில் மிகச்சிறந்த பிளாட்ஃபார்ம்கள். இந்த இரு பத்திரிகைகளைத் தவிர்த்து வேறெதிலாவது எழுதினால் எந்தளவுக்கு மக்களிடம் ‘ரீச்’ ஆகுமென்று கணிக்க முடியவில்லை. அப்படியே ஞாநிக்காக ஒரு சிலர் படித்தாலும், விகடன் – குமுதத்தில் அப்பகுதிக்கு கிடைத்த பாப்புலாரிட்டி புதிய பத்திரிகையில் கிடைக்குமென்பது உறுதியில்லை.

தனிப்பட்ட முறையில் ’ஓ’ பக்கங்கள் இல்லாததால் எனக்கு என்ன இழப்பென்று யோசித்துப் பார்க்கிறேன். கடந்த ஒரு வாரமாக சென்னையை மையம் கொண்டிருக்கும் ‘கள்ளக்காதல்’ புயல் பற்றிய ஒரு திட்டவட்டமான தீர்மானத்துக்கு வர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஞாநி ‘ஓ’ பக்கங்களில் இச்சம்பவங்களை அலசி ஆராய்ந்து, பின்னணியை நோண்டி நொங்கெடுத்து தெளிய வைத்திருப்பார்.

அதே வேளையில் விகடன் மற்றும் குமுதம் இப்பக்கங்களை இழக்க வேண்டிய சூழலையையும் புரிந்துகொள்ள முடிகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்!

29 ஜூலை, 2010

தங்கத் தமிழ்நாடு, இனி பிளாட்டின நாடு!

‘பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காது!’, ‘பொன்னா விளையுற பூமி’, ‘பொற்கால ஆட்சி’ – பொன் எனப்படும் தங்கம் நம் மொழியின் சொலவடைகளில் உயர்ந்த இடத்தை எப்போதுமே பிடித்திருக்கிறது. தங்கத்தைவிட உயர்ந்த விஷயம் ஏதுமுண்டா என்ற கேள்வியை கேட்டுவிட்டு பதிலை நாம் எதிர்ப்பார்ப்பதில்லை. ஏனெனில் இந்தியர்கள் தங்கத்தின் காதலர்கள். தங்கம்தான் நமக்கு எல்லாவற்றிலும் உசத்தி. பெண்கள் அணியும் தாலியில் தொடங்கி, ஆண்கள் அணியும் மோதிரம் வரையிலும் எல்லாமே தங்கமயம்.

தங்கத்தைவிட விலையுயர்ந்த இன்னொரு உலோகம் இருக்கிறது என்று சொன்னால் நம்மால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அது பிளாட்டினம். உலகமே பிளாட்டின நகைகளை அணிய ஆவலோடு அலையும்போது, நாம் மட்டும் இன்னமும் தங்கமே தங்கம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உளவியல்ரீதியாகப் பார்க்கப் போனால் வெள்ளியை ஒத்த நிறம் கொண்ட பிளாட்டினத்தைவிட, செம்மஞ்சளாக ஜொலிஜொலிக்கும் தங்கத்தையே நாம் அதிகம் விரும்புகிறோம். ஆனால் இதற்காக பிளாட்டினத்தின் உயர்தன்மையை மறுத்துவிட முடியாது. ஏனெனில் தங்கத்தைவிட பிளாட்டினம் 30 மடங்கு அரிய உலோகம்.

கனிமவளங்களின் அடிப்படையிலேயே ஒருநாட்டின் மதிப்பு உயரும். எல்லா வளங்களும் பெருமளவு கொண்ட இந்தியாவில் பிளாட்டினம் மிகக்குறைந்த அளவில் – ஒரிஸ்ஸாவில் மட்டும் – இதுவரை கிடைத்துக் கொண்டிருந்தது. நம் பிளாட்டினத் தேவையை பூர்த்திச் செய்ய அயல்நாடுகளில் இருந்து கோடிக்கணக்காக செலவழித்து இறக்குமதி செய்துக் கொண்டிருந்தோம். இப்போது பிளாட்டினம் தமிழகத்திலும் பெருமளவில் கிடைக்கும் என்பதை இந்திய புவியியல் துறை உறுதி செய்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக தங்கம் விளைந்து கொண்டிருந்த கோலார் தங்கவயல் மூடப்பட்ட சோகத்தை இனி நாம் மறந்து கொண்டாடலாம்.

சரி, பிளாட்டினம் என்பது என்ன?

Pt என்ற வேதியியல் குறியீடு கொண்ட ஒரு தனிமம். தங்கத்தைப் போலவே வளையக்கூடிய, நெளியக்கூடிய தன்மை கொண்டது என்பதால், எவ்வடிவத்திலும் வார்க்க முடியும். மின்கருவிகளில் உறுதியான மின்னிணைப்பை தரக்கூடிய மின்முனைகளாகவும் இதை பயன்படுத்தலாம். கார்களின் சைலன்ஸர்களில் இருந்து வெளிவரக்கூடிய கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றின் நச்சுத்தன்மையை குறைக்கவும் பிளாட்டினம் உதவும். வெளிர்சாம்பல் நிறம் கொண்ட பிளாட்டினம் எளிதில் அரிக்கப்படாத ஒரு உலோகம். நகைகள் தவிர்த்து, வெப்பநிலையை அளக்கப் பயன்படும் மின்தடை வெப்பமானிகளில் இதை பயன்படுத்தலாம். சில வேதியியல் ஆராய்ச்சிகளில் வினையூக்கியாக செயல்படுத்தலாம்.

பிளாட்டினத்தின் வரலாறு என்ன?

இரும்பு, தங்கம் போன்று பிளாட்டினத்துக்கு நீண்ட, நெடிய வரலாறு இருப்பதாக தெரியவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு முன்பாகவே அங்கிருந்த பழங்குடியினர் பிளாட்டினத்தைப் பற்றி அறிந்திருப்பதாக தகவல் உண்டு. 1557ல்தான் பிளாட்டினம் என்ற உலோகத்தைப் பற்றி இத்தாலியரான ஜூலியஸ் சீஸர் ஸ்காலிகர் என்பவர் எழுதுகிறார். பனாமா, மெக்ஸிகோ ஆகிய இடங்களில் அப்போது பிளாட்டினம் கிடைத்தது என்பதையும், ஆனால் அதை உருக்கமுடியாத நிலை இருப்பதாகவும் அவர் எழுதியிருந்தார்.

இப்போது உலகளவில் பிளாட்டினத்தின் பெருமளவு தேவையைப் பூர்த்தி செய்யும் நாடாக தென்னாப்பிரிக்கா இருக்கிறது. கனடாவும், ரஷ்யாவும் அடுத்தடுத்த இடத்தைப் பெறுகின்றன.

தமிழகத்தில் எங்கே கிடைக்கிறது?

இந்திய புவியியல் துறை கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் இண்டு இடுக்கு விடாமல் தோண்டி, துருவி பிளாட்டினத்தை தேடிக் கொண்டிருந்தது. நீண்டதேடுதலுக்குப் பின் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி (கருங்கல்பட்டி, செட்டியாம்பாளையம், தாசமபாளையம் பகுதிகள் உட்பட), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (மல்லநாயக்கம்பாளையம், காரப்பாடி, சோலவனூர் பகுதிகள் உட்பட) ஆகிய பகுதிகளில் கணிசமான அளவில் பிளாட்டினம் இருப்பதற்கான அடிப்படை ஆதாரங்களை கண்டறிந்திருக்கிறார்கள்.

சுமார் 30 மீட்டர்கள் ஆழத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் பிளாட்டினம் இருப்பதை உறுதி செய்திருந்தாலும், 200 முதல் 300 மீட்டர் அளவிலான ஆழத்தில் நடத்தப்படும் சோதனைகளில்தான் எந்தளவு தரம் மற்றும் அளவில் இங்கே சுரங்கம் தோண்டி பிளாட்டினம் எடுக்க முடியும் என்பதை துல்லியமாக அறியமுடியும். ஆயினும் இப்போதைய கண்டுபிடிப்பே கூட மிக முக்கியமானதாக இந்திய கனிமவள வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதற்கட்ட சோதனை முடிவுகளின் படி பார்க்கப்போனால் பிளாட்டினம் உற்பத்தியில் மற்ற நாடுகளை இந்தியா ஓரங்கட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று புவியியல் அறிஞர்கள் யூகிக்கிறார்கள்.

இவ்வளவு ஆண்டுகளாக கனிமம் என்றாலே அதிகபட்சமாக கிரானைட்தான் என்றளவில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) விஷயத்தைக் கேள்விப்பட்டு சுறுசுறுப்பு ஆகியிருக்கிறது. “தமிழ்நாட்டுக்கு இது ஒரு வரப்பிரசாதம்” என்று புளகாங்கிதப்படுகிறார் டாமின் தலைவரான மணிவாசன். முதல்வர் முன்னிலையில் டாமின் அதிகாரிகள், இந்திய புவியியல் துறையோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் உடனடியாக கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதுவரை புவியியல் துறை வெளிநாட்டு நிறுவனங்களோடு மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. முதல் தடவையாக ஒரு மாநில அரசின் கனிம நிறுவனத்தோடு ஒப்பந்தமிடுகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய புவியியல் துறை மேற்கொள்ள வேண்டிய மேலதிக ஆய்வுகளுக்கு டாமின் உதவும். பிளாட்டினம் எடுக்கப்படுவதின் மூலமாக கிடைக்கும் வருமானம் மொத்தமும் தமிழ்நாட்டையே சாரும். பாறைகளில் இருந்து பிளாட்டினம் பிரித்தெடுக்கப் படுவதற்கான ஒரு தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்படுகிறது. கனிமவளத் தொழிற்சாலை இரண்டு பகுதிகளுக்கு சேர்த்து ஒன்றாக நடக்குமா அல்லது தனித்தனி தொழிற்சாலைகள் அமைக்கப்படுமா என்பது பற்றியெல்லாம் இன்னமும் திட்டமிடப்படவில்லை.

புதியதாக தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்பதால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு தாராளமாக கிடைக்கும். எடுக்கப்படும் பிளாட்டினம் மற்றும் அதன் குடும்ப தனிமங்களின் வருவாய் ஒட்டுமொத்தமாக மாநில அரசுக்கு கிடைக்குமென்பதால் மாநிலமும் வளம்பெறும். சுரங்கம் தோண்டப்படும் நிலைக்கு முன்பாக இன்னமும் ஏராளமான ஆய்வுகள் பாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

வெட்டியெடுக்கப்படும் பிளாட்டினத்தைக் காண மக்கள் மட்டுமல்ல, மாநிலமே ஆவலாக காத்திருக்கிறது!

(நன்றி : புதிய தலைமுறை)

28 ஜூலை, 2010

ஆட்டோ அனுப்பட்டுமா?


தமிழிணையத்தளங்களை பாவிப்பவர்களாக நீங்கள் இருந்தால் அடிக்கடி இதுபோன்ற வசனங்களை ஆங்காங்கே காணலாம். “இன்னும் ஆட்டோ வரலையா?”, “ஆட்டோ வரப்போவுது ஜாக்கிரதை”. இதுமாதிரி ஏராளமான ‘ஆட்டோ’மேட்டிக் டயலாக்குகளை பயன்படுத்துவதில் தமிழிணைய பங்கேற்பாளர்கள் ஆஸ்கர் விருது வாங்குமளவுக்கு திறமைசாலிகள். குறிப்பாக வலைப்பூக்கள் மற்றும் முகப்புத்தகத்தில் இவ்வீர வசனங்கள் அதிகம்.

ஆட்டோ இதுபோல இழிவுபடுத்தப்பட்டு வருவது ஆட்டோக்காரர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்தால் பிய்ந்துப்போன செருப்பை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மின்னஞ்சலில் அட்டாச்மெண்டாக அனுப்பினாலும் அனுப்புவார்கள். ஏனெனில் இருசக்கரவாகனப் பெருக்கம், கால்டாக்ஸி பரவலாதல் போன்ற தொல்லைகளால் அவர்களே சவாரி கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.

பொதுவாக இவ்வசனங்கள் எங்கே பிரயோகிக்கப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். அந்தவார ஜூனியர் விகடனிலோ, குமுதத்திலோ, நக்கீரனிலோ ஏதோ அரசியல்வாதியைப் பற்றி ‘பரபர பதினாறு’ ஸ்டைலில் கிசுகிசுவாக வந்திருக்கும். அதை வாசித்ததுமே நமது இணைய பங்கேற்பாளர்களுக்கு நாடி நரம்பெல்லாம், இரட்சகன் நாகார்ஜூனா மாதிரி துடித்துவிடும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்குப் போய் வரிசையில் நின்று ஓட்டுபோட வக்கில்லை என்றாலும், “ஒரு பதிவுக்கு ஆச்சு” என்று பொங்கியெழுந்து விடுவார்கள்.

கூகிளில் ஏதோ சில புகைப்படங்களை தேடியெடுத்து, “இப்படியெல்லாம் நடக்குது. நம்ம நாடு நாசமாத்தான் போகப்போவுது” என்று ஒரு மொன்னையான நடையில் ஒரு மொக்கைப் பதிவையெழுதிவிட்டு, “ஆட்டோ பின்னூட்டம் வருமா”வென்று தேமேவென்று காத்திருப்பார்கள். பின்னூட்டம் கூட வராதவர்களுக்கு ஆட்டோ எங்கிருந்து வரப்போகிறது?

இந்த மாதிரி பின்னூட்டங்களை அடிக்கடி வாசித்தபின் எனக்கும் கூட சில நேரங்களில் கருத்து மயக்கம் ஏற்பட்டு விடுவதுண்டு. ஏதாவது ஒரு மொக்கைப் பதிவை வாசித்ததுமே, இந்த பதிவருக்கு ஆட்டோ அனுப்பலாமா என்று யோசிப்பேன். கட்சி கொடுக்கும் அலவன்சு டீக்கும், பொறைக்கும், தம்முக்குமே சரியாகப் போய்விடுகிறது. தியாகராயநகரிலிருந்து சைதாப்பேட்டைக்கு ஆட்டோ அனுப்ப வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் ரூ.75/- செலவழித்தாக வேண்டும். பேசாமல் நடந்தேபோய் அடித்துவிட்டு வந்துவிடலாமாவென்று யோசிப்பேன். ச்சே.. போயும், போயும் ஒரு மொக்கைப் பதிவுக்கு இவ்வளவு பிரயாசை படவேண்டுமாவென்று யோசித்துவிட்டு, ராஜ் தியேட்டரில் ஏதாவது படத்தை பார்த்துவிட்டு மறுநாள் ஒரு விமர்சனப் பதிவு எழுத உட்கார்ந்து விடுகிறேன்.

அய்யா.. இணையத்தில் தண்டமாய் எழுதுவதால் மட்டும் போராளிகளாக மாறிவிட்டவர்களே.. நீங்கள் ஒரு யதார்த்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சுதந்திரம் வாங்கியபின் நம் நாடு எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டி வந்திருக்கிறது. இன்னமும் அரசியல்வாதிகள் ஆட்டோவைதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால், நீங்கள் சுத்தமாக அப்டேட் ஆகவில்லையென்று அர்த்தம். டி.என்.சேஷனுக்கு ஆட்டோ அனுப்பிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது அரசியல்வாதிகள் டாடாசுமோ, குவாலிஸ் என்று முன்னேறி விட்டார்கள். நீங்களெல்லாம் தெலுங்கு டப்பிங் படங்களை பார்ப்பதே இல்லையா?

நம்மூரு கோயிந்தசாமிகள்தான் ‘ஆட்டோ ஃபீவர்’ பிடித்து அலைகிறார்கள் என்றால் ஃபாரின் தமிளர்கள் இன்னும் மோசம். ஆட்டோவுக்கும், ஆசிட்வீச்சுக்கும் பயந்துப்போய் எழுதுவது போலவே எழுதுவார்கள். பொதுவாக இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை அம்சம் இருக்கும். தமிழ்நாட்டில் இருப்பவெனெல்லாம் சுரணை கெட்டவன். இவ்வளவு அநீதி நடக்கிறது. ஒருத்தன்கூட தீக்குளிக்கவில்லையா? போராட்டம் நடத்தவில்லையா? என்று பொங்கியெழுந்து பதிவு போட்டுவிட்டு பீட்ஸாவும், பர்கரும் தின்றுவிட்டு வீக்கெண்டில் தமிழ் சினிமா பார்க்கப் போய்விடுவார்கள்.

ஏனய்யா. ஒரு ஆட்டோவை விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கும், துபாய்க்கும், சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் வந்து உங்களை அடிக்க ஆகும் செலவு என்ன? அதற்குப் பதிலாக இங்கே ஆளுக்கு ஐநூறு கொடுத்தாலே போதுமே? நீங்கள் எதை எழுதினாலும், தேர்தலில் நாங்கள் ஜெகஜோதியா கும்முகும்முவென்று திருமங்கல கும்மினை கும்மிவிடலாமே?

எந்த இணையப் பதிவாளரிடமாவது பத்திரிகைகளுக்கான எக்ஸ்க்ளூசிவ் தன்மை இருக்கிறதா? தோழர் சவுக்கு மற்றும் வினவு போன்ற சிலருக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு கொடுக்கலாம். களத்திலும் செயல்படும் அவர்களை இணையப் போராளிகள் பட்டியலில் சேர்ப்பது நியாயமில்லை. அவர்களுக்கெல்லாம் ஆட்டோவென்ன, விமானத்தையே கூட அனுப்பலாம். மீதியிருக்கும் ஐநூத்தி சொச்சம் இணையத் தயிர்வடைகளுக்கு எல்லாம் ஆட்டோ ஒன்றுதான் கேடு. நம்ம காப்பி & பேஸ்ட் புலிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளை கூட எந்த அரசியல்வாதியும் அனுப்பி வைக்குமளவுக்கு யோக்கியதை இல்லை என்பதுதான் இப்பதிவின் அடிநாதம்.

இறுதியாகவும், உறுதியாகவும் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லிக் கொள்கிறேன் தோழர்களே. தமிழகத் தமிழர்கள் கிட்டத்தட்ட ஏழு கோடி. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கிட்டத்தட்ட ஐந்து கோடி. இவர்களில் பத்திரிகைகளை வாசிப்பவர்கள் தோராயமாக இரண்டு கோடி. இணைய அறிமுகம் பத்து லட்சம் பேருக்கு இருக்கலாம். இவர்களிலும் தமிழிணைய பாவிப்பாளர்கள் ஒரு லட்சம் பேர் இருந்தாலே அதிகம். அதிலும் வலைப்பூக்கள், ஃபேஸ்புக் மாதிரி கச்சடாக்களில் ஈடுபடுபவர்கள் பத்தாயிரம் பேர் வரைதான் இருப்பார்கள். இவர்களில் ஆறாயிரம் பேராவது அயல்நாடுகளில் வசிப்பவர்கள். எஞ்சியிருப்பவர்களில் ஆயிரம் பேர் தேர்தல்களில் ஓட்டுபோட்டாலே அதிகம். இப்படிப்பட்ட மொக்கையான ஒரு சமூகம் தினம் ஒரு புரட்சியென்ற பேரில், தினம் ஒரு பதிவு போட்டு, அதற்கு ஆட்டோவையும் எதிர்ப்பார்ப்பது என்பது கொஞ்சமல்ல, நிறையவே ஓவர் இல்லையா?

இனிமேல் எங்காவது ஆட்டோ, கீட்டோவென்று யாராவது பேசட்டுமே? கீசிடுவேன் கீசி...