31 ஆகஸ்ட், 2010

தூக்குத்தண்டனை - எதிர்வினைகள்!

கடந்த பதிவான ’தூக்குத்தண்டனை’ எக்கச்சக்கமாக கண்டனங்களையும், குறைந்தளவிலான பாராட்டுகளையும், எகனை மொகனையான எதிர்வினைகளையும் பெற்றிருக்கிறது. ஃபேஸ்புக்கிலும், வலைப்பூவிலும் பெற்ற எதிர்வினைகளையும் விட மின்னஞ்சல்களில் பெற்றிருக்கும் எதிர்வினைகள் மிக அதிகம். இது ஒரு உலகளாவியப் பிரச்சினை என்பதால் தனிநபர் தொடர்பான, அவரவர் சார்பு அரசியல் தொடர்பான எதிர்வினைகளை விடுத்துவிட்டு, தனிப்பட்ட என் தேர்வில் நியாயமாக தெரியும் சில எதிர்வினைகளை முன்வைத்து மேற்கொண்டு உரையாடலாம் என திட்டமிட்டிருக்கிறேன்.

1. மூன்று மாணவிகளின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? அவர்கள் கொல்லப்பட்டதை ஆதரிக்கிறீர்களா? உன் தங்கையையோ, அக்காவையோ உயிரோடு கொளுத்தியிருந்தால் இப்படிதான் எழுதியிருப்பாயா?

2. கொலைகாரர்களுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குதான் சரி. இல்லையேல் மீண்டும் மீண்டும் கொலைகள் தொடரும்.

3. தூக்குத்தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு சிறையில் வைத்து லெக்பீஸோடு பிரியாணி போடச் சொல்லுகிறீர்களா? அரசுக்கும் இவர்களால் வெட்டிச்செலவு.

4. மரணதண்டனை வேண்டாம் சரி. வேறு என்னமாதிரியான தண்டனையை பரிந்துரைக்கிறீர்கள்.

5. பஸ் எரிப்பு கொடூரத்தை நேரில் கண்ட தோழர் சஞ்சய்காந்தியின் வாக்குமூலம் : http://www.blog.sanjaigandhi.com/2010/08/blog-post_30.html

இன்னும் ஏராளமான எதிர்வினைகள் வந்திருந்தாலும், மிக முக்கியமான விவாதத்துக்கான அடிப்படைக் கூறுகளை இவை கொண்டிருப்பதாக கருதுவதால், இவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து விவாதிக்கலாம் என்றிருக்கிறேன். என்னுடைய அரசியல் சார்பினை சுட்டிக்காட்டி ஆதரவாகவோ, எதிராகவோ வந்த எதிர்வினைகளை கைவிடுகிறேன். அதுபோலவே நான் பணிபுரியும் ஊடகத்தினை தொடர்புபடுத்தி எழுப்பப்பட்ட வினாக்களை வருத்தத்தோடு புறந்தள்ளுகிறேன்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாலேயே சொந்தக்கருத்து எதுவும் அந்நிறுவனத்தின் ஊழியனுக்கு இருந்துவிடக்கூடாது என்று பலபேர் அக்கறையோடு கச்சைக்கட்டி அலைவதை காண வேடிக்கையாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட கருத்துகளைதான் நான் முன்வைக்கிறேன். இதற்கும், என்னுடைய தொழிலுக்கும் முடிச்சுப் போட்டு பேசுவது அயோக்கியத்தனம். அதுமாதிரி பேசும் நபர்களை தயவுதாட்சணியமின்றி ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வலைத்தளங்களில் புறக்கணித்தும் வருகிறேன்.

மரணதண்டனைக்கு எதிரான மனநிலையை ஒரு கொள்கையாகவே கொண்டவன் என்றமுறையில் மட்டுமே என்னுடைய கருத்துகளை தோழர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன். மரணதண்டனை தீர்ப்பு எழுதும் நீதிபதிகளோ, வாதாடிய வழக்கறிஞர்களோ தண்டனை குறித்து மகிழ்வு அடைந்து விடுவதில்லை. இறுகிய முகத்தோடுதான் பலரும் இதுபோன்ற தீர்ப்பினை வரவேற்கிறார்கள்.

ஓக்கே, லெட் அஸ் மூவ் டூ தி பாயிண்ட்ஸ்...

1. மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம் மிக மிக மோசமானது. திரும்பவும் அப்படியொரு நிகழ்வு ஏற்பட்டுவிடவே கூடாது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை மனநிதானத்தோடு இருப்பவர்கள் யாரும் ஆதரித்து விடமுடியாது. என்னுடைய சிறுவயதில் ராஜீவ் கொல்லப்பட்டபோது அதை மகிழ்ச்சியோடு வரவேற்ற நிமிடங்கள் எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை பிற்பாடுதான் உணர்ந்தேன். உயிரிழப்பு என்பது மோசமானது, அது யாருடைய உயிராக இருந்தாலும். கொலை செய்தவர்களையே பதிலுக்கு கொலை செய்யக்கூடாது என்று சொல்லுபவன், எப்படி மூன்று உயிர்கள் கொல்லப்பட்டதை வரவேற்பான் என்று லாஜிக்காக பின்னூட்டம் இடுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதே கருத்தை மதுரை தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் பொறுத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

2. மரணம் என்பது தண்டனையல்ல என்பதுதான் நமது வாதமே. உலகம் என்பதே ஒரு சிறைக்கூடம் என்பது தத்துவவாதிகளின் சிந்தனைகளில் உதிக்கும் கருத்து. இந்த சிறைக்கூடத்திலிருந்து ஒருவருக்கு விடுதலை அளிப்பது எப்படி தண்டனையாக இருக்கக்கூடும்? கொலை செய்தவர்களை பதிலுக்கு கொலை செய்துவிட்டால், இனி கொலைகள் தொடராது என்பது மிக மிக அபத்தமான வாதம். நாகரிகம் தொடங்கிய 3000 ஆண்டுகளாக உலகில் இருக்கும் நடைமுறை மரணதண்டனை. கொலைகள் நின்றுவிட்டதா என்ன?

3. குற்றவாளிகளை சிறையில் அடைத்து, வேறு குற்றங்கள் செய்யாமல் தடுப்பதைவிட அரசுக்கு வேறென்ன பெரிய வேலை இருந்துவிடப் போகிறது? குற்றவாளிகளும் மனிதர்கள்தானே? அவர்களுக்கு வயிறு இல்லையா? பசி இல்லையா? சக மனிதர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை லெக் பீஸ் பிரியாணி போடுவதைகூட ஆட்சேபிக்கும் அளவுக்கு நம் சமூகத்தின் மனப்பான்மை குறுகிவிட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. அதிலும் விருந்தோம்பலுக்கு பெயர்போன தமிழர்கள் இவ்வாறெல்லாம் கருத்து கொண்டிருப்பது அதிர்ச்சிகரமானது.

4. மரணம் என்பது தண்டனையல்ல, விடுதலை என்று தத்துவார்த்தமாக 2வது பாயிண்டில் விவாதித்து விட்டதால், நடைமுறையிலிருக்கும் ஆயுள் தண்டனைகளை அதிகபட்சத் தண்டனைகளாக பரிந்துரைக்கிறேன். இரட்டை ஆயுள் தண்டனை போல சாகும் வரை ஆயுள் தண்டனை கூட கொடுக்கலாம். நம்முடைய சட்டத்தில் ஏற்கனவே இதற்கு இடமுண்டு. தர்மபுரி கொலை சம்பவ குற்றவாளிகளைப் போன்ற கொடூரமான குற்றவாளிகளுக்கு நன்னடத்தை அடிப்படையிலோ அல்லது அரசுகளின் மன்னிப்பு அடிப்படையிலோ சாகும்வரை விடுதலையே கிடையாது என்று சட்டத்திருத்தமும் கொண்டு வரலாம். வாழ்வு முழுக்க நான்கு சுவர்கள்தான் உலகம் என்பதை விட கொடுமையான தண்டனை வேறென்ன இருந்துவிட முடியும்? - சிறைவாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதை உணர ஹென்றி ஷாரியரின் பாப்பிலோன் (தமிழில் ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி) நூலை பரிந்துரைக்கிறேன்.

5. தோழர் சஞ்சய்காந்தி நேரில் கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில் அவரது உணர்வுகளை சில தகவல் பிழைகளோடு கொட்டியிருக்கிறார். அன்று அவர் கேட்ட மரண ஓலம் அவரது வாழ்வின் எல்லா நாட்களையும் தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கும் என்பதை உணரமுடிகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அவசியம் நிறைவேற்றியாக வேண்டும் என்று கட்டளையிடுகிறார். ஒருவேளை இம்மூவரும் தூக்கில் இடப்பட்டால் - அதன் விளைவாக சிறைவாசலில் இறந்தவர்களின் உற்றாரும், உறவினரும் எழுப்பிடப்போகும் மரண ஓலத்தையும் தோழர் நேரில் கேட்பாரேயானால் - மரணதண்டனை குறித்த தனது மனப்பான்மையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.

30 ஆகஸ்ட், 2010

தூக்குத்தண்டனை!

தர்மபுரி பஸ் எரிப்பும், அதைத் தொடர்ந்து மாணவிகள் உயிரிழப்பும் நிச்சயமாக மன்னிக்க முடியாத குற்றமே. சேலம் நீதிமன்றம் அவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் மூவருக்கு தூக்குத் தண்டனையை தீர்ப்பாக விதித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் இவர்களது மரணதண்டனையை உறுதி செய்துவிட்ட நிலையில் உச்சநீதிமன்றமும் இப்போது கைவிரித்து விட்டதாக தெரிகிறது.

மரணதண்டனைக்கு எதிரான மனநிலை கொண்டவன் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எனக்கு கடுமையான மன உளைச்சலைத் தருகிறது. கொலை செய்வது என்பதை எப்படி காட்டுமிராண்டித் தனமாக நினைக்கிறோமோ, அதுபோலவே கொலை செய்தவனை சட்டப்படி அரசு பதிலுக்கு கொலை செய்வதையும் காட்டுமிராண்டித்தனமாகவே நினைத்தாக வேண்டும். பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்று தண்டனை விதிக்கக்கூடிய அளவில்தான் இன்னமும் நம் சட்டம் பணியாற்றுகிறதா என்பதை சட்டத்தை உருவாக்குகிறவர்களும், பயன்படுத்துபவர்களும் பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

"நீதிமன்றம் விதிக்கிற தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது" என்று நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒரு தீர்ப்பில் கூறியிருப்பதை இங்கே நினைவுகூர வேண்டும். "கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்பது இந்தியா தனது தேசப்பிதாவாக கொண்டாடும் உத்தமர் காந்தியின் வாக்கு.

பணத்தின் மீது காந்திப் படத்தை அச்சடிக்கும் இந்தியா, காந்தியின் சிந்தனைகளுக்கு ஓரளவுக்காவது மதிப்பு கொடுக்குமாயின், மரணதண்டனை என்ற காட்டுமிராண்டித்தனத்தினை சட்டத்திருத்தம் மூலமாக ஒழித்திட முன்வந்திட வேண்டும். மூன்றாம் உலக நாடுகள் பலவும் தங்களது நாடுகளில் இந்த காட்டுமிராண்டித்தனத்தினை ஏற்கனவே ஒழித்துவிட்டன. காந்தியால் சுதந்திரம் பெற்ற அகிம்சை நாடு, புத்தன் பிறந்த மண் என்றெல்லாம் உலகில் அறியப்படும் இந்தியா இன்னமும் இதை ஒழிக்காதது வெட்கக்கேடு. மவுண்ட் பேட்டனை கொடூரமாக கொன்ற கொலைகாரனுக்கு கூட பிரிட்டிஷ் அரசாங்கம் மரணத்தண்டனை விதிக்கவில்லை.

ஒரு மனிதனுக்கு மரணம் என்பதுதான் இறுதிநாள். லாஜிக்கலாக யோசித்துப் பார்த்தால் நீதிமன்ற ஆணையின் பேரில் தூக்குத்தண்டனை ஒருவனுக்கு இறுதிநாளாக அமைந்துவிட்டால் அது எப்படி தண்டனை ஆகுமென்று தெரியவில்லை. மரணத்தண்டனை விதிக்கப்பட்டு மரணமடையும் ஒருவனின் குடும்பம்தான் தண்டனையை அனுபவிக்கிறதே தவிர, உலகை விட்டு விடைபெற்றுவிடும் குற்றவாளி அல்ல.

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்ற பேரறிவாளன் - சாந்தன் - முருகன், அப்சல் குரு, இப்போது தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவ குற்றவாளிகள் நெடுஞ்செழியன் - ரவீந்திரன் - முனியப்பன் உள்ளிட்டோரில் யார் ஒருவர் தூக்கில் போடப்பட்டாலும், இந்தியாவின் அகிம்சை முகமூடி உலகநாடுகள் மத்தியில் சந்திசிரிக்கும் என்பது உறுதி.

சர்வதேச நாடுகள் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. பல்லாண்டுகளாக கரடியாக கத்தி வருகிறது. உலகில் கிட்டத்தட்ட 135 நாடுகள் ஒட்டுமொத்தமாக இந்த காட்டுமிராண்டித் தண்டனையை ஒழித்துவிட்டன. சுமார் 30 நாடுகளில் மரணதண்டனை வழக்கத்தில் இருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாக யாருக்கும் இத்தண்டனையை விதிக்கவில்லை. சுமார் 60 நாடுகளில் தான் இக்கொடுமை வழக்கத்தில் இருக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று.

நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிற்பாடு கருணையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதெல்லாம் ஏற்கனவே நடந்திருக்கும் முன்னுதாரணங்கள்தான். தமிழக அளவில் ஏற்கனவே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததில் முதல்வர் கலைஞருக்கு முக்கியப் பங்குண்டு. மனிதநேய அடிப்படையில் முதல்வர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கு மற்றும் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிட ஆவன செய்திட வேண்டும். கொள்கையளவில் மரணத்தண்டனையை எதிர்ப்பது என்பது பகுத்தறிவாளர்களின் கடமையும் கூட என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும். இந்திய அளவில் முடியாவிட்டாலும் தமிழக அளவிலாவது மரணத்தண்டனை என்ற அரச பயங்கரவாதம் முற்றிலும் கலைஞரால் ஒழிக்கப்படுமேயானால் மனிதம் இருக்கும் வரை அவரது பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

28 ஆகஸ்ட், 2010

ஏ.டி.எம். ஏக்கம்!

ச்சே.. நம்மூரிலும்தான் ஏ.டி.எம். இருக்கிறது..

நம்மிடமும்தான் கார்டு இருக்கிறது..

நாமும்தான் அவ்வப்போது நூறோ, இருநூறோ எடுக்கிறோம்..

நம்பள்க்கி எல்லாம் ஏன் இதுமாதிரி நடக்கமாட்டேங்குது? :-(

தமிழக இளைஞர்களை ஏக்கம் கொள்ளவைக்கும் இனிய செய்தி தினமலரில் வந்திருக்கிறது : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=63041

அழகிகளிடம் ஏமாந்த சோணகிரி ஒரு தமிழராம்.

ம்.. பிரான்சுக்கு போனாலும் தமிழன் சிங்கத்தமிழன்தான்!

25 ஆகஸ்ட், 2010

ப்ளூகாலர் வேலைகளுக்கு பலத்த மவுசு!

விருந்தினர் பக்கம் : வழங்குபவர் கார்க்கி iamkarki@gmail.com

அடுத்த 10 வருடங்களில் இந்தியாவில் அபார வளர்ச்சி காணப்போகும் துறைகளில் ஆட்டோமொபைல் முக்கியமானது. கடந்த 2 வருடங்களாகவே இத்துறையில் வேலைவாய்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இது இன்னும் பன்மடங்காகும். Robert Bosch என்ற ஒரு நிறுவனம் மட்டும் இந்த ஆண்டு 5000 பேரை வேலைக்கு எடுக்கவிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் மனிதவளமும் நிறையவே இருக்கிறது. ஆனால் நிறுவனங்களுக்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.

இந்தியாவில் தற்போது ப்ளூ காலர் என்றழைக்கப்படும் semi-skilled ஆட்களுக்குத்தான் அதிக பற்றாக்குறை. உண்மையை சொல்லப்போனால் பற்றாக்குறை கூட அல்ல. ஆட்கள் தேவைப்படுவோருக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. வேலைத் தேடுவோருக்கு எங்கே வேலை இருக்கிறதென தெரியவில்லை. இவர்களுக்கு இன்னமும் இணையம் அவ்வளவாக பரிச்சயமாகவில்லை என்பதும் ஒரு காரணம்.

அது தவிர இந்த வேலைகள் எல்லாம் சென்னை போன்ற ஓரு சில தொழிற்துறை நகரங்களிலே இருப்பதால் மற்ற சிறுநகரத்துவாசிகளுக்கு தெரிவதில்லை. நோக்கியா போன்ற பெரிய நிறுவனங்கள் இம்மாதிரி கிராமத்து ஆட்களை வேலைக்கு வரவழைக்க நல்லதொரு திட்டம் வைத்திருக்கிறார்கள் சுற்றியுள்ள கிராமங்களுக்கே சென்று அங்கேயே நேர்முகத்தேர்வு வைத்து (கேம்பஸ் இண்டர்வ்யூ மாதிரி) அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரையும் கையோடு தந்துவிட்டு வருகிறார்கள். மறுநாள் அவர்களை அழைத்து செல்ல நோக்கியாவின் பேருந்து வந்துவிடும். ஒரு சில கிராமங்களுக்கு அரசுப்பேருந்து கூட செல்வதில்லை. ஆனால் நோக்கியா போன்ற பெருநிறுவனப் பேருந்துகள் தவறாமல் செல்கின்றன.

எல்லா நிறுவனங்களும் இந்த முறையை செயல்படுத்தவதில்லை. அவர்கள் மனிதவள மேலாண் நிறுவன்ங்களின் உதவியை நாடுகின்றனர். இன்னமும் பல நகரங்களை சேர்ந்த மாணவர்கள் சரியான வேலை கிடைக்காமல் இருப்பதை பார்க்கலாம். ஆனால் அவர்கள் விரும்பும் துறையிலே வேலைகள் தயாராக இருக்கின்றன. இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது போன்ற நிறுவனங்களை தொடர்பு கோண்டு தங்களது பயோடேட்டாவை கொடுப்பது மட்டுமே.

“மனிதவள மேலாண் நிறுவனங்களுக்கு இருக்கும் மவுசை நன்றாக உணர்ந்ததால்தான், எட்டு வருடங்களாக உற்பத்தித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறேன்” என்கிறார் இளைஞரான கார்க்கி. வெர்ட் எக்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் இவர் தொடங்கியிருக்கும் மனிதவள மேலாண்நிறுவனம் ப்ளூகாலர் பணிகளில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

“5000 – 8000 முதல் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைக்கு ஆட்களின் தேவை எப்போதும் இருந்துக் கொண்டேயிருக்கிறது. +2, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் எல்லோருமே தேவை. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங், தொழில்நுட்ப வேலைகள் என எல்லாப் பிரிவிலும் ஆட்கள் தேவை. எங்களைப் போன்ற நிறுவனங்கள் எங்கெங்கே எவ்வளவு வேலை இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அந்த வேலைகளை பூர்த்தி செய்ய ஆட்கள் கிடைக்காமல்தான் திண்டாடி வருகிறோம்” என்று மேலும் சொல்கிறார் கார்க்கி.


வெர்ட் எக்ஸ் சொல்யூஷன்ஸ் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற இருவரின் வெற்றிக் கதைகள் :

ஒன்று :

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சாமிநாதன். அஞ்சல்வழியில் பி.பி.ஏ படித்தவர். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும்வரை காத்திருக்கவில்லை. கிடைத்த வேலைகளை ஊரிலேயே செய்யத் தொடங்கினார். ஒரு பெயிண்டராக வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

சென்னையில் ஒரு மனிதவள மேலாண்மை நிறுவனம் மூலமாக ஒரு நிதித்துறை நிறுவனத்தில் Backend office எனப்படும் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். கிடைத்த வேலையை திருப்தியாக செய்ததற்கு பரிசாக, இப்போது 10 பேர் கொண்ட குழுவை வழிநடத்தும் டீம் லீடராக இருக்கிறார்.

“வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை எந்த வேலை கிடைக்கிறதோ, அந்த வேலையை திருப்தியாக செய்யும் மனநிலைக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். செய்யும் வேலையிலிருந்தே, அதைவிட சிறப்பான வேலை கிடைக்குமா என்று வாய்ப்புகளை கண்கொத்திப் பாம்பாக பார்த்துவரவேண்டும். வாய்ப்புகள்தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும்” என்று தத்துவமாக கொட்டுகிறார் சாமிநாதன்.


இரண்டு :

திண்டிவனம் ரமேஷின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிகிறார். பொதுவாக இந்தப் பதவிக்கு வருபவர்கள் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும். ஆனால் ரமேஷோ +2தான் முடித்திருக்கிறார். இப்போது அஞ்சல் வழியில் எம்.பி.ஏ. படித்திருக்கிறார்.

சென்னைக்கு வந்து கிடைத்த வேலைகளை செய்துக் கொண்டிருந்தவருக்கு ஏதோ ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பிரிவில் வேலை கிடைத்தது.

“எல்லோரும் நினைப்பது மாதிரி படிப்பு எல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் பெரிய விஷயமேயில்லை. விற்பனைப் பிரிவில் பணியாற்ற சரளமான ஆங்கிலமும், துடிப்பான பேச்சும், நிறைய உழைப்பும் இருந்தால் போதும். வெகுவிரைவில் வெற்றிப்படிக்கட்டுகளை ஏறி விடலாம்” என்பது ரமேஷின் அனுபவம்.

நினைத்தாலே நடக்கும்!

நீண்டதூரப் பயணம். செமையான வேலை. பிளாட் கதவைத் திறந்துவிட்டு ‘அப்பாடா’வென்று சோபாவில் விழுகிறீர்கள். எழுந்துச் சென்று ட்யூப்லைட்டையோ, ஃபேனையோ ‘சுவிட்ச் ஆன்’ செய்யக்கூட முடியாத அலுப்பு.

இதுமாதிரி நேரங்களில் நீங்கள் நினைத்தவுடனே விளக்கு எரிந்தால், ஃபேனோ, ஏசியோ அதுவாகவே ‘ஆன்’ ஆனால், ரிமோட் கண்ட்ரோல் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே மனதில் விரும்பும் சேனல் டிவியில் தோன்றினால் எப்படியிருக்கும்? எதற்குமே நீங்கள் அசையக்கூட வேண்டாம். நினைப்பு மட்டுமே போதும்.

ம்.. ‘நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும்’ என்கிறீர்களா? பழமொழியெல்லாம் பழங்கதை சார். நீங்கள் நினைத்ததை முடிப்பதுதான் அறிவியலின் வேலை.

சமீபத்தில் கனடாவின் டொரண்டோ நகரில் ஒரு அலுவலகத்துக்கு பத்திரிகையாளர் ஒருவர் சென்றார். வாசலில் ‘ஹெட்ஃபோன்’ ஒன்றை செக்யூரிட்டி மாட்டி அனுப்பினார். கதவைத் திறக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே சென்றவருக்கு, கதவு அதுவாகவே திறந்து வழிவிட்டது. அட...

கொஞ்சம் அச்சத்தோடு உள்ளே சென்றவருக்கு லேசாக வியர்த்துக் கொட்ட, ஃபேன் சுவிட்ச் எங்கேவென்று தேடத்தொடங்கினார். அவர் நினைத்த மாத்திரத்தில் ஃபேன் ஓட.. விட்டலாச்சார்யா பட அனுபவம்தான் போங்கள்.

திகிலடித்துப் போயிருந்த பத்திரிகையாளருக்கு மேலும் ‘சோதனை’ தர விரும்பாமல் ‘இண்டரெக்ஸான்’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்நிறுவனத்தைச் சார்ந்த ஏரியல் கார்ட்டன் என்கிற உளவியல் நிபுணரான பெண்மணி, ‘டெக்னாலஜியை’ விளக்கத் தொடங்கினார்.

“எதையாவது செய்யும் முனைப்போடு நீங்கள் சிந்திக்கும்போது பீட்டா அலைகளை உங்கள் நினைவகம் உருவாக்குகிறது. ஓய்வு மூடுக்கு வரும்போது ஆல்பா அலைகளை உருவாக்குகிறது. இந்த அலைகளை கட்டுப்படுத்துவதின் மூலமாக ‘ஸ்விட்ச்’ இல்லாமலேயே லைட் போடலாம், ஃபேனை ஓடவைக்கலாம். இசை கேட்கலாம். ஏன் காலில் ‘கீர்’ போடாமலேயே, ஆக்ஸிலேட்டரை முறுக்காமலேயே வண்டி கூட ஓட்டலாம்”

செய்தியை கேட்டதுமே “நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்” என்று பாட்டு பாடலாம் போல தோன்றுகிறதுதானே? – இந்த ஆல்ஃபா, பீட்டா அலைகளை குறித்த ஆராய்ச்சியின் தொடக்கம்தான் இது. நினைவலைகளை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்ற சாத்தியத்தை கண்டறிந்திருக்கிறார்கள். இப்போதைக்கு ட்யூப் லைட் போடுவது, டயல் செய்யாமலேயே ஆபிஸுக்கு போன் செய்து, பொய்பேசி லீவு வாங்குவது என்ற லெவலுக்குதான் இந்த ஆராய்ச்சி முன்னேறியிருக்கிறது. இன்னும் நிறைய ஆராய்ந்து நிறைய விஷயங்களை நினைப்பின் மூலமாகவே சாத்தியப்படுத்தும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இப்போதைக்கு எப்படி இயங்குகிறது என்றால் நம் காதில் பொருத்தப்படும் ஹெட்செட்டில் இருக்கும் சில எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் மூலமாக நம் மூளையின் செயல்பாடுகள் வாசிக்கப்படுகிறது. இது ஒரு கணினிக்கு கொண்டு செல்லப்பட்டு கணினியின் மூலமாக நம் நினைவுகள் செயலாற்றப்படுகிறது.

மனித மூளையை ஒரு கணினியால் படிக்க முடியும் என்பதே மிகப்பெரிய விஷயம். இதனால் நினைத்தமாத்திரத்தில் எவ்வளவோ விஷயங்களை சாத்தியப்படுத்த முடியும் என்பது சாதகமான அம்சம். பாதகமான அம்சங்களும் நிச்சயமாக நிறைய உண்டு. எவையெல்லாம் என்று சொல்லவே தேவையில்லை. உங்களுக்கே தெரியும்தானே?

(நன்றி : புதிய தலைமுறை)