25 ஆகஸ்ட், 2010

நினைத்தாலே நடக்கும்!

நீண்டதூரப் பயணம். செமையான வேலை. பிளாட் கதவைத் திறந்துவிட்டு ‘அப்பாடா’வென்று சோபாவில் விழுகிறீர்கள். எழுந்துச் சென்று ட்யூப்லைட்டையோ, ஃபேனையோ ‘சுவிட்ச் ஆன்’ செய்யக்கூட முடியாத அலுப்பு.

இதுமாதிரி நேரங்களில் நீங்கள் நினைத்தவுடனே விளக்கு எரிந்தால், ஃபேனோ, ஏசியோ அதுவாகவே ‘ஆன்’ ஆனால், ரிமோட் கண்ட்ரோல் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே மனதில் விரும்பும் சேனல் டிவியில் தோன்றினால் எப்படியிருக்கும்? எதற்குமே நீங்கள் அசையக்கூட வேண்டாம். நினைப்பு மட்டுமே போதும்.

ம்.. ‘நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும்’ என்கிறீர்களா? பழமொழியெல்லாம் பழங்கதை சார். நீங்கள் நினைத்ததை முடிப்பதுதான் அறிவியலின் வேலை.

சமீபத்தில் கனடாவின் டொரண்டோ நகரில் ஒரு அலுவலகத்துக்கு பத்திரிகையாளர் ஒருவர் சென்றார். வாசலில் ‘ஹெட்ஃபோன்’ ஒன்றை செக்யூரிட்டி மாட்டி அனுப்பினார். கதவைத் திறக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே சென்றவருக்கு, கதவு அதுவாகவே திறந்து வழிவிட்டது. அட...

கொஞ்சம் அச்சத்தோடு உள்ளே சென்றவருக்கு லேசாக வியர்த்துக் கொட்ட, ஃபேன் சுவிட்ச் எங்கேவென்று தேடத்தொடங்கினார். அவர் நினைத்த மாத்திரத்தில் ஃபேன் ஓட.. விட்டலாச்சார்யா பட அனுபவம்தான் போங்கள்.

திகிலடித்துப் போயிருந்த பத்திரிகையாளருக்கு மேலும் ‘சோதனை’ தர விரும்பாமல் ‘இண்டரெக்ஸான்’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்நிறுவனத்தைச் சார்ந்த ஏரியல் கார்ட்டன் என்கிற உளவியல் நிபுணரான பெண்மணி, ‘டெக்னாலஜியை’ விளக்கத் தொடங்கினார்.

“எதையாவது செய்யும் முனைப்போடு நீங்கள் சிந்திக்கும்போது பீட்டா அலைகளை உங்கள் நினைவகம் உருவாக்குகிறது. ஓய்வு மூடுக்கு வரும்போது ஆல்பா அலைகளை உருவாக்குகிறது. இந்த அலைகளை கட்டுப்படுத்துவதின் மூலமாக ‘ஸ்விட்ச்’ இல்லாமலேயே லைட் போடலாம், ஃபேனை ஓடவைக்கலாம். இசை கேட்கலாம். ஏன் காலில் ‘கீர்’ போடாமலேயே, ஆக்ஸிலேட்டரை முறுக்காமலேயே வண்டி கூட ஓட்டலாம்”

செய்தியை கேட்டதுமே “நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்” என்று பாட்டு பாடலாம் போல தோன்றுகிறதுதானே? – இந்த ஆல்ஃபா, பீட்டா அலைகளை குறித்த ஆராய்ச்சியின் தொடக்கம்தான் இது. நினைவலைகளை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்ற சாத்தியத்தை கண்டறிந்திருக்கிறார்கள். இப்போதைக்கு ட்யூப் லைட் போடுவது, டயல் செய்யாமலேயே ஆபிஸுக்கு போன் செய்து, பொய்பேசி லீவு வாங்குவது என்ற லெவலுக்குதான் இந்த ஆராய்ச்சி முன்னேறியிருக்கிறது. இன்னும் நிறைய ஆராய்ந்து நிறைய விஷயங்களை நினைப்பின் மூலமாகவே சாத்தியப்படுத்தும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இப்போதைக்கு எப்படி இயங்குகிறது என்றால் நம் காதில் பொருத்தப்படும் ஹெட்செட்டில் இருக்கும் சில எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் மூலமாக நம் மூளையின் செயல்பாடுகள் வாசிக்கப்படுகிறது. இது ஒரு கணினிக்கு கொண்டு செல்லப்பட்டு கணினியின் மூலமாக நம் நினைவுகள் செயலாற்றப்படுகிறது.

மனித மூளையை ஒரு கணினியால் படிக்க முடியும் என்பதே மிகப்பெரிய விஷயம். இதனால் நினைத்தமாத்திரத்தில் எவ்வளவோ விஷயங்களை சாத்தியப்படுத்த முடியும் என்பது சாதகமான அம்சம். பாதகமான அம்சங்களும் நிச்சயமாக நிறைய உண்டு. எவையெல்லாம் என்று சொல்லவே தேவையில்லை. உங்களுக்கே தெரியும்தானே?

(நன்றி : புதிய தலைமுறை)

3 கருத்துகள்:

  1. எங்களுக்கும் உங்களுக்கும் மிகுந்த உபயோகமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. நினைத்ததெல்லாம் நடப்பதனால் தெய்வம் ஏதுமில்லை என்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப வில்லங்கமான டெக்னாலஜியா இருக்குதே?

    பதிலளிநீக்கு