12 ஜனவரி, 2011

சென்னைப் புத்தகக் காட்சி - சில பரிந்துரைகள்

புத்தகக்காட்சிக்கு செல்லும் நண்பர்கள், ஏதாவது புத்தகங்களை பரிந்துரையுங்களேன் என்று கேட்கிறார்கள். என்னமாதிரியான ஒரு வறட்சியான இலக்கியச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இது. பின்னே, இம்சை அரசன் வடிவேலுவிடம் பார்க்க வேண்டிய உலகப் படங்கள் பட்டியலை கேட்கலாமா? நாம் அவ்வளவு ஒர்த் இல்லை சார். 'சென்னையில் ஃபிகர் வெட்ட ஏற்ற இடங்கள் யாது யாது' என்று கேட்டால் டக், டக்கென்று லிஸ்ட்டை எடுத்து விடலாம். எனக்குப் பிடித்த இலக்கியவாதி பதலக்கூர் சீனிவாசலு என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அதற்குப் பிறகும் இதுமாதிரி ஆடம் டீஸிங் பண்ணிக் கொண்டிருந்தால் என்னத்தைச் செய்வது?

இருந்தாலும், நம் சிற்றறிவுக்கு எட்டிய சில பரிந்துரைகள் :

புத்தகக் காட்சிக்குள் நேரே நுழைந்து விடாதீர்கள். பச்சையப்பா கல்லூரியை ஒட்டிய பிளாட்பாரத்தில் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. 'உள்ளே' நூறு, நூற்றி ஐம்பதுக்கு விற்கப்படும் புத்தகங்களை இங்கே வெறும் இருபது, முப்பதுக்கு புத்தம் புதுசாக வாங்க முடியும். உதா : அருளன் எழுதிய லங்காராணி. Haunted house என்கிற வித்தியாச வடிவமைப்பு கொண்ட ஐரோப்பிய குழந்தைகள் புத்தகம் ஒன்றினை வெறும் முப்பது ரூபாய்க்கு வாங்கினேன். லேண்ட்மார்க்கில் இதன் ரேட் ஐநூறுக்கும் மேலாக இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் 'பைண்டிங்' செய்யப்பட்ட பழைய காமிக்ஸ்கள் கூட கிடைக்கும். பிரேம்-ரமேஷின் நாவல் ஒன்று இங்கே சல்லிசாக கிடைத்தது. உள்ளே அதன் விலை நூற்றி இருபதோ, நூற்றி ஐம்பதோ. ஒரு முன்னூறு ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்ய முடிந்தால், குறைந்தபட்சம் பத்து புத்தகங்கள் உங்கள் பையில் நிச்சயம்.

கண்காட்சிக்கே நுழைவுக் கட்டணம் ரூ.5 (இந்த வார புதிய தலைமுறையின் விலை ரூ.10. அதில் இலவச கூப்பன் கொடுத்திருக்கிறார்கள்). ஆனால் டூ-வீலர் பார்க்கிங்குக்கு ரூ.10. டூ-வீலர் விடும்போது டோக்கன் வாங்க வேண்டாம். ரிடர்னில் கேட்டால் பத்து ரூபாய் நோட்டு ஒன்றினைக் கொடுக்கலாம். கொஞ்சம் தில்லு இருப்பவர்கள் கைச்சின்னம் மாதிரி கை-யை காட்டினாலேயே போதும். ஏதோ பாஸ் இருக்கிறது என்று நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். அல்லது 9 மணிக்கு மேல் வண்டியை எடுத்து வந்தால் டோக்கன் வாங்க ஆளே இருக்காது. இந்த 10 ரூபாயை மிச்சம் செய்தால், பாரதி புத்தகாலயத்தில் இரண்டு புத்தகம் கூடுதலாக வாங்க முடியும்.

தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகளை நுழைந்ததுமே வாங்கிவிடுவது உத்தமம். 375 ரூ மதிப்புள்ள புத்தகத்தை கலைஞர் புண்ணியத்தால் ரூ.300க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பத்து சதவிகித புத்தகக்காட்சி தள்ளுபடி போக ரூ.270/-க்கு கனமான, ஹார்ட் பவுண்டிங் அட்டை போடப்பட்ட பொக்கிஷம் கிடைக்கிறது. பிரேமா பிரசுரத்தில் மதனகாமராஜன் கதை, விக்கிரமாதித்யன் கதை போன்ற உருப்படியான நூல்கள் எளிமையான தமிழில் கிடைக்கும். இங்கே 1950களின் கிளாசிக் மர்மநாவல்களும் உண்டு. அரு.ராமநாதனின் நூல்கள் நிஜமாகவே முக்கியமானவை.

வானதியில் வாண்டுமாமா நூல்கள் நிறைய கிடைக்கும். மர்மமாளிகையில் பலே பாலு செமத்தியான காமிக்ஸ் கலெக்‌ஷன் (விலை ரூ.150). சாண்டில்யனின் வாழ்க்கை வரலாறு கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளலாம். மணிமேகலையிலும் கூட அப்புசாமி காமிக்ஸ் கிடைக்கும். பூம்புகாரில் பழைய புஷ்பாதங்கதுரை மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் நூல்கள் சல்லிசான விலையில் கிடைக்கிறது. உதாரணம் : சிறைக் கதைகள், ரூ.15.90. மீனாட்சி நிலையத்தில் குமரிப் பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் சில நூல்களை (உதா : விக்ரம்) பத்து, பண்ணிரெண்டு ரூபாய்க்கு வாங்க முடிந்தது. இதே விலையில் மேலாண்மை பொன்னுச்சாமியின் அந்தக் காலத்து சிறுகதைத் தொகுப்புகளையும் இங்கே வாங்கலாம்.

சாகித்திய அகாதமியில் நிறைய இலக்கிய நூல்கள் குறைந்த விலையில் கிடைக்கும். வாசிக்க தம் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இருபத்தைந்து ரூபாய் புத்தகங்களை கூட (இந்த சைஸ் புத்தகங்கள் மற்ற பதிப்பகங்களில் மினிமம் ரூ.75) ஐம்பது சதவிகித தள்ளுபடியில் தள்ளி விடுகிறார்கள். வாங்கத்தான் ஆளில்லை. இராமாயணம், மகாபாரதம் வாங்கியே ஆகவேண்டுமென்றால் ராஜாஜி எழுதியவற்றை வாங்கலாம் (வானதி என்று நினைவு). மலிவு விலையில் வேண்டுமானால் விஜயபாரதத்தில் சித்பவானந்தர் எழுத்தில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் (ஈச் ரூ.25 ஒன்லி). சத்திய சோதனை, அக்னிச் சிறகுகள் எல்லாம் ரூ.30 ரேஞ்சில் பல ஸ்டால்களில் கிடைக்கிறது.

எந்த ஒரு புத்தகத்தையுமே வாங்குமுன் ஒன்றுக்கு நான்கு முறை யோசியுங்கள். கடந்த பத்தாண்டுகளில் லட்ச ரூபாய்க்கு மேலாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அவற்றில் இருபத்தைந்து சதவிகித புத்தகங்களை முழுமையாக வாசித்திருந்தாலே அதிகம். தீபாவளிக்கு பட்டாசு வாங்கினாலாவது வெடித்துத் தீர்க்கிறோம். புத்தகங்களை என்ன செய்வது? நீங்கள் படித்தே ஆகவேண்டும் என்று நினைக்கின்ற புத்தகங்களை வாங்கலாம். ஒரு எழுத்தாளர் ரொம்ப பிரபலமாக இருக்கிறார் என்று நினைத்து அவரது புத்தகங்களை வாங்குவது மடத்தனம். சாம்பிளாக அவரது ஓரிரு சிறுகதைகளை படித்துப் பார்த்து, உங்களுக்கு 'செட்' ஆனால் மட்டும், அவரது நூல்களை வாங்கலாம். துறைசார்ந்த நூல்கள் வாங்கும்போதும் கவனம் தேவை. நீங்கள் ஏதோ ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் பட்சத்தில், யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' வாங்கினீர்களேயானால், உங்களைப் போன்ற அம்மாஞ்சி உலகத்திலேயே கிடையாது. நண்பர்கள் எழுதினார்கள், நண்பர்கள் பரிந்துரைத்தார்கள் என்று முகதாட்சண்யத்துக்காக புத்தகம் வாங்குவதை தவிருங்கள். வாசிப்பு முக்கியம்தான். அதைவிட உங்களுடைய ஒவ்வொரும் காசும், உங்களுக்கு ரொம்ப முக்கியம். நான் கவிதைகளையே படிப்பதில்லை. பாரதியார் கவிதைகளில் தொடங்கி, நிறைய கவிதைத் தொகுப்புகளை காரணமேயில்லாமல் கடந்தகாலங்களில் காசுகொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன். இது எனக்கு தேவையா? உங்களுக்கு எதை படிக்க முடியுமோ, அதை வாங்கினா போதும் சார்.

ஓக்கே, பத்து நூல்கள் பரிந்துரை. நான் சொல்வதற்காக இவற்றை நீங்கள் வாங்கியாக வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. இந்த நூல்களை நான் வாசித்திருக்கிறேன் என்பதைத் தவிர்த்து வேறெந்த சிறப்புக் காரணமும் இந்தப் பரிந்துரைக்கு இல்லை. உங்கள் பர்ஸுக்கு பெரியதாக வேட்டு வைத்துவிடக்கூடாது என்கிற பாச உணர்வும் இந்த பரிந்துரையின் பின்னால் ஒளிந்திருக்கிறது. இது எல்லாமே கொஞ்சம் உருப்படியான புத்தகங்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணமும் கூட. இந்தப் புத்தகங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் வாசிக்க முடியும் என்பதால் 'துட்டுக்கேத்த தோசை' என்கிற வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.

1. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதைய்யர்

2. பாரதியார் கதைகள், கட்டுரைகள்

3. என் கதை - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

4. எஸ்.ஏ.பி - ஜ.ரா.சு, புனிதன், ரா.கி.ர

5. ஜெயமோகன் குறுநாவல்கள்

6. கூனன் தோப்பு & சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்

7. மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் - சாரு நிவேதிதா

8. பின் கதைச் சுருக்கம் - பா.ராகவன்

9. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் - கிரேஸி மோகன்

10. சுகுணாவின் காலைப்பொழுது - மனோஜ்



11 ஜனவரி, 2011

சீமான்!

நாற்பது கோடியாரின் பாணியில் அம்மாவின் கூடாரத்துக்கு செந்தமிழன் சீமான் வந்திருக்கிறார். அம்மாவின் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் ஏற்கனவே அங்கிருப்பவர்களுக்கு தெரியும். ஆனானப்பட்ட தான்னா பான்னாவே ஒரு நாளைக்கு நூற்றியிட்டு முறை கொடநாடிருக்கும் திசை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்துக் கொண்டிருக்கிறாராம். செந்தமிழனுக்கும் யாராவது இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமில்லையா?

தினமும் 'தண்டால்' எடுத்துப் பழகுவது உத்தமம் செந்தமிழரே. டப்பென்று அம்மாவை எங்காவது பார்த்தால் விழுந்து எழ சிரமப்பட வேண்டியதில்லை அல்லவா? முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனைப் பாருங்கள். எவ்வளவு பெரிய மீசை வைத்திருந்தாலும், இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் சங்கோஜமா படுகிறார்?

திருப்பி அடிப்பேன், கையை முறுக்குவேன், காலை முறுக்குவேன் என்றெல்லாம் இனிமேல் சின்னப்பிள்ளைகள் மாதிரி சொல்லிக் கொண்டிருக்கப்படாது. தப்பு. தப்பு. அம்மாவுக்கு அறிக்கை எழுதிக் கொடுப்பவர்கள் இனி சீமானுக்கும் அவ்வப்பொழுது எழுதிக் கொடுப்பார்கள். அதை மேடையிலோ, பத்திரிகையாளர் முன்னிலையிலோ அப்படியே ஒப்பித்தால் போதுமானது. என்றாவது திடீரென காலைச்செய்திகளில் 'தீயசக்திக்கு சீமான் எச்சரிக்கை!' என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும். அதை நாம் தான் சொன்னோமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யப்படாது. ஏற்கனவே வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்டு கோஷ்டிகள் இதைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்காக நீங்கள் சிந்திக்கத் தேவையில்லை. அந்த வேலையை எல்லாம் அம்மாவுக்கு அறிக்கை எழுதித்தருபவர் பார்த்துக் கொள்வார்.

அதென்ன சார் அசிங்கமா கருப்புச்சட்டை? ஓ.பி.எஸ்.ஸோ, ஜெயக்குமாரோ, இப்படியா சட்டை போடுகிறார்கள்? வெள்ளை வெளேரென்று 'பளிச்'சுனு இருக்க வேண்டாமா? நீங்கள் சினிமாக்காரர் இரட்டை இலை சின்னம் பொறித்த பச்சை சட்டை போடலாம். சேகர்பாபு மாதிரி சபரிமலைக்கு மாலைகூட போட்டுக்கலாம்.

அசடு மாதிரி பெரியார், எம்.ஜி.ஆருன்னு முன்னைமாதிரி பேசிக்கிட்டு திரியாதிங்க. வைகோவை பாருங்க. அம்மாவை தவிர வேற யாரை பத்தியாவது பேசுறாரா?

முன்பெல்லாம் நீங்கள் வெறும் சினிமாக்காரர். யாராவது ஸ்டில் போட்டோகிராபரை வைத்து பிரபாகரன் மாதிரி, சேகுவேரா மாதிரி, அமெரிக்க சுதந்திரச்சிலை மாதிரியெல்லாம் போஸ் கொடுத்து ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டினீர்கள். இனிமே அது மாதிரி ஒட்டுனீங்கன்னா உங்க வாலை அம்மா ஒட்ட நறுக்கிடுவாங்க. பவ்யமா அம்மாவுக்கு பின்னாடி கையை கட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி கிராஃபிக்ஸில் ஒரு போட்டோவை உருவாக்கி வெச்சுக்கங்க. அம்மா பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கவும், விளம்பரம் கொடுக்கவும் உதவும். அம்மா பிறந்தநாள் என்றதுமே நினைவு வருகிறது. நீங்களும் அலகு குத்தி தேர் இழுக்கணும் சாமியோவ். பேக்கு பத்திரம்.

இனிமேல் மேடையில் பேசும்போது புலி, கிலியென்று தெரியாமல் கூட பேசி அம்மாவை சீற்றப்படுத்தி விடாதீர்கள் சீமான். ஈழத்தாய் இதையெல்லாம் விரும்புவதில்லை. உங்களுக்கும், வைகோ மற்றும் நெடுமாறனுக்கும் மட்டும் தெரிந்த "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" ரகசியத்தை அம்மாவிடமோ, சின்னம்மாவிடமோ சொல்லிவிடாதீர்கள். மறுபடியும் இந்தியாவுக்கு கொண்டு வந்து தூக்கில் போடணும்னு ஈழத்தாய் தீர்மானம் போடவேண்டியிருக்கும். அம்மாவைப் பொறுத்தவரை "ஈழமா? அது எங்கே இருக்கு?". நீங்கபாட்டுக்கு ஈழம், கீழம்னு எதையாவது உளறி கிளறி தள்ளிடப் போறீங்க. அப்புறம் ஆத்தா 'ஆடிட்டர் ட்ரீட்மெண்ட்' எடுத்துடுவாங்க.

கடைசியா ஒண்ணு. தினமும் காலையில் எழுந்ததுமே 1008 வாட்டி 'அம்மாவே சரணம்' எழுதிடுங்க. ஆட்டம் பழகிடும். ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும் கஷ்டமாதான் இருந்தது. இப்போ அடிச்சு ஆடுறதில்லையா?

புலியெல்லாம் பூனை ஆகிற காலமிது. நீங்கள் வெறும் எலிதானே? தேய்ந்து கட்டெறும்பாகிப் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அம்மா காலில் விழும் உங்கள் தன்மான அரசியலுக்கு வாழ்த்துகள்.

10 ஜனவரி, 2011

கொண்டாட்டமான சமகாலம்!

நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

ஒரு பொதுநிகழ்ச்சிக்கு வருகிறீர்கள். உங்களிடம் யாரும் கையெழுத்து வாங்குவதில்லை. உங்களைப் பார்க்க முட்டி மோதுவதில்லை. உங்கள் படைப்புகளை பாராட்டி ரத்தக் கையெழுத்திட்டு கடிதம் எழுதுவதில்லை.

ஏன்?

ஏனெனில் நீங்கள் பேயோன் இல்லை. பேயோனைப் போல பிரபலமில்லை.

பேயோனுக்கு மட்டும் ஏனித்தனை பிரபலம்?

இந்தப் பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் சமகால வேளையில், என்னுடைய கள்ளக்காதலியை நான் முத்தமிட்டுக் கொண்டிருக்கலாம். சிகரெட் சாம்பலை தட்டிக் கொண்டிருக்கலாம். மதுக்கடையில் மதிமயங்கி கிடக்கலாம். இன்னும் இப்படியே சில இத்யாதி இத்யாதி 'லாம்'கள். பேயோனோ நோபல் பரிசுக்கான இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருப்பார். குழந்தைகளுக்காக சிந்தித்துக் கொண்டிருப்பார். வண்ணத்துப்பூச்சிகளுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். அவர் படைப்பது அனைத்துமே இலக்கியம்தான். குலதெய்வம் கோயிலில் கூட இலக்கியங்களைதான் படையலிடுகிறார்.

அசமகால இலக்கியவெளியில் திருவள்ளுவர் புகழ்பெற்ற துண்டிலக்கியவாதி. சமகாலத்தில் துண்டிலக்கியம் படைப்பதில் யாரும் விருப்பம் காட்டுவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக திருவள்ளுவருக்கு இலக்கிய வாரிசு யாரும் அமையவில்லை. சூனியமாக இருக்கும் இந்த வெளியில் தன்னுடைய இடத்தை துண்டு போட்டு பிடித்திருப்பவர் ஒசாகாவில் வசிக்கும் பேயோன். அவரது முதல் சமகால படைப்பான 'பேயோன் 1000' தமிழின் முக்கியமான நூல்களில் ஒன்று என பேயோனே எழுதியிருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகால தமிழிலக்கிய வரலாற்றில் ட்விட்டர் எனப்படும் சமூகவலைப்பதிவு இணையத்தளத்தில் பதியப்பட்ட துண்டிலக்கியங்கள் அச்சுவடிவம் பெறுவது முதன்முறையாக சாத்தியமானது 'பேயோன் 1000' மூலமாக மட்டுமே.

சிலபல நாவல்களை எழுதியிருப்பதாக சொல்கிறார். இதுவரை யாரும் வாசித்ததில்லை. பின்நவீனத்துவ சூழல் கோட்பாட்டின்படி ஆசிரியன் மட்டும் மரிப்பதில்லை. படைப்பும், படைப்பை வாசித்தோ அல்லது கேள்விப்பட்டோ வாசகர்களும் மரித்துவிடுகிறார்கள். பேயோனின் நாவல்களை கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். அவரது நாவல்களை இன்னமும் அவரே வாசிக்கவில்லை என்பதுதான் பேருண்மை. திரைப்பட வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் அவர் பணியாற்றுவதாக அவரது படைப்புகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. ரஜினிசாரை எழுத்தில் குறிப்பிடும்போது ரஜினிசார் என்று குறிப்பிடுகிறார். எனவே நிச்சயமாக சினிமாக்காரராகதான் இவர் இருக்க முடியும். சமகால இலக்கியத்தையும், சமகால திரைப்படத்தையும் தனது இருதோள்களின் வழியாக ஹெர்குலிஸ் மாதிரி தூக்கி சுமப்பதால் சமகாலத்தில் தமிழின் தவிர்க்க முடியாத கலைஞர் ஆகிறார் பேயோன்.

ஆண்டு தொடக்கத்தில் ஒருமுறை பேயோன் சொன்னார் "இந்த ஆண்டிலும் தேதிகள் தவிர எதுவும் மாறப் போவதில்லை". ஆண்டு முடிவில் அவரது தீர்க்கதரிசனத்தை உணர்ந்தேன்.

பேயோனின் படைப்புகள் உயர்தனித்துவம் கொண்டவை. தனித்துவம் கொண்ட படைப்புகள் என்பதால் தனியாக அமர்ந்து வாசிப்பது உசிதம். கூட்டமான இடத்தில் அமர்ந்து வாசித்தால் கூட்டத்தில் குழப்பம் வரலாம். வன்முறை வெடிக்கலாம். சமகால இலக்கிய தீவிர முன்னெடுப்புகளை முனையும் தீவிரவாதியின் படைப்புகளை வாசிப்பதால் இதுபோன்ற இயற்கை-செயற்கை சீற்றங்கள் நிகழலாம். சில பின்நவீனத்துவ எழுத்தாளர்களை வாசிக்க ஆணுறை அவசியம். பேயோனை வாசிக்க தலைக்கவசம் மட்டுமே போதுமானது.

பேயோனின் பத்திகள் சைக்கிள் அகர்பத்திகளை விட சிறந்தது. சமகால இதழியலின் சர்வநாடியையும் உணர்ந்தவர் பேயோன். அதனால்தான் சமகால பத்தி எழுத்தாளர்கள் பலரும் பேயோனைப் போன்ற பிரபலத்தை அனுபவிக்க முடிவதில்லை. குறைந்த உழைப்பில் நிரைந்த வருமானம் கிடைப்பதால் பேயோன் பத்தியும் எழுதுகிறார். க்ரியாவின் தமிழ் அகராதி என்ற நூலுக்கு அவர் எழுதிய மதிப்புரை வாசகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. 495 ரூபாய் விலையுள்ள 1328 பக்கங்கள் கொண்ட அந்நூலில் கதை இல்லை என்பதை கண்டறிந்து சொன்னவர் பேயோன் ஒருவர் மட்டுமே.

பேயோனைக் குறித்து நான் இவ்வளவு எழுதியும், "யார் பேயோன்?" என்கிற அபத்தமான கேள்வி உங்களுக்குள் எழலாம். மாசடைந்துப்போன கார்ப்பரேட் இலக்கியச் சூழலில், போலிகள் மிகுந்து புகழும், பணமும் குவிக்கும் காலக்கட்டத்தில் பேயோன் விளைவு தவிர்க்க இயலாதது. உங்களுக்குள்ளும், எனக்குள்ளும் கூட ஒரு பேயோன் உண்டு. பேயோன் என்பது தனிநபரல்ல. அது ஒரு இலக்கிய இயக்கம்.

அமரத்துவம் பெற்ற தனித்துவ பேயோனின் சமகால படைப்புகள் :

1. பேயோன் 1000 (ரூ. 60)
2. திசை காட்டிப் பறவை (ரூ.100)

இருநூல்களும் சமகால பதிப்பகமான 'ஆழி'யில் கிடைக்கும். சமகால முகவரி : 12, முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. தொலைபேசி : 044-23722939. வலை : www.aazhipublishers.com

பேயோனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிமுகம் வேண்டுவோர் சமகால சமூக வலைப்பின்னல் இணையத்தளமான ட்விட்டரில் அவரை தொடரலாம் : http://twitter.com/writerpayon. பேயோனின் சமகால மின்னஞ்சல் முகவரி : writerpayon@gmail.com  சமகால இணையத்தளம் : www.writerpayon.com

சமகால சென்னை புத்தகக்காட்சியிலும் பேயோனின் சமகால படைப்புகளை ஸ்டால் எண் 340, 341-ல் வாங்கலாம்.

4 ஜனவரி, 2011

எழுத்தாளர்களை மதிக்காத தமிழ்ச் சமூகம்!

முன்பெல்லாம் சாருநிவேதிதா மட்டுமே கூவிக்கொண்டிருந்த வாசகம் "தமிழ்ச்சமூகம் எழுத்தாளர்களை மதிப்பதில்லை".

இந்தச் சரக்கு நன்கு விலைபோகிறது என்பதால், இப்போதெல்லாம் பிறந்தபோதே பேனாவோடு பிறந்த எழுத்தாளனாகட்டும், கக்கூஸ் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை மனு எழுதிய ஒரே தகுதியால் திடீர் எழுத்தாளன் ஆகிவிட்டவனாகட்டும், ஆளுக்கு ஆள் கூவுகிறார்கள். கண்மணி குணசேகரன் போன்ற எழுத்தாளர்கள் ஒருபடி மேலே போய் எழுத்தாளனை சட்டமன்றத்துக்கு அனுப்பி அமைச்சர்களுக்கும், ச.ம.உ.க்களுக்கும் ஆலோசனை சொல்ல வைக்க வேண்டும் என்று அதிரடி கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

மரியாதை ராமன்களாகிய எழுத்தாளர்களுக்கு, தமிழ்ச்சமூகம் இன்னும் என்னென்ன சிறப்புகளை செய்யலாம் என்று ஒரு சின்ன ஆலோசனைப் பட்டியல் :

  • கோயில் திருவிழாக்களில் எழுத்தாளர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யலாம்.
  • தங்களது அபிமான எழுத்தாளர்களுக்கு ஞானபீடம், சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட பிரார்த்தித்து, வாசகர்கள் அலகு குத்திக்கொண்டு முப்பாத்தம்மன் கோயிலுக்கு தேர் இழுக்கலாம்.
  • இலக்கிய நிகழ்ச்சிகளில் எழுத்தாள தரிசனம் வாசகர்களுக்கு கிடைக்கும்போது, ஒரு சேவகன் முன்வந்து "எழுத்தாதி எழுத்த.. எழுத்த மார்த்தாண்ட.." என்று ஆரம்பித்து, 'பராக், பராக்' சொல்ல வைக்கலாம்.
  • சினிமாக்காரர்களுக்கு ஆஸ்கர் என்பது மாதிரி தமிழ் எழுத்தாளர்களுக்கு நோபல் ஆசை இருப்பதாக தெரிகிறது. இன்னும் எனக்கு மீதமிருக்கும் எழுபதாண்டு ஆயுட்காலத்தில் அந்த அதிசயம் நடந்தேற வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. எனவே தினகரன் சினிமா விருதுகள், விஜய் அவார்ட்ஸ் என்பது மாதிரி இவர்களுக்கு ஏதேனும் உள்ளூர் ஏற்பாடுகளை தற்காலிகமாகச் செய்யலாம்.
  • ஆலமரத்துப் பஞ்சாயத்துகளில் எழுத்தாளர்களை கவுரவ நாட்டாமைகளாக்கி தீர்ப்பு சொல்ல சொல்லலாம். எதிர் எழுத்தாளர்களும், அவரது வாசகர்களும் 'நாட்டாமை தீர்ப்பை மாத்து' என்று ரப்ஸர் செய்வார்கள். இது ஒன்றுதான் பிரச்சினை.
  • தேர்தலுக்காக வேட்பாளர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரச்சாரம் செய்வதைப்போல, எழுத்தாளர்களின் புதுப்புத்தகம் வெளிவரும்போது அழைத்துச் சென்று 'வாங்குங்கம்மா புக்கு' கோஷம் போடலாம். ஒரு லட்சம் பிரதிகள் விற்றுவிட்டால் நன்றியறிவிப்புக் கூட்டமும் நடத்தி விடலாம்.
இதையெல்லாம் செய்துவிட்டால், எழுத்தாளனை தமிழ்ச்சமூகம் மதித்துவிட்டதாக கருதிவிடலாம். ஒரு உழவனோ, தச்சு வேலை செய்பவனோ, ஆலைத் தொழிலாளியோ, வேறு எவரோ தன்னை இச்சமூகம் மதிப்பதில்லை என்று புலம்பித் திரிவதில்லை. அன்று சினிமாக்காரர்கள் புலம்பினார்கள். இன்று எழுத்தாளர்கள் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கும், இவர்களுக்கும் அடிப்படையான ஆறு வித்தியாசங்கள் கூட மறைந்துவிடும் போலிருக்கிறது.

தொழில்/வேலை என்பது அவரவர் தேர்வு. ஒழுங்காக வேலை பார்த்தவர்கள் சமூகத்தால் மதிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள், எழுத்தாளர்கள் உட்பட. லட்சக்கணக்கில் ராயல்டி வாங்கும் எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் எழுத்தாளர் சொன்னார். "நான் எழுதவந்தபோது எழுத்தாளன் வீட்டு அடுப்பில் பூனை தூங்கும் என்றார்கள். மாறாக என்னுடைய எழுத்து எனக்கு தலைவாழை இலை விரித்து சோறு போடுகிறது. சோறு மட்டுமல்ல. கறிக்குழம்பு ஊற்றி பொறியல் தொடங்கி ஊறுகாய் வரை வைக்கிறது". எழுத்து அதிகபட்சம் சோறுதான் போடும். சரக்கு எல்லாம் ஊற்றாது.

யாருமே யாராலும் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதால் மட்டுமே மதிக்கப்படுவதில்லை. இது நீதியானதா/அநீதியானதா என்பது வேறு விவாதம். ஆனால் தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல. உலகம் முழுக்க இருக்கும் எல்லா சமூகமுமே இப்படியானதாகதான் இருக்கிறது.

"எங்களால்தான் தமிழ் வாழுகிறது!" என்கிறார்கள் இவர்கள். எப்படிப்பட்ட அறியாமை இது? இப்படி மார் தட்டிக்கொள்ள இன்றைய தேதியில் முழுமையாக தகுதியானவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தினர் மட்டுமே.

1 ஜனவரி, 2011

சரோஜா தேவி!

சில நாட்களுக்கு முன்பாக அந்த நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். "எல்லோரும் சரோஜாதேவி, சரோஜாதேவி என்று பேசிக்கொள்கிறார்களே? அப்படியென்றால் என்ன?"

எனக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. என்ன மாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் நாம்? நமக்கு முந்தைய ஒரு தலைமுறை பீடத்தில் ஏற்றிவைத்திருந்த உயர்ந்த மதிப்பீடுகளை, அதன் மதிப்பு புரியாமல் காலுக்கு கீழே போட்டு நசுக்குகிறோமே? எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி இது? இருப்பினும் பொறுமையாக அவருக்கு விளக்கி பதில் அனுப்பினேன்.

நெஞ்சின் அடியாழத்தில் புதைந்துப்போன நினைவோடையை மீண்டும் ஒருமுறை சலசலக்க வைத்தேன். தொண்ணூறுகளுக்கு முன்பான தலைமுறை எவ்வளவு சீரும், சிறப்போடும் வாழ்ந்திருக்கிறது. 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' வராத அக்காலத்திலேயே, அதற்கு மாற்றாக எவ்வளவு அச்சு ஊடகங்கள் அவர்களுக்கு தகவல்களை அள்ளித் தந்திருக்கிறது? விருந்து, மருதம், திரைச்சுவை, வெண்திரை, செக்ஸ் லைப், வாலிபம் என்று எத்தனை எத்தனை இதழ்கள்? எவ்வளவு கதைகள்? உயிர்ப்போடும், துடிப்போடும் வாழ்ந்த தமிழ் சமூகம், பாழாய்ப்போன உலகமயமாக்கலால் தனது பாரம்பரிய பாலியல் அடையாளங்களை இன்று இழந்துவருகிறது.

இன்றைய இளைஞன் பாலியல் புரிதலுக்காக இணையத்தை மேய்கிறான். பர்மாசந்தையில் குறுவட்டு வாங்குகிறான். இதைத்தவிர்த்து வேறென்ன வாய்ப்பு அவனுக்கு வழங்கப்படுகிறது? ஜோதி, பானு போன்ற திரையரங்குகளில் கூட இப்போது துண்டுப்படங்கள் போடப்படுவதில்லை. துண்டுக்குப் பேர் போன ஷகிலாவே, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அண்ணாசாலை சுரங்கப்பாதைக்கு அருகே 'சரோஜாதேவி' கிடைப்பதில்லை.

இணையத்திலும், குறுவட்டிலும் அப்பட்டமாக அனைத்தும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கு நம் மண்சார்ந்த தனித்தன்மை கிஞ்சித்தும் இல்லையே? கிளுகிளுப்புக்கு கூட அயல்நாடுகளை சார்ந்திருக்கும் அவலநிலை இன்றைய தமிழனுக்கு. அய்யகோ தமிழா. ஏனிப்படி தரம் தாழ்ந்தாய்? 'மண்சார்ந்த தனித்தன்மை' என்ற சொல், உங்களை குழப்பலாம். அது ஒன்றும் பெரிய காமசூத்திரமில்லை. "என் பெயர் ரமா. வயது 18. பார்ப்பதற்கு கடலோரக் கவிதைகள் ரேகா மாதிரி இருப்பேன்" என்று அந்தக் காலத்து 'மருதம்' கதைகள் தொடங்கும். இதற்கு நிகரான தமிழ்த்தன்மையை இன்றைய குறுவட்டுகளும், இணையமும் தருகிறதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று நாற்பதைத் தாண்டியவர்களுக்கு, அவர்களின் இளமைப் பருவத்தில் கிடைத்த வீரியம், அடுத்த தலைமுறைக்கு அப்படியே கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா? மாறாக எடுத்தவுடனேயே எல்லாவற்றையும் அப்பட்டமாக காட்டிவிடும் அயல் கலாச்சாரம், நம் இளைஞர்களுக்கு முழுமையாக, படிப்படியாக கிடைக்கவேண்டிய கிளுகிளுப்பின் கிறுகிறுப்பை கிஞ்சித்தும் கிட்டாமல் செய்துவிடுகிறது. சிட்டுக்குருவி புகழ் டாக்டர் கூட செத்துப்போய் விட்டாராமே?

எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அக்காலத்தில் 'சரோஜா தேவி' தயார் ஆனது தெரியுமா?

'கர்னாடகா பதிப்பகம், பெங்களூர்' என்று அச்சிடப்பட்டிருந்தாலும் எல்டாம்ஸ் ரோடிலும், ராயப்பேட்டையிலும்தான் சரோஜாதேவி பெரும்பாலும் அச்சிடப்பட்டது. சரோஜாதேவி என்ற பெயர் ஒன்றே போதும், தரம் எளிதில் விளங்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட பதிப்பாளர் என்றில்லாமல், இவ்வணிகத்தில் ஈடுபட்டிருந்த பல பதிப்பாளர்களும் 'சரோஜா தேவி' என்கிற பெயரை, அவரவர் படைப்புகளை தாங்கிவந்த புத்தகங்களுக்கு சூட்டினார்கள்.

ஏன் இந்த குறிப்பிட்ட பெயர்? பானுமதி என்றோ, டி.ஆர்.ராஜகுமாரி என்றோ இந்த செவ்விலக்கியப் பிரதிகளுக்கு ஏன் பெயர் சூட்டப்படவில்லை?

ஹரிதாஸ் காலத்தில் பாலியல் வறட்சியால் வறண்டுப்போன சமூகம் நம் சமூகம். படத்துக்கு 60 பாட்டுகள் இருந்தாலும், முதிர் கன்னிகளான கதாநாயகிகள் ஒரே ஒரு அங்குலம் இடுப்பை கூட காட்டாமல் (காட்டியிருந்தாலும் சகித்திருக்காது) சவுதிஅரேபியாத் தனத்தோடு திரைகளில் இயக்கப்பட்டார்கள். இந்த வரலாற்று பாலியல் சோகம் போக்கப்பட்ட காலத்தின் குறியீடுதான் 'சரோஜாதேவி'.

பழுப்பு வண்ண காகிதம். தேவைப்பட்டால் இடையிடையே படங்கள். கருப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட அந்த நிழற்படங்களில் என்னென்ன சமாச்சாரங்கள் ஒழுங்காக தெரிகிறது என்று தெரிந்து கொள்வதற்காகவே, பல பாக்யராஜ்கள் அந்தக் காலத்தில் கண்ணாடி போட்டுக் கொண்டார்கள். 70களில் இருவண்ணத்தில் அச்சிடப்பட்ட அட்டைப்படங்கள். 80களின் இறுதியில் கவர்ச்சிகரமான வண்ண அட்டைகளும் மட்டமான வழுவழு கண்ணாடி லேமினேஷனில் போடப்பட்டது உண்டு.

கதைகளை எழுதியவர்கள் ஒரே ஆளா பலரா, யார் யாரென்பது 20ஆம் நூற்றாண்டின் விடைத்தெரியா கேள்விகளில் ஒன்று. நமக்குத் தெரிந்து பலரும் எழுதியிருக்கிறார்கள். அவ்வாறு எழுதியவர்களில் சிலர் பிற்காலத்தில் சினிமாவில் கதையாசிரியர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும், பிரபல எழுத்தாளர்களாகவும் பரிணமித்திருக்கிறார்கள். எல்டாம்ஸ் ரோடு அச்சகத்துக்குப் போய் விறுவிறுவென்று ஒரு நாற்பது பக்க நோட்டில் தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தால் 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் சரக்கின் கிளுகிளுப்புத் தன்மைக்கு ஏற்றவாறு சன்மானம் கிடைக்குமாம். சுஜாதாவோ, பாலகுமாரனோ கூட அந்த காலத்தில் சம்பாதிக்காத பெருந்தொகையை சில சரோஜாதேவி எழுத்தாளர்கள் சம்பாதித்திருக்கிறார்கள்.

கதை பெரும்பாலும் பெண் எழுதுவதைப் போன்ற மொழிநடையில் இருக்கும். ஏனெனில் ஆண்களின் அனுபவங்களை வாசக ஆண்மனம் சகித்துக் கொள்ளாது. கதைக்கு எதுகை மோனையோடு கூடிய 'நச்'சென்ற தலைப்பு அவசியம். உதாரணம் : பாலைக் குடிச்சுக்கோ, பழத்தை உட்டுக்கோ.

இந்தப் புத்தகங்களின் வினியோகம் எவ்வாறு நடந்தது என்பது ஒரு உலக ஆச்சரியம். மருதம், விருந்து போன்ற இடைபாலியல் நிலை இதழ்களை பேருந்துநிலைய பெட்டிக்கடைகளில் விற்கலாம். ஆனால் சரோஜாதேவி போன்ற நேரடி கலகப் புத்தகங்களை விற்பவர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட நிலையிருந்தும், கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் இவை விற்கப்பட்டிருக்கின்றன. வாசிக்கப்பட்டிருக்கின்றன. சரோஜாதேவி வாசகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஏதோ ஒரு மர்ம வலைப்பின்னல் இருந்திருக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக கூட அண்ணாசாலையில் பழைய சரோஜாதேவி புத்தகங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. விலைதான் கொஞ்சம் அதிகம். 60 ரூபாய். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, "ஏதாவது காமிக்ஸ் புக் இருக்காண்ணா?" என்று கேட்டோமானால் கடைக்காரர் புரிந்துகொள்வார். "படம் போட்டு ஓணுமா இல்லைன்னா வெறும் கதையா?" என்பார். வெறும் கதை என்றால் சரோஜாதேவி. படம் போட்டவை ஃபாரின் கந்தாயங்கள். அவை விலை இன்னும் கொஞ்சம் கூடுதல்.

இப்போதும் அண்ணாசாலையில் கடைகள் இருக்கின்றன. வாலிப நிலா, சினிக்கூத்து, வண்ணத்திரைதான் விற்கிறார்கள். சரோஜாதேவி இலக்கிய உற்பத்தி தேக்கநிலை அடைந்து, இன்று கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. சரோஜாதேவி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையும் உருவாகிவிட்டது.

எது எப்படியோ. ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் காலத்திலும் வாசக அனுபவ அடிப்படையில் சரோஜாதேவியை, சபீதாபாபி வென்றுவிடவே முடியாது.