14 ஜூலை, 2012

Sorkam-1970/சொர்க்கம்1970/நடிகர் திலகத்தின் நட்டுக்குத்தலான படம்...


பில்லா-2 படத்தை நீங்கள் எந்தக் காரணத்துக்காக வேண்டுமானாலும் பார்த்திருக்கலாம். என்னால் அந்தப் படத்தை பார்க்க முடியாது. இயக்குனர் சக்ரா டொலாட்டி உங்கள் நண்பராக இருக்கலாம். அல்லது ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உங்களுடைய ஒன்றுவிட்ட மச்சானாக இருக்கலாம். அல்லது அஜித்குமார் உங்களுடைய வாசகநண்பராக கூட இருக்கலாம். இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு உங்களுடைய மலச்சிக்கல் கூட ஒரு காரணமாக இருக்கலாம். என்னுடைய பிரச்சினையே வேறு.

நான் ஏன் பில்லாவை விட்டு விட்டு ‘சொர்க்கம்’ பார்த்தேன் என்று உங்களுக்கு காரணம் சொல்லியே ஆகவேண்டும்.

ஏனெனில் எனக்கு இப்போது ’பில்லா’ டிக்கெட்டு கிடைக்கவில்லை. வாசக நண்பர் விஸ்வா போனமாசமே டிக்கெட்டு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். நான், விஸ்வா, வாசக நண்பர் அதிஷா, வாசக நண்பர் சிவராமன், வாசக நண்பர் நாராயணன் ஆகியோர் போனோம். அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்பதற்கு பதிலாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தப்பாக டைட்டில் போட்டார் தியேட்டர் ஆபரேட்மேன். அவருக்கு படமே போட தெரியவில்லை என்று கூறி டைட்டில் முடிவதற்கு முன்பாக எழுந்து வந்துவிட்டேன்.

நான் லோக்கல் என்பதால், லோக்கல் தியேட்டருக்குப் போய் முந்தாநாள் டிக்கெட் கேட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது என்று தியேட்டர் வாசலில் கடைவிரித்து பீடி, பான்பராக் விற்பவர் சொன்னார். ஒத்தா, என்ன படத்துக்குதான் டிக்கெட் கிடைக்கும் என்று இணையத்தில் தேடினேன். என் வாசக நண்பர் அதிஷா, மாம்பலம் சீனிவாசா தியேட்டரில் ‘சொர்க்கம்’ படத்துக்கு டிக்கெட் கிடைப்பதாக சொல்லி, அவரே ஆன்லைனில் ‘புக்’கும் செய்துவிட்டார். டிக்கெட் விலை ரூ.30 (பால்கனி) தான். ஆனால் பைக் பார்க்கிங் டோக்கன் ரூ.10 + ஆன்லைன் சர்வீஸ் சார்ஜ் ரூ.20 + குவார்ட்டர் நெப்போலியன் ரூ. 85 + அரை பாக்கெட் கிங்ஸ் ரூ.30 + நாலு மாணிக்சந்த் ரூ.24 என்று எக்ஸ்ட்ராவாக ரூ.169 செலவானது. ச்சீ.. நாய்களா.. பேய்களா.. குரங்குகளா.. சுண்டக்காய் எட்டணா.. சுமைக்கூலி எட்டு ரூபாயா?

நான் ஏன் ‘சொர்க்கம்’ பார்த்தேன் என்று உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும். டைட்டிலை பார்த்துவிட்டு ஏதாவது ‘பிட்டு’ இருக்குமென்று முதலில் நினைத்தேன். ஆனால் தியேட்டர் முன்னால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் கே.ஆர்.விஜயா படம் இருந்ததால் ‘அட்டு’ தான் இருக்குமென்று தெரிந்துகொண்டேன்.

மனமார ஒத்துக்கறேன். கே.ஆர்.விஜயா சிக்கென்றுதான் இந்த வயதிலும் இருக்கிறார். 1970ல் காஞ்சிபுரத்தில் இந்தப் படத்தை என்னுடைய அப்பா பார்த்தபோதும் அப்படியேதான் இருந்திருக்கிறார். எனக்கு கே.ஆர்.விஜயாவை ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவர் கற்பகம் படத்தில் மன்னவனே அழலாமா என்று அழுதுக்கொண்டே பாடுவார்.

 = = = = = = = = = =

சொர்க்கம் படத்தின் ஓன்லைன் என்ன?

சிவாஜி கே.ஆர்.விஜயாவை கல்யாணம் செய்துக் கொள்கிறார். இதனால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

 = = = = = = = = = = 

சொர்க்கம் படத்தின் கதை என்ன?

சிவாஜி ஒரு வேலையில்லா பட்டதாரி. ரொம்ப வெயில் அடித்ததால் அவர் வேப்பமரம் முன்பாக நிழலுக்கு உட்காருகிறார். அப்போது ஜிக் ஜிக்கென்று ஆட்டிக்கொண்டு டூபிஸில் ஒரு பெண் டேன்ஸ் ஆடுகிறார். சிவாஜி ‘பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்’ என்று டி.எம்.எஸ். மாதிரி கஷ்டப்பட்டு மிமிக்ரி செய்து பாட்டு பாடுகிறார். பாட்டு முடியும் போது வேப்பமரத்தில் இருந்து வேப்பங்காய் விழுவதற்கு பதிலாக பணம் கொட்டோ கொட்டுவென்று கொட்டுகிறது.

சிவாஜி பணக்காரர் ஆகிறார். ஆனால் அடுத்த காட்சியிலேயே அவர் ஏழையாகி கே.ஆர்.விஜயாவை கல்யாணம் செய்துக்கொள்ளும் படி காட்டுவது எடிட்டர் சரியாக வேலை பார்க்கவில்லை என்பதை காட்டுகிறது. பணக்காரர் ஆன சிவாஜி தண்ணி அடிக்கிறார். தம்மும் அடிக்கிறார். அது கே.ஆர்.விஜயாவுக்கு பிடிக்கவில்லை. சிவாஜி பேசாமல் கே.ஆர்.விஜயாவுக்கும் தம்மையும், சரக்கையும் பழக்கப்படுத்தி இருந்தால் கதை இண்டர்வெல்லிலேயே முடிந்துவிட்டிருக்கும்.

இரண்டாம் பாதியில் மனோகர் நல்லவனாக வருகிறார். திடீரென்று அவரே கெட்டவனாக மாறுகிறார். கடைசியில் மீண்டும் நல்லவனாக வருகிறார். ஒரு காட்சியில் நல்லவனும், கெட்டவனுமாக இரண்டு மனோகரும் ஒன்றாக வருகிறார்கள். இப்படி முன்னுக்கு பின் முரணாக நான் லைனராக எனக்கு பிடித்த ஹாலிவுட் இயக்குனர் கிரிஷ்டாபர் லோலன் மாதிரி படமெடுத்திருக்கிறார் இயக்குன நண்பர் டி.ஆர்.ராமண்ணா. வாசக நண்பர் அதிஷாவோ அப்படியில்லை, மனோகர் டபுள் ஆக்சன் என்று ஒரு புதிய கோணத்தை சொல்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம். ஆகமொத்தம் நம் வாழ்க்கை முக்கோணம்.

படம் முடியும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள். எனக்கு அழுகை வந்தது. ஏனென்றால் பாக்கெட்டில் வைத்திருந்த தம்மு பாக்கெட்டையும், மாணிக்சந்தையும் டிக்கெட் கிழிக்கும்போது செக்யூரிட்டி செக் செய்து பறித்துவிட்டான்.

  = = = = = = = = = =

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

முதன்முதலாக நடிகர் திலகம் தண்ணி அடிக்கிறார். சரக்கில் தண்ணி ஊற்றாமலேயே கல்பாக அடிக்கிறார். எனக்கெல்லாம் சோடாவோ, கோக்கோ இல்லாமல் சரக்கு அடிக்க முடியாது. சரக்கு அடித்ததும் காருக்கு வருகிறார். டிரைவர் ஏதோ சொல்லவருகிறார். உடனே “சொல்லாதே யாரும் கேட்டால்” என்று பாடுகிறார். டிரைவர் யாரிடமும் இவர் தண்ணியடித்ததை சொல்லவில்லை. நடிகர் திலகமும் கே.ஆர்.விஜயாவிடம் இதை சொல்லவில்லை. ஆனால் கே.ஆர்.விஜயா இந்த விஷயத்தை புத்திசாலித்தனமாக கண்டுபிடிக்கிறார். எப்படி என்பதுதான் சஸ்பென்ஸ். நானாக யூகித்துக்கொண்டேன். வாசனை வந்திருக்கும் கண்டுபிடித்திருப்பார் என்று.

நடிகர் திலகம் சிவாஜிக்கு இந்த படம் மைல்கல் என்பேன். ஏனெனில் இரண்டாம் பாதி முழுவதும் அவர் காரிலோ, டிரைனிலோ பயணம் செய்துக்கொண்டே இருக்கிறார்.

கேமிராமேன் அசத்தி இருக்கிறார். ‘ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்’ பாட்டில் புடவை கட்டிக்கொண்டு கே.ஆர்.விஜயா பாட, மற்ற பெண்கள் எல்லோரும் என்ன டிரெஸ் என்பதே தெரியாத டிரெஸ் அணிந்து ஆட, சிவந்த கண்களோடு நடிகர் திலகம் நைசாக கே.ஆர்.விஜயாவுக்கு டிமிக்கி கொடுத்து பாலாஜியோடு போய் ஒரு ‘கட்டிங்’ விட்டு வர, அனைத்தையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார் கேமிராமேன்.

சரி படத்துக்கு ஏதாவது திருஷ்டிபூசணிக்காய் உடைக்க வேண்டும் அல்லவா?

நான் 1992ல் பார்த்த தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் வயசானவராக இருந்தார். 1998ல் பார்த்த படையப்பா படத்தில் தேவர்மகனை விட ஆறுவயது கூடுதலாக இருந்தார். ஆனால் 2012ல் பார்க்கும் சொர்க்கம் படத்தில் மட்டும் முப்பது, முப்பத்தைந்து வயது வாலிபனாக வருகிறார். நியாயமாக பார்க்கப்போனால் படையப்பாவை விட 14 ஆண்டுகள் அதிகம் ஆன முதியவராக அல்லவா இருக்கவேண்டும்? இந்த லாஜிக்கை மட்டும் இயக்குனர் சரி செய்திருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும்.

 = = = = = = = = = = 

ஃபைனல் கிக் : படம் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியாது. உங்களுக்கு பிடிக்காதா என்றும் தெரியாது. பதிவு போடுவதற்காக பார்த்தே தீரவேண்டிய படம்.


11 ஜூலை, 2012

இந்த காதலுக்கு எத்தனை கோணம்?


சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து ஏதாவது ஒன்று இருக்கும்தானே? வேதாளம் சொன்ன கடைசிக் கதைக்கு விக்கிரமாதித்தனால் விடை சொல்ல முடியவில்லையாம். நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த பஞ்சாயத்து ஒன்று அப்படிப்பட்டது. கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனரோ, கூடுதல் கமிஷனர்களோ மக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறுவது ஒரு சடங்கு. அந்த சடங்கின்படி நேற்று கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் புகார்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

பரங்கிமலையிலிருந்து ஓர் நடுத்தர வயது ஆள் புகார் கொடுக்க வந்திருந்தார்.

“என்ன பிரச்சினை?” கமிஷனர் கனிவாக கேட்டார்.

“என் கூட இருந்த பொண்ணை ஒருத்தன் தள்ளிக்கிட்டு போயிட்டான்”

“கூட இருந்த பொண்ணுன்னா.. மனைவியையா?”

“இல்லை. என் மனைவியை அவன் எப்பவோ தள்ளிக்கிட்டுப் போயிட்டான்”

“அப்போ உன் கூட இருந்த பொண்ணு”

“அவனோட மனைவி”

“புரியலை”

“நான் வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்த பொண்ணை அவளோட முன்னாள் கணவன் கூட்டிக்கிட்டுப் போயிட்டான். அவ இல்லாமே என்னாலே வாழ முடியாது. நீங்கதான் பெரிய மனசு பண்ணி எங்களை சேர்த்து வைக்கணும்”

கூடுதல் கமிஷனருக்கு ‘கிர்’ரடித்திருக்கிறது. கொஞ்சம் தெளிவாக பின்கதைச் சுருக்கத்தை எடுத்தியம்புமாறு அந்த மறத்தமிழனிடம் கெஞ்சியிருக்கிறார்.

பரங்கிமலையில் வசிக்கும் அவர் இண்டீரியர் டெக்கரேஷன் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு திருமணம் ஆகியிருக்கிறது. மனைவியோடு இல்லறத்தில் இன்பமாக வாழ்ந்துக் கொண்டிருந்தவருக்கு, திடீரென ‘இடி’ விழுந்தது பக்கத்துத் தெரு இளைஞர் ஒருவரால். இளைஞரின் கவர்ச்சியில் மயங்கிவிட்ட இவரது மனைவி அவரோடு ஓடிவிட்டார்.

இனிய இல்லறம் புயலாய் தடைபட்ட விரக்தியில் வாடிய நம் ஹீரோவின் வாழ்வில் மீண்டும் தென்றல் வீசத் தொடங்கியது. பக்கத்துத் தெரு பைங்கிளி ஒன்று இவருக்கு ஆறுதலாய் அமைந்தது. அது வேறு யாருமல்ல. இவருடைய மனைவியை தள்ளிக்கொண்ட சென்ற இளைஞரின் மனைவி. எனக்கு நீ துணை. உனக்கு நான் துணை என்று பாதிக்கப்பட்ட இருவரும் இணைந்து புது அத்தியாயம் எழுதத் தொடங்கினார்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க, மீண்டும் புயல். இவர் வேலைக்குச் சென்றிருக்கும் நேரத்தில், அதே இளைஞர் பூர்வாசிரம நினைவு வந்து அவ்வப்போது வந்துச் சென்றிருக்கிறார். பைங்கிளியும் தன் முன்னாள் கணவரின் கவர்ச்சிக்கு முன்பாக மதியிழந்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் இவரும் அவருடனேயே ஓட்டம் பிடித்தார்.

அடுத்தடுத்து இரண்டு துணைகளையும் ஒரே இளைஞரிடம் பறிகொடுத்த ஆற்றாமை தாங்காமல் உள்ளூர் பஞ்சாயத்து, போலிஸ் ஸ்டேஷன் என்று தனக்கு சாத்தியப்பட்ட எல்லா இடங்களுக்கும் சென்று தன் பிரச்னையை தீர்த்துவைக்குமாறு கோரியிருக்கிறார் நம் ஹீரோ. இவருடைய கதையை கேட்ட எல்லோருமே “நீ ஹாலிவுட்லே பொறந்திருக்க வேண்டிய ஆளு” என்று பாராட்டினார்களே தவிர, தீர்வுக்கு முன்வரவில்லை. கடைசியாகதான் கமிஷனர் ஆபிஸ் கதவைத் தட்டியிருக்கிறார்.

“இப்போ என்னய்யா பிரச்னை? உன் பொண்டாட்டியை உன் கூட சேர்த்து வைக்கணுமா?” கூடுதல் கமிஷனர் கொஞ்சம் டென்ஷனாகவே கேட்டிருக்கிறார்.

ஹீரோ உடனே மறுத்திருக்கிறார். தனக்கு தன்னுடைய மனைவி வேண்டாம். அவளைவிட அவனுடைய மனைவியைதான் பிடித்திருக்கிறது. அவளோடு மட்டும் சேர்த்துவைத்தால் போதுமென கேட்டுக் கொண்டார்.

கமிஷனர் ஆபிஸே கதிகலங்கிப் போய்விட்டது. நூற்றாண்டு கண்ட சென்னை ஆணையாளர் அலுவலகம் எத்தனையோ விசித்திர வழக்குகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. ஆனால் இப்படியொரு வழக்கு வருவது வரலாற்றில் இதுதான் முதன்முறை.

சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையாக திடீரென ஒரு சுவையான ட்விஸ்ட். ஹீரோ கமிஷனர் ஆபிஸுக்குப் போயிருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட வில்லன், வள்ளி தெய்வானை சமேதரராய் திடீரென்று ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். “அவருக்கு ஏதாவது ஒண்ணு வேணும்னா, இந்த ரெண்டுலே எது இஷ்டப்படுதோ அது அவராண்ட போய்க்கட்டும்” என்று பெருந்தன்மையும் காட்டியிருக்கிறார். ஆனால் ரெண்டுக்குமே ஹீரோவைவிட வில்லனைதான் ரொம்பவும் பிடித்திருக்கிறது. ரெண்டுமே அவரோடு போக இஷ்டப்படவில்லை. ஒற்றுமையாக வில்லனோடேயே உன்னதமாக வாழ விருப்பப்படுகிறார்கள். இப்படிப்பட்ட கண்ணகிகள் இருப்பதால் இந்தியா இரண்டாயிரத்து இருபதுக்கு முன்பாகவே வல்லரசு ஆகிவிடுமென்ற நம்பிக்கை நமக்கு இயல்பாகவே பிறக்கிறது.

ஆனால், நம் ஹீரோவோ தீர்வு கிடைக்காமல் இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று ஒற்றைக்காலில் தவம் நின்றார். முக்கோணக் காதலை கேள்விப்பட்டிருக்கிறார் கூடுதல் கமிஷனர். நான்கு பேர் பங்கு கொண்டிருக்கும் இந்த விசித்திரமான காதலுக்கு எத்தனை கோணங்கள் என்று புரியாமல் தாவூ தீர்ந்துப்போய் டரியல் ஆகிவிட்டவர், இந்தப் பஞ்சாயத்துக்கு நான் தீர்ப்பினை சொல்லுவதைவிட, பரங்கிமலை உதவி கமிஷனர் தீர்வு சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இது அவருடைய ஏரியா என்று நைஸாக பாலை அந்த சைடு ஒரு தட்டு தட்டிவிட்டார்.

இன்று விடிகாலையிலேயே தினகரன் நாளிதழில் இச்செய்தியை வாசித்த பரங்கிமலை உதவி கமிஷனர், கூடங்குளத்துக்கு அந்தப்பக்கமாக எங்காவது தண்ணியில்லாத காட்டில் போஸ்டிங் கிடைக்குமாவென்று டிரான்ஸ்பருக்கு அலைந்துக் கொண்டிருப்பதாக பராபரியாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9 ஜூலை, 2012

ராட்சஷன்


இந்தளவுக்கு நெஞ்சை நாக்கால் தடவ வேண்டுமா என்ற கேள்வி இந்தக் கட்டுரையை படித்து முடித்ததும் எழாது. ஏனெனில் கமர்ஷியல் சினிமாவை சுவாசிப்பவர்கள் அனைவரும் தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி குறித்து மாதக் கணக்கில் அலுப்பில்லாமல் பேசவே செய்வார்கள்.

உலகிலேயே தொடர்ந்து 3வது  ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கப் போகிறவர், இவர் மட்டும்தான். அதனால்தான் விலை போகக் கூடிய நட்சத்திரங்கள் இல்லாத போதும் இவர் இயக்கி வரும் ‘ஈகா’ தெலுங்கு படத்துக்கு ரூ.30 கோடி வரை செலவிட்டிருக்கிறார்கள்.

எப்படியும் ‘ஈகா’வின் தமிழ் வடிவமான ‘நான் ஈ’ குறித்து அப்படம் வெளியாகும் தருணத்தில் இதே ‘தினகரன் வெள்ளி மலரி’ல் செய்தி வரத்தான் போகிறது. ஸோ, படம் குறித்த விவரங்களை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது ஓவர் டூ ராஜமவுலி.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரெய்ச்சூரில் பிறந்த இவர், வளர்ந்தது, படித்தது எல்லாம் ராஜமுந்திரி அருகிலுள்ள கோவூரில். ஆனால், கல்லூரி படிப்பை முடிக்கவில்லை. அப்பா, விஜயேந்திர பிரசாத், தெலுங்கு படங்களுக்கு கதாசிரியராக இருந்ததால் இயல்பாகவே சினிமா மீது இவருக்கு நாட்டம் பிறந்தது. குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். 1985ல் பூஜை போடப்பட்ட ‘லார்ட் கிருஷ்ணா’ படத்துக்கு இவரது அப்பாதான் கதாசிரியர். இயக்கம், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தந்தையும் இவரது மாமாவுமான ஷிவதத்தா. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் படம் நின்று விட்டது. 
பின்னர் ஒரு வருடம் வரை படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்விடம் உதவியாளராக பணிபுரிந்து விட்டு ஏவிஎம் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் சில காலம் வேலை பார்த்தார். அதன் பிறகு தன் அப்பாவிடமே 7 வருடங்கள் வரை உதவியாளராக இருந்தார். இந்த காலகட்டங்களில் சென்னையில்தான் ராஜமவுலி வசித்தார்.

அப்பாவுடன் சேர்ந்து சினிமாக்களுக்கு கதை எழுத ஆரம்பித்த இவர், தன் அப்பாவின் சார்பாக பல இயக்குநர்களிடம் கதை சொல்லியிருக்கிறார். அவை தெலுங்கில் திரைப்படமாகவும் வெளி வந்திருக்கின்றன. ஆனால், இவர் மனதில் உருவான கற்பனையின் எல்லையைக் கூட அப்படங்கள் தொடவில்லை.

இந்த வருத்தமே வெறியான போது சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இவரது குடும்பம் முடிவு செய்தது. இவரது அப்பாதான் இயக்கம். ஆனால், ‘அர்த்தாங்கி’ என்னும் அந்தப் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. கழுத்தை நெறிக்கும் அளவுக்கு கடன் சுமை. இதை அடைக்க வேண்டுமென்றால் ராப்பகலாக உழைக்க வேண்டும். அதற்கு சென்னையை விட, ஹைதராபாத்தான் சரியான இடம்.

எனவே, ஹைதராபாத்துக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது. கங்காராஜு தனது இரண்டாவது படத்தை இயக்க அப்போது முயற்சித்துக் கொண்டிருந்தார். அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். ஆனால், அந்தப் படம் தொடக்கத்திலேயே நின்றுவிட்டது. இதன் பின்னர், பழம்பெரும் தெலுங்கு இயக்குநரான கே.ராகவேந்திரராவ்விடம் கடைசி உதவியாளராக சேர்ந்தார். அப்போது சின்னத்திரை தொடர்களை அதிகமும் கே.ராகவேந்திரராவ் இயக்கி வந்த நேரம். ‘சாந்தி நிவாசம்’ உட்பட எண்ணற்ற மெகா தொடர்களில் உதவி இயக்குநராக, ஷெட்யூல் டைரக்டராக, செகண்ட் யூனிட் இயக்குநராக பணிபுரிந்தார். இவரது அசுர உழைப்பை பார்த்து ராகவேந்திரராவ் சூட்டிய பெயர்தான், ‘ராட்சஷன்’.
என்றாலும் சீனியர் உதவியாளர்களுக்கு கிடைத்த மரியாதையும், அங்கீகாரமும் இவருக்கு கே.ராகவேந்திரராவ்விடம் கிடைக்கவில்லை. மெல்ல மெல்ல சினிமா தயாரித்ததால் ஏற்பட்ட கடன் அடைந்தது.

இந்தநேரத்தில்தான் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை கே.ராகவேந்திரராவ், எழுதி தயாரித்தார். உண்மையில் அவரது ஃபர்ஸ்ட் அசிஸ்ட்டெண்ட் ஆன வர முடாபள்ளிதான், இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் இயக்கி வந்த சின்னத்திரை தொடர் ஒன்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால், சினிமா வாய்ப்பு ராஜமவுலிக்கு கிடைத்தது.

கதை, திரைக்கதை, வசனம் உட்பட சகலத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. ஆனாலும் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’, கே.ராகவேந்திரராவ் பெயரை தாங்கியே வந்தது. அத்துடன் டைரக்ஷன் மேற்பார்வை என்றும் அவர் பெயர் பொறிக்கப்பட்டது. இதனால் படம் பம்பர் ஹிட் அடித்தபோதும், ராஜமவுலிக்கு எந்த கிரெடிட்டும் கிடைக்கவில்லை.

ஆனால், கே.ராகவேந்திரராவுக்கு இவரது திறமையும், அசுர உழைப்பும் புரிந்தது. தனது மகன் சூர்ய பிரகாஷை வைத்து ஃபேன்டஸி படம் ஒன்றை இயக்க இவரை ஒப்பந்தம் செய்தார். போறாத வேளை... சூர்ய பிரகாஷ் நடித்த முதல் படமான ‘நீத்தோ’ அட்டர் ப்ளாப். எனவே உருவாக்கத்திலேயே ராஜமவுலியின் இரண்டாவது வாய்ப்பு நசுங்கியது.
ஊரெல்லாம் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை கே.ராகவேந்திரராவ், இயக்கியதாக பேச்சிருந்ததால் இவரை நம்பி படம் தர யாரும் முன்வரவில்லை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வாய்ப்புக்காக போராடினார்.

அந்த சமயத்தில்தான் ‘விஎம்சி பேனர்’ என்னும் தயாரிப்பு நிறுவனம், ஜூனியர் என்டிஆரை வைத்து ‘கொரடு’ என்னும் படத்தை தொடங்கியிருந்தது. ஆனால், படம் வளரவில்லை. பின்னர் உதயசங்கர் இயக்கத்தில் அதே புராஜக்டை ஆரம்பித்தார்கள். அதுவும் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் வழியாக தயாரிப்பாளரை சந்தித்து ஒரு கதையை சொன்னார், ராஜமவுலி. அனைவருக்கும் அந்த நெரேஷன் பிடித்திருந்தது. அப்படி உருவான படம்தான், பல ரிக்கார்டுகளை முறியடித்த ‘சிம்மாத்ரி’. உண்மையில் பி.கோபால் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பதாக இருந்த சப்ஜெக்ட் அது.

இந்தப் பட வெற்றிக்கு பிறகுதான் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை ராஜமவுலி இயக்கினார் என்பதையே உலகம் ஒப்புக் கொண்டது! மூன்றாவதாக இந்தியாவில் யாருக்குமே அறிமுகமாகாத ரெக்பி விளையாட்டை மையமாக வைத்து ‘சை’ படத்தை இயக்கினார். படம் ஹிட் என்பதுடன் உலகளவில் ரெக்பி விளையாட்டை துல்லியமாக காண்பித்த மூன்றே படங்களில் இதுவே முதன்மையானது என்ற பெருமையையும் பெற்றது.

இந்தப் படத்தின் போதுதான் தனது ஒளிப்பதிவாளரை ராஜமவுலி கண்டு பிடித்தார். அவர்தான், செந்தில்குமார். ஆந்திராவில் செட்டில் ஆன தமிழ் குடும்பத்தை சேர்ந்த அவர், பூனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர். ‘அய்தே’ அவரது முதல் படம்.

ராஜமவுலியின் தொடர் வெற்றிக்கு காரணம், டீம் ஒர்க்தான். ஆரம்பத்தில் யாரிடம் உதவியாளராக இருந்தாரோ அந்த கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்தான் இன்று வரை இவரது அனைத்து படங்களுக்கும் படத்தொகுப்பாளர். இசை, எம்.எம்.கீரவாணி என்கிற மரகதமணி. கலை ஆர்.ரவீந்தர். ஒளிப்பதிவு, செந்தில்குமார். இந்த காம்பினேஷனை இவர் மாற்றியதேயில்லை.

ப்ரீ புரொடக்ஷன் நிலையிலேயே தனது குழுவுடன் அமர்ந்து காட்சிகள் அனைத்துக்கும் ஷாட் பிரித்து விடுவார். எந்தெந்த ஷாட்டுக்கு என்னென்ன கேமரா, லென்ஸ் வேண்டும், ஜிம்மி ஜிப்பா அல்லது சாதாரண கேமராவா; ஆர்ட் டைரக்டர் என்ன செய்ய வேண்டும்; எந்த இடத்தில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்... என சகல விஷயங்களையும் அந்தந்த இலாக்காவுடன் பேசி தீர்மானித்து விடுவார். இதனால் இவரது குழுவை சேர்ந்த அனைவருக்கும் அனைத்தும் அத்துப்படி ஆகிவிடும்.

சமயங்களில் இவரது குழுவுக்குள் சண்டை வருவதும் உண்டு. ‘எமதொங்கா’வில் அப்படி கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் முட்டி மோதிக் கொண்டார்கள். எமலோகம் செட்டை அற்புதமாக ஆர்.ரவீந்தர் போட்டிருந்தார். ஆனால், செந்தில்குமார் டல் லைட்டிங் கொடுத்திருந்தார். இப்படி செய்தால் ரசிகனுக்கு, தான் அமைத்த செட் போய் சேராது என்பது ரவீந்தரின் வாதம். பிரகாசமான லைட்டிங் கொடுத்தால் ஷேடோ விழும் என்பது செந்தில்குமாரின் நியாயம். அப்போது பலூன் லைட்டிங் நடைமுறைக்கு வரவில்லை. இந்த வாக்குவாதத்தை அடுத்துதான் அந்த டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டது. யெஸ், வீட்டில் எரியும் பல்புகளை செந்தில்குமார் கூடுதலாக பயன்படுத்தினார். இதனால் நகைகளும் ‘டால்’ அடித்தன. ரவீந்தரின் உழைப்பும் ரசிகர்களுக்கு தெரிந்தது. ஷேடோவும் விழவில்லை.

இப்படி ராஜமவுலி கொடுத்த சுதந்திரத்தால் வளர்ந்ததால்தான் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இந்தியாவின் டாப் மோஸ்ட் சிஜி பட ஒளிப்பதிவாளராக கொண்டாடப்படுகிறார். ‘எமதொங்கா’, ‘அருந்ததி’, ‘மகதீரா’ என அவர் பேர் சொல்லும் படைப்புகள் ஏராளம்.

அந்தவகையில் ‘ஈகா’வும் சரிபாதி சிஜி ஒர்க் உள்ள படம்தான். சொல்லப் போனால் ராஜமவுலியின் கனவுப் படம் இது. ஆனால், இந்தக் கனவை உடனடியாக இவர் நடைமுறைப்படுத்தவில்லை.

தனது நான்காவது படமான ‘சத்ரபதி’யில் முதல்முறையாக சோதனை அடிப்படையில் சிஜி ஒர்க்கை பயன்படுத்தினார். சுறாவுடன் நாயகன் பிரபாஸ் சண்டை போடும் காட்சி அது. திரையில் அது சரியாக வரவில்லை. அன்றைய தொழில்நுட்பம் அந்தளவுக்குதான் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது என சமாதானம் அடைந்திருக்கலாம்.

அப்படி தேற்றிக் கொள்ள ராஜமவுலி விரும்பவில்லை. ஆர்ட் டைரக்டரில் ஆரம்பித்து, ஒளிப்பதிவாளர் வரை சகலரும் நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். கல்லூரி மாணவன் போல் தானும் கசடற கற்றார். அதற்கான பலனை தனது அடுத்தப் படமான ‘எமதொங்கா’வில் அறுவடை செய்தார்.

எமனது அரண்மனை அந்தரத்தில் தொங்கும். முகப்பு எருமை முகத்துடன் கம்பீரமாக இருக்கும். குறிப்பாக பாசக் கயிறை பறிகொடுத்த எமன் (மோகன் பாபு), மீண்டும் அக்கயிற்றை ஜூனியர் என்டிஆரிடமிருந்து கைப்பற்றியதும் அந்த எருமை முகம் சிலிர்த்து எழும். அட்டகாசமான சிஜி ஒர்க் அது. குறிப்பாக மறைந்த என்டிஆர் தனது பேரனுடன் டான்ஸ் ஆடும் காட்சி... செம.

இதனையடுத்து ‘விக்கிரமார்க்குடு’வை இயக்கினார். பம்பர் ஹிட். பின்னர் ‘மகதீரா’வை பிரமாண்டமாக இயக்கினார். படம், ஆல் டைம் ரிக்கார்ட். தான்,உட்பட, தனது குழுவை சேர்ந்த அனைவரும் தயாராகி விட்டார்கள். இனி கனவுப்படமான ‘ஈகா’வுக்கு போகலாம் என முடிவு செய்தார். ஆனால், இதுவரை மாஸ் நடிகர்களின் படங்களைதான் இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். ‘ஈகா’வுக்கு பெரிய நட்சத்திரங்கள் தேவையில்லை. சின்ன நட்சத்திரங்கள் போதும். எனில், அதிகம் அறியப்படாத நடிகர்களை வைத்து தன்னால் வெற்றிப் படத்தை கொடுக்க முடியுமா? பரிசோதிக்க முடிவு செய்தார். காமெடியன் சுனிலை கதையின் நாயகனாக்கி ‘மரியாத ராமண்ணா’வை இயக்கினார். படம், ப்ளாக் பஸ்டர்.

ரைட். இனி, ‘ஈகா’தான் என்று களத்தில் இறங்கி விட்டார். நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இது வில்லனுக்கு பிடிக்கவில்லை. எனவே நாயகனை கொன்று விடுகிறான். இறந்த நாயகன் ஈயாக பிறக்கிறான். வில்லனை பழி வாங்குகிறான். இதுதான் ‘ஈகா’வின் கதை. ஆனால், ஈயின் மொத்த ஆயுட்காலமே 21நாட்கள்தான். அதற்குள் சர்வ வல்லமை படைத்த மனிதனை அதனால் எப்படி பழி வாங்க முடியும்? இதைத்தான் பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகளும், படம் முழுக்க நூலாக ஓடும் சென்டிமெண்ட்டும், வலுவான ப்ளாஷ்பேக்கும் ராஜமவுலியின் அடையாளங்கள். இந்த ஏரியாவில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக் பவர் ஃபுல்லாக இருக்கும். சுருக்கமாக சொல்வதெனில் மாஸ் படங்களிலும் ஃபெர்பக்ஷனை கொண்டு வர முடியும் என்று காட்டியவர், இவர்தான். அதனால்தான் ‘தேவ் டி’ படம் வழியாக உலகெங்கும் புகழ் பெற்ற அனுராக் காஷ்யப், ‘ஈகா’வின் டிரெய்லரை எவரெஸ்ட் உயரத்துக்கு தனது டுவிட்டர் தளத்தில் புகழ்ந்திருக்கிறார்.

நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தும் திரையுலகில் டெக்னீஷியன்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ராஜமவுலியின் ‘ஈகா’வுக்காக இந்தியாவே ரத்தின கம்பளம் விரித்து காத்திருக்கிறது. ஒரு கலைஞனுக்கு கிடைத்திருக்கும் உச்சபட்ச மரியாதை இது.
 
ஒன்று மட்டும் நிச்சயம். ஜூன் மாதம் இந்திய பாக்ஸ் ஆபீஸ் அதிரப் போகிறது. சாதாரண ஈ, ஒட்டு மொத்த திரையுலகையும் புரட்டிப் போடப் போகிறது. அனைத்து ஸ்டார் நடிகர்களையும் விட, இயக்குநரே உயர்ந்தவர் என்பது நிரூபணமாகப் போகிறது.

சந்தேகமேயில்லை. எஸ்.எஸ்.ராஜமவுலி என்பது இன்று வெறும் பெயரல்ல. அது, இந்திய மாஸ் சினிமாவின் விலை மதிப்பற்ற பிராண்ட் நேம்.

- கே.என்.சிவராமன்

(நன்றி : தினகரன் வெள்ளிமலர் 
27.04.2012)

5 ஜூலை, 2012

பிழியப் பிழிய காதல்!


ஒரு கோடைக்காலத்தில், அவன் அவளை சந்திக்கிறான். மஞ்சள் வண்ண மழை ஆடையில் தேவதையைப் போல வசீகரிக்கிறாள். அடுக்கடுக்காக அழகான பொய்களை சொல்கிறாள். இருவரும் பள்ளி மாணவர்கள். அவனுக்கு அடுத்த இருக்கையில் அவள். அடுக்கடுக்காக அழகான பொய்களை சொல்வது அவளது வழக்கம்.

“நான் வேற்றுக் கிரகத்தைச் சார்ந்தவள். என்னைத் தொடுபவர்கள் எல்லாம் மறைந்து விடுவார்கள் என்பது நான் பிறந்தபோதே பிறப்பிக்கப்பட்ட சாபம். என்னை முதலில் தொட்ட என் தாய் இறந்துவிட்டாள். சில காலத்துக்குப் பிறகு என் தந்தையும் மறைந்தார்!”

மற்ற குழந்தைகள் அவளைத் தொட அஞ்சுகிறார்கள். அவனுக்கு மட்டும் அவளைத் தொட்டுப் பேச ஆசை. மழை பொழிந்த ஒரு மாலையில், மழைக்கு ஒதுங்கிய இடத்தில் முதன்முறையாக அவளை அணைத்தமாதிரியாக உட்காருகிறான். மறுநாள் அவனுக்கு பயங்கரக் காய்ச்சல். அதன்பிறகு அவளை எங்குமே காணவில்லை. மாயமாக மறைந்து விடுகிறாள்.

கால ஓட்டத்தில் ஆண்டுகள் காணாமல் போக, அவள் மீண்டும் அவனை தொடர்பு கொள்கிறாள். இம்முறை அவன் கட்டிளங்காளை. அவளோ காண்பவர் காதலிக்கும் கன்னியாக்குமரி. அவனும் மாறவில்லை, அவளும் மாறவில்லை. அவளது பொய்களும் மாறவேயில்லை. வேற்றுக்கிரவாசிகள் குறித்து இம்முறை அதிகம் பேசுகிறாள். தான் பூமியைச் சார்ந்தவள் அல்ல என்று அடித்துப் பேசுகிறாள். அவனுக்கு நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. காதலில் விழுந்தவன் பகுத்தறிவையெல்லாம் சேடு கடையில் அடமானம் வைக்கவேண்டியதுதான்.

அவள் தவிர்க்க தவிர்க்க, இவன் தவிக்கிறான். அவள் மீதான தன் காதலை ஒவ்வொரு நொடியிலும் வெளிப்படுத்துகிறான். காதல் தேவன் ஆசிர்வதித்த ஒரு காலைப்பொழுதில் அவள் உணர்ச்சிமேலிட அவன் உதட்டோடு, தன் உதட்டைப் பதிக்கிறாள். மறுநாளே அவன் மீண்டும் காய்ச்சலில் விழ, மீண்டும் அவள், அவன் வாழ்க்கையில் இருந்து காற்றைப் போல காணாமல் போகிறாள்.

எட்டு ஆண்டுகள் கழிந்தநிலையில் அவனே எதிர்பாராத நொடியில் அவள் மீண்டும் அவனை காண்கிறாள். இம்முறை, அவளுடனான அவனது தூரத்தை இராணுவக் கட்டுப்பாட்டோடு வலியுறுத்துகிறாள். முந்தைய முறைகள் போலல்லாது, அவனிடம் சொல்லிவிட்டே விலகுகிறாள்.

இவன் நெருங்க, நெருங்க அவள் ஏன் விலகிக்கொண்டே செல்கிறாள் என்பதற்கு ஒரு தமிழ்சினிமாத்தன ட்விஸ்ட் வைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் இணைகிறார்களா என்பது காதல் கோட்டை பாணியிலான பரபரப்புக் காட்சிகளின் ஊடாக சொல்லப்படுகிறது. காதல் விஷயத்தில் தமிழன், கொரியன் வேறுபாடின்றி உலகில் அனைவருமே முட்டாப்பயல்கள் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் காட்சிகள் அவை. ஷங்கர் படப்பாணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஐந்து நிமிட பிளாஷ்பேக் ஒன்றும் கச்சிதம். கமர்சியல் கலவை கலக்கலாக காக்டெயிலப்பட்ட காவியம்.

’பிட்டு’களுக்கு ஏராளமான வாய்ப்புகள். கொரியப்படமாக இருந்தும் ஒரு ‘க்ளிவேஜ்’ கூட காட்டாமல் படத்தை இயக்கியிருப்பதில் இயக்குனரின் சாமர்த்தியம் பளிச்சிடுகிறது. நம்மூர் நாளைய ஷங்கர்கள் உருவ வாகாக ஏகப்பட்ட சீன்கள், குறிப்பாக வசனங்கள்.

படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் உண்மையிலேயே ஜோடி என்பதால், நம்மூர் சூர்யா-ஜோதிகா, ’காக்க காக்க’ படத்தில் வெளிப்படுத்திய நெருக்கமான காதல் கெமிஸ்ட்ரியை இப்படத்திலும் காணமுடிகிறது. இறுதிக்காட்சியில் காதலை வெறுப்பவர்களையும் கண்ணீர்விடச் செய்யும் வசனங்கள். காதல் எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கிறது.

பனிபொழியும் நடு இரவில், அவளை அவன் அணைத்தவாறே பேசுகிறான்.

“குளிராக இருக்கிறதா?”

“நீ அணைத்துக் கொண்டிருப்பதால் இதமான சூட்டை உணர்கிறேன். உனக்கு?”

“உன்னை அணைத்துக் கொண்டிருப்பதால் கனன்று கொண்டிருக்கும் அடுப்பின் அருகில் அமர்ந்திருப்பதாய் உணர்கிறேன்”

காதல், சூடான வெப்பமாய் இருவருக்குள்ளும் பரவுகிறது. இச்சூழலிலேயே பரபரப்பான இறுதிக்காட்சியும் தொடங்குகிறது. அவளைத் தொட்ட போதெல்லாம் அவனுக்குப் பிரச்சினை. இம்முறை?


படம் : லவ் ஃபோபியா
மொழி : கொரியன்
இயக்குனர் : Kang Ji-Eun
படம் வெளியான ஆண்டு : 2006

2 ஜூலை, 2012

அமேஸிங் ஸ்பைடர்மேன்


நாமெல்லாம் அசடாக இருந்ததால்தான் சூப்பர் ஹீரோக்கள் தோன்றினார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு அசடு என்கிற நிலையில் இருந்து ஓரளவுக்கு பரிணமித்திருக்கிறோம். எதையும் தர்க்கத்தில் அடக்கி விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். எனவே முன்புபோல ஹீரோ சிறகில்லாமல் வானத்தில் பறப்பார், விமானத்தையே அசால்ட்டாக தூக்குவார், அவரது கை துப்பாக்கி, கால் பீரங்கி என்றெல்லாம் டூமாங்கோலி வெளாட்டு விளையாட முடியாது என்பதை ஹாலிவுட்காரர்கள் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் கூட சூப்பர் ஹீரோவுக்கு தேவை இருக்கிறது.

ஏனெனில் நாம் இன்னும் பயந்தாங்கொள்ளிகளாகதான் இருக்கிறோம். ரோட்டில் எவராவது மயங்கி விழுந்துக் கிடந்தால் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டே, “யாராவது சோடா எடுத்தாங்களேன்” என்று பதறிக்கொண்டுதான் இருக்கிறோம். அருகிலிருக்கும் கடைக்குப் போய் சோடா கொண்டுவந்து ஊற்றினால் போலிஸ், எஃப்.ஐ.ஆர், கோர்ட்டு என்று பிரச்சினை வருமோவென அச்சம். கொக்கரக்கோவென  நம்மை மாதிரி வெறுமனே கூவிக் கொண்டிருக்காமல் சோடா கொண்டு வருபவன் தான் சூப்பர்ஹீரோ. சுருக்கமாக சொன்னால் சாதா மனிதர்களின் இயலாமைக்கு சூப்பர் ஹீரோக்கள்தான் வடிகால்.

சூப்பர் ஹீரோவும் வேண்டும். லாஜிக் பிறழாமல் மக்கள் அவரை ஒப்புக்கொள்ளவும் வேண்டும். புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்தி, அவரை மக்களுக்குப் பிடித்து தங்கள் கல்லாவை எப்போது ரொப்புவது என்று
கொலம்பியா பிக்சர்ஸ் யோசித்திருக்கிறது. ஏற்கனவே பிரபலமாகிவிட்ட ஒரு ஹீரோவுக்கு லாஜிக்கெல்லாம் ‘செட்’ செய்துப் பார்த்தால் என்ன? எனவேதான் ஸ்பைடர்மேனை ‘ரீபூட்’ செய்திருக்கிறார்கள்.

‘ரீபூட்’ என்றால் ’ரீபோக்’ மாதிரி ஏதோ பிராண்ட் என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருந்தேன். ஏனெனில் இச்சொல்லுக்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தத்தையும், வெவ்வேறு விளக்கத்தையும் தந்து குழப்பித் தள்ளினார்கள். அண்ணன் பைத்தியக்காரன் தந்த விளக்கம்தான் துல்லியமான ஒரு தெளிவினை தந்தது. அதாவது வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா காமெடிதான் ரீபூட். “அதெல்லாம் ஒத்துக்க முடியாது. மறுபடியும் மொதல்லேருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்”. இவ்வளவு ஈஸியான விஷயத்தை ஏன் அப்படி இப்படியாக இடியாப்பச் சிக்கலாக நம் மக்கள் புரிந்துகொள்கிறார்களோ தெரியவில்லை.

படத்தின் கதை என்ன?

இப்படி ஒரு கேள்வி கேட்டு, அடுத்த நாலு பாராவுக்கு கதை சொல்லி, நாலு படம் போட்டு இப்பதிவை தேத்தும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை என்பதால், படம் பார்த்து கதையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சும்மா ஒரு சிலந்தி கடித்துவிடுவதாலேயே ஒருவன் ஸ்பைடர்மேன் ஆகிவிட முடியாது என்கிற பேருண்மையை இத்தனைகாலம் மறைத்துவைத்திருந்த ஹாலிவுட்காரர்களை என்னதான் செய்யலாம். சாதாமேன் ஸ்பைடர்மேன் ஆவதிலிருந்து, அவனது கையில் இருந்து வலை எப்படி தோன்றுகிறது, அவனது உடையின் ஸ்பெஷல் என்ன என்பது வரை எல்லாப் பழியையும் அறிவியலின் தலையில் கட்டிவிட்டு, மரத்துப் போகும் ஊசி போட்டு வலிக்காத மாதிரி நைசாக காது குத்துகிறார்கள்.

சூப்பர்ஹீரோ ஒரு மக்கள் காவலன். மக்கள் அவனைக் கொண்டாடினாலும் அவனது தனிப்பட்ட வாழ்க்கை சோகமயமானது என்றெல்லாம் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட விதிகளை எல்லாம் தூக்கி குப்பைக் கூடையில் தைரியமாக கடாசியிருக்கிறார் இயக்குனர். புது ஸ்பைடர் மேன் சலிக்க, சலிக்க காதலிக்கிறார். காலில் குண்டு பாய்ந்தால், முள் குத்தினால் தூக்கி எறிந்துவிட்டு ஓடுவதைப் போல குண்டை பிய்த்துப் போட்டுவிட்டு ஓடுவது சூப்பர் ஹீரோத்தனம். புது ஸ்பைடர் மேன் அப்படியல்ல. நொண்டிக்கொண்டே ஓடுபவரால் வில்லனின் அராஜகத்தை தடுக்க முடியாது என்கிற நிலையில், மற்றவர்களின் உதவியோடு வில்லனை முறியடிக்கிறார். எல்லாப் புகழும் ஹீரோவுக்கே என்கிற நிலை இனி இல்லை. செத்துப்போனவருக்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை, அட்சரம் பிசகாமல் கடைப்பிடிக்கும் தூய்மைவாதத்துக்கெல்லாம் முடிவு கட்டிவிடுகிறார் ஸ்பைடர்மேன். அவர் ஸ்பைடர்மேனாக இருந்தாலும் சாதாரண ஆசாபாசங்களுக்கு உட்பட்டவராக இருக்கிறார். க்ளைமேக்ஸில் அநியாயத்துக்கு ஃபீல் குட் எஃபெக்ட். வில்லன் கூட எம்.ஜி.ஆர் படத்தின் நம்பியார், அசோகன், மனோகர் கணக்காக திருந்தி நல்லவர் ஆகிவிடுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஹீரோயின் கொள்ளை அழகு. கோல்ட் ஹேர், லைட் க்ளிவேஜ் என்று அவரது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அபாரம். மற்றபடி எடிட்டர் நன்றாக எடிட் செய்திருக்கிறார். இசையமைப்பாளர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். கேமிராமேன் சூப்பராக படம் பிடித்திருக்கிறார். அனிமேஷன் வெகுசிறப்பாக அமைத்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்‌ஷன் அபாரம். வழக்கமான ஒரு சூப்பர் ஹிட் சினிமா விமர்சனத்தில் இன்னும் வேறு என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டுமென நினைக்கிறீர்களோ, அத்தனையையும் நீங்களே ஃபில்-அப் செய்து வாசித்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக இப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டர். பழைய பாடாவதி சூப்பர் ஹீரோக்களை எல்லாம் தூசு தட்டி, மீண்டும் தர்க்கரீதியாக ரீபூட்டி நிறுவ வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் மார்க் வெப். சிலந்தி மனிதன் குறித்த படத்தை இயக்கும் இயக்குனரின் பெயரிலும் ‘வெப்’ அமைந்து இருப்பது யதேச்சையான சுவாரஸ்யமாகவே இருக்கக்கூடும். இதையெல்லாம் யாராவது மெனக்கெட்டு ‘மேட்ச்’ செய்திருப்பார்களா என்ன?