ஆச்சரியத்தில்
இயல்பாக நாம் மூக்கின் மேல் விரல்வைத்து கேட்கும் எந்த ஒரு வெற்றிக்கதையின்
பின்னணியிலும் விவரிக்க முடியாத சோகமும், வலியும் இழையோடுவது வழக்கம்தான்.
சினிமாவில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய கதை என்று நாம் நினைப்பது, சிலரின்
வாழ்வில் நிஜமாக நடந்துக் கொண்டிருக்கிறது என்பது நம் கற்பனைக்கும்
சாத்தியமில்லாதது. ஜோதிரெட்டியின் கதையும் அப்படித்தான். ஒரு சாதாரணப் பெண்ணின்
வாழ்க்கைப் பயணத்தில் இத்தனை திருப்பங்களா என
இவரின் கதையைக் கேட்கும்போது வாய்பிளக்கிறோம்.
ஆந்திராவின்
வாரங்கல் மாவட்டத்தில் ஹனுமகொண்டா மண்டலத்தில் அமைந்திருக்கும் நரசிம்மலாகூடம்
என்கிற ஊரில் பிறந்தார் ஜோதிரெட்டி. நான் குழந்தைகளில் இவர்தான் மூத்தவர். அப்பா
சாதாரண விவசாயப் பணியாளர். எமர்ஜென்ஸி கால நெருக்கடியில் அவருக்கு வேலை
கிடைக்கவில்லை. குடும்பத்தை நடத்த சிரமப்பட்டவர் வெறுத்துப் ராணுவத்தில் பணிக்குச்
சேர்ந்தார். ஆனாலும் குடும்பம் மீதிருந்த பாசம் காரணமாக தன் பணியை தொடரவில்லை.
இராணுவப் பயிற்சியிலிருந்து பாதியிலேயே ஊர் திரும்பினார். குடும்ப வறுமை
தொடர்ந்தது. அம்மா இல்லாத குழந்தை என்றுகூறி அருகிலிருந்த ‘பாலசதன்’ என்கிற
ஆதரவற்றோர் இல்லத்தில் ஜோதியை சேர்த்தார் அவருடைய தந்தை.
ஐந்தாம்
வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை ஜோதி அந்த இல்லத்தில்தான்
வாழ்ந்தார். வாழ்வின் மிக மோசமான கட்டம் அது. குளிர்க்காலங்களில் போர்வைகூட
இல்லாமல் கொடிய வறுமை. ஏதேனும் அதிசயம் நிகழும், தன் வாழ்வு மாறும் என்று தினம்
தினம் கற்பனையிலேயே நாட்களை கடத்தினார். கோடை விடுமுறையின் போது குழந்தைகள் தங்கள்
ஊருக்கும், உறவினர் வீடுகளுக்கும் செல்வதுண்டு. ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட ஜோதி
தனது வீட்டுக்குச் சென்றதில்லை. வார்டனின் இல்லத்திலேயே தங்கிவிடுவார். அந்த
நாட்களின் நினைவுகள் இன்னும்கூட ஜோதிக்கு கொடுங்கனவுதான். அன்னை தெரசாவின்
வார்த்தைகளோடு அந்தநாளை நினைவுகூர்கிறார். “வறுமையோ, வேறு எந்த விஷயமோகூட இளமையில்
கொடிது அல்ல. நம்மைப் பற்றி யாருக்குமே அக்கறையில்லை என்று உணர்வதைவிட மோசமான
விஷயம் உலகில் இல்லை”
பத்தாம்
வகுப்பில் எல்லோரும் பாராட்டும் விதமாக நல்ல மதிப்பெண்களோடு தேர்ந்தார் ஜோதி.
படிப்பைத் தொடரவேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் அவரது அப்பாவுக்கு வேறு
திட்டமிருந்தது. சிறுவயதிலேயே தன் மகளை ஆதரவற்றோர் இல்லத்தில் அனாதரவாக விட்ட
குற்றவுணர்வின் காரணமாக, அவளுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமைத்துத்தரவேண்டும் என
நினைத்தார். முடிந்தவரை சீக்கிரமாக தன்னுடைய கடமைகளை முடித்தாகவேண்டும் என்று
அவருக்கு அவசரம். பதினாறு வயதிருந்தபோதே ஜோதிக்கு திருமணம் செய்வித்து நன்றாக
வாழவைக்க வேண்டுமென ஆசைப்பட்டார். அப்பாவின் ஆசைப்படியே ஜோதிக்கு திருமணம் ஆனது.
கணவர் சங்கிரெட்டி.
திருமணம்
குறித்த பெரிய ஆர்வமோ, புரிதலோ இல்லாத வயது. பதினெட்டு வயதிலேயே இரண்டு
குழந்தைகளுக்கு தாயானார் ஜோதி. துரதிருஷ்டவசமாக பிறந்த வீட்டு வறுமை புகுந்த
வீட்டிலும் இருந்தது. தன் குழந்தைகளை காப்பாற்ற சிரமப்பட்டார். மாமியாரின்
பொறுப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு, விவசாயக்கூலியாக பணியாற்றத் தொடங்கினார்.
தினமும் ஐந்து ரூபாய் கூலி. படித்த பெண் ஒருவர் தங்களோடு வேலை செய்வது, அவருடன்
பணியாற்றவர்களுக்கு அதிசயமாக இருந்தது.
1986ஆம்
ஆண்டிலிருந்து 89ஆம் ஆண்டுவரை மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்தார் ஜோதி.
படிக்கும்போது ஏதோ ஓர் அதிசயம் நிகழும் என்று தினம் தினம் அவர் எதிர்ப்பார்த்துக்
கொண்டிருந்த அதிசயம் குறித்த கனவெல்லாம் இப்போது இல்லை. ஆனாலும் விதி சிரித்தது.
இம்முறை நல்லவிதமாகவே சிரித்தது. ஜோதி எதிர்பாராத அந்த அதிசயமும் நிகழ்ந்தது. நேரு
யுவகேந்திரா திட்டம் மூலமாக அந்த கிராமத்தில் வயது வந்தோருக்கு கல்வி போதிக்கும்
மையம் ஒன்று உருவானது. அதில் பயிற்றுநராக ஜோதிக்கு வாய்ப்பு கிடைத்தது. மாதம்
நூற்றி ஐம்பது ரூபாய்தான் சம்பளம். விவசாயக் கூலிவேலையில் கிடைக்கும் அதே பணம்தான்
என்றாலும், இது அவரது படிப்புக்கு மரியாதை செய்யும் கவுரவமான வேலையாக இருந்தது.
தன்னோடு வேலை செய்தவர்களுக்கே ‘டீச்சர்’ ஆனார் ஜோதி. டீச்சர் என்பதால் கண்டிப்பு
காட்டாமல், விளையாட்டாக பாடம் நடத்தினார். நல்ல பலன். ஓராண்டு கழித்து ஆய்வுக்கு
வந்த குழுவினர் ஆச்சரியப்பட்டார்கள். ஜோதியின் தன்னார்வத்தையும், அர்ப்பணிப்பையும்
பாராட்டும் வகையில் ஹனுமகொண்டா மண்டலத்துக்கே அவரை பயிற்றுநராக தரம்
உயர்த்தினார்கள்.
இந்தப்
பதவிக்கு உயர்ந்தபிறகு வாரங்கல் மாவட்டம் முழுக்க அவர் பயணிக்க வேண்டியிருந்தது. பல்வேறு
மனிதர்களை சந்தித்துப் பேசியபோது, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ‘கல்வி’ என்பது
எத்தனை மகத்தான முன்னேற்றத்தை ஏற்படுத்துமென கண்டுகொண்டார். தானும் இனி முன்னேற
வேண்டுமானால், கல்விரீதியாக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று
உணர்ந்தார். அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும்,
பட்டமேற்படிப்பையும் முடித்தார். பி.எட் முடித்து அரசுப்பணியில் ஆசிரியராக
வெற்றிகரமாக சேர்ந்தார்.
மிக
சுலபமாக அவரது இந்தப் பயணத்தை வார்த்தைகளில் கடந்துவிட்டோம். ஒரு குக்கிராமத்துப்
பெண், தன் கிராமத்தை விட்டு வெளியே வந்து பணிக்காக தங்குவதும், கணவர்-குழந்தைகள்
என்று குடும்பத்தையும் கவனித்துக் கொள்வதையும் வெறுமனே வெற்றியாகவோ, சாதனையாகவோ
சொல்லிவிட முடியாது. இவற்றைத் தாண்டிய வார்த்தைகள் தேவை. ஜோதியின் கதை அவர்
ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததோடு முடிந்துவிட்டால், மிகச்சாதாரண வெற்றிக்கதைகளில்
ஒன்றாக சேர்ந்திருக்கும். ஆனால் இன்னும் தொடர்கிறது.
ஜோதியின்
உறவினர்களில் ஒருவர் அமெரிக்காவில் இருந்தார். அமெரிக்க வருமானம் அந்த குடும்பத்தை
எப்படி தரமுயர்த்தியது என்பதை நேரில் கண்டார். உறவினரின் குழந்தைகளுக்கு நல்ல
கல்வியும், வாழ்க்கைத் தரமும் கிடைத்தது. தன் குழந்தைகளுக்கும் அதை
வழங்கவேண்டுமென்ற ஆசை ஜோதியின் நெஞ்சில் தீயாய் பற்றியெரியத் தொடங்கியது.
கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார். அமெரிக்கா செல்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம்
சேர்க்கத் தொடங்கினார். ஆனால் விசா கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை. எப்படியோ
அடித்துப் பிடித்து ‘விசா’ வாங்கி, சொற்பப் பணத்தோடு அமெரிக்கா பறந்தார்.
அமெரிக்கா சென்றவுடன் தான் தெரிந்தது, அங்கே வாழ்வது அத்தனை சுலபமல்ல. யாரெல்லாம்
தன்னை ஆதரிப்பார்கள் என்று நினைத்து அமெரிக்காவுக்குப் போனாரோ, அவரெல்லாம் கைகழுவி
விட்டார்கள்.
கையிருப்புக்
கறைந்துக் கொண்டிருந்த நேரத்தில், நியூஜெர்ஸி நகரில் ஜோதிக்கு வேலை கிடைத்தது. ’மூவி
டைம்’ என்கிற வீடியோ கடையில் விற்பனைப் பணி. ஒரு குஜராத்திக் குடும்பத்தில்
‘பேயிங் கெஸ்ட்’ ஆக தங்கினார். வீடியோக் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது,
வாரங்கல்லைச் சேர்ந்த ஒரு இந்தியர் பழக்கமானார். ஜோதியின் கதையைக் கேட்ட அவர்,
தன்னுடைய தம்பிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார். சி.எஸ்.அமெரிக்கா
என்கிற நிறுவனத்தில் பயிற்றுநராக பணியாற்ற, ஜோதியின் பொருளாதாரக் கனவுகள் நிஜமாகத்
தொடங்கின. சிறிது காலத்திலேயே ஐ.சி.எஸ்.ஏ என்கிற பெரிய நிறுவனம் தனது கதவுகளை,
கவர்ச்சிகரமான சம்பள உறுதியோடு ஜோதிக்கு திறந்து வைத்தது. எல்லாப் பிரச்சினைகளும்
தீர்ந்தது என்று நிம்மதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு அடுத்து ஒரு திடீர்
இடி.
அவரது
விசா பணியாற்றுவதற்கு அங்கீகரிக்கப் படாதது என்பதால் எச்-1 விசா வாங்கும்படி
நிறுவனம் வற்புறுத்தியது. எச்-1 விசா சுலபமாக கிடைக்கவில்லை என்பதால் நிறுவனத்தில்
இருந்து ஜோதி வெளியேறினார். மீண்டும் நாட்டுக்கு திரும்புவதை விட எச்-1 விசாவை
போராடி வாங்குவதையே அவர் விரும்பினார். ஒரு மணி நேரத்துக்கு ஐந்து டாலர் சம்பளம்
கிடைக்கும் சிறு சிறுவேலைகளை செய்தார். தன்னுடைய விசாவை உறுதியாக்க மெக்ஸிகோ வரை
அவர் செல்ல வேண்டியிருந்தது. இந்த அலைச்சல்தான் ஜோதியை ஒரு நிறுவனம் துவக்க
வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கியது. அமெரிக்காவில் விசா பிரச்சினைகளால்
அவதிப்படும் வெளிநாட்டவருக்கு உதவி, அதன் மூலம் சிறு கமிஷனை பெறும் ஒரு நிறுவனத்தை
உருவாக்கினால் என்ன என்கிற ஐடியா அவருக்கு தோன்றியது. ‘கீ சொல்யூஷன்’ நிறுவனம்
உருவான கதை இதுதான். ‘தீர்வுகளுக்கு சாவி’ என்கிற பெயர் பொருத்தமானதுதான் இல்லையா?
2000ஆம்
வருடம் மே மாதம் அமெரிக்காவுக்கு திரும்பிய ஜோதி, 2001 செப்டம்பரில் தன்
நிறுவனத்தைத் தொடக்கினார். சாஃப்ட்வேர் தொழில் தெரிந்த தன்னுடைய உறவினர்
ஒருவரையும் பங்குதாரர் ஆக்கி ‘கீ சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்’ என்கிற பெயரில் தொழிலை
விரிவுப்படுத்தினார். இரட்டை கோபுரத் தாக்குதலால், செப்டம்பர் 2001 அமெரிக்காவே
அலறிய மாதம். ஆனால் அம்மாதத்தில் தொழில் தொடங்கி, மிகக்குறைந்த கால அவகாசத்தில்
ஜோதி உயர்ந்தார். அவரது கனவுகள் ஒவ்வொன்றாக நனவாகத் தொடங்கியது. தன்னுடைய
குழந்தைகளுக்கு அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி வழங்க
முடிந்தது. இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
அமெரிக்க
வாழ்க்கை அமைந்துவிட்டாலும் ஜோதிக்கு தன்னுடைய வேர்களை மறக்கமுடியவில்லை. வருடத்துக்கு
ஒருமுறையாவது இந்தியாவுக்கு வருகிறார். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நேரில்
செல்கிறார். பொருள் உதவி செய்கிறார். இவரது கதையை தங்கள் மாணவ, மானவிகளிடம் நேரில்
சொல்லவைக்க ஆந்திர கல்லூரிகள் போட்டாபோட்டி போடுகிறது. இந்தியப் பெண்களுக்கு கல்வி
அடிப்படையில் உதவும் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பினை உருவாக்குவது அவரது இன்றைய லட்சியம்.
விடாப்பிடியாக தான் விரும்பியதை சாதித்தவர், லட்சியத்தை எப்பாடு பட்டாவது
நிச்சயமாக அடைவார். ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் ஜோதியின் வாழ்க்கையை படிக்க
வேண்டும். ஏனெனில் அவர்களுக்கான படிப்பினை இவரது வாழ்க்கையில் இருக்கிறது.
(நன்றி : புதிய தலைமுறை)
(நன்றி : புதிய தலைமுறை)