1 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் : சூதாட்டம்

அந்த குறுகிய சந்திப்பில் குறைந்தது ஆயிரம் பேர் குழுமியிருந்தார்கள். சோகம், கோபம், ஆவேசம், வெறி, விரக்தியென்று விபரீதமான உணர்வுகள். கூட்டத்தை விலக்கி மெதுவாக ஒரு வெள்ளைநிறக் கார் உள்நுழைகிறது. கார் நின்றதுமே இறங்குபவர்கள் எல்லாரும் வெள்ளுடையும், தலையில் வெள்ளைக் குல்லாவும் அணிந்திருக்கிறார்கள். ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கூட்டம் அமைதியாகிறது. யாராவது விபரீதமாக நடந்துக் கொள்வார்களோ என்று கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் அச்சம். அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்று காவலுக்கு நின்ற காவலர்களுக்கும் பயம். கிட்டத்தட்ட வன்முறைச் சூழல். ம்ஹூம். அச்சப்படுவது மாதிரி ஏதும் நடந்துவிடவில்லை. மாறாக அவர்களை வாழ்த்தி கோஷங்கள்தான் முழங்கப்பட்டது. பளீரென உதயசூரியனால் விடிகாலை காரிருள் விலகி ஒளிவெள்ளம் பாய்வது மாதிரி, கூட்டத்தில் வார்த்தைகளில் விவரிக்க இயலா சமத்துவ உணர்வு மேலெழுந்தது. மரியாதையாக அவர்களுக்கு அந்த கருப்புநிற கேட் திறந்துவிடப்பட்டது. கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளே சென்றார்கள்.

கமலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன பிரச்சினை ஏற்பட்டுவிட முடியும்? கமலைப் போய் இஸ்லாமியர்கள் எதிரியாக கருத முடியுமா? 
தமிழகம் மதச்சார்பு கொண்ட மாநிலமாக மாறிவிட்டது என்று கமலோ அல்லது வேறு யாரோ நினைத்தால் அதைவிட பெரிய பைத்தியக்காரத்தனம் வேறு எதுவுமில்லை. ஆயிரம் ’அம்மா’க்கள் தோன்றினாலும் இது தமிழர் தந்தை வாழ்ந்த மண். அவரிடம் சாமானியத் தமிழர்கள் எதை கற்றார்களோ இல்லையோ, சகிப்புத்தன்மையை கற்றிருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பெரியார் தமிழகத்தை மதவெறி சக்திகளிடமிருந்து காப்பார். திராவிடர் கழக அனுதாபியான கமலுக்கும் இது நிச்சயம் தெரியும். “இங்கிருந்து வெளியேறி விடுவேன்” என்று அவர் அன்று மிரட்டியது சமநிலை குன்றிய ஒருமாதிரியான சுயபச்சாதாபத்தில்தான். 
அன்று மாலை கமல் வீடு முன்பாக திரண்டிருந்த கூட்டத்தில் நானும் நண்பர்களோடு இருந்தேன். கமல் ரசிகன் என்கிற முறையில் அவரது சோகம் என்னையும் சோகப்படுத்தி இருந்தது. இரவு எட்டரை மணிவாக்கில் கருப்புச் சட்டையில், போதுமான மேக்கப்பில் பால்கனியில் கமல் தோன்றினார். பரவசமான அந்த நிமிடங்களை என்னவென்று வர்ணிப்பது? எல்டாம்ஸ் சாலை முழுக்க ஒலித்த ‘வாழ்க’ கோஷம் போயஸ் தோட்டத்தை எட்டியிருக்கும். அவர் அதட்டினால் கூட்டம் அடங்கியது. கைத்தட்டலையும், விசிலையும் எதிர்ப்பார்த்து அவரது பேச்சில் சிறு இடைவெளி கொடுத்தால், அதை உணர்ந்துக்கொண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. கூடியிருப்பவர்கள் தன்னிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப தன்னுடைய பிரத்யேக ஸ்டைலை காட்டினார் கமல். சட்டென்று காலை ஒரு திண்டின் மீது வைத்து, கால்முட்டியில் ஊன்றி, கையை கன்னத்தில் வைத்து அவர் கொடுத்த ‘போஸ்’ ஒன்றே போதும். அள்ளியது விசில். “என்னுடைய ரசிகர்களாக இஸ்லாமிய சகோதரர்களும் இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு ஒரு ‘கேப்’ கொடுக்க, அதை உணர்ந்து கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய தோழர்கள் ஒவ்வொருவராக “நானும் இஸ்லாமியன்தான்” என்று குரல் கொடுத்துக் கொண்டே கை உயர்த்தினார்கள். ஆயிரக்கணக்கானோரை அசால்ட்டாக ரிங்மாஸ்டராக அன்று வேலை வாங்கினார் கமல். மணிரத்னத்தின் ‘இருவர்’ படத்தில் மோகன்லால் பால்கனி வழியாக ரசிகர்களை சந்திக்கும் காட்சியை ஒத்த காட்சி அது.

விஸ்வரூபம் படம் தொடங்கியதிலிருந்து, அது தொடர்பான இன்றைய நிகழ்வுகள் வரை வரிசைக்கிரமமாக யோசித்துப் பாருங்கள். ஒரு க்ரைம் தில்லர் நாவலை வாசிப்பதைப் போன்ற சுவாரஸ்யம் கிடைக்கும். தயாரிப்பு கை மாற்றம், டி.டி.எச். ரிலீஸ், தியேட்டர் அதிபர்களோடு மோதல், டி.டி.எச்.வாபஸ், இஸ்லாமியர் எதிர்ப்பு, அரசாங்கம் தடை, நீதிமன்றத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர்கள் ஒரு சினிமாவுக்காக காரசார மோதல், தடை நீக்கம், தடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை, அரசியல் சினிமா பிரமுகர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு, கமல் ஜெ தனிப்பட்ட மோதல் மாதிரியான தோற்றம், வெளியான இடங்களிலெல்லாம் வரலாறு காணாத வரவேற்பு, அகில இந்தியப் பிரச்னையாக உருமாறுதல், இந்தி ரிலீஸ், மீண்டும் பேச்சுவார்த்தை என்று இதுவரை நடந்தவையே கன்னித்தீவின் தொடர் சுவாரஸ்யத்தை மிஞ்சுகிறது. விகடனோ, குமுதமோ உடனடியாக கமலை அணுகி ஒரு ‘மினித்தொடர்’ எழுத ஏற்பாடு செய்தால் தமிழ்நாடே அதிரும்.
விஸ்வரூபம் ஒரு கலைப்படைப்பு. கலைஞனின் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றெல்லாம் நாம் நினைக்கவில்லை. சினிமா என்பது பிரதானமாக வியாபாரம். வியாபாரி தனக்குக் கிடைக்கும் கூடுதல் லாபத்துக்காக ‘கட்டிங்’ கூட கொடுக்க வேண்டியிருக்கும். பாலிவுட்டில் இது ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. நூறு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படம் என்பது எத்தனை பேரின் கண்ணை உறுத்தியிருக்கும்? இனி தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் ‘கட்டிங்’குக்காகவே தங்கள் பட்ஜெட்டில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டியிருக்குமென தோன்றுகிறது.

இந்த ஒட்டுமொத்த விஸ்வரூப விவகாரத்தில் இஸ்லாமியர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. முன்பாக துப்பாக்கி விவகாரத்திலும் திரைமறைவாக ஏதோ கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும், அது சரிபடாத காரணத்தாலேயே இஸ்லாமியர்களது உணர்வுகளை தூண்டிவிட்டு மதப்பிரச்சினையாக மாற்றினார்கள் என்றும் சில சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள். ஒரு சில விஷமிகளின் சுயநலத்துக்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் கெட்டப் பெயர் சம்பாதிக்க வேண்டியிருப்பது வேதனையான நிகழ்வு. தகப்பன் மகள் உறவை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசக்கூடிய ஒருவர் எப்படி அன்பைப் போதிக்கும் புனித மார்க்கமான இஸ்லாத்துக்கு விசுவாசமாக இருக்க முடியும்? இவர்களெல்லாம் தங்கள் பிரதிநிதிகள், தங்கள் சுயமரியாதையை காக்க போராடுகிறார்கள் என்று இஸ்லாமியர்கள் நம்பினால் அதைவிட பெரிய கொடுமை வேறெதுவுமில்லை. தங்களுக்குள் வளர்ந்துவிட்ட கருப்பு ஆடுகளை இனங்கண்டு இஸ்லாமியர்கள் ஒதுக்க வேண்டிய நேரமிது. இல்லையேல் மும்பையைப் போல எப்போதும் மதரீதியான பதட்டம் நிலவக்கூடிய அபாயச்சூழலுக்கு நம் அமைதிப்பூங்காவும் ஆட்படுத்தப்பட்டு விடும்.

கமலும் சும்மா இல்லை. எப்போது படம் எடுக்கும்போதும் ஏதேனும் சர்ச்சையை கச்சை கட்டிக் கொள்வது அவரது வாடிக்கை. மதரீதியான எதிர்ப்பு தோன்றியதுமே, சம்பந்தப்பட்டவர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி, சமரசப்படுத்தி அமைதியாக படத்தை வெளியிட்டிருக்க முடியும். கமல் ரசிகன் என்கிற முறையில் அவரது படம் யாருடைய வயிற்றெரிச்சலையோ கொட்டிக்கொண்டு வசூல்மழை பொழிவதில் நமக்கும் உடன்பாடில்லை.
 மடியில் கனம் இருப்பதால்தான் அவருக்கு வழியில் பயம். தமிழுக்குப் பிறகு வெளியிடப்போகும் விஸ்வரூபத்தின் இந்தி வடிவத்துக்கு ஏன் முதலில் தணிக்கைச் சான்றிதழ் வாங்கினார்? ஏனெனில் தமிழ் திரைப்படங்களுக்கான தணிக்கை கொஞ்சம் கறாரானது. இதே படத்தின் இந்திவடிவம் கொஞ்சம் தாராளமாக தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வாங்கிவிட்டால், அதை பின்பற்றுவதைத் தவிர தமிழ் தணிக்கையாளர்களுக்கு வேறு மார்க்கமில்லாமல் போய்விடும். இந்தியத் துணைக்கண்ட இஸ்லாமியர்களின் மனவோட்டமும், தென்கிழக்கு ஆசிய இஸ்லாமியர்களின் மனவோட்டமும் அடிப்படையில் வேறு வேறானது. எனவேதான் மலேசியாவில் முதலில் படத்தை போட்டுக்காட்டி, இஸ்லாமியர்கள் இப்படத்தை ஆட்சேபிக்க ஒன்றுமில்லை என்று நிறுவ முயன்றார். இருபத்தைந்தாம் தேதி பட வெளியீடு என்று அறிவித்துவிட்டு, திரையரங்குகளில் முன்பதிவும் ஆரம்பித்துவிட்டு கடைசிக்கட்டத்தில் இருபத்தியொன்றாம் தேதி இஸ்லாமிய அமைப்புகளுக்கு படம் போட்டுக் காட்டுகிறார். நீதிமன்றத்துக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ போய் தடை வாங்கிட அவர்களுக்கு போதுமான அவகாசம் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இருந்ததைப் போல தோன்றுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நீள்வதாகவும், பாதி படம்தான் முதல் பாகமாக இப்போது வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இதில் இந்திய முஸ்லிம்களைப் பற்றி ஆட்சேபகரமாக எதுவுமில்லை, ஏனெனில் கதை அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் நகர்கிறது என்று சமாதானமும் சொல்கிறார்கள். ஆனாலும் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படும் மீதி படம் இந்தியாவில் நடப்பதாக இருக்கிறது. அப்போது இந்திய முஸ்லிம்கள் சம்பந்தப்படாமல் கதை நகர வாய்ப்பேயில்லை. இப்போது இஸ்லாமியர் அச்சப்படும்படியான விஷயங்கள் அதில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இதனால்தானோ என்னவோ படத்தை இரண்டு பாகமாக கமல் வெளியிடுகிறார். முதல் பாகம் ஓடி வெற்றியடைந்துவிட்டால், அதன் தாக்கத்திலேயே இரண்டாம் பாகத்தை பிரச்சினையின்றி வெளியிட்டுவிடலாம் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்புமே ஆடம்பரமான கேசினோ அரங்கில் அமர்ந்து சூதாட்டம் ஆடுவதைப் போன்ற சித்திரமே மனதில் எழுகிறது. எதிரில் அமர்ந்திருப்பவனின் கரங்களில் இருக்கும் மூன்று கார்டுகள் என்னவாக இருக்குமென்று யூகித்து ஆடவேண்டும். எப்போதுமே ‘ஏஸ்’ கிடைத்துவிடுவதில்லை. ஒரு கட்டில் நாலு ‘ஏஸ்’ தான் இருக்கமுடியும். நிகழ்தகவு அடிப்படையில் சிந்தித்து யோசித்து விளையாடுபவன்தான் சூதாட்டத்தில் கில்லாடி.
 விஸ்வரூபம் விஷயத்தில் கலைஞரின் கையில் இருந்த மூன்று கார்டுமே ‘ஏஸ்’. மதப்பிரச்சினை, அரசுத்தடை என்று மாநில அளவில் இருந்தப் பிரச்சினையை அவரது அறிக்கை தேசியப்பிரச்சினையாக மடைமாற்றி விட்டது. போதாக்குறைக்கு கமலுக்கும், முதல்வருக்கும் முன்விரோதம் என்று போகிற போக்கில் ஒரு திரியையும் கொளுத்திப் போட்டிருக்கிறார். ஊடகங்களில் கிசுகிசு மாதிரியாக கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருந்த விஸ்வரூபத்தை ஜெயாடிவி அடிமாட்டு விலைக்கு வாங்க முயற்சித்தது என்கிற விவகாரத்தையும் நோண்டினார். காலையில் கமலின் உருக்கமான பேட்டி, மாலையில் கலைஞரின் விவரமான அறிக்கை என்று அந்த நாளிலேயே கமல் தரப்பு ‘ஸ்ட்ராங்’ ஆனது. கமலுக்கு ஆதரவான அனுதாப அலை தமிழ் சினிமாவுலகில் மட்டுமன்றி, மக்கள் மத்தியிலும் வெகுவாக எழும்பத் தொடங்கியது. உச்சநீதிமன்றத்தில் காவிரி விஷயத்தில் தமிழகம் ‘கப்பு’ வாங்கிய செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு, விஸ்வரூபம் பிரதானப் பிரச்சினையாக மக்களின் முன்பு ஊடகங்களால் முன்வைக்கப்பட்டது. இந்த பரபரப்பு பரவி பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களும், ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் கமலுக்கு ஆதரவாக திரண்டார்கள். மத்திய அமைச்சரே விஸ்வரூபம் பற்றி பேசவேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டது. கலைஞரின் அறிக்கையால் கமலுக்கு பெருவாரியான ஆதரவு திரண்டது. அதே நேரம் கலைஞருக்கும் அரசியல் மைலேஜ் கூடுதலானது. அதிமுக ஆட்சிக்கு எதிரான மனோபாவம் பரவுவது அவரது அரசியலுக்கு லாபம்தானே.. அதுவும் யாரும் எதிர்பாராத ஒரு பிரச்சினையில்? 
கலைஞர் எதிர்ப்பார்த்த மாதிரியே பூனைக்குட்டி வெளியே வந்தது. அதுவரை விஸ்வரூபம் குறித்து எதையும் கண்டுக்கொள்ளாத மாதிரி இருந்த முதல்வர் ஜெயலலிதா தன்னை தற்காத்துக்கொள்ள பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஜெயலலிதாவின் கருத்துகள் ஓரளவுக்கு அவர் தரப்பு சேதாரத்தைக் குறைத்திருக்கிறதே தவிர, முற்றிலுமாக நிலைமையை மாற்றிவிட முடியவில்லை. வேறு வழியின்றி பதினைந்து நாள் தடை முடிந்ததும் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். ஒருவேளை தடையை நீடித்தால் கலைஞர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்கிற எண்ணம் மக்களுக்கு வலுப்பட்டு விடும்.

தமிழ்நாட்டைத் தவிர உலகெங்கும் வெற்றிகரமாக விஸ்வரூபத்தை வெளியிட்டு விட்டார். கமலால் செலவு செய்யமுடியாத கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு தமிழக அரசும், சில இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு விளம்பரத்தைத் தேடி தந்திருக்கின்றன. வழக்கமான கமல் படங்களுக்கு கிடைக்கும் ஆதரவை விட பன்மடங்கு ஆதரவை ரசிகர்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைய ரவுண்டில் கமல் வென்றிருப்பதாகவே தெரிகிறது.

29 ஜனவரி, 2013

சீத்தம்மா வாக்கிட்லோ சிறீமல்லி செட்டு

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கில்கொத்த பங்காரு லோகம்வெளிவந்தது. ப்ளாக் பஸ்டர் ஹிட். புதுமுக இயக்குனரான ஸ்ரீகாந்த் அடாலாவுக்கு ஏகத்துக்கும் கிராக்கி. டோலிவுட்டின் எல்லா முன்னணி நடிகர்களும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட, ஸ்ரீகாந்தோ எங்கிருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை.

முன்பாக ஒரு சிறிய ப்ளாஷ்பேக். 2004ல் ‘ஆர்யா’ திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். சுறுசுறுப்பான இவரது வேலையைப் பார்த்த தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. படம் முடிந்ததுமே ஒன்பதாயிரம் ரூபாயை அட்வான்ஸாக ஸ்ரீகாந்திடம் தந்தார். “ஒரு நல்ல கதை ரெடி பண்ணிக்கிட்டு வாப்பா” என்றார். பிறகு ஸ்ரீகாந்த் சொன்ன கதைகள் ராஜூவுக்குப் பிடித்திருந்தாலும், அவர் மேலும் திரைமொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். எனவே ‘பொம்மரிலு’ படத்தின் போது துணை இயக்குனராக ஸ்ரீகாந்தை பணியாற்றச் சொன்னார். அது முடிந்ததும் ஸ்ரீகாந்த் சொன்ன கதைதான் ‘கொத்த பங்காரு லோகம்’. இப்போது ராஜூவுக்கு ஸ்ரீகாந்த் மீது முழு நம்பிக்கை பிறந்திருந்தது. அவரது நம்பிக்கையை ஸ்ரீகாந்த் காப்பாற்ற, படம் வெளியாகி ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பு. ஆந்திரத் திரையுலகின் கவுரவமான நந்தி விருதுகளும், ஃபிலிம்பேர் விருதுகளும் ஸ்ரீகாந்தின் வீட்டு வரவேற்பறையை அலங்கரித்தன.

மாபெரும் வெற்றிக்குப் பிறகுதான் மீண்டும் ஸ்ரீகாந்த் காணாமல் போனார். பொதுவாக இதுபோல முதல்பட வெற்றியை மூலதனமாகக் கொண்டு அட்வான்ஸ் வாங்கிபோட்டு கல்லா நிரப்புவதுதான் எல்லோருடைய வழக்கமும்.
 இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியுலகத்துக்கு வந்தார். இப்போது அவரிடம் இன்னொரு ‘ஸ்க்ரிப்ட்’ இருந்தது. நேராக தனக்கு வாழ்வளித்த தயாரிப்பாளர் தில் ராஜூவிடமே மீண்டும் போனார். கதையை சொன்னார். அதுதான் ‘சீத்தம்மா வாக்கிட்லோ சிறீமல்லி செட்டு’ (தமிழில் மொழிபெயர்த்தால், சீதா வீட்டு வாசலில் சிறுமல்லி செடி). தயாரிப்பாளருக்கு ஓக்கே. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். தெலுங்கில் கடைசியாக இதுபோல பெரிய ஹீரோக்கள் இருவர் இணைந்து நடித்து இருபது ஆண்டுகளாகிவிட்டது.

நேராக விக்டரி வெங்கடேஷிடம் போய் கதையை சொன்னார். உலகிலேயே அதிக ஹிட்டுக்கள் கொடுத்த ஹீரோ வெங்கடேஷ்தான் (ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹிட்). வெங்கடேஷுக்கு கதை பிடித்துப் போனது. இன்னொரு ஹீரோவாக பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்தால் நன்றாக இருக்குமென்று வெங்கடேஷ் விருப்பப்பட்டார். விக்டரி ஸ்டாரும், பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று டோலிவுட் பரபரப்பானது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, திடீரென்று பவன்கல்யாண் இப்படத்தில் நடிக்க மறுத்தார்.
 பொன் வைக்கும் இடத்தில் பூவை வைக்க ஸ்ரீகாந்துக்கு விருப்பமில்லை. பெரிய ஹீரோக்கள் இணையாவிட்டால் இந்தப் படமே எடுக்க வேண்டாம் என்று வைராக்கியமாக இருந்தார்.

ஒருநாள் மகேஷ்பாபுவோடு யதேச்சையாக தயாரிப்பாளர் தில் ராஜூ பேசிக்கொண்டிருந்தார். அப்போது இந்த பிராஜக்ட் பற்றிய பேச்சு வந்தது. பவன் நடிக்க மறுத்துவிட்டதால் படம் அப்படியே நின்றுபோய்விட்டது என்று ராஜூ வருத்தப்பட, மகேஷ்பாபு கதையை கேட்டுவிட்டு “நான் வேண்டுமானால் நடிக்கட்டுமா?” என்று பெருந்தன்மையாக முன்வந்தார். டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் தானே முன்வந்து இதுபோல கேட்டதை ராஜூவால் நம்ப முடியவில்லை. ஆனால் மகேஷ்பாபு ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்தார். “இரண்டு பெரிய நட்சத்திர நடிகர்களை வைத்து படமெடுக்கிறீர்கள். பட்ஜெட் எகிறும். எனவே இப்போது மார்க்கெட்டில் எனக்கு தரும் சம்பளத்தில் பாதி சம்பளம் மட்டுமே நீங்கள் எனக்கு தரவேண்டும். அதற்கு மேல் ஒரு பைசா கொடுத்தால் கூட நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்”. பழம் நழுவி பாலில் விழுந்தால் தயாரிப்பாளர் வேண்டாமென்றா சொல்வார்? 
உடனடியாக விஷயம் வெங்கடேஷின் கவனத்துக்குப் போனது. “எனக்கு தம்பியாக நடிக்க மகேஷ் ஒப்புக்கொண்டாரா?” என்று உணர்ச்சிவசப்பட்டவர், பதிலுக்கு அவரும் ஒரு கண்டிஷன் போடுகிறார். “மகேஷைப் போலவே எனக்கும் பாதிசம்பளம்தான் தரவேண்டும்”. இம்முறை பழத்தோட்டமே பாலில் விழுகிறதே என்று ராஜூவுக்கு நம்பமுடியாத அதிர்ச்சி.

இரண்டு ஹீரோக்கள் நடித்தாலும், டைட்டில் ரோல் ஹீரோயினுக்குதான். இருந்தும் டைட்டிலை மாற்றச்சொல்லி இருவருமே அடம்பிடிக்கவில்லை. ஹீரோ ஓக்கே. அடுத்து ஹீரோயின்கள். மகேஷ்பாபுவோடு அப்போது ‘தூக்குடு’ படத்தில் சமந்தா நடித்துக் கொண்டிருந்தார். எனவே இதிலும் அவரையே ஜோடியாக்கிவிட்டார்கள். டைட்டில் ரோலான சீதாவாக நடிக்க யாரை பிடிப்பது என்று தேடுதலை தொடங்கினார்கள். நயன்தாரா ரெண்டரை கோடி கேட்டாராம். பூமிகா, அனுஷ்கா, ஸ்நேகா என்று பலரையும் முயற்சித்தார்கள். மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடித்தால், பின்னர் பாலகிருஷ்ணா மாதிரி ஹீரோக்களுக்கு கூட அக்கா, அண்ணியாகதான் நடிக்கக் கூப்பிடுவார்கள் என்று பலருக்கும் அச்சம். த்ரிஷாவின் பெயர்கூட ஆரம்பத்தில் அடிபட்டது. ஒருவழியாக அமலாபால்தான் சீதா என்றார்கள். அவரும் இல்லை என்றானபோது அஞ்சலி, வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

ஹீரோ, ஹீரோயின்கள் ஒருவழியாக இறுதி செய்யப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கியதும் இன்னொரு பிரச்னை. வெங்கடேஷுக்கும், மகேஷுக்கும் அப்பாவாக நடித்த பிரகாஷ்ராஜுக்கு தயாரிப்பாளரோடு ஏதோ பிரச்னை. நடிக்கமாட்டேன் என்று திடீரென்று முறுக்கிக்கொண்டு அவரும் கிளம்பிவிட தலைமேல் கைவைத்து உட்கார்ந்துக் கொண்டார் இயக்குனர் ஸ்ரீகாந்த். பிரகாஷ்ராஜ் கேரக்டரில் அனுபம்கெர் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. பின்னணியில் என்னானதோ, ஏதானதோ பிரகாஷ்ராஜ் முறுக்கிக் கொண்டார் என்று சொல்லப்பட்டது பொய் என்று தயாரிப்பாளர் அறிவிக்க.. கலாட்டா கல்யாணம் மாதிரி இது ஒரு கலாட்டா சினிமா.

போனவருடம் செப்டம்பரில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். சமந்தாவுக்கு ஏதோ சருமநோய் என்று படப்பிடிப்பு தள்ளிப்போனது. எனவே டிசம்பரில் வெளியிட்டுவிடுவேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தயாரிப்பாளர் உறுதியளித்தார். ஸ்ரீகாந்தோ செதுக்கி, செதுக்கி படமெடுக்க டிசம்பரிலும் வெளியிடமுடியவில்லை. ஒருவழியாக சங்கராந்திக்கு (அதாவது தெலுங்கு பொங்கல்) வெளியாகியிருக்கிறது.

பட்ட பாடுகளுக்கு எல்லாம் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. ஆந்திராவே கொண்டாடுகிறது சீத்தம்மாவை. பஞ்ச் டயலாக், ஓபனிங் பில்ட் அப் சாங் என்றெல்லாம் இல்லாமல் பந்தாவை விட்டுக் கொடுத்து ஹீரோக்கள் இருவரும் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதை பாராட்டாதவர்களே இல்லை. முன்பு பாலிவுட்டில் ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ நிகழ்த்திய மேஜிக்கை, இன்று டோலிவுட்டில் ‘சீத்தம்மா வாக்கிட்லோ ஸ்ரீமல்லி செட்டு’ நிகழ்த்தியிருக்கிறது. வசூலிலும் அபாரம். ஆந்திராவின் அத்தனை ரெக்கார்டுகளையும் சீத்தம்மா உடைத்துவிடுவாள் என்று கணிக்கிறார்கள். ஓவர்சீஸிலும் அங்கிருப்பவர்களுக்கு நாஸ்டால்ஜியா உணர்வை ஏற்படுத்துவதால் பணம் கொட்டோ கொட்டுவென்று கொட்டுகிறது.

படத்தின் ஒன்லைனர் ரொம்ப சிம்பிள். ‘மனிதர்களாக பிறந்தவர்கள் நல்லவர்களாக மட்டுமே இருக்க முடியும்’.

பிரகாஷ்ராஜ் அப்பா. இரண்டு மகன்கள். பிரகாஷ்ராஜின் தங்கையும், தங்கை வீட்டுக்காரரும் இளம்வயதிலேயே இறந்துவிட, அவர்களது மகளை இவர்களே வளர்க்கிறார்கள். அதுதான் சீதா. மகன்கள் இருவரும் நல்லவர்கள்தான். ஆனால் உலகத்தின் பார்வையில் அவர்களுக்கு சமர்த்து போதாது. மற்றவர்களைப் போல கார், பங்களா என்று வாழமுடிவதில்லை. இதனால் வசதியான உறவினர்கள் பிரகாஷ்ராஜ் குடும்பத்தை கொஞ்சம் மட்டமாகவே நினைக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் கதை நகர்கிறது. படத்தின் கடைசி பத்து நிமிட காட்சிகளுக்கு கண்கலங்காதவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களது இதயம் இரும்பால் ஆனதாக இருக்கும். பழைய பீம்சிங், கொஞ்ச காலத்துக்கு முந்தைய விக்ரமன்.. இருவரையும் கலந்துகட்டிதான் ஸ்ரீகாந்த் அடாலா.

சீத்தம்மா வாக்கிட்லோ சிறீமல்லி செட்டு : இந்திய குடும்பங்களை கவுரவப் படுத்தியிருக்கிறது.

(நன்றி : cinemobita.com)

25 ஜனவரி, 2013

ஒன்மேன் ஷோ!


தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் தொடங்கி ஆபிஸ்பாய் பணி வரைக்கும் ஒரே மனிதரின் உழைப்பிலும், சிந்தனையிலும் உருவாகிறது ஒரு சினிமா. உலகிலேயே முதன்முறையாக முன்னெடுக்கப்படும் இம்முயற்சிக்கு சொந்தக்காரர் நம்மூர்க்காரர் என்பதால், நாம் தைரியமாக காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
சினிமா என்பது கூட்டுமுயற்சி. தயாரிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை, பாடல்கள், கலை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், எடிட்டிங், சண்டைப்பயிற்சி, ஒப்பனை என்று பல்வேறு துறைகளில் ஏராளமானோர் இரவும், பகலுமாக உழைத்து எடுப்பது. இதில் அத்தனை பொறுப்புகளையும் வேறொரு இரண்டாம் மனிதரின் துணையின்றி தானே சுமந்து ஓர் ஆச்சரியப் படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
ஸ்டுடியோக்களாலும், பெரிய தயாரிப்பாளர்களாலும், இத்தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாலும்தான் சினிமா எடுக்க முடியும் என்கிற வழக்கம் சமீபகாலமாக உடைந்து வருகிறது. இண்டிபெண்டன்ட் சினிமா எனப்படுகிற சாதாரண மனிதர்கள் உருவாக்கும் திரைப்படங்கள் ஹாலிவுட்டில் சகஜம். இப்போது இந்த பாணி நம் தமிழுக்கும் வந்துவிட்டது. சங்ககிரி ராஜ்குமாரின் முந்தையப் படமான ‘வெங்காயம்’ அம்மாதிரி உருவான படம்தான். தொழிற்முறை கலைஞர்களை தவிர்த்து, அவரது ஊரில் வசிப்பவர்களையே நடிக்க வைத்து எடுக்கப்பட்ட அப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வெங்காயத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் எடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் ‘ஒன்’. ஆங்கிலத்தில் உருவாகும் முழுநீளத் திரைப்படம். எவர் உதவியுமின்றி ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் இவரே செய்திருக்கிறார். முன்பாக ஜாக்கிசான் கடைசியாக எடுத்த திரைப்படமான சைனீஸ் ஸோடியாக் (CZ12) திரைப்படத்தில் நடிப்பில் தொடங்கி மொத்தம் பதினைந்து துறைகளில், ஜாக்கி ஈடுபட்டதுதான் உலகசாதனையாக கின்னஸ் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ‘ஒன்’ திரைப்படத்தில் ராஜ்குமார் எத்தனை துறைகளுக்கு பொறுப்பேற்கிறார் என்பதை எண்களில் வரையறுப்பதே கடினம்.
ஒரே மனிதரின் உழைப்பில் தயார் ஆகிறது என்பதால் வழக்கமான கலைப்படமாக வறட்சியாக இருக்குமா?
இல்லை. வழக்கமான வணிகப்படத்துக்கான அத்தனை கலர்ஃபுல் அம்சங்களும் இருக்கிறது. படத்தில் வரும் எல்லா மனிதர்களுமே (பெண்கள் உட்பட) சங்ககிரி ராஜ்குமாராகதான் இருக்கிறார்கள். முன்னூறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வருகிறது. வேறு வேறு உடைகளில், வேறு வேறு மேக்கப்களில் ராஜ்குமாரே கேமிராவுக்கு முன்பாக நின்று படம் பிடித்து, கிராஃபிக்ஸ் மூலம் முழுமையாக்கி இருக்கிறார். குறிப்பாக தியேட்டரில் ஐநூறு பேர் படம் பார்க்கும் காட்சி ஒன்று இருக்கிறது. இந்த ஐநூறு பேராகவும் அவரேதான் தோன்றுகிறார். ஆனால் ஒரு பாத்திரத்துக்கும், இன்னொரு பாத்திரத்துக்கும் லேசாக முகச்சாயல் பொருந்துகிறதே தவிர.. வேறெந்த ஒற்றுமையும் இருக்காது.
ஒரே ஆள் இத்தனை சுமைகளையும் தாங்கி ஏன் படம் செய்யவேண்டும்.. சாதனைதான் நோக்கமா?
இல்லையென்று அடித்துப் பேசுகிறார் ராஜ்குமார்.
“அடிப்படையில் நான் விவசாயி. சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு அருகிலிருக்கும் நெடும்பாறைக்காடு என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவன். பரம்பரையாக எங்களுக்கு விவசாயம்தான் தொழில். விவசாயம் செய்யப்போக மீதியிருக்கும் நேரத்தில் படம் எடுக்கிறேன்.
என்னுடைய தாத்தா வேலைநேரம் போக மீதி நேரத்தில் தெருக்கூத்து கட்டினார். தொடர்ச்சியாக அப்பாவும் மேடைநாடகங்கள் எடுத்தார். இந்த கலைப்பாரம்பரியம் விட்டுப்போகாமல் நான் சினிமா எடுக்க வந்திருக்கிறேன்.
இப்போதிருக்கும் சூழலில் படத்தயாரிப்புக்கு ஆகும் பெரும் பொருட்செலவை விவசாயத்தில் வரும் பணம் மூலமாக சரிகட்ட முடியாது. எனவே முதல்படமான ‘வெங்காயம்’ எடுக்கும்போது எவ்வகையில் எல்லாம் செலவை குறைக்க முடியுமோ, அவ்வகையில் எல்லாம் குறைத்தேன். என் ஊர் ஆட்களையே படத்தயாரிப்பில் ஈடுபடுத்தியதால் குறைந்த செலவில் பேர் சொல்லும்படியான படமாக எடுக்க முடிந்தது. இருந்தாலும் வணிகரீதியாக சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஒன்றுமில்லை.
எனவே யாருக்கும் சம்பளம் கொடுக்காமல், என்னால் எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் படமெடுக்கும் முயற்சியாகதான் ‘ஒன்’ படத்தை எடுக்க ஆரம்பித்தேன். இது சாதனையா என்றுகூட எனக்கு தெரியாது” என்கிறார் ராஜ்குமார்.
பட்ஜெட்தான் பிரதானக் காரணம் என்றாலும், அடிப்படையில் பெரியாரிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டிருக்கும் ராஜ்குமாருக்கு அதிகபட்ச தனிமனித முயற்சியை முயற்சித்துப் பார்த்துவிடுவதும் இன்னொரு நோக்கம்.
சரி, யாருடைய உதவியுமின்றி ராஜ்குமாரே முழுப்படத்தையும் உருவாக்கினார் என்பதை எப்படி நம்புவது?
“இதற்குதான் படப்பிடிப்பு, அதற்குப் பின்னான என்னுடைய பணிகள் அத்தனையையும் நானே இன்னொரு கேமிராவில் படம் பிடித்திருக்கிறேன். 12,500 ஜி.பி. அளவுள்ள வீடியோ காட்சிகளாக அவற்றை தனியாக எடுத்து வைத்திருக்கிறேன். யாருக்கு சந்தேகம் வந்தாலும் போட்டுக்காட்ட தயாராக இருக்கிறேன்”
சினிமா எடுப்பதிலேயே இருப்பதில் மிக சிரமமான வேலை எது?
“தயாரிப்புதான் என்று முன்பு நினைத்துக் கொண்டிருந்தேன். மொத்த வேலையையும் நானே இழுத்துப்போட்டு செய்ததில் எல்லா துறையுமே அது அதற்குரிய உழைப்பை கோருகிறது. இருந்தாலும் என் அனுபவத்தில் இருப்பதிலேயே கஷ்டமாக நான் உணர்ந்தது படப்பிடிப்புக்கு தேவையான பொருட்களை சுமந்துச் செல்வதுதான். குளிரூட்டப்பட்ட நவீன அரங்குகளில் நாம் பார்க்கும் ஆடம்பர சினிமாக்களை அத்தொழிலாளர்கள்தான் படமெடுக்கும்போதே தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக அவர்களில் ஒருவரின் பேரை கூட படம் பார்க்கும் ரசிகன் அறிந்திருக்க மாட்டான்”
தமிழ் சினிமா ஹாலிவுட்டுக்கு சவால் விடும் காலம் வருமா என்றெல்லாம் இனி நாம் ஏங்கவேண்டியதில்லை. ஹாலிவுட்டில் நடைபெறும் ஏதோ ஒரு பார்ட்டியில் நம்மூர்க்காரரின் சாதனையை அந்த ஊர் ஜாம்பவான்கள் வியந்து, மெச்சி பேசப்போகிறார்கள். இன்னொரு முறை காலரை தூக்கிவிட்டுக் கொள்வோம்.

(நன்றி : புதிய தலைமுறை)

24 ஜனவரி, 2013

அலெக்ஸ் பாண்டியன்

ஒண்ணில்லே.. ரெண்டில்லே.. மூணு லட்டு. மொத்தமா அலெக்ஸ் பாண்டியனுக்குதான்.

சினைக்காக தன்னுடைய காளையை பசுக்களுக்கு கூட்டிக் கொடுக்கும் கவுரவமான வேலையை செய்து அமைதியாக கிராமத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். லட்டு மாதிரி அவருக்கு மூன்று தங்கைகள். தூரத்து சொந்தக்காரனாக வீட்டுக்கு வரும் அலெக்ஸ் பாண்டியன் லட்டுகளை கடித்துவிடாமல் எப்படி சந்தானம் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார் என்பதுதான் இடைவேளை வரை கதை.

ஆதித்யா சேனல் பார்த்துக்கொண்டே திரைக்கதை எழுதியிருக்கிறார் சுராஜ். கவுண்டமணியின் சினிமா கேரியரில் வந்த அத்தனை காமெடிகளையும் திரும்ப ரீபூட் செய்திருக்கிறார். அட்வான்ஸ் வாங்கியாச்சி, ஏதாவது கதை சொல்லணுமே என்று கார்த்தியிடம் ப்ரெஷ்ஷாக ஒரு கதையை சொல்லியிருப்பார் போல. டைட்டில் சீன் முரட்டுக்காளையின் க்ளைமேக்ஸில் இருந்து உருவியது. செகண்ட் ஹாஃப் சென்ற ஆண்டின் மெகா ஃப்ளாப்பான மாற்றானில் இருந்து உருவியது. இடையில் சந்தானத்தையும், கவர்ச்சிகரமான அவரது தங்கைகளையும் இட்டு நிரப்பி மானே, தேனே போட்டிருக்கிறார்.

இடையில் மக்கள் கட்சி என்று ஒரு கட்சியின் உள்கட்சிப் பிரச்ச்னையை ஏன் காட்டுகிறார் என்றே புரியவில்லை. சரவணன் ஒரு ஆளை போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்குப் போகிறார். அவருடைய தம்பிக்கு கார்த்தி மொட்டை போடுகிறார். சரவணன் பெயிலில் வந்ததுமே அவரை சித்தப்பூ என்று கட்டிக் கொள்கிறார். பிறகு சரவணனையும் காணோம். மொட்டைத் தம்பியையும் காணோம். படம் பார்த்தவனுக்கு கொட்டைதான் மிச்சம். ஐ மீன் ருத்திராசக் கொட்டை.

மொக்கையாக இருந்தாலும் பர்ஸ்ட் ஹாஃப் செம மஜா. சந்தானத்தின் மூன்று தங்கைகளும் நைட்டியோடு அலெக்ஸிடம் கதை கேட்கிறார்கள். கய் எல்லாம் அப்பட்டமாக தெரிகிறது. ஸ்லீவ்லெஸ் என்பதால். கேரம்போர்ட் ஆடுகிறார்கள். அலெக்ஸை பார்த்து மூன்று பேரும் இந்த காயை அடிங்க மாமா, அந்த காயை அடிங்க மாமா என்று கொஞ்சுகிறார்கள். இந்த காட்சிகளை பார்க்கும் நமக்கே அலெக்ஸை நாலு அப்பு அப்பவேண்டும் என்று தோன்றும்போது, லட்டுகளின் அண்ணன் சந்தானத்துக்கு எப்படி இருக்கும்?

”உங்க தங்கச்சிகளை நான் பாதுகாப்பா பார்த்துக்கறேன் மச்சான்” - அலெக்ஸ்

"டேய் பாலுக்கு பூனை காவலா?” - சந்தானம்

“என்னை பால்னு சொல்றீங்களா மச்சான்?”

”நீ பால் இல்லைடா.. பூ.. பூ.. பூ... பூனை”

எப்பூடி?

எல்லாவற்றையும் மன்னித்து விடலாம் இயக்குனர் சுராஜ் அவர்களே. ஒரே ஒரு காட்சியை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏற்கனவே எட்டுநூறு வாட்டி வயசுக்கு வந்துவிட்ட தோற்றத்தில் இருக்கும் சந்தானத்தின் மூன்றாவது தங்கச்சி பூப்படைந்து விட்டதாக ஒரு சீன் வருகிறதே? சின்னத்தம்பியில் பி.வாசு நிகழ்த்திய ரெக்கார்டை இந்த விஷயத்தில் உடைத்திருக்கிறீர்கள் என்று நீங்களும், உங்கள் டீமும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
1947, ஆகஸ்ட் 15 அன்று என்னுடைய தாத்தா காஞ்சிபுரம் சிறுணை நாராயணசாமி வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் பெற்று எப்படி விடுதலையாக ஃபீல் செய்திருப்பார் என்பதை கடைசியாக உணர்ந்தே விட்டேன். ‘ரிட்டர்ன் & டைரக்டட் பை சுராஜ்’ என்கிற எண்ட் கார்டை பார்த்தபோது.

21 ஜனவரி, 2013

விஸ்வரூபம்

இரா.முருகனை ரொம்பவும் பிடிக்கும். சுஜாதாவின் எழுத்துலக வாரிசு இவர்தான் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கிறேன். ‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ வந்துக் கொண்டிருந்தபோது, இரா.முருகனை வாசிக்க ஆரம்பித்தேன். கதைகளும் எழுதுவார் என்று பிற்பாடுதான் தெரிந்தது.

நல்ல கட்டுரையாளர்கள் சுமாரான கதைசொல்லிகளாக இருப்பார்கள். சுவாரஸ்யமாக கதை எழுதுபவர்கள் சுமாராக கட்டுரை எழுதுவார்கள். ரெட்டை மாட்டு வண்டியை சிறப்பாக ஓட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மிகக்குறைவானவர்களே. முருகன் இரண்டையும் சிறப்பாக ஓட்டுபவர் என்பதால்தான், அவரை சுஜாதாவின் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 
இணையத்திலும், நூல்களிலுமாக ஆங்காங்கே வாசித்த இரா.முருகனின் எழுத்து பிடித்துப் போனதால்தான் சிலவருடங்களுக்கு முன்பாக பெரும் பட்ஜெட் செலவில் அவரது முழு கதைகள் தொகுப்பினை வாங்கினேன். முருகனின் கதைகள் பெரும்பாலும் nostalgia தன்மை கொண்டவை. நாம் ஒருவாறாக கற்பனைகூட செய்து பார்த்துவிட முடியாத அறுபதுகளின், எழுபதுகளின் நடுத்தர வாழ்க்கையை முழுவதுமாக அவிழ்த்து நிர்வாணமாக முன்வைப்பவை. அவருடைய புனைவுகளில் ‘நெம்பர் 40, ரெட்டைத்தெரு’ (சாரு அடிக்கடி சொல்லும் பயோஃபிக்‌ஷன் வகை) தான் மாஸ்டர்பீஸாக இருக்க முடியும். பாரதிராஜாவும், பாலச்சந்தரும் இணைந்து நடித்த ‘ரெட்டைச் சுழி’ படத்துக்கு இதுதான் இன்ஸ்பிரேஷன் என்று படம் வரும்போது பேசப்பட்டது.

அபுனைவுகளில் முருகனின் எளிமையும், துல்லியமும் அசாத்தியமானது. ராயர் காஃபி க்ளப், லண்டன் டயரி இருநூல்களும் இணையத்தில் (ப்ளாக், ஃபேஸ்புக், லொட்டு லொசுக்கு) தமிழில் எழுத விரும்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டியது. எதை சொல்லலாம், எதை விழுங்கலாம், சொல்ல வேண்டியவற்றை சொல்லவேண்டிய முறை என்றெல்லாம் பாடம் எடுக்கக்கூடிய தகுதிபெற்றவை இந்நூல்கள். பத்திரிகைகளுக்கும், நூல்களுக்கும் இருக்கும் தன்மை இணையத்துக்கு அப்படியே பொருந்தாது என்கிற பிரக்ஞை முருகனுக்கு இருக்கிறது. இணையத்தில் வாசிப்பவர்களின் பல்ஸ் அவருக்கு அத்துப்படி. எனவேதான் அவர் இணையத்தில் எழுதும்போது இணையவாசகர்களின் வாசிப்புமுறையை உணர்ந்து, அதற்கேற்ற மொழிநடையை பயன்படுத்துகிறார்.

ஐ.டி. புரட்சி ஏற்பட்டு எல்லோரும் தீயாய், பேயாய் ஐ.டி. படிக்க காவடி தூக்கியபோது அவர் எழுதிய நாவல் ‘மூன்று விரல்’. சாஃப்ட்வேர் துறை வெறுமனே அதில் பணிபுரிபவர்களுக்கு பணம் காய்க்கும் மரமல்ல, ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு.. அரசியலுக்கு இடையே இயங்கிவருகிறது என்பதை வாழைப்பழத்தில் மாத்திரை சொருகி இயல்பாக சொல்லியிருந்தார். இத்துறை குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் புனைவு இதுவாகத்தான் இருக்கும். 
முருகனின் பணிகளில் பிரமிக்க வைத்தது நிச்சயமாக ‘அரசூர்வம்சம்’தான். புனைவுவழியாக அவரது முந்தையத் தலைமுறைகளுக்கு இடையே பயணிக்கும் முயற்சி அது. ஒருமாதிரி கடாமுடா மொழிநடையில், முன்னுக்கும் பின்னுக்குமாக நான்லீனியராக மாறி, மாறி பயணிக்கும் கதை. வாசிப்பு உழைப்பை வெகுவாக கோரும் நாவல் என்பதால், உள்நுழைய சற்று சிரமமாக கூட இருக்கும். முருகனின் வேவ்லென்த்தை சரியாக கேச் செய்ய முடிந்துவிட்டால், அட்டகாசமான அமானுஷ்ய அனுபவத்தை அளிக்கிது அரசூர் வம்சம்.

இந்நூல் குறித்து சமகால இலக்கியவாதிகள் பெரிதாக ஏன் சிலாகிக்கவில்லை என்பது எப்போதுமே எனக்கு ஆச்சரியமான ஒன்று. புதிய முறையில் சொல்லப்படும் ஒன்றை வாசகர்கள் புறக்கணிப்பதை கூட ஏற்றுக் கொள்ளலாம். சக படைப்பாளிகளும் பாராமுகம் காட்டுவதை காணும்போதுதான் நம் தற்போதைய இலக்கியச்சூழலின் அவலத்தை உணரமுடிகிறது. 

அரசூர் வம்சம் அதோடு முடிந்துவிடவில்லை. ஒரு டிரையாலஜி என்கிறார் இரா.முருகன். இதில் இரண்டாம் நூலான ‘விஸ்வரூபம்’ இப்போது கிழக்கு மூலமாக விற்பனைக்கு வந்திருக்கிறது. எழுத்துக்காக தேசியவிருது பெற்ற ஓவியர் ஜீவானந்தத்தின் அருமையான ஓவியமுகப்போடு, அட்டகாசமான பேக்கிங்கில் புஷ்டியான புத்தகம். 792 பக்கம். நானூறு ரூபாய் விலை. இவ்வருட முதல் சாய்ஸ் இதுதான். அடுத்த புத்தகக் காட்சிக்குள் வாசித்து முடித்துவிட வேண்டும். அதற்குள் மூன்றாவது மற்றும் இறுதிப்பாகம் வந்துவிடும்.
விஸ்வரூபத்தை எல்லோருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். அரசூர் வம்சத்தை வாசித்துப் பிடித்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு நானூறு ரூபாய் இன்வெஸ்ட் செய்யலாம். சில அத்தியாயங்களை ஏற்கனவே வாசித்திருக்கிறேன் என்கிற முறையில், இரா.முருகன் ஏமாற்ற மாட்டார் என்று உத்தரவாதம் அளிக்கலாம். புதியதாக வாசிக்க விரும்புபவர்கள் டிரைலராக அரசூரை முயற்சித்துவிட்டு, விஸ்வரூபத்துக்குள் குதிக்கலாம்.

ஆனால், கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை எல்லோருக்கும் பரிந்துரைக்கிறேன். கமலின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு இரா.முருகன்தான் வசனம். அதிலிருந்து தொடர்ச்சியாக கமலின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார். எனவே விஸ்வரூபத்திலும் இரா.முருகனின் பங்களிப்பு நிச்சயமிருக்கும்.


இன்னொரு சுவாரஸ்யமான தகவல். கமல் டவுசர் போட்டு விளையாடிக் கொண்டிருந்த காலத்திலேயே அவரை இரா.முருகன் சிவகங்கை தெருக்களில் பார்த்திருக்கிறார். இருவருக்கும் கிட்டத்தட்ட சமவயதுதான். களத்தூர் கண்ணம்மாவில் நடித்து ஃபேமஸ் ஆகியிருந்த அப்போதைய கமலைப் பார்த்து சற்று பொறாமையாக இருந்ததாககூட முருகன் எழுதியிருக்கிறார்.

இரா.முருகன் என்று கூகிளிட்டு தேடினால், பதிவின் மேலே காணக்கிடைக்கும் படம் கூகிளில் கிடைத்தது. கண்ணுக்கு பசுமையாக தெரிவதால் அதையே படமேற்றிவிட்டேன். இரா.முருகனின் வண்ணப் படத்தை அவருடைய இணையத்தளமான Era.முருகன்.inல் பார்த்துக் கொள்ளலாம்.