21 ஜனவரி, 2013

விஸ்வரூபம்

இரா.முருகனை ரொம்பவும் பிடிக்கும். சுஜாதாவின் எழுத்துலக வாரிசு இவர்தான் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கிறேன். ‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ வந்துக் கொண்டிருந்தபோது, இரா.முருகனை வாசிக்க ஆரம்பித்தேன். கதைகளும் எழுதுவார் என்று பிற்பாடுதான் தெரிந்தது.

நல்ல கட்டுரையாளர்கள் சுமாரான கதைசொல்லிகளாக இருப்பார்கள். சுவாரஸ்யமாக கதை எழுதுபவர்கள் சுமாராக கட்டுரை எழுதுவார்கள். ரெட்டை மாட்டு வண்டியை சிறப்பாக ஓட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மிகக்குறைவானவர்களே. முருகன் இரண்டையும் சிறப்பாக ஓட்டுபவர் என்பதால்தான், அவரை சுஜாதாவின் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 
இணையத்திலும், நூல்களிலுமாக ஆங்காங்கே வாசித்த இரா.முருகனின் எழுத்து பிடித்துப் போனதால்தான் சிலவருடங்களுக்கு முன்பாக பெரும் பட்ஜெட் செலவில் அவரது முழு கதைகள் தொகுப்பினை வாங்கினேன். முருகனின் கதைகள் பெரும்பாலும் nostalgia தன்மை கொண்டவை. நாம் ஒருவாறாக கற்பனைகூட செய்து பார்த்துவிட முடியாத அறுபதுகளின், எழுபதுகளின் நடுத்தர வாழ்க்கையை முழுவதுமாக அவிழ்த்து நிர்வாணமாக முன்வைப்பவை. அவருடைய புனைவுகளில் ‘நெம்பர் 40, ரெட்டைத்தெரு’ (சாரு அடிக்கடி சொல்லும் பயோஃபிக்‌ஷன் வகை) தான் மாஸ்டர்பீஸாக இருக்க முடியும். பாரதிராஜாவும், பாலச்சந்தரும் இணைந்து நடித்த ‘ரெட்டைச் சுழி’ படத்துக்கு இதுதான் இன்ஸ்பிரேஷன் என்று படம் வரும்போது பேசப்பட்டது.

அபுனைவுகளில் முருகனின் எளிமையும், துல்லியமும் அசாத்தியமானது. ராயர் காஃபி க்ளப், லண்டன் டயரி இருநூல்களும் இணையத்தில் (ப்ளாக், ஃபேஸ்புக், லொட்டு லொசுக்கு) தமிழில் எழுத விரும்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டியது. எதை சொல்லலாம், எதை விழுங்கலாம், சொல்ல வேண்டியவற்றை சொல்லவேண்டிய முறை என்றெல்லாம் பாடம் எடுக்கக்கூடிய தகுதிபெற்றவை இந்நூல்கள். பத்திரிகைகளுக்கும், நூல்களுக்கும் இருக்கும் தன்மை இணையத்துக்கு அப்படியே பொருந்தாது என்கிற பிரக்ஞை முருகனுக்கு இருக்கிறது. இணையத்தில் வாசிப்பவர்களின் பல்ஸ் அவருக்கு அத்துப்படி. எனவேதான் அவர் இணையத்தில் எழுதும்போது இணையவாசகர்களின் வாசிப்புமுறையை உணர்ந்து, அதற்கேற்ற மொழிநடையை பயன்படுத்துகிறார்.

ஐ.டி. புரட்சி ஏற்பட்டு எல்லோரும் தீயாய், பேயாய் ஐ.டி. படிக்க காவடி தூக்கியபோது அவர் எழுதிய நாவல் ‘மூன்று விரல்’. சாஃப்ட்வேர் துறை வெறுமனே அதில் பணிபுரிபவர்களுக்கு பணம் காய்க்கும் மரமல்ல, ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு.. அரசியலுக்கு இடையே இயங்கிவருகிறது என்பதை வாழைப்பழத்தில் மாத்திரை சொருகி இயல்பாக சொல்லியிருந்தார். இத்துறை குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் புனைவு இதுவாகத்தான் இருக்கும். 
முருகனின் பணிகளில் பிரமிக்க வைத்தது நிச்சயமாக ‘அரசூர்வம்சம்’தான். புனைவுவழியாக அவரது முந்தையத் தலைமுறைகளுக்கு இடையே பயணிக்கும் முயற்சி அது. ஒருமாதிரி கடாமுடா மொழிநடையில், முன்னுக்கும் பின்னுக்குமாக நான்லீனியராக மாறி, மாறி பயணிக்கும் கதை. வாசிப்பு உழைப்பை வெகுவாக கோரும் நாவல் என்பதால், உள்நுழைய சற்று சிரமமாக கூட இருக்கும். முருகனின் வேவ்லென்த்தை சரியாக கேச் செய்ய முடிந்துவிட்டால், அட்டகாசமான அமானுஷ்ய அனுபவத்தை அளிக்கிது அரசூர் வம்சம்.

இந்நூல் குறித்து சமகால இலக்கியவாதிகள் பெரிதாக ஏன் சிலாகிக்கவில்லை என்பது எப்போதுமே எனக்கு ஆச்சரியமான ஒன்று. புதிய முறையில் சொல்லப்படும் ஒன்றை வாசகர்கள் புறக்கணிப்பதை கூட ஏற்றுக் கொள்ளலாம். சக படைப்பாளிகளும் பாராமுகம் காட்டுவதை காணும்போதுதான் நம் தற்போதைய இலக்கியச்சூழலின் அவலத்தை உணரமுடிகிறது. 

அரசூர் வம்சம் அதோடு முடிந்துவிடவில்லை. ஒரு டிரையாலஜி என்கிறார் இரா.முருகன். இதில் இரண்டாம் நூலான ‘விஸ்வரூபம்’ இப்போது கிழக்கு மூலமாக விற்பனைக்கு வந்திருக்கிறது. எழுத்துக்காக தேசியவிருது பெற்ற ஓவியர் ஜீவானந்தத்தின் அருமையான ஓவியமுகப்போடு, அட்டகாசமான பேக்கிங்கில் புஷ்டியான புத்தகம். 792 பக்கம். நானூறு ரூபாய் விலை. இவ்வருட முதல் சாய்ஸ் இதுதான். அடுத்த புத்தகக் காட்சிக்குள் வாசித்து முடித்துவிட வேண்டும். அதற்குள் மூன்றாவது மற்றும் இறுதிப்பாகம் வந்துவிடும்.
விஸ்வரூபத்தை எல்லோருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். அரசூர் வம்சத்தை வாசித்துப் பிடித்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு நானூறு ரூபாய் இன்வெஸ்ட் செய்யலாம். சில அத்தியாயங்களை ஏற்கனவே வாசித்திருக்கிறேன் என்கிற முறையில், இரா.முருகன் ஏமாற்ற மாட்டார் என்று உத்தரவாதம் அளிக்கலாம். புதியதாக வாசிக்க விரும்புபவர்கள் டிரைலராக அரசூரை முயற்சித்துவிட்டு, விஸ்வரூபத்துக்குள் குதிக்கலாம்.

ஆனால், கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை எல்லோருக்கும் பரிந்துரைக்கிறேன். கமலின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு இரா.முருகன்தான் வசனம். அதிலிருந்து தொடர்ச்சியாக கமலின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார். எனவே விஸ்வரூபத்திலும் இரா.முருகனின் பங்களிப்பு நிச்சயமிருக்கும்.


இன்னொரு சுவாரஸ்யமான தகவல். கமல் டவுசர் போட்டு விளையாடிக் கொண்டிருந்த காலத்திலேயே அவரை இரா.முருகன் சிவகங்கை தெருக்களில் பார்த்திருக்கிறார். இருவருக்கும் கிட்டத்தட்ட சமவயதுதான். களத்தூர் கண்ணம்மாவில் நடித்து ஃபேமஸ் ஆகியிருந்த அப்போதைய கமலைப் பார்த்து சற்று பொறாமையாக இருந்ததாககூட முருகன் எழுதியிருக்கிறார்.

இரா.முருகன் என்று கூகிளிட்டு தேடினால், பதிவின் மேலே காணக்கிடைக்கும் படம் கூகிளில் கிடைத்தது. கண்ணுக்கு பசுமையாக தெரிவதால் அதையே படமேற்றிவிட்டேன். இரா.முருகனின் வண்ணப் படத்தை அவருடைய இணையத்தளமான Era.முருகன்.inல் பார்த்துக் கொள்ளலாம்.

6 கருத்துகள்:

  1. யுவா,

    அரசூர் வம்சம் ஆங்கிலத்தில் The Ghost of Arasur என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது


    nostagia என்பதை nostalgia என மாற்றவும்.

    பதிலளிநீக்கு
  2. அரசூர் வம்சம் பற்றி ஏற்கனவே சுஜாதா கற்றதும் பெற்றதுமில் எழுதியிருந்தார்..

    பதிலளிநீக்கு
  3. இரா.முருகனின் அரசூர் வம்சம் மிகவும் வித்தியாசமான நாவல். விஸ்வரூபம் இரண்டாம் பாகம் என்பதை இன்று தான் அறிந்தேன். விரைவில் வாங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா6:53 PM, ஜனவரி 21, 2013

    'அபுனைவுகளில்' - அப்புனைவுகளில் ?

    பதிலளிநீக்கு
  5. நன்றி யுவா. விஸ்வரூபம் வாங்க முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா4:00 PM, ஜனவரி 22, 2013

    அபுனைவு.... non fiction...?

    பதிலளிநீக்கு