13 ஏப்ரல், 2013

மரணத்தண்டனை : அம்மாவுக்கு வேண்டுகோள்

“தூக்குத்தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு” என்று மரணத்தண்டனை குறித்த திமுகவின் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கலைஞர்.

மரணத்தண்டனை குறித்த அச்சத்தை மத்தியில் இருக்கும் அரசும், குடியரசுத்தலைவரும் ஏற்கனவே விதைத்து விட்டார்கள். அதை ஊதிப்பெருக்கும் விதமாக சமீபமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்திய அரசியலின் மூத்தத் தலைவரான கலைஞரின் இக்கருத்து மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கு ஓரளவுக்கு ஆசுவாசம் தரக்கூடியது.

மத்திய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு மரணத்தண்டனையாக நிறைவேற்றிக் கொண்டே வருவதை காணும்போது, அடுத்து எங்கே பாசக்கயிறு வீசப்போகிறார்கள் என்பதை சுலபமாகவே யூகிக்க முடிகிறது. ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணத்தண்டனை உறுதியான நால்வரில் நளினிக்கு மட்டும் 2000ஆம் ஆண்டு திமுக அரசு தண்டனையை குறைத்தது. முன்னதாக தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவர்களின் மரணத்தண்டனையையும் திமுக அரசு மாற்றியமைத்திருக்கிறது. சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கும் 2006-11 ஆட்சிக்காலத்திலாவது கலைஞர் பெரிய மனது வைத்து தண்டனையை குறைத்திருக்கலாம். ஆனால் கலைஞர் என்கிற விக்கிரமாதித்தனின் முதுகில் காங்கிரஸ் என்கிற வேதாளம் அல்லவா ஏறிக்கொண்டிருந்தது?

கலைஞர் செய்யத் தவறியதை மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அவர்களாவது உடனடியாக செய்துக்காட்ட வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில் இதுவரை போடப்பட்ட தீர்மானங்களால் உருப்படியாக எதுவும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. பொதுவாக எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் போட்டுவிட்டு, பந்தை மத்திய அரசின் பக்கமாக தள்ளிவிடுவதுதான் அம்மாவின் சமீபகால மோஸ்தராக இருக்கிறது.

அப்படியில்லாமல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி மூவருக்குமான மரணத்தண்டனையை குறைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முன்பு திமுக அரசு இப்படித்தான் சிலருக்கான மரணத்தண்டனையை மாற்றியமைத்திருக்கிறது. இந்த தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ள நெருக்கடி தரவேண்டும். வரலாற்றிலேயே முதன்முறையாக அம்மாவுக்கும், ஒரு ஆளுநருக்கும் பிரச்சினை இல்லாமல் இருப்பது இதுதான் முதன்முறை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நித்தமும் அம்மா புகழ் பாடி புண்ணியம் தேடிக்கொள்ளும் ஊடகங்களும், வைகோசீமாதாபா பஜனைக் கோஷ்டியினரும் இதற்காக வேண்டுகோளோடு நிறுத்திவிடாமல் புரட்சித்தலைவிக்கு நெருக்கடி தந்து, தங்களுக்கும் நிஜமாகவே தமிழுணர்வு இருக்கிறது என்பதை  நிரூபிக்க வேண்டும்.

தமிழக அரசை சங்கடப்படுத்திவிடக் கூடாது, அதே நேரம் தமிழுணர்வு இமேஜுக்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்று இரட்டை வேடம் போடும் வேடதாரிகளுக்கு இது அக்னிப்பரிட்சை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிஜமாகவே ஈழத்தாய் தானா என்பதை உரசிப்பார்க்கும் சோதனையும் கூட.

எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவோம்.


மரணத்தண்டனை குறித்த நமது முந்தைய கதறல்கள் :

மரணத்தைக் கொண்டாடும் தேசம்!

9 ஏப்ரல், 2013

ஹிம்மத்வாலா

எழுபதுகளில் இந்தியா கொதித்துக் கொண்டிருந்தது. இந்திய கிராமங்களில் பண்ணையார்களின் சாதிய, வர்க்க அராஜகத்தால் எழுந்த அனல் அது. அதிகார மட்டத்தில் செல்வாக்கு கொண்ட இவர்களை அடக்க, மக்கள் மத்தியிலிருந்து நக்சல்பாரிகள் தோன்றவேண்டியிருந்தது. மத்திய, மாநில அரசுகள் அவர்களை வில்லன்களாக்கி துரத்தி, துரத்தி வேட்டையாடினாலும் அடித்தட்டு மக்களால் ஹீரோக்களாகதான் பார்க்கப்பட்டார்கள்.

சமூகத்தில் ‘ஹீரோ’ உருவானதுமே, முதலில் சுறுசுறுப்படைவது திரைத்துறைதான். எழுபதுகளின் அந்த சமூகப் பின்னணி மசாலா ஆக்‌ஷன் படங்களின் களமானது. பண்ணையார்கள் வில்லன்கள். அவர்களை அழித்தொழிப்பது அல்லது திருத்துவது ஹீரோக்களின் வேலை. ஆனாலும் ஹீரோ நக்சல்பாரியாக இருக்க மாட்டார். தேசம் மீது விமர்சனமற்ற பற்றும், இந்திய அரசியல் சட்டத்தின் மீது மரியாதையும் கொண்டவராக.. சாதிய சமய வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளாதவராக.. சமத்துவத்தை வலியுறுத்தும் இலட்சியவாத இளைஞனாக இருப்பார்.

குறிப்பாக இவரது அப்பா சிறுவயதில் பண்ணையாரின் அட்டூழியங்களை தட்டிக் கேட்டதற்காக கொல்லப்பட்டிருப்பார். அம்மாவையும், தங்கையையும் பிரிந்து நகரத்துக்கு வந்திருப்பார் ஹீரோ. அங்கே ஓடிக்கொண்டிருக்கும் போதோ, அல்லது சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் போதோ, அல்லது ரவுடிகளை துவம்சம் செய்துக் கொண்டிருக்கும் போதோ ரெண்டு மூன்று சீன்களில் வளர்ந்து கன்னியர் மயங்கும் கட்டழகுக் காளையாக வளர்ந்துவிடுவார். வளர்ந்ததுமே தன்னுடைய கிராமத்து கடமை நினைவுக்கு வரும். ஊருக்கு வருவார். அம்மாவிடமும், தங்கையிடமும் பாசமழை பொழிவார். ஊராருக்கு எல்லாம் உதவுவார். பண்ணையாரின் அடியாட்களை தூக்கிப் போட்டு பந்தாடுவார். பண்ணையாரின் மகளை காதலிப்பார். இறுதியில் சூழ்ச்சிகளை வென்று தர்மத்தை நிலைநாட்டுவார்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இந்திய சினிமாவில் இதே மரணமொக்கை கதையை வைத்து நூற்றுக்கணக்கில் படங்கள் தயாராகின. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சூப்பர்ஸ்டார் இம்மாதிரி கதைகளை வைத்துதான் உருவானார்கள். இந்த போக்கின் உச்சம் 1981ல் தெலுங்கில் வெளிவந்த ‘ஊரிக்கி மொனகடு’. (ஊருக்கு உழைப்பவன் என்பது மாதிரி மீனிங் இருக்கலாம் என்று நினைக்கிறேன்).  இளைஞர்களுக்குள் மூண்டெழுந்த சமூக கோபத்தை சினிமா அப்படியே வியாபாரமாக்கிவிட்டது. அதை கச்சிதமாக செய்தவர் கே.ராகவேந்திர ராவ்'

அப்போது தெலுங்கின் சூப்பர் ஸ்டாராக இருந்த கிருஷ்ணா ஹீரோ. கொஞ்சம் வேகமாக நடக்கும் காட்சி இருந்தாலே ‘டூப்’ போட சொல்லுபவர் இவர். டோலிவுட்டின் கனவுக்கன்னி ஜெயப்ரதா ஹீரோயின். அவரது இடுப்பைப் பார்த்து கிறங்கிய அந்தகால டோலிவுட் ரசிகர்கள் முப்பதாண்டுகள் கழிந்த நிலையில் இன்னமும் கிறக்கத்தில் இருந்து மீளவில்லை. கரம் மசாலா காட்சிகள், காமத்தைத் தூண்டும் கலக்கல் சாங்க்லு + டேன்ஸ்லு, கல்மனம் கொண்டோரின் கண்களையும் கசியவைக்கும் அம்மா, தங்கை பாசம் என்று பக்கா காக்டெயிலாக உருவானதால் படம் பம்பர் ஹிட். இந்தப் படத்தின் தாக்கம் அப்போது எல்லா மொழிகளில் உருவான படங்களிலும் இருந்தது. குறிப்பாக நம்மூர் எவர்க்ரீன் மசாலா எண்டெர்டெயினரான சகலகலா வல்லவனில் பல காட்சிகள் ‘ஊரிக்கி மொனகடு’வில் இருந்து இன்ஸ்பையர் ஆனவைதான்.
கே.ராகவேந்திரராவ், கசாப்புக் கடை மாஸ்டர் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆடுகளை போட்டுத்தள்ளி வரிசையாக மாட்டுவதைப் போல வருடாவருடம் ஏழு, எட்டு படங்களை அசால்டாக இயக்கித் தள்ளுவார். ’ஊரிக்கி மொனகடு’ மூலமாக 1981ன் சூப்பர் டூப்பர் ஹிட்டைக் கொடுத்த இவர், அவ்வருடம் மட்டுமே எட்டு படங்களை இயக்கியிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஹீரோயின் அறிமுகக் காட்சிக்கு பயங்கரமாக மெனக்கெடுவார். குட்டியூண்டு குட்டைப் பாவாடையோடு இரண்டு கால்களையும் ‘A’ ஷேப்பில் ஹீரோயின் விரித்து நிற்க, பின்புறமாக கேமிராவை இடுப்புக்கு கீழாக ‘ஷாட்’ வைத்து காட்டுவதுதான் இவரது ஸ்பெஷல் டேலண்ட். வ்யூபாயிண்டில் ரசிகன் பார்க்கும் ‘A’வுக்கு நடுவில் தெரியும் கேப்பில் ஹீரோவை இண்ட்ரொட்யூஸ் செய்வார். தியேட்டர்களில் அப்ளாஸ் எப்படி அள்ளும் என நீங்களே கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.

அதற்காக ராகவேந்திரராவை காமவெறி இயக்குனர் என்று அவசரமாக முடிவுகட்டிவிட வேண்டாம். இப்போது எழுபத்தியொன்று வயதாகும் இவர், இதுவரை 104 படங்கள் இயக்கியிருக்கிறார். இன்னமும் எப்படியும் ஒரு இருபத்தைந்து படங்களாவது இயக்கிவிட்டுதான் ஓய்வெடுப்பார் என்று நினைக்குமளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பம்பரமாக இப்போதும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் ஃபெமினிஸ படங்களும் நிறைய எடுத்திருக்கிறார். அன்னமய்யா, பாண்டுரங்கடு, மஞ்சுநாதா, ஷிர்டிசாய்பாபா மாதிரி ஏகப்பட்ட பக்திப்படங்களையும் பக்திரசம் சொட்டச் சொட்ட கொடுத்திருக்கிறார். ஆந்திராவின் ஏ.பி.என். அவர். தெலுங்கில் இவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை எனலாம். பழம்பெரும் இயக்குனர் பிரகாஷ்ராவின் (வசந்தமாளிகை, அவன் ஒரு சரித்திரம்) மகன்தான் ராகவேந்திரராவ். என்.டி.ஆரில் தொடங்கி கிருஷ்ணா, ஷோபன்பாபு, கிருஷ்ணம்ராஜூ, சிரஞ்சீவி, மோகன்பாபு, ராஜசேகர், ஸ்ரீகாந்த், வெங்கடேஷ், விஜயசாந்தி, ராதா, ராதிகா, ரம்யாகிருஷ்ணன், ரம்பா, ரவளி என்று பிரபலமான எல்லா நட்சத்திரங்களுக்கும் ‘பிரேக்’ கொடுத்த சாதனைக்கு சொந்தக்காரர். இவரை மாதிரி மூன்று தலைமுறை நட்சத்திரங்களை கையாண்ட இயக்குனர்கள் இந்திய திரையுலகில் மிகவும் குறைவு. அவர் இயக்கிய படங்களில் நாலில் ஒன்றாவது வெள்ளிவிழா கொண்டாடியிருக்கிறது. இதுவரை இருபத்தியேழு வெள்ளிவிழாப் படங்களை இயக்கியிருக்கிறார். அப்படியென்றால் நூறு நாள், எழுபத்தைந்து நாள், ஐம்பது நாள் படங்கள் எவ்வளவு இருக்குமென்று யூகித்துக் கொள்ளுங்கள். உலக அளவில் எந்த ஒரு இயக்குனருக்காவது இவ்வளவு துல்லியமான வெற்றிசதவிகிதம் இருக்குமாவென்று தெரியவில்லை.
‘ஊரிக்கி மொனகடு’வை இந்தியில் ஹிம்மத்வாலாவாக ரீமேக்கும்போதும் ராகவேந்திராராவையே இயக்க அழைத்தார்கள். ஜீதேந்திரா ஹீரோவாக நடிக்க, ஸ்ரீதேவி ஹீரோயின். இருபது வயது ஸ்ரீதேவியின் இளமையில் அன்று விழுந்த இந்தி ரசிகர்கள், மீண்டு எழ பதினைந்து ஆண்டுகள் பிடித்தது. சாதாரணமாகவே ஹீரோயினை உரித்து கலைநயத்தோடு காட்டும் ராகவேந்திரராவ், பேரழகியான ஸ்ரீதேவியை பார்த்ததுமே ‘குஷி’யாகி விட்டார். காட்சியமைப்புகளில் புகுந்து விளையாடினார். தமிழ், தெலுங்கை விட்டு இந்தியில் ‘செட்டில்’ ஆக ஸ்ரீதேவிக்கு தைரியம் கொடுத்தது ‘ஹிம்மத்வாலா’தான். 1983ஆம் ஆண்டின் ப்ளாக்பஸ்டர் இப்படம்தான். ஹிம்மத்வாலா என்றால் ‘தில்லு தொரை’ என்பது மாதிரி மீனிங்.

இப்போது இந்தியில் கதைக்கு பஞ்சம். எனவே பழைய மெகாஹிட் படங்களையே பாதுகாப்பாக ரீமேக் செய்து வசூலை அள்ளுகிறார்கள். தொடர்ச்சியாக நூறு கோடி வசூல் படங்களிலேயே நடித்துக் கொண்டிருப்பதால் அஜய்தேவ்கனுக்கு அடுத்தடுத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மீறிய படங்களை தரவேண்டிய கட்டாயம்.

சினிமா குடும்பத்தில் பிறந்து தொலைத்த ஒரே காரணத்தினாலேயே சினிமாக்காரர் ஆகிவிட்டவர் இயக்குனர் சஜித். நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று இவருக்கு ஏகப்பட்ட முகம். ஷாருக்கானின் நண்பரும் பாலிவுட்டின் பிரபலமான நடன அமைப்பாளரும், சூப்பர்ஹிட் படங்களின் டைரக்டருமான ஃபராகான் இவருடைய அக்காதான். ஃபரான் அக்தர், ஸோயா அக்தர், ஹனி இரானி, ஜாவேத் அக்தர் என்று இந்திப் படங்களின் டைட்டில்களில் நீங்கள் பார்க்கும் பெயர்கள் எல்லாம் இவருடைய சொந்தக்காரர்கள்தான்.

மற்ற மொழி படங்களை ரீமேக் செய்வதுதான் சஜித்தின் ஸ்டைல். நம்மூரில் ஃப்ளாப் ஆன ‘காதலா காதலா’வை ரீமேக் செய்து, ‘ஹவுஸ்ஃபுல்’லாக 100 கோடி வசூல் செய்தவர். அடுத்து எடுத்த ’ஹவுஸ்ஃபுல்-2’வும் கூட இருநூறு கோடி வசூலை நெருங்கியது. இதுவும் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்தான். மற்ற மொழிப் படங்களையே ரீமேக் செய்து அலுத்துப்போனவர் பழைய இந்திப் படத்தையே திரும்ப செய்ய நினைத்ததுதான் இப்போது கையை சுட்டுவிட்டது.
பெரிய எதிர்ப்பார்ப்போடு போனவாரம் வெளியான ‘ஹிம்மத்வாலா’, பழைய படம் மாதிரி பரபரப்பாக இல்லையென்று விமர்சகர்களால் கழுவி கழுவி ஊற்றப்படுகிறது. ஐந்துக்கு ஒரு நட்சத்திரம் கூட கொடுக்க தகுதியில்லாத படம் என்று ஊடகங்கள் நிராகரித்தாலும், சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வசூல்தான். இதுவரை ஐம்பது கோடி வசூலை நெருங்கிவிட்டாலும் ஏனோ ‘ஹிம்மத்வாலா-2013’ ஃப்ளாப் என்றே அறிவிக்கப்படுகிறது.

சஜித் செய்த தவறு ஒன்றுதான். புலியைப் பார்த்து பூனையாக சூடு போட்டுக் கொண்டது. அதனால்தான் ஒரிஜினல் படம் பத்தரைமாத்து தங்கம், சஜித்தின் டூப்ளிகேட் அலுமினியம் என்று எல்லோரும் அலுத்துக் கொள்கிறார்கள். இரண்டையும் ஒப்பிடும் பட்சத்தில் ராகவேந்திராவின் திரைநுணுக்கம் குறித்த பிரமிப்பு மலையளவு உயர்கிறது. காலத்துக்கு ஏற்ப மாற்றுகிறேன் என்று சஜித் திரைக்கதையில் செய்த மாற்றங்கள் எல்லாமே பல்லிளித்துப் போய்விட்டது. ஆனால் பழைய ஹிம்மத்வாலா பார்க்காதவர்கள், புது ஹிம்மத்வாலாவை பார்த்தால் சுவாரஸ்யமாகதான் இருக்கிறது என்கிறார்கள்.

எது எப்படியோ நம்ம தமன்னாவை எக்ஸ்ரே மாதிரி ஸ்கேன் செய்துக் காட்டியதில் மட்டும் சஜித் வென்றிருக்கிறார். தமன்னாவின் பனிநிற தொப்புளைப் பார்த்து வட இந்தியாவே கிறுக்குப் பிடித்து அலைகிறது. பாலிவுட்டில் அவரது இன்னிங்ஸை ஸ்டெடியாக ஆட ‘ஹிம்மத்வாலா’ உதவும் என்பதுதான் நமக்கான ஆறுதல்.

‘ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட்’ என்பதை அஜய்தேவ்கன் புரிந்துக் கொண்டிருப்பார்.

(நன்றி : cinemobita.com)

8 ஏப்ரல், 2013

பொற்காலம் திரும்புகிறது

என்னுடைய சீனியர் கருணாகரன் சார் ரெண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன விஷயம் சுவாரஸ்யமாக இருந்தது. முந்தைய நாள் இரவு ஒன்றரை மணி நேரத்துக்கு அவர் வசிக்கும் ஏரியாவில் கரண்ட் கட். பையனோடு ஜாலியாக விளையாடியிருக்கிறார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சுவரில் முயல், நரி, பாம்பு என்று உருவங்களை நிழலாக்கி விளையாடும் விளையாட்டு. கரண்ட் கட் என்று ஒன்று இருக்காவிட்டால் தகப்பனும், மகனும் இதுபோல இப்போது விளையாட வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. டிவி, கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று பெருகிவிட்ட சாதனங்கள் உறவுகளுக்குள் ஏற்படுத்தும் இடைவெளி பற்றிய ஓர்மை நமக்கு எந்தளவுக்கு இருக்கிறது?

எனக்கும் என்னுடைய அப்பாவுக்கும் இருந்த நெருக்கம், எனக்கும் என்னுடைய மகளுக்கும் இருக்கிறதாவென்று சந்தேகமாகவே இருக்கிறது. தூங்குவதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகளோடு துணைவியார் மல்லு கட்டிக் கொண்டிருக்கும்போது, இல்லறத்தை தற்காலிகமாக துறந்து நள்ளிரவில் ஐ.பி.எல். பார்க்கும்போது கொஞ்சம் குற்றவுணர்ச்சியாகதான் இருக்கிறது. ஐந்துவயது வரை அப்பா என்னை தோளில் சாய்த்து, தெருவெல்லாம் அப்படியும் இப்படியுமாக நடந்துகொண்டே பாட்டு பாடி தூங்கவைப்பார்.

அப்பாக்கள் மட்டும் மாறிவிடவில்லை. முன்பெல்லாம் இடுப்பில் குழந்தையை இடுக்கியபடி சோறூட்டும் தாய்மார்களை நிறைய பார்க்க முடிந்தது. இப்போது சென்னையில் இதுவொரு அரிதான, அதிசயமான நிகழ்வாகி விட்டது. மெகாசீரியலின் எஃபெக்ட்தான். வேறென்ன. அப்போதெல்லாம் சென்னையை சுவாரஸ்யப்படுத்துவதே குழாய்ச்சண்டைகள்தான். இப்போது சண்டை போட யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இந்த நேரத்தை சீரியல் பார்த்து பயனுள்ளதாக கழிக்கலாம்.

ஒருவகையில் பார்த்தால் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ‘ஜெய் ஹோ’ ஆட்சி நம்முடைய மரபினை மீட்டு தந்துக் கொண்டிருக்கிறது. பனையோலை விசிறி, டார்டாய்ஸ் கொசுவர்த்தி என்று தொலைந்துப்போன தலைமுறையின் அடையாளங்களை மீட்டுத் தருகிறது. தூளி கட்டி குழந்தைக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறார்கள் தமிழக தாய்மார்கள். இளம் அப்பாக்கள் குழந்தைகளோடு யானைசவாரி விளையாடுகிறார்கள். புதிதாக மணமான தம்பதிகள் ‘நிலா காயுது, நேரம் நல்ல நேரம்’ என்று டூயட் பாடுகிறார்கள். அப்பா, அம்மா, மகன், மகள், மருமகள், குழந்தைகள் என்று குடும்பம் கூடி நிலாச்சோறு சாப்பிடுகிறது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் புரட்சித்தலைவியின் ஆட்சி நமது பொற்காலத்தை மீட்டுத்தரும் முயற்சியில் தீவிரமாக இயங்கிவருவதாகவே தெரிகிறது. மாண்புமிகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனிமனிதராக நம்மை முப்பதாண்டுகளுக்கு பின்னே முன்னேற்றியிருக்கிறார். மற்ற அமைச்சர்களும் கொஞ்சம் மெனக்கெட்டால் ராஜராஜசோழன் ஆட்சி காலத்துக்கே கூட தமிழகம் கால இயந்திரத்தில் பயணிக்கும் அற்புதம் நேரலாம். மேலும் கொஞ்சம் முக்கி கற்காலத்துக்கும் போய்விட முடியுமானால் அனாவசியமாக டிரெஸ் வாங்கும் செலவாவது மிச்சம்.

5 ஏப்ரல், 2013

பஜனை

எங்க ஊரில் பஜனை ரொம்ப ஃபேமஸ். பஜனை செய்யவே ஒரு கோயில் இருக்கிறது. அந்தத் தெருவின் பெயரே பஜனை கோயில் தெருதான். கோயிலில் மட்டுமன்றி சாவு வீடுகளிலும் கூட அப்போதெல்லாம் பஜனை பாடப்படும். இறைவனின் திருநாமம் பஜனையாக பாடப்படுவதால் மண்டையைப் போட்டவர் சிவனடிக்கோ அல்லது வைகுண்டத்துக்கோ டைரக்ட் விசா வாங்கிக் கொள்வார் என்றொரு நம்பிக்கை.

‘பஜனை’ என்கிற சொல் வேறு ஆபாசப் பொருளிலும் பயன்படுத்தப்பட்டு தொலைப்பதால், அந்த சொல்லை பயன்படுத்தவே சங்கோஜமாகதான் இருக்கிறது. இருந்தாலும் பஜனைக்கு பொருத்தமான மாற்றுச்சொல் எதுவும் தோன்றாததால் அதையே பயன்படுத்தித் தொலைக்கவும் வேண்டியிருக்கிறது.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட்.

சிறுவயதில் இம்மாதிரி பஜனைகளில் நிறைய கலந்துக்கொண்டிருக்கிறேன். அப்பா போகும்போது கூடவே அழைத்துப் போவார். நெற்றி முழுக்க விபூதி பூசி, நடுவில் குங்குமம் வைத்து ‘அம்மாஞ்சி’ கோலத்தில் போவேன். கோயில் பஜனையின் முடிவில் சுண்டலோ, சர்க்கரைப் பொங்கலோ வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு குடும்பம் இந்த பொறுப்பை எடுத்துக் கொள்ளும். இதை ‘கைங்கர்யம்’ என்கிற குறிச்சொல்லால் குறிப்பிடுவார்கள். சாவு வீட்டு பஜனைகளில் (16ஆம் நாள் காரியத்துக்கு முந்தைய இரவும் கூட பஜனை உண்டு) சுக்குக்காபிதான் மேக்ஸிமம் கேரண்டி.

நிறைய அமெச்சூர் பாடகர்கள் இருப்பார்கள். வாத்தியமும் அவர்களே எப்படியோ பழகி சுமாராக வாசிப்பார்கள். அப்பா கூட ‘சோலோ’வாக பாடுவதுண்டு. ‘அம்பா நீ இரங்காயெனில் புகலேது’ என்று கட்டைக்குரலில் உச்சஸ்தாயியில் கர்ணகடூரமாக பாடுவார். நாமெல்லாம் கோஷ்டி கானம்தான். சோலோ பாடகர் பாடிய வரிகளை அடுத்து கோஷ்டியாக பாடுவது. பஜனையில் நம்முடைய காண்ட்ரிப்யூஸன் என்னவென்றால் ‘ஜால்ரா’ தட்டுவதுதான். ஒவ்வொரு பாட்டின் மெட்டுக்கு ஏற்ப தகுந்த இடைவெளி கொடுத்து தட்டவேண்டும். இல்லாவிட்டால் பாடுபவருக்கு ‘மூடு’ போய்விடும். நம் மண்டையில் நாலு தட்டு தட்டி, நம் கையில் இருக்கும் ஜால்ராவை பிடுங்கி, வேறு இசைக்கலைஞருக்கு (!) கொடுத்துவிடுவார்கள்.

விடிய விடிய நடக்கும் பஜனைகளில் அந்த காலத்தில் நாம் பங்கு பெற்றதுண்டு. தூக்கமில்லாமல் கண்கள் எரிய காலையில் ஒரு மாதிரியாக ‘கிர்’ அடிக்கும். இதைதான் ‘ஆன்மீக தரிசனம்’ அல்லது ‘அனுபவம்’ என்று அப்பா மாதிரி ஆத்திகர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். காலையில் வீட்டுக்கு வந்து குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு படுத்தால் பேய்த்தூக்கம் வரும்.

ஆனால், ஒரே ஒரு பிரதானமான பிரச்சினை. ஒரு பஜனைக் கச்சேரிக்கு போய்விட்டு வந்தால் அடுத்து இரண்டு, மூன்று நாட்களுக்கு காதில் மெலிதாக ‘ஜிங் சாக், ஜிங் சாக்’ என்று ஜால்ரா சத்தம் மட்டும் எதிரொலித்துக்கொண்டே இருப்பது மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும். எங்கோ தூரத்தில் பஜனை நடக்கிறதோ என்றுகூட மாயை ஏற்படும். எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவலில் கேட்கும் குரல் மாதிரி.

என்னை நானே நாத்திகன் என்று நம்ப ஆரம்பித்ததிலிருந்து இம்மாதிரி பஜனைக் கோஷ்டிகளில் கலந்துக் கொள்வதில்லை. அதனால் ‘சத்தம்’ எதுவும் இப்போது கேட்பதில்லை. ஆனால் ஒரு ரெண்டு, மூன்று நாளாக திடீரென்று காதுக்குள் ‘ஜெய் ஹோ.. ஜெய் ஹோ..’ என்று ஹைடெசிபலில், ஏ.ஆர்.ரஹ்மான் வாய்ஸில் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ வந்தபோதுகூட காதுக்குள் கேட்காத இந்த சத்தம் இப்போது ஏன் கேட்கிறது என்பதுதான் விளங்கிக்கொள்ள முடியாத புதிராக இருக்கிறது.

1 ஏப்ரல், 2013

ஹாலிவுட் 'பரதேசி' : Django Unchained

பாலாவின் ‘பரதேசி’ பார்த்திருப்பீர்கள். அதற்கு செகண்ட் பார்ட் எடுத்தால் எப்படியிருக்கும்? பரதேசியின் க்ளைமேக்ஸில் ராசாவும், அங்கம்மாவும் தேயிலைத் தோட்டத்தில் இணைகிறார்கள். “நரகக்குழிக்குள் வந்து மாட்டிக்கிட்டீயே அங்கம்மா” என்று ராசா கதறுகிறார். செகண்ட் பார்ட்டில் ராசாவும், அங்கம்மாவும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வேறு வேறு தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். ராசா அங்கிருந்து தப்பி, அங்கம்மாவை கண்டுபிடித்து சிலபல ஆக்‌ஷன் செய்து கைபிடிக்கிறார் என்று பரதேசி-2 எடுக்கலாம் இல்லையா? பாலா அப்படி எடுப்பதாக இருந்தால் Django Unchainedஐ ஒன்றுக்கு நாலு முறை பார்ப்பது நல்லது. ஏனெனில் இப்படத்தின் கதையும் அதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையாளரோடு இயக்குனர் குவென்டின் டாரண்டினோ பேசிக்கொண்டிருந்தார். சுவாரஸ்யமாக பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. அமெரிக்காவைப் பற்றிப் பேசும்போது வரலாற்றுக்குள் நுழைந்துவிட்டார்கள். 1860ல் அங்குநடந்த சிவில் போர் பற்றி சுவாரஸ்யமாக பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. சிவில் போருக்கு முன்பாக அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த ‘அடிமை வியாபாரம்’ பற்றிய பேச்சு வந்தபோது குவென்டின் உணர்ச்சிவசப்பட்டார். “அமெரிக்காவின் கடந்த காலத்தை பற்றிய படங்கள் ஏராளமாய் வந்திருக்கிறது. அவை அமெரிக்கர்களின் பாசிட்டிவ்வான பக்கத்தை விளம்பரப்படுத்தும் விதமாகதான் இருக்கின்றன. நேரெதிரான நெகடிவ் பக்கத்தை பேச விரும்புவதில்லை. இதற்கு காரணம் அவர்களது குற்றவுணர்ச்சி. மற்ற நாடுகளை சேர்ந்த இயக்குனர்களுக்கோ இதைப்பற்றி எந்த புரிதலும் இல்லை என்பதால் சும்மா இருக்கிறார்கள். இந்த விஷயத்தை நான் படமாக்க விரும்புகிறேன்”

குவென்டின் வெறும் வாய்ப்பேச்சு வீரர் அல்ல. சொன்னதை செய்து முடித்தார். 2012 கிறிஸ்துமஸுக்கு ‘ட்ஜாங்கோ அன்செய்ன்ட்’ வெளியானது. அமெரிக்க தேசியவாதிகளுக்கு கசப்பு மருந்துதான் என்றாலும் எடுத்தவர் உலகம் போற்றும் குவென்டின் ஆயிற்றே? சங்கடத்தோடு ஒப்புக்கொண்டார்கள்.

quentin400
போனவாரம்தான் (மார்ச் 27) குவென்டினுக்கு ஐம்பது வயது நிறைவு பெற்றது. டாரண்டினோ சிறுவயதிலிருந்தே சினிமா வெறியர். வீடியோ கடையில் வேலை பார்த்தபோது, கண்கள் சிவக்க சிவக்க வெறித்தனமாக படங்களை பார்த்தார். ஹாலிவுட்டில் படம் எடுக்க வேண்டுமென்றால் ஸ்டுடியோக்களின் அனுசரணை வேண்டும். இந்நிலையை அவர் வெறுத்தார். ஸ்டுடியோக்களின் சர்வாதிகார கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் சுயாதீனமாக படமெடுக்க விரும்பும் இண்டிபெண்டண்ட் ஃபிலிம் மேக்கர்ஸ் என்று இப்போது ஹாலிவுட்டில் நிறைய படைப்பாளிகள் ‘சுயேச்சையாக’ களத்தில் நிற்கிறார்கள். தொண்ணூறுகளில் இப்போக்குக்கு பிள்ளையார் சுழி போட்டவர்களில் குவென்டினும் ஒருவர். 1992ல் வெளிவந்த இவரது ரிசர்வாயர் டாக்ஸ், ‘ஆல்டைம் கல்ட் க்ளாசிக் மூவி’ என்று இருபது வருடங்கள் கழித்தும் இன்றும் ஹாலிவுட் ரசிகர்களால் போற்றப்படுகிறது. 94ல் வெளிவந்த ‘பல்ப் ஃபிக்‌ஷன்’ குவென்டினை உலகின் தலைசிறந்த இயக்குனர்களின் வரிசையில் சேர்த்தது. உலகின் சிறந்த படங்களை பட்டியலிடும்போது இதை தவிர்க்கவே முடியாது.

குவென்டினின் படங்கள் பொதுவாக அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையை பகடி செய்கிறது. அமெரிக்காவின் குரூரமான வன்முறைத் தன்மையை கேலி செய்து ‘பெப்பே’ காட்டுகிறது. இவரது அப்பா டோனி ஒரு நடிகரும், கத்துக்குட்டி இசையமைப்பாளராகவும் வாழ்ந்தார். இத்தாலியப் பரம்பரை. நர்ஸாக வாழ்ந்த அம்மா ஐரிஷ் பரம்பரை. குவென்டின் உடம்பில் ஓடுவது சுத்தபத்தமான ஐரோப்பிய ரத்தம். இவர் பிறப்பதற்கு முன்பாக அப்பாவும், அம்மாவும் பிரிந்து விட்டார்கள். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிப்புப்பயிற்சிக்குப் போனவர். சிறுவயது அனுபவங்கள் அமெரிக்க வாழ்க்கை முறையை குறித்த ஒரு கேலியான பார்வையை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

560072_449177298509710_1543056271_n copy
குவென்டினின் படங்களை பார்ப்பவர்கள் சிலர் அவரை கிறுக்கு என்றுகூட கருதக்கூடும். விழுந்து விழுந்து சிரிக்கைவைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் ரத்தம் தெறிக்க தெறிக்க முடியும். மிகக்கோரமான வன்முறைக்கு, மனதை மயக்கும் ரொமான்டிக் பின்னணி இசையை சேர்ப்பது குவென்டின் ஸ்டைல். கதையை நேர்க்கோடாக சொல்லாமல் முன்பின் மாற்றி நான்லீனியராக சுற்றி வளைப்பார். அவர் மீது ஆயிரம் விமர்சனம் சொல்பவர்களும் கூட அவரது படம் வந்தால் தவறவிடாமல் பார்க்கக்கூடிய வசீகரமான ஸ்டைல் குவென்டினுக்கு உண்டு. பின்னணி இசையை தன்னுடைய படுக்கையறையில் கண்களை மூடி படுத்துக்கொண்டே கேட்டு, படத்தில் அக்காட்சியை எப்படி சித்தரிக்கலாம் என்று யோசிப்பாராம்.


“வன்முறையாகவே படங்களை எடுக்கிறீர்களே? இதைப்பார்த்து யாராவது கெட்டுப்போய் யாரையாவது கொலை செய்தால் அதற்கு யார் பொறுப்பு?” ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.


“குங்ஃபூ படத்தைப் பார்த்து யாராவது நூறு பேரை ரோட்டில் போட்டு அடிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. சினிமா வன்முறை ஒரு ஃபேண்டஸி. மக்களுக்கு திரையில் ஓடும் காட்சிகளையும், சொந்த வாழ்க்கை யதார்த்தத்தையும் பிரித்துணர தெரியுமென்று நான் நம்புகிறேன்” அவர் சொன்ன பதில்.


குவென்டினை விடுங்கள். அவர் இப்படித்தான். ட்ஜாங்கோவுக்கு வருவோம். முந்தையப் படமான ‘இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ (தலைப்பில் கூட எவ்வளவு வன்முறை பாருங்கள்) ஹிட்லரையும், அவரது நாஜிப்படையையும் காமெடியாக துடைத்தெறிந்தது. இப்படத்தில் அமெரிக்க வரலாற்றில் சின்ன திருத்தத்தை செய்ய முனைந்திருக்கிறார் குவென்டின்.

நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக கருப்பர் இன மக்களை பண்டம் மாதிரி காசு கொடுத்து வாங்குவதும், விற்பதுமாக ‘அடிமை வியாபாரம்’ அமெரிக்காவில் இருந்தது. அடிமை வியாபாரிகள் ஒருபுறம், கருப்பர்களை கண்டாலே அழித்துவிடுவதுதான் இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று நம்பிக்கொண்டிருந்த கூ க்ளக்ஸ் க்ளான் என்கிற வன்முறை அமைப்பு இன்னொருபுறம்.
                                                
leo560
ட்ஜாங்கோவும், அவனது மனைவியும் ஒரு அடிமை வியாபாரியிடம் இருந்து கைமாறும்போது பிரிகிறார்கள். மனிதத்துக்கு எதிரான இம்முறையை கடுமையாக எதிர்க்கும் ஒரு ஜெர்மன் மருத்துவர் ட்ஜாங்கோவை விடுதலை செய்கிறார். அவரது உதவியோடு தன் மனைவியை தேடி கண்டுபிடிக்கிறான் ட்ஜாங்கோ. கரம் மசாலா கதை. வழக்கமான சுற்றிவளைக்கும் பாணியில் சொல்லாமல் நேரடியாக சிரிக்க சிரிக்க, இரத்தம் தெறிக்க தெறிக்க, துப்பாக்கிகள் வெடித்துக்கொண்டேயிருக்க பரபரவென எடுத்திருக்கிறார் குவென்டின்.

ஆரம்பத்தில் ட்ஜாங்கோவாக வில் ஸ்மித்தை அணுகியதாக ஒரு பேச்சு. கேரக்டர் அவ்வளவு வெயிட்டாக இல்லாததால் ஒப்புக்கொள்ளவில்லையாம். படம் பார்த்தபின் அந்த முடிவுக்காக ஸ்மித் வருத்தப்பட்டிருப்பார். உலகமே கொண்டாடிய டைட்டானிக் ஜாக்கான லியானார்டோ டி கேப்ரியோ, குவெண்டின் படமென்பதால் கொடூரமான வில்லன் பாத்திரத்தை ஒப்புக்கொண்டு அசத்தியிருக்கிறார்.

குவென்டின் ஃபிலிமில் படமெடுத்து பழக்கப்பட்டவர். டிஜிட்டலில் எடுப்பதை சினிமாவாக அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஃபிலிமில் படமெடுக்கும் பழக்கம் கிட்டத்தட்ட ஒழிந்துவிட்டதால், இனி படமெடுப்பேனா என்றே தெரியவில்லை என்று இப்படம் முடியும்போது வருத்தமாக சொன்னார். போலவே அவரது எல்லா படங்களையும் ‘எடிட்டிங்’ செய்யும் சாலிமென்கே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் தவிர்த்து வேறொரு எடிட்டருடன் குவென்டின் முதல்முறையாக வேலை பார்த்தது இந்தப் படத்தில்தான். சாலியிடம் ‘கில்பில்’ காலத்தில் உதவியாளராக இருந்த ப்ரெட்ரஸ்கின் இப்படத்தை எடிட்டியிருக்கிறார்.
                                          
dijango
படம் வெளியானதுமே வழக்கம்போல விமர்சகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். குவென்டின் பழக்கப்பட்டு விட்டார் என்பதற்காக ரசிகர்களும் அவரது பெயருக்காகவே அரங்குக்கு வந்து வசூலை வாரியிறைத்திருக்கிறார்கள். இதுவரை வந்த குவென்டினின் படங்களிலேயே அதிகவசூலை இப்படம்தான் ஈட்டி வருகிறது. ‘நிக்கர்’ என்கிற சொல் அனாயசமாக படத்தில் பயன்படுத்தப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது. அந்த சொல் இல்லாமல் எப்படி இப்படத்தை எடுத்திருக்க முடியும் என்று இன்னொரு க்ரூப்பும் கச்சை கட்டிக் கொண்டிருக்கிறது. விருதுகளும், பாராட்டுகளும் குவியும் ஒரு படத்துக்கு பின்னால் சர்ச்சைகள் இல்லாமல் இருந்தால் எப்படி? சினிமாவில் மாபெரும் வெற்றியை கவுரவப்படுத்தும் விஷயங்களே இந்த சர்ச்சைகள்தான்.

ஃபிலிமில் படமெடுக்கும் சாத்தியங்கள் அசாத்தியமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து குவென்டின் படம் இயக்கப் போகிறாரா, இல்லை கடுப்பாகிப்போய் ஓய்வினை அறிவித்துவிடப் போகிறாரா என்பதுதான் இப்போது ஹாலிவுட்டின் ஹாட் டாக்.
                              
leonardo
(நன்றி : cinemobita.com)