5 ஏப்ரல், 2013

பஜனை

எங்க ஊரில் பஜனை ரொம்ப ஃபேமஸ். பஜனை செய்யவே ஒரு கோயில் இருக்கிறது. அந்தத் தெருவின் பெயரே பஜனை கோயில் தெருதான். கோயிலில் மட்டுமன்றி சாவு வீடுகளிலும் கூட அப்போதெல்லாம் பஜனை பாடப்படும். இறைவனின் திருநாமம் பஜனையாக பாடப்படுவதால் மண்டையைப் போட்டவர் சிவனடிக்கோ அல்லது வைகுண்டத்துக்கோ டைரக்ட் விசா வாங்கிக் கொள்வார் என்றொரு நம்பிக்கை.

‘பஜனை’ என்கிற சொல் வேறு ஆபாசப் பொருளிலும் பயன்படுத்தப்பட்டு தொலைப்பதால், அந்த சொல்லை பயன்படுத்தவே சங்கோஜமாகதான் இருக்கிறது. இருந்தாலும் பஜனைக்கு பொருத்தமான மாற்றுச்சொல் எதுவும் தோன்றாததால் அதையே பயன்படுத்தித் தொலைக்கவும் வேண்டியிருக்கிறது.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட்.

சிறுவயதில் இம்மாதிரி பஜனைகளில் நிறைய கலந்துக்கொண்டிருக்கிறேன். அப்பா போகும்போது கூடவே அழைத்துப் போவார். நெற்றி முழுக்க விபூதி பூசி, நடுவில் குங்குமம் வைத்து ‘அம்மாஞ்சி’ கோலத்தில் போவேன். கோயில் பஜனையின் முடிவில் சுண்டலோ, சர்க்கரைப் பொங்கலோ வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு குடும்பம் இந்த பொறுப்பை எடுத்துக் கொள்ளும். இதை ‘கைங்கர்யம்’ என்கிற குறிச்சொல்லால் குறிப்பிடுவார்கள். சாவு வீட்டு பஜனைகளில் (16ஆம் நாள் காரியத்துக்கு முந்தைய இரவும் கூட பஜனை உண்டு) சுக்குக்காபிதான் மேக்ஸிமம் கேரண்டி.

நிறைய அமெச்சூர் பாடகர்கள் இருப்பார்கள். வாத்தியமும் அவர்களே எப்படியோ பழகி சுமாராக வாசிப்பார்கள். அப்பா கூட ‘சோலோ’வாக பாடுவதுண்டு. ‘அம்பா நீ இரங்காயெனில் புகலேது’ என்று கட்டைக்குரலில் உச்சஸ்தாயியில் கர்ணகடூரமாக பாடுவார். நாமெல்லாம் கோஷ்டி கானம்தான். சோலோ பாடகர் பாடிய வரிகளை அடுத்து கோஷ்டியாக பாடுவது. பஜனையில் நம்முடைய காண்ட்ரிப்யூஸன் என்னவென்றால் ‘ஜால்ரா’ தட்டுவதுதான். ஒவ்வொரு பாட்டின் மெட்டுக்கு ஏற்ப தகுந்த இடைவெளி கொடுத்து தட்டவேண்டும். இல்லாவிட்டால் பாடுபவருக்கு ‘மூடு’ போய்விடும். நம் மண்டையில் நாலு தட்டு தட்டி, நம் கையில் இருக்கும் ஜால்ராவை பிடுங்கி, வேறு இசைக்கலைஞருக்கு (!) கொடுத்துவிடுவார்கள்.

விடிய விடிய நடக்கும் பஜனைகளில் அந்த காலத்தில் நாம் பங்கு பெற்றதுண்டு. தூக்கமில்லாமல் கண்கள் எரிய காலையில் ஒரு மாதிரியாக ‘கிர்’ அடிக்கும். இதைதான் ‘ஆன்மீக தரிசனம்’ அல்லது ‘அனுபவம்’ என்று அப்பா மாதிரி ஆத்திகர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். காலையில் வீட்டுக்கு வந்து குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு படுத்தால் பேய்த்தூக்கம் வரும்.

ஆனால், ஒரே ஒரு பிரதானமான பிரச்சினை. ஒரு பஜனைக் கச்சேரிக்கு போய்விட்டு வந்தால் அடுத்து இரண்டு, மூன்று நாட்களுக்கு காதில் மெலிதாக ‘ஜிங் சாக், ஜிங் சாக்’ என்று ஜால்ரா சத்தம் மட்டும் எதிரொலித்துக்கொண்டே இருப்பது மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும். எங்கோ தூரத்தில் பஜனை நடக்கிறதோ என்றுகூட மாயை ஏற்படும். எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவலில் கேட்கும் குரல் மாதிரி.

என்னை நானே நாத்திகன் என்று நம்ப ஆரம்பித்ததிலிருந்து இம்மாதிரி பஜனைக் கோஷ்டிகளில் கலந்துக் கொள்வதில்லை. அதனால் ‘சத்தம்’ எதுவும் இப்போது கேட்பதில்லை. ஆனால் ஒரு ரெண்டு, மூன்று நாளாக திடீரென்று காதுக்குள் ‘ஜெய் ஹோ.. ஜெய் ஹோ..’ என்று ஹைடெசிபலில், ஏ.ஆர்.ரஹ்மான் வாய்ஸில் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ வந்தபோதுகூட காதுக்குள் கேட்காத இந்த சத்தம் இப்போது ஏன் கேட்கிறது என்பதுதான் விளங்கிக்கொள்ள முடியாத புதிராக இருக்கிறது.

11 கருத்துகள்:

  1. மேக்ஸிமம் கேரண்டி...!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா7:00 PM, ஏப்ரல் 05, 2013

    I think you are mentioning about A.V article.
    I got the same feeling when i read the article.Before reading the article i was about to renew my online subscription. But i did not do after reading that article. Appa enna jalra..kathula koyung..koyung than ponga.. this is my first comment in any blog i used to read...

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7:24 PM, ஏப்ரல் 05, 2013

    டண்டனக்கு டண்டனக்கு டம் .. டுடும், டுடும்.. டண்டனக்கு டண்டனக்கு டம். டின்டக்கு டின்டக்கு, டும்டடக்கு டகடி டகடி டனக்கு டனக்கு டினக்கு டகடி.. டன்கர டன்கர டின்கர டிங்கர டுமுக்கு டுமுக்கு டும் . டுமுக்கு டுமுக்கு டும் . டுமுக்கு டுமுக்கு டும் டும் டும் டும்டும்

    பதிலளிநீக்கு
  4. அம்மாவின் வாய்பேசி ஆ.வி எபெக்ட் தான்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா8:18 AM, ஏப்ரல் 06, 2013

    அண்ணா, இது ஒரு பிரச்னையே அல்ல. தமிழ் நாட்டில் நீங்கள், நான் உட்பட பல பேருக்கு இவ்வாறுதான் உள்ளது.

    இது ஒரு சக்கரம் போல... சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன்பு
    "உலகம், தமிழ், தமிழினம், தலைவர், உலக தமிழினத் தலைவர்!!!!!!!!..... செம்மொழி, தமிழ் மொழி, செம்மொழி தமிழ்மொழி!!!!!.... என நடிகர் பார்த்திபன் குரலில் யார் யாரோ சொல்லும் சத்தமும்;

    கடல், கல், கயிறு, கட்டி வீசு, கடலிலே வீசினாலும் நாஆஆன்!!!!... என பாண்டிய மன்னன், அப்பர் இப்படி பல பேர் ஹைடெசிபலில் கத்துவதும்;

    இட்லி, ஈழம், புல் மீல்ஸ், உணவு, விரதம், உண்ணாவிரதம் என சம்பந்தமே இல்லாமல் ஒரு ஜுகல்பந்தியும்; காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது.

    தற்போது அது பரிணாம வரர்ச்சி அடைந்து ஜெய்ஹோவில் நிற்கிறது.

    இவ்வாறு நடப்பது, பல பேர் நம்புவதும், சில பேர் அதை மேற்கோள் காட்டுவதுமாகிய "தலைவிதி" என்று சொன்னால் அது மிகையாகாது!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா2:52 PM, ஏப்ரல் 07, 2013

    கடைசி பாராவில் புரிந்தது... திருமாவேலனின் ஆ.வி.கட்டுரை என்று...

    ஆ.வி.யின் மீதான மதிப்பு சுத்தமாக குறைந்து விட்டது. நான் ரூ.1999 சந்தா கொடுத்திருக்கிறேன். இன்னொருவர் சொன்ன மாதிரி, ரினிவல் பண்ணலாமா வேணாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    ஜெயலலிதா கட்சிக்காரர்களுக்காக நடத்தப்படும் பிரச்சாரப் பத்திரிகையை நாம் வேறு காசு கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
  7. பஜனை என்ற தலைப்பை பார்த்து ஆரவமாக வந்தேன் :-(

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா10:22 AM, ஏப்ரல் 09, 2013

    An Intelligent article. Nice.

    பதிலளிநீக்கு