15 ஏப்ரல், 2013

தமிழக அரசின் நரபலி

சமீபத்தில் சென்னையில் மூன்று வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தித்தாளில் வாசித்தோம். ஒரு குடுகுடுப்பைக்காரனின் பேச்சை கேட்டு ஓர் அப்பாவிப்பெண் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டதாக தகவல். மத அடிப்படைவாதம் பெற்ற பிள்ளை மூடநம்பிக்கை. எனவே இச்செயலில் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை.

தினமலரில் வாசித்த இன்னொரு செய்தி.

புதுக்கோட்டையில் வசிப்பவர் ஜாஹீர் உசேன். இவரது ஒரே மகள் நிலோபர்பானு, பதினெட்டு வயது (திமுக பொதுக்குழு உறுப்பினரான அப்துல்லாவின் உறவினர்கள் இவர்கள்). நிலோபர்பானு +2வில் 1100 மதிப்பெண் எடுத்து என்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் செலவு செய்ய ஜாஹீரிடம் பணமில்லை. உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ பணம் கேட்க ஜாஹீருக்கு தயக்கம். எனவே மகளை கலைக்கல்லூரி ஒன்றில் சேர்த்திருக்கிறார். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்து வந்தார் பானு.

குடும்பச் செலவுக்காக அருகிலிருந்த ஜெராக்ஸ் கடை ஒன்றில் பகுதிநேரமாக பணியும் செய்து வந்திருக்கிறார் பானு. இதில் கிடைக்கும் சொற்ப வருமானம் மூலமாக தந்தையுடைய நிதிச்சுமையை குறைத்திருக்கிறார். கடையில் பணிபுரியும்போது அடிக்கடி மின்தடை ஏற்பட்டிருக்கிறது. மின்தடை ஏற்படும் போதெல்லாம் ஜெனரேட்டரை இக்கடையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். போனவாரத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட மின் தடையின் போது ஜெனரேட்டரை ‘ஆன்’ செய்திருக்கிறார் பானு. இருட்டில் கொஞ்சம் தடுமாறிய அவரது தாவணி ஜெனரேட்டர் மோட்டாரில் சிக்கிக் கொண்டது. இதை எடுக்க முயற்சிக்கும்போது அவரது தலைமுடியும் மோட்டாரில் சிக்கி, ஏடாகூடமாக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். தலையில் பலத்த காயமடைந்த பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

பானுவின் மரணத்துக்கு நேரடித்தொடர்பு அரசுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் காரணம் அரசுதான் என்பதை மறுக்க முடியுமா? வியாசர்பாடி பெண் அறியாமையால் பக்கத்து வீட்டு குழந்தையை பலி கொடுத்ததற்கும், இதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறதா என்ன? தமிழக அரசின் வரலாறு காணாத சாதனையான மின்வெட்டுக்கு நம் கண் முன்னே பலி கொடுக்கப்பட்டிருக்கிறார் படிப்பில் படுசுட்டியான பானு. கண்ணுக்கு தெரியாத நரபலிகள் இன்னும் எத்தனை எத்தனையோ?

7 கருத்துகள்:

  1. வேதனையான நிகழ்வுகள்
    சோதனையின் பதிவுகளாய்

    விழிகளில் நீர் வடிகிறது
    விழிகளின் பாவையிருக்க
    விழிகள் பார்க்க பார்வை விழுந்த இடத்தில ஒளியில்லை
    ஒளியற்ற இரவால் காலத்தை மிஞ்சிய குற்றங்கள்
    ஓரிரு திங்களில் தடையற்ற மின்சாரம் மிகையாகிவிடும்
    குறையின்றி வாழலாம் கொடுத்த வாக்கு
    காற்றோடு காற்றாய் மறைந்தது
    கறைபடிந்த படிந்த இரவுகளாய் தமிழகம்

    பதிலளிநீக்கு
  2. Totally agree that the incidents noted are unfortunate. But would you have written the same post if the generator accident has happenned during DMK ruling ? The electricity scarcity would have lasted even if DMK has been selected during last state elections. Both the partied have missed their resposibilities in preplanning for electricity. I have a lot of respect for your writing style. But the respect gets affected sometimes by the things you choose to write.

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள சகோதரர் யுவகிருஷ்ணா அவர்களுக்கு இம்மாதிரி பல நிகழ்வுகள் நடந்தாலும் மக்கள் கவனம் வேண்டும் என்பதின் காரணத்தை மனதில் கொண்டு இந்த நிகழ்வுகளை மக்களுக்கு அறிய வைக்க வேண்டியது நமது கடமையாகிவிடுகிறது.நாம் பாதிக்கப் பட்டவர்களின் மன அமைதியைப் பெற இறைவனை இறைஞ்சுவோம்.
    மின்சாரத்தின் பற்றாகுறை மக்களை மிகவும் பாதித்துள்ளது .திட்டமிடல் முறைபடுத்தப் பட வேண்டும் .

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா6:38 AM, ஏப்ரல் 16, 2013

    கருணாநிதி ஆட்சிக்காலத்தில் யாரும் ஜெனரடோர் உபயோகப்படுத்தினது இல்லையா?

    பதிலளிநீக்கு
  5. மொ.த க்கும் ,மு.கா க்கும் முடிச்சு போட உம்மால் மட்டுமே இயலும்

    பதிலளிநீக்கு
  6. மின்பற்றாக்குறையில் தமிழக அரசு இயன்றவரைச் செய்து வந்தாலும் இந்த சம்பவத்திற்கு தனிநபரின் கவனக்குறைவு அல்லது விபத்தே காரணம். அதைவிட அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்துள்ளது. இந்நிலையில் அரசை கிண்டலடிக்கும் இத்தகைய ஆக்கங்கள் கொஞ்சம் டிப்ளமேட்டிக்காக மாற்றி எழுதி, பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவியும், அரசு இழப்பீடும் கிடைக்கும் வகையில் எழுதலாம். அனுப்பிவருக்கும், எழுதியவருக்கும் இதை தெரிவித்தால் நல்லது.

    jamal udheen

    சகோதரர் jamal udheen கருத்துக்கள் ஆக்க பூர்வமான சிந்தனையின் வெளிப்பாடு ..அதே வேளை அரசு நேரடியாக இதில் சம்பந்த படாவிட்டாலும் -மின்வெட்டும் ஒரு காரணம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
    hasangani

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா2:01 PM, மே 01, 2013

    Don't you understand DMK, which was in power for 10 years prior to Jaya, did not take any steps to meet the growing need for electricty. Now people like you are trying to put the blame totally on Jaya. DMK should be held responsibility for todays power cut. Also we should think about all the hurdles caused by Congress , preventing us getting electricity from central grid.
    Try to understand, any power projects planned now will take at least few years to yield.
    All your comments are totally biased.

    பதிலளிநீக்கு