டெல்லி பாலியல் குற்றத்தில் நான்கு பேருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு கலைஞர் கருத்து கூறியிருக்கிறார். “தூக்குத்தண்டனை குறித்து எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், இந்த குறிப்பிட்ட குற்றத்தை பொறுத்தவரை நீதிபதிகள் சரியான தீர்ப்பைதான் வழங்கியிருக்கிறார்கள்” என்று அவர் நேற்று சொல்லியிருக்கிறார்.
கலைஞர் அரசியல்வாதி. இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலில் தன்னுடைய கட்சியை வெற்றிபெற செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார். எனவே பொதுமக்களின் செண்டிமெண்டுக்கு எதிரான எந்த கருத்தையும் இச்சூழலில் அவரால் சொல்லிவிட முடியாது. ஆனால் இம்மாதிரி நிர்ப்பந்தங்கள் இல்லாத சூழலில் அவர் ஏற்கனவே சொல்லியிருப்பதைதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். “தூக்குத்தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு, சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு” என்று அழுத்தம் திருத்தமாக மரணத்தண்டனை குறித்து அவர் பேசியிருக்கிறார்.
தூக்குத்தண்டனையை ஆதரிப்பவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த ஒரு கொடூர குற்றத்தையும் கண்டவுடனேயே, கேட்டவுடனேயே “இவனையெல்லாம் நடுத்தெருவுலே வெச்சி நாய் மாதிரி சுட்டுக் கொல்லணும்” என்கிற கருத்தினை உடனடியாக உச்சரிப்பவர்கள். இது அறிவுபூர்வமான எண்ணமாக நிச்சயம் ஆகாது. உணர்வுபூர்வமான முடிவுகள் எப்போதுமே வரலாற்றில் கறையாகதான் பதிவாகும்.
நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சிப்பது அறமல்ல. ஆனாலும் சில காலமாக நீதிமன்றங்களும் அரசியல்வாதிகளைப் போலவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்ப்பளிப்பதாக தோன்றுகிறது. பாபர் மசூதி விவகாரத்திலிருந்து, நேற்றைய நிர்பயா பாலியல் கொலை வழக்கு வரை இதற்கு நிறைய உதாரணங்களை காட்டமுடியும். நீதி தேவதை மூளையால் சிந்திக்க வேண்டும். மனசு சொல்வதை கேட்டு தீர்ப்பளிக்கக்கூடாது.
அடுத்து சில சட்டமன்றத் தேர்தல்களையும், பாராளுமன்றத் தேர்தலையும் எதிர்நோக்கியிருக்கும் காங்கிரஸுக்கு நிர்பயா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நிம்மதியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே மத்திய அரசின் டி.ஆர்.பி. இறங்கிக் கொண்டிருக்கும்போது, கசாப் தூக்கிலிடப்பட்டு மீண்டும் டி.ஆர்.பி. எகிறியதை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
அவ்வப்போது இம்மாதிரி தீர்ப்புகள் வரும்போது சீசனலாக மட்டுமே மரணத்தண்டனையை எதிர்க்காமல், கொடூரமான காட்டுமிராண்டித்தனமான.. அதேநேரம் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற இத்தண்டனையை ஒட்டுமொத்தமாக மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டோர் எதிர்த்தாக வேண்டும். மரணத்தண்டனையை ஒழிப்போம் என்று குரல் கொடுப்போரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். மரணத் தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் செய்தாக வேண்டும்.
மரணத்தண்டனையை ஒழிக்கக் கோருவது குற்றவாளிகளுக்கு ஆதரவான செயல்பாடு அல்ல என்று பிரித்தறிந்து அனைவரும் பொருள் கொள்ள வேண்டும். கொடூரமான குற்றம் செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஆனால் அந்த அதிகபட்சத் தண்டனை என்பது மரணத்தண்டனை அல்ல என்பதே நம் கருத்து.
மரணத்தண்டனை குறித்த முந்தைய சில பதிவுகள் :
மரணத்தண்டனை : அம்மாவுக்கு வேண்டுகோள்!
மரணத்தைக் கொண்டாடும் தேசம்!