14 செப்டம்பர், 2013

தூக்குத்தண்டனையை தூக்கில் ஏற்றுவோம்

காட்டுமிராண்டித்தனமான மரணத்தண்டனை நாகரிக உலகில் நீடிக்கக் கூடாது. நிர்பயா வழக்கு, ராஜீவ் கொலை வழக்கு என்று தனித்தனியாக வழக்கு வாரியாக பார்க்காமல் ஒட்டுமொத்தமாக மரணத்தண்டனையை எதிர்ப்பதே நாகரிகம் பெற்ற மனிதனின் நிலைப்பாடாக இருக்க முடியும்.

டெல்லி பாலியல் குற்றத்தில் நான்கு பேருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு கலைஞர் கருத்து கூறியிருக்கிறார். “தூக்குத்தண்டனை குறித்து எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், இந்த குறிப்பிட்ட குற்றத்தை பொறுத்தவரை நீதிபதிகள் சரியான தீர்ப்பைதான் வழங்கியிருக்கிறார்கள்” என்று அவர் நேற்று சொல்லியிருக்கிறார்.

கலைஞர் அரசியல்வாதி. இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலில் தன்னுடைய கட்சியை வெற்றிபெற செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார். எனவே பொதுமக்களின் செண்டிமெண்டுக்கு எதிரான எந்த கருத்தையும் இச்சூழலில் அவரால் சொல்லிவிட முடியாது. ஆனால் இம்மாதிரி நிர்ப்பந்தங்கள் இல்லாத சூழலில் அவர் ஏற்கனவே சொல்லியிருப்பதைதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். “தூக்குத்தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு, சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு” என்று அழுத்தம் திருத்தமாக மரணத்தண்டனை குறித்து அவர் பேசியிருக்கிறார்.

தூக்குத்தண்டனையை ஆதரிப்பவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த ஒரு கொடூர குற்றத்தையும் கண்டவுடனேயே, கேட்டவுடனேயே “இவனையெல்லாம் நடுத்தெருவுலே வெச்சி நாய் மாதிரி சுட்டுக் கொல்லணும்” என்கிற கருத்தினை உடனடியாக உச்சரிப்பவர்கள். இது அறிவுபூர்வமான எண்ணமாக நிச்சயம் ஆகாது. உணர்வுபூர்வமான முடிவுகள் எப்போதுமே வரலாற்றில் கறையாகதான் பதிவாகும்.

நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சிப்பது அறமல்ல. ஆனாலும் சில காலமாக நீதிமன்றங்களும் அரசியல்வாதிகளைப் போலவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்ப்பளிப்பதாக தோன்றுகிறது. பாபர் மசூதி விவகாரத்திலிருந்து, நேற்றைய நிர்பயா பாலியல் கொலை வழக்கு வரை இதற்கு நிறைய உதாரணங்களை காட்டமுடியும். நீதி தேவதை மூளையால் சிந்திக்க வேண்டும். மனசு சொல்வதை கேட்டு தீர்ப்பளிக்கக்கூடாது.

அடுத்து சில சட்டமன்றத் தேர்தல்களையும், பாராளுமன்றத் தேர்தலையும் எதிர்நோக்கியிருக்கும் காங்கிரஸுக்கு நிர்பயா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நிம்மதியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே மத்திய அரசின் டி.ஆர்.பி. இறங்கிக் கொண்டிருக்கும்போது, கசாப் தூக்கிலிடப்பட்டு மீண்டும் டி.ஆர்.பி. எகிறியதை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.

அவ்வப்போது இம்மாதிரி தீர்ப்புகள் வரும்போது சீசனலாக மட்டுமே மரணத்தண்டனையை எதிர்க்காமல், கொடூரமான காட்டுமிராண்டித்தனமான.. அதேநேரம் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற இத்தண்டனையை ஒட்டுமொத்தமாக மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டோர் எதிர்த்தாக வேண்டும். மரணத்தண்டனையை ஒழிப்போம் என்று குரல் கொடுப்போரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். மரணத் தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் செய்தாக வேண்டும்.

மரணத்தண்டனையை ஒழிக்கக் கோருவது குற்றவாளிகளுக்கு ஆதரவான செயல்பாடு அல்ல என்று பிரித்தறிந்து அனைவரும் பொருள் கொள்ள வேண்டும். கொடூரமான குற்றம் செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஆனால் அந்த அதிகபட்சத் தண்டனை என்பது மரணத்தண்டனை அல்ல என்பதே நம் கருத்து.

மரணத்தண்டனை குறித்த முந்தைய சில பதிவுகள் :

மரணத்தண்டனை : அம்மாவுக்கு வேண்டுகோள்!

மரணத்தைக் கொண்டாடும் தேசம்!

9 செப்டம்பர், 2013

வருத்தப்படுங்கள் வாலிபர்களே!

தமிழ்ப் படங்களிடம் குறிப்பாக மசாலாப் படங்களிடம்- லாஜிக்கோ, சமூக பொறுப்புணர்வையோ அல்லது வேறு ஏதேனும் கருமாந்திரத்தையோ நாம் எதிர்ப்பார்க்க வேண்டியது அவசியமில்லை. சிறு முதலீட்டில் எடுக்கப்படும் படங்கள் தரத்தில் சுமாராக இருந்தாலும் கூட அவற்றை குறைகூறி விமர்சிப்பது நம் கொள்கையல்ல. குமுதம் நிறுவனர் அமரர் எஸ்.ஏ.பி கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் இது. ஆனால், தமிழகத்தின் சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றினை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யும் வேலையை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் செய்திருக்கிறது எனும்போது அதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.
தர்மபுரியில் தொடங்கி மரக்காணம் வரை என்னென்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். வடமாநிலங்களில் வழக்கத்திலிருக்கும் கவுரவக் கொலைகள் எனும் காட்டுமிராண்டி கலாச்சாரம் சமீபமாக தமிழகத்திலும் அதிகரித்திருக்கிறது என்று தினமும் செய்தித்தாள் வாசித்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தைதான் நகைச்சுவையாகப் பார்க்கிறார் அறிமுக இயக்குனர் பொன்ராம்.
வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் ஹீரோயின் அந்த ஊர் முக்கியஸ்தரான சத்யராஜின் பெண். பள்ளி மாணவி. எம்.ஏ., எம்.பில் (?) படித்து வேலைவெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மீது ரொமான்ஸ் எதுவும் வரவில்லை. ஹீரோயினின் டீச்சர் மீதுதான் அவருக்கு காதல். அந்த டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி விடுவதாலும், ஒரு காட்சியில் ஹீரோயினை புடவை கட்டி பார்த்துவிடுவதாலும் மட்டுமே, வேறு வழியின்றி ஹீரோவுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. காதல்வசப்பட்ட ஹீரோ, ஹீரோயினை வசப்படுத்த ஒரு காட்சியில் சினிமா ஹீரோ பாணியில் உடையணிந்து, கூலிங் க்ளாஸ் அணிந்து அசத்துகிறார். பள்ளிப்படிப்பை கூட முடிக்காத ஹீரோயினும் (முன்பு மாப்பிள்ளை பார்த்தபோது படிக்க வேண்டும் என்று சொல்லி கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஹீரோவை காதலிப்பதை உணர்ந்த அவரது அப்பா, வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார். ஹீரோ, ஹீரோயினை அழைத்துக்கொண்டு ஓடிப்போகிறார். தேடிப்போய் தன் பெண்ணை ஹீரோயினியின் அப்பா சுட்டுக் கொன்றுவிட்டார் என்று ஊரில் பேச்சு.
படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே கவுரவத்துக்காக தன் பெண்ணை கொலை செய்த மானஸ்தர் என்பதாக சத்யராஜ் அறிமுகப்படுத்தப் படுகிறார். அவருடைய அடியாட்கள் இந்த கொலையை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஊரிலும் அப்படியொரு பேச்சு இருப்பதை சத்யராஜ் கவுரவமாக கருதுகிறார். கடைசிக் காலத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா பக்திப்படங்களாக நடித்துத் தள்ளியதைப் போல, பெரியார் கொள்கைகளுக்கு எதிரான வேடங்களையே இனமான நடிகரான சத்யராஜ் தற்போது தொடர்ச்சியாக நடித்து வருகிறார். நம் விரலை கொண்டேதான் நம் கண்களை குத்திக் கொள்கிறோம்.
படத்தில் சத்யராஜ் என்ன சாதியாக சுட்டப்படுகிறார் என்பதை யூகிப்பது அவ்வளவு கடினமல்ல. பெரிய மீசை. நெற்றியில் பொட்டு. திண்டுக்கல் பழனி வட்டார கிராமம் என்றெல்லாம் நிறைய க்ளூ இருக்கிறது. மூன்று பெண்களுக்கு அப்பா. யாருடனாவது ஓடிவிடுவார்களோ என்கிற அச்சத்தில் தன் பெண்களுக்கு படிக்கும் வயதிலேயே திருமணம் செய்துவிடுகிறார். அவருடைய கடைசிப் பெண்ணுக்கும் அம்மாதிரி கல்யாணம் செய்ய முயற்சிக்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஹீரோவின் சாதி பற்றிய விவரங்களை யூகிப்பது சிரமம். சத்யராஜின் சாதிதான் என்பது மாதிரி தெரிந்தாலும், ஹீரோவின் வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசையாக இருக்கிறது. நெற்றியில் பட்டை, மீசை மாதிரியான அடையாளங்கள் இல்லை.
இந்தப் பின்னணிகளைக் கொண்டுதான் முழுக்க முழுக்க காமெடி வசனங்களோடு (ஒவ்வொரு காட்சியும் படுநீளம். அடுத்த படமெடுக்க வாய்ப்பு கிடைக்குமோ என்னவோவென்று எல்லா கதையையும் இதிலேயே சொல்லிவிட இயக்குனர் முயற்சித்திருக்கிறார்) மூன்று மணி நேர நகைச்சுவைக் காவியமாக வந்திருக்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இப்படத்தில் காட்டப்படுவதுதான் தமிழ்நாடு என்றால் பாமகவினரின் எதிர்ப்பும், வாதமும் முழுக்க முழுக்க நியாயமானவையே. காதல் திருமண விவகாரம் குறித்து பாமகவினரின் கருத்துகளில் கீழ்க்கண்ட அம்சங்கள், அதிலிருக்கும் வார்த்தை கவர்ச்சிக்காக புகழ்பெற்றவை  (பாமகவினர் இவ்விவகாரத்தில் பேசும் சில கருத்துகளை பரிசீலித்து விவாதிக்க வேண்டும். They have proper data &  statistics. ஒட்டுமொத்தமாக பாமகவை கழுவில் ஏற்றுவது கண்மூடித்தனமான பாசிஸம்) :
  • பணக்கார / பெரிய இடத்துப் பெண்களாக பார்த்து காதலிக்கிறார்கள். பிற்பாடு பஞ்சாயத்து வந்தால் பணம் பறிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக. இது நிஜமான காதல் அல்ல. நாடகக் காதல்.
  • ஜீன்ஸ் பேண்டும், கூலிங் கிளாஸும் அணிந்து அப்பாவி கிராமத்து இளம்பெண்களை ஏமாற்றுகிறார்கள்.
  • மைனர் பெண்களை காதலித்து கர்ப்பமாக்குகிறார்கள்
இப்போது மேலே சொல்லப்பட்ட படத்தின் பின்னணியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும்.

கவுரவக் கொலை பின்னணியை காமெடியாகப் பார்ப்போம் என்கிற லட்சியத்தோடு வந்திருக்கிற இத்திரைப்படத்தை, திரையரங்கில் பார்க்கும் சோசியல் நெட்வொர்க் புரட்சியாளர்கள் “நல்லாயிருக்கு. நாலு வாட்டி பார்க்கலாம்” என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். இப்பிரச்சினைகளை இணையங்களில் விவாதிக்கும்போது தீக்குளிக்குமளவுக்கு தீவிரவமாக எழுதியவர்கள் இவர்கள். இளவசரனின் காதலுக்காக தொண்டை தண்ணி வரண்டுப் போகுமளவுக்கு டீக்கடைகளிலும், பஸ்ஸிலும், இரயிலிலும் உரத்துப் பேசியவர்கள், இன்று அச்சூழலை பகடி செய்து வந்திருக்கும் படைப்பை ‘சூப்பர்’ என்று படம் பார்த்துவிட்டு வரும்போது நீட்டும் மைக் முன்பாக வாய்கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் ஹிட் உறுதி. தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு ‘கருத்து’ என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்பதுதான் நம் கேள்வி.

7 செப்டம்பர், 2013

மிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.

இப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.

செய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.

இது நடக்கும்போது நான் சிறுவனாக இருந்திருப்பேன். விகடனோடு பரிச்சயம் இருந்ததா என்றும் நினைவில்லை. எனவே சம்பவம் பற்றி தெரியவில்லை. ’தங்கமீன்கள்’ திரைப்படம் குறித்து விகடன் எழுதிய விமர்சனத்துக்கு, எதிர்வினையாக இயக்குனர் ராம் எழுதிய பதிவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மூத்தப் பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை சொன்னார். தங்கமீன்கள் விமர்சனம் குறித்த ராமின் தரப்பையும், விகடனின் விளக்கத்தையும் அடுத்தவாரம் விகடன் பிரசுரிக்கப் போகிறது என்று ராம் எழுதியிருக்கிறார். ஐ யாம் வெயிட்டிங்.

மிருதங்க சக்கரவத்தி காலத்தில் இச்சம்பவம் நடந்திருக்கும் பட்சத்தில், அதையும் தங்கமீன்கள் குறித்த விளக்கம் வரும் இதழிலேயே, விகடன் பொக்கிஷம் ஆட்கள் மீள்பிரசுரித்தால் சுவையாக இருப்பதோடு, விகடனின் பாரம்பரியப் பெருமையையும் அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதாக அமையும்.

2 செப்டம்பர், 2013

தங்க மீன்கள்

படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே திக்குத்தெரியாத காட்டில் வழிதெரியாமல் அலைந்துக் கொண்டிருப்பதற்கான உணர்வு. ‘தெரியாத்தனமா மாட்டிக்கிட்டோமோ’ என்றுதான் இடைவேளையின் போதும் கூட தோன்றியது. இவரே ஏன் நடித்துத் தொலைத்தார் என்று கோபம் கூட வந்தது. இயக்குனர் ராம் பெரிய இண்டெலக்ச்சுவல். அவருடைய சிந்தனையின் வேகத்தோடு கூடவே ஓடிவருவது, நம்மைப் போன்ற சாதாரண கமர்சியல் சினிமா ரசிகர்களுக்கு சாத்தியமில்லை. அதுவுமின்றி craftஐ அவர் கண்ட்ரோல் செய்யும் ஸ்டைல் நமக்குப் புதுசு. இடைவேளைக்குப் பிறகு படத்தோடு செட்டில் ஆக முடிகிறது. இயக்குனர் ராமும், நடிகர் ராமும் விஸ்வரூபம் எடுக்கும் கட்டம் இது. பாலிவுட்டில் இருந்தெல்லாம் டிஸ்கஷனுக்கு ராமை கூப்பிடுகிறார்கள் என்றால் சும்மாவா?

சட்டென்று ஜெயமோகனின் தேர்வு, தங்கமீன்களின் அச்சாணியாய் தோன்றுகிறது. மாலனின் தப்புக்கணக்கு சிறுகதையும் நினைவுக்கு வருகிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக அவதானித்தால் நிறைய இலக்கியப் பிரதிகளின் பாதிப்பை உணரலாம்.

தங்கமீன்களை விளம்பரப்படுத்த்துவதைப் போல இது வெறும் அப்பாவுக்கும், மகளுக்குமான கதையாக மட்டும் தோன்றவில்லை. மகளை பெற்ற அப்பாவுக்குதான் இந்த படம் பிடிக்கும் என்றுகூட ஃபேஸ்புக்கில் யாரோ ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்கள். அப்பா – மகன், மாமியார் – மருமகள், அண்ணன் – தங்கை, ஆசிரியை – மாணவி, பெற்றோர் – ஆசிரியர், பணம் வைத்திருப்போர் – பணம் இல்லாதவர், சுரண்டுபவர் - ஒடுக்கப்படுபவர் என்று நிறைய முரண்களை உள்ளடக்கிய கதை. பட முழுக்க ஏராளமான சிறுகதைகள். எதுவுமே சிதறிவிடாமல் ஒழுங்காக கோர்த்து நேர்த்தியான படமாக்கியிருக்கிறார் ராம். வேண்டுமானால் நம்முடைய ஈகோவை திருப்திப்படுத்திக் கொள்ள ஒரு சில குறைகளை தேடி கண்டுபிடித்து பட்டியலிட்டுக் கொள்ளலாம். ஒருவேளை இரண்டரை மணி நேர பொழுதுபோக்குக்காக மட்டுமே யாரேனும் தங்கமீன்களுக்கு போயிருந்தால், அவர்கள் ஏமாற்றமடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

காட்சிகளில் யதார்த்தமில்லை என்று தங்கமீன்களை நண்பர் ஒருவர் விமர்சித்தார். வாழ்வியல் சம்பவங்களே மிகையாய், நாடகமாய் நடந்துக் கொண்டிருக்கும் சூழல் இது. சினிமா ஏன் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்று தெரியவில்லை. “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு காக்கா வந்து சொல்லிச்சா?” மாதிரி வசனங்களும், காட்சிகளும் கொஞ்சம் மிகையாய், அபத்தமாய் இருப்பது உண்மைதான். அதனாலென்ன. பராசக்தி இறுதிக்காட்சியில் சிவாஜி முழம், முழமாய் பேசியதைப் போல கோர்ட்டில் யாரேனும் பேச முடியுமா. அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு மாபெரும் காவியம் என்று ஒப்புக்கொள்ளும் நாம், தங்கமீன்கள் மட்டும் பக்கத்து வீட்டில் நடப்பதை எட்டிப் பார்க்கும் காட்சியனுபவத்தை தரவேண்டும் என்று ஏன் எதிர்ப்பார்க்கவேண்டும்? ராம் இம்மாதிரி காட்சிகளின் மூலமாக வெளிப்படுத்த விரும்பும் உணர்வை மட்டும் புரிந்துக்கொண்டால் போதுமில்லையா? தன்னுடைய மகள் கொஞ்சம் மந்தமானவள் என்று சுட்டிக் காட்டுபவர்களிடம், அப்படி நம்ப விரும்பாத ஒரு தகப்பன் கொஞ்சம் ஆவேசமாக (லூசுத்தனமாகக்கூட) நடந்துக்கொள்வதில் என்ன பெரிய லாஜிக் மிஸ்டேக் வந்து தொலைக்கப் போகிறது?

படத்தின் திரைக்கதை கட்டுமானமே ஃபேண்டஸியோடு கலந்த நடப்பு சமூக, குடும்ப சம்பவங்கள்தான். தாத்தாவோ, பாட்டியோ கதை சொல்லும்போது அதில் லாஜிக்கலாக குறுக்குக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தோமானால் கதையனுபவம் சுவாரஸ்யப்படாது.

“காசு இல்லாதவன்னா, அவனை முட்டாள்னு நெனைக்காதீங்கடா”

“நானும் செல்லம்மா மாதிரி தானேங்க?”

“காசு இல்லாதது பிரச்சினை இல்லை. காசு நிறைய இருக்குற இடத்துலே நாம மட்டும் காசு இல்லாம இருக்குறதுதான் பெரிய பிரச்சினை”

“அவன் ரொம்ப நல்லவன். கொஞ்சம் கெட்டவனாதான் திரும்பி வரட்டுமே?”

“உங்க கிட்டே நான் விட்டுட்டுப் போனது குழந்தையை. அதை கொன்னுட்டீங்க. அந்த ஸ்கூல் கொன்னுடிச்சி”

படம் நெடுக இம்மாதிரி ஒன்லைனர்களால் பார்வையாளனின் மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறார் இயக்குனர். அச்சு பிச்சு பஞ்ச்லைன்களுக்கு விசில் அடித்த நாம், உடனடியாக தங்கமீன்கள் மாதிரியான படத்தோடு ஒன்றுவது கொஞ்சம் கடினம்தான். அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்களின் genreல் இதை சேர்க்கலாம்.

இதே கதையை ஏதேனும் ஐரோப்பிய படத்திலோ, கொரியன் படத்திலோ சப்-டைட்டிலின் உதவியோடு பார்த்தால் உருகி, உருகி மாய்ந்துவிடுவோம். தமிழ் பேசும் தமிழ் மாந்தர்களின் கதை என்பதாலும், தமிழர்கள் உருவாக்கிய திரைப்படம் என்பதாலும் தங்கமீன்கள் நமக்கு கொஞ்சம் இளப்பமாய் தோன்றுகிறதோ என்னவோ?

அன்புமழையில் நனைத்திருக்கும் அந்திமழை

 ‘அந்திமழை’ மாத இதழ் தன்னுடைய இரண்டாம் ஆண்டு துவக்கத்தை இளைஞர் சிறப்பிதழாக கொண்டாடுகிறது.

சினிமா, ஊடகம், இலக்கியம் துறைகளில் எதிர்காலத்தில் பிரகாசிக்கக்கூடிய இளைஞர்களாக சிலரை அந்திமழை யூகித்து அடையாளம் காட்டியிருக்கிறது.

யுவகிருஷ்ணாவையும் இந்தப் பட்டியலில் ‘அந்திமழை’ குறிப்பிட்டிருக்கிறது. இந்த சிறப்பையும் எனக்கு ஏற்படுத்தித் தந்த ‘எந்தரோ மாகானுபாவலு’க்களை வணங்குகிறேன்.

அந்திமழையின் அன்புக்கு நன்றி!