27 பிப்ரவரி, 2014

ஆஹா கல்யாணம்

ஆதித்யா சோப்ராவின் யாஷ்ராஜ் பிலிம்ஸின் முதல் தென்னிந்திய பிராஜக்ட். மொத்தமாக முப்பத்தைந்து கோடியை போட்டுவிட்டு, ரிசல்ட்டுக்காக நகம் கடித்துக் கொண்டிருந்தார்களாம். ‘ஏ’ சென்டர் தியேட்டர்களில் நல்ல ரிசல்ட். தமிழ், தெலுங்கு இரண்டிலும் சேர்த்து ஈஸியாக ஃபிப்டி சி தாண்டிவிடும் என்று மார்க்கெட்டில் சொல்கிறார்கள். இனி இந்தியில் ஹிட் அடிக்கும் படங்களை டப் அடிக்காமல், இதுபோல தென்னிந்திய நடிகர்களை வைத்து பை-லிங்குவலாக ஏகப்பட்ட படங்கள் நம்மூர் தியேட்டர்களை நோக்கி காவடி தூக்க போகின்றன. முன்பு நம்மூர் ஜெமினி வாசன்களும், ஏவிஎம்களும், சித்ராலயா ஸ்ரீதர்களும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த பிசினஸ் இது. இப்போது வட இந்திய பனியாக்களின் டர்ன்.
ஹீரோ நானியை விடுங்கள். ஹீரோயின் வாணிகபூர் ஓர் அட்டகாசமான வரவு. சாமுத்ரிகா லட்சணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த அம்சங்களுக்கும் கட்டுப்படாத காட்டுத்தனமான அழகு. ஜெயப்பிரதாவையும், அனுஷ்காவையும், ஸ்ருதிஹாசனையும் பிசைந்துசெய்தது மாதிரி அசாதாரணமான காம்பினேஷனில் பிரமிக்கவைக்கும் பேரெழில். கழுத்துக்கும், கழுத்துக்கு கீழான பிராப்பர்ட்டிக்கும் இடையில் மட்டுமே ஒண்ணு, ஒன்றரை அடி கேப் இருக்கும் போலிருக்கிறது. தமிழர்கள் அகலமான முதுகுக்கே ஆவென்று வாயைப்பிளப்பார்கள். முன்புறத்தில் செக்கச்செவேலென்ற நீண்ட, அகன்ற கழுத்தை பார்த்து மெண்டலாகி திரியப் போகிறார்கள். வாணியின் கழுத்தழகை ‘பளிச்’சிடவென்றே பர்ஃபெக்டான காஸ்ட்யூம்கள். போலவே அவரது மத்திய இடைப்பிரதேசத்தின் நீளம், அகலமும் ஜாஸ்தி. இடுப்பை அப்படியும் இப்படியுமா ஆட்டி, ஆட்டி டேன்ஸ் ஆடும்போது தியேட்டரில் ஏகப்பட்ட விக்கெட்டுகள் டொக்காகின்றன. இண்டர்வெல் ப்ளாக்கில் சூடான லிப்லாக் சீன் வேறு. பெரிய ராட்டிணத்தில் ரவுண்ட் அடித்து கோலிவுட் + டோலிவுட்டின் அடுத்த சில ஆண்டுகளை ஆளப்போகிறார் இந்த தேவதை.

பெரும்பாலான காட்சிகள் அனைத்திலும் நாயகன், நாயகி இருவருமே இருக்கிறார்கள். அல்லது இவர்களில் ஒருவர் இடம்பெறும் காட்சிகள் மட்டும்தான். வேறு கிளை பாத்திரங்களோ, கிளைக்கதைகளோ, தனியாக காமெடி டிராக்கோ இல்லவே இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் இருந்தும் இரண்டே இரண்டு கேரக்டர்களை மட்டுமே மையப்படுத்தி அறுபத்தஞ்சி சீன் எழுதுவது எப்படியென்று, உதவி இயக்குனர்கள் இப்படத்தின் திரைக்கதை கட்டுமானத்தை பாடமாக படிக்க வேண்டும். இடைவெளி இன்றி அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் இருந்தும் காட்சிகள் சலிக்கவேயில்லை. லேசான டப்பிங் வாசனைதான் பெரும் குறை. மற்றபடி பக்காவான மல்ட்டிப்ளக்ஸ் மூவி. கம்ப்ளீட் ஃபேமிலியோடு ஜாலியாக பார்க்கலாம்.

ஆஹா ஓஹோ கல்யாணம்!

25 பிப்ரவரி, 2014

வி.ஐ.பி.களின் காலர் ட்யூன்!

மாதத்துக்கு முப்பது ரூபாய் செலவழித்தால் போதும். நமக்கு போன் செய்பவர்களின் காதில் ‘ட்ரிங் ட்ரிங்’குக்கு பதிலாக நாமே தேர்ந்தெடுக்கும் பாடல் இசைவெள்ளமாய் பாய்கிறது. சாமானியர்களுக்கு மட்டும்தான் இந்த ‘காலர் ட்யூன்’ வசதியா. அரசியல் புள்ளிகளும் அசத்தலாமே. ஒய் நாட்? வி.ஐ.பி.களின் தற்போதைய ‘மூடு’க்கேற்ப நம்முடைய தாழ்மையான பரிந்துரைகள்...

அஞ்சா நெஞ்சன் :
“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை...
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை?”
தளபதி :
“முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி
பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக 
அன்பாலே இணைந்து வந்தோம் 
ஒண்ணுக்கு ஒண்ணாக” 

(சோக வெர்ஷன் பாடல்) 
கலைஞர் :
“கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்த காலமே...
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே...
என் தேவனே ஓ தூக்கம் கொடு 
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு 
பாலைவனம் கடந்து வந்தேன் 
பாதங்களை ஆறவிடு” 
புரட்சித்தலைவி :
“பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குதான்
என எண்ண வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் 
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்”

டாக்டர் அய்யா & சின்ன அய்யா :
“மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
திண்டிவனத்து மாம்பழம்
அழகான மாம்பழம் 
அல்வா போன்ற மாம்பழம் 
உங்களுக்கும் வேண்டுமா 
ஓடி இங்கே வாருங்கள் 
பங்கு போட்டு தின்னலாம் 
பரவசமாய் பாடலாம்” 
(ரைம்ஸ்) 
கேப்டன் :

பாஜகவோடு கூட்டணி அமைந்தால் :

“தாமரைப் பூவுக்கும்
‘தண்ணிக்கும்’ என்னிக்கும்
சண்டையே வந்ததில்லை
மாமனை அள்ளி நீ
தாவணி போடுக 
மச்சினி யாருமில்லை”


காங்கிரஸோடு கை கோர்த்தால் :

“கை, கை, கை வெக்கிறா வெக்கிறா
கைமாத்தா என் மனசை கேக்குறா கேக்குறா”


தனித்து நின்றால் :

“தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமையும் இழந்தோம் 
உடமையும் இழந்தோம் 
உணர்வை இழக்கலாமா?” 
அண்ணியார் :

“வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தா
கரை சேரும் காலம் எப்போ?”
எழுச்சித் தமிழர் : 

“வருது வருது – அட
விலகு விலகு
சிறுத்தை வெளியே வருது
சிறுத்தை நான்தான்
சீறும் நாள்தான்” 

செந்தமிழன் :

“நான் யாரு
எனக்கேதும் தெரியலியே
என்னைக் கேட்டா
நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி 
கொண்டு வந்த சாமி 
யாரைதான் கேட்டானோ?” 
பொன்னார், புரட்சிப்புயல், பாரிவேந்தர், நீதிக்காவலர் மற்றும் கொ.மு.கவின் எல்லா பிரிவு தலைவர்களுக்கு சேர்த்து க்ரூப் ட்யூன்!

“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளிக்கூட்டம் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்”
தா.பா, ஜி.ரா மற்றும் பிரகாஷ்காரத், பரதன் உள்ளிட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் அனைவருக்கும் சேர்த்து க்ரூப் ட்யூன்!

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
புரட்சித் தாயன்றி வேரொன்று ஏது?”

21 பிப்ரவரி, 2014

நாற்பதும் நமதே, நாடும் நமதே!

மாண்புமிகு ஈழத்தாய் டாக்டர் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஜனித்த அறுபத்து ஆறாவது பெருநாள் இவ்வருஷம் 24-02-14 அன்று வரவிருப்பதை அம்மாவின் விசுவாசிகளும், அன்பர்களும் அறிந்ததே. இந்த எண்களை கூட்டி வாசித்த கணிதவியல் பேராசியர்களும், ஆராய்ச்சியாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால் கூட்டுத்தொகை 40 வருகிறது என்கிறார்கள். வரக்கூடிய சித்திரை மாதம் (ஆங்கிலத்தில் மே) புரட்சித்தலைவி அவர்களின் சோவியத் கூட்டணி தமிழகம் மற்றும் புதுவை பாராளுமன்றத்தின் நாற்பது தொகுதிகளையும் வெல்லப்போகிறது என்பதன் குறியீடாகவே தங்கத்தாரகை தாயின் இவ்வருட பிறந்தநாள் அமைந்திருக்கிறது என்று பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் இந்த போக்கினை அவதானிக்கிறார்கள். குடிகாரர்களும், தீயசக்திகளும் இந்த அறிவியல் மற்றும் இலக்கிய பேருண்மையை விரைவில் உணர்வார்கள்.

இந்த நாற்பதை மட்டுமே வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் எப்படி இந்திய தாய் திருநாட்டுக்கு பிரதமர் ஆக முடியுமென்று அண்டோமேனியா அடிமைகளும், தேநீர்கடை மாஸ்டரின் தேவாங்குகளும் கெக்கலிக்கிறார்கள். அங்கேதான் இருக்கிறது புரட்சித்தலைவியின் சாமர்த்தியம். தேசிய ஆன்மீக தமிழ் நாளிதழான ஸ்ரீ தினமலர் நம் தங்கதாயை சோவியத் தாய் என்று தலைப்புச்செய்தியாக குறிப்பிட்டிருப்பதை மானமுள்ள உலகத்தமிழர்கள் அறிவார்கள். எனவே சோவியத் தாயின் தவப்புதல்வர்களாம் பிரகாஷ்காரத், பரதன் போன்ற தோழர்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மேற்குவங்காளம், பீகார், நேபாளம், ரஷ்யா, மக்கள் சீனம், புரட்சி கியூபா போன்ற இந்திய மாநிலங்களிலும் ’புரட்சித்தலைவியே பிரதமர்’ என்கிற கோஷத்தை முன்வைத்து நமக்கு வாக்குகள் சேகரிக்க இருக்கிறார்கள். தோழர்களுக்கு எப்படி தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்று அப்பகுதிகளுக்கு சென்று அம்மாவின் ரத்தத்தின் ரத்தங்கள் கற்றுக் கொடுப்பார்கள்.

அம்மா பிரதமர் ஆன அடுத்தநொடியே இந்தியா சோஷலிஸ்ட்டு யூனியன் நாடாக மாற்றம் பெறும். தமிழ் ஈழம் பிறக்கும். இதற்காக பாராளுமன்றத்தில் 110வது விதியின் கீழ் அறிக்கை வாசித்து தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு கனவு நனவாகும். ஆஸ்திரேலியாவில் அம்மா மெஸ் திறக்கப்படும். வெள்ளை மாளிகை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகும். பாகிஸ்தானுக்கு பல்லு உடைக்கப்படும். ஐ.நா.சபையில் சீனாவுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கப்படும். சோவியத் ருஷ்யா அம்மாவின் ஆளுகைக்குள் வரும். அமெரிக்காவின் அணுகுண்டுகள் பறிமுதல் செய்யப்படும். ஆப்பிரிக்காவில் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படும். உலக மக்கள் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும். செவ்வாய் கிரகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும்.

அண்ணா நாமம் வாழ்க. அம்மா புகழ் ஓங்குக.

17 பிப்ரவரி, 2014

தோழரை காதலிக்கும் பூர்ஷ்வா

போன தலைமுறை புனிதமாய் கருதி பொத்தி பொத்தி பாதுகாத்த காதலையும், கம்யூனிஸத்தையும் பகடிக்கு உள்ளாக்குவது மலையாள இளம் இயக்குனர்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அதிலும் இந்த வினித் சீனிவாசன் க்ரூப் களமிறங்கிய பின்பு ஒரே அதகளம்தான்.

இயக்குனர் ஜூடே ஆண்டனி ஜோசப்பின் அறிமுகப்படமான ‘ஓம் சாந்தி ஓசண்ணா’ அமர்க்களமான ரொமாண்டிக் காமெடி கமர்சியல். சாஃப்ட்வேர் என்ஜினியராக பொட்டி தட்டிக் கொண்டிருந்த ஆண்டனிக்கு திடீரென ஒருநாள் சினிமாவில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. திலீப் நடித்த ‘கிரேஸி கோபாலன்’ படத்தில் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ம்ஹூம். க்ளாப் அடிக்க கற்றுக் கொண்டதை தவிர வேறெதையும் அங்கே கற்க முடியவில்லை. ஹீரோ திலீப்புக்கு இவரைப் பார்த்து பரிதாபமாகி விட்டது. அடுத்து வினீத் சீனிவாசனை இயக்குனராக அறிமுகப்படுத்தி, ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’ படத்தை திலீப் தயாரித்தார். அதில் பணிபுரிய ஆண்டனியை, வினீத்திடம் திலீப்பே சிபாரிசு செய்தார். இந்த படத்தில்தான் கேரளாவின் இன்றைய ட்ரீம்பாயான நிவின்பாலி அறிமுகமானார்.தொடர்ச்சியாக வினீத் சீனிவாசின் அடுத்த ப்ளாக் பஸ்டர் படமான ‘தட்டத்தின் மறயத்து’விலும் ஆண்டனி தொழில் கற்றார். போதும். தனிக்கடை போட்டுவிட்டார்.

‘ஓம் சாந்தி ஓசண்ணா’வும் அதே வினீத் ஸ்டைல் தீம் படம்தான். முந்தைய தலைமுறை ‘ச்சோ.. ச்சோ’ கொட்டி ரசித்து ஆராதித்த விஷயங்களை, உலகமயமாக்கலுக்கு பிறகான தலைமுறை எப்படி பார்க்கிறது என்பதுதான். பக்காவான ஸ்க்ரிப்ட். மீடியம் பட்ஜெட். பர்ஃபெக்ட்டான போஸ்ட் புரொடக்‌ஷன். ஃப்ரேமுக்கு ஃப்ரேம்.. இன்ச் பை இன்ச் ரிச்சான குவாலிட்டி. மலையாளத் திரையுலகில் வீசிக்கொண்டிருக்கும் புதிய அலை இதுதான்.

எண்பதுகளின் மணிரத்னம் பட நாயகிகளை மறக்க முடியுமா? மவுனராகம் சுட்டி ரேவதி, இதயத்தை திருடாதே துறுதுறு கிரிஜா. இவர்களின் நீட்சியாக இந்த படத்தில் நஸ்ரியா. படம் தொடங்கும்போதே நிவின்பாலி தன் ரசிகர்களிடம் (!) விளக்கம் அளிக்கிறார். இந்த படம் ஹீரோயினின் வ்யூபாயிண்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்.

ஸ்கூல் படிக்கும் பூஜா பையன் மாதிரி வளர்கிறாள். ஜீன்ஸ் பேண்ட், டீஷர்ட், ஹீரோ ஹோண்டா பைக்கென்று. இவளது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஆக்டிவிட்டி என்னவென்றால் ‘ஒயின் டேஸ்டர்’. பூஜாவின் சமூகத்தில் நூறு, இருநூறு சவரன் கொடுத்து ஒரு மொக்கையான பையனுக்கு பெண் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. எனவே தன்னுடைய பெட்டர் ஹாஃபை தானே ‘செலக்ட்’ செய்யவேண்டுமென்று மனதுக்குள் சபதம் எடுக்கிறாள். ஸ்கூலில் சகமாணவன் ஒரு பக்காவாக செட் ஆகிறான். ஆனால் அவனிடம் பெண்கள் விரும்பத்தக்க ரஃப் ஆன ஆண்மை மிஸ்ஸிங் என்று பூஜாவுக்கு தோன்றுகிறது.

பூஜாவின் இடைவிடா தேடுதலில் மாட்டுபவன்தான் நம் தோழர் கிரி. பக்கா கம்யூனிஸ்டான கிரி, பட்டம் படித்திருந்தாலும் ஊரில் விவசாயம்தான் பார்க்கிறான். பாட்டாளி மக்களின் உரிமைகளுக்காக அதிகாரங்களோடு மோதுகிறான். அநீதிகளை தட்டி கேட்கிறான். இது போதாதா. பூஜாவுக்கு காதல் பற்றிக் கொள்கிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த –அதாவது பூர்ஷ்வா ஆன- பூஜாவை கிரி விரும்புவானா என்பதுதான் கேள்வி.

அந்த வருட ஓசண்ணா திருநாளன்றுதான் கிரிக்கு பிறந்தநாளும் வருகிறது. தன்னுடைய காதலை அவனிடம் தெரிவிக்க முயல்கிறாள். கிரியின் சித்தாந்த மூளை இக்காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வர்க்க வேறுபாடுகளை தாண்டி, அவள் பள்ளி மாணவி. தான் பொறுப்பான கம்யூனிஸ்ட் என்பதை சுட்டிக்காட்டி, அவளை ஒழுங்காக படித்து உருப்படுமாறு உபதேசம் செய்கிறான்.

இதற்கிடையே ஒரு காதலை சேர்த்து வைப்பதில் ஏற்படும் பிரச்சினையால், ஒரு பூர்ஷ்வாவின் (ஸ்ஸப்பா) வன்முறை தாக்குதலில் இருந்து தப்பிக்க, மக்கள் சீனத்துக்கு (முடியல) போய் தலைமறைவாகிறான். பூஜாவுக்கு மெடிக்கல் அட்மிஷன் கிடைக்கிறது. அங்கு வரும் புரொபஸர் ஒருவரோடு லேசான ஈர்ப்பு தோன்றுகிறது. ஆனால் அது காதல் அல்ல என்று அவளது மனம் அவளை தெளிவுப்படுத்துகிறது.

அப்படி இப்படியாக ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டது. இப்போது பூஜா டாக்டர். மக்கள் சீனத்திலிருந்து தோழர் கிரி திரும்பிவிட்டார். அதே ஓசண்ணா நாள். அன்றுதான் கிரிக்கும் பிறந்தநாள். என்னவாகிறது இவர்கள் காதல் என்பதை நொடிக்கு நாலு முறை கிச்சுகிச்சு மூட்டி, வயிறு வலிக்க வைக்கும் திரைக்கதை வசனங்களோடு சுடச்சுட கேரளா ஸ்பெஷல் மீல்ஸ் பரிமாறியிருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தின் ஆகச்சிறந்த ஆச்சரியம் நஸ்ரியா. குள்ளச்சியும், ஒல்லிப்பிச்சானுமான நஸ்ரியா எப்படிப்பட்ட திறமைவாய்ந்த நடிகை என்பதை யாராவது நையாண்டி இயக்குனர் சற்குணத்திடம் முன்பே எடுத்துச் சொல்லியிருக்கலாம். அவரைப்போய் தொப்புளை காட்டச் சொல்லி வற்புறுத்தியிருக்க மாட்டார். படம் முழுக்க நஸ்ரியாவின் நரேஷனில்தான் ஓடுகிறது. அதிலும் கிளைமேக்ஸில் “இந்த ஆம்பளைப் பசங்களுக்கு ஒரு கெட்டப்பழக்கம். தன்னோட முதல் காதலியோட பேரைதான் பொண்ணு பொறந்தா வைப்பானுங்க” என்று சொல்லும்போது காட்டும் முகபாவம் ஏ க்ளாஸ். நிவின் பாலி படம் முழுக்க அண்டர்ப்ளே செய்து, நஸ்ரியாவுக்கு க்ளாப்ஸ் வாங்கித்தரும் பெருந்தன்மையுடைய இளம் நம்பிக்கை நட்சத்திரம்.

ஒருநாள் முழுக்க நண்பர்களோடு சீயர்ஸ் அடித்து ‘சிப்’பி ‘சிப்’பி ஒயின் சாப்பிட்ட போதையை பின்னணி இசையும், பாடல்களும் அளிக்கிறது. திரையின் ஒவ்வொரு பிக்ஸெல்லிலும் இளமையோடு போட்டி போடும் இன்னொரு சமாச்சாரம், கேமரா அள்ளித்தரும் பசுமை. கொஞ்சமும் திகட்டாத கடவுளின் தேசம் கிளியோபாட்ராவின் மேனியைவிட பேரழகு கொண்டது என்பதை மறுக்க முடியாது. கேரளாவில் பிறக்கும் பெண்கள் ஏன் சூப்பர் ஃபிகர்களாக இருக்கிறார்கள் என்று அறிவியல்பூர்வமாக யோசித்துப் பார்த்தால் ஈ ஈக்குவல் டூ எம்சி ஸ்கொயர் என்கிற ஐன்ஸ்டீன் ஃபார்முலாவின் தாத்பரியம் புரியவருகிறது.

திருப்புமுனை நாயகன்

வனவாசத்தில் இருந்து திமுக மீண்டு ஆட்சியை கைப்பற்றிய 89 தேர்தல்தான் கே.என்.நேருவை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அத்தேர்தலில் திமுக ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என்கிற கோஷத்தை முன்வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்தது. நாற்பது வயதுகூட ஆகாத நேரு தேர்தலில் வென்று அமைச்சரும் ஆனார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் பொன்முடி போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இருந்து வாய்ப்பு பெற்றவர்கள்தான். வழக்கமாக ஜீப்பில் வந்து வாக்கு கேட்கும் பண்ணையார்களை கண்டு அலுத்துப்போன லால்குடி மக்கள், என்ஃபீல்ட் புல்லட்டில் புயலென வந்த இளைஞரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆரம்பத்திலிருந்தே நேரு களத்தில் இறங்கி பணியாற்றக்கூடியவர். தொண்டர்களின் உணர்வுகளை துல்லியமாக எடைபோடுபவர். கட்சி வேலை என்று வந்துவிட்டால் கவுரவம் பார்க்காமல் கரைவேட்டியை மடித்து கட்டிக்கொண்டு இறங்கிவிடுவார். 91 – 96 அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுகவின் பழைய தலைவர்கள் அதுவரை எதிர்கொண்டிராத அடாவடியான அரசியலை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். அன்பில் குடும்பம் நடத்திய ‘ஜெண்டில்மேன் பாலிடிக்ஸ்’, ‘ஜெ’ காலத்தில் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து, அதிரடி அரசியலை திருச்சி திமுகவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். திமுகவில் நேர்பிளவு ஏற்பட்டு மதிமுக உருவானபோது, மாவட்டமெங்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரில் சென்று, கட்சியின் வலிமையை உறுதி செய்தார்.

96 தேர்தலுக்கு முன்பாக திமுக மாநில மாநாடு நடத்த உத்தேசித்தபோது, உரிமையோடு சண்டை போட்டு திருச்சியில்தான் நடத்த வேண்டும் என்று வெற்றி கண்டார். அப்போது திருநெல்வேலி திமுகவினர் இவர்மீது கொலைவெறி கொண்டார்கள். திருச்சியில் நடந்த அம்மாநாடு திமுகவின் வெற்றியை உறுதி செய்தது. லட்சக்கணக்கான தொண்டர்களை பிரச்சினைகள் ஏதுமின்றி கட்டுக்கோப்போடு மாநாட்டில் பங்குபெறச் செய்த நேருவின் உழைப்பு கலைஞரை கவர்ந்தது. பல பேரணிகளையும், மாநாடுகளையும் பிரும்மாண்டமாக நடத்திக்காட்டிய கலைஞரே, அம்மாநாட்டு ஏற்பாடுகளை கண்டு பிரமித்தார். ‘அஸ்தமித்து விட்டது திமுக’ என்று அலறிக்கொண்டிருந்த தேசிய ஊடகங்கள், திமுகவின் உயிர்ப்பினை ஒப்புக்கொண்டன. சோர்ந்திருந்த அக்கட்சி தொண்டர்களையும் எழுச்சி பெறவைத்த நிகழ்வு அது.

2001ல் படுதோல்வி கண்ட திமுக, 2006 தேர்தலை எதிர்கொள்ளும்போது ‘வெற்றி சூத்திரம் திருச்சியில் இருக்கிறது’ என்று கண்டுகொண்டது. எனவே திரும்பவும் அங்கேயே ஒரு மாநில மாநாடு. நேருவின் மேஜிக் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மிகச்சரியாக மாநாடு நடைபெறும்போது அதுவரை கூட்டணியில் இருந்ததாக நம்பப்பட்ட வைகோ, போயஸ் தோட்டத்துக்கு ‘பூங்கொத்து’ கொடுக்கச் சென்றுவிட்டார். வைகோ வருவார் என்று நம்பி மாநாட்டுக்கு வந்த மதிமுகவினரை அப்படியே அலாக்காக அள்ளி திமுகவுக்கு கொண்டுவந்தார் நேரு. மதிமுக மீது மக்களுக்கு இருந்த நம்பகத்தன்மை முற்றிலுமாக குலைந்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். வைகோவின் முடிவால் ‘அப்செட்’ ஆகியிருந்த கலைஞரை, ‘கூல்’ செய்தது நேருவின் இரவு பகல் பாராத உழைப்புதான். ‘மீண்டும் ஆட்சி கானல்நீர்தான் போல’ என்று சந்தேகப்பட்ட சில கட்சித் தலைவர்களுக்கு ‘பூஸ்ட்’ கொடுத்தது திமுகவின் ஒன்பதாவது மாநில மாநாடு. பேரணியில் அணி அணியாக திரண்ட தொண்டர்கள் ‘ஆட்சி நமதே’ என்று கட்டியம் கூறினார்கள்.
2011லும் திமுகவை ‘தோல்வி சாபம்’ தொடர்ந்தது. முன்னெப்போதுமில்லாத வகையில் அனைத்துத் தரப்பும் ஆச்சரியப்படும் வகையில் அதிமுகவின் ஆட்சியும், பெரிய புகார்கள் இன்றி சிறப்பாக செயல்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை இழந்த சோகத்தில் இருந்து தொண்டர்கள் இன்னமும் மீண்டெழ வாய்ப்பே கிடைக்கவில்லை. நேருவுக்கு தனிப்பட்ட சோகம் வேறு. சிறைக்கும், வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருந்தார். அவ்வளவு செல்வாக்கும், அதிகாரமும் மிக்க நேருவின் தம்பியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டு விட்டார். கிட்டத்தட்ட பொதுவாழ்க்கையில் இருந்து விலகி ‘டை’ அடிக்காத வெள்ளைக்கேசம், தாடியென்று சாமியார் கெட்டப்புக்கு நேரு மாறிவிட்டார். திமுகவும் அப்படிதான் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஸ்பெக்ட்ரம், அழகிரி என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் இருந்து மீள, திமுகவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்த திருச்சியைதான் தேர்ந்தெடுத்தார் கலைஞர். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சி கொஞ்சம் ‘ப்ரெஷ்’ ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தவிர்த்து நேருவையும் அவரது தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீளெழச்செய்ய இதைத்தவிர்த்து வேறு உபாயம் கலைஞருக்கு தோன்றவில்லை.

‘திருச்சியில் மாநாடு, நேரு ஏற்பாடு செய்வார்’ என்று கலைஞர் அறிவித்தவுடனேயே, முதல் வேளையாக ‘ஷேவிங்’ செய்தார் நேரு. தன்னுடைய ஸ்பெஷலான கத்தி மீசையை கூராக தயார் செய்தார். தலை முடிக்கு ‘டை’ அடித்துக் கொண்டார். எண்பதுகளில் கட்சி வளர்க்க உதவிய ‘என்ஃபீல்ட் புல்லட்டை’ நல்ல மெக்கானிக்கிடம் கொடுத்து தயார் செய்தார். இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கு முந்தைய களவீரர் நேரு ரெடி. திருச்சி முழுக்க புல்லட்டில் நகர்வலம். இரண்டு மாத காலமாக இரவு பகல் பாரா உழைப்பு.

மாநாடு மாபெரும் வெற்றியென்று திமுகவின் எதிர்க்கட்சிகளும், எதிர்நிலையில் இருக்கும் ஊடகங்களும் கூட இன்று ஒப்புக்கொள்கின்றன. உடனடியாக வரவிருக்கும் தேர்தலில் இதன் தாக்கம் தெரியுமாவென்று சொல்ல முடியாது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலை திமுக ‘தில்லாக’ எதிர்கொள்ள, அக்கட்சியை வலுவாக தயார்படுத்தியிருக்கிறது திமுகவின் பத்தாவது மாநில மாநாடு. எல்லாவற்றுக்கும் மேலாக திருச்சியின் செயல்வீரரான நேரு திமுகவுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறார். கலைஞருக்கு இதுதான் இம்மாநாட்டின் ‘ஸ்பெஷல் போனஸ்’.