26 பிப்ரவரி, 2016

என்னப்பா இப்படி பின்னுறீங்களேப்பா...

வெகுஜன மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் திமுகவுக்கு நிகர் திமுகதான்.

1950களின் மத்தியில் அக்கட்சி தேர்தல் பாதைக்கு திரும்பியபோதே, மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியிருந்த சினிமாவை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அக்கட்சியின் நிறுவனர் அண்ணாவில் தொடங்கி, இளம் தலைவர்களாக உருவெடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள் படங்களின் வசனங்களிலும், பாடல்களிலும் மறைமுகமாக திமுகவின் கருத்துகளை மக்களிடையே பிரபலப்படுத்தினர்.

அக்கட்சி சார்பு நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் திமுக அடையாளங்களை காட்ட தவறியதில்லை.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எழுத்தறிவு பரவலாக கிடைக்கத் தொடங்கிய காலத்தில் ஏராளமான பத்திரிகைகள் நடத்தியும், பிரசுரங்கள் வெளியிட்டும் தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்தார்கள். பிற்பாடு தொலைக்காட்சிக்கு மக்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டபோதும் அதையும் தனக்கு சாதகமான ஊடகமாக மாற்றிக்கொள்ளவும் திமுக தவறவில்லை.

இதுபோன்ற மக்கள் தொடர்பு பணிகள் ஏற்படுத்திய தாக்கத்தை தேர்தல் நேரத்தில் விளம்பரங்கள் மூலமாக தங்களுக்கு ஆதரவான அலையாக மாற்றுவது திமுக பாணி.

அரசியல் மேடைகளில் நல்ல தமிழை கொண்டு வந்த சாதனைக்கு சொந்தக்காரர்களான திமுகவினர், தேர்தல் விளம்பரங்களிலும் ‘நச்’சென்று நடுமண்டைக்கு ஏறும் விதமாகவும் வண்ணமயமான வாசகங்களை உருவாக்குவதில் வல்லவர்கள்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்பதில் தொடங்கி, ‘தொடரட்டும் இந்த பொற்காலம்’ வரையிலுமான அவர்களது விளம்பரத் தொடர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பிரபலம்.

‘நாடு நலம்பெற.. நல்லாட்சி மலர..’ என்கிற ஒருவரி வாசகமே 89ல் திமுகவுக்கு பெருவாரியான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்து, அக்கட்சியின் பதிமூன்று ஆண்டுகால வனவாசத்தை முடிவுக்கு கொண்டுவந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

‘ஊழல் பெருச்சாளிகளுக்கா உங்கள் ஓட்டு?’ என்கிற 96 தேர்தல் வாசகம், ஜெயலலிதாவை அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே மண்ணை கவ்வ வைத்தது. ‘சசிகலாபுரமா சமத்துவபுரமா?’ என்றெல்லாம் திமுக விளம்பரங்கள் மக்களை நோக்கி கேட்ட கேள்வி போயஸ் தோட்டத்தை நடுநடுங்க வைத்தது.

பொதுவாக இதுபோன்ற விளம்பரங்களில் திமுக இரண்டு வழிமுறைகளையே பின்பற்றுகிறது.

அக்கட்சி ஆட்சியிலிருந்து சந்திக்கும் தேர்தல்களின் போது தன்னுடைய சாதனைகளை முன்வைத்து விளம்பரங்கள் செய்யும்.

எதிர்க்கட்சியாக இருந்து தேர்தலை சந்திக்கும்போது, ஆளுங்கட்சியின் தவறுகளை பாமர மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாக அம்பலப்படுத்தும்.

இந்த மரபு, விளம்பரங்களுக்கு மட்டுமல்ல. அக்கட்சியின் பிரசார மேடைகளுக்கும் பொருந்தும்.

மற்ற சில்லறை விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல், இந்த இரண்டு உத்திகளையே தொடர்ச்சியாக தேவைக்கேற்ப பயன்படுத்துவதால்தான் உலகிலேயே அறுபது ஆண்டுகளை கடந்தும் உயிரோட்டமாக இருக்கும் ஒரே பிராந்திய இயக்கமாக திமுக இருக்கிறது.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதியின் ஊடகப்பணி, இன்றைய ஃபேஸ்புக் காலம் வரை ஏராளமான வடிவங்களை கடந்து வளர்ந்திருக்கிறது. கருணாநிதி ஒவ்வொரு முறை அப்டேட் ஆகும்போதும் கூடவே அவரது கட்சியும் தன்னை டெக்னாலஜிக்கு ஏற்ப அப்டேட் செய்துக் கொள்கிறது.

இதற்கு உதாரணம்தான் திமுக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து வெளியிட்டு வரும் பரபரப்பான விளம்பரங்கள்.

திமுகவின் பொருளாளர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களில் தமிழகம் எங்கும் 234 தொகுதிகளிலும் நடத்திய ‘நமக்கு நாமே’ பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அந்த பயணத்தின் போது அவர் ஒவ்வொரு ஊரிலும் முழங்கிய வாசகம் ‘முடியட்டும் விடியட்டும்’. அதிமுக ஆட்சி முடியட்டும், திமுக ஆட்சி விடியட்டும் என்கிற பொருளில் கூறப்பட்ட இந்த வாசகத்தின் தொடர்ச்சியாக சமீபநாட்களாக ஊடகங்களில் பளிச்சிடும் விளம்பரங்கள், மக்களிடையே பேசப்படும் விவாதமாக உருவெடுத்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை மையப்படுத்தி சிறப்பு விவாதம் நடத்தும் அளவுக்கு வெளியான முதல் நாளே பூகம்பத்தை உருவாக்கியிருக்கிறது.

விளம்பரத்துறையில் teaser ad என கூறப்படும் சீண்டல் விளம்பரங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. திமுகவின் சமீப விளம்பரங்களும் ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா?’ என்கிற புகழ்பெற்ற வாசகத்தை தாங்கி வருவது அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது.

ஆளும் அதிமுக, அரசு செலவிலேயே நலத்திட்டங்கள் அறிவிப்புக்கான விளம்பரங்கள் என்கிற சாக்கில் பல கோடி ரூபாய்க்கு தேர்தல் பிரசார விளம்பரங்களாக தந்துவரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான திமுக எதிர்கொண்டிருக்கும் இந்த நூதன பாணி இந்தியாவெங்கும் பேசப்படும் பொருளாகி உள்ளது.

கடந்த 23ஆம் தேதி இந்த விளம்பரத் தொடரின் முதல் விளம்பரம் வெளியிடப்பட்ட அன்றே, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 6 லட்சம் முறை இந்த விளம்பரம் விவாதிக்கப்பட்டு வைரலாக மாறியது. இன்றும் பரவி வருகிறது. போலவே ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் போன்ற தளங்களிலும் இப்போது திமுக விளம்பரங்கள் குறித்துதான் பேச்சு. அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரம் ஒன்று சமூகவலைத்தள ஊடகங்களில் இந்தளவுக்கு முதன்மையான பேசுபொருளாக மாறியிருப்பது இதுவே முதன்முறை.

வருடாவருடம் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று விதவிதமாக போஸ்டர் ஒட்டி, விளம்பரங்கள் கொடுத்து அசத்துவார்கள்.

இந்த ஆண்டு அதிமுகவினரின் அந்த வழக்கமான கோலாகலம் பிசுபிசுத்துப் போனதற்கு திமுகவின் இந்த புதிய விளம்பரத் தொடரே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஏற்கனவே இணையதளங்களில் செயல்படும் திமுக ஆதரவாளர்களுக்கு, அக்கட்சி பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வரும் நிலையில் இந்த புதிய ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ வைரல் அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. இதே விளம்பர வாசகங்களை கொஞ்சம் முன்னே பின்னே மாற்றி, அதிமுக அரசை வெறுப்பேற்றி மீம்ஸ் உருவாக்கி வருகிறார்கள்.

பாரம்பரியமான அச்சு ஊடக விளம்பரங்களில் திமுக கலக்கினாலும், இக்கால இளைஞர்களை ஈர்க்கும் டிஜிட்டல் ஊடகங்களிலும் முழு முனைப்பாக பிரசாரம் செய்து வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் தொடங்கி கட்சியின் ஊராட்சி கிளை நிர்வாகிகள் வரை அத்தனை பேரும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள் (இன்னமும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக சமூகவலைத்தளங்களுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

இதற்காக தேர்தல் வரை திமுக 24 X 7 மணி நேரமும் உழைக்கக்கூடியவர்களை நியமித்திருக்கிறது. தொழிற்முறையிலான சில ஏஜென்ஸிகளையும் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்று தெரிகிறது.

அந்தவகையில் திமுக தலைவர் போன் மூலம் பிரசாரம் செய்யும் ‘மிஸ்ட் கால்’ முறை பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. இதுவரை முப்பது லட்சம் பேர், மிஸ்ட்கால் முறையில் கருணாநிதியின் குரலை ஆர்வத்தோடு கேட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட அளவிலான திமுகவினர், மாவட்டம் தோறும் பிரத்யேக வாட்ஸப் குழுமங்களை உருவாக்கி அதில் அதிமுக அரசின் சொதப்பல்களை பிரசாரம் செய்யும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, திமுகவால் 2016 தேர்தல் கலர்ஃபுல்லாக களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இதற்காக திமுக நிறைய செலவழித்திருப்பதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. “இந்த விளம்பரம் மக்களிடையே ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை ஒப்பிட்டால், திமுக செலவழித்திருக்கும் தொகை மிக சொற்பமே” என்று JWT என்கிற விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த விளம்பர ஆய்வாளர் சொல்கிறார்.

திமுகவின் இந்த விளம்பர சுனாமியை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற ஆவல் அனைத்து மட்டங்களிலும் உருவாகி இருக்கிறது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடி போட்டி என்கிற மனப்பான்மை உறுதியாக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள்நல கூட்டணி, பாமக போன்ற மாற்று அணிகளின் பிரசாரம் சுத்தமாக கலகலத்துப் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் சாதகங்களை சொல்லி ஓட்டு கேட்காமல், அதிமுகவின் பாதகங்களை மட்டுமே சுட்டிக் காட்டுவது தார்மீகமான விளம்பரமுறைதானா என்றொரு கேள்வியை சமூகவலைதளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.

“நாங்க இப்போதைக்கு ஒட்டியிருக்கிறது போஸ்டர்தான். அதுக்குள்ளே விமர்சனம் எழுதிட்டா எப்படி? இன்னும் டீசர் வரணும். டிரைலர் வரணும். ஆடியோ ரிலீஸ் அது இதுன்னு நிறைய இருக்கு. அதுக்கப்புறம்தான் படம். முதல்லே படம் ரிலீஸ் ஆகட்டும். நிச்சயமா பட்டையைக் கிளப்பும். அதைப் பார்த்துட்டு இந்த தார்மீகம், அறம் பற்றியெல்லாம் எழுதுங்க. விமர்சனங்களை வரவேற்கிறோம்” என்று ஜாலியாக இதற்கு பதில் சொல்லுகிறார் திமுக இளைஞரணி பிரமுகர் ஒருவர்.

(இந்த கட்டுரையின் எடிட் செய்யப்பட்ட வடிவம் இன்றைய ‘தினகரன்’ நாளிதழில் பிரசுரமாகியிருக்கிறது)

24 பிப்ரவரி, 2016

நூத்தி பத்து... அம்மா.. அம்மா...!

அதிமுகவினரின் அம்மாவுக்கு பிறந்தநாள் இன்று. காவடி தூக்குவது, பால்குடம் சுமப்பது, தீச்சட்டி ஏந்துவது, வேப்பிலை ஆடை உடுத்துவது, நாக்கில் வேல் குத்திக் கொள்வது, நெருப்பு மிதிப்பது, அங்கபிரதட்சணம் செய்வது என்று ஆயிரத்தெட்டு பகுத்தறிவு வழிமுறைகளில் இந்நன்னாள் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இருந்தாலும் தமிழனுக்கு கொண்டாட்டம் என்றால் தமிழ் கலாசார செயல்பாடாக பாரம்பரியமாக நடைபெறுவது பட்டிமன்றம்தான். அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பயா டிவி’யில் நடைபெறும் கற்பனை காமெடி பட்டிமன்றம் வாசகர்களுக்காக லைவ்வாக...
பட்டிமன்றத் தலைப்பு, ‘டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியின் சாதனையாக விஞ்சி நிற்பது தமிழகமெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களா? அல்லது உலகமே வியந்து போற்றும் நூத்திப்பத்து அறிவிப்புகளா?’

நடுவராக சபாநாயகர் தனபால். ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், சரத்குமார் ஆகியோர் வாதிடுகிறார்கள்.

தனபால் : அம்மா என்றாலே சாதனைதான். அம்மா என்றாலும் மூன்றெழுத்து. சாதனை என்றாலும் மூன்றெழுத்து (பலத்த கைத்தட்டல்). இருந்தாலும் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ஐ.நா.சபையே வியக்கும் வண்ணம் அவரது சாதனைகள் ஸ்டிக்கராக உலகம் முழுக்க ஒட்டப்பட்டிருக்கின்றன. அதிக ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சி என்று கின்னஸ் புத்தகமே பாராட்டுகிறது. அதுபோல அமெரிக்க அதிபர் மாளிகையிலே கூட அம்மாவின் நூத்திப் பத்து அறிவிப்புகளை பிட்டு அடித்து அதே மாதிரியான அறிவிப்புகளை ஒபாமா வெளியிட ஆலோசனைகள் நடைபெறுகின்றன. இப்படி பிரபஞ்சமே பாராட்டும் புரட்சித்தலைவி அவர்களின் முத்தாய்ப்பான இந்த இரண்டு சாதனைகளில் எது பெரிய சாதனை என்று வாதிட நம் பேச்சாளர்கள் துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டா கணக்காக தயாராக இருக்கிறார்கள்.

முட்டையும் முட்டையும் மோதிக்கொண்டால் ஆஃப் பாயில். மொட்டையும் மொட்டையும் மோதிக்கொண்டால்? இவர்கள் முட்டையா அல்லது திருப்பதி மொட்டையா என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

(பலமான கைத்தட்டல்)

சரத்குமார் பேசவருகிறார். பின்னணியில் ‘நாட்டாமை பாதம் பட்டா...’ பாடல் ஒலிக்கிறது.

சரத்குமார் : மாண்புமிகு நடுவர் அவர்களே. நான் ஸ்டிக்கர் அல்ல. கருவேப்பிலை. எனவே நூத்தி பத்துக்காக பேசுகிறேன். அகில இந்திய சமத்துவக் கட்சி, அதிமுகவுக்காக அதிமுகவினரை விட அதிகம் குனிந்த கட்சி. அப்படியிருக்க ஆட்சியின் முடிவில் எங்களுக்கு தரப்பட்டிருக்கும் பரிசு 110 அல்ல 111 (மூன்று விரல்களை நாமம் போல போட்டு காட்டுகிறார்) என்பதை நடுவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே 110 அறிவிப்பில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ரெண்டு சீட்டு கொடுக்கப்படுமேயானால்...”

தனபால் : வரம்பு மீறி பேசுகிறீர்கள். உங்களுக்கு பேசக் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. உட்காருங்கள்.

வளர்மதி : சரத்குமார் எங்களைவிட புரட்சித்தலைவி அம்மாவுக்கு விசுவாசமாக இருந்ததாக குறிப்பிடுவது நித்தமும் அம்மாவின் காலில் விழுந்து சேவித்து எழும் எங்களையெல்லாம் கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது.

(ஆவேசமாக)

செவுரு இருக்கிறது. ஸ்டிக்கர் ஒட்டுகிறது. உனக்கேன் ஸ்பெஷலாக அறிவிக்க வேண்டும் நூத்தி பத்து? எங்களை போல நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டாயா? பசை தடவினாயா? பஞ்சர் ஒட்டினாயா? எவரோ கொடுத்த வெள்ள நிவாரணப் பொருட்களுக்கு எல்லாம் எம் ரத்தத்தின் ரத்தங்கள் ஸ்டிக்கர் ஒட்டி உரிமை கொண்டாடியபோது கூடமாட உட்கார்ந்து ஒட்டாமல் எங்கே போயிருந்தாய்? டெபாசிட் இல்லாதவரே... நீ என்ன எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளரா? வார்டு கவுன்சிலரா? நீ ஏன் கேட்கிறாய் 110 அறிவிப்பு? ஓட்டு இல்லாத ஓடப்பரே, அம்மாவின் காலில் விழுந்து எழுந்து மக்களிடம் ஓட்டு கேட்கும் அதிமுக மறவர் கூட்டம் உன் அசமகவினரின் அஞ்சாறு ஓட்டுகளையும் எங்கள் ஓட்டுகளாக தேர்தலில் குத்திவிடும். ஜாக்கிரதை.

(விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது. கரவொலி காதை கிழிக்கிறது. நடுவர் தனபாலே தனக்கு முன்னிருக்கும் பெஞ்சை தட்டி ஒலி எழுப்புகிறார்)

சரத்குமார் : நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்..?

தனபால் : நீங்கள் என்ன சொல்லுவது? அம்மா சொல்லுவார் உங்களைப் பற்றி. வரம்புமீறி பேசுகிறீர்கள். நீங்கள் பேசியதை நான் நீக்குகிறேன். ஒழுங்காக பட்டிமன்ற மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் வெளிநடப்பு செய்யுங்கள். இல்லையேல் காவலர்களை வைத்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியே எறிந்து தமிழர்களின் மானத்தை காப்பேன்.

நத்தம் விஸ்வநாதன் : சரத்குமார் வீட்டின் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு, மிச்சமாகும் மின்சாரம் ஏழைபாழைகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுமென புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க அறிவிக்கிறேன். இதனால் ஏழு கோடி ஏழைகள் பயன்பெறுவார்கள். அம்மா வாழ்க. புரட்சித்தலைவி வாழ்வாங்கு வாழ்க. தங்கத்தலைவி நீடுழி வாழ்க.

ஓ.பன்னீர் செல்வம் : சரத்குமாரை அழைத்ததற்கு பதிலாக மாஃபா பாண்டியராஜனையோ, செ.கு.தமிழரசனையோ பேச அழைத்திருக்கலாம். தேர்தலில் சீட்டு கொடுக்காவிட்டாலும் விசுவாசத்தில் நம்மையும் மிஞ்சி, நம்மைவிட மிகசிறப்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழ்பாடும் தகுதி பெற்றவர்கள் அவர்கள்தான்.

நத்தம் விஸ்வநாதன் : இதை நான் வழிமொழிகிறேன். அம்மா வாழ்க. ஸ்டிக்கர் வாழ்க. பேனர் வாழ்க. வெள்ள நிவாரணம் வாழ்க. மின்தடை வாழ்க.

தனபால் : பட்டிமன்றம் மிக அருமையாக நடக்கிறது. மக்களுக்கு பயன் தரக்கூடிய இதுபோன்ற விவாதங்கள் அம்மாவை பற்றி பேசும்போதுதான் அர்த்தம் பெறுகிறது. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’ என்று கவிஞன் சும்மாவா பாடினான்?

வளர்மதி : ஆலுமா டோலுமா ஸ்டிக்கர் ஒட்டுனா போதும்மா

ஓ.பன்னீர்செல்வம் : டேரா டேரா டேரா பைட்டா ஸ்டிக்கர் இருக்கு. பிட்டு பிட்டா ஒட்ட ஒட்ட ஏறும் கிறுக்கு. நூத்தி பத்து. அம்மா... அம்மா.. நூத்தி பத்து. அம்மா.. அம்மா.. லெட் அஸ் கெட் எ நூத்தி பத்து.. அம்மா... அம்மா.... ( ‘செல்ஃபீ புள்ள’ ராகத்தில் டேபிளை தட்டியபடியே பாடுகிறார்)

தனபால் : அடடா.. அடடா.. சும்மா அள்ளுதே. தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்துடிச்சி..

(திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வருகிறார் நாஞ்சில் சம்பத்)

நாஞ்சில் : அப்படியெல்லாம் சட்டுபுட்டுன்னு தீர்ப்பு கீர்ப்பு சொல்லிடக்கூடாது. அம்மா வரட்டும். காத்திருப்போம்.

(செம்பரம்பாக்கம் வெள்ளம் வந்தபோது, அம்மா வரட்டும் என்று நாடே காத்திருந்ததை போல பட்டிமன்ற அவை மொத்தமும் அப்படியே காத்திருக்கிறது)

நன்றி : தினகரன் தேர்தல் களம்

22 பிப்ரவரி, 2016

வெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே!

தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் 26,000த்துக்கும் மேற்பட்ட மனுக்களை அளித்திருக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 8,000 மனுக்கள் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரும் விருப்பமனுக்கள்.

உலக வரலாற்றிலேயே எந்த கட்சியோடும் ஒப்பிட முடியாத வித்தியாசமான கட்சியான அதிமுகவில் விருப்பமனு போட்டவர்களுக்கு, ‘நேர்காணல்’ என்றொரு சம்பிரதாயம் நடக்கும். ஆனால், ஏற்கனவே வேட்பாளர்களை ‘அம்மா’ தேர்வு செய்துவிட்டிருப்பார் (அந்தப் பட்டியலைதான் கையில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் சசிகலா சாமி கும்பிட்டுவிட்டு வருவதாக சொல்கிறார்கள்). இருந்தாலும் ஒப்புக்குச் சப்பாணியாக, ஊருக்கு ஒப்பேற்ற அதிமுக தேர்தல் குழுவினர் நடத்தும் நேர்காணல் எப்படியிருக்கும் என்றொரு ஜாலி கற்பனை. ஓவர் டூ லாயிட்ஸ் ரோடு அதிமுக தலைமைக் கழகம்...
நேர்காணலுக்கு வந்தவர் : புரட்சித்தலைவி வாழ்க. பொன்மனச்செல்வி வாழ்க. தங்கத்தாரகை வாழ்க. ஆதிபராசக்தி வாழ்க. அகிலாண்டேஸ்வரி வாழ்க. அகிலம் காக்கும் அன்னிபெசண்ட் அம்மையார் வாழ்க. அன்னை தெரசா வாழ்க. அம்மா வாழ்க.


ஓ.பன்னீர்செல்வம் (இடைமறித்து) : கேட்குற எனக்கே மூச்சு வாங்குது. சொல்லுற நீங்க பூஸ்ட் அடிச்சாமாதிரி தெம்பா இருக்கீங்க. கண்டினியூ யுவர் கபடி கபடி.

நே.கா. வந்தவர் : கழகத்தின் நிரந்தப் பொதுச்செயலாளர் வாழ்க. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் வாழ்க. நாளைய பாரத பிரதமர் வாழ்க. நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் வாழ்க. உலகத் தலைவி வாழ்க. அண்டசராசரங்களை ஆளும் தைரியலட்சுமி வாழ்க.

நத்தம் விஸ்வநாதன் : போதுங்க... போதுங்க... பொதுஅறிவு உங்களுக்கு பிரமாதமா இருக்கு. ஆனா சட்டசபைக்கு போறதுக்கு வேற சில தகுதிகள் வேணுமே?

நே.கா. வந்தவர் : எங்க ஊர்லே இஞ்ச் இடுக்கு பாக்கியில்லாமே எல்லா இடத்துலேயும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கேனுங்க. ரோட்டுலே நடந்தாகூட அம்மா ஸ்டிக்கரை மிதிச்சமாதிரி ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டு மக்களெல்லாம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க.

தப்பித்தவறி மிதிச்சிட்டா காலை எடுத்துடுவோமில்லே? அவ்வளவு ஏனுங்க. ஜனங்க முதுகுலே கூட ஏப்ரல் ஃபூல் முத்திரை அடிக்கிற மாதிரி அம்மா படத்தை பெருசா ஒட்டிட்டேனுங்க. பிய்க்கவே முடியாதபடி அமெரிக்கன் டெக்னாலஜி பசை போட்டு ஒட்டிட்டேன். என் முதுகை கூட பாருங்க.

(சட்டையை கழற்றி திரும்புகிறார். 20 இன்ச் விட்டத்துக்கு ரவுண்டாக ஒட்டப்பட்டிருக்கும் அம்மா ஸ்டிக்கர் பளபளப்பாக பர்மணெண்ட் பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது)

ஓ.பன்னீர்செல்வம் : வெரி இண்டரெஸ்டிங். சட்டைய மாட்டிக்குங்க. அப்புறம்?

நே.கா. வந்தவர் : செம்பரம்பாக்கத்துலே வெள்ளம் வந்தப்போ கூட எங்க ஊருக்குள்ளே பொட்டுத்தண்ணி வராம இருந்ததுக்கு காரணம், ஊரை சுத்தி பாதுகாப்பா இடைவெளியே இல்லாம சீனப்பெருஞ்சுவர் கணக்கா நான் வெச்ச அம்மா பேனருங்க தானுங்க. வெள்ளத்தை தடுத்ததாலே மக்களெல்லாம் அம்மாவை மனசார பாராட்டினாங்க. ‘நானும் வெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே!’ன்னு அதுக்கும் ஒரு பேனர் வெச்சேன்.

வளர்மதி (உணர்ச்சிவசப்பட்டு) : சுனாமியே எங்க அம்மா கட்டவுட்டை பார்த்துட்டு சுருட்டிக்கிட்டு போயிடிச்சி. செம்பரம்பாக்கம் வெள்ளம் எங்கம்மாவுக்கு எம்மாத்திரம்?

(சட்டென்று ஒரு கற்பூரத்தை கையில் ஏற்றி அப்படியே வாயில் போட்டு பபிள்கம் மாதிரி மெல்ல ஆரம்பிக்கிறார் வளர்மதி. நேர்காணல் எடுக்கும் அத்தனை அதிமுக தலைவர்களும் பேச்சு மூச்சின்றி பயபக்தியோடு எழுந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அமர்கிறார்கள்)

மதுசூதனன் : தியரி டெஸ்டுலே நீ டபுள் ஓக்கேப்பா. பிராக்டிக்கலா எப்படின்னு தெரியணுமே?

(நேர்காணலுக்கு வந்தவர் சட்டென்று எழுந்து நிற்கிறார். நாற்பத்தைந்து டிகிரி முதுகு வளைத்து, அந்நிலையிலேயே கையை மேலே தூக்கி, இராணுவ வேகத்தில் கும்புடு போட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிறார். சட்டென்று யாரும் எதிர்பாரா வண்ணம் எகிப்து பிரமிடுகளில் பதம் செய்யப்பட்ட மம்மி கணக்காக உடம்பை விரைப்பாக்கி தூண் போல நிற்கிறார். இரண்டே நொடிகளில் அனாயசமாக அப்படியே தொம்மென்று தரையில் விழுந்து நமஸ்கரிக்கிறார். ஹெலிகாஃப்டர் பறப்பதை போல மிமிக்ரி செய்துக்கொண்டே, கோபுரதரிசனம் பார்க்கும் பக்தனை போல வானத்தை பார்த்து கச்சிதமான கும்பிடு போடுகிறார். சட்டென்று நாற்காலியில் அமர்ந்து தனக்கு முன்பாக இருக்கும் மேஜையை ‘கிங்காங்’ பாணியில் படபடவென்று தட்டுகிறார். அறைக்குள் சடக்கென்று சட்டசபை அட்மாஸ்பியர் தோன்றுகிறது. தேர்வுக்குழுவினர் அத்தனை பேரும் இந்த வித்தைகளை கண்டு பிரமை பிடித்த நிலையில் படபடவென்று கை தட்டுகிறார்கள்)

கோகுல இந்திரா : தேர்தல் பிரச்சாரத்துலே என்ன பேசுவீங்க?

நே.கா. வந்தவர் : இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த புரட்சித்தலைவி அம்மாவுக்கு ஓட்டு போடுவீங்களா? இல்லேன்னா இரண்டாம் உலகப் போர் நடத்தி மக்களை கொன்ற ஸ்டாலினுக்கு ஓட்டு போடுவீங்களான்னு ஜனங்களை கேட்பேன்.

கோகுல இந்திரா : இரண்டாம் உலகப்போரா? அதை நடத்தினது ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆச்சே?

வளர்மதி : இருந்துட்டு போவட்டுமே. அவர் பேரும் ஸ்டாலின்தானே? அதுக்கும் கருணாநிதிதான் பொறுப்பேத்துக்கணும்.

நத்தம் விஸ்வநாதன் : நீங்க செஞ்ச மக்கள் பணிகளில் வேறெதாவது குறிப்பா சொல்ல முடியுமா?

நே.கா. வந்தவர் : அம்மா பேனரை கிழிப்பேன்னு டிராஃபிக் முனுசாமின்னு ஒரு கிழவரு வந்தாரு. அவரை ஓட ஓட விரட்டி ரத்தம் தெறிக்க அடிச்சி துரத்துனேன். அதே பேனரை போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குன்னு எடுத்துட்ட இன்ஸ்பெக்டரை போனில் கூப்பிட்டு கழுவி கழுவி ஊத்தினேன். அம்மாவை பொய்வழக்குலே பெங்களூர் ஜெயில்லே கருணாநிதி வெச்சப்போ அதை கண்டிச்சி நீளமா தாடி வளர்த்தேன். அம்மா ரிலீஸ் ஆனப்போ மொட்டை அடிச்சி காது குத்திக்கிட்டேன். கூணாளம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்தினேன். தீச்சட்டி ஏந்தினேன். தீ மிதிச்சேன். மண்சோறு சாப்பிட்டேன். காவடி தூக்கினேன்...

ஓ. பன்னீர் செல்வம் : ஆஹா... ஆஹா... பக்தா உன் பக்தியை மெச்சினோம். நீ எம்.எல்.ஏ பதவிக்கு மட்டுமில்லே. அமைச்சர் பதவிக்கே லாயக்கான ஆளுதான். அம்மா கிட்டே அப்படியே சொல்லிடறோம். அம்மா நல்ல முடிவா எடுத்து கடுதாசி போடுவாங்க. காத்திருங்க.

(புரட்சித்தலைவி வாழ்க. பொன்மனச்செல்வி வாழ்க. தங்கத்தாரகை வாழ்க. ஆதிபராசக்தி வாழ்க என்று மீண்டும் கோஷமிட்டுக் கொண்டே கிளம்புகிறார் நேர்காணலுக்கு வந்தவர்)

(நன்றி : தினகரன் தேர்தல் களம்)

15 பிப்ரவரி, 2016

விசாரணையின் மறுபக்கம்!

‘விசாரணை’ திரைப்படம் வெளியான அன்று ஒரு தொலைக்காட்சியில் இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“இந்தப் படம் போலிஸ்காரர்களை ரொம்ப மோசமாக சித்தரிக்கிறதே? ‘விசாரணை’யை பார்ப்பவர்கள் போலிஸ் என்றாலே இப்படிதான் என்று நினைத்துவிட மாட்டார்களா?”

வெற்றிமாறன் இதற்கு புத்திசாலித்தனமான பதில் ஒன்றினை சொன்னார்.

“போலிஸ்னாலே இப்படிதான்னு நான் சொல்லலை. பூ அல்லது தலைன்னு எந்த விஷயத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கும். நான் ஒரு பக்கத்தை மட்டும்தான் இந்தப் படத்துலே காட்டியிருக்கேன். இன்னொரு பக்கத்தை வேற யாராவது காட்டுவாங்க”
தெரிந்தேதான் இந்த பதிலை சொன்னாரா என்று தெரியவில்லை. ‘விசாரணை’ வெளியான அதே நாளில்தான் மலையாளத்தில் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ வெளியானது. போலிஸ் விசாரணையால் பாதிக்கப்படுபவர்களின் பார்வையில் நம் ‘விசாரணை’ விரிந்தது என்றால், மலையாளத்தில் போலிஸ் பார்வையில் விரிந்திருக்கிறது. இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.

நம்மூரில் வெற்றிமாறன் எப்படியோ, அதுபோலதான் கேரளாவில் இயக்குநர் ஆப்ரிட் ஷைன். அவரது பெயரை சொன்னால் இங்கே யாருக்கும் உடனே தெரியாது. ஆனால், அவர் எடுத்த படம் ரொம்ப பிரபலம். ‘1983’. ‘பொல்லாதவன்’ நமக்கு எப்படி ஒரு ப்ரெஷ்ஷான ஜானரை கொடுத்ததோ, அதுபோலவே ‘1983’ மலையாளத்தில் நிகழ்ந்த புதிய முயற்சி. அதே இயக்குநரின் இரண்டாவது படம்தான் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’. முதல்பட ஹீரோவையே இரண்டாம் படத்துக்கும் புத்திசாலித்தனமாக வளைத்துப் போட்டுவிட்டார். ‘1983’ பெற்ற அபாரமான வணிக வெற்றி, நிவீன்பாலியை படம் தயாரிக்கவும் உந்தித் தள்ளியது. ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’வின் ஹீரோவும், தயாரிப்பாளரும் அவர்தான்.

‘விசாரணையை’ பற்றி இங்கே ஏகப்பட்ட விசாரணை நடந்துவிட்டது. எனவே, நேராக ‘ஆக்‌ஷன் ஹீரோ’வுக்கு போய்விடலாம்.

பி.எச்.டி முடித்து ஏதோ காலேஜில் லெக்சரராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பிஜூவுக்கு போலிஸ் வேலை மீது காதல். எஸ்.ஐ. எக்ஸாம் எழுதி தேர்வாகி, எர்ணாகுளம் டவுன் ஸ்டேஷனுக்கு பணிபுரிய வருகிறார்.

பிஜூவின் ஒரு மாதகால போலிஸ் ஸ்டேஷன் வாழ்க்கைதான் ஒட்டுமொத்த படமுமே. இந்தப் படத்தில் கதை கிடையாது. வில்லன் கிடையாது. காட்சிகள் மட்டும்தான். அந்த காட்சிகளை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தும் சுவாரஸ்யமான திரைக்கதை, வசனங்கள் மூலமாக இல்லாத கதையை இருப்பதாக பார்வையாளனை நம்பவைக்கிறார் இயக்குநர்.

போலிஸ் படம் என்றாலே ஹீரோ தீர்க்கவேண்டிய பிரதான பிரச்சினை ஒன்று இருக்கும். அந்த பிரச்சினையை தீர்க்கவிடாமல் தடுக்கும் வில்லனை அழித்து ஒழித்து சுபம் என்பதுதான் உலகம் முழுக்கவே இருக்கும் டெம்ப்ளேட். மசாலாத்தனமாக ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ என்று டைட்டில் வைத்துவிட்டு, ஆப்ரிட் ஷைன் நமக்கு காட்டியிருப்பது மாற்றுப்படம். ஒரு சாதாரண எஸ்.ஐ.யின் கேரியரில் அவன் சந்திக்கக்கூடிய வழக்குகளை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் ஒருவரி. தன்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை ஒருவரும் மீறக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறான்.

குடித்துவிட்டு பொது இடத்தில் எல்லோருக்கும் ‘தரிசனம்’ காட்டும் குடிகாரனில் தொடங்கி, மாநிலமே வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் கிரிமினல் வரை பிஜூ டீல் செய்கிறான். அவன் விசாரணை செய்யும் ஒவ்வொரு வழக்குமே ஒரு சிறுகதை. ‘சடக்’கென்று தொடங்கி ‘படக்’கென்று முடிகிறது. சில கதைகளின் உருக்கம் நெஞ்சை தொடுகிறது. லாக்கப்பில் ஒருபுறம் கிரிமினல்களை போட்டு மிதித்துக்கொண்டே போனில் மறுபுறம் தனக்கு நிச்சயமான பெண்ணோடு காதல் கடலை போடுகிறான் பிஜூ. படத்தில் அட்மாஸ்பியருக்கு வரும் பாத்திரங்களை கூட அவ்வளவு சிறப்பாக எப்படி நடிக்க வைக்க முடிந்தது இயக்குநருக்கு என்கிற ஆச்சரியம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

‘ஆக்‌ஷன் ஹீரோ’ என்கிற அதிரடியாக டைட்டில் வைத்து இருந்தாலும், ‘சிங்கம்’ ரேஞ்சுக்கு ரவுண்டுகட்டி விளையாட அவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இல்லை. க்ளைமேக்ஸில் இதற்கு சமாதானம் சொல்லுகிறார் இயக்குநர். “பிஜூ ஒன்றும் சூப்பர் ஹ்யூமன் இல்லை. நம்மை மாதிரி வெறும் மனுஷன்தான்”

‘நேரம்’, ‘தட்டத்தின் மறையத்து’, ‘1983’, ‘ஓம் சாந்தி ஓசண்ணா’, ‘பெங்களூர் டேஸ்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, ‘பிரேமம்’ என்று சகட்டுமேனிக்கு ஹிட்டுகள் கொடுத்துவரும் நிவின்பாலி ஒரு மோகன் என்றுதான் இத்தனை நாட்களும் நினைத்திருந்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னொரு கமல் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.

21 ஜனவரி, 2016

குடும்பம் + குற்றம் + செக்ஸ் = டோலிவுட் கோங்குரா

குழம்பிப் போயிருக்கிறார்கள் தெலுங்கர்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் தமிழர்கள் சந்தித்த அதே சூழல்தான்.

நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் இருந்து எழுபதுகளிலேயே தமிழர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டோம். நில சீர்த்திருத்தம் போன்ற அரசின் முன்னெடுப்புகளும் அந்த சமூக மாற்றத்தை விரைவுப்படுத்தியது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தியாவை ஆக்கிரமித்த உலகமயமாக்கலுக்கு தன்னை வேகமாக தயார்படுத்திக் கொண்ட முதல் இந்திய மாநிலம் தமிழகம் என்பதற்கு அதுவும் ஒரு காரணம். மைசூர் அரசுடனான நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் காலாவதியாகி காவிரி பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியவுடனேயே தமிழக அரசு விழித்துக் கொண்டு தன்னை நகர்ப்புற கலாச்சாரத்துக்கு தகவமைத்துக் கொள்ள தயாராகி விட்டது. எனவேதான் இங்கே பண்ணையார்களும், நாட்டாமைகளும், ஜமீன்களும் மவுசு இழந்துப் போனார்கள்.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று வேலைரீதியாக தமிழ் பார்ப்பனர்கள் பறக்க, அவர்களை பின்தொடர ஆரம்பித்தார்கள் மற்ற தமிழர்கள். உலகமயமாக்கலின் காரணமாக பணித்திறமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது அதே பார்ப்பனர்களின் வாரிசுகள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இடம்பெயர, நெல்லுக்கு பாயும் தண்ணீருக்கு பாய்ந்ததை போல பார்ப்பனரல்லாத மற்ற சாதியினரில் கல்வித்தகுதி பெற்ற என்ஜினியர்களும், சி.ஏ.க்களும், எம்.பி.ஏ.க்களுக்கும் அயல்நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சமூகம் கணிசமாக சம்பாதிக்க ஆரம்பித்தது. இன்று என்.ஆர்.ஐ. தமிழர்களை குறிவைத்து செயல்படக்கூடிய ஏராளமான வணிகங்களில் (என்.ஜி.ஓ.தான் ஆகப்பெரிய வணிகம்) சினிமாவுக்கே பிரதான இடம். ஓவர்சீஸில் காசு பார்க்கலாம் என்று எண்பதுகளின் இறுதியில் கமல் சொன்னபோதும், என்.ஆர்.ஐ.களின் முதலீட்டில் பெரிய படங்களை எடுக்க முடியும் என்றுகூறி ‘மருதநாயகம்’ முயற்சித்தபோதும், “இதெல்லாம் வேலைக்கு ஆவுறதில்ல....” என்று மஞ்சப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு கேலியாக சிரித்த சினிமாக்காரர்கள் இன்று ‘ஓவர்சீஸே சரணம்’ என்று காலில் விழுகிறார்கள். கமல் சொன்னது நம்மூர்காரர்களுக்கு புரியவில்லை. ஆனால் பாலிவுட்காரர்கள் விழித்துக்கொண்டு இருபது வருடங்களாக பணத்தை அறுவடை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓக்கே. லெட் அஸ் கமிங் டூ த கோர் பாயிண்ட்...

சிகப்பு கோலோச்சிய பூமியாக இருந்தாலும் ஆண்டான் – அடிமை ஜமீன் கலாச்சாரத்தில் இருந்து இன்றைய தேதி வரை முழுமையாக வெளிவர முடியாமல் அவதிப்படுகிறது தெலுங்குதேசம். நகர்ப்புற பிரதேசங்கள் சீமாந்திராவாகவும், சிறுநகரம் மற்றும் கிராமங்கள் பெரும்பாலும் அடங்கிய மாநிலமாக தெலுங்கானாவும் உருவாகிய பிறகு எல்லா வணிகமுமே அப்பகுதியில் எம்மாதிரியான யுக்திகளை செயல்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்வது என்கிற குழப்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவின் சாஃப்ட்வேர் அபிமானத்தால் அங்கே கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வெயிட்டாக உருவாகியிருக்கும் என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகம், நாம் முன்பு எதிர்கொண்டு, இப்போது சமாளித்துக் கொண்டிருக்கும் கலாச்சாரரீதியான இரண்டுங்கெட்டான் குழப்பத்தில் நீடிக்கிறது.

இந்த பிரச்சினைகளை எல்லாம் மிக எளிமையாக முதன்முதலாக அங்கே கடந்திருப்பவர்கள் சினிமாக்காரர்கள்தான். உலகிலேயே வேறெந்த பிரதேசத்திலும் தெலுங்கர்கள் அளவுக்கு சினிமாவை கொண்டாடுபவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

பொங்கலுக்கு தமிழில் நான்கு படங்களை வெளியிட்டு அவற்றில் ஒன்று ஹிட் ஆகி, இன்னொன்று ஜஸ்ட் பாஸ் ஆகி, மற்ற இரண்டு படங்கள் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கின்றன. அதே நேரம் தெலுங்கிலும் மகரசங்கராந்திக்கு நான்கு படங்கள்தான் வெளியாகி இருக்கின்றன. நான்குமே லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று சூப்பர்ஹிட். மற்றொன்று ப்ளாக்பஸ்டர் ஹிட். இவற்றில் மூன்று படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கும், நாகார்ஜூனா படத்துக்கும் கூடிய கூட்டம் ரஜினி முருகனைவிட அதிகம். மூன்று படங்களுமே சென்னை கேசினோ திரையரங்கில் ஓடுகிறது. சர்வானந்த் நடித்த ‘எக்ஸ்பிரஸ் ராஜா’ மட்டும் நாளைதான் வெளியாகிறது.

இன்னமும் தமிழ் சினிமாவுக்கு கைவராத வெற்றி சூத்திரத்தை தெலுங்கில் கண்டறிந்து விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. படத்துக்கு பூஜை போட்ட அன்றே, இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வசூல் என்னவென்று கணித்து திட்டமிட்டு செலவுகளை வரையறை செய்து பக்காவாக துட்டு பண்ணுகிறார்கள். இந்த திட்டமிடலிலேயே படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மார்க்கெட்டிங் எல்லாமே மிக துல்லியமாக அடையாளம் காணப்பட்டு விடுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நானாக்கு பிரேமத்தோ’ (அப்பாவுக்கு அன்புடன்), ஐரோப்பிய என்.ஆர்.ஐ குடும்பங்களின் தொழில்போட்டியை களமாக கொண்ட படம். உள்ளூரிலும் அந்த சரக்கை விற்கவேண்டுமே? எனவே உள்ளடக்கம் பக்கா லோக்கல். ஜூ.என்.டி.ஆரின் அப்பா ஒரு காலத்தில் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி. ஜெகபதி ராஜூவின் துரோகத்தால் சரிகிறார்.

மகன் வளர்ந்து, அப்பாவை ஏமாற்றியவனை அதலபாதாளத்துக்கு தள்ளுகிறான் என்கிற 70ஸ் கதைதான். போனஸாக வில்லனின் மகளை காதல் வலையில் வீழ்த்துகிறார் ஹீரோ. ‘தனி ஒருவன்’ பாணியில் கேட் vs மவுஸ் விளையாட்டு திரைக்கதையில் சுவாரஸ்யத்தின் உச்சியை எட்டுகிறது. இயக்குநர் சுகுமாரின் ட்ரீட்மெண்ட், இப்படத்தை தொழில்நுட்ப அடிப்படையில் சர்வதேச தரத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறது. தரை டிக்கெட் ஹாலிவுட் கமர்ஷியல் மாதிரியான அதிவேக திரைக்கதை, அதிரடி ஸ்டண்ட், தெலுங்குக்கே உரித்தான கலர் காஸ்ட்யூம் டூயட்டுகள், குத்துப்பாட்டு என்று மிக்ஸிங் பக்காவாக இருப்பதால் உள்ளூரில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் அமோக வசூல்.

நாகார்ஜூனாவின் ‘சொக்கடே சின்னி நாயனா’, இதுவரையிலான ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாக்களின் ஸ்பெசிமென் சாம்பிள். நாகார்ஜூனா என்கிற ஹீரோவுக்கு ஆன்ஸ்க்ரீனில் இருக்கும் ஆக்‌ஷன் + ரொமான்ஸ் இமேஜையும், ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளேபாய் இமேஜையும் (தென்னிந்தியாவின் ஹாட்டஸ்ட் ஸ்டார் அமலாவை கடும்போட்டியில் தட்டிக் கொண்டு போனவர் ஆயிற்றே?) அப்படியே புத்திசாலித்தனமாக காசாக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா.

படத்தின் கதை ரொம்பவும் சிம்பிள்தான்.
அமெரிக்காவிலிருந்து ராமும், சீதாவும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். வந்த காரணம், விவாகரத்து வாங்குவது. மாமியார் ரம்யா கிருஷ்ணன் மருமகளிடம் காரணம் கேட்கிறார். மனைவியை கவனிக்காமல் எப்போதும் மருத்துவத்தொழிலையே கட்டி அழுதுக் கொண்டிருக்கிறான் ராம். கல்யாணமாகி மூன்று ஆண்டுகளில் மூணே மூன்று முறை மட்டுமே தம்பதிகளுக்குள் ‘அது’ நடந்திருக்கிறது. ஒரு நாளைக்கே மூன்று முறை ‘அது’ செய்யக்கூடிய தன் கணவனுக்கு இப்படி ஒரு பிள்ளையா என்று ரம்யாகிருஷ்ணனுக்கு கொதிப்பு ஏற்படுகிறது. இறந்துவிட்ட தன் கணவன் பங்காரம் (அதுவும் நாகார்ஜூனாதான்) போட்டோவுக்கு முன்பாக நின்று, “யோவ் பங்காரம், என்னை இப்படி தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டே, உன் புள்ளைய கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினா, இப்படி வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு வந்து நிக்கிறான்” என்று புலம்புகிறார்.

எமலோகத்தில் எமகன்னிகளோடு ஜல்ஸா புரிந்துக் கொண்டிருக்கும் பங்காரம், மகனின் பிரச்சினையை (!) சரிசெய்ய பூலோகத்துக்கு விரைகிறார். அவரை மனைவி ரம்யாகிருஷ்ணன் மட்டும்தான் பார்க்க முடியும். பேசமுடியும். வந்தது வந்துவிட்டோம், ஒருமுறை மனைவியோடு ஜாலியாக இருந்துவிடலாம் என்று முயற்சிக்கும் செத்துப்போன பங்காரத்துக்கு அதற்கெல்லாம் அலவ்ட் இல்லை என்கிற எமலோக விதியை எமன் சுட்டிக் காட்டுகிறார்.
எப்படியாவது மகன் ராமை முறுக்கேற்றி மகளோடு சேரவைக்க, அப்பா பங்காரம் சிட்டுக்குருவித்தனமாக சிந்தித்து சில ஐடியாக்களை செயல்படுத்துகிறார். இதே காலக்கட்டத்தில்தான் அவருக்கு தெரியவருகிறது, தான் இறந்தது விபத்தால் அல்ல சதியால் என்பது. மகனை மருமகளோடு நான்காவது முறையாக வெற்றிகரமாக சேரவைக்கிறார். அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளை களைந்து ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் புரியவைக்கிறார். தன்னை வீழ்த்திய வில்லன்களையும் மகன் மூலமே பழிவாங்குகிறார்.

அவ்வளவுதான் கதை. இதை தமிழில் எடுத்தால் பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணில் எடுபடாது. ஆனால் புராண மயக்கத்தில் கிறுகிறுத்துப் போயிருக்கும் ஆந்திராவுக்கு அல்வா மாதிரி சப்ஜெக்ட். எமனை காட்டி எத்தனையோ முறை கல்லா கட்டியும், ஒவ்வொரு முறையும் முந்தைய வசூல்சாதனையை முறியடித்துக் கொண்டே போகிறார்கள்.

சக்கைப்போடு போடும் மேற்கண்ட இரண்டு படங்களிலுமே குடும்பம், குற்றம், செக்ஸ் ஆகியவைதான் கச்சா. எதை எதை எந்தெந்த அளவுக்கு கலக்க வேண்டும் என்பதை படத்தின் பட்ஜெட், ஹீரோ முதலான விஷயங்கள் தீர்மானித்திருக்கின்றன. ஆனால், சொல்லி அடித்திருக்கும் சிக்ஸர்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதை போல நமக்கே நமக்கான ஃபார்முலாவை நாம் எப்போதுதான் கண்டறியப் போகிறோம்?

நாம் சமூகம் குறித்த புரிதலில் கொஞ்சம் தெளிவாகி விட்டோம். அவர்கள் சினிமா எடுப்பதில் பயங்கர தெளிவாக இருக்கிறார்கள். அப்படியே உல்டா.

அதிருக்கட்டும். பாலகிருஷ்ணா நடித்த ‘டிக்டேட்டர்?’
இரண்டரை மணி நேரம் பாட்டு, ஃபைட்டு, பஞ்ச் டயலாக், டேன்ஸ் என்று பக்கா என்டெர்டெயின்மெண்ட். பாலைய்யாவை பார்த்து சிரிப்பு, அநீதியை உணர்ந்து ஆக்ரோஷம், ஹீரோயின் அஞ்சலியை நினைத்து காமம் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏற்படுத்துகிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்ததுமே மூளை பிளாங்க் ஆகி ஒருமாதிரி போதிமரத்து ஞானம் (ஃபுல் அடித்த போதை என்றும் சொல்லலாம்) கிடைக்கிறது. படம் சம்பந்தப்பட்ட அத்தனை விவரங்களுமே மறந்துவிடுகின்றன. அடுத்த காட்சிக்கு க்யூவில் நிற்பவன் கேட்கிறான். “மூவி பாக உந்தியா அண்ணா?”. சட்டென்று பாலையா ஸ்டைலில் தொடை தட்டி, கண்கள் சிவந்து, விருட்டென்று ஒரு கையை உயர்த்தி அனிச்சையாக அவனை எச்சரிக்கும் தொனியில் உரத்த குரலில் சொல்கிறோம் “சூப்பருக்கா உந்திரா....”