
பிரசாந்த், மீனா நடித்த ‘ஷாக்’ என்ற திகில் படத்தை பார்த்தபோது முடிவுசெய்தேன். இனி தமிழில் தயாரிக்கப்படும் திகில் படங்களை பார்ப்பதில்லையென்று. நன்றாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்றெல்லாம் நண்பர்கள் ஹைப் கொடுத்து தொலைத்ததால் யாவரும் நலம் பார்த்தே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பேசாமல் பதினைந்து ரூபாய் கொடுத்து ‘ஆவிகளின் அலறல்’ டிவிடி வாங்கிப் பார்த்திருக்கலாம்.
மாதவன் குடும்பம் 13-பி என்ற பிளாட்டில் குடியேறுகிறது. அங்கே சில அமானுஷ்ய விவகாரங்களை மாதவன் மட்டும் உணர்கிறார். உதாரணத்துக்கு அங்கே இருக்கும் லிஃப்ட் மாதவனுக்கு மட்டும் வேலை செய்வதில்லை. பி.சி.ஸ்ரீராமின் கேமிரா ஒரு நூறுமுறையாவது லிஃப்ட் கேபிளை வெவ்வேறு ஆங்கிள்களில் காட்டியிருக்கும். இசை கூட பயமுறுத்த மறுக்கிறது என்பதுதான் கொடுமை.

இண்டர்வெலுக்குப் பிறகு படம் கொஞ்சம் வேகம் எடுக்கிறது. 1977ல் நடந்த எட்டு கொலைகள். கொலையாளி யாரென்ற மர்ம முடிச்சு. கொலை செய்யப்பட்ட பெண் டிவி ஆவியாக வந்து கொலையாளியை பழிவாங்குவது என்று இரண்டாம் பாதியின் பரபரப்பு ஓக்கே. ஒரு ஆவி தன்னைக் கொல்லவந்தவனை 32 ஆண்டுகள் கழித்துதான் பழிவாங்க வேண்டுமா என்று லாஜிக்கலாக கேள்வி கேட்டுவிடக்கூடாது என்றே தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவர் படம் பார்க்க வருபவர்கள் காதில் வைத்துக்கொள்ள இரண்டு ரோஜாப்பூக்களை இலவசமாக கொடுக்கிறார். பிளாக் & ஒயிட் டோனிங்கில் அந்த 1977 பிளாஷ்ஃபேக் படமாக்கப்பட்ட விதம் அபாரம். இந்தப் படத்துக்கு 1977 நடந்தது என்ன? என்று பெயர் வைத்திருக்கலாம்.
பேயையே காட்டாத பேய் படம் என்பது ஒன்றுதான் இப்படத்தின் சிறப்பு. டீசண்டான மெகாசீரியல் என்று சொல்லலாம். விஜய் டிவியின் ’நடந்தது என்ன?’ கூட இப்படத்தை விட சிறப்பாக எடுக்கப்படும் தொடர். மைடியர் லிசா, ஆடிவெள்ளி படங்கள் கூட இதைவிட அதிக திகிலை தரும். இது பகுத்தறிவுக்கு எதிரான படம் என்று சொல்லி என் டவுசரை நானே கிழித்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் நாளை பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்தவரான இராம.நாராயணன் ‘அருந்ததி’ ரிலீஸ் செய்கிறார்.
யாவரும் நலம் - ஒரே ஒருமுறை பார்ப்பது நலம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக