5 ஜூன், 2013

மும்பை போலிஸ்!

படத்தின் டைட்டில்தான் ‘மும்பை போலிஸ்’. மற்றபடி இது எர்ணாகுளம் போலிஸின் கதை. அடாவடிக்கும் அராத்துத்தனத்துக்கும் பெயர் போனவர்கள் மும்பை போலிஸார். எர்ணாகுளம் போலிஸின் கமிஷனரும், அவருடன் இரண்டு அசிஸ்டெண்ட் கமிஷனர்களும் ஓவராக அராத்து செய்ய, மீடியா இந்த குழுவுக்கு செல்லமாக ‘மும்பை போலிஸ்’ என்று பெயர் வைக்கிறது.

படத்தின் முதல் காட்சியே க்ளைமேக்ஸ்தான். ஏ.சி.பி.யான ஜெயசூர்யா கொலைவழக்கை, சக ஏ.சி.பி. பிருத்விராஜ் புலன்விசாரணை செய்கிறார். அவரது விசாரணையில் குற்றவாளி யாரென்று தெரிந்துவிடுகிறது. காரை ஓட்டிக்கொண்டே செல்போனில் கமிஷனர் ரகுமானிடம் யார் குற்றவாளி என்பதை விவரித்துக் கொண்டிருக்கும்போதே ஆக்ஸிடெண்ட். விபத்துக்குப் பிறகு பிருத்விராஜிக்கு முந்தைய நினைவுகள் பறிபோய் விடுகிறது. கொலைவழக்கை மீண்டும் முதலில் இருந்து துப்புதுலக்க வேண்டும். கூடுதலாக தன்னையும் தான் யாரென்று தெரிந்துக்கொள்ள வேண்டும். பரபரவென்ற ஆக்‌ஷன் மசாலாதான். ஆனால் ட்ரீட்மெண்டில் மாற்று சினிமாவுக்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுக்கிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

ரோஷன், மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர். 2005ல் இவரது முதல் படமான ‘உதயதானு தாரம்’. மலையாளப் பாரம்பரியம், குடும்பம், கொலைவழக்கை போலிஸ் துப்பு துலக்கும் கதை என்று குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த மலையாளத் திரையுலகை நாலுகால் பாய்ச்சலில் புதுமையான திரைக்கதைகளை நோக்கி பாயவைத்த படம். நடிகரும், இயக்குனருமான சீனிவாசன், மோகன்லாலை நக்கலடிக்க, மோகன்லாலையே நடிக்கவைக்க எழுதிய கதை இது என்பார்கள். அப்போது டல் அடித்துப் போயிருந்த மோகன்லாலின் திரையுலக வாழ்க்கையை மீண்டும் துளிர்விடச் செய்த படம். தமிழில் பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் இதுதான் ‘வெள்ளித்திரை’ ஆக ரீமேக் ஆனது. ரோஷனுக்கு சிறந்த புதுமுக இயக்குனருக்கான கேரள அரசின் விருதும் கிடைத்தது.

mumbaipolice1
அடுத்து ரோஷன் இயக்கிய ‘நோட்புக்’ திரைப்படத்தின் போதுதான் சகோதரர்களாகிய பாபி, சஞ்சயின் நட்பு கிடைத்தது. கேரள இளைய சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளை திரைக்கதையில் சாமர்த்தியமாக கொண்டுவரும் புத்திசாலிகள். மலையாளத்தின் மெகாஹிட்டான ‘டிராஃபிக்’ (தமிழில் சென்னையில் ஒரு நாள்) இவர்களது கைவண்ணம்தான். ‘நோட்புக்’ திரைப்படம் கமர்சியலாகவும் பிக்கப் ஆகி, ஏராளமான விருதுகளையும் குவித்ததால், ரோஷனுக்கும் பாபி-சஞ்சய்க்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க்-அவுட் ஆனது. மலையாளத் திரையுலகின் கனவுப்படமான ‘காசனோவா’வுக்கும் இதே குழு இணைந்தது. மலையாளத் தயாரிப்பாளர்கள் மலைக்கக்கூடிய பட்ஜெட்டில் –பத்து கோடி- தயாரிக்கப்பட்ட ‘காசனோவா’ முதல்நாளே இரண்டரை கோடி வசூலித்து அசத்தியது. ஆனாலும் விமர்சகர்கள் கழுவிக் கழுவி ஊற்ற படத்துக்கு நெகடிவ் கமெண்ட்ஸ் பரவி அடுத்தடுத்த நாட்களில் படம் படுதோல்வி.


ரோஷம் வந்த ரோஷனுக்கு தேவை ஒரு சூப்பர் டூப்பர் ஹிட். காசனோவாவுக்கு முன்பே
rahman
 திட்டமிட்டிருந்த மும்பை போலிஸை தூசு தட்டி எடுத்தார். தனக்கு முக்கியத்துவம் தராமல் மோகன்லாலுக்கு இயக்கப் போய்விட்டதால், ரோஷனிடம் அப்போது முறுக்கிக் கொண்டிருந்தார் பிருத்விராஜ். எனவே மும்பை போலிஸில் மம்முட்டி ஹீரோவாக நடிக்கலாம் என்று மீடியாக்கள் செய்திகளை கசியவிடத் தொடங்கின. ஏனெனில் சி.பி.ஐ. டயரி குறிப்பு காலத்திலிருந்தே புலன்விசாரணை செய்வதில் கில்லி என்று பேரெடுத்தவர் மம்முட்டி. தமிழில் சக்கைப்போடு போட்டுக்கொட்டிருந்த சூரியாவுக்கும் மலையாளத்தில் பெருசாக ஓர் ‘எண்ட்ரி’ கொடுக்கவேண்டும் என்று நீண்டகால ஆசை. அனேகமாக மும்பை போலிஸாக அவரும் நடிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளிவந்தது. ஆனால் படத்தின் கதையை கேட்டபிறகு ஒருவேளை மம்முட்டியும், சூர்யாவும் நைசாக விலகிக்கொண்டிருப்பார்கள். பிருத்விராஜுக்கு மட்டுமே இந்த கேரக்டரின் மீது அப்படியொரு அசைக்கமுடியாத மோகம் இருந்தது. எனவே வேறு வழியில்லாமல் தனிப்பட்ட மனஸ்தாபங்களை மறந்து ரோஷனும், பிருத்விராஜும் இணைந்தார்கள்.


police
போலவே, ஜெயசூர்யா ரோலுக்கு முதலில் பேசப்பட்டவர் ஆர்யா. 2010ல் பூஜை போடப்பட்டபோது ஆர்யாவுக்கு தமிழில் அவ்வளவு பெரிய மவுசு இல்லை. பாலாவின் ‘நான் கடவுள்’ முற்றுமுதலாக அவரை உறிஞ்சி சக்கையாக்கியிருந்தது. படம் தாமதமான குறுகிய காலத்தில் தமிழில் ஆர்யாவுக்கு ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ சூப்பர்ஹிட்டாகிவிட, அடுத்தடுத்து பிஸியாகிவிட்டார். எனவே ஆர்யாவால், ரோஷன் கேட்ட தேதிகளில் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மோகன்லாலின் ‘காசனோவா’வுக்கு ஆசைப்பட்டுப் போனதால், இம்மாதிரி ஏகப்பட்ட குழப்படிகளை ரோஷன் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனாலும் சப்ஜெக்டின் மீது நம்பிக்கை வைத்து, மனம் தளராமல் உழைத்தார். 2011 கிறிஸ்துமஸ் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த மும்பை போலிஸ், 2013 மே 3ஆம் தேதி ரிலீஸ் ஆனது. விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் திரும்பத் திரும்பத் திரையரங்குக்கு படையெடுக்கிறார்கள். இண்டஸ்ட்ரி ஹிட் என்பது உறுதியாகிவிட்டது. ரோஷனும், பிருத்விராஜும் பெருமூச்சு விடுகிறார்கள். ஸ்க்ரிப்ட்தான் தன்னை காப்பாற்றியது என்று உணர்ந்த ரோஷன் தான் அடுத்து இயக்கவிருக்கும் ‘குஞ்சாகோகோபன்’ நடிப்பில் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’, திலீப் நடிப்பில் ‘கின்னஸ் கில்பர்ட்’ என்று இருபடங்களுக்கு சகோதர எழுத்தாளர்கள் பாபி-சஞ்சயை இப்போதே அட்வான்ஸ்ட் புக்கிங் செய்துவைத்து விட்டார்.


தென்னிந்தியாவின் முதல் ‘gay’ திரைப்படம் என்று இப்படத்தை மும்பையில் பாராட்டுகிறார்கள். இவ்வளவு துணிச்சலான இறுதிக்காட்சியை படமாக்க இயக்குனர் முன்வந்திருப்பது, தென்னிந்திய சினிமாவை உள்ளடக்கரீதியாக அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியிருப்பதால், ‘மும்பை சினிமா’ ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக நிலைபெறுகிறது. ஏற்கனவே ‘வேட்டையாடு விளையாடு’ மாதிரி சில படங்களில் ஓரினச்சேர்க்கை லேசுபாசாக காட்டப்பட்டாலும், ‘மும்பை போலிஸ்’ இவ்வுறவை சித்தரித்திருப்பது வேறுவகை. படத்தின் பிரதானமான ட்விஸ்ட்டுக்கு காரணமான காட்சி அதுவென்பதால், அதை இங்கே விவரிப்பது முறையல்ல. படம் பார்த்து நீங்களே உணரவேண்டிய விஷயம் இது.
                       end
இயக்குனர் மீது கோபமிருந்தாலும், தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் மீது பிருத்விராஜுக்கு நல்ல ஈடுபாடு இருந்திருக்கிறது. பாத்திரத்தின் உடல்மொழி, நடை, உடை, ஒப்பனை என்று எல்லாவற்றிலுமே நூறு சதவிகித முழுமையை வெளிப்படுத்தியிருக்கிறார். பொதுவாக இதுபோன்ற சிரத்தையை தொழிலில் காட்டுபவர் என்று கமல்ஹாசனுக்குதான் பெயர். அவரே மும்பை போலிஸை பார்த்தால் அசந்துவிடுவார். விபத்துக்கு முந்தைய பிருத்விராஜ் ஏ. விபத்துக்கு பிந்தையவர் பி. ஏ மற்றும் பி-யின் காட்சிகள் நான்லீனியராக முன்பின்னாக மாறி மாறி வருகிறது. சாதாரணமாக இம்மாதிரியாக உலகப்பட பாணியில் கதை சொல்லும் பாணி ரசிகனை செமையாக குழப்பும். ஆனால் பிருத்விராஜ் தன் மூக்கில் பட்ட வெட்டுக்காயம் ஒன்றின் ஒப்பனையின் மூலமாகவே இந்த குழப்பத்தை தவிர்க்கிறார். எடிட்டருக்கும் செமத்தியான வேலை. கதையை, திரைக்கதையின் முடிச்சுகளை முழுமையாக உணர்ந்து, அதற்கு விசுவாசமாக வேலை பார்த்திருக்கிறார். ஹீரோயின் இல்லை. பாடல்கள் இல்லை. ஆனாலும் பர்ஃபெக்ட் மசாலா எண்டெர்டெயினர்.
                         Last End
(நன்றி : cinemobita.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக