
சிறுகதைகளுக்கான இடம் வெகுஜனப் பத்திரிகைகளில் வெகுவாக குறைந்துவரும் காலக்கட்டத்தில், இணையத்தில் முன்னணி எழுத்தாளராக விளங்கும் நர்சிம்மின் முதல் புத்தகமே சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ் பதிப்பகங்களின் சமீபக்காலப் போக்கு புனைவுகளை குறைத்து புனைவல்லாத எழுத்துக்களுக்கு (Non-fiction) முக்கியத்துவம் தந்து வரும் நிலையில், தைரியமாக புதுமுக எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் அகநாழிகை பதிப்பகத்தின் பொன்.வாசுதேவன் நம்பிக்கையளிக்கிறார். மதிராஜின் அழகான முகப்போவியத்தோடு எழுபத்தி இரண்டு பக்கங்களில் தரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது தொகுப்பு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புத்தகத்தின் முதல் கதையே முத்தானது. அய்யனார் கம்மா. நூலுக்கு சூட்டப்பட்ட பெயரும் இதுதான்.
“யார் உள்ள”
“நாந்தாய்யா”
”மெட்ராஸ் போகணும், வேமா வாப்பா”
“நான் மெட்ராஸுக்கு வரலைய்யா”
“யோவ் நான் போகணும்ய்யா”
“அப்ப பஸ்ஸுக்குப் போய்யா இங்க எதுக்கு வந்த?”
பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் நடக்கும் கூத்து இது. எனக்கு என்னவோ எழுத்தாளரின் சொந்த அனுபவமோ என்று தோன்றுகிறது. முதல்முறையாக அவர் மெட்ராஸுக்கு வந்தபோது நடந்த சம்பவமாக இருக்கலாம். அல்லது யாருக்கோ நடந்ததை நர்சிம் அருகில் இருந்தும் பார்த்திருக்கலாம். அனுபவங்களின் வெளிப்பாடே தரமான இலக்கியமாக பரிணமிக்கும். இங்கே பரிணமித்திருக்கிறது.
மாட்டுக்கு லாடம் என்று ஒன்று இருப்பதே இன்றைய நகரத்து இளைஞனுக்கு தெரியுமா என்பது சந்தேகம். லாடம் அடிப்பது என்பது ராக்கெட் விடுவதைப் போல நுணுக்கமானது என்று ஆரம்பிக்கும் நர்சிம், அடுத்த பத்திகளில் சுவாரஸ்யமாக லாடம் அடிப்பதை வார்த்தைகளாலேயே படம் வரைந்து பாகம் குறிக்கிறார். ‘ஒரு சுத்து சின்ன லாடம்’ போன்ற சொல்லாடல்கள் வாசகனை சுளுவாக கதைக்களத்துக்கு அழைத்துச் செல்கிறது.
பதிமூன்று ராசியில்லாத எண் என்று யார் சொன்னது? இத்தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள். பெரும்பாலும் சம்பவங்களும், கதாபாத்திரங்களின் உரையாடல்களுமாக லேசான மொழியில் கனமான விஷயங்களை தொடருகிறது நர்சிம்மின் கதைகள். கடைசிக்கதையான ‘அன்பின்’ கதையா/கட்டுரையா என்று யூகிக்க முடியவில்லை.
இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தது ‘தந்தையுமானவன்’. வேலை நிமித்தமாக மொழி தெரியாத ஊரில் அவன் இருக்கிறான். அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் அவனது மனைவிக்கு பிரசவம். பெண்குழந்தை. நீடித்த மகிழ்ச்சி சில நிமிடங்களில் அடங்குகிறது. குழந்தை ஏதோ பிரச்சினையால் உலகுக்கு வந்த முதல்நாளிலேயே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறாள். மனைவியிடம் சொல்ல முடியாத நிலை. பொட்டலமாய் கட்டி கையில் கொடுக்கப்பட்ட மழலைச்செல்வம். இப்படிப் போகிறது கதை. தாய் செண்டிமெண்ட் கேட்டு வளர்ந்தவர்கள் தமிழர்கள். தந்தை செண்டிமெண்டையும் வாசிக்கட்டுமே!
விமர்சனம் என்றால் திருஷ்டிப்பொட்டு வைக்க வேண்டுமாமே? வைத்துவிட்டால் போயிற்று.
இந்தத் தொகுப்பில் குமுதம் ஒருபக்க கதையாக வரவேண்டிய இரண்டு, மூன்று கதைகள் நைசாக உள்ளே நுழைக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. குறிப்பாக ‘தலைவர்கள்’ கதையை சொல்லலாம். கடைசி இரண்டு பத்தி மட்டுமே கதை. அதற்கான ஆயத்தம் மூன்று பக்கம். வாசகனுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பினை உண்டுசெய்து, சப்பென்று முடிப்பது குமுதம் பாணி. இக்கதையிலும் அப்பாணி கையாளப்பட்டிருக்கிறது. ஆனால், குமுதம் இதை ஒருபக்கக் கதைகளில் மட்டுமே செய்யும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
அடுத்ததாக நர்சிம்மின் எழுத்தும், சம்பவ விஸ்தாரிப்புகளும் சுவாரஸ்யமளித்தாலும், கதைகளுக்கான வடிவங்கள் என்பது அரதப் பழசானது. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் குமுதம்-விகடன்-தாய்-சாவி கிரைண்டர்களில் நூற்றுக்கணக்கான முறை அரைக்கப்பட்டது. வார்த்தைகளில் கவனம் காட்டும் நர்சிம், வடிவத்திலும் சிரத்தை எடுக்க வேண்டும். இல்லையேல் நர்சிம்முக்கான தனித்துவம் (Uniqueness) என்று எதுவுமிருக்காது. தனித்துவமிக்க தமிழ் எழுத்தாளர்களே இன்று காலம் கடந்தும் நினைவுகூறப்படுகிறார்கள்.
’வடிவம்’ என்ற விஷயம் இதை வாசிக்கும் சிலரை குழப்பலாம். ஓக்கே, ஒரு உதாரணக் கதையை சுட்டுகிறேன். இன்றைய வாசகன் ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழுகிறான். சமீபத்தில் மிகச்சரியாக இன்றைய வாசகனின் நாடிபிடித்து எழுதப்பட்ட சிறுகதை ஒன்றை ஆனந்த விகடனின் தீபாவளி இதழில் வாசித்தேன். ராஜூமுருகன் எழுதிய தீபாவலி. ஒரு சிறுகதையில் சினிமாவுக்குரிய அத்தனை இலக்கணங்களையும் கையாண்டிருக்கிறார். கட் ஷாட், ப்ளாஷ்பேக், ஏன் கேமிரா கோணங்கள் மாதிரியான இத்யாதிகள் கூட அச்சிறுகதைக்கு உண்டு. நடப்பில் இருக்கும் சிறுகதை எழுத்தாளர்களில் ராஜூமுருகனும் தலைசிறந்தவர் என்று சொல்லலாம். இதுபோன்ற வடிவரீதியிலான பரீட்சார்த்த முயற்சிகளே இன்றைய தேவை. நர்சிம் தன் எதிர்கால படைப்புகளில் இதுபோன்ற முயற்சிகளை கையாளுவார், பாலச்சந்தர் டச் என்பதைப்போல ‘நர்சிம் டச்’ என்று சொல்லக்கூடிய போக்கினை உருவாக்குவார் என்று நம்புகிறேன். நண்பனாக விரும்புகிறேன்.
வாழ்த்துகள் நர்சிம்!
நூல் : அய்யனார் கம்மா (சிறுகதைகள்)
ஆசிரியர் : நர்சிம்
பக்கங்கள் : 72
விலை : ரூ.40
வெளியீடு : அகநாழிகை,
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603 306.
போன் : 9994541010