8 டிசம்பர், 2009

விஜயகாந்த்!


சில கதாநாயகர்களின் திரைப்படங்களை பார்க்கும் போது, பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன் படம் துவங்கும், பரவாயில்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் சண்டைக்காட்சி முடிந்தது அந்த கதாநாயகன் தூங்கிக்கொண்டிருப்பார் அவர் கணவில் நடந்த சண்டைக்காட்சியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். படத்திற்கும் அந்த சண்டைக்காட்சிக்கும் சம்பந்தம் இருக்காது. ஒரு பரபரப்பை உண்டுபன்னுவதற்காக அந்த காட்சியை சேர்த்திருப்பார்கள். சினிமா நடிகர் சம்பந்தப்பட்ட புத்தகம் என்பதாலோ என்னவோ இந்த புத்தகம் எழுதியதிலும் அந்த முறை கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு அத்தியாயத்தையே சினிமா மாதிரியான மிகைப்படுத்தலுக்காக ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார்.

விஜயகாந்தின் புத்தகம் வீட்டிற்கு வந்ததும், வீட்டில் உள்ளவர்கள் கேட்ட கேள்வி “விஜயகாந்திற்கு புத்தகமா, புத்தகம் போடும் அளவுக்கு விஜயகாந்த் வந்துவிட்டாரா???” புத்தக விசயத்தில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்தைப்பற்றி பல ஆச்சரியமான கேள்விகள் எழுவதுண்டு. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிதர்சனமான உண்மை விஜயகாந்தின் வளர்ச்சி.

விஜயகாந்தின் முந்தைய வாழ்க்கை முறைகளை பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அவருடைய தற்போதைய விபரங்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது அதிகமான விசயங்கள் அவர்கள் அறிந்ததாகவே இருக்கும். ஏனெனில் அவையாகும் சமீபகாலத்தில் நடந்தவைகள்.

சிறு வயதில் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்த விஜயகாந்த் பக்கம் பக்கமாக வசனம் பேச முடிகிறதென்றால், அதற்கான சூழ்நிலையும், பேச வேண்டிய அவசியமுள்ள தொழில் அவருக்கு அமைந்ததும் காரணமாக சொல்ல முடியும். இதை படிக்கும் போது வளர்ச்சியை விரும்பும் மக்கள் தங்களிடம் உள்ள குறைகளை நிறைகளாக மாற்றிக்கொள்ள அதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆங்கிலம் பேச விரும்புபவர்கள், ஆங்கலம் பேசும் மக்களிடம் பழக வேண்டும் என்பார்கள். ஆங்கிலம் பேச வாய்ப்பு இல்லாத நிலையில் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஆங்கிலம் பேசுவது சிரமமாகத்தான் இருக்கும் என்பார்கள். இந்த கூற்று உண்மைதான் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

புத்தகத்தை படித்துக்கொண்டு வரும்போது சில இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விசயங்கள் உண்டு. அதில் முக்கியமானவை விஜயகாந்தின் ஆரம்ப கால காதல். ஜன்னலோரம் எட்டிப்பார்ப்பது, கண்களால் பேசிக்கொள்வது, காதலின் கட்டளைக்கு ஏற்ப மாற்றமடைவது என சினிமாவில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல படங்களை ஓட்டியிருக்கிறார் விஜயகாந்த். அந்த படமும் தோல்வியில் முடிந்திருக்கிறது. அதற்குப்பிறகும் இரண்டு காதல் படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஆனால் அவற்றின் விபரங்கள் இல்லையாம். நம்மை அறியாமலேயே நாம் சிரிக்கும் பக்கங்கள் இவை.

நம்ம ஊருக்கு தொடர்பில்லாத நபர்களின் வாழ்க்கை முறை பற்றி படிக்கும் போது, அவர்களின் சிறு வயது வாழ்க்கை முறை நமக்கு தொடர்பில்லாததாக இருக்கும். மற்றொருவரின் வாழ்க்கையை படிக்கிறோம் என்ற உணர்வுதான் இருக்கும். ஆனால் விஜயகாந்த் நம்மைப்போன்ற சராசரி மனிதர் என்பதால் அவருடைய சிறு வயது வாழ்க்கையை படிக்கும்போது அட! இவரும் நம்மைப்போன்ற ஆள்தானா! என்ற ஆச்சரிய்ம் ஏற்படுகிறது. கில்லி விளையாடுவது, பள்ளிக்கூடம் செல்லாமல் கோலி விளையாடுவது, காத்தாடி விடுவது, பல்பம் மிட்டாயை சிகரெட் பிடிப்பது போல வாயில் வைத்துக்கொண்டு விளையாடுவது என அத்தனையும் சராசரி வாசகர்களின் சிறுவயதில் நிகழ்திருப்பதால் இவற்றை படிக்கும் போது அவர்களின் முகத்தில் மெல்லிய புன்னைகை பூப்பது நிச்சயம்.

சினிமாவில் கூட நடக்காத ஒரு அதிசயம் விஜயகாந்த் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது. அது அவருக்கு கிடைத்த இரண்டாவது அம்மாவும் அன்பானவராக அமைந்தது. இரண்டாவதாக வந்த அம்மாவின் குணம் சற்று எதிர்மறையானதாக அமைந்திருந்தால் விஜயகாந்தின் வாழ்க்கையில் திரைக்கதை வேறு விதமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அவரும் பெற்ற தாயைப்போல அன்பு செலுத்தியிருக்கிறார். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு இது கூட ஒரு முக்கியமாக காரணம் என்று சொல்லலாம்.

நம்மை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு விசயம் விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் நட்பு, கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பேட்டியில் இதோ இவன் என் நன்பன் எங்களுக்குள் எந்தவித மதரீதியான பாகுபாடும் கிடையாது என சொல்லியிருந்தார். சரி சினிமா ரீதியான நட்பு என நினைத்திருந்தேன் ஆனால் படிக்கிற காலத்தில் இருந்து, சினிமா துறைக்கு வந்து கஷ்டப்படும்போது ஒன்றாக கஷ்டப்பட்டு, இன்று வரை நன்பர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெரிய விசயம்தான்.

ஒரு சினிமா நடிகன் அரசியலுக்கு வந்துவிட்டார் என்ற விமர்சனத்தின் மூலம் விஜயகாந்தின் அரசியில் வாழ்க்கை நேற்று ஆரம்பித்தது போன்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அவரது சிறுவயதிலிருந்தே அவருக்கு அரசியில் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடைய அப்பா மூலமாக, அரசியல் சிந்தனைகளும், மக்கள் தொடர்பு சிந்தனைகளும் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது என்பது தெரிகிறது.

விஜயகாந்திடம் பிடித்தமான விசயம் அவருடைய துணிவு மற்றும் தீர்க்கமான முடிவுகள். நான் வருவேன், வரமாட்டேன், வெளியில் இருப்பே, ஓரமா இருப்பேன் இந்த மாதிரி பேச்சு எங்கிட்ட கிடையாது ”நான் கண்டிப்பாக வருவேன்” என்று ஒரு படத்தில் தான் அரசியலுக்கு வருவது பற்றி வசனம் பேசுவார், அப்படித்தான் அவருடைய செயல்பாடுகள் இதுவரை இருந்துள்ளன. ஒவ்வொரு முறை அவருக்கு கிடைக்கும் வாக்கு எண்ணிக்கைகள் அதிகரிக்கும்போது மற்ற கட்சிகளால் இதனால் தான் அவருக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது, அதனால்தான் வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது என ஒவ்வொரு காரணம் கூறப்படுகிறது. அவர் வளர்ச்சிப்பாதையில் இருக்கிறார் என்ற நிதர்சனமான உண்மையை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை..

விஜயகாந்தை பற்றிய இந்த புத்தகம் கூட விஜயகாந்த் படம் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. சண்டைக்காட்சிகள், சில காதல் காட்சிகள், ஆவேசமான போரட்டங்கள், அரசியல் கலம் என ஒரு விஜயகாந்த் படத்தை நம் கண்முன் நிருத்துகிறார். புத்தக்த்தில் அவ்வப்போது வரும் சண்டைக்காட்சிகளை ஆசிரியர். சினிமாவில் வரும் சண்டை போலவே விவரித்துள்ளார். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த (URL) முகவரிக்கு செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-118-1.html

(நன்றி : http://bookreview-sai.blogspot.com/2009/11/blog-post.html)

7 டிசம்பர், 2009

நானும் ரவுடிதான்!


சாட்டிங் தொடங்கி பேங்க்கிங் வரை சர்வமும் இப்போது இணையங்களில்தான் நடத்தப்படுகின்றன. அல்லது செல்பேசிகளில். திருட்டுகள் அதிகம் நடைபெறுவதும் இங்கேதான். மொபைல் ஃபோனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது தொடங்கி இணையத்தள வங்கிக் கணக்கை ஹைஜாக் செய்வது முதல் பல்வேறு மோசடிகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. விதவிதமாக தூண்டில் போட்டு வகையாக மாட்டவைத்து, முடிந்தவரை அபகரித்துவிடுவார்கள்.

எத்தனை திறமையாக, எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், எங்காவது, எப்படியாவது சறுக்கல் ஏற்பட்டுவிடுகிறது. காஸ்ட்ரோவின் மகன் முதல் கடைக்கோடியில் உள்ள சாமானியன் வரை அனைவரும் சைபர் க்ரைமுக்கு இரையாகிவிடுகிறார்கள்.

எனில், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாதா? முடியும். தூண்டிலில் இருந்து தப்ப வேண்டுமானால், வெறும் எச்சரிக்கை உணர்வு மட்டும் போதாது. எது தூண்டில் என்பதையும் தூண்டிலை வீசுபவர்கள் எப்படியெல்லாம் இயங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மீள்வதற்கான வழிகளையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த விறுவிறுப்பான தொடர்,இப்போது நூல் வடிவில்.

நூலை இணையத்தில் வாங்க...

5 டிசம்பர், 2009

நீ காண விரும்பும் மாற்றமாய் நீயே மாறிவிடு!


எல்லா இந்திய மாணவர்களையும் போலவே பதினாறு வயது பாபர் அலிக்கும் ஒவ்வொரு நாளும் விடிகிறது. அதிகாலை முழிப்பு. பின்னர் கொஞ்சம் படிப்பு. வீட்டு வேலைகளில் கூடமாட ஒத்தாசை. வெள்ளை சட்டை, நீலநிற பேண்ட் அவருடைய பள்ளி சீருடை. இஸ்திரி செய்து அணிந்துவிட்டு, அவசர அவசரமாக காலை உணவைக் கொறித்துவிட்டு, ரிக்‌ஷாவுக்கு காத்திருக்கிறார்.

ராஜ்கோவிந்தா பள்ளி. மேற்கு வங்கத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்று. பாபர் அலி வசிக்கும் பகுதியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம். எட்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரிக்‌ஷா பயணம். கடைசி இரண்டு கிலோ மீட்டர்கள் நடந்தாக வேண்டும். நூற்றுக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் பாபர் அலியோடு படிக்கிறார்கள்.

பெரிய பள்ளி என்பதால் மாணவர்களுக்கு எல்லா வசதிகளும் உண்டு. மேஜை, நாற்காலி, பெரிய கரும்பலகை, அபாரமாக பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள். தரமான கல்வி பாபர் அலிக்கு கிடைக்கிறது. அவரது பரம்பரையிலேயே முறையான கல்வி பெறும் முதல் நபர் இவர்தான். பள்ளியிலேயே நன்றாக படிக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களில் ஒருவர் பாபர் அலி.

“தனக்கு கிடைக்கும் தரமான கல்வி தான் வாழும் பகுதி குழந்தைகளுக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” பாபர் அலியின் நீண்டநாள் ஏக்கம் இது.

ராஜ்கோவிந்தா பள்ளி, அரசுப்பள்ளி என்பதால் கல்விக்கட்டணம் இல்லை. சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ரிக்‌ஷாவுக்கு மட்டும் அவர் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதற்காக வருடத்துக்கு 1,800 ரூபாய் மட்டுமே செலவு. மிகக்குறைந்த இந்த தொகையைக் கூட செலுத்த முடியாமல் கல்வி வாசனையே அறியாத ஆயிரக்கணக்கானோர் வாழும் பகுதி பாபர் அலியின் முர்ஸிதாபாத் பகுதி.

பதினான்கு வயதான சும்கி ஹஜ்ரா பள்ளிக்கே சென்றதில்லை. தனது பாட்டியோடு ஒரு குடிசையில் வசித்து வருகிறாள். அக்கம் பக்கம் வீடுகளில் பாத்திரம் தேய்த்து தன் உணவுக்கான, உடைக்கான வருமானத்தை சம்பாதிக்கிறாள். இவளது மாத வருமானம் ரூபாய் இருநூறு. பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய ஐந்தாவது வயதில் வீட்டு வேலை பார்க்க செல்கிறாள். சும்கியின் அப்பா உடல் ஊனமுற்றவர் என்பதால் பணிக்கு செல்லமுடியாது. “நான் வேலைக்கு போவதால் ஒருவேளை உணவாவது கிடைக்கிறது. இல்லாவிட்டால் இதுவும் கிடையாது” என்கிறாள் சும்கி.

சும்கியைப் போன்றே நூற்றுக் கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் அப்பகுதியில் வசிக்கிறார்கள். ஆண் குழந்தைகள் கூலி வேலைக்கு செல்கிறார்கள். பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்கு செல்கிறார்கள். நல்ல வேளையாக இன்று இவர்கள் அனைவருமே கல்வி கற்கிறார்கள். பாபர் அலிக்கு நன்றி!

சரியாக நான்கு மணிக்கு பாபர் அலி வீட்டில் மணி அடிக்கிறது, பள்ளி அழைப்பு மணியைப் போன்றே. சும்கி போன்ற நூற்றுக்கணக்கானோர் அவசர அவசரமாக நோட்டுப் புத்தகங்களோடு ஓடி வருகிறார்கள். பள்ளியில் மைதானத்தில் அணிவகுப்பதைப் போல வரிசையாக நிற்கிறார்கள். தேசியகீதம் பாடுகிறார்கள். பின்னர் வகுப்புகள் தொடங்குகிறது.

காலையில் மாணவனாக இருந்த பாபர் அலி இப்போது ஆசிரியராக மாறிவிடுகிறார். பள்ளியில் தான் கற்றதை இங்கே சொல்லிக் கொடுக்கிறார். ஒன்பது வயதில் விளையாட்டாக தன் வயதையொத்த மாணவர்களுக்கு டீச்சர் விளையாட்டில் பாடம் சொல்லிக் கொடுத்த அனுபவம் பாபருக்கு இங்கேயும் கைகொடுக்கிறது.

நம்புங்கள் சார். இப்போது பாபர் அலியின் இந்த பிற்பகல் பள்ளியில் 800 மாணவர்கள் படிக்கிறார்கள். இவரது பள்ளி நண்பர்கள் பத்து பேர் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். முறையான கட்டமைப்பு இல்லாத இந்தப் பள்ளிக்கு பதினாறு வயதான பாபர் அலிதான் தலைமை ஆசிரியர். எழுத்தறிவு இப்பகுதியில் உயர்ந்து வருவதால், உள்ளாட்சி அமைப்புகள் இந்தப் பள்ளியை அங்கீகரித்திருக்கிறது.

ஏராளமான தன்னார்வ தொண்டு அமைப்புகள் இந்த பிற்பகல் பள்ளிக்கு இப்போது நன்கொடைகள் தர முன்வந்திருக்கிறார்கள். எனவே புத்தகங்கள், உணவு என்று மாணவர்களுக்கு நிறைய விஷயங்களை இலவசமாக தரமுடிகிறது.

சும்கி ஹஜ்ராவுக்கு இப்பொழுது எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கிறது. இந்த பிற்பகல் பள்ளி வகுப்பு ஏழு மணிக்கு முடியும். அதன் பிறகும் அவள் பாத்திரங்கள் தேய்க்க, தான் பணியாற்றும் வீடுகளுக்கு செல்லவேண்டும். “என் கனவு ஒரு நர்ஸாக வரவேண்டுமென்பது. அது நனவாகும் என்ற நம்பிக்கை இந்தப் பள்ளியால் ஏற்பட்டிருக்கிறது!” என்கிறாள்.

“பாடம் சொல்லிக் கொடுக்கும் விளையாட்டுதான் முதலில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஒருக் கட்டத்தில் இது விளையாட்டல்ல என்பது எனக்குப் புரிந்தது. ஏனெனில் என் வயதையொத்த எல்லோருக்குமே எழுதப் படிக்க கற்கவேண்டும் என்ற பசி இருப்பதை அறிந்துகொண்டேன். இந்தப் பள்ளி இல்லாவிட்டால் இப்பகுதியில் நிறைய பேர் எழுத்தறிவற்றவர்கள் ஆகிவிடுவார்கள். பள்ளி எனக்கு சொல்லிக் கொடுப்பதை, நான் இவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்!” என்று தன்னடக்கத்தோடு பேசுகிறார் பாபர் அலி.

முர்ஸிதாபாத்துக்கு ஒரு பாபர் அலி இருக்கிறார். நம் ஊர்களில் யார் யார்?

(நன்றி : புதிய தலைமுறை)

4 டிசம்பர், 2009

‘அட் ஃபைவ் இன் தி ஆஃடர்நூன்’

இந்த வாரம் நிச்சயம்!
மழையை செய்வோம் அலட்சியம்!!



ஈரானிய இயக்குனர் சமீரா மக்மல்பாஃப் (ஸ்பெல்லிங் : Samira Makhmalbaf) -ஆல் 2003ஆம் ஆண்டு இயக்கப்பட்ட படம் ‘அட் ஃபைவ் இன் தி ஆஃடர்நூன்’. தாலிபான்கள் ஆப்கனில் வீழ்ந்தப்பிறகு கல்வி கற்க நினைக்கும் ஒரு இளம்பெண்ணைப் பற்றிய விறுவிறுப்பான கதை.

ஆப்கன் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்குப் பிறகு காபூலில் முதன்முதலாக படம் பிடிக்கப்பட்டது இப்படம்தான். பிரெஞ்சு - ஈரானிய கூட்டுத்தயாரிப்பு இது.

கிழக்கு டூரிங் டாக்கீஸில் பதிவர்களுக்கான உலகப்பட வரிசையில் வரும் ஞாயிறு, 06-12-2009 மாலை ஐந்தரை மணிக்கு திரையிடப்படும் படமும் இதுவே. முதன்முதலாக இங்கே ஒரு பெண் இயக்குனரின் திரைப்படம் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை.

உரையாடல் அமைப்பு சார்பாக மாதத்தின் முதல் ஞாயிறு நடக்கும் இந்த உலகப்படக்காட்சி இம்முறை முதல் வாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் நடத்தப்பட முடியவில்லை. இரண்டாவது வாரம் வருணபகவான் கருணை காட்டியதால் ஒத்திவைக்கப்பட்டு மூன்றாவது வாரம் திட்டமிடப்பட்டது. எதிர்பாராவிதமாக பதிவர் ஒருவரின் இல்லத்தில் நிகழ்ந்த துயரநிகழ்ச்சியால் நவம்பர் மாத உலகப்பட திரையிடல் ஒட்டுமொத்தமாக நடத்தப்பட முடியவில்லை.

எனவே டிசம்பர் முதல்வாரமான இந்த ஞாயிறு அடாது மழையடித்தாலும் விடாது காட்சிப்படுத்துவோம் என்று பத்ரியும், பைத்தியக்காரனும் உறுதியாக இருக்கிறார்கள். இனி வழக்கம்போல மாதத்தின் முதல் ஞாயிறே படம் திரையிடப்படும்.

பதிவர்கள் அனைவரும் சுற்றமும், நட்பும் புடைசூழ வந்திருந்து ரசிக்கலாம். பதிவர் அல்லாதவர்களும் வந்து படம் பார்க்க வரவேற்கப்படுகிறார்கள்.

3 டிசம்பர், 2009

பார்வை மட்டும் போதுமா?


சுமார் முன்னூறு மாணவ, மாணவிகள் இறுக்கமாக அந்த அறையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அனைவருமே இன்ஜினியரிங் முதலாமாண்டுக்கு சமீபத்தில் சேர்ந்தவர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என்பதால் இதுபோன்ற கூட்டத்தில் எப்படி நடந்துகொள்வது, எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்ற குழப்பம் அவர்களது முகத்தில் பளிச்சிடுகிறது. முயல்களைப் போல மருண்டவிழிகளோடு, பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாக கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தவர் வருகிறார். அனைவரும் அவசர அவசரமாக, சலசலத்துக் கொண்டே எழுகிறார்கள். “வணக்கம் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்....”, “குட்மார்னிங் சார்ர்ர்ர்...” – அப்பட்டமான பள்ளிவாசனை.

வந்தவரோ, “என்னை சார்னு கூப்பிடக்கூடாது. உங்களை விட ரெண்டு வயசு சின்னப்பய நானு. இளங்கோன்னே கூப்பிடுங்க” என்று சின்னதாக ஜோக்கடித்து, சூழலை ரிலாக்ஸ் ஆக்குகிறார். அடுத்தடுத்து இளங்கோவன் பேசப்பேச மகுடிக்கு கட்டுப்படும் நாகங்களாகிறார்கள் மாணவர்கள். சில நேரங்களில் கூரையதிர கைத்தட்டுகிறார்கள். சில நேரங்களில் ‘ஹோ’வென்று ஆனந்தக் கூச்சல். திடீரென உருகுகிறார்கள். ஆவேசத்தோடு பேசுகிறார்கள். பணிவாக தங்களது சந்தேகங்களுக்கு விடைகளை கேட்டுப் பெறுகிறார்கள். நவரசங்களையும் இப்போது காணமுடிகிறது அவர்களது முகங்களில்.

அந்த இடம், பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம். சாஸ்தா இன்ஜினியரிங் கல்லூரி. கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்ததின் பேரில் முதலாமாண்டு மாணவர்களோடு பேச வந்திருப்பவர் ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பெருக இதுபோன்ற நெம்புகோல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது இப்போது கல்லூரிகளில் ஃபேஷன். சுமார் ஒன்றரை மணி நேர அமர்விற்குப் பிறகு ‘காம்ப்ளான் பாய்/கேர்ள்’ போல துள்ளிக்கொண்டு வகுப்பறைக்கு ஓடுகிறார்கள் மாணவ மணிகள்.

‘ப்ரின்ஸ் ஜீவல்லரி, பனகல் பார்க், சென்னை’ என்ற வசீகரமான குரலை டிவியிலோ, ரேடியோவிலோ விளம்பரங்களில் கட்டாயம் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த குரலுக்கு சொந்தக்காரர்தான் இந்த இளங்கோ. இதுபோல நூற்றுக்கணக்கான விளம்பரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ‘அடையார் ஆனந்தபவன்’ என்ற கம்பீரக்குரலும் இவருடையதுதான். ‘ரேமண்ட்ஸ் – தி கம்ப்ளீட் மேன்!’ – அமெரிக்க குரல் அல்ல. நம் இந்திய இளங்கோவுடையது.

இவர் ஒரு சகலகலா வல்லவர். விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட். தொழில்முறை பாடகர். சாஸ்திரிய சங்கீதத்தில் பாண்டித்யம் உண்டு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆயிரம் பாடல்களுக்கு எந்த நோட்ஸும் இல்லாமல் பாடுகிறார். சங்கீதம் கற்றிருக்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார். மிமிக்ரி செய்கிறார். ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார். கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சுயமுன்னேற்ற உரைகள் நிகழ்த்துகிறார். வளர்ந்து வரும் ஒரு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இருநூறு பயிற்சியாளர்கள் இவரிடம் பணிபுரிகிறார்கள். ஒரு வருடத்துக்கு குறைந்தது பதினைந்தாயிரம் மாணவர்களை சந்தித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த இளங்கோவுக்கு கல்வி ஒன்றும் சுலபமானதாக இல்லை. கடும் சிரமங்களுக்கு இடையில் பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்றி எண்பத்தி இரண்டு மதிப்பெண்கள் வாங்கினார். சென்னை மாவட்டத்திலேயே அப்போது முதலிடம். +2வில் அக்கவுண்டன்ஸியில் செண்டம். பின்னர் லயோலாவில் ஆங்கிலம் இளங்கலை. பல்கலைக்கழகத்தில் தங்க மெடல் வாங்கினார். முதுகலையில் ஒலியியல் (Phoenetics) குறித்துப் படித்தார். தமிழ்நாடளவில் தங்க மெடல். 1994ல் கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம் விருதளித்துப் பாராட்டியது. ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்ற அரிதான தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு எம்.ஃபில். முடித்தார்.

பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவார். சில கால ஆசிரியப் பணிக்குப் பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பணி... இப்போது, ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்கும் பணி...

இவ்வளவு அனுபவங்களும் முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே இளங்கோவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ‘நல்ல கல்வி கற்ற யார் வேண்டுமானாலும் இதையெல்லாம் செய்யமுடியுமே?’ என்ற கேள்வியை நீங்கள் கேட்க வருவது புரிகிறது. கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டோமே! இளங்கோவுக்கு பிறவியிலேயே பார்வை இல்லை.

“அதிர்ஷ்டவசமாக எனக்கு பிறவியிலேயே பார்வை இல்லை என்று சொல்லுங்கள்!” என்று திருத்துகிறார் இளங்கோ. பத்தாவது வகுப்பு வரை மட்டுமே பார்வையற்றவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் படித்தவர், மற்ற அனைத்து வெற்றிகளையும், நார்மலானவர்களுடனேயே போட்டியிட்டு வென்றிருக்கிறார். இப்போது யோசித்துப் பாருங்கள். பார்வை சவால் கொண்ட ஒருவர் +2வில் பார்வை அத்தியாவசியப்படும் பாடமான அக்கவுண்டன்ஸியில் நூற்றுக்கு நூறு வாங்குவது சாதனைதானே? அதுவும் பார்வையுள்ள மாணவர்களோடு படித்து...

பார்வை சவால் கொண்ட ஒருவர் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிவது, அனேகமாக உலகிலேயே இளங்கோ ஒருவராக மட்டுமே இருக்கமுடியும். இந்த நிமிடம் வரை வேறு யாரும் இந்தப் போட்டியில் இல்லை. இவ்வகையில் இளங்கோவின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

“English is the secret of my Energy” என்று கபில்தேவ் பாணியில் கமெண்ட் அடிக்கிறார் இளங்கோ. அம்மொழியின் மீது கொண்ட காதலே அத்துறையில் இவரை சாதனையாளராக உருவாக்கியிருக்கிறது. பிரிட்டிஷ் பாணி, அமெரிக்க பாணி என்று ஆங்கில சரஸ்வதி அநாயசமாக இவரது நாவில் விளையாடுகிறாள். ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவர் என்றாலும் தமிழ் மீது அசாத்தியப் பற்று கொண்டவராக இருக்கிறார். முதல்வர் கலைஞரின் மேடைப்பேச்சுக்கள் இவருக்கு மனப்பாடம். நடிகர் திலகம் சிவாஜியின் படங்களை, அவரது தமிழ் உச்சரிப்புக்காகவே திரும்ப திரும்ப பார்க்கிறார்/கேட்கிறார். இன்னொரு ஆச்சரியமான விஷயம். இளங்கோ தமிழ் மீடியத்தில் தனது பள்ளிக்கல்வியை கற்றவர். தந்தை பெரியாரின் சமூகக் கருத்துக்கள் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்.

உன்னிப்பான அவதானிப்புதான் இளங்கோவின் மிகப்பெரும் பலம். பொதுவாக பார்வையற்றவர்களின் பலவீனமாக உடல்மொழியை சொல்லலாம். தலையை மறுப்பாக ஆட்டுவது, ஆமோதிப்பது போன்ற சின்னஞ்சிறு விஷயங்களை இயல்பாக செய்கிறார். இவரோடு முதன்முறையாக பேசுபவர்களுக்கு இவர் பார்வை சவால் கொண்டவர் என்பது தெரியவே தெரியாது.

“பார்வையற்றவர்களுக்கு செவித்திறன் அதிகமாக இருக்கும் என்றொரு கருத்து நிலவுகிறது. அப்படியெல்லாம் இல்லை. கட்டாயத்தின் பேரிலேயே இத்திறன் கூடுதலாக வாய்த்தவர்களாக அவர்கள் உருவெடுக்கிறார்கள். ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டிக்கு சின்ன சின்ன ஒலிகளின் வேறுபாடுகளை அறியும் திறன் உண்டு. ஒரு குண்டூசி தரையில் விழும் சத்தத்தையும், சேஃப்டி ஃபின் தரையில் விழும் சத்தத்தையும் நீங்கள் ஒன்றாகவே உணர்வீர்கள். ரசூல் பூக்குட்டிக்கு இரண்டு சத்தங்களுக்கும் வேறுபாடு தெரியும்! தொழில்நிமித்தமாக அவர் இத்திறனை வளர்த்துக் கொண்டார். எனக்கு பார்வை இல்லை என்ற நிலை இருப்பதால் என் செவியை என் தொழிலுக்கான மூலதனக் கருவியாக்கிக் கொண்டேன். எனக்கு ரோல்மாடல் நான்தான். நான் இன்னொருவரை விட சிறந்தவன். இன்னொருவரை அறிவால் வென்றேன், உடல்பலத்தால் வென்றேன் என்பது வெற்றியல்ல, என்னைப்போல இன்னொருவர் உலகிலேயே இல்லை (Unique) என்பதுதான் நிஜமான வெற்றி!” என்று தன் வெற்றி ரகசியத்தை தன்னடக்கமாக சொல்கிறார்.

இளைஞர்களுக்கு இவர் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அது ‘தன்னம்பிக்கை’.

“தன்னம்பிக்கை என்பது அவரவரிடமிருந்தே இயல்பாக எழவேண்டும். என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டும்தான் முடியும் என்பது அதீத தன்னம்பிக்கை. அதீத தன்னம்பிக்கை ஆபத்துக்கு உதவாது!” – நம்மிடம் பேசிக்கொண்டிருந்த இளங்கோ, சட்டென்று திரும்பி மாணவர்களுக்கு பஞ்ச் டயலாக்கோடு வகுப்பினை தொடர, நாமும் கொஞ்சம் தன்னம்பிக்கை குளூகோஸ் ஏற்றிக்கொண்டு தெம்புடன் விடைபெற்றோம்.



சவால் விடும் உடல்மொழி!

பார்வை சவால் கொண்டவராக இருந்தாலும், இளங்கோ கம்ப்யூட்டரையும், மொபைல் போனையும் கையாளும் வேகம் அதிரடியானது. அவரது அலுவலகப் பணிகளை யாருடைய உதவியையும் எதிர்பாராமல் அவரே முடித்துவிடுகிறார்.

“என் அளவுக்கு வேகமா யாராவது எஸ்.எம்.எஸ். டைப் பண்ண முடியுமா?” என்று சவால் விடுகிறார். கம்ப்யூட்டர் கீபோர்டுகளிலும் இவரது விரல் சுனாமியாய் சுழல்கிறது. பார்க்காமலேயே கம்ப்யூட்டரையும், மொபைல் போனையும் கையாள சிறப்பு மென்பொருள்களை (Special Softwares) பயன்படுத்துகிறார். இந்த மென்பொருள்கள் கொஞ்சம் விலை அதிகமானது என்றாலும், துல்லியமாக உதவுகிறது. எழுத்துக்களை ஒலிகளாக்கி இளங்கோவுக்கு உதவுகிறது.


சங்கடம் : “என்னால் சங்கீதத்தில் தேறவே முடியாது என்று என்னுடைய சங்கீத ஆசிரியர் ஒருவர் சவால் விட்ட தருணம்”

சவால் : சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறவர்களுக்கு அவரவர் குடும்ப வாழ்க்கை சவாலானதாக இருக்கக்கூடும். சமூகத்தில் நல்லபெயர் எடுக்க முடிபவர்களால், குடும்பத்திலும் நல்ல பெயர் எடுக்கமுடியும் என்று உறுதியாக சொல்லமுடியாது. (திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கும் இளங்கோ, தன் தாயின் வற்புறுத்தலை பூடகமாக சொல்கிறார்)

மகிழ்ச்சி : ஒரு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவியேற்ற நொடி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல வருமானத்துக்கும் ஒரு தொழில், சமூகத்துக்கும் கண்ணுக்கு தெரியாத சேவை.

(நன்றி : புதிய தலைமுறை)