28 ஜூலை, 2010
ஆட்டோ அனுப்பட்டுமா?
தமிழிணையத்தளங்களை பாவிப்பவர்களாக நீங்கள் இருந்தால் அடிக்கடி இதுபோன்ற வசனங்களை ஆங்காங்கே காணலாம். “இன்னும் ஆட்டோ வரலையா?”, “ஆட்டோ வரப்போவுது ஜாக்கிரதை”. இதுமாதிரி ஏராளமான ‘ஆட்டோ’மேட்டிக் டயலாக்குகளை பயன்படுத்துவதில் தமிழிணைய பங்கேற்பாளர்கள் ஆஸ்கர் விருது வாங்குமளவுக்கு திறமைசாலிகள். குறிப்பாக வலைப்பூக்கள் மற்றும் முகப்புத்தகத்தில் இவ்வீர வசனங்கள் அதிகம்.
ஆட்டோ இதுபோல இழிவுபடுத்தப்பட்டு வருவது ஆட்டோக்காரர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்தால் பிய்ந்துப்போன செருப்பை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மின்னஞ்சலில் அட்டாச்மெண்டாக அனுப்பினாலும் அனுப்புவார்கள். ஏனெனில் இருசக்கரவாகனப் பெருக்கம், கால்டாக்ஸி பரவலாதல் போன்ற தொல்லைகளால் அவர்களே சவாரி கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.
பொதுவாக இவ்வசனங்கள் எங்கே பிரயோகிக்கப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். அந்தவார ஜூனியர் விகடனிலோ, குமுதத்திலோ, நக்கீரனிலோ ஏதோ அரசியல்வாதியைப் பற்றி ‘பரபர பதினாறு’ ஸ்டைலில் கிசுகிசுவாக வந்திருக்கும். அதை வாசித்ததுமே நமது இணைய பங்கேற்பாளர்களுக்கு நாடி நரம்பெல்லாம், இரட்சகன் நாகார்ஜூனா மாதிரி துடித்துவிடும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்குப் போய் வரிசையில் நின்று ஓட்டுபோட வக்கில்லை என்றாலும், “ஒரு பதிவுக்கு ஆச்சு” என்று பொங்கியெழுந்து விடுவார்கள்.
கூகிளில் ஏதோ சில புகைப்படங்களை தேடியெடுத்து, “இப்படியெல்லாம் நடக்குது. நம்ம நாடு நாசமாத்தான் போகப்போவுது” என்று ஒரு மொன்னையான நடையில் ஒரு மொக்கைப் பதிவையெழுதிவிட்டு, “ஆட்டோ பின்னூட்டம் வருமா”வென்று தேமேவென்று காத்திருப்பார்கள். பின்னூட்டம் கூட வராதவர்களுக்கு ஆட்டோ எங்கிருந்து வரப்போகிறது?
இந்த மாதிரி பின்னூட்டங்களை அடிக்கடி வாசித்தபின் எனக்கும் கூட சில நேரங்களில் கருத்து மயக்கம் ஏற்பட்டு விடுவதுண்டு. ஏதாவது ஒரு மொக்கைப் பதிவை வாசித்ததுமே, இந்த பதிவருக்கு ஆட்டோ அனுப்பலாமா என்று யோசிப்பேன். கட்சி கொடுக்கும் அலவன்சு டீக்கும், பொறைக்கும், தம்முக்குமே சரியாகப் போய்விடுகிறது. தியாகராயநகரிலிருந்து சைதாப்பேட்டைக்கு ஆட்டோ அனுப்ப வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் ரூ.75/- செலவழித்தாக வேண்டும். பேசாமல் நடந்தேபோய் அடித்துவிட்டு வந்துவிடலாமாவென்று யோசிப்பேன். ச்சே.. போயும், போயும் ஒரு மொக்கைப் பதிவுக்கு இவ்வளவு பிரயாசை படவேண்டுமாவென்று யோசித்துவிட்டு, ராஜ் தியேட்டரில் ஏதாவது படத்தை பார்த்துவிட்டு மறுநாள் ஒரு விமர்சனப் பதிவு எழுத உட்கார்ந்து விடுகிறேன்.
அய்யா.. இணையத்தில் தண்டமாய் எழுதுவதால் மட்டும் போராளிகளாக மாறிவிட்டவர்களே.. நீங்கள் ஒரு யதார்த்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சுதந்திரம் வாங்கியபின் நம் நாடு எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டி வந்திருக்கிறது. இன்னமும் அரசியல்வாதிகள் ஆட்டோவைதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால், நீங்கள் சுத்தமாக அப்டேட் ஆகவில்லையென்று அர்த்தம். டி.என்.சேஷனுக்கு ஆட்டோ அனுப்பிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது அரசியல்வாதிகள் டாடாசுமோ, குவாலிஸ் என்று முன்னேறி விட்டார்கள். நீங்களெல்லாம் தெலுங்கு டப்பிங் படங்களை பார்ப்பதே இல்லையா?
நம்மூரு கோயிந்தசாமிகள்தான் ‘ஆட்டோ ஃபீவர்’ பிடித்து அலைகிறார்கள் என்றால் ஃபாரின் தமிளர்கள் இன்னும் மோசம். ஆட்டோவுக்கும், ஆசிட்வீச்சுக்கும் பயந்துப்போய் எழுதுவது போலவே எழுதுவார்கள். பொதுவாக இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை அம்சம் இருக்கும். தமிழ்நாட்டில் இருப்பவெனெல்லாம் சுரணை கெட்டவன். இவ்வளவு அநீதி நடக்கிறது. ஒருத்தன்கூட தீக்குளிக்கவில்லையா? போராட்டம் நடத்தவில்லையா? என்று பொங்கியெழுந்து பதிவு போட்டுவிட்டு பீட்ஸாவும், பர்கரும் தின்றுவிட்டு வீக்கெண்டில் தமிழ் சினிமா பார்க்கப் போய்விடுவார்கள்.
ஏனய்யா. ஒரு ஆட்டோவை விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கும், துபாய்க்கும், சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் வந்து உங்களை அடிக்க ஆகும் செலவு என்ன? அதற்குப் பதிலாக இங்கே ஆளுக்கு ஐநூறு கொடுத்தாலே போதுமே? நீங்கள் எதை எழுதினாலும், தேர்தலில் நாங்கள் ஜெகஜோதியா கும்முகும்முவென்று திருமங்கல கும்மினை கும்மிவிடலாமே?
எந்த இணையப் பதிவாளரிடமாவது பத்திரிகைகளுக்கான எக்ஸ்க்ளூசிவ் தன்மை இருக்கிறதா? தோழர் சவுக்கு மற்றும் வினவு போன்ற சிலருக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு கொடுக்கலாம். களத்திலும் செயல்படும் அவர்களை இணையப் போராளிகள் பட்டியலில் சேர்ப்பது நியாயமில்லை. அவர்களுக்கெல்லாம் ஆட்டோவென்ன, விமானத்தையே கூட அனுப்பலாம். மீதியிருக்கும் ஐநூத்தி சொச்சம் இணையத் தயிர்வடைகளுக்கு எல்லாம் ஆட்டோ ஒன்றுதான் கேடு. நம்ம காப்பி & பேஸ்ட் புலிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளை கூட எந்த அரசியல்வாதியும் அனுப்பி வைக்குமளவுக்கு யோக்கியதை இல்லை என்பதுதான் இப்பதிவின் அடிநாதம்.
இறுதியாகவும், உறுதியாகவும் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லிக் கொள்கிறேன் தோழர்களே. தமிழகத் தமிழர்கள் கிட்டத்தட்ட ஏழு கோடி. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கிட்டத்தட்ட ஐந்து கோடி. இவர்களில் பத்திரிகைகளை வாசிப்பவர்கள் தோராயமாக இரண்டு கோடி. இணைய அறிமுகம் பத்து லட்சம் பேருக்கு இருக்கலாம். இவர்களிலும் தமிழிணைய பாவிப்பாளர்கள் ஒரு லட்சம் பேர் இருந்தாலே அதிகம். அதிலும் வலைப்பூக்கள், ஃபேஸ்புக் மாதிரி கச்சடாக்களில் ஈடுபடுபவர்கள் பத்தாயிரம் பேர் வரைதான் இருப்பார்கள். இவர்களில் ஆறாயிரம் பேராவது அயல்நாடுகளில் வசிப்பவர்கள். எஞ்சியிருப்பவர்களில் ஆயிரம் பேர் தேர்தல்களில் ஓட்டுபோட்டாலே அதிகம். இப்படிப்பட்ட மொக்கையான ஒரு சமூகம் தினம் ஒரு புரட்சியென்ற பேரில், தினம் ஒரு பதிவு போட்டு, அதற்கு ஆட்டோவையும் எதிர்ப்பார்ப்பது என்பது கொஞ்சமல்ல, நிறையவே ஓவர் இல்லையா?
இனிமேல் எங்காவது ஆட்டோ, கீட்டோவென்று யாராவது பேசட்டுமே? கீசிடுவேன் கீசி...
27 ஜூலை, 2010
கீற்றுவில் அரங்கேறிய தமிழ்ப் பாசிஸம்!
”இதையெல்லாம் சொல்வதால் என்னுடைய சொந்த இன மக்களே என்னை புறக்கணித்தாலும் பரவாயில்லை. என்னுடைய அரசு என்னை கொன்றுபோட்டாலும் நான் இதை சொல்ல தயங்கப் போவதில்லை” – அரங்குக்குள் நாம் நுழைந்தபோது அந்த இஸ்லாமிய நண்பர் ஒலிபெருக்கியில் முழங்கிக் கொண்டிருந்தார்.
அடுத்ததாக ஒரு நீண்ட பட்டியலை கிட்டத்தட்ட கால்மணி நேரம் வாசிக்க ஆரம்பித்தார். எண்பதுகளில் தொடங்கி இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது / கொல்லப்பட்டது குறித்த தலைப்புச் செய்திகளாக அவை அமைந்திருந்தன. சிங்களவர்களில் தொடங்கி தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகள் பலவும் கூட கடந்த முப்பதாண்டுகளில் இஸ்லாமியர் மீது தொடுத்த தாக்குதல்கள் குறித்த நீளமான அறிக்கையாக அது இருந்தது. மிகக்கவனமாக அந்நண்பர் தொண்ணூறில் இலங்கையின் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் எண்பதினாயிரம் முஸ்லீம்கள் கட்டிய துணியோடும் ஐநூறு ரூபாய் காசோடும் வெளியேற்றப்பட்டச் செய்தியை தவிர்த்தே பேசிக்கொண்டிருந்தார்.
அப்படியிருந்தும் கூட்டத்தில் ஆங்காங்கே சலசலப்பு. கடைசியாக, “எங்கள் மீது தொகுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பரிகாரமாகதான் 2009 மே-யில் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்ததாக இலங்கை இஸ்லாமியர் இன்று சொல்லுகிறார்கள். அது தவறான நிலைப்பாடு. நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றுகூறி முடித்தார். அவர் இஸ்மாயில். இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் என்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.
அவரது உரை முடிந்ததுமே ஓவியர் வீரசந்தானம் ஆவேசத்தோடு மேடையை நோக்கி கூட்டத்தின் மையத்திலிருந்து முழங்கினார். “புலிகள் இஸ்லாமியரைத் தாக்கியதாக பட்டியல் வாசித்தீர்கள். ஒவ்வொரு தாக்குதலும் எத்தகைய சூழலில் நடந்தது என்பதை நீங்கள் விளக்கியாக வேண்டும்” என்றார். வீரசந்தானத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தார்கள். ஒருவர், “நாங்கள் ஒரு லட்சம் உயிர்களை இழந்திருக்கிறோம். நீங்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ஏதோ பட்டியலை வாசிக்கிறீர்கள்” என்று விசித்திரமாக குரல் கொடுத்தார். மேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த தோழர் சுப.வீ.யும் மேடையிலிருந்தவரைப் பார்த்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் பின்னால் இருந்தவர்களுக்கு சுப.வீ. என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பது கேட்கவில்லை.
மீண்டும் அந்நண்பர் ஒலிபெருக்கியைக் கைப்பற்றினார்.
முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்...
அடுத்ததாக ஒரு நீண்ட பட்டியலை கிட்டத்தட்ட கால்மணி நேரம் வாசிக்க ஆரம்பித்தார். எண்பதுகளில் தொடங்கி இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது / கொல்லப்பட்டது குறித்த தலைப்புச் செய்திகளாக அவை அமைந்திருந்தன. சிங்களவர்களில் தொடங்கி தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகள் பலவும் கூட கடந்த முப்பதாண்டுகளில் இஸ்லாமியர் மீது தொடுத்த தாக்குதல்கள் குறித்த நீளமான அறிக்கையாக அது இருந்தது. மிகக்கவனமாக அந்நண்பர் தொண்ணூறில் இலங்கையின் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் எண்பதினாயிரம் முஸ்லீம்கள் கட்டிய துணியோடும் ஐநூறு ரூபாய் காசோடும் வெளியேற்றப்பட்டச் செய்தியை தவிர்த்தே பேசிக்கொண்டிருந்தார்.
அப்படியிருந்தும் கூட்டத்தில் ஆங்காங்கே சலசலப்பு. கடைசியாக, “எங்கள் மீது தொகுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பரிகாரமாகதான் 2009 மே-யில் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்ததாக இலங்கை இஸ்லாமியர் இன்று சொல்லுகிறார்கள். அது தவறான நிலைப்பாடு. நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றுகூறி முடித்தார். அவர் இஸ்மாயில். இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் என்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.
அவரது உரை முடிந்ததுமே ஓவியர் வீரசந்தானம் ஆவேசத்தோடு மேடையை நோக்கி கூட்டத்தின் மையத்திலிருந்து முழங்கினார். “புலிகள் இஸ்லாமியரைத் தாக்கியதாக பட்டியல் வாசித்தீர்கள். ஒவ்வொரு தாக்குதலும் எத்தகைய சூழலில் நடந்தது என்பதை நீங்கள் விளக்கியாக வேண்டும்” என்றார். வீரசந்தானத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தார்கள். ஒருவர், “நாங்கள் ஒரு லட்சம் உயிர்களை இழந்திருக்கிறோம். நீங்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ஏதோ பட்டியலை வாசிக்கிறீர்கள்” என்று விசித்திரமாக குரல் கொடுத்தார். மேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த தோழர் சுப.வீ.யும் மேடையிலிருந்தவரைப் பார்த்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் பின்னால் இருந்தவர்களுக்கு சுப.வீ. என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பது கேட்கவில்லை.
மீண்டும் அந்நண்பர் ஒலிபெருக்கியைக் கைப்பற்றினார்.
முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்...
23 ஜூலை, 2010
சும்மா சுழட்டுங்க!
ராஜேந்திரன் ஒரு மருந்து நிறுவனத்தின் பிரதிநிதி. மாதத்துக்கு இருபது நாட்கள் வெளியூர் வேலை. செல்ல மகள் சுவாதியின் பிறந்தநாளுக்கு மட்டும் எப்படியாவது ஊருக்கு வந்துவிடுவார். நான்கு வருடங்களாக இது தவறியதே இல்லை.
அன்று சுவாதியின் ஐந்தாவது பிறந்தநாள். பணிநிமித்தமாக மும்பையில் இருக்கிறார் ராஜேந்திரன். தவிர்க்க இயலாத வேலை. நேரில்தான் செல்ல முடியாது, ஏதாவது அன்பளிப்பாவது குழந்தைக்கு அளித்து தனது அன்பை தெரிவிக்க வேண்டுமே என்று புத்திர பாசத்தால் தவித்துக் கொண்டிருந்தார்.
உடனிருந்த நண்பர் ஊக்கம் சொன்னார். “ஜஸ்ட் டயல் இருக்க கவலை எதற்கு?”“
ராஜேந்திரனுக்கு இப்படி ஒரு சேவை இருப்பது இப்போதுதான் தெரியும். பிறந்தநாள் அன்று காலை அப்பாவிடமிருந்து கேக்கும், பார்பீ பொம்மையும் சுவாதிக்கு சென்று அடைகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட சுவாதி அப்பாவுக்கு தொடர்ச்சியான முத்தங்கள் மூலமாக தனது அன்பைத் தெரிவிக்கிறாள்.
ஏதோ விளம்பரப் படத்தின் ஸ்க்ரிப் என்று நினைத்து விடாதீர்கள். இதுதான் ஜஸ்ட் டயல்.
உங்களுக்கு ஏதேனும் தகவலோ, சேவையோ தேவைப்பட்டால் யோசிக்காமல் ஜஸ்ட் டயலுக்கு டயலலாம். எதைப்பற்றியதாகவும் உங்கள் சந்தேகம் இருக்கலாம். உங்கள் நகரின் சிறந்த பீட்ஸா கார்னரில் தொடங்கி, ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் வரை எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் நொடிகளில் உங்களுக்கு பிடித்துத் தருகிறார்கள் ஜஸ்ட் டயல் நிறுவனத்தார்.
இந்தியாவின் நெம்பர் ஒன் தேடுதல் நிறுவனம். எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இவர்களுக்கு தூக்கமே கிடையாது. 240 நகரங்கள். இரண்டரை கோடி பயனாளிகள். மிகக்குறுகிய காலக்கட்டத்தில் எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?
வழக்கமான யெல்லோ பேஜ் புத்தகம் செய்யும் வேலையை எளிமை ஆக்கியிருக்கிறது ஜஸ்ட் டயல். தலையணை அளவில் நமக்கு வழங்கப்படும் அந்தப் புத்தகத்தைப் பிரித்து, நமக்கு தேவையான சேவையையோ, தகவலையோ தேடி கண்டறிவதற்குள் மூச்சு முட்டிவிடும். அதுவும் நாம் வசிக்கும் நகரத்தின் தகவல்கள் மட்டுமே அதில் இருக்கும். ஜஸ்ட் டயலோ இந்தியாவின் முக்கிய 240 நகரங்களின் கோடிக்கணக்கான தகவல்களை தனக்குள்ளே அடக்கியிருக்கிறது. தொலைபேசி சேவை மட்டுமல்ல.. இணையத்தளம், எஸ்.எம்.எஸ். என்று காலத்துக்கேற்ப தனது விழுதுகளை விரிவாக்கிக் கொண்டே போகிறது.
சுலபமான வார்த்தைகளில் சொல்வதென்றால், தேடுவோரை தேடும் தகவலுக்கு, சேவைக்கு, பொருளுக்கு அழைத்துச் செல்கிறது ஜஸ்ட் டயல். பயனாளியைப் பொறுத்தவரை அவருக்கு இது முழுக்க முழுக்க இலவச சேவை.
வெறும் ஐம்பதாயிரம் ரூபாயை முதலீடாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று ஆண்டுக்கு 134 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறது. 3500 பணியாளர்கள்.
‘நச்’சென்ற இந்த ஐடியாவுக்கு சொந்தக்காரர் ஒரு தமிழர் என்பது உங்களுக்கு தெரியுமா?
மும்பையின் மலாடு மேற்கில் 20,000 சதுர அடியில் ஜஸ்ட் டயலின் தலைமை அலுவலகம். அலுவலர்களால் செல்லமாக மிஸ்டர் சேஞ்ச் என்று அழைக்கப்படுபவர்தான் அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர். வி.எஸ்.எஸ். மணி. 37 வயது. கொல்கத்தாவைச் சேர்ந்த தமிழர். சில்லறையை (Money) Change என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. இந்த மணியை ‘சேஞ்ச்’ என்று அழைக்க காரணம் வேறு. இவர் மாற்றம் விரும்பி என்பதால். தினமும் ஏதாவது சிறிய சிறிய மாற்றங்களை அலுவலகத்தில் செயல்படுத்திப் பார்ப்பது இவரது வழக்கம்.
“சின்ன வயசுலேயே பிசினஸ் மேலே காதல் இருந்தது. பத்தாவது படிச்சு முடிச்சப்போ வீட்டிலேயே ‘லோன்’ வாங்கினேன். ஒரு கலர் டிவியும், டெக்கும் வாடகைக்கு எடுத்து டிக்கெட் எல்லாம் பிரிண்ட் பண்ணி, செம கூட்டம்! வீட்டு லோனை அடைச்சு எனக்கும் கையில் நல்ல லாபம் கிடைச்சுது“ சிறுவயது நினைவுகளில் சிரிக்கிறார் மணி.
சி.ஏ., படித்துக் கொண்டிருந்த மணி படிப்பினை பாதியில் விடக்கூடிய குடும்பச்சூழல். யெல்லோபேஜஸ் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராக பணிக்கு சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தவருக்கு ‘திடீர் யோசனை’ தோன்றியது. ஏன் இவ்வளவு பெரிய புத்தகம்? தொலைபேசி மூலமாகவே தேவைப்படுபவர்களுக்கு தேவையான தகவல்களை தரமுடியுமே? இந்தியர்கள் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்கிறார்கள். தகவல்கள் தருவதையே தனி சேவையாக தொடங்கினால் வேண்டாமென்றா சொல்லிவிடப் போகிறார்கள்?
1989ல் ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்கள் சிலரோடு சேர்ந்து ‘ஆஸ்க் மீ’ என்ற பெயரில் தகவல் சேவை நிறுவனத்தை தொடங்குகிறார் மணி. இந்தியா உலகமயமாக்கல் ஜோதியில் கலக்காத காலம் அது. நகரங்களில் கூட மிகச்சிலரின் வீடுகளில் மட்டுமே தொலைபேசி இருந்தது. கைப்பேசியெல்லாம் வரும் என்று அப்போது ஜோதிடர்கள் கூட கணித்திருக்க மாட்டார்கள்.
‘நல்ல ஐடியா’ என்று பலரால் பாராட்டப்பட்டாலும் கூட ‘ஆஸ்க் மீ’யால் மூன்று ஆண்டுகளை கூட வெற்றிகரமாக கடக்க முடியவில்லை. அப்போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு சுலபமாக பலியானது. முதலீட்டுப் பற்றாக்குறையும் வணிகத்தை தொடர பெரும் பிரச்சினையாக இருந்தது. தன்னுடைய பங்குகளையும் பங்குதாரர்களுக்கே கொடுத்துவிட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் மணி.
1992ல் இருந்து பலவிதமான வேலைகளை செய்து தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிலை வந்தது. ஒரு பெரிய நாளிதழுக்கு திருமண தேவை விளம்பரங்கள் பிடித்து தரும் வேலையை தொடர்ச்சியாக செய்துவந்தார். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தது.
ஐம்பதாயிரம் ரூபாயோடு 1994ல் மும்பைக்கு மீண்டும் படையெடுக்கிறார். தனது கனவுத் திட்டத்தை நனவாக்கும் ஊக்கம் மட்டுமே அவரை இம்முறை இயக்கிக் கொண்டிருந்தது. இடையில் உலகமயமாக்கல் தொழில்முனைவோருக்கு திறந்துவிட்ட கதவுகள் ஏராளம்.
அப்போது ஒரு தொலைபேசி இணைப்புக்கே பதினைந்தாயிரம் வரை செலவானது. மூன்றே மூன்று தொலைபேசி இணைப்புகள் மட்டுமே வாங்க முடிந்தது. டேட்டாபேஸ் என்றழைக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை சுனாமி வேகத்தில் சேர்க்கத் தொடங்கினார். இரவல் வாங்கப்பட்ட மேசை, நாற்காலிகள் மற்றும் வாடகை கணினியோடு ‘ஜஸ்ட் டயல்’ உருவான வெற்றிக்கதை இதுதான். இதற்குப் பின் நடந்ததெல்லாம் சரித்திரம்.
தொலைதொடர்புத்துறையின் தாராளமயம், மொபைல் போன்களின் பரவலான பயன்பாடு ஆகியவற்றால் இன்று ‘ஜஸ்ட் டயல்’ அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது. 2007ஆம் ஆண்டு இச்சேவை இணையத்தளத்துக்கும் மாறியபோது கிடைத்த வரவேற்பு மகத்தானது. நாள்தோறும் 2,25,000 பேர் justwww.justdial.com இணையத் தளத்தை பார்வையிடுகிறார்கள்.
இந்தியாவை வெற்றிகண்ட நம் ஐடியாமணியின் பார்வை இப்போது அமெரிக்கா பக்கம் திரும்பியிருக்கிறது. அமெரிக்காவிலும் இதேபோன்ற ஒரு சேவை அமைப்பை நிறுவும் முயற்சிகளில் இப்போது மும்முரமாக இருக்கிறார்.
நம்மூர் தமிழன் ஆயிரம் மைல் தாண்டி வெற்றிக்கொடி நாட்டினால் நமக்கும் மகிழ்ச்சிதானே?
(நன்றி : புதிய தலைமுறை)
21 ஜூலை, 2010
Height of ஈயடிச்சான் copy!
’தில்லாலங்கடி' ட்ரைலர் பார்த்திருப்பீர்கள். நளினியிடம் மொக்கையாக காமெடி செய்ய முயற்சி செய்யும் ஜெயம்ரவி தலையில் ஏன் ஒரு எகனைமொகனை பாணியில் பட்டுத்துண்டு கட்டியிருக்கிறார் தெரியுமா?
உங்களுக்கு எப்படி தெரியும்? பாவம். படத்தின் இயக்குனர் ராஜாவுக்கே தெரியாத மேட்டர் அது. ஏனெனில், தில்லாலங்கடியின் ஒரிஜினலான ‘கிக்’கில் ரவிதேஜாவும் இதுமாதிரி ஓபனிங் சீனில் கட்டியிருப்பார்.
ஆகவே பொதுஜனங்களே, “what is the height of ஈயடிச்சான் copy?” என்று உங்கள் ஆங்கில மிஸ் கேட்டால் தயங்காமல் சொல்லுங்கள். “ஜெயம் கம்பெனி”
ஜெயம் ராஜா மீதான அதீதநம்பிக்கையில் தில்லாலங்கடி அட்வான்ஸ்ட் திரைவிமர்சனம் இங்கே!
19 ஜூலை, 2010
தமிழ் தேசியம், திராவிடம், etc. - சுகுணாதிவாகர்
நீங்கள் புரட்சியாளராக வேண்டுமா? தமிழின உணர்வாளர் ஆக வேண்டுமா? தலித் மக்களின் காவலர் ஆக வேண்டுமா? நவீன இலக்கிய ஆர்வலர் ஆக வேண்டுமா? சுலபம், பெரியார், திராவிட இயக்கம், கலைஞரைத் திட்டினால் போதும். அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணம் என்ன? சிம்பிள், பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கைதான். நவீன இலக்கியங்கள் பரவாமல் போனதற்கு காரணம் மு.க.அழகிரிதான் என்று ‘ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோயில் ஆண்டி’ யாக ‘ஆய்வாளர்களால்’ பயன்படுத்தப்படுவது திராவிடர் மற்றும் திராவிட இயக்கம்தான்.
சமீபத்தில் நண்பர் தமிழ்சசி பெட்னா விழா பற்றி எழுதியிருந்த இடுகையைக் காண நேர்ந்தது. செம்மொழி மாநாட்டையும் பெட்னாவையும் ஒப்பிட்டுக் கேள்வி கேட்பது மாதிரியான நோக்கம் எதுவும் என்னிடமில்லை. ஆனால் ‘இனப்படுகொலையின் ஈரம் காய்வதற்குள் இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா?’ என்கிற கேள்வி செம்மொழி மாநாட்டிற்கும் பெட்னாவிற்கும் ஒருசேர பொருந்தித்தான் போகிறது என்பதே என் கருத்து.
இருக்கட்டும், இப்போது பதிவின் இறுதியில் சில முடிபுகளாக நண்பர் தமிழ்சசி முன்வைத்திருக்கும் கருத்துகளுக்கு வருவோம். இதுமாதிரியான கருத்துகள் பல சந்தர்ப்பங்களில் பலரால் முன்வைக்கப்பட்டவை என்பதையும் நினைவில் கொள்ளுதல் நலம். இனி சசியின் கருத்துக்கள்.
’’திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் கருத்தில் உடன்பாடு உண்டு. இல்லாத திராவிட அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ் அடையாளம் சிதைக்கப்பட்டது’’
திராவிட இயக்கம் குறித்து விமர்சனம் செய்வதற்கான காரணங்கள் தமிழ்ச்சூழலில் நிரம்பவே உள்ளன. எல்லா இயக்கங்களையும் போலவே திராவிடர் மற்றும் திராவிட இயக்கங்களும் தமிழ்வெளியில் பல சாதக மற்றும் பாதகமான செயல்பாடுகளை நிகழ்த்தியுள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றுக்கும் காரணமாக திராவிட இயக்கத்தின் மீது பழிபோடுவது அறியாமை அல்லது அபத்தம் என்றே சொல்ல வேண்டும். மேலும் எப்போதும் நிலையான அடையாளங்கள் என்பது ஒருபோதும் இருந்ததில்லை. எனவே ‘இல்லாத திராவிட அடையாளம்’, ‘இருக்கும் தமிழ் அடையாளம்’ என்றெல்லாம் ஒன்றுமில்லை. காலந்தோறும் தமிழ் அடையாளங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இன்னமும் தமிழ் அடையாளத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள இருளர், படுகர், நரிக்குறவர் மாதிரியான பழங்குடி இனங்கள் தமிழகத்தில்தான் வசித்துவருகின்றனர். இது ‘தமிழ் அடையாளம்’ என முன்வைக்கப்படும் பண்பாடு, வழிபாடு ஆகியவற்றுக்கு மாறாகவே உள்ளன.சொல்லப்போனால் ‘தமிழ் அடையாளத்தை’ விடவும் ‘திராவிட அடையாளம்’ என்பதற்குத்தான் ஏராளமான அறிவியல்பூர்வமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. குறிப்பாக செம்மொழி மாநாட்டில் நமக்கு எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தபோதிலும் வெளிநாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழறிஞர்களின் கட்டுரைகள் முக்கியமானவை. இவை திராவிட அடையாளம் குறித்த வலுவான சான்றுகளை முன்வைத்துள்ளன. மேலும் இந்த வரலாற்றுச் சான்றுகளுக்கு அப்பால் திராவிட இயக்கம் கட்டமைத்த ‘திராவிட அடையாளம்’ இப்போது தமிழ்சசி உள்ளிட்ட தமிழ்த்தேசியர்களால் முன்வைக்கப்படும் ‘தமிழ் அடையாளத்தை’ விடவும் வன்முறை குறைவானது, நெகிழ்வானது.
’’கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது; ஆன்மீகம் மனிதனுக்கு தேவையான ஒன்று”
’கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது’ என்று சசி சொல்வதற்கு ஏதாவது அடிப்படைகள் உள்ளனவா என்பதைத் தர்க்கத்தின் அடிப்படையில் யோசித்தால் எவ்வளவு அபத்தம் என்பது தெரியும். கடவுள் மறுப்பு என்பது எப்படி பார்ப்பனியப் பிடியில் தள்ளும்? 1925ல் சுயமரியாதை இயக்கத்தையும் குடியரசையும் தொடங்கிய பெரியார் நாத்திகத்தை அப்போது வலியுறுத்தவில்லை. சிறிதுகாலம் கழித்தே கடவுள்மறுப்பை வலியுறுத்த வேண்டியவரானார். அப்படியானால் சசியின் கருத்துப்படி கடவுள் மறுப்பு வலியுறுத்தப்படுவதற்கு முன்பு தமிழ்மக்கள் பார்ப்பனியப்பிடியில் சிக்காமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்?
ஆனால் கடவுள்மறுப்பைப் பெரியார் இயக்கம் வலியுறுத்தியதை மறுத்து, வெளியேறிய திமுக ஓரிறைக் கொள்கையை முன்வைத்தபோதுதான் அது பெரிதும் பார்ப்பனியத்தோடு சமரசம் செய்துகொண்டது என்பது வரலாறு. கடவுள் மறுப்பை முன்வைத்த திராவிடர் இயக்கம் மொழி தொடங்கி பல களங்களிலும் பார்ப்பனியத்திற்கு எதிரான தீவிரமான போராட்டங்களை நடத்தியது. இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் தற்போது மட்டுப்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் 80 ஆண்டுகால திராவிடர் மற்றும் திராவிட இயக்கத்தின் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பே.
ஆன்மீகம் மனிதனுக்குத் தேவையான ஒன்றா இல்லையா என்பது தத்துவக் களத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. தம்மத்தை வலியுறுத்திய பவுத்தம் கடவுளை மறுத்தது. ‘உனக்கு நீயே விளக்கு’ என்றது. அமைப்பாகும்போது ‘தம்மம் சரணம்’ என்றும் ‘சங்கம் சரணம்’ என்றும் சொன்னது. மனிதனுக்கு அற மதிப்பீடுகளை வலியுறுத்த ஆன்மீகமும் மதமும் தேவை என்பது சாதாரண பொதுப்புத்தி. ஆனால் மதத்தின் இடத்தில் அறத்தை வைப்பவர்களுக்கு ‘ஆன்மீகம்’ என்பது அவசியமற்ற ஒன்று. கடவுளையும் மதத்தையும் மறுத்த பெரியார், அறவிழுமியங்களின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். பதவி உள்ளிட்ட எல்லாவற்றையும் இழந்த துறவியாக அவர் இருந்தார் என்பதும் மாபெரும் ஆன்மீகத் துறவியாக சாருநிவேதிதா போன்றவர்களால் முன்னிறுத்தப்படும் ரமணர், தனது சொத்தை சித்தப்பா மகனுக்கு எழுதி வைத்ததும், பெரியார் தனது சொத்து முழுவதையும் இயக்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு, ‘’என்னிடம் பணம் எதுவுமில்லை, நான் சாப்பிடுவது இயக்கத்தின் காசு” என்று சொன்னதையும் ஒப்புநோக்கினால் அறமதிப்பீட்டிற்கும், சோ கால்ட் ‘ஆன்மீகத்திற்கும்’ ஒரு தொடர்புமில்லை என்பது விளங்கும். மேலும் ‘ஆன்மீகத்தின்’ தேவையை சசி வலியுறுத்தும் புள்ளியின் பலவீனத்தையும் காண்போம்.
‘’பார்ப்பனீய வழியிலான ஆன்மீகம் மறுக்கப்பட்டு தமிழ் வழிலான நமது மரபு சார்ந்த சிறு தெய்வ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆன்மீகம் மொத்தமாக நிராகரிக்கப்பட்டதால் இன்றைக்கு ஆன்மீகம் பார்ப்பனிய மயமாகி விட்டது”.
சாதாரண அடித்தட்டு மக்களுக்கு தமிழ்சசி வலியுறுத்தும் ‘ஆன்மீகம்’ குறித்து எதுவும் தெரியாது. வழிபாடு, நம்பிக்கைகள், தொன்மங்கள், அது குறித்த கதைகள் ஆகியவற்றோடு பிணைக்கப்பட்டவர்கள் அடித்தட்டுமக்கள். அவர்களது வழிபாடுகளும் தெய்வங்களும் (’கடவுள்கள்’ அல்ல) சடங்குகளும் அவர்களது வாழ்க்கைமுறையினின்றும் பண்பாட்டிலிருந்தும் உருவானவை. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற ‘இந்து ஆன்மீக மரபுகள்’ ஆதிசங்கரருக்கும் தாத்தாச்சார்ய சுவாமிகளுக்கும் ஜெயமோகனுக்கும் தெரியுமே அல்லாது சாதாரண சுப்பனுக்கும் குப்பனுக்கும் தெரியாது. இந்து பார்ப்பனியப் பெருந்தெய்வ மரபுக்கும் அடித்தட்டு மக்களின் நாட்டார்தெய்வங்களுக்குமான நுட்பமான வேறுபாடுகளைப் பெரியாரும் திராவிட இயக்கமும் உணர்ந்துகொள்ளவில்லை என்பது உண்மைதான். இவற்றை மூடநம்பிக்கைகள் என்று கேலி செய்ததும் உண்மைதான். ஆனால் அடித்தட்டு மக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் நாட்டார்தெய்வ மரபுகளையும் பாதுகாத்துக்கொண்டே திராவிட இயக்கத்துடனுடனான தொடர்புகளை எவ்வாறு பேணினார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ‘கடவுள் இருக்கு என்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும்பேச்சு’ என்று சொன்ன பொதுவுடைமை இயக்கத்தை விடவும் ‘கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்று சொன்ன திராவிடர்கழகத்தையும் ‘அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?’ என்று நாத்திகம் பேசிய திமுகவையும் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களின் சுயமரியாதையை அந்த இயக்கங்கள்தான் பேசின. மேலும் பொதுவாக நாத்திகம் பேசினாலும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக திராவிடர் இயக்கங்கள் ‘போர் தொடுக்கவில்லை’ என்பதும்தான்.
இங்கு இன்னொன்று முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது பார்ப்பனியப் பெருந்தெய்வங்களுக்கும் நாட்டார் தெய்வங்களுக்குமிடையிலான வேறுபாடுகளைத் தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தி விவாதத்தைத் தொடங்கிவைத்தவர்களே கடவுள்மறுப்பாளர்களான இடதுசாரி மற்றும் திராவிட இயக்கச் சார்பாளர்களாகிய நா.வானமாமலை மற்றும் தொ.பரமசிவன் போன்ற ஆய்வாளர்களே. மேலும் இந்த சிறுதெய்வ வழிபாட்டை எந்தவித விமர்சன்முமின்றி நாம் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யவும் தேவையில்லை. ஏனெனில், சிறுதெய்வ மரபு என்பது பார்ப்பனப் பெருந்தெய்வ மரபுக்கு எதிராயிருக்கும் அதேவேளையில் அது ஒவ்வொன்றும் தனக்கே உரியதான சாதிய மற்றும் நிலப்பிரத்துவக்கூறுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. இனி, தமிழ்சசி வலியுறுத்தும் ‘மாற்று ஆன்மீகத்திற்கு’ வருவோம்.
‘பார்ப்பனீயம் தழைத்து வளர்வதற்கு அடிப்படைக் காரணமே ஆன்மீகம் தான்; மாற்று ஆன்மீகமே நமக்கு தேவை. முழுமையான நிராகரிப்பு எதையும் சாதித்து விடாது. இன்று வரைக்கும் சாதிக்கவும் இல்லை;”
என்று சொல்கிற தமிழ்சசி எது ‘மாற்று ஆன்மீகம்’ என்று குறிப்பிடவே இல்லை. முன்பே குறிப்பிட்டதைப் போல பெருவாரியான ‘இந்து’க்களாக இருக்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய பிரக்ஞையுமில்லை, கவலையுமில்லை. அவர்கள் அதிகமும் பெரியாரோடு முரண்பட்டு உரசும் இடம் கடவுள்நம்பிக்கை தொடர்பானதாக இருக்கலாம். ஆனால் கடவுள் நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொண்டே பார்ப்பனியம் மற்றும் சாதியை எதிர்த்தவர்கள் தோற்றுப்போனதற்கான விரிவான வரலாற்று ஆதாரங்கள் குறித்து நான் இங்கே பேச முயலவில்லை. ஆனால் தமிழ்சசி மட்டுமில்லாது பலரும் இப்போது வலியுறுத்தும் ‘ஆன்மீகத் தேவை’ குறித்து மட்டும் பேசலாம்.
இப்போது பெருகியுள்ள நவீன கார்ப்ரேட் சாமியார்கள் பெருக்கத்தின் பின்னணியிலேயே இதை அணுகலாம். ஜக்கிவாசுதேவ், நித்யானந்தா போன்றவர்கள் பேசும் ‘ஆன்மீகத்தை’ உற்றுக்கவனித்தால், அவை பெரும்பாலும் பவுத்த மற்றும் ஜென்பவுத்த சிந்தனைகளை உருவியதாக இருப்பதைக் காணலாம். இந்த கார்ப்பரேட் சாமியார்களும் அத்வைதம், துவைதம் போன்ற ‘இந்து ஆன்மீக மரபிலிருந்து’ பேசுவதில்லை. கடவுளை அதிகம் வலியுறுத்தாத, மய்யப்படுத்தாத ஆன்மீகமாகவே இவர்களுடையதும் இருக்கின்றன. நமது தமிழ்மரபில் நீண்டகாலம் தங்கியிருந்த பவுத்த, சமண மரபுகளின் கருத்துக்களையும் தியானம், யோகா போன்ற அவைதீக மரபுகளின் பயிற்சிகளையும் எடுத்து, ‘தியான லிங்கம்’ போன்ற இந்துத்துவக்குறியீடுகளை உருவாக்கி நமக்கே விற்பனை செய்கிறார்கள். இந்த கார்பரேட் சாமியார்களை அதிகமும் நாடிச் செல்பவர்கள் நடுத்தர வர்க்கத் தமிழர்கள்தான்.
நவீன வாழ்க்கை உடல் மற்றும் உளவியல் ரீதியிலாக ஏற்படுத்தியிருக்கும் சிக்கல்கள்தான் அவர்களைக் கார்ப்பரேட் சாமியார்களிடம் சரணடையச் செய்திருக்கிறதே அல்லாது, அவர்களின் ‘ஆன்மீக ஈடுபாடு’ அல்ல. இன்னமும் அடித்தட்டு சாதி மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் குறிசொல்லும் சாமியார்களிடம் செல்கிறார்களே அல்லாது கார்ப்பரேட் சாமியார்களிடம் அல்ல. ஏனெனில் அவர்களது அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள், அடுத்த மாதம் எப்படி இருக்கும் என்று ‘குறி கேட்கிற’ விருப்பம் மட்டும்தான் அவர்களின் அதிகபட்ச ‘ஆன்மீகம்’. மிஞ்சிப்போனால் இவர்கள் அதிகபட்சம் பங்காரு அடிகளாரைச் சரணடைவார்கள். அதற்குக் காரணம், பூணூல் அற்ற வெற்றுக் கருப்புடல் நோக்கிய தமிழர்களின் விழைவு, சக்தி பூஜை என்ற பெயரில் முன்வைக்கப்படும் தாய்த்தெய்வ வழிபாடு, மாதவிடாய்க் காலங்களிலும் பெண்கள் கருவறையில் சென்று பூஜை செய்யும் சுதந்திரம் ஆகியவை. தமிழ்சசி விரும்புகிறபடி நாம் மாற்று ஆன்மீகத்தை வளர்ப்பதாக இருந்தால் அதிகபட்சம் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மய்யத்தில் சேரலாம்.
தமிழ்சசி முன்னிறுத்தம் ‘கொண்டாட்டம்’ பற்றிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதான். அந்த கொண்டாட்டத்தைத் தமிழர்கள் திராவிடக்கட்சி ஊர்வலங்கள் தொடங்கி டாஸ்மாக் வரை பலவழிகளில் அடைந்துகொண்டுதானிருக்கிறார்கள். எனவே கொண்டாட்டத்திற்கு மதமோ ஆன்மீகமோ அவசியமில்லை. மாறாக வறட்டுத்தனமான நமது இயக்கங்களின் அணுகுமுறையிலிருந்து நெகிழ்வடைந்து நாம் மாற்றுக்கொண்டாட்டங்களை உருவாக்க வேண்டும். ஆனால் தமிழ்சசியோ ஆன்மீகம், கொண்டாட்டம், ஆன்மீகத்தேவை போன்ற கருத்தாக்கங்களின் வழி வந்தடையும் முடிவு அபத்தமானது மற்றும் ஆபத்தானது.
'கடவுள் மறுப்பு நம்மை இந்துக்களாக மாற்றி விட்டது.நாம் சைவர்கள் என்பதை சொல்வதையே நான் வலியுறுத்துகிறேன்.' என்கிறார் தமிழ்சசி.
நம்மை ’இந்துக்களாக’ மாற்றியது அரசியலமைப்பின் தன்மையே அல்லாது கடவுள் மறுப்பு அல்ல. இதற்கு விரிவான பல வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. இருக்கட்டும், ஆனால் வெறுமனே தமிழ் அடையாளம் என்னும் ஒற்றை அடையாளத்தை வலியுறுத்துபவர்கள் வந்துசேரும் இடம் இதுவாகத்தானிருக்கும். தமிழ்சசியால் கடவுள் மறுப்பால் அதிருப்தி அடைந்ததாகக் குறிப்பிடப்படும் தமிழர்களில் எத்தனை சதம் பேர் சைவர்கள்? தமிழர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் சைவ மதத்திற்குப் புறம்பானவர்கள். உணவுப்பழக்கம் தொடங்கி வழிபாடு வரை பெரும்பான்மையான தமிழ்ச்சாதிகள் சைவமதத்திற்கு அப்பால் உள்ளவர்கள். தமிழ்சசி சொல்வதைப் போல சைவத்தை வலியுறுத்தத் தொடங்கினால், வைணவ சமயத்தைக் கடைப்பிடிக்கும், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் சாதிகள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை என்ன சொல்லி அழைப்பது? இதைத்தான் நாம் ‘வெளித்தள்ளும் அரசியல்’ என்கிறோம்.
இறுதியாக தமிழ்மக்களுக்கு அவர்களது மொழி மற்றும் தேசிய இன அடையாளத்தின் அடிப்படையில் இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றால் இழைக்கப்படும் அநீதிகளை எதிர்க்க வேண்டியதும், அதற்காகத் தமிழின அடையாளத்தை வலியுறுத்த வேண்டியதும் அவசியமானவைதான். ஆனால், அதனூடாக நாம் இதுவரை பயணித்து வந்த ஒரு நெகிழ்வான, மதக்காழ்ப்பற்ற திசையிலிருந்து எதிர்த்திசைக்கு நம்மை நாமே தள்ளிவிடக் கூடாது. திமுக, கருணாநிதி போன்றவற்றின் மீதுள்ள கோபமும் உணர்ச்சியடிப்படையிலான அவசர முடிவுகளும் நமக்கு இழப்பைத்தான் ஏற்படுத்தும். இதன் பொருள், திராவிட அடையாளத்தை வலியுறுத்துகிறேன் என்ற பெயரில் கலைஞரின் தமிழின விரோத நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதும், தமிழக அரசை விமர்சனமற்று ஆதரிப்பதுமல்ல. மாறாக, திராவிட இயக்க அடிப்படைகளிலிருந்து சாதகமான அம்சங்களை எடுத்துக்கொண்டே தமிழின உரிமைப்பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்பதுவே.
எழுதியவர் : சுகுணாதிவாகர்
சமீபத்தில் நண்பர் தமிழ்சசி பெட்னா விழா பற்றி எழுதியிருந்த இடுகையைக் காண நேர்ந்தது. செம்மொழி மாநாட்டையும் பெட்னாவையும் ஒப்பிட்டுக் கேள்வி கேட்பது மாதிரியான நோக்கம் எதுவும் என்னிடமில்லை. ஆனால் ‘இனப்படுகொலையின் ஈரம் காய்வதற்குள் இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா?’ என்கிற கேள்வி செம்மொழி மாநாட்டிற்கும் பெட்னாவிற்கும் ஒருசேர பொருந்தித்தான் போகிறது என்பதே என் கருத்து.
இருக்கட்டும், இப்போது பதிவின் இறுதியில் சில முடிபுகளாக நண்பர் தமிழ்சசி முன்வைத்திருக்கும் கருத்துகளுக்கு வருவோம். இதுமாதிரியான கருத்துகள் பல சந்தர்ப்பங்களில் பலரால் முன்வைக்கப்பட்டவை என்பதையும் நினைவில் கொள்ளுதல் நலம். இனி சசியின் கருத்துக்கள்.
’’திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் கருத்தில் உடன்பாடு உண்டு. இல்லாத திராவிட அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ் அடையாளம் சிதைக்கப்பட்டது’’
திராவிட இயக்கம் குறித்து விமர்சனம் செய்வதற்கான காரணங்கள் தமிழ்ச்சூழலில் நிரம்பவே உள்ளன. எல்லா இயக்கங்களையும் போலவே திராவிடர் மற்றும் திராவிட இயக்கங்களும் தமிழ்வெளியில் பல சாதக மற்றும் பாதகமான செயல்பாடுகளை நிகழ்த்தியுள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றுக்கும் காரணமாக திராவிட இயக்கத்தின் மீது பழிபோடுவது அறியாமை அல்லது அபத்தம் என்றே சொல்ல வேண்டும். மேலும் எப்போதும் நிலையான அடையாளங்கள் என்பது ஒருபோதும் இருந்ததில்லை. எனவே ‘இல்லாத திராவிட அடையாளம்’, ‘இருக்கும் தமிழ் அடையாளம்’ என்றெல்லாம் ஒன்றுமில்லை. காலந்தோறும் தமிழ் அடையாளங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இன்னமும் தமிழ் அடையாளத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள இருளர், படுகர், நரிக்குறவர் மாதிரியான பழங்குடி இனங்கள் தமிழகத்தில்தான் வசித்துவருகின்றனர். இது ‘தமிழ் அடையாளம்’ என முன்வைக்கப்படும் பண்பாடு, வழிபாடு ஆகியவற்றுக்கு மாறாகவே உள்ளன.சொல்லப்போனால் ‘தமிழ் அடையாளத்தை’ விடவும் ‘திராவிட அடையாளம்’ என்பதற்குத்தான் ஏராளமான அறிவியல்பூர்வமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. குறிப்பாக செம்மொழி மாநாட்டில் நமக்கு எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தபோதிலும் வெளிநாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழறிஞர்களின் கட்டுரைகள் முக்கியமானவை. இவை திராவிட அடையாளம் குறித்த வலுவான சான்றுகளை முன்வைத்துள்ளன. மேலும் இந்த வரலாற்றுச் சான்றுகளுக்கு அப்பால் திராவிட இயக்கம் கட்டமைத்த ‘திராவிட அடையாளம்’ இப்போது தமிழ்சசி உள்ளிட்ட தமிழ்த்தேசியர்களால் முன்வைக்கப்படும் ‘தமிழ் அடையாளத்தை’ விடவும் வன்முறை குறைவானது, நெகிழ்வானது.
’’கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது; ஆன்மீகம் மனிதனுக்கு தேவையான ஒன்று”
’கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது’ என்று சசி சொல்வதற்கு ஏதாவது அடிப்படைகள் உள்ளனவா என்பதைத் தர்க்கத்தின் அடிப்படையில் யோசித்தால் எவ்வளவு அபத்தம் என்பது தெரியும். கடவுள் மறுப்பு என்பது எப்படி பார்ப்பனியப் பிடியில் தள்ளும்? 1925ல் சுயமரியாதை இயக்கத்தையும் குடியரசையும் தொடங்கிய பெரியார் நாத்திகத்தை அப்போது வலியுறுத்தவில்லை. சிறிதுகாலம் கழித்தே கடவுள்மறுப்பை வலியுறுத்த வேண்டியவரானார். அப்படியானால் சசியின் கருத்துப்படி கடவுள் மறுப்பு வலியுறுத்தப்படுவதற்கு முன்பு தமிழ்மக்கள் பார்ப்பனியப்பிடியில் சிக்காமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்?
ஆனால் கடவுள்மறுப்பைப் பெரியார் இயக்கம் வலியுறுத்தியதை மறுத்து, வெளியேறிய திமுக ஓரிறைக் கொள்கையை முன்வைத்தபோதுதான் அது பெரிதும் பார்ப்பனியத்தோடு சமரசம் செய்துகொண்டது என்பது வரலாறு. கடவுள் மறுப்பை முன்வைத்த திராவிடர் இயக்கம் மொழி தொடங்கி பல களங்களிலும் பார்ப்பனியத்திற்கு எதிரான தீவிரமான போராட்டங்களை நடத்தியது. இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் தற்போது மட்டுப்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் 80 ஆண்டுகால திராவிடர் மற்றும் திராவிட இயக்கத்தின் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பே.
ஆன்மீகம் மனிதனுக்குத் தேவையான ஒன்றா இல்லையா என்பது தத்துவக் களத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. தம்மத்தை வலியுறுத்திய பவுத்தம் கடவுளை மறுத்தது. ‘உனக்கு நீயே விளக்கு’ என்றது. அமைப்பாகும்போது ‘தம்மம் சரணம்’ என்றும் ‘சங்கம் சரணம்’ என்றும் சொன்னது. மனிதனுக்கு அற மதிப்பீடுகளை வலியுறுத்த ஆன்மீகமும் மதமும் தேவை என்பது சாதாரண பொதுப்புத்தி. ஆனால் மதத்தின் இடத்தில் அறத்தை வைப்பவர்களுக்கு ‘ஆன்மீகம்’ என்பது அவசியமற்ற ஒன்று. கடவுளையும் மதத்தையும் மறுத்த பெரியார், அறவிழுமியங்களின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். பதவி உள்ளிட்ட எல்லாவற்றையும் இழந்த துறவியாக அவர் இருந்தார் என்பதும் மாபெரும் ஆன்மீகத் துறவியாக சாருநிவேதிதா போன்றவர்களால் முன்னிறுத்தப்படும் ரமணர், தனது சொத்தை சித்தப்பா மகனுக்கு எழுதி வைத்ததும், பெரியார் தனது சொத்து முழுவதையும் இயக்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு, ‘’என்னிடம் பணம் எதுவுமில்லை, நான் சாப்பிடுவது இயக்கத்தின் காசு” என்று சொன்னதையும் ஒப்புநோக்கினால் அறமதிப்பீட்டிற்கும், சோ கால்ட் ‘ஆன்மீகத்திற்கும்’ ஒரு தொடர்புமில்லை என்பது விளங்கும். மேலும் ‘ஆன்மீகத்தின்’ தேவையை சசி வலியுறுத்தும் புள்ளியின் பலவீனத்தையும் காண்போம்.
‘’பார்ப்பனீய வழியிலான ஆன்மீகம் மறுக்கப்பட்டு தமிழ் வழிலான நமது மரபு சார்ந்த சிறு தெய்வ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆன்மீகம் மொத்தமாக நிராகரிக்கப்பட்டதால் இன்றைக்கு ஆன்மீகம் பார்ப்பனிய மயமாகி விட்டது”.
சாதாரண அடித்தட்டு மக்களுக்கு தமிழ்சசி வலியுறுத்தும் ‘ஆன்மீகம்’ குறித்து எதுவும் தெரியாது. வழிபாடு, நம்பிக்கைகள், தொன்மங்கள், அது குறித்த கதைகள் ஆகியவற்றோடு பிணைக்கப்பட்டவர்கள் அடித்தட்டுமக்கள். அவர்களது வழிபாடுகளும் தெய்வங்களும் (’கடவுள்கள்’ அல்ல) சடங்குகளும் அவர்களது வாழ்க்கைமுறையினின்றும் பண்பாட்டிலிருந்தும் உருவானவை. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற ‘இந்து ஆன்மீக மரபுகள்’ ஆதிசங்கரருக்கும் தாத்தாச்சார்ய சுவாமிகளுக்கும் ஜெயமோகனுக்கும் தெரியுமே அல்லாது சாதாரண சுப்பனுக்கும் குப்பனுக்கும் தெரியாது. இந்து பார்ப்பனியப் பெருந்தெய்வ மரபுக்கும் அடித்தட்டு மக்களின் நாட்டார்தெய்வங்களுக்குமான நுட்பமான வேறுபாடுகளைப் பெரியாரும் திராவிட இயக்கமும் உணர்ந்துகொள்ளவில்லை என்பது உண்மைதான். இவற்றை மூடநம்பிக்கைகள் என்று கேலி செய்ததும் உண்மைதான். ஆனால் அடித்தட்டு மக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் நாட்டார்தெய்வ மரபுகளையும் பாதுகாத்துக்கொண்டே திராவிட இயக்கத்துடனுடனான தொடர்புகளை எவ்வாறு பேணினார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ‘கடவுள் இருக்கு என்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும்பேச்சு’ என்று சொன்ன பொதுவுடைமை இயக்கத்தை விடவும் ‘கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்று சொன்ன திராவிடர்கழகத்தையும் ‘அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?’ என்று நாத்திகம் பேசிய திமுகவையும் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களின் சுயமரியாதையை அந்த இயக்கங்கள்தான் பேசின. மேலும் பொதுவாக நாத்திகம் பேசினாலும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக திராவிடர் இயக்கங்கள் ‘போர் தொடுக்கவில்லை’ என்பதும்தான்.
இங்கு இன்னொன்று முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது பார்ப்பனியப் பெருந்தெய்வங்களுக்கும் நாட்டார் தெய்வங்களுக்குமிடையிலான வேறுபாடுகளைத் தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தி விவாதத்தைத் தொடங்கிவைத்தவர்களே கடவுள்மறுப்பாளர்களான இடதுசாரி மற்றும் திராவிட இயக்கச் சார்பாளர்களாகிய நா.வானமாமலை மற்றும் தொ.பரமசிவன் போன்ற ஆய்வாளர்களே. மேலும் இந்த சிறுதெய்வ வழிபாட்டை எந்தவித விமர்சன்முமின்றி நாம் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யவும் தேவையில்லை. ஏனெனில், சிறுதெய்வ மரபு என்பது பார்ப்பனப் பெருந்தெய்வ மரபுக்கு எதிராயிருக்கும் அதேவேளையில் அது ஒவ்வொன்றும் தனக்கே உரியதான சாதிய மற்றும் நிலப்பிரத்துவக்கூறுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. இனி, தமிழ்சசி வலியுறுத்தும் ‘மாற்று ஆன்மீகத்திற்கு’ வருவோம்.
‘பார்ப்பனீயம் தழைத்து வளர்வதற்கு அடிப்படைக் காரணமே ஆன்மீகம் தான்; மாற்று ஆன்மீகமே நமக்கு தேவை. முழுமையான நிராகரிப்பு எதையும் சாதித்து விடாது. இன்று வரைக்கும் சாதிக்கவும் இல்லை;”
என்று சொல்கிற தமிழ்சசி எது ‘மாற்று ஆன்மீகம்’ என்று குறிப்பிடவே இல்லை. முன்பே குறிப்பிட்டதைப் போல பெருவாரியான ‘இந்து’க்களாக இருக்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய பிரக்ஞையுமில்லை, கவலையுமில்லை. அவர்கள் அதிகமும் பெரியாரோடு முரண்பட்டு உரசும் இடம் கடவுள்நம்பிக்கை தொடர்பானதாக இருக்கலாம். ஆனால் கடவுள் நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொண்டே பார்ப்பனியம் மற்றும் சாதியை எதிர்த்தவர்கள் தோற்றுப்போனதற்கான விரிவான வரலாற்று ஆதாரங்கள் குறித்து நான் இங்கே பேச முயலவில்லை. ஆனால் தமிழ்சசி மட்டுமில்லாது பலரும் இப்போது வலியுறுத்தும் ‘ஆன்மீகத் தேவை’ குறித்து மட்டும் பேசலாம்.
இப்போது பெருகியுள்ள நவீன கார்ப்ரேட் சாமியார்கள் பெருக்கத்தின் பின்னணியிலேயே இதை அணுகலாம். ஜக்கிவாசுதேவ், நித்யானந்தா போன்றவர்கள் பேசும் ‘ஆன்மீகத்தை’ உற்றுக்கவனித்தால், அவை பெரும்பாலும் பவுத்த மற்றும் ஜென்பவுத்த சிந்தனைகளை உருவியதாக இருப்பதைக் காணலாம். இந்த கார்ப்பரேட் சாமியார்களும் அத்வைதம், துவைதம் போன்ற ‘இந்து ஆன்மீக மரபிலிருந்து’ பேசுவதில்லை. கடவுளை அதிகம் வலியுறுத்தாத, மய்யப்படுத்தாத ஆன்மீகமாகவே இவர்களுடையதும் இருக்கின்றன. நமது தமிழ்மரபில் நீண்டகாலம் தங்கியிருந்த பவுத்த, சமண மரபுகளின் கருத்துக்களையும் தியானம், யோகா போன்ற அவைதீக மரபுகளின் பயிற்சிகளையும் எடுத்து, ‘தியான லிங்கம்’ போன்ற இந்துத்துவக்குறியீடுகளை உருவாக்கி நமக்கே விற்பனை செய்கிறார்கள். இந்த கார்பரேட் சாமியார்களை அதிகமும் நாடிச் செல்பவர்கள் நடுத்தர வர்க்கத் தமிழர்கள்தான்.
நவீன வாழ்க்கை உடல் மற்றும் உளவியல் ரீதியிலாக ஏற்படுத்தியிருக்கும் சிக்கல்கள்தான் அவர்களைக் கார்ப்பரேட் சாமியார்களிடம் சரணடையச் செய்திருக்கிறதே அல்லாது, அவர்களின் ‘ஆன்மீக ஈடுபாடு’ அல்ல. இன்னமும் அடித்தட்டு சாதி மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் குறிசொல்லும் சாமியார்களிடம் செல்கிறார்களே அல்லாது கார்ப்பரேட் சாமியார்களிடம் அல்ல. ஏனெனில் அவர்களது அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள், அடுத்த மாதம் எப்படி இருக்கும் என்று ‘குறி கேட்கிற’ விருப்பம் மட்டும்தான் அவர்களின் அதிகபட்ச ‘ஆன்மீகம்’. மிஞ்சிப்போனால் இவர்கள் அதிகபட்சம் பங்காரு அடிகளாரைச் சரணடைவார்கள். அதற்குக் காரணம், பூணூல் அற்ற வெற்றுக் கருப்புடல் நோக்கிய தமிழர்களின் விழைவு, சக்தி பூஜை என்ற பெயரில் முன்வைக்கப்படும் தாய்த்தெய்வ வழிபாடு, மாதவிடாய்க் காலங்களிலும் பெண்கள் கருவறையில் சென்று பூஜை செய்யும் சுதந்திரம் ஆகியவை. தமிழ்சசி விரும்புகிறபடி நாம் மாற்று ஆன்மீகத்தை வளர்ப்பதாக இருந்தால் அதிகபட்சம் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மய்யத்தில் சேரலாம்.
தமிழ்சசி முன்னிறுத்தம் ‘கொண்டாட்டம்’ பற்றிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதான். அந்த கொண்டாட்டத்தைத் தமிழர்கள் திராவிடக்கட்சி ஊர்வலங்கள் தொடங்கி டாஸ்மாக் வரை பலவழிகளில் அடைந்துகொண்டுதானிருக்கிறார்கள். எனவே கொண்டாட்டத்திற்கு மதமோ ஆன்மீகமோ அவசியமில்லை. மாறாக வறட்டுத்தனமான நமது இயக்கங்களின் அணுகுமுறையிலிருந்து நெகிழ்வடைந்து நாம் மாற்றுக்கொண்டாட்டங்களை உருவாக்க வேண்டும். ஆனால் தமிழ்சசியோ ஆன்மீகம், கொண்டாட்டம், ஆன்மீகத்தேவை போன்ற கருத்தாக்கங்களின் வழி வந்தடையும் முடிவு அபத்தமானது மற்றும் ஆபத்தானது.
'கடவுள் மறுப்பு நம்மை இந்துக்களாக மாற்றி விட்டது.நாம் சைவர்கள் என்பதை சொல்வதையே நான் வலியுறுத்துகிறேன்.' என்கிறார் தமிழ்சசி.
நம்மை ’இந்துக்களாக’ மாற்றியது அரசியலமைப்பின் தன்மையே அல்லாது கடவுள் மறுப்பு அல்ல. இதற்கு விரிவான பல வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. இருக்கட்டும், ஆனால் வெறுமனே தமிழ் அடையாளம் என்னும் ஒற்றை அடையாளத்தை வலியுறுத்துபவர்கள் வந்துசேரும் இடம் இதுவாகத்தானிருக்கும். தமிழ்சசியால் கடவுள் மறுப்பால் அதிருப்தி அடைந்ததாகக் குறிப்பிடப்படும் தமிழர்களில் எத்தனை சதம் பேர் சைவர்கள்? தமிழர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் சைவ மதத்திற்குப் புறம்பானவர்கள். உணவுப்பழக்கம் தொடங்கி வழிபாடு வரை பெரும்பான்மையான தமிழ்ச்சாதிகள் சைவமதத்திற்கு அப்பால் உள்ளவர்கள். தமிழ்சசி சொல்வதைப் போல சைவத்தை வலியுறுத்தத் தொடங்கினால், வைணவ சமயத்தைக் கடைப்பிடிக்கும், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் சாதிகள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை என்ன சொல்லி அழைப்பது? இதைத்தான் நாம் ‘வெளித்தள்ளும் அரசியல்’ என்கிறோம்.
இறுதியாக தமிழ்மக்களுக்கு அவர்களது மொழி மற்றும் தேசிய இன அடையாளத்தின் அடிப்படையில் இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றால் இழைக்கப்படும் அநீதிகளை எதிர்க்க வேண்டியதும், அதற்காகத் தமிழின அடையாளத்தை வலியுறுத்த வேண்டியதும் அவசியமானவைதான். ஆனால், அதனூடாக நாம் இதுவரை பயணித்து வந்த ஒரு நெகிழ்வான, மதக்காழ்ப்பற்ற திசையிலிருந்து எதிர்த்திசைக்கு நம்மை நாமே தள்ளிவிடக் கூடாது. திமுக, கருணாநிதி போன்றவற்றின் மீதுள்ள கோபமும் உணர்ச்சியடிப்படையிலான அவசர முடிவுகளும் நமக்கு இழப்பைத்தான் ஏற்படுத்தும். இதன் பொருள், திராவிட அடையாளத்தை வலியுறுத்துகிறேன் என்ற பெயரில் கலைஞரின் தமிழின விரோத நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதும், தமிழக அரசை விமர்சனமற்று ஆதரிப்பதுமல்ல. மாறாக, திராவிட இயக்க அடிப்படைகளிலிருந்து சாதகமான அம்சங்களை எடுத்துக்கொண்டே தமிழின உரிமைப்பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்பதுவே.
எழுதியவர் : சுகுணாதிவாகர்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


