28 ஆகஸ்ட், 2010

ஏ.டி.எம். ஏக்கம்!

ச்சே.. நம்மூரிலும்தான் ஏ.டி.எம். இருக்கிறது..

நம்மிடமும்தான் கார்டு இருக்கிறது..

நாமும்தான் அவ்வப்போது நூறோ, இருநூறோ எடுக்கிறோம்..

நம்பள்க்கி எல்லாம் ஏன் இதுமாதிரி நடக்கமாட்டேங்குது? :-(

தமிழக இளைஞர்களை ஏக்கம் கொள்ளவைக்கும் இனிய செய்தி தினமலரில் வந்திருக்கிறது : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=63041

அழகிகளிடம் ஏமாந்த சோணகிரி ஒரு தமிழராம்.

ம்.. பிரான்சுக்கு போனாலும் தமிழன் சிங்கத்தமிழன்தான்!

25 ஆகஸ்ட், 2010

ப்ளூகாலர் வேலைகளுக்கு பலத்த மவுசு!

விருந்தினர் பக்கம் : வழங்குபவர் கார்க்கி iamkarki@gmail.com

அடுத்த 10 வருடங்களில் இந்தியாவில் அபார வளர்ச்சி காணப்போகும் துறைகளில் ஆட்டோமொபைல் முக்கியமானது. கடந்த 2 வருடங்களாகவே இத்துறையில் வேலைவாய்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இது இன்னும் பன்மடங்காகும். Robert Bosch என்ற ஒரு நிறுவனம் மட்டும் இந்த ஆண்டு 5000 பேரை வேலைக்கு எடுக்கவிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் மனிதவளமும் நிறையவே இருக்கிறது. ஆனால் நிறுவனங்களுக்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.

இந்தியாவில் தற்போது ப்ளூ காலர் என்றழைக்கப்படும் semi-skilled ஆட்களுக்குத்தான் அதிக பற்றாக்குறை. உண்மையை சொல்லப்போனால் பற்றாக்குறை கூட அல்ல. ஆட்கள் தேவைப்படுவோருக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. வேலைத் தேடுவோருக்கு எங்கே வேலை இருக்கிறதென தெரியவில்லை. இவர்களுக்கு இன்னமும் இணையம் அவ்வளவாக பரிச்சயமாகவில்லை என்பதும் ஒரு காரணம்.

அது தவிர இந்த வேலைகள் எல்லாம் சென்னை போன்ற ஓரு சில தொழிற்துறை நகரங்களிலே இருப்பதால் மற்ற சிறுநகரத்துவாசிகளுக்கு தெரிவதில்லை. நோக்கியா போன்ற பெரிய நிறுவனங்கள் இம்மாதிரி கிராமத்து ஆட்களை வேலைக்கு வரவழைக்க நல்லதொரு திட்டம் வைத்திருக்கிறார்கள் சுற்றியுள்ள கிராமங்களுக்கே சென்று அங்கேயே நேர்முகத்தேர்வு வைத்து (கேம்பஸ் இண்டர்வ்யூ மாதிரி) அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரையும் கையோடு தந்துவிட்டு வருகிறார்கள். மறுநாள் அவர்களை அழைத்து செல்ல நோக்கியாவின் பேருந்து வந்துவிடும். ஒரு சில கிராமங்களுக்கு அரசுப்பேருந்து கூட செல்வதில்லை. ஆனால் நோக்கியா போன்ற பெருநிறுவனப் பேருந்துகள் தவறாமல் செல்கின்றன.

எல்லா நிறுவனங்களும் இந்த முறையை செயல்படுத்தவதில்லை. அவர்கள் மனிதவள மேலாண் நிறுவன்ங்களின் உதவியை நாடுகின்றனர். இன்னமும் பல நகரங்களை சேர்ந்த மாணவர்கள் சரியான வேலை கிடைக்காமல் இருப்பதை பார்க்கலாம். ஆனால் அவர்கள் விரும்பும் துறையிலே வேலைகள் தயாராக இருக்கின்றன. இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது போன்ற நிறுவனங்களை தொடர்பு கோண்டு தங்களது பயோடேட்டாவை கொடுப்பது மட்டுமே.

“மனிதவள மேலாண் நிறுவனங்களுக்கு இருக்கும் மவுசை நன்றாக உணர்ந்ததால்தான், எட்டு வருடங்களாக உற்பத்தித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறேன்” என்கிறார் இளைஞரான கார்க்கி. வெர்ட் எக்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் இவர் தொடங்கியிருக்கும் மனிதவள மேலாண்நிறுவனம் ப்ளூகாலர் பணிகளில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

“5000 – 8000 முதல் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைக்கு ஆட்களின் தேவை எப்போதும் இருந்துக் கொண்டேயிருக்கிறது. +2, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் எல்லோருமே தேவை. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங், தொழில்நுட்ப வேலைகள் என எல்லாப் பிரிவிலும் ஆட்கள் தேவை. எங்களைப் போன்ற நிறுவனங்கள் எங்கெங்கே எவ்வளவு வேலை இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அந்த வேலைகளை பூர்த்தி செய்ய ஆட்கள் கிடைக்காமல்தான் திண்டாடி வருகிறோம்” என்று மேலும் சொல்கிறார் கார்க்கி.


வெர்ட் எக்ஸ் சொல்யூஷன்ஸ் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற இருவரின் வெற்றிக் கதைகள் :

ஒன்று :

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சாமிநாதன். அஞ்சல்வழியில் பி.பி.ஏ படித்தவர். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும்வரை காத்திருக்கவில்லை. கிடைத்த வேலைகளை ஊரிலேயே செய்யத் தொடங்கினார். ஒரு பெயிண்டராக வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

சென்னையில் ஒரு மனிதவள மேலாண்மை நிறுவனம் மூலமாக ஒரு நிதித்துறை நிறுவனத்தில் Backend office எனப்படும் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். கிடைத்த வேலையை திருப்தியாக செய்ததற்கு பரிசாக, இப்போது 10 பேர் கொண்ட குழுவை வழிநடத்தும் டீம் லீடராக இருக்கிறார்.

“வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை எந்த வேலை கிடைக்கிறதோ, அந்த வேலையை திருப்தியாக செய்யும் மனநிலைக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். செய்யும் வேலையிலிருந்தே, அதைவிட சிறப்பான வேலை கிடைக்குமா என்று வாய்ப்புகளை கண்கொத்திப் பாம்பாக பார்த்துவரவேண்டும். வாய்ப்புகள்தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும்” என்று தத்துவமாக கொட்டுகிறார் சாமிநாதன்.


இரண்டு :

திண்டிவனம் ரமேஷின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிகிறார். பொதுவாக இந்தப் பதவிக்கு வருபவர்கள் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும். ஆனால் ரமேஷோ +2தான் முடித்திருக்கிறார். இப்போது அஞ்சல் வழியில் எம்.பி.ஏ. படித்திருக்கிறார்.

சென்னைக்கு வந்து கிடைத்த வேலைகளை செய்துக் கொண்டிருந்தவருக்கு ஏதோ ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பிரிவில் வேலை கிடைத்தது.

“எல்லோரும் நினைப்பது மாதிரி படிப்பு எல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் பெரிய விஷயமேயில்லை. விற்பனைப் பிரிவில் பணியாற்ற சரளமான ஆங்கிலமும், துடிப்பான பேச்சும், நிறைய உழைப்பும் இருந்தால் போதும். வெகுவிரைவில் வெற்றிப்படிக்கட்டுகளை ஏறி விடலாம்” என்பது ரமேஷின் அனுபவம்.

நினைத்தாலே நடக்கும்!

நீண்டதூரப் பயணம். செமையான வேலை. பிளாட் கதவைத் திறந்துவிட்டு ‘அப்பாடா’வென்று சோபாவில் விழுகிறீர்கள். எழுந்துச் சென்று ட்யூப்லைட்டையோ, ஃபேனையோ ‘சுவிட்ச் ஆன்’ செய்யக்கூட முடியாத அலுப்பு.

இதுமாதிரி நேரங்களில் நீங்கள் நினைத்தவுடனே விளக்கு எரிந்தால், ஃபேனோ, ஏசியோ அதுவாகவே ‘ஆன்’ ஆனால், ரிமோட் கண்ட்ரோல் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே மனதில் விரும்பும் சேனல் டிவியில் தோன்றினால் எப்படியிருக்கும்? எதற்குமே நீங்கள் அசையக்கூட வேண்டாம். நினைப்பு மட்டுமே போதும்.

ம்.. ‘நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும்’ என்கிறீர்களா? பழமொழியெல்லாம் பழங்கதை சார். நீங்கள் நினைத்ததை முடிப்பதுதான் அறிவியலின் வேலை.

சமீபத்தில் கனடாவின் டொரண்டோ நகரில் ஒரு அலுவலகத்துக்கு பத்திரிகையாளர் ஒருவர் சென்றார். வாசலில் ‘ஹெட்ஃபோன்’ ஒன்றை செக்யூரிட்டி மாட்டி அனுப்பினார். கதவைத் திறக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே சென்றவருக்கு, கதவு அதுவாகவே திறந்து வழிவிட்டது. அட...

கொஞ்சம் அச்சத்தோடு உள்ளே சென்றவருக்கு லேசாக வியர்த்துக் கொட்ட, ஃபேன் சுவிட்ச் எங்கேவென்று தேடத்தொடங்கினார். அவர் நினைத்த மாத்திரத்தில் ஃபேன் ஓட.. விட்டலாச்சார்யா பட அனுபவம்தான் போங்கள்.

திகிலடித்துப் போயிருந்த பத்திரிகையாளருக்கு மேலும் ‘சோதனை’ தர விரும்பாமல் ‘இண்டரெக்ஸான்’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்நிறுவனத்தைச் சார்ந்த ஏரியல் கார்ட்டன் என்கிற உளவியல் நிபுணரான பெண்மணி, ‘டெக்னாலஜியை’ விளக்கத் தொடங்கினார்.

“எதையாவது செய்யும் முனைப்போடு நீங்கள் சிந்திக்கும்போது பீட்டா அலைகளை உங்கள் நினைவகம் உருவாக்குகிறது. ஓய்வு மூடுக்கு வரும்போது ஆல்பா அலைகளை உருவாக்குகிறது. இந்த அலைகளை கட்டுப்படுத்துவதின் மூலமாக ‘ஸ்விட்ச்’ இல்லாமலேயே லைட் போடலாம், ஃபேனை ஓடவைக்கலாம். இசை கேட்கலாம். ஏன் காலில் ‘கீர்’ போடாமலேயே, ஆக்ஸிலேட்டரை முறுக்காமலேயே வண்டி கூட ஓட்டலாம்”

செய்தியை கேட்டதுமே “நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்” என்று பாட்டு பாடலாம் போல தோன்றுகிறதுதானே? – இந்த ஆல்ஃபா, பீட்டா அலைகளை குறித்த ஆராய்ச்சியின் தொடக்கம்தான் இது. நினைவலைகளை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்ற சாத்தியத்தை கண்டறிந்திருக்கிறார்கள். இப்போதைக்கு ட்யூப் லைட் போடுவது, டயல் செய்யாமலேயே ஆபிஸுக்கு போன் செய்து, பொய்பேசி லீவு வாங்குவது என்ற லெவலுக்குதான் இந்த ஆராய்ச்சி முன்னேறியிருக்கிறது. இன்னும் நிறைய ஆராய்ந்து நிறைய விஷயங்களை நினைப்பின் மூலமாகவே சாத்தியப்படுத்தும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இப்போதைக்கு எப்படி இயங்குகிறது என்றால் நம் காதில் பொருத்தப்படும் ஹெட்செட்டில் இருக்கும் சில எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் மூலமாக நம் மூளையின் செயல்பாடுகள் வாசிக்கப்படுகிறது. இது ஒரு கணினிக்கு கொண்டு செல்லப்பட்டு கணினியின் மூலமாக நம் நினைவுகள் செயலாற்றப்படுகிறது.

மனித மூளையை ஒரு கணினியால் படிக்க முடியும் என்பதே மிகப்பெரிய விஷயம். இதனால் நினைத்தமாத்திரத்தில் எவ்வளவோ விஷயங்களை சாத்தியப்படுத்த முடியும் என்பது சாதகமான அம்சம். பாதகமான அம்சங்களும் நிச்சயமாக நிறைய உண்டு. எவையெல்லாம் என்று சொல்லவே தேவையில்லை. உங்களுக்கே தெரியும்தானே?

(நன்றி : புதிய தலைமுறை)

24 ஆகஸ்ட், 2010

பிறந்தநாள்!

தொடக்கத்தில் – அதாவது அப்பா கண்ட்ரோலில் இருந்தபோது..

அப்பாவிடம்...

“ப்ரூஸ் லீ படம் போட்ட சர்ட்டு வேணும்!”

“கபில்தேவ் பேட், அதோட ஒரு ஹீரோ பேனாவும்”

“இப்போ நல்லா ஓட்டுறேன். கால் நல்லா எட்டுது. ஒரு பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆர் வாங்கித் தரலாமில்லே”

அம்மாவிடம்...

“கோயிலுக்கு நான் வரலை. பிரண்ட்ஸோட ஜெண்டில்மேன் பார்க்கப் போறேன்”

அப்பா அவருடைய அண்ணனிடம்...

“இவனும் என்னை மாதிரியே மாசக்கடைசியிலே பொறந்து தொலைச்சிட்டானே? இருந்தாலும் என்னத்தைப் பண்ணுறது? ஒரே புள்ளையா பொறந்துட்டான். எத கேட்டாலும் செஞ்சிதான் கொடுத்தாவணும்”

ஆசைகள் எதுவுமே நிராசை ஆனதில்லை. எனக்கு வாய்த்தவர் உலகின் தலைசிறந்த அப்பா.


நடுவில் – அதாவது சிறகு முளைத்துவிட்டதாக நானே நினைத்துக் கொண்டபோது..

கோபாலிடம்...

“இன்னைக்காவது அவகிட்டே பிரபோஸ் பண்ணிடனும்”

அவள்...

“தம்மு கூட அடிக்க மாட்டியா? ச்சே.. என்னடா ஆம்பளை நீ?”

ஜாஹிரிடம்...

“வெற்றிலே கட்டப் பஞ்சாயத்து ஓடுது. நக்மா ஒயின்ஸுலே ஆளுக்கொரு பீர் உட்டுட்டு அப்படியே போயிடலாமா இல்லைன்னா ஜோதியா?”

மெக்கானிக் தமிழ்...

“சில்வர் ப்ளஸ்ஸோட அழகே சில்வர் கலர்தான். நீ ஏண்டா ஃபுல்லா பிளாக் பெயிண்ட் அடிக்கணும்னு சொல்றே?”

பிள்ளையார் கோயில் தர்மகர்த்தாவிடம்...

“சார் திக இளைஞரணி சார்புலே பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம் நடத்தப் போறோம். உங்க கோயில் முன்னாடி மேடை போட்டுக்கறோம்”

யாரோ ஒருவர், ஆள் கூட நினைவில்லை...

“எதுவா இருந்தாலும் முதல்லே உனக்கு மீசை முளைக்கட்டுண்டா வெண்ணை”

நிறைய ஆசைகள் பேராசையாகி நிராசையாகிய பருவம்...


லேட்டஸ்டாக – அதாவது இப்போது...

இன்சூரன்ஸ் ஏஜெண்டிடம்...

“சார் ஜீவன் அன்மோல் போட்டுட்டேன். ஜீவன் ஆனந்தும் இருக்கு. வேற ஒரு ரெண்டு பாலிசியும் ஃபேமிலி மெம்பர்ஸ் பேருலே எடுத்துட்டேன். திடீருன்னு ஆக்சிடெண்ட் கீக்ஸிடெண்ட் ஆகி மண்டையப் போட்டுட்டோமுன்னா ஃபேமிலி சேஃப்புதான். இருந்தாலும் குழந்தை ஃப்யூச்சருக்கு ஏதாவது போட்டு வைக்கலாம்னு பார்க்குறேன். லோ ப்ரீயமுத்துலே நிறைய பெனிஃபிட் கிடைக்கிறமாதிரி பாலிசி ஏதாவது பார்த்து சொல்லுங்க சார்!”

பிறந்தநாள் கொண்டாட்டத் தன்மையை இழந்து பீதிநாளாகி வருகிறது :-(

எல்லாமே அப்படியே ரிவர்ஸிலேயே போனால் எவ்வளவு நல்லாருக்கும்?

23 ஆகஸ்ட், 2010

ஜெயமோகனின் பொறுமை!

எப்படித்தான் இந்த மனுஷனுக்கு இவ்வளவு பொறுமை சாத்தியமாகிறதோ என்று கடந்த ஒரு வாரமாக ஆச்சரியப்பட்டு வருகிறேன். சாருவிடம் யாராவது இம்மாதிரியாக பேசியிருந்தால் சுனாமியே நிச்சயமாக வந்திருக்கும். யாரோ ஒரு தமிழ் ட்விட்டர் ”ஜெ விரைவில் எழுத்துத் துறவறம் மேற்கொள்ளுவார்” என்று ஆரூடம் சொல்லும் அளவிற்கு அவருக்கு உளவியல்ரீதியான வன்புணர்ச்சியை இரு வாசகர்கள் தந்து வருகிறார்கள்.

ஜெயமோகனின் இணையத்தளத்தை தொடர்ச்சியாக வாசிக்குமளவுக்கு சிலநாட்களாக பணிச்சூழல் இடம் தராததால் பிரச்சினையின் மையப்புள்ளி எங்கிருந்து சரியாக தொடங்கியது என்று தெரியவில்லை. ஜெமோ சில நாட்களாக நிறைய எழுத்தாள விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். கல்கியில் தொடங்கி அவருடைய பந்துவீச்சில் சுஜாதாவென ஒவ்வொருவராக போல்ட் ஆகிவர, பாலகுமாரன் எல்பி.டபிள்யூ. ஆனபோது பிரச்சினை தொடங்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த தொடர்தாக்குதலில் குழம்பிப்போன இரு வாசகர்கள் பிச்சைக்காரன் & ராம்ஜியாஹூ. தடாலென்று அதிரடியாக ஜெமோவின் பின்னூட்டப் பெட்டியை கைப்பற்றி, அவருடைய பந்துவீச்சை இவர்கள் இருவரும் எதிர்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். நொந்துப்போன ஜெமோ ”கேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்” என்று ஒரு பதிவெழுத வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். ஆயினும் அந்தப் பதிவிலேயே நண்பர் ராம்ஜியாஹூ நான்கு ஸ்டெப் ஏறிவந்து பின்வருமாறு ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார்.

“எனக்கு தெரிந்து பல வாசகர்கள் (நான் உட்பட) சுஜாதா பாலகுமாரன் புஷ்பா தங்கதுரை யும் படிக்கிறோம், நகுலன் வண்ண நிலவன், சு ர, கோபி கண்ணன், பஷீர், ஜெயமோகன், கோணங்கி, அம்பை யும் படிக்கிறோம். மாலை முரசும் படிக்கிறோம், கார்டியனும் படிக்கிறோம். சகலகலா வல்லவன், சிங்கார வேலனும் பார்க்கிறோம், மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, அன்பே சிவம், மகாநதியும் பார்க்கிறோம். பால குமாரன் என்றுமே தனது எழுத்து மட்டுமே படியுங்கள். கி ரா, வண்ணதாசன் பக்கம் போகாதீர்கள் என்று சொன்னதே இல்லை.”

ராம்ஜி சிக்ஸர் அடித்த அடுத்த ஓவரிலேயே, பிச்சைக்காரன் இன்னொரு மெகாசிக்ஸரை இவ்வாறாக அடித்திருக்கிறார்.

“பாலகுமாரன் அவர்களை இலக்கியவாதிகள் வரிசையில் வைக்காதது வருத்தமாக இருந்தது . ஆனால் உங்களை போன்ற சிலரை தவிர, பெரும்பாலாலான இலக்கியவாதிகளை பார்க்கும்போது , பாலகுமாரன் போன்ற உன்னத மனிதரை இலக்கியவாதி வரிசையில் வைப்பது அவரை இழிவு செய்வது போன்றது என்றே உணர்கிறேன். உங்களையும் கூட இலக்கியவாதியாக பார்க்கவில்லை. சிந்தனையாளராகவே பார்க்கிறேன்.”

நொந்துப்போன ஜெமோ வெறுத்துப் போய் மிக நாகரிகமாக, எளிமையாக ஒரு பதில் கொடுக்கிறார் பாருங்கள்.

“அன்புள்ள பிச்சைக்காரன்

பாலகுமாரன் மீதான உங்கள் மதிப்பை அங்கீகரிக்கிறேன். ஒர் எழுத்தாளன் மீது கொண்டுள்ள பிரியம் என்பது தன்னளவிலேயே மகத்தானதே. அவரை உங்கள் ஞானாசிரியனாக ஆக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால் அவரில் இருந்து மேலே செல்லும் வாசல்களையும் திறந்தே வையுங்கள். அது உங்களுக்கு உதவும். அந்த நிலை உங்களிடம் இருப்பதை காண்கிறேன், மகிழ்ச்சி”

பிரச்சினை முடிந்தது என்று நினைத்தால் இல்லவேயில்லை. பின்னூட்ட சூறாவளிகள் இருவரும், ஜெமோ ஸ்பின் போட்டாலும் சரி, ஸ்பீட் போட்டாலும் சரி. சுளுக்கெடுக்கும் தீர்மானத்தில் இருந்து பின்வாங்கவேயில்லை.

அடுத்ததாக ரந்தீவ் ஸ்டைலில் ஒரு ‘நோபால்’ போட்டு ஆட்டத்தை நிறுத்தும் முயற்சியில் ஜெமோ ஈடுபடுகிறார். ”பாலகுமாரனும் வணிக இலக்கியமும்” என்று மிக ஸ்ட்ராங்கான முயற்சி இது. எப்படிப்பட்ட பேய்களும் பயந்து ஓடிவிடக்கூடிய செமையான வேப்பிலைப் பூசை.

ம்ஹூம். வேலைக்கு ஆவது போல தெரியவில்லை. இம்முறை ராம்ஜியும், பிச்சைக்காரனும் அடித்துக் கொண்டிருப்பது ‘அவுட் ஆஃப் த ஸ்டேடியம்’ பாணி சிக்சர்கள்.

”ஜனநாயக அடிப்படையில்தான் இங்கே ராம்ஜி யாகூ அவர்கலின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இந்த விவாதத்தில் பொருட்படுத்தி பேசும் அளவுக்கு அவர் கருத்துக்கள் இல்லை. இங்கேஇலக்கிய விமர்சனம் குறித்து பேசபப்டும் எதையுமே அவர் புரிந்துகொள்ள முயல்வதாகவும் தெரியவில்லை. ஆகவே அவரது கருத்துக்களை அப்படியே விட்டுவிடும்படி கோருகிறேன். அது இந்த விவாதத்தை மிகவும் திசைதிருப்பிச் சோர்வூட்டுகிறது” - தாவூ தீர்ந்துப்போன ஜெமோ இப்படி சொல்லியிருக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மோசம்.

அனேகமாக ஜெமோவின் கால் நூற்றாண்டுக்கால இலக்கிய வாழ்வில் இப்படியான தன்மைகொண்ட எதிர்வினைகளை அவர் சந்தித்திருக்கவே மாட்டார் என்று தோன்றுகிறது. ஆனானப்பட்ட சாருவையே சமாளிக்க முடிந்தவருக்கு ஒரே நேரத்தில் இரு சிம்ம சொப்பனங்கள், யாருமே எதிர்பாராத வடிவத்தில் தோற்றத்தில் தோன்றுவார்கள் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்.

கடைசியாக ஜெமோ, “வழக்கம்போல விவாதம் அதன் ‘அடுத்த’ கட்டத்துக்குச் சென்றுவிட்டது. நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டமையால் இதில் மேலே ஏதும் சொல்லாமல் முடித்துக்கொள்கிறேன். நான் சொன்னவை ஓர் இலக்கிய விமர்சகனின் கருத்துக்கள். இவற்றுக்குப் பின் மிக விரிவான ஓர் இலக்கிய பாரம்பரியமும் உலகளாவிய அழகியற்புலமும் உண்டு. அவற்றயும் இந்த இணைய தளத்திலேயே அறிமுகம் செய்துகொள்ளலாம். தன் ரசனையையும் நுண்ணுணர்வையும் சார்ந்து மேலே வாசிப்பவர்களும் யோசிப்பவர்களும் இதை பரிசீலிக்கலாம். மற்றவர்கள் தங்கள் கருத்துக்களிலேயே நீளலாம். இதுவே எந்த இலக்கிய விமர்சனத்துக்குக்கும் பயனாகும்.” என்று சொல்லி தற்காலிக பிரேக்கை போட முயற்சித்திருக்கிறார். இந்த சுவாரஸ்யமான இலக்கியப்போர் என்னதான் ஆகுமென்று பொறுத்திருந்துப் பார்ப்போம்.

எனக்கு தெரிந்து ஜெமோவுக்கு இப்போது இருப்பது இரண்டே இரண்டு சாய்ஸ் தான்.

ஒன்று, ஒட்டுமொத்தமாக இணையத்தை பூட்டி வைத்துவிட்டு சினிமாவில் தீவிரமாவது.

இரண்டு, சாருவை மாதிரி பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டு, மெயிலுக்கு வரும் ஆபாசக் கடிதங்களை ஸ்பாமுக்கு அனுப்புவது.

மூன்றாவதாகவும் ஒன்று இருக்கிறது. தொடர்ச்சியாக இதுமாதிரி அவர் பந்துவீச்சு ராம்ஜியாஹூ, பிச்சைக்காரன் மாதிரி வகையறாக்களால் சேதப்படுத்தப்பட்டுக் கொண்டே போனால் இலக்கியத்தை மூட்டை கட்டிவிட்டு, ரஜினிசார் ஸ்டைலில் இமயமலைக்கு போய் ரெஸ்ட் எடுப்பது.