18 அக்டோபர், 2010

இரண்டு கற்பழிப்பு செய்திகள்!

சமீபத்தில் வாசிக்கக் கிடைத்த இரண்டு கற்பழிப்பு செய்திகள் :-


ஒன்று :

ஜிம்பாப்வே நாட்டில் நடந்த சம்பவம் இது. புலவாயோ பஸ் ஸ்டேண்டில் 26 வயதான போலிஸ்காரர் ஒருவர் பஸ்ஸுக்காக நின்றிருந்தார். அப்போது ஒரு கார் அந்த வழியாக வந்தது. காருக்குள் மூன்று பெண்கள் இருந்திருக்கிறார்கள். லிப்ட் தருவதாக சொல்லி போலிஸ்காரரை ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்.

காருக்குள் போலிஸ்காரர் திடீரென மயக்கமாகியிருக்கிறார். அனேகமாக அப்பெண்கள் மயக்க மருந்து பயன்படுத்தியிருக்க வேண்டும். மயக்கம் தெளியும்போது மூன்று பெண்களும் அவரை பாலியல் வன்புணர்வு செய்வதை அரைமயக்க நிலையில் உணர்ந்திருக்கிறார். 'வேலை' முடிந்தபிறகு அவரை காரை விட்டு தூக்கி எறிந்திருக்கிறார்கள். அவரது மொபைல் போனும், பர்ஸூம் அப்பெண்களால் களவாடப் பட்டிருக்கிறது.

இச்சம்பவத்துக்கு முன்பாகவும் ஹராரே, மாஸ்லிங்கோ ஆகிய இடங்களில் இதைப்போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக ஜிம்பாப்வே நாட்டு காவல்துறை அறிவித்திருக்கிறது. கடந்த 11 மாதங்களில் ஜிம்பாப்வேயில் மட்டும் 6 ஆண்கள் இதுபோன்ற சம்பவங்களில் கற்பிழந்ததாக தெரிகிறது. சில இடங்களில் துப்பாக்கி முனையில் வற்புறுத்தி கற்பழிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.


இரண்டு :

நவிமும்பையில் நடந்த சம்பவம் இது. சனிக்கிழமை இரவு ஒரு பள்ளி வளாகத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. அப்போது 30 வயதான பெங்காலி பக்தை ஒருவர் உடல்நலம் குன்றி மயக்கமுற்றிருக்கிறார்.

அருகிலிருந்த மருத்துவமனையான லோட்டஸ் ஆஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதிகாலை 2 மணியிலிருந்து 5 மணிக்குள்ளாக அங்கிருந்த ட்யூட்டி டாக்டர் விஷால் (வயது 26) என்பவரால் அரைமயக்க நிலையில் இருந்தபோது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர், கத்தக்கூட திராணியின்றி இருந்த நிலையில் வலுக்கட்டாய உறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இத்தனைக்கும் அதே மருத்துவமனையில் அப்பெண்ணின் கணவரும் வேறு அறையில் இருந்திருக்கிறார்.


இந்த இரு சம்பவங்களின் அடிப்படையில், கருத்து கந்தசாமி ஆகி நாம் கருத்து எதையும் சொல்லப்போவதில்லை. இச்செய்திகளை வாசித்தபின்பு நீங்களே தேவையான கருத்துகளை சிந்தித்து விடுவீர்கள். ஆனால் முந்தைய சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அகலிகை காலத்திலிருந்து நம் பாரதம் கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை என்ற வேதனையை மட்டும் பகிர்ந்து கொள்கிறோம்.

15 அக்டோபர், 2010

பிருந்தாவனம்!

ரசிகர்கள் விசிலடித்து திரையரங்கின் திரை கிழிகிறது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவர்கள் மோட்சம் தியேட்டரின் திரையைக் காணலாம். Una my love போன்ற சீனே இல்லாத பிட்டுப் படங்களை போட்டுக் கொண்டிருந்த தியேட்டர் இது. எந்திரன் ஃபீவரின் போது ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதைப் போல எந்திரனை தெலுங்கில் ரிலீஸ் செய்தார்கள். கும்மிய கூட்டத்தைக் கண்ட திரையரங்கு நிர்வாகம், தெலுங்குப் படங்களுக்கு சென்னையில் இருக்கும் மவுஸை கண்டுகொண்டது. அடுத்தடுத்து அதிரடியாக தெலுங்கு ரிலீஸ். போனவாரம் கலேஜா. இந்தவாரம் பிருந்தாவனம். கீழ்ப்பாக்கத்தில் வியாழன் என்றாலே இப்போது திருவிழாதான்.

தேவுடுகாரின் தேவுடுகார பேரன் ஹீரோ. டைட்டிலிலேயே தேவுடுகாரின் பழைய 'மிஸ்ஸியம்மா' பாட்டு வண்ணம் சேர்க்கப்பட்டு ஓடுகிறது. அப்போது விசில் அடிக்கத் தொடங்கும் ரசிகர்கள், க்ளைமேக்ஸில் பேரனோடு கிராபிக்ஸில் தேவுடுகாரு கொஞ்சுவது வரை ஓயாமல் அடிக்கிறார்கள். தொண்டை என்னத்துக்கு ஆவது?

ஓபனிங் காட்சியில் நீச்சல்குளத்தில் இருந்து 'சுறா' மாதிரி ஹீரோ பாய்ந்துவருவதை காணும்போதே 'பகீர்' என்கிறது. நல்லவேளையாக அடுத்தடுத்த காட்சிகளில் வயிற்றுக்குள்ளிருந்து எழும்பிய திகில் பந்து அதுவாகவே காணாமல் போகிறது. ஏனோ தெரியவில்லை. ஜூனியர் என்.டி.ஆர். செய்யும் சேஷ்டைகள் எல்லாம் சூப்பராக தெரிகிறது. அதையே அட்சரம் பிசகாமல் தமிழில் இளையதளபதி செய்தால் மொக்கையாகப் போகிறது.

படம் முழுக்க பஞ்ச் டயலாக்குகள். வசனகர்த்தா தீயை உருக்கி மையாக நிரப்பி எழுதியிருப்பார் போல. ஜூனியர் என்.டி.ஆர் நடப்பது, திரும்புவது, பார்ப்பது என்று அவருடைய நடவடிக்கைகளை எப்படி வித்தியாசப்படுத்தலாம் என்று சிந்தித்ததிலேயே இயக்குனரின் ஹேர்ஸ்டைல், சோ ராமசாமியின் தலை மாதிரி ஆகிவிட்டிருக்கும். இனிமேல் ஜூ.என்.டி.ஆர் படங்களுக்கு ரசூல் பூக்குட்டியை வைத்துதான் ஒலிப்பதிவு செய்யவேண்டும். பின்னணி இசையில் அவ்வளவு ஆடம்பரம். தாங்கமுடியலை தேவுடா.

கதை கலக்கல் மசாலா. சமந்தாவும், ஜூ.என்.டி.ஆரும் காதலர்கள். சமந்தாவின் தோழி காஜல் அகர்வாலுக்கு ஊரில் அவசரக் கல்யாணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. காஜலுக்கோ யூ.எஸ். சென்று படிக்க ஆசை. கல்யாணத்தை நிறுத்த அவரது பாய்பிரெண்டாக ஜூ.என்.டி.ஆரை அவரது காதலியே 'ஏற்பாடு' செய்கிறார். ஒரு கட்டத்தில் காஜல் நிஜமாகவே லவ் செய்ய ஆரம்பித்து விடுகிறார். இதனால் விளையும் இடியாப்பச் சிக்கல்களை கிளைமேக்ஸில் அவிழ்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஹீரோவின் பெயர் கிருஷ்ணா. எனவே க்ளைமேக்ஸ் என்னவென்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

இந்தி தேசியப் படங்களில் இந்தியர்கள்-பாகிஸ்தானியர்கள் ஒற்றுமை வலியுறுத்தப்படுவது வழக்கம். இது ஆந்திரத் தேசியப் படமென்பதால் தெலுங்கானா - ஆந்திரப் பிரதேச ஒற்றுமை மறைமுகமாக வலியுறுத்தப் படுகிறது. தனிப்பட்ட மனிதர்கள் சிலரின் ஈகோவால் ஊர் பிரிந்து சண்டையிட வேண்டுமா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பி, இரண்டு ஊரை சேர்த்து வைக்கிறார் ஹீரோ. இந்த ஒற்றுமையின் விளைவாக 'பிருந்தாவனம்' எவ்வளவு மகிழ்ச்சியடைகிறது என்பதை சிலாகிப்போடு சொல்லுகிறது படம். பிருந்தாவனம் எனும் வீடு ஆந்திரப் பிரதேசத்தின் குறியீடு என்று எடுத்துக் கொள்ளலாம்.

வழக்கமான ஜூனியர் என்.டி.ஆர். ஃபைட்டிங்கில் இரத்தவெறியுடனான ஆக்ரோஷம். சுறுசுறுப்பான அதிவேக டேன்ஸூலு. அப்பாவிமுக ரொமான்ஸூலு. "நீதாண்டா ஒரிஜினல் வாரிசு" என்பது மாதிரி ஜூ.என்.டி.ஆருக்கு மட்டுமே பொருந்தக் கூடிய தீவிர குடும்ப அரசியல் டயலாக்குகளுக்கு பஞ்சமேயில்லை. சமந்தாவின் அழகு அபாரமானது. தேவகன்னியர்களை ஒத்தது. குளோசப்புகளில் காணும்போது அவரது அழகான ஆரஞ்சு சுளை உதட்டைப் பிடித்து கொஞ்சத் தோன்றுகிறது. எந்த உடை அணிந்தாலும், இவரால் அந்த உடைகளுக்கு அழகு கூடுகிறது. இவ்வளவு 'யூத்'தான படத்துக்கு சோகமூஞ்சியான காஜல் ஏன் இன்னொரு ஹீரோயின் என்றுதான் புரியவில்லை. அவரது தொப்புளைத் தவிர்த்து அவரிடம் வேறென்ன ஸ்பெஷாலிட்டி என்பதும் தெரியவில்லை.

படத்தின் முதல் பாதி பரபரப்பு. இரண்டாம் பாதி முழுக்க நகைச்சுவை. பட்டையைக் கிளப்பும் பாடல்கள் என, பிருந்தாவனம் - சரியான விகிதத்தில் மசாலா, காரம் தூக்கலாக சமைக்கப்பட்ட ஆந்திரா மெஸ் ஸ்பெஷல் மீல்ஸ்.

14 அக்டோபர், 2010

பரத்தை கூற்று - அனைவரும் வருக!

நண்பரும், படைப்பாளியுமான எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் இப்போது கவிஞராகவும் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறார். அவரது இரண்டாவது நூல்/முதலாவது கவிதைத் தொகுப்பு 'பரத்தை கூற்று' எதிர்வரும் சனிக்கிழமை (16.10.2010) அன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படுகிறது.

இடம் :
டிஸ்கவரி புக்பேலஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர், சென்னை-78.

வரவேற்புரை :
அகநாழிகை பொன்.வாசுதேவன்

புத்தகம் வெளியிட்டு சிறப்புரை :
எழுத்து எந்திரன் சாருநிவேதிதா

நன்றியுரை :
எழுத்தாளர்/கவிஞர் சி.சரவணகார்த்திகேயன்

காமம் தொடர்பான புத்தகம் என்பதால் சாருவின் பேச்சு காமச்சுனாமியாய் தாக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. எனவே உத்தம தமிழ் எழுத்தாளரின் ரசிகர்களும் முக்காடு போட்டுக்கொண்டாவது வந்து கூட்டத்தை ரசிக்கலாம். மாலை 4.50 மணியளவில் 'இலக்கிய ரோபோ சாருநிவேதிதா அகில உலக ரசிகர்மன்றம்' சார்பாக அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகமும் நடைபெறும்.

அனைவரும் வருக!

13 அக்டோபர், 2010

கொட்டையெடுத்த கீபோர்ட் புளி!

பலமுறை பலரால் கொட்டையெடுக்கப்பட்ட கீபோர்ட் புளி ஒன்று பெயரைக் குறிப்பிடாமல் என்னை 'சில்லுண்டி' என்று விளித்து, பதிவிட்டிருப்பதாக சில நண்பர்களுடைய ட்விட்டர் டி.எம்.களால் என்னுடைய இன்பாக்ஸ் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறது. சில்லுண்டியாக இருந்துவிட்டுப் போகலாம். ஆபத்தில்லை. இரட்டை நாக்கும், வஞ்சக நெஞ்சத்தோடே மற்றவர்களை அணுகும் அழுக்கு மனமும் எனக்கு படைக்கப்படவில்லை என்பதற்காக இயற்கைக்கு முதற்கண் நன்றி.

உருப்படாதது நாராயணன், அவருடைய பதிவில் குறிப்பிட்டிருக்கும் என்னுடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இதுதான் : "தமிழ் இணையம் குறைந்தபட்சம் ஒருவனையாவது கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" - இந்த சிந்தனைக்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருந்தாலும் (அவை பெரும்பாலும் ஃபேஸ்புக் தொடர்புடையவை), அது தன்னைத்தான் குறிக்கிறது என்று கீபோர்ட் புளி கருதுமேயானால், 'அது' (அஃறிணையாகதான் எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது நாராயணன், மன்னிக்க) சுயமோகத்தின் உச்சத்தை அடைந்து, கீழ்ப்பாக்கத்தை சென்றடையும் தகுதியைப் பெற்றிருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

அந்த இரட்டை நாக்கு கீபோர்ட் புலியோடு 'கருத்து மோதல்' எனக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் பொதுவாக ஏற்பட்டிருக்கிறது.

1) சாருநிவேதிதா குறித்த அந்த ஜென்மத்தின் இழிமொழிகள்

2) மசாலாப் படம் பார்ப்பவர்களை மடையர்கள் என்று அந்த ஜென்மம் விமர்சிக்கும்போது

இவை இரண்டுமே என் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் நிகழ்ந்த விபத்து என்பதால், இவற்றைப் பற்றி விலாவரியாக எதுவும் விளக்கம் அளிக்கப் போவதில்லை. அவரவர் தேர்வு அவரவர்க்கு.

இந்த கொட்டையெடுத்த புளியை ஓரிரு சந்தர்ப்பத்தில் நேரில் சந்தித்து உரையாடித் தொலைக்க வேண்டிய அபாக்கிய நிலைமை எனக்கு நேர்ந்து தொலைத்திருக்கிறது. அவ்வேளையில் இவரைப் பற்றிய ஒரு அனுமானத்துக்கும் வரமுடிந்தது. இவருக்கு நண்பர்களே இருக்க வாய்ப்பில்லை. இவர் மற்றவர்கள் பேசுவதை கேட்கவே விரும்புவதில்லை. இவர் சொல்லுவதை மற்றவர்கள் எந்த எதிர்கேள்வியும் கேட்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும். செலக்டிவ்வாக கள்ளத்தனப் பேச்சு சுபாவம் கொண்டவர். ஓக்கே. இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு. ஜோசியம் மாதிரி. கொஞ்சம் முன்னே பின்னே உண்மை நிலவரம் இருக்கலாம். ஆனால் இவரோடு பழகிய வேறு சில இணைய துரதிருஷ்டசாலிகளும் கிட்டத்தட்ட இதே மாதிரியான மதிப்பீட்டினை தனிப்பேச்சில் முன்வைக்கிறார்கள்.

கீபோர்ட் புளியின் கடந்தகால செயல்பாடுகளை லீசில் விட்டுவிடுவோம். அவற்றையெல்லாம் புரட்டிப் பார்த்து ரெஃபரென்ஸ் எடுக்க வேண்டுமானால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி நாம்தான் கீழ்ப்பாக்கத்துக்கு செல்ல நேரிடும். எதிர்வினை என்று உளறிவைத்திருக்கும் லேட்டஸ்ட் பதிவிலிருந்தே புளியின் இரட்டை நாக்கை புரிந்துகொள்ள முடியும்.

//என் பதிவுகள் மொக்கை எனத் தெரிந்தும் ஏன் வாசித்து துன்புறுகிறீர்கள், நான் உங்கள் பதிவுகளை புறக்கணித்து விட்டு செல்வதைப் போல் புறக்கணித்து செல்வதுதானே என்கிற என் கேள்விக்கு அவர் இதுவரை முறையான பதிலளித்தது போல் தெரியவில்லை. // என்று ரோஸாவசந்தைப் பார்த்து கேட்கிறார்.

ஆனால், அதற்கு சில பாராக்களுக்கு முன்பாக //இணையத்தில் இதுவரை இத்தனை கடுமையான மொழியை நான் உபயோகித்திருப்பது சாருவைக்குறித்துதான். வாசகர்களை ஆபாசமான மொழியிலும் சக எழுத்தாளர்களை வன்மத்துடன் தொடர்ந்து எழுதும் சாருவின் முன்னால் வைக்கும் என்னுடைய எதிர்ப்பு அரசியல் அது.// என்றும் எழுதித் தொலைக்கிறார்.

என்ன கருமம் அய்யா இது?

நம் புளி தினமும் சாருவைப் படித்துவிட்டு ஜீரணம் ஆகாமல் எதையாவது கழிந்து வைப்பாராம். ஆனால் ரோஸா மட்டும் இவரது கழிவுகளை புறக்கணித்து செல்ல வேண்டுமாம். ரோட்டில் செல்லும்போது, தெருவோரம் யாராவது கழிந்து வைத்திருந்தால் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டுதான் போவோம். ஏன் மூக்கைப் பொத்துகிறாய்? இங்கேதான் கழிந்து வைத்திருக்கிறோமே? வேறு வழியாகச் செல்ல வேண்டியதுதானே? என்று கேட்பது என்ன மாதிரியான லாஜிக் என்று தெரியவில்லை.

//ரோசாவின் பதிவுகளை நான் பொருட்படுத்தி வாசிப்பதோ பின்னூட்டம் இடுவதோ கிடையவே கிடையாது.//

//ரோசாவிற்காவாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பொருட்படுத்தி பதிலளிக்கலாம்.//

எப்படி இப்படி முன்னுக்குப் பின்னாக ஒரே பதிவில் ஒரு மனிதரால் எப்படி முரண்பட முடியுமென்று தெரியவேயில்லை.

உண்மையில் ரோஸாவசந்த் குறித்தெல்லாம் இவ்வளவு வன்மமாக இந்த கீபோர்ட்புளி எழுதும் அளவுக்கு தகுதியோ, தராதரமோ கொண்டவர் அல்ல. ரோஸாவசந்த் இணையத்தில் இதுவரை அவர் சந்தித்தவர்களில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு விஷயத்தில் முரண்பட்டே வந்திருக்கிறார். அதுகுறித்த சூடான விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார். ஆயினும் எங்கேனும் நேரில் சந்திக்க நேர்ந்தால் ஒரு அபாரமான புன்னகையோடு, அதே நபர்களை எதிர்கொள்ளும் பேராண்மை வாய்த்தவர். இந்த உம்மணாம் மூஞ்சி மாதிரி முகத்தை திருப்பி வைத்துக் கொள்ளும் மூணாங்கிளாஸ் மனோபாவம் அவரிடம் இல்லவே இல்லை. யார் யாரை என்ன சொல்லித் திட்டுவது என்று விவஸ்தை கிடையாதா?

"புறக்கணித்து விட்டு செல்வதுதானே?" என்று சுலபமாக கேட்கும் ஜென்மம், எந்திரன் விவகாரத்தில் எப்படி நடந்துகொண்டார் என்பதை தமிழிணையம் அறியும். படம் பார்த்தவர்கள் கூட ஒரு விமர்சனப் பதிவோடு நிறுத்திக் கொண்டபோது, நம்முடைய கீபோர்ட் புலி ஐந்து பதிவுகளை வரிசையாக அடித்துவிட்டு ஹிட்ஸ் தேத்திக் கொண்டார். ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த நல்லவர், எந்திரனை கமுக்கமாக புறக்கணித்துவிட்டு போயிருக்க வேண்டியதுதானே? நியாயம், நேர்மை பேசிவிட்டு திருட்டு டி.வி.டி.யில் படம் பார்ப்பவர்களிடம் வேறு என்னத்தை எதிர்ப்பார்க்க முடியும்?

என்னுடைய அவதானிப்பில் அவருடைய உளவியல் பிரச்சினையாக இதைத்தான் பார்க்கிறேன். "இவ்வளவு அருமையாக எழுதுகிறோமே? நம்மை ஏன் யாரும் படிப்பதில்லை, பின்னூட்டம் போடுவதில்லை" என்று பல்லாண்டுகளாக அவராகவே மனதுக்குள் புழுங்கித் தவிக்கிறார். அவனவன் மொக்கையாக எழுதுவதற்கு கூட 100, 200 பின்னூட்டம் வருகிறதே என்று பொறாமைப் படுகிறார். உண்மையில் அவரைப்போல எழுதுவது மகா எளிது. எந்தவித நடைமுறை வாழ்வியல் அனுபவமும் இல்லாமல் பத்து மாத காலச்சுவடையும், ஆறுமாத உயிர்மையையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, 'இலக்கிய' மொழியில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் 'நல்ல' தமிழில் எழுதிவிட முடியும்.Content is the king. மாஸ் ஆடியன்ஸை address செய்பவர்களுக்கு நல்ல மொழி கூடத் தேவையில்லை. Interesting Content சுமாரான தமிழில் இருந்தாலே போதுமானது.

புளியிடம் அது சுத்தமாக கிடையாது. அது தேவையென்றால் ரோட்டில் இறங்கி நடக்க வேண்டும். ஒரு அடி ரோட்டுக்கு மேலே பறந்தவாறு சென்று கொண்டிருப்பவர் இப்படியான இடியாப்பங்களைதான் சுடமுடியும். புதியதாக படிப்பவர்கள் "நல்ல பதிவு, நல்ல மொழியாளுமை" என்று ஆரம்பத்தில் பின்னூட்டம் போடுவார்கள். தொடர்ச்சியாக இதே மாதிரி நான்கைந்து இடியாப்பங்களை வாசித்தவர்கள் அஜீரணம் ஆகி சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவிடுவார்கள்.

எனவேதான் நம் கீபோர்ட் புளி, அடிக்கடி யாரையாவது வம்புக்கு இழுத்து, தான் லைம்லைட்டிலேயே இருப்பதாக கருதிக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறது. இது எக்ஸிபிஸனிஸ மனநிலை. //சாருவிற்குப் பிறகு நான் இத்தனை கடுமையாக எழுதியது ரோசாவைக் குறித்தான்// என்று அப்பட்டமாக புளுகுகிறது. உதாரணமாக அகில உலக அப்பாவி மன்றத் தலைவரான ஆசிஃப் அண்ணாச்சியிடம் கூட ஒருமையில் இவர் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டார் என்பது பலருக்கும் தெரியும். "நான் ஊரில் இருப்பவனையெல்லாம் திட்டுவேன், என்னை யாராவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் தாங்கமாட்டேன்" என்று நினைப்பது மனநோயின் ஆரம்பக்கட்ட மனநிலையாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்களில் இரண்டே இரண்டு வகைதான் உண்டு. ஆபத்தானவர்கள், ஆபத்தற்றவர்கள். கீபோர்ட் புளி முந்தைய வகையைச் சேர்ந்தது. ஏற்கனவே கீரப்பட்டவர்கள் ஏராளம். மற்றவர்களாவது உணர்ந்து தெளியவேண்டும்.

எதிர்வினையெல்லாம் எழுதித் தொலைத்து மாமாங்கமாகிறது. எனவேதான் கொஞ்சம் இப்பதிவில் சூடும், காரமும் குறைவாக இருக்கிறது. நாமென்ன தினமும் புளியை மாதிரி எவரிடமாவது சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமா என்ன? இந்தப் புளி சீரியஸில் இதுதான் முதலும் கடைசியுமான பதிவு. கீபோர்ட் புளி ரிட்டர்ன்ஸெல்லாம் கண்டிப்பாக வரவே வராது. ஏனெனில் நிஜமாகவே கடந்த சில காலமாக வேலை கொஞ்சம் டைட்.

12 அக்டோபர், 2010

விதை புதுசு! விளைச்சல் அமோகம்!!

பிரகாஷ்சிங் ரகுவன்ஷி. ஒரு சிறு விவசாயி. வாரணாசிக்கு அருகில் தாண்டியா என்ற பகுதியைச் சார்ந்தவர். உத்தரப்பிரதேச மாநிலம். விதையை விதைத்தோமா, அறுவடை செய்தோமா என்றில்லாமல் பிரகாஷ்சிங்குக்கு ஒரு தேசிய இலட்சியம் இருந்தது. தான் பிறந்த நாடு உணவுப் பாதுகாப்போடு விளங்க வேண்டும். உணவு பற்றாக்குறையால் ஒரு உயிர் கூட இங்கே பறிபோகக் கூடாது.

சிறுவயதில் பிரகாஷ் ஒரு சூட்டிகையான மாணவன். கல்வியில், விளையாட்டில் அவர்தான் நெம்பர் ஒன். ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது அவருக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சலுக்கு மருத்துவர்களால் கொடுக்கப்பட்ட மருந்து அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அலர்ஜி ஏற்பட்டு உடல்முழுக்க ஏகப்பட்ட உபாதைகள். கிட்டத்தட்ட கண்பார்வை பறிபோயிற்று.

பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு ஓரளவுக்கு பார்வை திரும்பியது. ஆனாலும் இன்றும் கூட அவருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. வாய்ப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில்தான் வாழ்கிறார். "வலிகளோடு வாழ பழகிக் கொண்டேன்" என்கிறார் பிரகாஷ். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கண்கூசுகிறது என்பதால், எப்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார். வெயில் தலையில் படும்போது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது. எனவே தலையை தொப்பி அல்லது துண்டு போட்டு மூடிக்கொண்டுதான் வீட்டை விட்டு வெளியே வரமுடியும்.

அப்போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரால் மீளவே முடியாது என்று எல்லோரும் நினைத்தார்கள். திரும்பவும் பள்ளிக்கு திரும்பமுடியாத அளவுக்கு உடல்நிலை மோசம்தான்.

பிரகாஷின் அப்பா ஆரம்பப்பள்ளி ஆசிரியர். சிறுவிவசாயியும் கூட. பள்ளிக்கு செல்ல முடியாத காலங்களில் அப்பாவின் விவசாய நிலத்துக்கு சென்று பொழுதை போக்குவார். இயற்கையை நேசிக்கும் மனம் அவருக்கு இயற்கையாகவே வாய்த்திருந்தது. பச்சை வயல்களை பார்ப்பதிலும், குளுமையான வாசனையான வயற்காற்றை ரசிப்பதிலும் பிரகாஷின் காலம் கழிந்தது.

அடிக்கடி வயலுக்கு சென்று வந்ததில் சில விஷயங்களை அவரால் அவதானிக்க முடிந்தது. ஆரம்பத்தில் செழிப்பாக வளரும் பயிரைக் கண்டு, விளைச்சலை அனுமானிக்க முடியும். ஆனால் எங்கோ தப்பு நடந்து கொண்டிருந்தது. தொடர்ச்சியாக விளைச்சல் என்னவோ சுமார்தான். தொடர்ச்சியாக இதை கவனித்து வந்ததில் பிரகாஷுக்கு விவசாயம் குறித்த ஆர்வம் அதிகரித்தது. பிரச்சினை விவசாயியின் உழைப்பிலோ, நிலத்திலோ இல்லை. விதைக்கப்படும் விதைகளில்தான் என்று கண்டறிந்தார்.

சோதனை முறையில் ஒரு சிறிய நிலத்தில் ஒரே பயிரின் பல்வேறு வகை விதைகளை விதைத்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். ஓராண்டு ஆய்வுக்குப் பிறகு நல்ல விளைச்சலைக் கொடுக்கக்கூடிய விதைரகத்தை தானே உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. விவசாயம் தொடர்பான கண்காட்சிகளில் பங்கு கொண்டார். நிறைய விஞ்ஞானிகளையும், வேளாண்மை தொடர்பான அரசு அதிகாரிகளையும் சந்தித்து விவசாயம் தொடர்பான தனது அறிவினை வளர்த்துக் கொண்டார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த பேராசிரியர் மகாதிம்சிங், புதுரக விதைகளை இவர் கண்டறிய பின்னணியில் இருந்து ஊக்குவித்து வந்தார். தான் கண்டறிந்த புதுவகை விதைகளுக்கு பெரும்பாலும் 'குத்ரத்' என்றே பெயர்வைத்தார் பிரகாஷ். இச்சொல்லுக்கு இயற்கை என்று பொருள். கரிஷ்மா என்ற பெயரையும் சில விதைரகங்களுக்கு சூட்டியிருக்கிறார்.

'குத்ரத்' வகை விதைகளின் சிறப்பு என்ன?

நெல், கோதுமை, காய்கறிகள் என்று எல்லாவகைகளுக்கும் புதுவகை விதைகளை பிரகாஷ் கண்டறிந்திருக்கிறார். இவற்றின் சிறப்பு அமோக விளைச்சல். உதாரணத்துக்கு ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் குத்ரத் நெல், 25 முதல் 30 குவிண்டால் வரை விளைச்சலை கொடுக்கும். கோதுமை விதை, 18 முதல் 20 குவிண்டால் வரையிலான விளைச்சலை தரும். சாதாரணமாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் விதைகளைவிட கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகமான விளைச்சலை குத்ரத் தருகிறது. இத்தனைக்கும் ரசாயனக் கலப்பில்லாத முழுக்க இயற்கை விவசாய முறையிலான விதைகள் இவை. கோதுமையில் மட்டும் 80 ரகங்கள், நெல்லில் 25 ரகங்கள், இன்னமும் மற்ற விவசாயப் பொருட்கள் பலவற்றுக்கும் ஏராளமான விதைரகங்களை உருவாக்கியிருக்கிறார்.

கண்டுபிடிப்போடு முடிந்துவிடுவதில்லை பிரகாஷின் பணி. தான் கண்டறிந்த விதைகளை, 14 மாநிலங்களுக்கு பயணித்து சுமார் 20 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாகவே வழங்கியிருக்கிறார். பனாரஸுக்கு அருகிலிருக்கும் தனது 15 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை குறித்த பயிற்சிகளையும் விவசாயிகளுக்கு வழங்குகிறார். நம் பாரம்பரிய விதை வகைகளை பாதுகாப்பதும், பரவலாக்குவதும் அவரது முக்கிய நோக்கம்.

ஆகமதாபாத்தைச் சேர்ந்த தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் இவரது முயற்சிகளுக்கு பெரியளவில் ஒத்துழைப்பு தந்துவருகிறது. ஆராய்ச்சிகளுக்கு பணரீதியிலான உதவி மற்றும் நாடு முழுக்க இருக்கும் விவசாயிகளை சந்திக்க பயணவசதி என்று இந்நிறுவனம் இவருக்கு உதவிவருகிறது.

பிரகாஷ்சிங்குக்கு 3 மகன்கள், 3 மகள்கள். மகள்கள் அனைவரும் நன்கு படித்திருக்கிறார்கள். அப்பாவோடு சேர்ந்து விவசாய விழிப்புணர்வுப் பணிகளில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிய அளவிலான கண்டுபிடிப்புகளுக்கான விருதினை இருமுறை வென்றிருக்கிறார். ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் கலாமிடமும், ஒருமுறை தற்போதைய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டிலிடமும் இவ்விருதுகளை பெற்றார்.

ஒருமுறை புனேவுக்கு இவரது விதைரகங்களோடு விவசாயிகளை சந்திக்க சென்றார். அங்கிருந்த ஒரு விவசாயி, "ஷிர்டி சாயிபாபாவே உங்களை இங்கே எங்களை வாழவைக்க வரவழைத்தாக நினைக்கிறேன்" என்றாராம்.

"இதைவிட பெரிய பேறு எனக்கென்ன வேண்டும்" என்கிறார் பிரகாஷ்.

 
பிரகாஷ்சிங் கண்டறிந்த விதைரகங்களின் மாதிரியை (100 கிராம், 500 கிராம் பாக்கெட்டுகளில்), அவருக்கு கடிதம் எழுதி பெறலாம். அவரது முகவரி :
Praksh Singh Raghuvanshi 
Village Tadia, Post Jakhini, Dist. Varanasi, U.P. 
Mobile: 09956 941993
E-mail : kudaratraghuvanshi@hotmail.com.

(நன்றி : புதிய தலைமுறை)