9 டிசம்பர், 2010

ராஜா மாதிரி வாழணும் தம்பி..


மதுரை. புதுநத்தம் ரோடு. பாண்டி ஓட்டல் பின்புறம். பெருமழைக்கு முன்பான சுரீர் வெயில். நாக்கு வறண்டுப்போய் இருசக்கர வாகனத்தை நாம் ஓரங்கட்டியது ஒரு இளநீர் கடை முன்பு. கூரை வேய்ந்திருந்த கடையில் விற்பனை 'தூள்' பறந்து கொண்டிருந்தது.

"செவ்விளநியா பார்த்து ஒண்ணு வெட்டிக் கொடுங்கண்ணேய்"

"எளநி நிறைஞ்சிருக்குறா மாதிரி ஒரு வழுக்கையைப் போடுங்கண்ணேய்"

"பாதி எளநி, பாதி தேங்காய் இருக்குறதா பார்த்து ஒண்ணு வெட்டிக் கொடுங்கண்ணேய்" – வயசு வித்தியாசமில்லாமல் 'மதுர'யில் எல்லாருமே அண்ணேய்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.

ஒரு இளநீரை உறிஞ்சிக்கொண்டே வியாபாரியை நோட்டமிட்டோம். ஏதோ ஒரு வித்தியாசம். குடித்து முடித்து நூறு ரூபாய் நோட்டை நீட்டினோம்.

தடவிப் பார்த்து வாங்கியவர், "நூறு ரூவாய்ங்களா தம்பி?" என்று கேட்டு, பணப்பெட்டியில் இருந்து மீதி எண்பத்து ஐந்து ரூபாயை கச்சிதமாக எடுத்துக் கொடுத்தார்.

ஆம். இளநீர் வியாபாரம் செய்யும் ராஜா பார்வை சவால் கொண்டவர். முற்றிலுமாக பார்வை தெரியாது. நன்றாக பார்க்க கூடியவர்களுக்கே இளநீர் வெட்டித் தருவது சவால் தரும் வேலை. வாடிக்கையாளர் கேட்கும் வகையில் நல்ல இளநீரை 'பார்த்து' எடுக்க வேண்டும். 'பார்த்து' வெட்டித் தர வேண்டும். கூர்மையான கத்தி. கொஞ்சம் தடுமாறினாலும் விரல்கள் எகிறிவிடும்.

ராஜா எப்படி சமாளிக்கிறார்?

"1974ல் இந்த வியாபாரத்தை ஆரம்பிச்சேனுங்க. இப்போ 54 வயசு ஆவுது. அப்போவெல்லாம் நல்லாதான் பார்வை தெரிஞ்சுது. கொஞ்ச வருஷத்துலே சாயங்காலத்துலே மட்டும் கண்ணு மங்கும். சரியா கவனிக்காமே விட்டுட்டேன்.

திடீர்னு பார்த்தா கொஞ்சம் கொஞ்சமா மங்கி சுத்தமா பார்வை தெரியாம போயிடிச்சி. பார்வை இல்லாதவங்க குறிப்பிட்ட சில வேலைகளைதான் செய்வாங்க. எனக்கு அந்த வேலை எதுவும் தெரியாது. தெரிஞ்ச வேலையை அப்படியே இத்தனை வருஷமா தொடர்ந்துட்டேன். 'கண்ணு பார்க்குது, கை செய்யுது' ஒரு பழமொழி சொல்வாய்ங்க. நான் முப்பது வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன், இப்பவும் செய்யுறேன். எங்கிட்டே இளநி வாங்கி குடிக்கிறவங்களுக்கு மத்த கடைக்கும் இந்த கடைக்கும் எந்த வித்தியாசமும் தெரியலையே?" என்கிறார்.

இளநீர் வெட்டித் தருவது மட்டுமல்ல. வண்டியை வாடகைக்கு பிடித்து தோப்புகளுக்குச் சென்று சரக்கு கொள்முதல் செய்வது வரை இவரே செய்கிறார். வியாபாரத்தில் உதவிக்கு அவ்வப்போது இவருடைய மனைவியும், அண்ணன் மகனும் வருவதுண்டு.

ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள். உறவினர் வீட்டில் படிக்கிறார்கள். வீரபாண்டி ரோடு, ஊமச்சிக்குளத்தில் குடிசை வீடு. "எங்க அக்கம் பக்கத்து வீடுங்களுக்கு எல்லாம் இலவசப் பட்டா கொடுக்க எழுதிக்கிட்டுப் போயிருக்காங்க. நாங்க வியாபாரத்துக்குப் போயிட்டதாலே எங்க பேரு லிஸ்ட்டுலே சேர்க்க முடியலை" என்று இருப்பிடப் பிரச்சினையை சொல்கிறார் ராஜாவின் மனைவி.

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் இளநீர் வியாபாரம் நன்கு சூடு பிடிக்கும். மற்ற மாதங்களில் கொஞ்சம் 'டல்'தான். மழைக்காலங்களில் சுத்தம். கோடையில் சேமித்து, மழையில் உண்ணும் எறும்பு பாணி வாழ்க்கை. குடும்பப் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ராஜாவின் மனைவி வீட்டுவேலை செய்கிறார்.

ராஜாவுக்கு பார்வை இல்லை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு வேண்டிய வகையை கையால் தடவிப் பார்த்தே, உணர்ந்து எடுத்துத் தரும் அனுபவ ஆற்றல் ராஜாவுக்கு வாய்த்திருக்கிறது. இளநீர் குடிக்க ராஜா கடையை தேடி வரும் ரெகுலர் கஸ்டமர்களும் உண்டு.

இந்த வியாபாரத்தில் அவருக்கு ஒன்றே ஒன்றுதான் பிரச்சினை. அதிகாரப் பதவியில் இருக்கும் சிலர். அவ்வப்போது கடைக்கு வந்து ஓசியில் இளநீர் குடித்துவிட்டு போவார்கள். இருபத்தைந்து ரூபாய்க்கு இளநீர் குடித்துவிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டுவார்கள். "சாரு யாருன்னு தெரியுமில்லே.. ரவுண்ட்ஸ் வர்றப்போ கடை இருக்காது!" என்று மிரட்டுவார்கள். சில நேரங்களில் எந்த முன்னறிவிப்புமின்றி வந்து கடையை பிய்த்துப் போட்டுவிட்டு போவார்கள்.

"எந்த வியாபாரத்துலேதான் தம்பி பிரச்சினை இல்லை? பிரச்சினைக்குப் பயந்தா வாழ முடியுமா? பார்வைதானே போச்சி. கைகால் நல்லாதானே இருக்கு. ராஜான்னு எனக்கு பேரு வெச்சிருக்காங்க. ராஜா மாதிரி வாழ்ந்து காட்டணுமில்லை?"

ராஜா கடையில் இளநீரை காசுக்கும், தன்னம்பிக்கையை இலவசமாகவும் வாங்கிக் கொண்டு வண்டியை எடுத்தோம். வெயிலின் வாட்டம் குறைந்திருந்தது.

(நன்றி : புதியதலைமுறை)

8 டிசம்பர், 2010

‘டாவோ’ ஒரு கலங்கரை விளக்கம்

சேவைத்துறையில் ஈடுபட்டிருக்கும் அரசுசாரா நிறுவனங்களை NGO (Non Government Organisation) என்கிறார்கள். இதைப்போலவே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைப்பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களை DPO (Disabled People Organisation) என்பார்கள். தமிழகத்தில் ஏராளமான என்.ஜி.ஓ.க்கள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், டி.பி.ஓ.க்கள் மட்டுமே முழுக்க முழுக்க அவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக திட்டப் பணிகளை முன்னெடுப்பவை.

எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கப்போனால் என்.ஜி.ஓ.க்களை ஒப்பிடும்போது டி.பி.ஓ.க்கள் மிக மிகக் குறைவு. கேலிபர், ஆர்விக், அக்‌ஷயா போன்ற சில அமைப்புகள் தமிழக அளவில் டி.பி.ஓ.க்களாக சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்திலேயே அதிகளவில் (சுமார் 1,14,000) மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் மாவட்டம் என்பதால், கோவையை தலைமையகமாக கொண்டு இவர்களுக்கான அமைப்புகள் பலவும் இயங்குகின்றன.

இதுபோன்ற தன்னார்வ சேவை நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு கோவையில் இருந்து செயல்பட்டு வருகிறது. டாவோ (DAVO - Disability Alliance of Voluntary Services) என்று அவ்வமைப்புக்கு பெயர்.  மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக தன்னார்வு சேவை நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள, பயனர்களை அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு அமைப்பு இது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படும் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் சர்வதேச சேவை நிறுவனங்களிடம் வலியுறுத்துவதும் இவ்வமைப்பின் தலையாய பணிகளில் ஒன்று.

டாவோ அமைப்பின் கீழ் இயங்கும் UDIS (You and the Disabled) மன்றம் பல்வேறு செயல்பாடுகளை மாற்றுத்திறனாளிகளுக்காக செய்து வருகிறது.

 "மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக ஹெல்ப்லைன் ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலரும் இந்த வசதியை பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள்" என்கிறார் இம்மன்றத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் சூரிய நாகப்பன்.

இந்த ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்பவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய - மாநில திட்டங்கள்,  பல்வேறு அமைப்புகளின் கல்வி மற்றும் இதர சேவைகள் ஆகியவை குறித்து வழிகாட்டப்படுகிறது. இவை மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை எப்படி பல்வேறு தளங்களில் இருந்து பெறுவது என்பதும் சொல்லித்தரப்படுகிறது. மறுவாழ்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகள் என்று எதைப்பற்றி கேட்டாலும் இங்கே நிச்சயம் பதில் கிடைக்கும்.

 
UDIS ஹெல்ஃப் லைன் எண்கள் :

0422 2405551 / 0422 2648006 (அல்லது) 99445 56168

(நன்றி : புதிய தலைமுறை)

27 நவம்பர், 2010

நந்தலாலா


'நந்தலாலா' வெளிவருவதற்கு ஒரு மாதம் முன்பாக ஒரு கூட்டத்தில் மிஸ்கின் பேசினார். "நான் முதலில் எடுத்த இரண்டு படங்களும் படமே அல்ல. நந்தலாலாதான் முதல் படம்". என்ன ஒரு ஆணவமான பேச்சு? இவரென்ன அவ்வளவு பெரிய டபாடக்கரா என்று நினைத்தேன். ஜெயமோகன் ஒரு படி மேலே போய் 'தமிழின் முதல் படம்' என்கிற அளவுக்கு சொல்கிறார். படம் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. இருவரின் கூற்றும் 100 சதவிகிதம் உண்மை.

அவதார் விமர்சனத்தின்போது சாரு எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. மனிதன் முதன்முதலாக திரையில் படத்தை கண்டபோது என்ன ஆச்சரியம் அடைந்தானோ, அதே ஆச்சரியம் 'அவதார்' காணும்போதும் ஏற்படுகிறது.

எனக்கு 'நந்தலாலா'வை காணும்போது அந்த ஆச்சரியம் ஏற்பட்டது. இதுவரை இந்தியத் திரையுலகில் யாரையெல்லாம், எதையெல்லாம் உச்சம் என்று நினைத்தோமோ, அத்தனை உச்சங்களையும் அனாயசமாக தாண்டியிருக்கிறது 'நந்தலாலா' குழு. இளையராஜாவின் இசை ஆயிரம் ஆஸ்கர்களுக்கு தகுதியானது.

சாகாவரம் பெறப்போகும் மாபெரும் காவியத்தை விமர்சிக்குமளவுக்கு அறிவோ, அருகதையோ நமக்கு இல்லை.

சில பகிர்தல்கள் :

பத்திரிகையாளரான அண்ணன் அருள் எழிலன் ஆட்டோ ஓட்டுனராக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பைக் காட்டிலும், அவரது குரல் வசீகரமானது. தோழர் லிவிங் ஸ்மைல் வித்யா, இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

அழகியல் இயக்குனர் டிராட்ஸ்கி மருது. இவருடைய ஸ்டோரி போர்ட் படத்தின் தீம் மற்றும் டோனை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்கிறது.

12 வினாடிகள் மட்டுமே தோன்றினாலும் திரைக்கதையில் திருப்பம் கொடுக்கும் பாத்திரத்தில் நாசர்.

80களில் தமிழ் சினிமாவில் வாயாடிப்பெண்ணாக பெயரெடுத்த ரோகிணிக்கு ஒரு வசனம் கூட இல்லை.

சில காட்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டால், நம் உயிர் பிரிந்து இறகாய் மாறி காற்றில் பறப்பதை உணரலாம்.

படத்தில் இரட்டை ஹீரோக்கள். மிஷ்கின் மற்றும் சிறுவன் அஸ்வத்.

தமிழ் லேண்ட்ஸ்கேப்பை அதன் அப்பட்டமான அழகியல் பண்போடு, அனுபவித்து காட்சியாக்கி இருக்கிறார்கள்.

அன்பும், முரட்டுத்தனமும் மிகுந்த ஏராளமான முகங்கள் படம் நெடுகிலும்.

சினிமாஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தை முதன்முறையாக உருப்படியாக பயன்படுத்தியிருக்கும் தமிழ்ப்படம்.

படத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது 'ஸ்பாய்லர்' ஆகிவிடுமோவென்று அச்சமாக இருக்கிறது. மார்கழி மாச இரவுநேரப் பேருந்துப் பயணத்துக்கு ஒப்பான 'சிலீர்' அனுபவத்தை தருகிறது நந்தலாலா. கட்டாயம் பாருங்கள்.

இது இந்திய சினிமாவின் மகத்தான படங்களில் ஒன்று.

26 நவம்பர், 2010

மந்திரப் புன்னகை, மகிழ்ச்சி, மைனா!


மந்திரப் புன்னகை


கிறிஸ்டபர் நோலன் மாதிரி தமிழில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற கரு.பழனியப்பனின் கனவு நியாயமானது. அதற்காக அவரே ஹீரோவாக நடித்திருக்க வேண்டாம். இந்தப் படத்தில் சேரன் நடித்திருந்தால் கூட தாங்கிக் கொண்டிருக்கலாம். உச்சபட்ச நடிப்பு உழைப்பு தேவைப்படும் கதாபாத்திரத்துக்கு தன்னையே எப்படி இயக்குனர் தேர்வு செய்திருக்கிறார் என்று புரியவில்லை.

தனித்தனி காட்சிகளாக யோசித்துப் பார்க்கும்போது நிச்சயமாக மந்திரப் புன்னகை ஒரு பக்காவான விஷூவல் ட்ரீட். ரிச்சாக படம் பிடித்திருக்கிறார்கள். திரைக்கதை வசனத்துக்கு அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்கள். உடல் உழைப்பைவிட மூளை உழைப்பு அதிகமாக செலுத்தப்பட்டிருக்கிறது.

சினிமாவில் 'கதை ட்ராவல் பண்ணனும்' என்று அடிக்கடிப் பேசுவார்கள். மந்திரப் புன்னகையில் அந்த ட்ராவல் சரியாக செய்யப்படவில்லை என்று தோன்றுகிறது. ஒரு காட்சிக்கும், அடுத்த காட்சிக்குமான தொடர்புச்சங்கிலி சரிவர பிணைக்கப்படவில்லை. பிற்பாடு கிளைமேக்ஸுக்கு முன்பாக இக்காட்சிகளுக்கெல்லாம் 'லாஜிக்' தருகிறார்கள். ஆனால் அதுவரை படம்பார்த்து ஏற்பட்ட அலுப்பினால் "எப்போதான் எண்ட் கார்ட் போடுவார்களோ?" என்று ஆயாசப்பட வைக்கிறது.

நடிப்பாசையை ஓரங்கட்டி வைத்துவிட்டு, மிகச்சிறந்த இயக்குனராக பழனியப்பன் அடுத்தடுத்து சிறப்பான படங்களை இயக்க வேண்டும் என்பதே நம் வேண்டுதல்.

 

மகிழ்ச்சி

இன்னொரு இயக்குனர் ஹீரோ ஆகியிருக்கிறார். எந்த ஹோம் ஒர்க்குமின்றி நேராக ஷாட்டுக்குப் போய் "ரெடி. ஸ்டார்ட்" சொல்லி நடித்திருப்பார் போலிருக்கிறது. கவுதமனின் ரொமான்ஸ், டான்ஸ் சகிக்கவில்லை.

1990லேயே காலாவதி ஆகிவிட்ட குடும்பக்கதை. சம்சாரம் அது மின்சாரம் காலக்கட்டத்தில் வந்திருந்தால் ஒருவேளை ஓடியிருக்கும். நீல.பத்மநாபன், 'தலைமுறைகள்' எழுதிய காலத்தில் செல்போன் இல்லை என்பதால், இப்போது படமெடுக்கும் போதும் அது இருக்கக்கூடாதா? சமகால நாகரிகத்தின் சுவடுகள் சுத்தமாக தென்படாத படம் 'மகிழ்ச்சி'.

எல்லா வகையிலும் துன்பத்தை தரும் 'மகிழ்ச்சி'யில் இரண்டே இரண்டு ஆறுதல்கள். ஒன்று வித்யாசாகரின் இசையில் பாடல்கள். இரண்டு செந்தமிழன் சீமான்.

சமீபத்தில் நடிக அவதாரம் எடுத்திருக்கும் இயக்குனர்களில் மிகச்சிறப்பாக நடித்து வருபவர் சீமான். கோபக்கார தலித் இளைஞன் பாத்திரத்துக்கு கச்சிதமாக, கம்பீரமாக பொருந்துகிறார். இயல்பாகவே சிடுமூஞ்சியாக அமைந்துவிட்ட தோற்றம் இவருக்கு வாய்த்திருக்கிறது என்றாலும், எப்போதாவது அத்தி பூத்தாற்போல அபூர்வமாக சிரிக்கிறார். அறிஞர் அண்ணா, வைகோ பாணியிலான ஆண்மையான சிரிப்பு. கேமிராவுக்கு முன்பாக நடிக்கிறோம் என்கிற உணர்வில்லாமல் மிக யதார்த்தமாக இருக்கிறார். தொடர்ச்சியாக நடித்தால் மிகச்சிறந்த எதிர்காலம் இத்துறையில் சீமானுக்கு உண்டு.

மறுமணம், கலப்புமணம் ஆகியவற்றின் அவசியத்தை, கதையின் போக்கில் எந்த நெருடலும் வராமல் சொல்லியிருப்பதற்காக 'மகிழ்ச்சி' கொள்ளலாம்.

 

மைனா

பருத்தி வீரன் க்ளைமேக்ஸை பார்த்த வினாடியே இக்கதை இயக்குனருக்கு தோன்றியிருக்கலாம். தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைக்கப் போகும் படமென்றெல்லாம் சில விமர்சகர்களால் சொல்லப்படுவது கொஞ்சம் அதீதம் என்றே தோன்றுகிறது. 'மைனா'வும் ஒரு நல்ல படம். அவ்வளவுதான்.

ஒரு ஜெயில் சூப்பரெண்டின் பார்வையில் படம் தொடங்கும்போது, சீட்டில் இருந்து நிமிர்ந்து உட்கார்கிறோம். நல்லநாள், கெட்டநாள் பாரபட்சமின்றி அரசு அலுவலர்கள் சந்திக்க நேர்கின்ற பிரச்சினைகள் என்கிற ஐடியா வித்தியாசமானது. இந்த அதிகாரிதான் படத்தின் ஹீரோ என்று சித்தரிக்கப் பட்டிருந்தால் படத்தின் 'டிராவல்' உச்சத்தைத் தொட்டிருக்கும்.

துரதிருஷ்டவசமாக 'கைதி' பாத்திரம் நாயகனாக முன்மொழியப் படுகிறது. 'பருத்தி வீரன்' பாணி காதல், கசுமாலமென்று 'மைனா' வழக்கமான படம் ஆகிவிட்டது. முப்பது வயது மதிக்கத்தக்க முதிர்தோற்ற நாயகன், கொஞ்சும் இளமையோடு நாயகி (அப்போதுதான் வயசுக்கு வருகிறார்) என்று பாத்திரத்தேர்வு கடாமுடாவென்று இருக்கிறது.

இசை, ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் என்று எல்லா வகையிலுமே படத்தின் தொழில்நுட்ப செய்நேர்த்தி அபாரம். இயக்குனர்-கம்-காமெடி நடிகரான தம்பி ராமையா, யாருமே எதிர்ப்பார்க்கா வண்ணம் குணச்சித்திர நடிகரான அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். க்ளைமேக்ஸுக்குப் பின்னான, இன்னொரு க்ளைமேக்ஸுக்கு தியேட்டர் முழுக்க கைத்தட்டல்களால் அதிர்கிறது.

மைனா – மனசை தொடுகிறது.

25 நவம்பர், 2010

2011 – கவுண்ட் டவுன் ஸ்டார்ட்டிங்

இன்னும் சரியாக ஆறு மாதங்கள் கூட இல்லை தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு. பொதுவாக ஒரு வருடத்துக்கு முன்பாகவே ஓரளவு யார் யார் எந்த எந்த கூட்டணி என்று ஒரு தெளிவு தெரியும். 2006ஆம் ஆண்டின் வைகோவின் இறுதி நிமிட தாவல், பாமகவின் கிளைக்கு கிளை தாவும் ஆட்டமெல்லாம் இதில் சேர்த்தியில்லை. அதுபோலவே வேட்புமனுவுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்காக ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்த கூட்டணியில் சேரும் சாதிக் கட்சிகளையும் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. நாம் சொல்ல வருவது முக்கியப் பங்காளி (Major Partner) கட்சிகள்.

'கூட்டணி' என்ற சொல் தமிழக அரசியலில் 67ல் இருந்தே முக்கியத்துவம் பெறுகிறது. அறிஞர் அண்ணாவின் வெற்றிக்கு அவர் அதிரிபுதிரியாக அமைத்த ஒரு கூட்டணியும் முக்கியக் காரணியாக இருந்தது. 72ல் காங்கிரஸ் உடைந்த நிலையில் இ.காங்கிரஸின் நிபந்தனையில்லா (அதாவது இதயத்தில் மட்டும் கூட்டணி) கூட்டணி, கலைஞருக்கு அமோக வெற்றியைத் தந்தது. இன்றுவரை அசுரபலத்தோடு கூடிய ஆளுங்கட்சி என்ற விதத்தில் அதுதான் சாதனை. 77ல் உல்டா. 80ல் யூ-டர்ன். 84லும் இந்திரா அனுதாப அலை, எம்.ஜி.ஆர். படுத்துக்கொண்டே ஜெயிக்க உதவியது.

89ல் மட்டுமே தேர்தல் வெற்றியில் கூட்டணிக்கு பெரிய பங்கில்லை. 91ல் ராஜீவ், சொல்லவே வேண்டாம். 96ல் த.மா.கா.வின் உதயம், உதயசூரியனை மலரச் செய்தது. 2001ல் அதிமுகவின் மெகா கூட்டணி புதிய 'கூட்டணி' ட்ரெண்டினை (முன்பே 98 பாராளுமன்றத் தேர்தலில் டிரைலர்) முன்வைத்து வென்றது. 2006ல் உல்டா. தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் அவசியம் குறித்து அறிந்துகொள்ள, மொத்தமாக இவ்வளவு தெரிந்துகொண்டால் போதும்.

கூட்டணி மட்டுமல்ல. பிரச்சினைகள் அடிப்படையிலும் தேர்தல் முடிவுகள் வருவதுண்டு. 67ல் தமிழுக்கான உரிமை, 77ல் கலைஞர் மீதான ஏமாற்றம், 96ல் ஜெ. மீதான அதிருப்தி, 2001ல் பணப்புழக்கம் இல்லாமை என்று முக்கியமான சிலவற்றை குறிப்பிடலாம்.

கூட்டணி, பிரச்சினைகள் - இவை இரண்டு மட்டுமன்றி இன்னும் ஏராளாமான காரணிகள், நம்மை ஆளப் போவது யாரென்று தீர்மானிக்கக் கூடிய விஷயங்களாக இருக்கின்றன.

80ல் ஆட்சியைக் கவிழ்த்து விட்ட அனுதாப அலை எம்.ஜி.ஆருக்கு கைகொடுத்தது. 84ல் அரசின் சமூகநலத் திட்டங்கள் சிலவற்றை முன்வைத்து செய்யப்பட்ட பிரச்சாரங்களும் அவருக்கு பலனளித்தது போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நல்லாட்சியை முன்வைத்து 2001ல் திமுக செய்த பிரச்சாரம் எடுபடவில்லை என்பதும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.

2011 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது? முதல்வரை முடிவு செய்யப்போகும் காரணியாக எது அமையும்?

- தொடர்ச்சியாக அலசுவோம்