6 ஏப்ரல், 2011

நேஹா ஆண்ட்டி! (Strictly 18+)

நீங்கள் இணையத்தள கில்மா சைட்டுகளில் பரிச்சயம் கொண்டவரென்றால் நிச்சயம் ஆண்ட்டியை உங்களுக்கு தெரிந்திருக்கும். பெயரில்தான் ஆண்ட்டி இருக்கிறதே தவிர, தோற்ற அடிப்படையில் இவர் ஒரு ஃபிகர்தான். ஆண்ட்டி – ஃபிகர் இந்த இருவேறு பரிணாமங்களுக்கு துல்லியமான ஒரு வரையறையை இன்னமும் நம்மால் எட்ட முடியவில்லை என்பது நம் சமூக அறிவு குறித்த போதாமை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு சவிதா பாபி என்கிற சவிதா அண்ணி இந்திய மொழிகளில் காமிக்ஸாக சக்கைப்போடு போட்டார். இளசுகள் மொத்தமும் இளநீரை வெறித்த மாடுகளாய் இணையத்தில் போய் முட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது நேஹா ஆண்ட்டியின் முறை.

இவரது இயற்பெயர் நேஹா நாயர். பெங்களூரில் பிறந்தவர். பெற்றோர் பாகிஸ்தானில் வசித்த இந்துக்கள் என்கிறார். பிரிவினையின் போது அங்கிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களாம். பள்ளிப்படிப்பு ஒரு கத்தோலிக்கப் பள்ளியில். பதினான்கு வயதில் முதன்முறையாக முத்தமிடப்பட்டதாக சொல்கிறார் ஆண்ட்டி. 2004ல் பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவ மேற்படிப்புக்கு சென்றதாக குறிப்புகள் கூறுகின்றன.

2007ல் நேஹாவுக்கு திருமணம் நடந்தது. கணவர் பெங்களூரில் பணிபுரியும் ஒரு பொறியியல் வல்லுனர். திருமணமான முதல்நாள், நேஹாவை அவரது கணவர் ஆசையோடு அவரது கேமிராவில் படம்பிடித்தாராம். படம் ‘நச்’சென்று வர, நேஹாவை விதவிதமான போஸ்களில் படம்பிடித்து உலகுக்கு காட்ட இருவரும் சபதம் எடுத்தார்களாம். நல்ல கணவன். நல்ல மனைவி.

கோவாவில் நீண்ட தேன்நிலவு. பதினைந்து நாட்களாம். அங்கேதான் ‘முதல் அனுபவம்’ என்று சத்தியம் செய்கிறார் நேஹா. அந்த அனுபவத்தைப் பற்றி விலாவரியாக பல்வேறு மேட்டர் கதைகளில் எழுதியும் இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஆண்ட்டியின் கவர்ச்சியான வண்ணப்படங்கள், இப்போது ஃபார்வேர்ட் மெயில்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற தமிழ்க் கலாச்சாரத்தில் கண்ணகியாகதான் இப்போதும் வாழ்ந்து வருவதாக ஆண்ட்டி கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார். அவரது படங்களைப் பார்த்து ‘வளர்ச்சி’ அடைந்துவரும் இளைய சமூகத்துக்கு அது ஒன்றுதான் குறை. ஆண்ட்டிக்கு மெயில் போட்டு ‘எனக்கு மட்டும் விதிவிலக்கு தரக்கூடாதா?’ என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

நேஹா ஆண்ட்டிக்கு ஒரு பிரத்யேக இணையத்தளமும் உண்டு. அதில் அவரது கணவர் எடுத்த வண்ணப் படங்களோடு, அவரைப் பற்றிய முழு விவரங்களும் காணக் கிடைக்கிறது.

அந்த இணையத்தளத்தில் கிடைத்த ஒரு சுவாரஸ்யமான கேள்வி பதில்களில் சில சாம்பிள் :-

ஆண்ட்டி, நிஜமாகவே ‘அது’ ஒரிஜினல்தானா?

இதிலென்ன சந்தேகம்? 16 வயசு வரைக்கும் வளர்ச்சியே சுத்தமாக கிடையாது. அடுத்த இரண்டு வருடத்தில் அசுரவளர்ச்சி. புவியீர்ப்பு சக்திக்கு எதிராக போரிட்டு, போரிட்டு களைத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய இணையத்தளத்தை நீங்களேதான் நடத்துகிறீர்களா?

ஆமாம். தொழில்நுட்ப ‘வேலை’களை மட்டும் என்னுடைய கணவர் பார்த்துக் கொள்கிறார்.

நீங்கள் நிஜமாகவே ஒரு இந்திய ஹவுஸ் ஒய்ஃப் தானா?

நிறையபேர் இதே சந்தேகத்தை கேட்கிறார்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையும், புரிதலும் கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களது அன்னியோன்னியத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுவதில் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது? இந்திய ஊடகங்கள் தங்களை அகன்ற மனப்பான்மை கொண்டதாக சொல்லிக் கொண்டாலும், அத்தகைய மனப்பான்மைக்கு ஓரிரு உதாரணங்கள் கூட இங்கே இல்லை.


நேஹா ஆண்ட்டியின் இணையத்தளத்தை பாவிக்கும்போது, அவரொரு அசலான இந்திய குடும்பத்தலைவி என்கிற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிடுகிறது. விட்டில் பூச்சிகளை ஈர்க்கும் வெளிச்சக்கீற்று இதுதான். நேஹா அத்தையின் இணையத்தளத்தை முழுவதுமாக மேய கட்டணம் செலுத்தவேண்டும் என்பதை இங்கே நினைவில் கொள்ளுங்கள். நாம் இந்த இணையத்தளத்தின் உறுப்பினர் அல்ல. அதற்காக நாம் உத்தமபுத்திரன் என்று பொருளும் அல்ல. (நம்முடைய வருமானம், நேஹா ஆண்ட்டியின் ரேட்டுக்கு கட்டுப்படியாகாது என்பதே உண்மை).

நேஹா ஆண்ட்டி என்கிற கேரக்டர் நிஜமா என்றால், சர்வசத்தியமாக நிஜமாக இருக்க வாய்ப்பேயில்லை. சென்னையில் சமீபமாக சக்கைப்போடு போட்டுவரும் திரைப்படம் ‘துரோக காதல்’. இன்னமும் இப்படத்தை கண்டுகளிக்கும் புண்ணியம் நமக்கு வாய்க்கவில்லை என்றாலும், போஸ்டரில் தரிசனத்தை பெறமுடிந்தது. ஹீரோயின், அட நம்ம நேஹா ஆண்ட்டி. இதன் மூலமாக தெரியவரும் உண்மை என்னவென்றால், நேஹா ஆண்ட்டி என்பவர் ஒரு ‘B’ க்ரேட் பாலிவுட் நடிகை. அவரை முழுக்க உரித்து, ‘குடும்பத்தலைவி’ மாதிரி பிம்பத்தை கட்டமைத்து, எவனோ ஒரு மொள்ளமாரிப் பயல் வெப்சைட் நடத்தி துட்டு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

விர்ச்சுவல் உலகத்தில் எது மெய், எது பொய்யென்றே தெரியாமல் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது...

5 ஏப்ரல், 2011

சொன்னதை செய்பவர்!

டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த ரகுவன்ஷ் கன்வாருக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை. அவர் பீகாரின் அரசு ஊழியர். மோட்டர் வெய்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஃப்ளாஷ் செய்திகளில் அவரது பெயர்தான் ஓடிக் கொண்டிருந்தது. பீகாரின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பி.கே.சஹி ஒரு பொதுக்கூட்டத்தில் கன்வாரின் பெயரை உச்சரித்திருந்தார். ஆனால் கன்வாருக்கு மகிழக்கூடிய விஷயமாக இது அமையவில்லை.
ஏனெனில் செய்தி இவ்வாறாக ஓடிக் கொண்டிருந்தது. “முறைகேடாக சொத்துசேர்த்து கட்டிய ரகுவன்ஷ் கன்வாரின் வீட்டில் இருந்து அவர் அகற்றப்படுவார். அந்த இடத்தில் இனி அரசுப்பள்ளி அமையும். அமைச்சர் அறிவிப்பு
ஊழலுக்கு எதிரான பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் போருக்கு முதல் களப்பலி ரகுவன்ஷ் கன்வார். சமீபத்தில்தான் பீகார் அரசு இப்படியான ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அதாவது வருமானத்துக்கு மீறிய சொத்துகளை வைத்திருக்கும் அரசு ஊழியர்களிடமிருந்து, இந்த முறைகேடான சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
கன்வாருக்கு 54 லட்சரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதை சில ஆண்டுகளுக்கு முன்பாக பீகார் விஜிலென்ஸ் கண்டறிந்தது. அதையடுத்தே அவர் 20 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டிருக்கிறார். இது மட்டுமல்ல, இதைப்போலவே மேலும் 18 வழக்குகள் பதியப்பட்டு சுமார் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் 87 புதிய வழக்குகளுக்கான முகாந்திரமும் இருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் என்று அடுத்தடுத்து நடந்த தேசிய ஊழலின் முடைநாற்றத்தால் முடங்கிப் போயிருக்கும் ஒரு நாட்டுக்குள் பீகார் தனித்தீவாய் நம்பிக்கையளிக்கிறது. ஊழல் நெருப்பு நாடெங்கும் பற்றியெறிய, எரியாத கற்பூரமாய் பீகார் மட்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் நிதிஷ்குமாரின் நேர்மைக்கு பங்கமாய் ஊழல் மிகுந்த அரசு ஊழியர்களின் செயல்பாடுகள் முட்டுக்கட்டையாக அமைந்தன. கடந்தாண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, பீகார் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். “ஊழல் சகித்துக் கொள்ள முடியாத துன்பம். பல்லாண்டுகளாய் சகித்துக் கொண்டிருக்கும் எனது அன்பு பீகார் மக்களே, உங்களை ஊழலின் பிடியிலிருந்து விடுவிப்பேன். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைப்பேன்
அன்று சொன்னதை, ஆட்சிப் பொறுப்பு ஏற்று இன்று செய்துக் கொண்டிருக்கிறார் நிதீஷ்.
2006லேயே ஊழலை ஒழிக்க நிதிஷ் எடுத்துக் கொண்ட வழக்கமான நடைமுறைகள் பலனை தந்ததாக சொல்ல முடியாது. நேர்மையான அதிகாரிகளை தேர்ந்தெடுத்து ஒரு சிறப்பு கண்காணிப்புக் குழுவினை அப்போதே அமைத்திருந்தார். நான்கு ஆண்டுகளில் சுமார் 400 அரசு ஊழியர்களை இக்குழு கையும், களவுமாக பிடித்திருந்தது. ஆயினும் அவர்களில் இருவரை மட்டுமே தண்டிக்க முடிந்தது. மொத்தமாக ஐந்தே ஐந்து முதல் தகவல் அறிக்கைகளைதான் இக்குழு பதிந்திருந்ததாக ஊடகங்கள் சலித்துக் கொண்டன. நம்மிடம் இருக்கும் சட்டம் அந்தமாதிரி. சட்டத்தை பாதுகாப்பவர்களை விட, அதை உடைப்பவர்கள் கூடுதல் புத்திசாலித்தனத்தோடு இருக்கிறார்கள்.
இதற்கிடையே தனது கிராமப்புற பயணங்களில் ஊழல் கொடுமைகளை கதை, கதையாக கேட்க வேண்டியிருந்தது முதல்வருக்கு. பெரிய ஊழல்களை கூட விட்டுத் தொலைக்கலாம். சிறிய சிறிய சான்றிதழ்கள் பெற கூட, லஞ்சமின்றி சீட்டை விட்டு அசைய அரசு ஊழியர்கள் தயாராக இல்லை. கிடைக்கும் லஞ்சப் பணத்தை கட்டிடங்களாகவும், தங்கங்களாகவும் வாங்கி குவித்தார்கள்.
ஒரு வழக்கு விசாரணையின் போது, ஒரு கண்காணிப்பு அதிகாரியின் பொறியில் சிக்கியவர் பாட்னாவைச் சேர்ந்த ஒரு பால் வியாபாரி. அவரிடம் ஒரு டஜன் கார்களும், பங்களா, தோப்பு துரவென்று செமத்தியான சொத்து. விசாரித்துப் பார்த்ததில் அரசு ஊழியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சப் பணத்தை பெற்றுத் தரும் வெறும் ‘ஏஜெண்ட்மட்டும்தான் இவர். இவரிடமே இவ்வளவு சொத்து இருக்கிறதென்றால், லஞ்சம் பெற்றவர்களிடம் எவ்வளவு சொத்து இருக்கும்? இவரைப் போலவே பாட்னாவில் பல பீடாக்கடை வைத்திருப்பவர், ஐஸ்க்ரீம் வியாபாரிகள் என்று கோடிஸ்வரர்கள் நிறைய பேர் உண்டு.
பெரிய ஊழல் முதலைகள் இந்தியாவின் பெருநகரங்களில் ரியல் எஸ்டேட்களில் லஞ்சப் பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றால், சிறிய முதலைகள் வங்கி லாக்கர்களில் பதுக்கிக் கொண்டிருந்தார்கள்.
நிதிஷ்குமாருக்கு யதார்த்தம் புரிந்தது. கையில் வசமாக கிடைத்த குற்றவாளியை தண்டிக்கக் கூடிய அளவுக்கு சட்டத்தில் வகையும் இல்லை. ஊழல் தடுப்பு அதிகாரிகள் வழக்கு மேற்கொள்ள, தங்களது மேலதிகாரிகளின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். இந்த நடைமுறைகளின் தாமதம் ஏற்படுத்தும் ஓட்டையில் நுழைந்து முதலைகள் வெளியேறிக் கொண்டிருந்தன. அட்டர்னி ஜெனரலாக இருந்த பி.கே.சஹியிடம் எப்படியாவது இதற்கு ஒரு தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார் (சஹி தான் இரண்டாம் முறையாக நிதிஷ் பொறுப்பேற்ற பிறகு மனிதவள மேம்பாட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்).
பீகாரின் ஊழல் தடுப்புச் சட்டத்தை நன்றாக அலசி ஆராய்ந்து, நிபுணர்களிடம் ஆலோசித்து ஒரு பக்காவான சட்டமுன்வடிவினை தயாரித்தார் சஹி. இந்த முன்வடிவு பிப்ரவரி 2009ல் பீகார் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பின்னர் நாட்டின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர்களின் ஒப்புதலினைப் பெற ஓராண்டு ஆகியது. கடைசியாக மார்ச் 2010ல், பிரசித்திப் பெற்ற அந்த சட்ட முன்வடிவு The Bihar Special Courts Act, 2009 என்கிற பெயரில் குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
ஊழல் ஒழிப்பு அமைப்புகளுக்கு இப்போது ஒரே குஷி. வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த அரசு ஊழியர்களின் சொத்துகளை உடனுக்குடன் அரசு பறிமுதல் செய்கிறது. இந்த வழக்கினை விரைந்து விசாரிக்க அதிவேக விரைவு நீதிமன்றங்கள் ஆறு உண்டு. ஆறு மாதங்களுக்குள்ளாக எந்த வழக்குக்கும் தீர்ப்பு கிடைத்து விடுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், சரியாக கணக்கு காட்டும் பட்சத்தில் அரசு பறிமுதல் செய்த அவரது சொத்து திரும்ப தரப்படுகிறது. அவ்வாறு தவறாக யாருடைய சொத்தாவது பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் 5 சதவிகித அபராத வட்டியை சம்பந்தப்பட்டவருக்கு அரசு கொடுத்து விடுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் இடங்களில் பள்ளிகளை உருவாக்குவதுதான் பீகார் அரசின் நோக்கம்.
தங்களுக்கு வேண்டிய அதிகாரிகள் என்றால் அரசியல்வாதிகள் குறுக்கிட்டு வழக்கை கெடுத்துவிடுவார்களே என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு முழு சுதந்திரத்தையும் முதல்வர் நிதிஷ்குமார் வழங்கியிருக்கிறார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் கூட, ஊழல் வழக்குகளில் தலையிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
சரி. ஊழல் செய்தவர்கள் என்பதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள். சுலபம். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவருக்கு பத்து கோடி ரூபாய்க்கு சொத்து இருந்தால்? பிடித்துப் போய் சிறப்பு நீதிமன்றத்தில் நிறுத்திவிடுகிறார்கள். சொத்துக்கு கணக்கு காட்டிவிட்டு, முடிந்தால் 5 சதவிகித கூடுதல் வட்டியோடு திருப்பிக் கொள்ள வேண்டியதுதான்.
ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக அரசு ஊழியர்கள் தங்களது சொத்துக் கணக்கினை பகிரங்கமாக மக்கள் முன்வைக்க வேண்டும் என்றும் சமீபத்தில் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து பீகாரின் நாலரை லட்சம் அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் தங்களது சொத்துக் கணக்கை அரசிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
முதற்கட்டமாக சுமார் 80,000 அரசு ஊழியர்களின் சொத்துகளை பீகார் அரசாங்கம் இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது. இவற்றில் 190 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 169 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 29 ஐ.எப்.எஸ். அதிகாரிகள், 2,800 பிஹார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அதிகாரிகள் ஆகியோரின் சொத்துக் கணக்குகளும் அடங்கும்.
ஏற்கனவே கடந்த டிசம்பர் 2010ல் பீகார் முதல்வரும், அவரது கேபினட் சகாக்களும் தங்களது சொத்துக்கணக்கை பீகார் அரசின் இணையத்தளத்தில் வெளியிட்டு முன்னுதாரணம் தந்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஊழலில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்த பீகார் மாநிலம், இன்று ஊழல் ஒழிப்பில் தேசமே தலைநிமிர்ந்து பார்க்கும் வண்ணம் உயர்ந்துக் கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இன்று பீகார் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பீகார் இருக்கும் திசை நோக்கி கையை உயர்த்தி ஒரு சல்யூட் அடிப்போம்.
(நன்றி : புதிய தலைமுறை)

2 ஏப்ரல், 2011

மின்வெட்டு – யார் காரணம்?

இது நடந்து ஒரு பத்து ஆண்டுகள் இருக்குமென்று நினைக்கிறேன். நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைகிறேன். நான் நுழைந்ததுமே ஓடிக்கொண்ட மின்விசிறி பவர்கட்டால் நின்றது (திமுககாரன் ராசியே இதுதான்). நண்பர் கோபமாக சொன்னார். "விவசாயிகளுக்கு இலவச கரெண்டுன்னு கலைஞர் அறிவித்ததால்தான், நமக்கு அடிக்கடி கரெண்டு கட் ஆவுது"

என்னதான் கல்வி கற்றிருந்தாலும், நகர்ப்புற மக்கள் அரசியலறியாத மொன்னைகள் என்பதற்கு அந்த நண்பன் நல்ல உதாரணம். எனக்குத் தெரிந்து என்னுடைய வட்டாரத்தில் 'ஜெயா செய்திகளை' சீரியஸாகப் பார்ப்பவன் அவன் மட்டுமே என்பதால், அவனோடு விவாதிப்பதும், சுவற்றில் தலையைக் கொண்டு முட்டிக் கொள்வதும் ஒன்று என்று எனக்குத் தெரியும்.

"எனக்கு ஃபேன் சுற்றுவதை விட, பசியெடுத்தால் சோறு தின்பது முக்கியம். எனவே விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தால் மின்வெட்டு ஏற்படுகிறதென்றால், அந்த மின்வெட்டை நான் வரவேற்கிறேன்" என்று சொல்லிவிட்டு அப்போதைக்கு விவாதத்தை முடித்தேன். சோற்றுக்கும், மின் வெட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்ததால், நான் சுலபமாக தப்பிக்க முடிந்தது.

நகர்ப்புற மக்கள் இப்படித்தான் தெனாலி போல யோசிக்கிறார்கள். 'தெனாலி' பாட்டில் கமலஹாசன் பாட்டுக்கு நடந்துக்கொண்டே இருப்பார். அவரால் ஊரே பற்றியெரியும். அதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. தெரிந்தாலும் கவலை இல்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வீடு என்பது ஒரு சிறிய சமையலறையும், கொஞ்சம் பெரிய வரவேற்பரையும் மட்டும்தான். ஒரு போர்ட்டபிள் டிவி, ஒரு மின்விசிறி, ஒரு வெண்குழல் விளக்கு, சமையலறையில் ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்பு, ஆறு மணி ஆனால் வாசலில் ஒரு குண்டு பல்பு. பாத்ரூமில் 40 வாட்ஸுக்கும் குறைவான மங்கிய ஒளி கொடுக்கக்கூடிய ஒரு பல்பு. போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுக்க மோட்டார் இல்லை. கைப்பம்பில் அடித்துதான் உபயோகப்படுத்தினோம். பகலில் என்ன வெக்கையாக இருந்தாலும் மின்விசிறியை பயன்படுத்துவதில்லை. இரவு தூங்கும்போதுதான் ஸ்விட்ச் போடுவோம். யாராவது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், சும்மா விருந்தோம்பலுக்காக ஃபேன் ஸ்விட்ச்சை ஒரு பத்து நிமிடம் தட்டி விடுவதுண்டு. மின் பயன்பாட்டை பொறுத்தவரை நாங்கள் மட்டுமல்ல. எல்லோருமே கொஞ்சம் கறாராக இருந்த காலம் அது.

இன்று என்னுடைய வீடு டூப்ளக்ஸ் ஆக உருமாறியிருக்கிறது. ஒரு வரவேற்பரை, ஒரு சமையலறை, இரண்டு படுக்கை அறைகள். மாடியிலும் இதே அமைப்பு. ஒவ்வொரு அறையிலும் பகலிலும் கூட விளக்குகள் எரிந்துகொண்டே இருக்கிறது. மின்விசிறிக்கு ஓய்வே இல்லை. சமையல் அறையில் கூட ஒரு மின்விசிறி. இரவு முழுக்க ஏ/சி. ஃப்ரிட்ஜ். மிக்ஸி. கிரைண்டர். அயர்ன்பாக்ஸ். மோட்டார். கம்ப்யூட்டர். இரண்டு 29 இன்ச் டிவிகள் – இரவு ஒரு மணியில் இருந்து காலை 7 மணி தவிர்த்து என்னேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. வீடியோ கேம் விளையாட போர்ட்டபிள் டிவி. இன்னும் நிறைய. வீட்டுக்குள் போய் எதைப்பார்த்தாலும் மின்சாரத்தை சார்ந்த வீட்டு உபயோகப்பொருளாகவே இருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் நான் நிரம்பவும் சொகுசு ஆகிவிட்டதை உணர்கிறேன். ஏப்ரல்-மே வெயில் காலங்களில் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டில் போட்டுப் படுப்பது அப்போதெல்லாம் வழக்கம். மல்லாந்துப் பார்த்தால் வானில் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும். சப்தரிஷி மண்டலம், கார்த்திகை நட்சத்திர கூட்டம் இதையெல்லாம் வெறும் கண்களால் தெளிவாகப் பார்த்து 'விண்வெளி அறிவியல்' பேசிக் கொண்டிருப்போம். யதேச்சையாக நேற்று வானத்தைப் பார்த்தேன். மேகமூட்டம் இன்றி தெளிவாக இருந்தாலும், பல லட்சம் நட்சத்திரங்கள் இந்த இருபது வருடங்களில் காணாமல் போய்விட்டதைப் போல உணர்வு. நாடெங்கும் பெருகிவிட்ட மின்னொளி விளக்குகளால் வானம் 'பளிச்'சென்று தெரிவதில்லை. என்றாவது உங்கள் மின்வெட்டு ஏற்பட்ட இரவில் மொட்டை மாடிக்குச் சென்று வானத்தைப் பாருங்கள். நான் சொல்லவரும் இந்த வித்தியாசம் புரியும்.

இன்றைய மின் பற்றாக்குறை ஒரு குற்றமென்றால், நானும் ஒரு குற்றவாளி. தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உருவிக் கொண்டிருக்கிறேன். என் வீட்டில் ஆளில்லாத அறைகளிலும் கூட மின்விசிறிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. விளக்குகள் எரிந்து கொண்டிருக்கிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வழிந்தாலும், பதறிப்போய் நான் மோட்டாரை நிறுத்துவதில்லை. அலட்சியம்.

நான் சிறு குற்றவாளி. எறும்பு மாதிரி. அரசாங்கத்திடம் இருந்து ஒரே ஒரு சர்க்கரைத் துண்டை எடுத்து உருட்டி சென்று கொண்டிருக்கிறேன். கரும்புக்கட்டையே தூக்கிச் செல்லும் யானைகள் மாதிரி மெகா குற்றவாளிகள் நிறைய பேர் உண்டு. தமிழகத்தின் தொழில் வளத்தை பெருக்குகிறோம் என்கிற பெயரில் இங்கே வந்து பட்டறை போடும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள். அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும்போதே 'தடையற்ற தரமான மின்சாரம்' என்கிற ஒரு பிரிவினை ஒப்பந்தத்தில் கறாராக சேர்த்துவிட்டே இங்கே தொழில் ஆரம்பிக்கிறார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உறிஞ்சிக் கொண்டிருக்கும் மின்சாரத்தை தடையின்றி தந்துக் கொண்டிருக்க வேண்டுமானால், தமிழக மின்சார வாரியம் இனி சூரியனுக்குப் போய் ஒரு ஃபவர் பிளாண்ட் அமைத்துதான் நேரிடையாக மின்சக்தி பெற்றுத்தர வேண்டும். இந்நிறுவனங்களால் வேலைவாய்ப்பும், தொழில்வளமும் பெருகுகிறது என்று சப்பைக்கட்டு கட்டும் அதே வாய்கள்தான், மேட்ச் பார்க்கும்போது ஃபவர்கட் ஆனதுமே அரசாங்கத்தை சபிக்கின்றன.

சரி. நாம்தான் அறிவுகெட்டத் தனமாக மின்சாரத்தை அதிகமாக உபயோகிக்கிறோம். தொழில்நிறுவனங்கள் அசுரத்தனமாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் என்ன செய்யவேண்டும், புதிய மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தி கூடுதல் மின்சாரத்தை தயாரிக்க முடியாதா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். நியாயமான கேள்வி.

தமிழகத்தின் மொத்த மின் தேவை 12,000 மெகாவாட். 2001ல் தொடங்கி எந்த புதிய மின் திட்டமும், அதற்கான கட்டமைப்பும் ஏற்படுத்தப்படாத நிலையில், இன்று நமக்கு 4,000 மெகாவாட் பற்றாக்குறை நீடிக்கிறது. 2004 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயலலிதா அரசு, எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் 2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்கிற வெறியில் 2004-06 காலக்கட்டத்தில் ஊதாரித்தனமாக மின்சாரத்தை செலவு செய்திருக்கிறது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது நாம் சந்தித்துவரும் மின்வெட்டுக்கு காரணம் நிச்சயமாக திமுக அரசு அல்ல. முந்தைய அதிமுக அரசுதான் இவ்விஷயத்தில் குற்றவாளி. கடந்த ஜெயலலிதா அரசின் துக்ளக் தர்பாரால் வீணடிக்கப்பட்ட மின்சக்தியால், இன்று தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்சாரம் என்றில்லை. எந்தவித கட்டமைப்பு வசதி பற்றியும் அதிமுக கவலையே படுவதில்லை என்பதுதான் தமிழக வரலாறு. அவர்களுக்கு நீண்டகாலத் திட்டங்கள் போடத்தெரியாது. தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பது, நியாயமாக படித்தவர்களுக்குதான் தெரியவேண்டும். துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டில், கல்வி கற்றவர்கள்தான் பாமரனையும் விட மோசமாக சிந்திக்கக்கூடிய அறிவினைப் பெற்றிருக்கிறார்கள்.

முந்தைய அதிமுக அரசின் பாவமூட்டையை தன் தலையில் சுமந்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, தற்போது பல்வேறு புதிய மின்திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக 2012 வாக்கில் 6800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும். இது நம் தேவைக்கும் அதிகமான சக்தி. எதிர்காலத்தில் திமுக வழங்கப்போகும் மிக்ஸி அல்லது கிரைண்டர் பயன்படுத்த தேவைப்படும் கூடுதல் மின்சாரத்துக்கு இது உதவும்.

தற்போது நடந்துவரும் சில மின் திட்டங்கள் :

-  வடசென்னையில் 1200 மெகாவாட் விரிவாக்கம்

-  மேட்டூரில் 600 மெகாவாட் விரிவாக்கம்

-  என்.டி.பி.சியோடு இணைந்து தமிழக மின்சார வாரியம் உருவாக்கி வரும் வள்ளூர் 1500 மெகாவாட் மின் திட்டம்

-  பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தமிழக மின்சார வாரியம் உருவாக்கி வரும் உடன்குடி 1600 மெகாவாட் திட்டம்

-  நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனோடு இணைந்து தூத்துக்குடியில் தமிழக மின்சார வாரியம் உருவாக்கி வரும் 1000 மெகாவாட் திட்டம்

இவையெல்லாம் கடந்த ஐந்தாண்டுகால திமுக அரசு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் திட்டங்கள். இந்த திட்டங்களின் பயனை தமிழக மக்கள் 2012ல் அறுவடை செய்யலாம்.

இதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலையும் இவ்வாண்டின் இறுதியில் இருந்து மின்சாரம் தயாரிக்கத் தொடங்கும் என்று தெரிகிறது. தற்போதைய பற்றாக்குறையை உடனடியாக இதைக்கொண்டு சமாளித்துவிட இயலும்.

மின்வெட்டு குறித்து திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் கண்ணை மூடிக்கொண்ட பூனைக்கு ஒப்பானவர்கள். பூலோகம் இவர்களால் இருண்டுவிடப் போவதில்லை.

நமக்கான திட்டங்களை தீட்டியவர்களுக்கா நம் வாக்கு, அல்லது திட்டங்கள் தீட்ட வக்கில்லாத ஊதாரிகளுக்கா என்பதை மக்கள் ஏப்.13 அன்று முடிவெடுக்க வேண்டும்.

26 மார்ச், 2011

குடிமகன்களே அம்மாவை ஆதரிப்போம்.

தேசிய முற்போக்கு திம்மி கழக தலைவரான விஜயகாந்த் தற்போது தங்கத்தாரகையோடு கூட்டணியில் இருக்கிறார் என்பதால் அவரை குறித்து தேசத்தில் எண்பது கோடி ஹிந்துக்களும் பெருமை அடைந்திருக்கிறார்கள். அதே நேரம் அவர் குறித்து தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கொடூர வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

மூத்த திம்மியின் லேட்டஸ்ட் அல்லக்கை திம்மியாக நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறியிருக்கிறார். திருவாரூரில் நடந்த திம்மிகள் முன்னேற்ற கழக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஈ காக்கை கூட இல்லையாம். அந்த மேடையில்தான் வடிவேலு குடித்துவிட்டு 'குடிகார' வாந்தி எடுத்திருக்கிறார். தங்கத்தாரகையோடு கூட்டணி அமைத்திருக்கும் விஜயகாந்த் குடிகாரர் என்று பேசியிருக்கிறார். அன்புச் சகோதரர் விஜயகாந்த் குடிக்கும்போது, இவரென்ன ஊறுகாய் வாங்கிக் கொடுத்தாரா?

அதெல்லாம் இருக்கட்டும். அன்புச் சகோதரர் குடிப்பார் என்கிற விஷயத்தையே இவர்தான் கண்டுபிடித்தது போல பீத்திக் கொள்கிறாரே? அதை கேட்டு மூத்த திம்மியும், அவரது மகன்களான மதுரை திம்மி, கொளத்தூர் திம்மி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரிக்கிறார்களே? இந்த அநியாயத்தை தட்டிக் கேட்பார் இல்லையா? தட்டிக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கும் அயல்நாட்டு அண்டோமேனியாவின் அடியாளான தாடிவைத்த சர்தார்ஜியோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாராம்.

அன்புச் சகோதரருக்கு சோமபானம் அருந்தும் பழக்கம் இருப்பதை கண்டறிந்து முதன்முதலாக உலகுக்கு தெரிவித்த பெருமை நம் தங்கத்தாரகையே சாரும். இண்டெலிஜென்ஸ் பிராப்பர்ட்டி ரைட்ஸ் என்கிற சட்டம் மூலம் பார்க்கப் போனாலும் கூட, புரட்சித்தலைவியே இந்த கண்டுபிடிப்புக்கான உரிமை பெற்ற சொந்தக்காரர் ஆவார். நேற்று வந்த வடிவேலுவோ அல்லது யாரேனும் குடிவேலுவோ இதை தங்கள் கண்டுபிடிப்பு என்று மக்கள் முன் சொன்னால், அதை நம்பிவிட தமிழக மக்கள் என்ன மாங்காய்களா? வாழை மட்டைகளா?

அம்மா அன்புச் சகோதரரை குடிகாரர் என்று செல்லம் கொஞ்சியதும், பதிலுக்கு குடிகாரச் சகோதரர், நீதான் ஊத்திக் கொடுத்தாயா என்று அன்பாக பதிலளித்ததையும் திம்மிக்கள் மறைக்க நினைத்தாலும், தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். ஆயிரம் பாட்டில்கள் மறைத்து நின்றாலும், இரட்டை இலை மறைவதில்லை.

இந்த வதந்தியைப் போலவே இன்னொரு வதந்தியும் உலவுகிறது. ஏதோ 'டாஸ்மாக்' என்கிற சேவை அமைப்பினை முதன்முதலாக மூத்த திம்மிதான் அமைத்ததைப் போல குடிகார வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்து, அவர்களது வாக்கினை கவரும் அடாத செயலிலும் திம்மிக்கட்சியினர் ஈடுபட்டிருக்கிறார்கள். டாஸ்மாக் பெயரில் சரக்கு விற்கமுடியும் என்கிற பேருண்மையை அண்ட சராசரங்களுக்கும் முதன்முதலாக உணர்த்தியவர் அம்மா. தங்கத்தாரகையின் ஆட்சியில்தான் தமிழகம் வளமாக, பசுமையாக இருந்தது என்பதை குறிக்கும் பொருட்டு, டாஸ்மாக் போர்டுகளை பச்சை வண்ணத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டவரே அம்மாதான் என்பதை தமிழக குடிகார வாக்காளர்கள் அவ்வளவு விரைவில் மறந்து விட மாட்டார்கள். அந்த டாஸ்மாக்குக்கு சரக்கு பஞ்சம் ஏற்பட்டு விடுமோவென்று அஞ்சி, 'மிடாஸ்' தொழிற்சாலையை உருவாக்கியவரும் அம்மாதான்.

'குடி'யரசு என்கிற உயர்ந்த சித்தாந்தம் அடிப்படையில் பார்க்கப்போனாலும் எந்த திம்மியை விடவும், புரட்சித்தலைவி அம்மா தலைசிறந்தவர் என்பதை நாடு மறக்காது. நாட்டு மக்கள் நன்றி மறக்கவும் கூடாது. காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த தமிழன், நிம்மதியாக குவார்ட்டர் வாங்கி சரக்கு அடிக்கக்கூடிய நிலைமை இன்று தமிழகத்தில் நிலவுகிறதென்றால், நாமெல்லாம் நன்றி கூற கடமைப்பட்டவர் உலகம் போற்றும் உத்தம அம்மா புரட்சித்தலைவி டாக்டர் தங்கத்தாரகை அவர்கள்தான். எனவே 'குடி'யாட்சி நீடிக்க, குடிமகன்களே அம்மாவை ஆதரிப்போம். அம்மாவின் சின்னம் இரட்டை இலை.

குடியுயர அம்மா வரவேண்டும், அம்மா உயர நாடுயரும். அம்மா வாழ்க. திம்மி வீழ்க.

25 மார்ச், 2011

கதாநாயகி

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் சீரியஸாக கவனிக்க ஆரம்பித்த தேர்தல் 1967ல் நடந்த சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல். அவுன்ஸ் அரிசி வாங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அண்ணாவின் ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி வாக்குறுதி, பாலையில் பூத்த சோலையாய் நம்பிக்கை தந்தது. வாக்குறுதி கொடுத்து வாக்குகளை கவர முடியும் என்கிற ஃபார்முலாவை ஏற்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவையே சாரும்.

அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் கொஞ்சமாவது சீரியஸாக பரிசீலிப்பது திமு கழகத்தின் வாக்குறுதிகளைதான். அதற்கேற்ப திமுகவும் ஒவ்வொரு தேர்தலின்போது வாக்குறுதிகளை ரொம்பவும் மெனக்கெட்டே உருவாக்க வேண்டியிருக்கிறது.

நமக்கு ஓரளவு நினைவுதெரிந்த தேர்தல் 1989 சட்டமன்றத் தேர்தல். சென்னை நகரின் ஒவ்வொரு இல்ல முகப்பிலும் 'நாடு நலம்பெற, நல்லாட்சி மலர' என்கிற வாசகங்களோடு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தேர்தல் அது. 'பெண்களுக்கு சம சொத்துரிமை' போன்ற வாக்குறுதிகளை திமுக தந்திருந்ததாக நினைவு.

அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கை என்பது ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆர் காலத்திலும் கூட. தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகள் கூட அதிமுக தலைவர்களுக்கு நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே. அதே நேரம் 'சொல்லாததையும் செய்வோம்' என்கிற திமுகவின் பிரபலமான வசனம் அப்பட்டமாக பொருந்துவது அதிமுகவுக்குதான். சத்துணவுத் திட்டம் போன்ற சமூகநலத் திட்டங்களை அதிமுக வாக்குறுதியாக தரவில்லை. ஆட்சிக்கு வந்து சொல்லாமலே கொடுத்தது. 91 தேர்தலின் போதுகூட 69 சதவிகித இடஒதுக்கீட்டை தேர்தல் வாக்குறுதியாக அம்மா தந்ததாக நினைவில்லை. ஆயினும் பல்வேறு தடைகளை உடைத்து இதனை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.

2006 வரை திமுகவின் தேர்தல் அறிக்கை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தி முன்மொழியப்பட்டுக் கொண்டிருந்தது. கலைஞரின் மனசாட்சியான மாறனின் சிந்தனைகள் பலவும் வாக்குறுதிகளாக இடம்பெறும். 'மாநில சுயாட்சி' என்கிற வாசகம் ஒரு ஒப்புக்காவது இன்றும், திமுக அறிக்கைகளில் இடம்பெறுவது மாறன் காலத்திய பாரம்பரியமே. மாறன் மறைந்தபிறகு கலைஞருக்கு கிடைத்த பொருளாதார ஆலோசகர் நாகநாதன். 2006 தேர்தல் அறிக்கையை கவர்ச்சிகரமான வகையில் உருவாக்கியதில் அவரது பங்கு அளப்பறியது. உலகமயமாக்கல் நுழைந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் கொண்டு உருவாக்கிய அறிக்கை அது. 'நான் உனக்கு ஓட்டு போட்டால், தனிப்பட்ட முறையில் எனக்கென்ன கிடைக்கும்?' என்று ஒவ்வொரு வாக்காளரும் அரசியல் கட்சிகளிடம் பலனை எதிர்ப்பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.

அத்தேர்தலில் இலவச கலர் டிவி, அண்ணா பாணியில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு மாதிரியான அதிரடி வாக்குறுதிகள். ஆரம்பத்தில் இவையெல்லாம் சாத்தியமேயில்லை என்று சாதித்த ஜெயலலிதாவே பிற்பாடு பத்து கிலோ அரிசி இலவசமென்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீதி பத்து கிலோ அரிசியை கிலோ ரூ.3.50/- விலையில் வாங்கிக் கொள்ளலாம். இதன்படி பார்க்கப்போனால் ஒரு கிலோ அரிசி ரூ.1.75/-க்கு வழங்கப்படுமென்பது ஜெ.வின் வாக்குறுதி. இது திமுகவின் வாக்குறுதியை காட்டிலும் 25 பைசா குறைவு.

2006 தேர்தல் பிரச்சார காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி பசுமையாக நினைவில் நிற்கிறது. அதிமுக கூட்டணியின் பிரச்சாரப் பீரங்கி வைகோ ஒரு மேடையிலே முழங்கிக் கொண்டிருக்கிறார். "தோல்வி நிச்சயம் என்பதால், சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர். ஏற்கனவே மானியத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரிசியை இன்னும் எப்படி ஒண்ணரை ரூபாய் குறைத்து கொடுக்க முடியும்?" என்று கர்ஜித்தார். அவருக்கு ஒரு துண்டுச்சீட்டு வருகிறது. 'அம்மா இன்று மாலை ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் பத்து கிலோ அரிசி இலவசமென்று வாக்குறுதி தந்திருக்கிறார்'. அதுவரை பேசிய பேச்சை அப்படியே மாற்றிப்பேச வேண்டிய நெருக்கடி வைகோவுக்கு. தனது பேச்சாற்றலால் மாற்றியும் பேசினார். ஆனால், மதிமுகவினரே நொந்துப்போனார்கள். மக்கள் சிரிப்பாய் சிரித்தார்கள்.

வாக்குறுதிகளால் திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தலுக்கு முன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ப.சிதம்பரம்தான் முதன்முறையாக திமுக தேர்தல் அறிக்கையை 'கதாநாயகன்' என்கிற வார்த்தைகொண்டு Branding செய்தார் என்பதாக நினைவு.

2006ல் ஆட்சிக்கு வந்த திமுக தனது வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றியும் இருக்கிறது. 

ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு என்று சொன்னது. ஆனால் ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கே நியாய விலைக் கடைகளில் கொடுத்து வருகிறது.

ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி என்றது. ஏழை, பாழை மட்டுமில்லாமல் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்குமே வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா ஆட்சியில் நிறுத்தப்பட்டிருந்த பெண்களுக்கான திருமண உதவித்தொகை மீண்டும் அமல்படுத்தப்பட்டு, ரூபாய் பதினைந்து ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித்தொகை ரூ.6000/- வழங்கப்படுகிறது.

இலவச கலர் டிவி, இலவச கேஸ் அடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை.

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.

வேலையிழந்த சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை.

அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்.

இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு.

- இம்மாதிரி இன்னும் ஏராளமாக தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிஜமாகவே திமுக ஆட்சி முனைப்பு காட்டியிருக்கிறது. அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு மாதிரி சொல்லாததையும் செய்துக் காட்டியிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது என்கிற அதிசயம் தமிழகத்தில்தான் கடந்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது.

இதோ அடுத்த தேர்தல். மீண்டும் ஒரு கவர்ச்சி அறிக்கை திமுகவிடமிருந்து. இம்முறை கலைஞர் 'கதாநாயகி' என்று தம் கழக அறிக்கையை branding செய்திருக்கிறார். ஊடகங்களோடு சேர்ந்து மக்களும் பரபரப்படைந்திருக்கிறார்கள். தேர்தல் அறிக்கைக்கு பின்பாக ஒரு சர்வே எடுக்கப்படுமாயின், திமுகவின் செல்வாக்கு ராக்கெட் வேகத்தில், கடந்துமுறையைப் போலவே உயர்ந்துக் கொண்டிருப்பதை இம்முறையும் அறிய முடியும்.

அம்மா ரொம்ப சிரமப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஆங்காங்கே எண்களை உயர்த்தி, மானே தேனே போட்டு சம்பிரதாயமாக வாசித்துக் காட்டி விட்டார். மிக மிக நகைச்சுவையான தேர்தல் அறிக்கை இது. ஒருவேளை நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுகவுக்கு நகைச்சுவைப் பிரச்சாரம் செய்வதை ஈடுகட்ட, அம்மாவே நகைச்சுவை வேடம் பூண்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. அம்மாவின் அறிக்கையை அவரது கட்சிக்காரர்கள் கூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் பரிதாபம்.

கதாநாயகன் அறிவித்த அறிக்கை கதாநாயகியாகவும், கதாநாயகி அறிவித்த அறிக்கை காமெடியாகவும் அமைந்திருப்பது என்னமாதிரியான ஒரு சுவாரஸ்யமான முரண்!