27 அக்டோபர், 2012

கருணைப் பெருங்கடலான காவியத்தாய்

முதல்வர் என்கிற பதவிக்கே பெருமை சேர்க்கும் முதல்வராக மாண்புமிகு தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளங்குகிறார்கள். அவரது கருணைப்பார்வையில் தமிழகம் உலகின் நெ.1 மாநிலமாக விளங்குகிறது. அதனால்தான் லக்கிலுக் என்கிற பதிவர்கூட “புரட்சித்தலைவி தாயுள்ளம் கொண்டவர் என்பதிலோ, கருணைக்கடல் என்பதிலோ ஐயம் இருந்தால்கழுவில் ஏற்றப்பட தகுதியானவர்கள் ஆவோம்” என்று ஒபாமாவுக்கே அரசியல் பாடம் எடுக்கும் தங்கத்தாரகை டாக்டர் அம்மாவைப் பற்றி புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

கடந்த தேர்தலில் திருவாரூர் திம்மியான தீயசக்தியை ஓட ஓட விரட்டி, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வக்கில்லாதவாறு அம்மா முடக்கினார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. மக்கள் மீது கருணை கொண்டே கருணைப் பெருங்கடலான காவியத்தாய் இத்தகைய இரும்புக்கர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் வேறுவழியில்லாமல் குடிகார கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தையும், போனால் போகிறதென்கிற கருணைப்பார்வையோடு தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரும், புரட்சித்தலைவியும், கழகப் பொதுச்செயலாளருமான காவிரி தந்த கலைச்செல்வி வழங்கியிருந்தார்.

ஆனால் இந்த சிறிய பொறுப்பைகூட ஒழுங்காக செய்ய துப்பில்லாமல், சட்டமன்றத்துக்கு வந்தால் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவை எதிர்கொள்ள வேண்டுமே என்கிற அச்சத்தில் எதிர்க்கட்சித்தலைவர், சட்டமன்றத்தை ‘கட்’ அடித்துவிட்டு சத்யம் தியேட்டரில் பகல் காட்சி படம் பார்க்கச் சென்றுவிடுகிறார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று மக்கள் தொடர்ச்சியாக மாசேதுங்கின் மறுபிறவியான மாண்புமிகு தங்கத்தாரகையிடம் நித்தம் நித்தம் புகார் மனு வாசிக்கிறார்கள்.

ஜனநாயகம் என்பது ஆட்சிக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் என்பது அம்மாவின் நிலைப்பாடு. எனவேதான் உலகில் எங்குமே இல்லாத அதிசயமாக கழகத்தின் மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் அம்மாவால் ஜனநாயகப் பூர்வமாக நியமிக்கப்படுகிறார்கள். ஜனநாயகத்துக்கு இவ்வளவு மதிப்புத் தரும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சியில், ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் செயலை குடிகாரக்கட்சி மேற்கொள்ளுமேயானால், அதை எப்படி புரட்சித்தலைவி அம்மா அனுமதிக்க முடியும்?

ஆகையால் குடிகாரக் கட்சியில் இருந்தாலும் ‘ஸ்டெடி’யாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த இருதினங்களாக அம்மா சந்தித்து மக்கள் பிரச்சினைகளைப் பேசுகிறார். இதனால் அக்கட்சி உடையுமேயானால், அதற்கு பொறுப்பேற்க வேண்டியது அம்மாவால் வாழ்வு பெற்ற குடிகாரத் தலைவரே அன்றி, அம்மாவோ அம்மாவின் லட்சோப லட்சம் தொண்டர்களோ அல்ல.

இப்போதைக்கு திம்மி கட்சியின் தளபதியை எதிர்க்கட்சித் தலைவராக ஜனநாயகப் பூர்வமாக நியமிக்க புரட்சிக்கே பெருமை சேர்க்கும் புரட்சித்தலைவி முடிவெடுத்திருக்கிறார். பரிதாபகரமான நிலையில் இருக்கும் திம்மி கட்சி மீதான புரட்சித்தலைவியின் கருணைப்பார்வையாகதான் இதைப் பார்க்க வேண்டும். இந்த அரிய உண்மையை ஆராயாமல் குடிகாரக் கட்சியை உடைக்க புரட்சித்தலைவி முயற்சியெடுக்கிறார் என்று யாராவது எழுதுவார்களேயானால் அவதூறு வழக்கு தொடுக்கவே அவதாரம் எடுத்திருக்கும் நாம் அனுமதிக்க முடியாது என்கிற எச்சரிக்கையை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம்.

வாழ்க டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் ஸ்ரீராமராஜ்யம்.

26 அக்டோபர், 2012

மழைப்பாக்கம்


மடிப்பாக்கம்என்பது சென்னை மாநகருக்கு வெகு அருகில் இருக்கும் சிற்றூர். சொல்லிக் கொள்ளும்படியாக எந்த சிறப்பம்சங்களும் இல்லாத இந்த ஊரை மழைக்காலத்தில் மட்டும் தமிழகம் முழுக்க அறிகிறார்கள். சென்னையில் வெள்ளம் என்றால் ஊடகங்கள் முதலில் உச்சரிக்கும் பெயர் மடிப்பாக்கமாக இருக்கிறது. மழை வெள்ளத்தைப் பார்வையிடும் முதல்வர், மடிப்பாக்கத்தை நிச்சயம் பார்வையிடுவார். சென்னையின் சிரபூஞ்சி இது. மற்ற பகுதிகளை விட மழை இங்கே அதிகமாகப் பெய்வதைப் போன்ற தோற்றம் எப்போதுமே கிடைக்கும்.

கட்டுமரத்தை கடலில் பார்த்திருப்பீர்கள். படகுகளை ஆற்றிலோ, ஏரியிலோ பார்த்திருப்பீர்கள். சாலையில் பார்த்திருக்கிறீர்களா? மழைக்காலத்தில் மடிப்பாக்கம் சாலைகளில் பார்க்கலாம். வேளச்சேரியை ஒட்டி மடிப்பாக்கத்தை இணைக்கும் பிரதான சாலை காட்டாறாய் மாறும். அலுவலகத்துக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்பவர்களுக்கு பஸ் நிறுத்தப்பட்டு, போட் சர்வீஸ் தொடங்கும்.

பிறந்ததிலிருந்து முப்பது ஆண்டுகளாக இங்குதான் வசிக்கிறேன். முதன்முறையாக விசைப்படகை பார்த்தது மடிப்பாக்கம் சாலையில்தான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பெருமழைக் காலத்தில், வீடுகளில் மாட்டிக்கொண்டு சோறு, தண்ணீர் இல்லாமல் வாடிக்கொண்டிருந்தவர்களை மீட்க விசைப்படகுகள் வந்தது. வெள்ளக் கரையோரத்தில் கூட்டமாக நின்றுப் பார்த்தோம். தூரத்தில் தெரிந்த பல வீடுகளில் முதல் தளம் முற்றிலுமாக மூழ்கி மொட்டை மாடியில் குளிருக்கும், உயிருக்கும், வெள்ளத்துக்கும் அஞ்சி நடுங்கி குடும்பம் குடும்பமாக அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தவர்களை கண்ட காட்சியை நினைத்தால் இன்றைக்கும் ஜன்னி வருகிறது.

மழையில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்பதால் மாநகரப் போக்குவரத்துத் துறைக்கு, அந்தகாலத்தில் மடிப்பாக்கம் அபிமானமில்லாத ஊராக மாறிப்போனது. “எங்க ஊருக்கு கூடுதல் பேருந்து விடவேண்டும்” என்று கோரிக்கை வைத்தால், “உங்க ஊரில் முதலில் சாலைகளைப் போடுங்கள்” என்று பதிலளிப்பார்கள். முறையான போக்குவரத்து இல்லை. மழைக்காலத்தில் தனித்தீவாகி விடும் போன்ற காரணங்களால் மற்ற பகுதியினரோடு கலாச்சார, பண்பாட்டு உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ‘மடிப்பாக்கத்தானுக்கு பொண்ணு கிடையாது’ என்று ‘வேலை காலியில்லை’ பாணி போர்டுகளை பெண்களைப் பெற்றவர்கள் வீட்டு வாசலில் எழுதி மாட்டாததுதான் பாக்கி.

மறைந்த தமிழறிஞர் தென்கச்சி கோ.சாமிநாதன் மடிப்பாக்கத்தில்தான் வசித்தார். யாராவது அவரிடம் எங்கே வீடு என்று கேட்டால், இங்கேதான்.. மழைப்பாக்கத்தில் என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டு, வெடிச்சிரிப்பு சிரிப்பார்.
புவியியல்ரீதியாக மடிப்பாக்கம் சபிக்கப்பட்ட பூமி. கடல் மட்டத்தைவிட தாழ்வான பகுதி. அந்த காலத்தில் மடிப்பாக்கத்துக்கு மேற்கே பல்லாவரம், மூவரசம்பேட்டை, கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் நிறைய குன்றுகள் இருந்தன. நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏராளமான ‘கல்’ தேவைப்பட்டதால் குடைந்து, குடைந்து இவற்றில் பெரும்பாலானவை முற்றிலுமாக இன்று சமப்படுத்தப்பட்டு விட்டன. அந்த குன்றுகளில் இருந்து வழியும் மழைநீர் மடிப்பாக்கத்துக்கு தெற்கில் ஒரு சிற்றாறாய் உருமாறி, கழிவுவெளி எனப்படும் பகுதியில் சேர்ந்து மாபெரும் ஏரியாய் உருப்பெறும். இந்த கழிவுவெளி இப்போது ‘கைவேலி’ என்று பெயர் மாறிவிட்டது. இங்கிருந்துதான் உலகப் புகழ்பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதி தொடங்குகிறது. கோடைக்காலத்தில் பசுமையான சமவெளியாக இது உருமாறும் என்பதால், கால்நடை மந்தைகளுக்கு கொண்டாட்டம். உணவுத் தேவைக்காக மந்தை, மந்தையாய் கால்நடைகளை இங்கே ஓட்டி வருவார்கள். எனவே வெயிற்காலத்தில் இப்பகுதியை ‘மந்தைவெளி’ என்றும் அழைப்பார்கள். பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு இயற்கை தந்த கொடையான ‘கைவேலி’ இன்று நகரமயமாக்கலின் அசுரப்பசிக்கு இரையாகிவிட்டது.

ஏரி மாவட்டம் என்று சொல்லப்பட்ட ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவாயிலாக இருந்த காரணத்தால் இரண்டு பெரிய ஏரிகள். ஏராளமான குளங்கள். தங்கு தடையற்ற ஏரிப்பாசனம் என்பதால் கண்ணுக்கு தெரியுமட்டும் பச்சைப்பாய் விரித்த வயல்கள். இவற்றில் பெரும்பாலானவை இன்று குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன. ஆக்கிரமிப்பில் இருந்துத் தப்பிய நீர்நிலைகள் ஓரிரண்டு இன்று அடையாளத்துக்கு மிச்சமிருக்கின்றன. விவசாயம் சுத்தம்.

இன்றைய மடிப்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகே ஒரு குளம் உண்டு. சோழர்காலத்து சிவன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட குளம் அது. மழைக்காலத்தில் தெளிவான நீர் நிரம்பியிருக்கும். இங்கே தெர்மாக்கோல் உதவியோடு படகு கட்டி, நண்பர்களோடு படகு ஓட்டியிருக்கிறேன். நீச்சல் அடித்திருக்கிறேன். தூண்டில் போட்டு மீன் பிடித்திருக்கிறேன். இன்று அந்த குளம் கூவம் ஆற்றின் துணைநதி போல மாறிப்போய் இருக்கிறது.

சென்னை மாநகரப் பெருக்கத்தின் காரணமாய் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட மடிப்பாக்கம் சர்வநிச்சயமாக இன்று ஒரு நகரம். மழைக்காலத்தில் மட்டும் நரகம். இன்று காஃபி டே இருக்கிறது. நவீன உணவு விடுதிகள், பள்ளிகள், வங்கிகள், சூப்பர் மார்க்கெட் என்று ஒரு பெருநகரத்துக்குரிய எல்லா அடையாளங்களும் உண்டு. கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக மடிப்பாக்கம் பஞ்சாயத்து இரண்டு வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் மாநகர அந்தஸ்துக்கு அத்தியாவசியமான கழிவு மற்றும் மழைநீர் வடிகால் வசதி (டிரைனேஜ்) மட்டும் சாத்தியப்படவேயில்லை.

எல்லாமே மாறிப்போனாலும் ‘மழை’ மட்டும் மடிப்பாக்கத்தில் மாறவேயில்லை. இன்றும் மழைக்காலத்தில் மடிப்பாக்கம் ‘வெனிஸ்’தான். அடுத்தடுத்து இரண்டு புயல் வந்தால் ‘போட்’ தான் போக்குவரத்துக்கு எங்களுக்கு ஒரே கதி.

25 அக்டோபர், 2012

உப்புக்கு சயனைடா?

சகோதரி சின்மயி (இவ்வாறே குறிப்பிட விரும்புகிறேன். பெண் வன்கொடுமை சட்டம் பயமுறுத்துகிறது) கடந்த சில வருடங்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது அரிய கருத்துகளை ஆர்ட்டீஷியன் நீருற்றாக அதிரடியாக வெளிப்படுத்தி வருகிறார்.

சிங்கள ராணுவம் இந்திய தமிழக கடலோர மீனவர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது ட்விட்டர்தளத்தில் தமிழர்கள் பொங்கிக் கொண்டிருந்தபோது, சகோதரி ஓர் அருமையான கருத்தினை முன்வைத்தார். அதாவது அவர் விலங்குகளை துன்புறுத்தாத அமைப்பின்
(PETA) ஆதரவாளராம். மீனவர்கள் மீன்களை துன்புறுத்துவதோடு இல்லாமல், அவற்றை கொன்று விற்பனையும் செய்பவர்கள் என்கிற முறையில் அவர்களை அவர் எப்படி ஆதரிக்க முடியும்?

போலவே முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவி நிறைய மதிப்பெண்கள் பெற்றும் தனக்கு ஏதோ கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக குமுற, சகோதரி கைகொடுத்து ட்விட்டினார். இடஒதுக்கீடு என்பது எவ்வளவு அபத்தமென்று விவாதித்தார். இந்தியாவிலேயே எங்கும் நிகழா சாதனையாக அறுபத்தி ஒன்பது சதவிகித இடஒதுக்கீட்டினை தமிழகத்துக்கு பெற்றுத் தந்தவர் நம்மை ஆண்டுக்கொண்டிருக்கிறார். எனவேதான் அவரை ஒடுக்கப்பட்ட சமூகம், சமுகநீதி காத்த வீராங்கனையாக கொண்டாடுகிறது. அப்படிப்பட்ட முதல்வரை விட சகோதரி புத்திசாலி என்பது அவரது இடஒதுக்கீடு குறித்த விவாதம் மூலமாக அறிந்துகொள்ள முடிந்தது.

சமீபத்தில் இயக்குனர் இராஜமவுலி ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார். மனுதர்மம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்லாதது, வாழ்க்கைமுறையின் அடிப்படையில் அமைவது என்று அவரோடு டென்னிஸ் விளையாடும் பிரசாத் என்கிற அறிவுஜீவி விளக்கினாராம்.

அந்த ட்விட்டில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

“பஞ்சம ஜாதியினர் தீண்டத்தகாதவர்கள் : மற்றவர்களை சார்ந்து வாழ்பவர்கள் (ஒட்டுண்ணிகள்)

சூத்திரர்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்துக்காகவும் வாழ்பவர்கள்.

வைசியர்கள் வணிகம் மூலம் தங்களுக்காகவும், தங்களோடு வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபத்தை ஏற்படுத்துபவர்கள்.

சத்திரியர்கள் தமக்கு கீழ் இருப்பவர்கள் சாப்பிட்டதற்கு பிறகு சாப்பிடுபவர்கள்.

பிராமணர்கள் தாங்கள் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு கற்பிப்பவர்கள்”

இந்த கருத்தை ட்விட்டரில் ரீட்விட் செய்து வழிமொழிந்ததின் மூலம் தன்னுடைய சமூகப்பார்வையை அகிலத்துக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் சகோதரி சின்மயி. அவரது அறிக்கைகளிலேயே தொடர்ச்சியாக அவரது சமூகம் குறித்த பெருமையை நாம் கண்டு பெருமிதப்பட்டுக்கொள்ள முடிகிறது.

இவ்வாறான உயர்ந்த சமூகப்பார்வை கொண்டவரோடு வேறுபாடான கருத்துகள் கொண்டவர்கள் விவாதிப்பது இயல்புதான். அவ்வாறு விவாதிப்பவர்களோடு நமக்கு விவாதம் தேவையில்லை எனில் அவர்களை நம் பார்வையிலிருந்து முடக்கிவைக்கும் வசதியினை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகத்தளங்கள் வழங்குகின்றன. ட்விட்டர் தளத்தில் சகோதரி சின்மயியோடு என்னால் இம்மாதிரி விவாதங்களை நிகழ்த்த முடியாது. ஏனெனில் அவர் என்னை ஏனோ தடை செய்திருக்கிறார். அவ்வாறு தடை செய்ததாலேயே இன்று காவல்துறையால் கைது செய்யப்படாமல் இருக்கிறேன் என்பதற்காக சகோதரிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சகோதரியோடு விவாதித்தவர்கள் சிலர் ஆபாசமான முறையில் அவரிடம் விவாதித்ததாக புகார் செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விவாத முறையில் எனக்கும் ஒப்புதல் இல்லை. அதே நேரம் ட்விட்டரில் மோசமாக நடந்துகொண்டார்கள் என்பதற்காக பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மாதிரியான பிரிவுகளில் அவர்களை கைது செய்திருப்பது மிக அதிகம். கைது செய்யப்பட்டவர்கள் சகோதரியை நேருக்கு நேராக ஒருமுறை கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

சகோதரி என்னமாதிரியான புகாரை அளித்தார் என்று தெரியவில்லை. அதே நேரம் நேற்று தினகரன் பத்திரிகை பேராசிரியர் சரவணக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு காரணமாக செய்தி போட்டிருப்பது அப்பட்டமான அவதூறு. சரவணக்குமார், சகோதரி சின்மயியின் படங்களை ஆபாசமாக உருமாற்றி, ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பகிர்ந்ததாக செய்தித்தாள் தெரிவிக்கிறது. மற்ற ஊடகங்களிலும் கூட கிட்டத்தட்ட இதேமாதிரியான செய்திகளைதான் வாசிக்க முடிகிறது. மாறாக சரவணக்குமார் மீது புகார் கொடுக்க காரணமான ‘ஸ்க்ரீன்ஷாட்’களை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சகோதரி பகிர்ந்திருக்கிறார். அவை வெறும் ‘டெக்ஸ்ட் மெசேஜ்’களாகதான் இருக்கின்றனவே தவிர, ஆபாசப் படங்களாக தெரியவில்லை. சமூகத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பேராசிரியர் ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று ஊடகங்களில் செய்தி அளித்திருக்கிறார்கள். பேராசிரியர் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீதும், புகார் கொடுத்தவர் மீதும் அவதூறு வழக்கு கூட இதனால் தொடுக்கலாம். மானத்துக்கு நஷ்டஈடாக சில கோடிகளை கேட்கலாம்.

உண்மையாகவே ஆபாசப் படங்களை பேராசிரியர் பகிர்ந்திருந்தால், ‘கைது, ரிமாண்ட்’ மாதிரி விஷயங்கள் உறுத்தப் போவதில்லை. மாறாக சில ‘ட்விட்’களுக்காக தீவிரவாதிகளை பிடிப்பதைப் போல அவரை பிடித்திருப்பது, இந்த புகாருக்குப் பின்னால் வேறு ‘அழுத்தம்’ இருக்குமோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. குறிப்பாக பெயிலில் எடுக்க முடியாத வண்ணம், கோர்ட் விடுமுறை தினத்துக்கு முன்பாக ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டிருப்பதை இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். வக்கிரமான ட்விட்டுகளுக்கு சிறைத்தண்டனை என்றால், தமிழில் சமூகவலைத்தளங்களில் இயங்கும் தொண்ணூறு சதவிகிதம் பேரை சிறையில் தள்ள வேண்டியிருக்கும். இவர்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒருமுறையாவது வெகுஜன ஊடகங்களில் வெளிவந்த வண்ணப் படங்களையும், அதற்கு எழுதப்பட்ட கமெண்டுகளையும் தங்கள் பக்கங்களில் பிரசுரித்தவர்களாகவே இருப்பார்கள். பேராசிரியர் எழுதியிருப்பதை விடவும் மோசமான கமெண்டுகளையும், கிசுகிசுக்களையும் தமிழில் சகஜமாக பத்திரிகைகளிலேயே நாம் வாசிக்கலாம். பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் இதற்காக சிறைக்குச் செல்வது அநியாயம் என்று அறிவுலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது (சாவி அட்டைப்பட ஜோக் விவகாரம் நினைவிருக்கிறதா?). இவ்வகையில் இதை கருத்துரிமைக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையாகவும் பார்க்கலாம்.

அதிகபட்சமாக காவல்துறையினர் அழைத்து விசாரித்து, இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று எழுதி வாங்கிக் கொள்ளவேண்டிய ஒரு செயலுக்கு, என்னமோ ஆசிட் அடித்தவர்களை நடத்துவது மாதிரி நடத்தியிருப்பதற்கு பின்னால் என்ன அழுத்தம் இருக்குமென்று தெரியவில்லை. சகோதரியின் அங்கிள் ஓர் ஐ.பி.எஸ். அதிகாரி என்று கேள்விப்படுகிறோம். ஒருவேளை அதுதான் காரணமா? சகோதரி சின்மயி என்னவோ ஒரு கரடிப்பொம்மைக்கு ஆசைப்பட்டது போலவும், அதை வாங்கிக் கொடுக்க அவரது தாயாரும், உறவினரும், காவல்துறையினரும் பாடுபடுவதைப் போலவும் இந்த விவகாரம் தோன்றுகிறது.
 சகோதரிக்கு அது வெறும் ஆசை. சிறை சென்றவர்களுக்கோ வாழ்க்கை.

தமிழக முதல்வர் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் தாயுள்ளம் கொண்டவர் என்பதிலோ, கருணைக்கடல் என்பதிலோ ஐயம் இருந்தால் கழுவில் ஏற்றப்பட தகுதியானவர்கள் ஆவோம். எத்தனையோ பேருக்கு சகாயம் செய்யும் அம்மாவின் கருணைப்பார்வை ஒரு சாதாரண அரசு ஊழியருக்கும், பேராசிரியருக்கும் மட்டும் அநீதி செய்துவிடக்கூடாது. அம்மாவின் ஆட்சியில் கண்ணியம் மிக்க காவல்துறையினர் புறா மீது தேர்க்காலை இட்ட இளவரசனாக வரலாற்றில் பதியப்பட்டு விடக்கூடாது. எது குற்றமோ, அதற்கு மட்டும் தண்டனைகள் தருவதுதான் நீதி. இந்த விவகாரத்தில் அநீதி நடந்துவிடக் கூடாது என்பதை மட்டும் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்கிற வாதத்தில் எனக்கும் ஒப்புமை உண்டு. அதற்காக உப்பைத் தின்ற குற்றத்துக்காக சயனடை அருந்தவேண்டும் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

16 அக்டோபர், 2012

யாருக்கு மாப்பிள்ளை யாரோ?


மருத்துவர் அய்யா சமீபத்தில் வானூர் என்கிற ஊரில் வான்மழையாய் பொழிந்திருக்கிறார்.

150 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட வன்னியன் ஏன் இப்போது ஆளமுடிய வில்லை? ஏனெனில் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. இதனை நான் 35 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஒட்டுமொத்த வன்னியர்களும் மாம்பழத்துக்கு ஓட்டு போட்டால் வன்னியன் ஆளுவான். மண்ணில் நெற்பயிரோடு வீரத்தையும் விளைவித்தவன் வன்னியன்.

வெள்ளையன் என்பதை வன்னியன் என்று தவறுதலாக சொல்லிவிட்டாரா தெரியவில்லை. அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை வெள்ளையர் ஆண்டதாக பாடப்புத்தகங்களில் தவறுதலாக எழுதிவிட்டார்களா என்றும் தெரியவில்லை.

முன்பே அய்யா அருளியிருந்தார். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு தலித்தான் தமிழகத்தின் முதல்வர் என்று. அய்யாவுக்கு செங்கல்பட்டு தாண்டினால் ‘செலக்டிவ் அம்னீசியா’ வந்துவிடுகிறது. ஏற்கனவே என் குடும்பத்தில் இருந்து யாராவது கோட்டையில் கால் வைத்தால், முச்சந்தியில் நிறுத்தி சாட்டையால் அடியுங்கள் என்று சாடியிருந்தார். ஆனால் சின்ன அய்யா செங்கோட்டைக்குள் கேபினட் அமைச்சராக நுழைந்தார். பெரிய அய்யா முதல்வரான அம்மாவை வாழ்த்தி ஆசிபெற செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் ஒருமுறை 'தேவுடு' காத்தார்.

மேலும் பேச்சில் ’நச்’சென்று ஒரு ‘பஞ்ச்’ வைத்திருக்கிறார் மருத்துவர் அய்யா. அதுதான் இப்போது பஞ்சாக பற்றிக் கொண்டிருக்கிறது.

யாதவர், முதலியார், நாயுடு உள்ளிட்ட சாதி கட்சிகளுடன் தான் கூட்டணி

ஒருவகையில் டாக்டர் ராமதாஸை நாம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமல் உளமாற ‘பட்’டென்று பட்டாசாய் வெடித்திருக்கிறார். மக்கள், சமூகம், நாடு என்று சல்லியடிக்காமல் சல்லிசாய் வெல்லுவதற்கு இதுதான் எங்களது வழியென்று ஆணியடித்தாற்போல ஆப்பு அடித்திருக்கிறார். ஆப்பு அவருக்கா, நமக்கா என்பது தேர்தல் முடிந்து ஓட்டுகளை எண்ணும்போது தெரியும். சாதிக்கு கட்சி நடத்துபவர், சாதிக்கட்சிகளோடு கூட்டணி வைப்பதுதான் இயல்பு. சாதியால்தான் சாதிக்க முடியுமென்கிற அவரது முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய முத்தான முடிவுக்கு மீண்டும் வந்திருக்கிறார். வாழ்க்கை மட்டுமல்ல. அரசியலும் ஒரு வட்டம்தான்.

அய்யாவைப் போலவே மற்ற அரும்பெரும் தமிழக தலைவர்களும் திறந்த மனதோடு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த தமது ‘ஹிட்டன் அஜெண்டாவை’ தம் உள்ளத்தைத் திறந்து அறிவித்தால், ஓட்டு போடும் யந்திரங்களிடம் உடனடி ‘ஹிட்’ ஆகும். அவர்கள் அறிவிக்காவிட்டாலும்அவர்களது சார்பில் அவர்களது குரலில் நாமே அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
கலைஞர்

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் உடன்பிறப்புகள் அழகிரி, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோருக்கு மத்திய கேபினட் அமைச்சரவையில் இடம் தர முன்வருபவர்களோடுதான் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சோப லட்சம் உடன்பிறப்புகள் வலியுறுத்துகிறார்கள். ஆனாலும் கூட்டணி விஷயத்தில் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அண்ணா கண்ட கழகம் இருந்துவிடாது. நமது சுயமரியாதையை காக்கும் வகையில் பேராசிரியர் தலைமையில் கழகத்தின் செயற்குழு, பொதுக்குழுவினை கூட்டி இதே முடிவினை எடுப்போம்.

ஜெயலலிதா
1952ல் தொடங்கி தமிழகத்தில் நடந்த ஆட்சிகளிலேயே நல்லாட்சி எனது ஆட்சிதான் என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள். தங்கள் சகோதரியின் உத்தமமான ஒளிமிகுந்த ஆட்சி தங்கள் மாநிலத்திற்க்கு மட்டுமின்றி, இருளாய் கிடக்கும் இந்திய நாட்டுக்கே விளக்கேற்றி பயன்பட வேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குப் படவில்லை. எனவே என்னை, உங்களது ஆருயிர் சகோதரியை பிரதமராக ஒப்புக்கொள்ளும் கட்சியுடன் மட்டுமே புரட்சித்தலைவர் கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்கும். தேர்தல் முடிந்து, நான் செங்கோட்டையில் பதவி ஏற்றுக் கொண்டவுடனேயே அந்த கூட்டணி முடிந்தும் போகும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த்
யார் கூடவும் கூட்டணி கிடையாது. மக்களோடும், இறைவனோடும் மட்டும்தான் தேமுதிகவுக்கு கூட்டணி. அதுவும் மக்களோடு மட்டுமா அல்லது இறைவனோடும் சேர்த்தா என்பதை இன்றைக்கு இரவு அறிவிப்பேன். ஆனா யாராவது கூட்டணிக்கு கூப்பிட்டா அதை மக்களும், இறைவனும் ஒத்துக்கிட்டா.. அவங்களோட கூட்டணி வெச்சுக்கிறதுக்கு நான் ரெடி. ஆனா கூட்டணிக்கு முன்னாடியே ஜெயிச்சவுடனேயே கழட்டி விட மாட்டோம்னு ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி கைநாட்டு வெச்சி மக்களுக்கும், கடவுளுக்கும் முன்னாடி கற்பூரம் ஏத்தி அடிச்சி, அந்த கட்சி எங்கிட்டே ஒப்பந்தம் போடணும். போடவைப்பேன்.

கம்யூனிஸ்ட்டுகள்
எங்களை மதிக்கணும்லாம் அவசியமில்லைங்க. ஏதோ ஒண்ணோ, ரெண்டோ சீட்டு பார்த்து போட்டு கொடுத்தா போதும். நாப்பது தொகுதியிலேயேயும் கவுரவம் பார்க்காம ‘ஜிந்தாபாத்’ போட நாங்க தயார்.

(தா.பாண்டியன் குறுக்கிட்டு) சீட்டு கொடுக்கலைன்னா கூட ஜெயலலிதாவோட ஆட்சி டெல்லியி
லும் மலரணும்னு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். ஜெயலலிதாவை கோபப்படுத்தாம பாத்துக்கணும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை.

வைகோ 
எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?
நேரத்திலே நான் ஊர் செல்லவேண்டும்,
வழி போக துணையாய் அன்பே வாராயோ?


முகாரி ராகத்தில் சோகமாகப் பாடுகிறார். நாஞ்சில் சம்பத் தேம்பித் தேம்பி அழுவதைப் பார்த்து திடீரென ஆவேசமாகி,

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க

என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

15 அக்டோபர், 2012

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், இரு நாட்களுக்கு முன்பாக ‘கேப்டன் அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது தமிழில் மொழிபெயர்த்தால்நோ ப்ரா டே’. இருவரும் மார்புக்கச்சை அணியாமல் ஏகப்பட்ட போட்டோக்கள் எடுத்து, ட்விட்டரில் பகிர்ந்து தங்களது ஃபாலோயர்களை ஏகத்துக்கும் குஷிப்படுத்தினார்கள். எலிசபெத் மகாராணி கூடநோ ப்ரா டேகுறித்து ஏதோ ட்விட் போட்டிருக்கிறார்களாம்.

இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்கள் பலரும் விடுதலையாக ஃபீல் செய்திருக்கிறார்கள். இந்த நாளை சுதந்திரத் திருநாளாக கொண்டாடிய பெண்களைப் பார்த்து வேறொரு பெண் கேலியாகச் சொன்னார், For me every day is No Bra day

நான் பதிமூன்று வயதில் பேண்ட் போட ஆரம்பித்ததில் இருந்தே மேல் உள்ளாடையாக ‘கட் பனியன்’ (கை வைக்காத பனியன்) அணிந்து வருகிறேன். டீஷர்ட் அணியும்போது மட்டும் கட்பனியனுக்கு டாட்டா. என்றாவது பனியன் ஸ்டாக் இல்லாதபோதோ அல்லது மறந்தோ அணியாவிடில், ஆடையே அணியாதது போன்ற ஓர் உணர்வு நாள் முழுக்க uneasyயாக உணரவைக்கும்.

மேற்கத்திய நாடுகளில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை பெண்கள் ‘பிரா’ அணிவதாக சொல்கிறார்கள். சமீப ஆண்டுகளாக பெண் என்றால் இந்த உடையை அணிந்தே ஆகவேண்டும் என்பதாக ட்ரெஸ்-கோட் கலாச்சாரம் உருவாகியிருக்கிறது. இருப்பினும் நம் நாட்டில் நகர்ப்புறம் தவிர்த்துப் பார்த்தால், ‘பிரா’ இன்னமும் ஓர் ஆடம்பர உடைதான்.

ஓக்கே, நாம் தலைப்புக்கு வருவோம்.

அக்டோபர் மாதம் முழுக்கவே மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப் படுகிறது. இந்த விழிப்புணர்வுக்கு சொல்லப்பட்ட வித்தியாசமான ஐடியாக்களில் ஒன்றுதான் ’நோ ப்ரா டே’. அதாவது “ஏன் இன்று பெண்கள் பிரா அணியவில்லை?” என்கிற சந்தேகம் யாருக்கோ ஏற்பட்டு, என்னை மாதிரி மேலதிகமாக விசாரித்து மார்பகப் புற்றுநோய் பற்றி வாசித்தோ, கேட்டோ விழிப்புணர்வு பெறுவார்கள் என்பதுதான் ஐடியா. இந்த ‘புத்திசாலித்தனமான’ ஐடியாவின் காரணமாகதான் இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்த ‘டே’ கொண்டாடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் ‘தேசிய மார்புக்கச்சை அணியா தினம்’ வெகுசிறப்பாக ஜூலை 9 அன்று வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அந்தந்த ஊர் செலப்ரிட்டீஸ்களை போட்டோ எடுக்க அமெரிக்க போட்டோகிராபர்களிடையே வெட்டுக்குத்து கூட நிகழ்வதுண்டு. இவ்வருடம் விழிப்புணர்வுக்காக உலகளாவிய அளவில் களமிறங்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்தியாவில் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே ஆகிய இருவரும் ஆதாரப்பூர்வமாக இத்திருநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். 
ப்ராவுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் மருத்துவரீதியாக, நேரடியாக என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால் ப்ரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய சாத்தியங்கள் கூடுதலாக இருப்பதாக கூறி பதினேழு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அமெரிக்கத் தம்பதியர் புத்தகம் எழுதி பரபரப்பு ஏற்படுத்தினார்கள். அந்தப் புத்தகத்தின் பெயரே கொஞ்சம் டெர்ரர் ஆக இருக்கிறது, ‘Dressed to kill’

ப்ரா அணிவதால் இயல்பான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அதுவே புற்றுநோய்க்கும் காரணமாகிறது என்று வாதிடுகிறது அந்த புத்தகம். எழுபது சதவிகித மார்பகப் புற்றுநோய், காரணம் சொல்லவியலா காரணங்களால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த காரணம் ‘பிரா’ தான் என்று அடித்துப் பேசுகிறார்கள் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள்.

இருபத்தி நான்கு மணி நேரமும் ப்ரா அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு, பிராவே அணியாத பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதை விட நூற்றி இருபத்தி ஐந்து சதவிகிதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அணுகுண்டை தூக்கிப் போடுகிறார்கள்.

இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு முன்பாக மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்களிடம் அவர்கள் ஒரு கணக்கெடுப்பு எடுத்தார்களாம். அதில்,

- மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்களில் நான்கில் மூவர் நாள் முழுக்க பிரா அணியும் பழக்கம் கொண்டவர்கள்.

- ஏழில் ஒருவர் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரமாவது ப்ரா அணிபவர்கள். தூங்கும்போது மட்டும் ஃப்ரீயாக இருப்பவர்கள்.

என்று ஒரு புள்ளிவிவரத்தை அளிக்கிறார்கள்.

இந்த புத்தகத்துக்கு உலகளாவிய ப்ரா ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வருடா வருடம் பல்லாயிரம் கோடி லாபம் பெற்றுத்தரும் ப்ரா விற்பனையை முடக்க நடக்கும் சதியே இந்தப் புத்தகம் என்று ப்ரா விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கினார்கள். போதுமான உண்மையோ, ஆதாரங்களோ, கணக்கெடுப்புகளோ இல்லாத அர்த்தமற்ற புத்தகம் என்று மருத்துவ உலகமும் இந்த புத்தகத்தை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது. இருந்தாலும் கொஞ்சம் அச்சமாகதான் இருக்கிறது. கட் பனியன் அணிவதால் இதுமாதிரி ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்று யாரேனும் ஒரு நல்ல மருத்துவரை முதலில் கலந்தாலோசிக்க வேண்டும்.

No Panty Day கூட மேலைநாடுகளில் கொண்டாடப்படுவது உண்டாம். மே மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இந்த நாளாக கொண்டாடப்படுகிறதாம். அன்றைய நாளில் ஷெர்லினும், பூனமும் என்னென்ன போட்டோக்களை பகிரப்போகிறார்களோ என்று இப்போதே கற்பனை செய்துப் பார்த்து, அதன் விளைவாக கிளுகிளுப்பு கலந்த அச்சம் ஏற்பட்டிருப்பதால் லேசாக டெங்கு காய்ச்சல் அடிக்கிறது.