26 அக்டோபர், 2012

மழைப்பாக்கம்


மடிப்பாக்கம்என்பது சென்னை மாநகருக்கு வெகு அருகில் இருக்கும் சிற்றூர். சொல்லிக் கொள்ளும்படியாக எந்த சிறப்பம்சங்களும் இல்லாத இந்த ஊரை மழைக்காலத்தில் மட்டும் தமிழகம் முழுக்க அறிகிறார்கள். சென்னையில் வெள்ளம் என்றால் ஊடகங்கள் முதலில் உச்சரிக்கும் பெயர் மடிப்பாக்கமாக இருக்கிறது. மழை வெள்ளத்தைப் பார்வையிடும் முதல்வர், மடிப்பாக்கத்தை நிச்சயம் பார்வையிடுவார். சென்னையின் சிரபூஞ்சி இது. மற்ற பகுதிகளை விட மழை இங்கே அதிகமாகப் பெய்வதைப் போன்ற தோற்றம் எப்போதுமே கிடைக்கும்.

கட்டுமரத்தை கடலில் பார்த்திருப்பீர்கள். படகுகளை ஆற்றிலோ, ஏரியிலோ பார்த்திருப்பீர்கள். சாலையில் பார்த்திருக்கிறீர்களா? மழைக்காலத்தில் மடிப்பாக்கம் சாலைகளில் பார்க்கலாம். வேளச்சேரியை ஒட்டி மடிப்பாக்கத்தை இணைக்கும் பிரதான சாலை காட்டாறாய் மாறும். அலுவலகத்துக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்பவர்களுக்கு பஸ் நிறுத்தப்பட்டு, போட் சர்வீஸ் தொடங்கும்.

பிறந்ததிலிருந்து முப்பது ஆண்டுகளாக இங்குதான் வசிக்கிறேன். முதன்முறையாக விசைப்படகை பார்த்தது மடிப்பாக்கம் சாலையில்தான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பெருமழைக் காலத்தில், வீடுகளில் மாட்டிக்கொண்டு சோறு, தண்ணீர் இல்லாமல் வாடிக்கொண்டிருந்தவர்களை மீட்க விசைப்படகுகள் வந்தது. வெள்ளக் கரையோரத்தில் கூட்டமாக நின்றுப் பார்த்தோம். தூரத்தில் தெரிந்த பல வீடுகளில் முதல் தளம் முற்றிலுமாக மூழ்கி மொட்டை மாடியில் குளிருக்கும், உயிருக்கும், வெள்ளத்துக்கும் அஞ்சி நடுங்கி குடும்பம் குடும்பமாக அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தவர்களை கண்ட காட்சியை நினைத்தால் இன்றைக்கும் ஜன்னி வருகிறது.

மழையில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்பதால் மாநகரப் போக்குவரத்துத் துறைக்கு, அந்தகாலத்தில் மடிப்பாக்கம் அபிமானமில்லாத ஊராக மாறிப்போனது. “எங்க ஊருக்கு கூடுதல் பேருந்து விடவேண்டும்” என்று கோரிக்கை வைத்தால், “உங்க ஊரில் முதலில் சாலைகளைப் போடுங்கள்” என்று பதிலளிப்பார்கள். முறையான போக்குவரத்து இல்லை. மழைக்காலத்தில் தனித்தீவாகி விடும் போன்ற காரணங்களால் மற்ற பகுதியினரோடு கலாச்சார, பண்பாட்டு உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ‘மடிப்பாக்கத்தானுக்கு பொண்ணு கிடையாது’ என்று ‘வேலை காலியில்லை’ பாணி போர்டுகளை பெண்களைப் பெற்றவர்கள் வீட்டு வாசலில் எழுதி மாட்டாததுதான் பாக்கி.

மறைந்த தமிழறிஞர் தென்கச்சி கோ.சாமிநாதன் மடிப்பாக்கத்தில்தான் வசித்தார். யாராவது அவரிடம் எங்கே வீடு என்று கேட்டால், இங்கேதான்.. மழைப்பாக்கத்தில் என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டு, வெடிச்சிரிப்பு சிரிப்பார்.
புவியியல்ரீதியாக மடிப்பாக்கம் சபிக்கப்பட்ட பூமி. கடல் மட்டத்தைவிட தாழ்வான பகுதி. அந்த காலத்தில் மடிப்பாக்கத்துக்கு மேற்கே பல்லாவரம், மூவரசம்பேட்டை, கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் நிறைய குன்றுகள் இருந்தன. நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏராளமான ‘கல்’ தேவைப்பட்டதால் குடைந்து, குடைந்து இவற்றில் பெரும்பாலானவை முற்றிலுமாக இன்று சமப்படுத்தப்பட்டு விட்டன. அந்த குன்றுகளில் இருந்து வழியும் மழைநீர் மடிப்பாக்கத்துக்கு தெற்கில் ஒரு சிற்றாறாய் உருமாறி, கழிவுவெளி எனப்படும் பகுதியில் சேர்ந்து மாபெரும் ஏரியாய் உருப்பெறும். இந்த கழிவுவெளி இப்போது ‘கைவேலி’ என்று பெயர் மாறிவிட்டது. இங்கிருந்துதான் உலகப் புகழ்பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதி தொடங்குகிறது. கோடைக்காலத்தில் பசுமையான சமவெளியாக இது உருமாறும் என்பதால், கால்நடை மந்தைகளுக்கு கொண்டாட்டம். உணவுத் தேவைக்காக மந்தை, மந்தையாய் கால்நடைகளை இங்கே ஓட்டி வருவார்கள். எனவே வெயிற்காலத்தில் இப்பகுதியை ‘மந்தைவெளி’ என்றும் அழைப்பார்கள். பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு இயற்கை தந்த கொடையான ‘கைவேலி’ இன்று நகரமயமாக்கலின் அசுரப்பசிக்கு இரையாகிவிட்டது.

ஏரி மாவட்டம் என்று சொல்லப்பட்ட ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவாயிலாக இருந்த காரணத்தால் இரண்டு பெரிய ஏரிகள். ஏராளமான குளங்கள். தங்கு தடையற்ற ஏரிப்பாசனம் என்பதால் கண்ணுக்கு தெரியுமட்டும் பச்சைப்பாய் விரித்த வயல்கள். இவற்றில் பெரும்பாலானவை இன்று குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன. ஆக்கிரமிப்பில் இருந்துத் தப்பிய நீர்நிலைகள் ஓரிரண்டு இன்று அடையாளத்துக்கு மிச்சமிருக்கின்றன. விவசாயம் சுத்தம்.

இன்றைய மடிப்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகே ஒரு குளம் உண்டு. சோழர்காலத்து சிவன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட குளம் அது. மழைக்காலத்தில் தெளிவான நீர் நிரம்பியிருக்கும். இங்கே தெர்மாக்கோல் உதவியோடு படகு கட்டி, நண்பர்களோடு படகு ஓட்டியிருக்கிறேன். நீச்சல் அடித்திருக்கிறேன். தூண்டில் போட்டு மீன் பிடித்திருக்கிறேன். இன்று அந்த குளம் கூவம் ஆற்றின் துணைநதி போல மாறிப்போய் இருக்கிறது.

சென்னை மாநகரப் பெருக்கத்தின் காரணமாய் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட மடிப்பாக்கம் சர்வநிச்சயமாக இன்று ஒரு நகரம். மழைக்காலத்தில் மட்டும் நரகம். இன்று காஃபி டே இருக்கிறது. நவீன உணவு விடுதிகள், பள்ளிகள், வங்கிகள், சூப்பர் மார்க்கெட் என்று ஒரு பெருநகரத்துக்குரிய எல்லா அடையாளங்களும் உண்டு. கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக மடிப்பாக்கம் பஞ்சாயத்து இரண்டு வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் மாநகர அந்தஸ்துக்கு அத்தியாவசியமான கழிவு மற்றும் மழைநீர் வடிகால் வசதி (டிரைனேஜ்) மட்டும் சாத்தியப்படவேயில்லை.

எல்லாமே மாறிப்போனாலும் ‘மழை’ மட்டும் மடிப்பாக்கத்தில் மாறவேயில்லை. இன்றும் மழைக்காலத்தில் மடிப்பாக்கம் ‘வெனிஸ்’தான். அடுத்தடுத்து இரண்டு புயல் வந்தால் ‘போட்’ தான் போக்குவரத்துக்கு எங்களுக்கு ஒரே கதி.

5 கருத்துகள்:

  1. கைவேலி பெயர் காரணம் இன்று தான் தெரிந்து கொண்டேன். மழை காலத்தில் போட் தான் என்று தெரிந்தும் புதுசு புதுசா எவ்ளோ வீடுகள் வந்திருச்சு.

    பதிலளிநீக்கு
  2. நிலைமை முன்பு அளவு நிச்சயம் இப்போ மோசமில்லை என்று தான் சொல்லணும். நாங்கள் வந்த புதிதில் எங்கள் வீட்டின் பின் புறம் வழியாக காமாட்சி ஆஸ்பத்திரி பக்கம் வரவே முடியாது. அப்போது அங்கு போட் சென்று பார்த்திருக்கிறேன்.

    கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக நிச்சயம் போட் செல்வதில்லை என நினைக்கிறேன். தி. மு. க ஆட்சி காலத்தில் செய்த சில விஷயங்களாலும் பல இடங்களில் வீடுகள் வந்து விட்டதாலும் தற்போது போட்டுக்கு அவசியமில்லை

    இப்போது மடிப்பாக்கதில் ஒரு கிரவுண்ட் மிக குறைந்த விலையே அறுபது லட்சத்துக்கு மேல் தான்

    பதிலளிநீக்கு
  3. மடிப்பாக்க்ம் குறித்துமிகச் சரியாகப்
    பதிவு செய்துள்ளீர்கள்
    படங்களுடன் பதிவை அருமையாகக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. 100% true about Madipakkam..

    btwn, When I try to access your blog, McAfee give this message. "McAfee TrustedSource web reputation analysis found potential suspicious behavior on this site which may pose a security risk. Use with caution.".

    பதிலளிநீக்கு
  5. ஓ அப்படி இருக்குமா மடிப்பாக்கம் !!!

    பதிலளிநீக்கு