4 டிசம்பர், 2012

அபிமானங்கள் உடையும் காலம்

2012. என்னுடைய பழைய ‘ஐடியல்’ பலரையும் ஒழித்துவிட்டது. வயது காரணமா என்று தெரியவில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாய் கமலுக்காக யாரிடமாவது எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருந்திருக்கிறேன். இப்போது கமல் அபிமானிகளிடம் நானே சண்டை போடுமளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. அதையெல்லாம் விடுங்கள். ரசனை, பார்வைக் கோளாறாக இருக்கலாம்.
தனிப்பட்ட முறையில் மிக அதிகமாய் பாதிக்கப்பட்டிருப்பது டாக்டர் ராமதாஸ் அவர்களின் சமீபகால செயல்பாடுகளால்தான். கமலை மாதிரியே நினைவுதெரிந்த காலத்தில் இருந்து இவர் என்னுடைய ஹீரோ.
பலரும் அவரை சாதிவெறியர் என்றோ, அரசியல் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தி என்றோ விமர்சித்தபோதெல்லாம் அதெல்லாம் பெரியதாக இம்பேக்ட் ஏற்படுத்தியதில்லை. வடமாவட்டங்களில் வஞ்சிக்கப்பட்ட சாதியாக வன்னியர்களை நான் கருதியதும் ஒரு காரணமாக இருக்கலாம். சாராயம் காய்ச்சுகிற சாதி என்று வன்னியர்களை கீழ்மைப்படுத்திப் பேசியவர்கள் என்னைச் சுற்றி நிறைய இருந்தார்கள்.
அப்படிப்பட்ட சமூகத்தில் பிறந்து தன்முயற்சியால் அந்த காலத்திலேயே டாக்டருக்கு படித்து வளர்ந்தவர். நாம்தான் மேலே வந்துவிட்டோமே என்கிற சுயநலத்துக்கு இடம்தராமல் தான் பிறந்த சமூகத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். உயிரைக் கொடுத்து போராடி ‘எம்.பி.சி. கோட்டா’ கொண்டுவர காரணமாக இருந்தவர். கல்வி குறித்த விழிப்புணர்வை ஊட்டி பல்லாயிரம் இளைஞர்கள் பட்டதாரிகளாக பரிணமிக்க கலங்கரை விளக்காய் நின்றவர். ராமதாஸை கொண்டாட இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளிலேயே வித்தியாசமான கட்சியாக பா.ம.க.வை உருவாக்கியவர். எளிய மக்களுக்கு இடம் தருவதோடு, அறிவுஜீவிகள் எளியவர்களோடு கலக்க அருமையான களம் அமைத்துத் தந்தவர். அரசின் பிரச்சினைகளை விமர்சிப்பதோடு நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வை அறிவுபூர்வமான முறையில் முன்வைப்பவர். வருடா வருடம் நிபுணர்களின் அறிவுறுத்தலில் அவர் போடும் ‘மாதிரி பட்ஜெட்’ போன்ற முயற்சிகள் இந்திய அளவில் எந்த கட்சியும் செய்யாத சாதனை.
மிகச்சரியான சந்தர்ப்பத்தில் வன்னியர் சங்கத்திலிருந்து பா.ம.க உருவானது. எம்.ஜி.ஆரின் இல்லாமையை அதிகம் பயன்படுத்திக்கொண்டது ஜெ.வா அல்லது டாக்டரா என்றால் டாக்டர்தான் என்று தோன்றுகிறது. ராஜீவ் மரண அனுதாபத்திலும் சட்டமன்றத்தில் தன் கணக்கை சரியாகவே துவக்கியது பா.ம.க., என்ன, ஒரு அரசியல் கட்சியாக மலர்ந்தபின் கொள்கை, கோட்பாடுகள் குறித்த குழப்பம் எல்லோரையும் போலவும் டாக்டருக்கும் வந்தது. ஆரம்பத்தில் தன்னை திராவிடக் கட்சிகளின் நீட்சி போல காட்டிக் கொண்டார். பிற்பாடு அறுபதுகளில் திமுக கைவிட்ட கொள்கைகளை கையில் எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட திராவிட தமிழ் தேசியம் மாதிரி. ஒருகட்டத்தில் தீவிரமான தமிழ்தேசியக் கட்சியைப் போன்ற தோற்றத்துக்கு பா.ம.க., வந்தது. ஆனால் இக்கட்டத்தில் அடைந்த தேர்தல் தோல்விகள் பா.ம.க.வின் எதிர்காலம் குறித்த குழப்பத்தை அதன் தலைவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான் பழைய திண்ணை அரசியலுக்கு மாறவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டதாக அக்கட்சியின் தலைமை கருதுகிறது. எவ்வகையிலும் இது பரிணாம வளர்ச்சியாக இருக்காது.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பாரம்பரியப் பெருமைகளை இழப்பதாக நாம் கருதினாலும் திராவிடக் கட்சிகளின் இருத்தலியல் என்பது, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சியை நிலைப்படுத்துவது, அதன் மூலமாக தாம் நம்பும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது வழக்கமாக இருக்கிறது. பா.ம.க. சந்தர்ப்பத்தங்களை பயன்படுத்தியதுண்டு. ஆனால் ‘கொள்கைகள்’ என்று தாம் நம்பியதை சந்தர்ப்பங்களுக்காக பலி கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களோடு பகை போதும் என்கிற முடிவுக்கு இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்த கொள்கை முடிவை இன்று டாக்டர் ராமதாஸ் காற்றில் பறக்க விட்டிருப்பது இதைத்தான் காட்டுகிறது. திருமாவளவனோடு இணைந்து இரவும் பகலுமாக அவர் பாடுபட்ட முயற்சிகள் எல்லாம் இன்று விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. சமூக நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை என்று டாக்டரும் நம்பத் தொடங்கிவிட்டதையே தர்மபுரிக்கு பிறகான அவரது செயல்பாடுகள் உணர்த்துகிறது. மேலும் கட்சியின் பிடி டாக்டரிடம் இல்லாமல், காடுவெட்டி குரு போன்றவர்கள் கைக்கு போய்விட்டதையும் உணர்ந்து வருத்தப்பட வேண்டியிருக்கிறது.
கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் பெரியாரியக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியாகவே டாக்டரின் சமீபக்கால நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பா.ம.க., பண்பட்ட அரசியல் கட்சியல்ல, இன்னமும் அதே சாதிச்சங்கம்தான் என்பதை கோடிட்டுக் காட்டுவதாகவே டாக்டரும், பா.ம.க., தலைவர்களும் நடந்துக் கொள்கிறார்கள். கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் ஹீரோ, இன்று ‘காதல்’ படத்து வில்லனாய் தெரிவது காலத்தின் கோலம். சகிக்க முடியாத கொடுமை.

3 டிசம்பர், 2012

நடுவுலே திடீர்னு ஜட்டியைக் காணோம்

“கொடியிலே காய வெச்சிருந்தது எங்கப் போச்சி? இதைப் போயி காக்காவா தூக்கிட்டுப் போயிருக்கும்?”

“ஒழுங்கா தேடுங்க. கருமம். தலைதீபாவளிக்கு வந்த மாப்புள்ளை மோதிரம் காணோம், செயினைக் காணோம்னு சொன்னாலாவது கெத்தா வெளியே சொல்லிக்கலாம்”

“ஏண்டி. எது காணோமோ அதை தானேடி காணோம்னு சொல்ல முடியும். இதுக்காக செயினையும், மோதிரத்தையும் தொலைச்சிட்டு, காணாம போனது என்னோட ஜட்டி இல்லே.. செயினும் மோதிரமும்னு சொல்ல சொல்றீயா?”

“எதுக்கு இப்போ நாய் மாதிரி கத்தறீங்க. தொலைஞ்சது தம்மாத்தூண்டு ஜட்டிதானே? அதுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு?”

“அதென்னடி நாய் மாதிரி.. நாய்னு டைரக்டாவே சொல்லிட்டு போவவேண்டியது தானே?”

“அய்யோ.. அய்யோ.. விடுங்க வேற ஜட்டியை எடுத்து போட்டுட்டு நீட்டா வெளிய வாங்க. யாரு காதுலேயாவது விழுந்ததுன்னா ஆயுசுக்கும் கேலி, கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க!”

“ஹேய்.. அது காஸ்ட்லி ஜட்டிடீ. தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வர்றமே, கொஞ்சம் கவுரவமா இருக்கட்டும்னு காஸ்ட்லியா வாங்கனேன். இதுவரைக்கும் இவ்வளவு விலை கொடுத்து வாங்குனதே இல்லை!”

“என்ன சத்தம்.. என்ன சத்தம்? என்ன மாப்புள்ளே. எம்பொண்ணு பஜாரி மாதிரி கத்துறாளா?”

“இல்லை மாமா.. அதெல்லாம் ஒண்ணுமில்லே!”

“இல்லையே ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சத்தம் போடுறா மாதிரி கேட்டுதே?”

“அப்பா. அவரோட ஜட்டியை காணோமாம். நேத்து காலைலே குளிச்சிட்டு மாடியிலே இருந்த கொடியிலே காயப்போட்டு வெச்சிருந்தது”

“பச்சை கலரு ஜட்டியா?”

ஆர்வத்தோடு “ஆமாம் மாமா. நீங்க பார்த்தீங்களா?”

“அடடே அதே மாதிரி என்கிட்டேயும் ஒண்ணு இருக்கறதாலே என்னோடதுன்னு நெனைச்சி காலையிலே எடுத்து போட்டுக்கிட்டேன். கொஞ்சம் டைட்டா இருக்கறப்பவே டவுட் வந்தது..”

“கருமம்.. என்ன மாமா இது? ஒரு ஜட்டி கூட உங்களோடதா உங்களோடது இல்லையான்னு உங்களுக்கு தெரியாது?”

“மாப்ளே.. ஓவரா பேசாதீங்க. வேணும்னா இப்பவே நான் கயட்டி துவைச்சி கொடுத்துடறேன். சும்மா சத்தம் போடுற வேலையெல்லாம் வெச்சிக்காதீங்க!”

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம். சகிக்க முடியாத இந்த துயரச் சம்பவத்தைச் சந்தித்த மாப்பிள்ளை என்னுடைய அண்ணன். சம்பந்தப்பட்ட மாமனார் வெற்றிகரமாக பொண்ணு கொடுத்து மொகலாயப் படையெடுப்பு மாதிரி எங்கள் குடும்பத்தின் மீது படையெடுத்து தவிர்க்க முடியாத சக்தியாக இப்போது விளங்கிக் கொண்டிருக்கிறார். எங்கள் குடும்பத்தின் நல்லது கெட்டது எதுவுமே இவரின்றி இன்று அணுவும் அசையாது. ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’ ஜனகராஜ் மாதிரி லவ்வபிள் மாமனார். எழுபத்தாறு வயதாகிறது. இன்னமும் ஸ்பீடாக சைக்கிளில் டபுள்ஸ் மிதிக்கிறார். வாராவாரம் ஞாயிறுக்கிழமை காலையிலேயே சைக்கிளோடு வந்துவிடுவார். முன்பெல்லாம் ஷெட் கிணறுகளில் குளிக்கப் போகும்போது, எங்களோடு வந்து டைவ் அடிப்பார். 

அண்ணனின் சோக வரலாறு இந்த தம்பிக்கும் தொடர்கிறது. அந்த துயரச்சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கழித்து, மாமனார் அவருடைய தம்பிமகளை பிடித்துதான் எனக்கும் கட்டிவைத்தார்.

1 டிசம்பர், 2012

தி போலிஸ் ஸ்டோரி

கடந்த அக்டோபர் 27 அன்று மருதுபாண்டியர் நினைவு தினத்தின் போது வேம்பத்தூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார் திருப்பாச்சேத்தி காவல் நிலைய துணை ஆய்வாளர் ஆல்வின் சுதன். அங்கு இரண்டு தரப்பினருக்கான மோதல் ஏற்பட்டது. அதுகுறித்த விசாரணைக்கு சென்ற ஆல்வின் சுதனை சிலர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர். சிவகங்கை மாவட்டம் முழுக்க காவல்துறையினர் கடுமையான அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தார்கள்.

நவம்பர் 6 அன்று துணை ஆய்வாளரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபு, முத்துக்குமார், மகேஷ் மூவரும் திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பிரபு, பாரதி ஆகிய இருவரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் சிவகங்கை கோர்ட்டில் மனுதக்கல் செய்தனர்.

இதற்கிடையே பிரபு, பாரதி இருவர் மீதும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட தீண்டாமை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக மதுரை மத்திய சிறையிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது இருவருமே போலிஸிடமிருந்து தப்பித்து விட்டார்களாம். தப்பித்தவர்கள் சும்மா தப்பிக்காமல் நான்கு போலிஸாரை தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றிருக்கிறார்கள்.

உடனடியாக போலிஸ் உஷாராகி எல்லா இடங்களிலும் வலைவிரித்து குற்றவாளிகளை பிடிக்க தயாரானது. பக்கத்து மாவட்ட காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு எட்டே முக்கால் வாக்கில் மானாமதுரை அருகே மேலமேல்குடி என்கிற இடத்தில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த குற்றவாளிகளை வாகனச்சோதனை நடத்திக் கொண்டிருந்த போலிஸார் மடக்கியிருக்கிறார்கள். அங்கேயும் போலிஸார் மீது பயங்கர ஆயுதங்களோடு இருவரும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இங்கும் மூன்று போலிஸார் காயமடைந்தனர்.

இந்த தகவல் அப்போது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. வெள்ளைத்துரைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வெள்ளைத்துரைதான். என்கவுண்டருக்கு என்றே எம்பெருமானால் படைக்கப்பட்ட ‘வீரப்பன் புகழ்’ வெள்ளைத்துரையேதான். அவர் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். அதுவரை குற்றவாளிகள் அதே இடத்தில் தேவுடு காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதிரடிப்படையை கண்டதுமே வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் போலிஸ் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்திருக்கிறது. படுகாயமடைந்த இருவரும் மதுரை மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரை விட்டிருக்கிறார்கள்.

காவல்துறை ஆய்வாளர்களை கொன்ற நரகாசுரர்கள் இருவரும், அடுத்த ஒரே மாதத்தில் போலிஸாரால் (வேறு வழியில்லாமல்) சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்கிற செய்தி பரவியதும், சிவகங்கை அரண்மனை அருகே போலிஸார் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடினார்கள்.

சுபம்.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்துக்கு சவால் விடும் விறுவிறுப்பான இந்த திரைக்கதையில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிரடித் துல்லியம் கொண்டவையாக இருக்கிறது. க்ளைமேக்ஸில் வெள்ளைத்துரை எண்ட்ரி ஆனதுமே ரசிகர்கள் விசில் அடித்து கரகோஷம் செய்கிறார்கள். ‘காக்க காக்க’வில் சூர்யாவுக்கு கூட இவ்வளவு அப்ளாஸ் கிடைத்திருக்காது. ஆனால் என்ன பிரயோசனம். இதே கதையைதான் ஆயிரத்து சொச்சமுறையாக போலிஸ் ரைட்டர்கள் எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது. வாசிக்கும் நமக்கே இவ்வளவு ‘போர்’ அடிக்கிறது என்றால், திரும்பத் திரும்ப இதே பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு போர் அடிக்கும்?

வழக்கம்போல நடுத்தர வர்க்கத்து மொக்கைகள் ‘சபாஷ் போலிஸ்’ என்று பூங்கொத்து கொடுக்கப் போகிறார்கள்.

சமூக விரோதிகளான நாமும்ம் வழக்கம்போல நாம் அடிக்கிற அதே ஹாரனை திரும்பவும் பாம் பாம்மென ஒலியெழுப்பி இன்னொரு முறை அடித்துத் தொலைப்போம்.

நெ. 1 : எட்டு ஆண்டுகளாக ஒரு தீண்டாமை வழக்கு புயல்வேகத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. கொலைவழக்கில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில்தான், ‘திடீரென்று’ அவ்வழக்கில் ஆஜர்படுத்த குற்றம் சாட்டப்பட்டவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றோம் என்று காவல்துறை கூறுவதை அரசு நம்பலாம். கோர்ட்டு நம்பலாம். மனித உரிமை அமைப்புகளும் நம்பலாம். காது இருப்பவர்கள் எல்லோருமே நம்பிவிட முடியாது இல்லையா?

நெ. 2 : என்கவுண்டர் என்று கேள்விப்பட்டதுமே மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு செய்தியாளர்கள் கேட்டதற்கு உடனடியாக தங்கள் பகுதியில் அப்படியேதும் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பிற்பாடு மறுப்பு தெரிவித்த ராமநாதபுரம் ஐ.ஜி.யே ஸ்பாட்டுக்கு வந்ததோடு, என்ன நடந்தது என்கிற ‘கதை’யையும் சொல்லியிருக்கிறார். ஏனிந்த குழப்பம்?

நெ. 3 : காவல்துறையில் சேர்ந்து படிப்படியாக முன்னுக்கு வந்து டி.எஸ்.பி. ஆகியிருக்கும் வெள்ளைத்துரை அவர்களுடைய மக்கள் சேவையையும், கடின உழைப்பையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் என்கவுண்டர் நடக்கும் இடங்கள் பெரும்பாலும் இவர் போஸ்டிங்கில் இருக்கும் இடங்களாக அமையும் யதேச்சையின் மர்மம் என்ன?

நெ. 4 : திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடையும்போதே குற்றவாளிகள் நீதிபதியிடம் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். “எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. போலிஸார் என்கவுண்டரில் எங்களை போட்டுத் தள்ளிவிடுவார்கள்” என்று அம்மனுவில் அச்சப்பட்டிருக்கிறார்கள். தீண்டாமை வழக்கில் உங்களை முப்பதாம் தேதி ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப் போகிறார்கள். போலிஸாரை தாக்கிவிட்டு நீங்கள் தப்பிக்கப் போகிறீர்கள். வெடிகுண்டுகளால் வெள்ளைத்துரை தலைமையிலான அதிரடிப்படையினரை தாக்கப் போகிறீர்கள். அவர்கள் உங்களை போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்கிற எதிர்கால சம்பவத்தை எந்த ஜோசியரோ துல்லியமாக கணித்து என்கவுண்டரில் போடப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும்.

எவ்வளவு ஓட்டைகளை சுட்டிக் காட்டினாலும், செத்தவன் என்ன மகாத்மாவா என்று புறந்தள்ளிவிட்டு போலிஸுக்கு சல்யூட் அடிக்கத்தான் போகிறீர்கள். எப்படிப்பட்ட உத்தம ஆத்மாக்களையும் கொடூரமான குற்றவாளிகளாக காட்டி, போட்டுத்தள்ள முடியும் என்பதற்கு கடந்தகாலத்திலேயே ஏராளமான சம்பவ சாட்சிகள் உண்டு. என்றாவது ஒருநாள் நம்ம வீடும் பற்றிக்கொள்ளத்தான் போகிறது. அப்போது யார் வந்து அணைக்கப் போகிறார்களோ?

27 நவம்பர், 2012

லைஃப் ஆஃப் பை

ஈசாப் ஏன் விலங்குகளை வைத்து குட்டிக்கதைகள் எழுதினார்?

ஏனெனில் விலங்குகள் ‘அவதூறு கேஸ்’ போடாது. 66-ஏ பாயாது.

இதே டெக்னிக்கில்தான் யான் மார்டேலும் ‘லைஃப் ஆஃப் பை’ எழுதினார். பாராட்டுகள் குவியும்போது தாங்க முடியாவிட்டாலும் தலைதாழ்த்தி, சிரமேற்கொண்டு வாங்கிக் கொள்கிறோம். விமர்சனம் என்றதுமே காததூரம் ஓடுகிறோம். திரும்ப ஓடிவந்து விமர்சகர்களின் முகத்தில் நாலு குத்தும், குத்தினால்தான் தூக்கம் வருகிறது.

உள்ளம் என்பதே ஓர் உருவகம். கடவுள் மாதிரி. அறிவியல் பூர்வமாக இப்படி ஒன்று நம் உடலில் இருப்பதை நிரூபிக்க முடியாது. ஆனால் பகுத்தறிவாளர்களும் கூட உள்ளம் என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்வது நகைமுரண் (இருவர் உள்ளம் – வசனம் : கலைஞர்). இல்லாத ஒன்றை அடக்கி, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வாழ்க்கை முழுக்க கொடூரமான போர் நடத்திக்கொண்டே இருந்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. உள்ளம் என்கிற உருவகத்துக்கு ஓர் உருவம் கொடுத்துப் பார்த்தால் என்ன? எலி, பூனை உருவங்கள் ஒத்து வருமா? சாது மிரண்டால் காடு கொள்ளாது. பார்க்க சப்பையாக இருப்பவர்கள் கூட அவர்களை, அவர்களே சூப்பர்மேனாகதான் கருதிக் கொள்கிறார்கள். எனவே புலியாக பொதுமைப்படுத்தி உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

இப்படியெல்லாம் தத்துவக் கருமாந்திரங்களை எல்லாம் சிந்திக்க அவகாசமின்றி, கடாசிப் போட்டுவிட்டாலும் லைஃப் ஆஃப் பை மிகச்சிறந்த திரைப்படம்தான். ஒரு புலியும், மனிதனும் மட்டும் இருநூற்றி இருபத்தியேழு நாட்கள் நடுக்கடலில் சிறிய படகில் உயிரை கையில் பிடித்து வாழ்கிறார்கள். survival of the fittest தோற்கிறது. இந்த சுவாரஸ்யமான ஒன்லைன் போதாதா?

தைவானில் பிறந்து ஹாலிவுட்டில் படமெடுப்பவராக இருந்தாலும் இந்தியக் களத்தில் இந்தியர்களைவிட சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதில் ஆங் லீ தனித்துத் தெரிகிறார். நாற்பதாண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி இப்படித்தான் இருந்திருக்கும் என்று ரெஃபரென்ஸ் பார்த்து சித்தரித்து விடலாம். ஆனால் மனிதர்களை அசலாக தோற்றத்திலும், செயலிலும் காட்டுவது ராட்சஸ வேலை. யாரும் எளிதில் நினைத்துப் பார்த்துவிட முடியாத சாதனைகளை அனாயசமாக செய்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.

மனிதர்களை விடுங்கள். விலங்குகளுக்கு வருவோம். இயக்குனர் நினைத்தமாதிரியாக நடிக்கும் விலங்குகள் சாத்தியமா என்ன? ஒரு காட்சியில் கூட அனிமேஷன் உருவம் என்கிற எண்ணம் வந்துவிடாதபடி படம் முழுக்க புலி உறுமுவதிலும், பாய்வதிலும், கம்பீரநடை நடப்பதிலுமாக தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

‘எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிக்கிட்டிருக்கு’ எனும் அரதப்பழசான பஞ்ச் டயலாக்கை அடிக்காத ஆளே இல்லை. படமும் அதைதான் சொல்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புலி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது முழிக்கும்போது, ரிங்மாஸ்டராக மாறி அதை அடக்கிப்பழக வேண்டும். இல்லையேல் அப்புலி உங்களை கொன்றுவிடும். கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரி கொஞ்சம் பிசகினாலும் ‘பாபா’ மாதிரி பக்திப்படம் ஆகிவிடும் ஆபத்து இந்த கதைக்கு உண்டு. இந்த கதையும் கூட ஒரு ‘புலி’தான். ரிங்மாஸ்டரான இயக்குனர் அதை எப்படி தனக்கு வாகாக பழக்கியிருக்கிறார் என்பதை திரையில் பாருங்கள். நீங்களே அறியாத உங்கள் உள்ளத்தில் மறைந்துக் கிடக்கும் ரகசிய அறைகளின் ஆச்சரியக் கதவுகளை நிச்சயம் திறந்துவிடும். இப்படம் உங்களை விமர்சிக்கிறது. உங்களுக்கு கோபம் வந்துவிடக் கூடாதே என்கிற நல்லெண்ணத்தில் புலியை வைத்து கதை சொல்கிறது. யாருமே தவறவிடக்கூடாத படம் என்று மட்டும் பரிந்துரைக்கிறோம்.

இப்படம் மூலமாக ஆஸ்கர் ஜூரிகளிடம் அனாயசமாக தன்னுடைய விசிட்டிங் கார்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார் ஆங் லீ.

தொடர்பில்லாத பதிவு :  துரத்துதலும், ஓட்டமும்!

23 நவம்பர், 2012

வீரபாண்டியார்


கலைஞரின் 80வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் என்று நினைவு. சென்னை சின்னமலையில் நடந்தது. பேசியவர்கள் எல்லாருமே கலைஞரை வானளவு புகழ்ந்து அமர்ந்தார்கள். வீரபாண்டியார் எழுந்தார். “எங்களுக்கு நீங்கள் எல்லாமே செய்திருக்கிறீர்கள். ஆனால் பெரியார், அண்ணா சொன்னதைத் தவிர்த்து புதிய சிந்தனைகளை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்று சுயபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்க சிந்தனைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றி, புதிய சிந்தனைகளை உருவாக்கும் பணியை நீங்கள்தான் செய்யவேண்டும். நீங்களும், பேராசிரியரும் அவற்றை உருவாக்கும் பணிகளை இனி மேற்கொள்ள வேண்டும்”

கலைஞரின் முகத்தில் மகிழ்ச்சியா, வருத்தமா என்று தெரிந்துக்கொள்ள முடியாத ரியாக்‌ஷன். மேடையில் அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். கட்சி, ஆட்சி போதும். தமிழ் சமூகத்துக்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக கலைஞரை நோக்கி வீரபாண்டியார் தைரியமாக சொன்னார்.

இந்த தைரியம் கட்சியில் வீரபாண்டியாருக்கு அதிகம். தலைவரோடு அடிக்கடி முரண்படும் மூத்த கட்சிக்காரர். ஆனால் அதே நேரத்தில் தலைவரை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. கலைஞரின் முரட்டு பக்தன். எழுபதுகளின் இறுதியில் அதிமுக திமுகவை அதிகமாக குற்றம் சாட்டியது பூலாவரி சுகுமாரன் கொலை சம்பவத்தில்தான். அதில் நேரடியாக தொடர்புடையவர் என்று வீரபாண்டியாரால் தலைமைக்கு தர்மசங்கடம். சொத்துப் பிரச்னை. பங்காளிகளுக்குள் பகை. அது கட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிட்டதே என்று வீரபாண்டியாருக்கு மனவருத்தம். பூலாவரியில் இன்றுவரை வீரபாண்டியாரின் பங்காளிகள்தான் அவரது கண்களில் விரல்விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த ஊரான பூலாவரி கிராமம் தொடங்கி, வீரபாண்டி ஒன்றியம், சேலம் மாவட்டம் வரை இவரும், இவருடைய உறவுக்காரர்களும்தான் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆள்வது வழக்கம். இம்மாதிரியான தனிப்பட்ட நிரந்தர நெருக்கடியையும் தாண்டிதான் கட்சியை சேலம் மாவட்டத்தில் அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் ‘சேலம்’ என்கிற பெயரையே அம்மாவட்ட திமுகவினர் மறந்துவிட்டார்கள். கலைஞரின் வருகையின் போது “வீரபாண்டியாரின் மாவட்டத்துக்கு வரும் தலைவரே வருக” என்று பேனர் வைத்து அமர்க்களம் செய்வார்கள். 

வீரபாண்டியாரின் அரசியல் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் சகஜம். ஐந்து ஆண்டுகள் உச்சியில் இருப்பார். ஐந்து ஆண்டுகள் மிகமோசமான பள்ளத்தில் வீழ்ந்துக் கிடப்பார். சாகும் வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டுமென்பது அவருக்கு விதிக்கப்பட்ட விதி. எப்படிப்பட்ட நெருக்கடியிலும் கட்சியையும், தலைவரையும் விட்டுக் கொடுத்ததில்லை என்பது அவரது வாழ்நாள் சாதனை. எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் வீரபாண்டியாருக்கு ஒரு சோதனை என்றால் கலைஞர் நொறுங்கி விடுவார். வீரபாண்டியாரின் மகனுடைய அகால மரணத்தின் போதும் சரி. அநியாய வழக்குகளால் சிறைக்கொடுமையை வீரபாண்டியார் சந்திக்க நேரும் போதும் சரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவதிப்படும்போதும் சரி. கலைஞரின் கண்கள் உடனடியாக கலங்கி விடும். முரட்டுத் தொண்டன் மீதான தலைவரின் விவரிக்க முடியாத ஒரு வகை காதல் அது. அதனால்தான் என்னவோ கலைஞரின் மனச்சாட்சியான முரசொலி மாறன் மறைந்த அதே நவ.23லேயே அவருடைய பிரியத்துக்குரிய தம்பியான வீரபாண்டியாரும் மறைந்திருக்கிறார்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் அடையாளங்கள் ஒவ்வொன்றாக மறையும் நேரம் இது.