1 டிசம்பர், 2012

தி போலிஸ் ஸ்டோரி

கடந்த அக்டோபர் 27 அன்று மருதுபாண்டியர் நினைவு தினத்தின் போது வேம்பத்தூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார் திருப்பாச்சேத்தி காவல் நிலைய துணை ஆய்வாளர் ஆல்வின் சுதன். அங்கு இரண்டு தரப்பினருக்கான மோதல் ஏற்பட்டது. அதுகுறித்த விசாரணைக்கு சென்ற ஆல்வின் சுதனை சிலர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர். சிவகங்கை மாவட்டம் முழுக்க காவல்துறையினர் கடுமையான அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தார்கள்.

நவம்பர் 6 அன்று துணை ஆய்வாளரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபு, முத்துக்குமார், மகேஷ் மூவரும் திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பிரபு, பாரதி ஆகிய இருவரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் சிவகங்கை கோர்ட்டில் மனுதக்கல் செய்தனர்.

இதற்கிடையே பிரபு, பாரதி இருவர் மீதும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட தீண்டாமை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக மதுரை மத்திய சிறையிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது இருவருமே போலிஸிடமிருந்து தப்பித்து விட்டார்களாம். தப்பித்தவர்கள் சும்மா தப்பிக்காமல் நான்கு போலிஸாரை தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றிருக்கிறார்கள்.

உடனடியாக போலிஸ் உஷாராகி எல்லா இடங்களிலும் வலைவிரித்து குற்றவாளிகளை பிடிக்க தயாரானது. பக்கத்து மாவட்ட காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு எட்டே முக்கால் வாக்கில் மானாமதுரை அருகே மேலமேல்குடி என்கிற இடத்தில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த குற்றவாளிகளை வாகனச்சோதனை நடத்திக் கொண்டிருந்த போலிஸார் மடக்கியிருக்கிறார்கள். அங்கேயும் போலிஸார் மீது பயங்கர ஆயுதங்களோடு இருவரும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இங்கும் மூன்று போலிஸார் காயமடைந்தனர்.

இந்த தகவல் அப்போது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. வெள்ளைத்துரைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வெள்ளைத்துரைதான். என்கவுண்டருக்கு என்றே எம்பெருமானால் படைக்கப்பட்ட ‘வீரப்பன் புகழ்’ வெள்ளைத்துரையேதான். அவர் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். அதுவரை குற்றவாளிகள் அதே இடத்தில் தேவுடு காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதிரடிப்படையை கண்டதுமே வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் போலிஸ் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்திருக்கிறது. படுகாயமடைந்த இருவரும் மதுரை மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரை விட்டிருக்கிறார்கள்.

காவல்துறை ஆய்வாளர்களை கொன்ற நரகாசுரர்கள் இருவரும், அடுத்த ஒரே மாதத்தில் போலிஸாரால் (வேறு வழியில்லாமல்) சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்கிற செய்தி பரவியதும், சிவகங்கை அரண்மனை அருகே போலிஸார் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடினார்கள்.

சுபம்.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்துக்கு சவால் விடும் விறுவிறுப்பான இந்த திரைக்கதையில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிரடித் துல்லியம் கொண்டவையாக இருக்கிறது. க்ளைமேக்ஸில் வெள்ளைத்துரை எண்ட்ரி ஆனதுமே ரசிகர்கள் விசில் அடித்து கரகோஷம் செய்கிறார்கள். ‘காக்க காக்க’வில் சூர்யாவுக்கு கூட இவ்வளவு அப்ளாஸ் கிடைத்திருக்காது. ஆனால் என்ன பிரயோசனம். இதே கதையைதான் ஆயிரத்து சொச்சமுறையாக போலிஸ் ரைட்டர்கள் எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது. வாசிக்கும் நமக்கே இவ்வளவு ‘போர்’ அடிக்கிறது என்றால், திரும்பத் திரும்ப இதே பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு போர் அடிக்கும்?

வழக்கம்போல நடுத்தர வர்க்கத்து மொக்கைகள் ‘சபாஷ் போலிஸ்’ என்று பூங்கொத்து கொடுக்கப் போகிறார்கள்.

சமூக விரோதிகளான நாமும்ம் வழக்கம்போல நாம் அடிக்கிற அதே ஹாரனை திரும்பவும் பாம் பாம்மென ஒலியெழுப்பி இன்னொரு முறை அடித்துத் தொலைப்போம்.

நெ. 1 : எட்டு ஆண்டுகளாக ஒரு தீண்டாமை வழக்கு புயல்வேகத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. கொலைவழக்கில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில்தான், ‘திடீரென்று’ அவ்வழக்கில் ஆஜர்படுத்த குற்றம் சாட்டப்பட்டவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றோம் என்று காவல்துறை கூறுவதை அரசு நம்பலாம். கோர்ட்டு நம்பலாம். மனித உரிமை அமைப்புகளும் நம்பலாம். காது இருப்பவர்கள் எல்லோருமே நம்பிவிட முடியாது இல்லையா?

நெ. 2 : என்கவுண்டர் என்று கேள்விப்பட்டதுமே மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு செய்தியாளர்கள் கேட்டதற்கு உடனடியாக தங்கள் பகுதியில் அப்படியேதும் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பிற்பாடு மறுப்பு தெரிவித்த ராமநாதபுரம் ஐ.ஜி.யே ஸ்பாட்டுக்கு வந்ததோடு, என்ன நடந்தது என்கிற ‘கதை’யையும் சொல்லியிருக்கிறார். ஏனிந்த குழப்பம்?

நெ. 3 : காவல்துறையில் சேர்ந்து படிப்படியாக முன்னுக்கு வந்து டி.எஸ்.பி. ஆகியிருக்கும் வெள்ளைத்துரை அவர்களுடைய மக்கள் சேவையையும், கடின உழைப்பையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் என்கவுண்டர் நடக்கும் இடங்கள் பெரும்பாலும் இவர் போஸ்டிங்கில் இருக்கும் இடங்களாக அமையும் யதேச்சையின் மர்மம் என்ன?

நெ. 4 : திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடையும்போதே குற்றவாளிகள் நீதிபதியிடம் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். “எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. போலிஸார் என்கவுண்டரில் எங்களை போட்டுத் தள்ளிவிடுவார்கள்” என்று அம்மனுவில் அச்சப்பட்டிருக்கிறார்கள். தீண்டாமை வழக்கில் உங்களை முப்பதாம் தேதி ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப் போகிறார்கள். போலிஸாரை தாக்கிவிட்டு நீங்கள் தப்பிக்கப் போகிறீர்கள். வெடிகுண்டுகளால் வெள்ளைத்துரை தலைமையிலான அதிரடிப்படையினரை தாக்கப் போகிறீர்கள். அவர்கள் உங்களை போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்கிற எதிர்கால சம்பவத்தை எந்த ஜோசியரோ துல்லியமாக கணித்து என்கவுண்டரில் போடப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும்.

எவ்வளவு ஓட்டைகளை சுட்டிக் காட்டினாலும், செத்தவன் என்ன மகாத்மாவா என்று புறந்தள்ளிவிட்டு போலிஸுக்கு சல்யூட் அடிக்கத்தான் போகிறீர்கள். எப்படிப்பட்ட உத்தம ஆத்மாக்களையும் கொடூரமான குற்றவாளிகளாக காட்டி, போட்டுத்தள்ள முடியும் என்பதற்கு கடந்தகாலத்திலேயே ஏராளமான சம்பவ சாட்சிகள் உண்டு. என்றாவது ஒருநாள் நம்ம வீடும் பற்றிக்கொள்ளத்தான் போகிறது. அப்போது யார் வந்து அணைக்கப் போகிறார்களோ?

13 கருத்துகள்:

  1. கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள் . தப்பி போக முயற்சித்தார்கள் என்பது மகா முட்டாள்தனம் .
    மரண தண்டனையை வேண்டாம் என்று பல நாடுகள் சொல்லி கொண்டிருக்கும் போது .
    இங்கு மட்டும் விசாரணையே வேண்டாம் என்று சொல்லும் மடசாம்பிராணிகள் அகிகரித்து கொண்டிருக்கிறார்கள் .
    இன்னும் இதை நியாய படுத்தி பத்து சினிமா வரும் .....விக்ரமோ விஜயோ . துப்பாக்கியை தூக்கிகிட்டு பொட்டு பொட்டுன்னு சுட்டு காட்டுவாங்க ......நாமளும் கைவலிக்க தட்டலாம் . வாய் வலிக்க விசில் ஊதலாம் .

    இன்னும் ஒரு 10 வெள்ளதுரைகளை நமக்கு அருளுமாறு கடவுளிடம் கேட்கலாம் .

    பதிலளிநீக்கு
  2. unna thaan mudhalla pottu tholayanum....

    பதிலளிநீக்கு
  3. படிப்படியாக ஒன்றும் முன்னேறவில்லை சப் இன்ஸ்பெக்டரில் இருந்து ஒரேடியாக டி எஸ் பி/ ஏஸி மற்றவர்கள் வேண்டாம் இந்த இரத்தக் கறை படிந்த புரோமஷ்ன் என இந்தக் காரியங்களுக்கு முன் வருவதில்லை

    பதிலளிநீக்கு
  4. இரண்டாவது கமெண்டை வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. //இன்னும் இதை நியாய படுத்தி பத்து சினிமா வரும் .....விக்ரமோ விஜயோ . துப்பாக்கியை தூக்கிகிட்டு பொட்டு பொட்டுன்னு சுட்டு காட்டுவாங்க ......நாமளும் கைவலிக்க தட்டலாம் . வாய் வலிக்க விசில் ஊதலாம் .//

    சரியாகச் சொன்னீர்கள். என்கவுண்டரை glamorise செய்து திரைப்படங்கள் தமிழனைக் காட்டுமிராண்டியாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  6. Police Framed story for encounters and everyone knows that it is a planned one , truth is those killed were rowdies and they were the ones who brutally murdered SI . No one has spoken at the time of SI's brutal murder . How about the encounter made by partymen in Velachery bar which claimed the life of innocent ? Did you questioned them ?

    பதிலளிநீக்கு
  7. ஆல்வின் கொல்ல பட்டபோது உங்களை போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் குரல் உரக்க ஒலித்ததாக ஞாபகம் இல்லை

    பதிலளிநீக்கு
  8. என்கவுண்டர் எல்லாம் நாடகம் என்பதனை அனைவரும் அறிவார்கள்.

    சட்டப்படி நடவடிக்கை எடுத்து ,தூக்கிலும் போடலாம், ஆனால் அதற்கும் தானே மனித உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க.

    சட்டத்தில் உள்ள ஓட்டையை அடைக்காத வரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட போவதில்லை, அதே போல என்கவுண்டர்களும் நிற்கப்போவதில்லை.

    அண்ணாத்த "பங்க் குமார் என்கிற அஷோக் குமார்" என்கவுண்டர் செய்யப்பட்ட போதும் இதே போல ஏதும் கருத்து சொல்லி இருக்கிங்களானு தெரிஞ்சுக்க ஒரு ஆசை.

    //காவல்துறை கூறுவதை அரசு நம்பலாம். கோர்ட்டு நம்பலாம். மனித உரிமை அமைப்புகளும் நம்பலாம். காது இருப்பவர்கள் எல்லோருமே நம்பிவிட முடியாது இல்லையா?

    கிரானைட் வழக்கில் தேடப்படும் அஞ்சா நெஞ்சரின் வாரிசு எங்கே இருக்கார்னு காவல் துறைக்கும் தெரியவில்லை, அதை விட பெத்தவங்க, தாத்தானு யாருக்குமே தெரியலையாம், அதையும் காது இருப்பவங்க எல்லாம் நம்புறாங்க, நீங்க நம்ப மாட்டிங்க :-))

    (பின்னூட்டம் வருமானு தெரியலை , நம்ம பதிவில் இதை வச்சு ஒரு கதை ரெடி பண்ணிக்கலாமா?)

    பதிலளிநீக்கு
  9. சரி என்னதான் பண்ணலாம்? ஆல்வின் சுதனை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டவனை, ரவுடி நாயை என்ன செய்யலாம்? உத்தம ஆத்மாக்கள் யாரும் என்கவுண்ட்டரில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறீர்கள்?? அப்படி எத்தனை உத்தம் ஆத்மாக்கள் கொல்லப்பட்டார்கள் என்று கூற முடியுமா? இப்போ என்ன சொல்ல வருகிறீர்கள் பிரபு என்பவன் உத்தம ஆத்மா என்றா?? நாங்கள் நடுத்தரவர்க்கத்து மொக்கைகளாகவே இருந்துவிட்டுப் போகிறோம்... நீங்கள் உயர்தரவர்க்கத்து உத்தமர்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன்..பாவம் அவன் தன் கொலைவெறியை மறக்க வேண்டுமென்றால், தினம் எனக்கு ஒரு பெண் வேண்டும் என்கிறான்.. அவனுக்காக, நீங்கள் வேண்டுமானால், நாள் ஒன்றுக்கு முறை வைத்து, உங்கள் வீட்டுப் பெண்களைக் கூட்டி ஒரு மணி நேரம் அவனுடன் இருத்திக் கூட்டிக் கொண்டு வாங்களேன்...

    பதிலளிநீக்கு
  10. Good article; Just one correction. It's 'Veeramani pugazh' ; not Veerappan. Vijay alumnae kochikka porar:)

    பதிலளிநீக்கு
  11. வழக்கம் போல உயர்தர சிந்தனையாளர் ஹாரன் அடிக்க கிளம்பிட்டாரு...
    உங்க நோக்கம் என்ன? சாதிவெறியால் நடக்கும் கொலைகளை ஆதரிப்பதா? இல்லை என்கவுண்டரில் இறந்தவர்கள் மகாத்மாக்கள் என்று நம்பவைப்பதா?

    பதிலளிநீக்கு
  12. Thambhi. Unakku oru bullet waiting

    பதிலளிநீக்கு
  13. சட்டத்தில் உள்ள ஓட்டையை அடைக்காத வரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட போவதில்லை, அதே போல என்கவுண்டர்களும் நிற்கப்போவதில்லை.

    பதிலளிநீக்கு