22 மார்ச், 2013

மாரியம்மாள்

ஈழத்தமிழர்களுக்காக எண்ணற்ற போராட்டங்கள் தற்போது தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வைகோவின் தாயார் மாரியம்மாள் தள்ளாத வயதில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் இருக்கிறார். தொண்ணூறு வயது. எனக்கு மட்டுமல்ல. கட்சி மாச்சரியங்களைத் தாண்டி, திராவிடக் குடும்பங்களில் பிறந்த பலருக்கும் இது ஓர் உணர்ச்சிப்பூர்வமான காட்சி.

வைகோவின் தந்தை வையாபுரி நாயக்கர் அரசியலுக்காக தன்னுடைய பரம்பரை சொத்தை செலவழித்தபோது எந்த ஆட்சேபணையுமின்றி மகிழ்ச்சியோடு அனுமதித்தவர் மாரியம்மாள். எமர்ஜென்ஸி, எம்.ஜி.ஆர் காலத்து அடக்குமுறைகளின்போது இவரது கலிங்கப்பட்டி இல்லம் திமுகவினருக்கு வேடந்தாங்கல். திமுகவின் வனவாசத்தின்போது தென்மாவட்டத்தில் கட்சியை கட்டிக்காத்த புண்ணியத்தலம். மாநில அளவிலான தலைவர்கள் மட்டுமின்றி, தேசியத்தலைவர்கள் பலரும் வருகை புரிந்த முக்கியத்துவமான இடம் கலிங்கப்பட்டி. வடலூர் சத்தியஞானசபையில் மட்டுமல்ல, கலிங்கப்பட்டி வீட்டிலும் அடுப்பு அணைவதேயில்லை.

வைகோவுடைய அரசியல் வாழ்வின் மகத்தான தியாகம் பொடாவில் சிறை சென்றது. அப்போது மாரியம்மாளின் எதற்கும் அஞ்சாத இதயம்தான் மதிமுகவை காத்தது. திராவிடத் தலைவர்களின் ஒவ்வொரு தியாகங்களுக்கும் பின்னணியில் இதுபோல லட்சக்கணக்கான மாரியம்மாள்கள் இருக்கிறார்கள்.

கண்களில் நீர்கசிய வணங்குகிறேன் தாயே!

20 மார்ச், 2013

பரதேசி

தமிழின் தலைசிறந்த படங்களில் ஒன்று என்று சொல்வதில் தயக்கம் ஏதுமில்லை. இவ்வாறு சொன்னால் ட்விட்டர் ரீட்விட்டுகளும், ஃபேஸ்புக் லைக்குகளும், ரீஷேர்களும் குறையும்தான். ஈடுசெய்ய முடியாத இழப்புதான். ஆனாலும் என்ன செய்ய.. எனக்கு அவ்வளவாக பிடிக்காதவராக இருந்தாலும் பாலா நாம் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு பர்ஃபெக்டாக படம் எடுத்திருக்கிறாரே?

படத்தில் லாஜிக் குறைகிறது, மேஜிக்கே இல்லையென்றெல்லாம் நிறைய விமர்சனங்களை வாசித்திருப்பீர்கள். விமர்சனமாக எழுத சரக்கில்லாதவர்கள் மொத்த கதையையே கூட விமர்சனமாக எழுதியிருப்பார்கள். எனவே படம் பார்க்காதவர்களுக்கும் கதை தெரிந்திருக்கும். இந்தப் பதிவுக்கு எந்தவிதமான தேவையும் இல்லையென்றாலும் ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாக பதிவு செய்துவிட விரும்புகிறோம். ‘பரதேசி பார்த்தே ஆகவேண்டிய திரைப்படம்’.

அவதார் படத்தில் ஜேம்ஸ் கேமரூன் புதியதாக ஓர் உலகத்தை சிருஷ்டித்ததை மாதிரி, பாலா இப்படத்தில் நாமறியாத ஒரு தமிழகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கிறார். படத்தின் டைட்டிலில் தொடங்கி எண்ட் கார்ட் வரை ஆச்சரியத்தில் வாய்பிளந்து பார்க்க இந்த அற்புத படைப்பாற்றலே காரணம். பாலா படைப்பாளிகளின் படைப்பாளி. இவரது சினிமா மொழி unique ஆன ஒன்று. இதுவரை யாரும் பயன்படுத்தாத புது மொழி. இவரை பார்த்து சூடு போட்டுக் கொள்கிறவர்கள், பாதி வெற்றியை அடைந்தாலேகூட அது சாதனைதான்.

இதுவரை எத்தனையோ இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். நாஞ்சில்நாடனை பாலா கவுரவித்திருப்பதைப் போல, இதுவரை யாரும் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நடிகர்களில் தொடங்கி, டெக்னிஷீயன்கள் வரை அத்தனைபேரையும் மிகச்சரியாக கண்ட்ரோல் செய்திருக்கிறார் பாலா. படத்தின் ஒரு ஃப்ரேம் கூட அவருடைய கட்டுப்பாட்டிலிருந்து மீறி துருத்தியதாக தெரியவில்லை. கேப்டன் ஆஃப் த ஷிப் எப்படியிருக்க வேண்டுமென்று ‘பரதேசி’ எடுத்துக் காட்டியிருக்கிறார் பாலா. குறிப்பாக க்ளைமேக்ஸ். மரணத்தைவிட கொடூரமான ஒரு தண்டனையை கதையின் நாயகனுக்கு தந்திருக்கிறார். சேது பார்த்தபோது கூட இவ்வளவு பாதிப்பில்லை. இதற்காகவே இன்னொரு முறை நிச்சயம் ‘பரதேசி’ பார்க்கவே மாட்டேன். இதுவரை வந்த தன்னுடைய படைப்புகளில் ஆகச்சிறந்ததாக இதை எடுத்திருக்கும் பாலாவுக்கு என்னால் அளிக்க முடிந்த எளிய பரிசு இதுதான்.

பாலாவின் தேவர்பாணி இந்துத்துவா மீது நமக்கு சில விமர்சனங்களும் உண்டு. இப்படத்திலும் அது வெகுவாகவே வெளிப்படுகிறது. குறிப்பாக மருத்துவர் பரிசுத்தம் பாத்திரத்தை அவர் வார்த்திருப்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். பரதேசியில் அப்பகுதி மட்டும் ஒட்டாமல், வேண்டுமென்றே திணித்ததாக கதையோட்டத்துக்கு தடையாக அமைந்திருக்கிறது. படத்தின் முற்பாதியில் பந்தி கவுரவத்தை காட்ட வசனம் எழுதிய நாஞ்சில் நாடனின் சிறுகதையை கடன் பெற்ற பாலா, பரிசுத்தம் பகுதிக்கு ஜெயமோகனிடம் கேட்டு ‘ஓலைச்சிலுவை’ சிறுகதையை கடன் வாங்கியிருக்கலாம். மகிழ்ச்சியாக கொடுத்திருப்பார். படம் இன்னும் பிரமாதமாக பரிணமித்திருக்கும்.

16 மார்ச், 2013

புலிகளுக்கே பெயர் சூட்டிய புரட்சித்தலைவி

ஈழத்தமிழரின் இன்னலை தீர்க்க புரட்சித்தலைவி அறிக்கை விடும்போதெல்லாம் மூத்த திம்மி ஒரு தந்திரம் செய்வார். “1989ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அம்மையார் விடுத்த அறிக்கை” என்று ஓர் அறிக்கையை காப்பி & பேஸ்ட் செய்வார். ராஜீவ் கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று எந்த காலத்திலேயோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபடியும் சொல்லிக் காட்டுவார். மூத்த திம்மிக்கு மட்டுமல்ல, அண்டோமேனியா அரசின் அல்லக்கைகளான இன்றைய திம்மிகளுக்கும் சேர்த்து சொல்லிக் கொள்கிறோம். ‘அது போன நூற்றாண்டு. இது இந்த நூற்றாண்டு’

இந்த நூற்றாண்டில் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றி செவ்வாய் கிரகம், புதன் கிரகம் ஆகியவற்றில் வசிக்கும் தமிழர்களுக்கு எல்லாம் உரிமைக்குரல் கொடுக்கும் தமிழின சுனாமி நெடுமாறன் அய்யா, பொடாவை போடா என்று புறந்தள்ளிய இனமான புரட்சிப்புயல் வைகோ, தமிழை டம்ப்ளரில் ஊற்றி தமிழனுக்கு இன உணர்வை ஊட்டி வளர்க்கும் ‘வீ டம்ப்ளர்ஸ்’ ஸ்ரீமான் சீமான், வாழும் காரல்மார்க்ஸாகவும் புரட்சித்தலைவியை வசைபாடுபவர்களுக்கு காராசேவாகவும் திகழும் அய்யா தான்னா பான்னா போன்றோர் ஈழத்தாயாக-தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவியாக ஒப்புக்கொள்ளும் நம் புரட்சித்தலைவியை, இவர்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் சங்கத்தமிழ் மறவர்கள் மட்டுமின்றி சொர்க்கம், நரகம் உள்ளிட்ட ஈரேழு உலகிங்கிலும் வாழும் தமிழர்களும் ஏற்றுக்கொண்ட ஐ.எஸ்.ஐ, ஐ.எஸ்.ஓ, க்யூசி ஓக்கே உள்ளிட்ட ஏராளமான தரச்சான்றுகள் பெற்ற ஒரே தலைவி புரட்சித்தலைவி பொன்னியின் செல்வி காவிரி தந்த கலைத்தாய் தங்கத்தாரகை மட்டுமே.

புலிகளின் மீது பாசமின்றியா புலிகளுக்கு பெயர் சூட்டுவார் புரட்சித்தலைவி என்று நாம் கேட்கவில்லை. திராவிட திம்மிகளை நோக்கி மக்கள் கேட்கிறார்கள். நியாயமாகப் பார்க்கப் போனால் ஓ.பன்னீர்செல்வம், பா.வளர்மதி லெவலுக்கு பத்திரிகைகளில் எழுதும் ஊடகத் தோழர்களின் பெயரைதான் புலிகளுக்கு சூட்டியிருக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் மக்கள் மனதில் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் இன்னமும் அமரர் எஸ்.எஸ்.சந்திரன் அளவுக்கு புனிதமடையாத காரணத்தால்தான் புலிகளுக்கு தற்காலிகமாக வேறு பெயர்களை சூட்டியிருக்கிறார் புரட்சித்தலைவி. இந்த நெருக்கடியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழினத் தலைவர்கள், ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளப் போராளிகளும் கூட எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தோமோ இந்த ஜென்மத்தில் நமக்குக் கிடைத்த புரட்சித்தலைவியின் பஜனைமட பக்தகோடிகளாகவே இருக்கிறார்கள். சாவுக்கு டாட்டு நொட்டில் தொடங்கி, முந்தாநாள் ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்தவர் வரை வலது கையில் ரெட்டை குதுர றெக்கை பச்சை குத்தியவராகவே வாய்த்திருப்பது இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க புரட்சிகளுள் ஒன்றாக உலகத் தமிழின வரலாற்றில் பொறிக்கப்படும்.

புலிகளுக்கே பெயர் சூட்டிய புரட்சித்தலைவிக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தி புண்ணியம் கட்டிக்கொள்ளும் வாய்ப்பு நாம் டம்பளர்களுக்கா, மட்டையடி திமுகவின் வைகோவுக்கா, தமிழர் டான் நெடுமாறனுக்கா, கலக்கல் காம்ரேட் தாபாவுக்கா, அல்லது பத்திரிகைகளில் பாமாலை பாடப்போகும் ஊடகத்தோழர்களுக்கா என்பதுதான் இப்போது மக்களுக்கு சஸ்பென்ஸாக இருக்கிறது.

புண்ணியப் பூமியாம் பாரதம் புரட்சித்தலைவி அம்மாவின் கருணைப் பார்வையில் புனிதம் அடைகிறது. அம்மாவின் வழிகாட்டுதலில் பாரதம் வல்லரசாகி, உலகின் நெம்பர் ஒன் நாடாக ஆகப்போகும் காலம் வெகுவிரைவில். பாவ உலகில் பிறந்த பாவத்தைக் கழுவிக்கொள்ள நாமும் பாடுவோம் புரட்சித்தலைவியின் புனித கோவிந்தத்தை.

ஜெயஜெய தேவி ஜெய ஜெய தேவி புரட்சித்தலைவி சரணம்
ஜெயஜெய தேவி ஜெய ஜெய தேவி புரட்சித்தலைவி சரணம்
புரட்சி அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வ மங்களம் கூடும்


(இந்த பாடலை தினமும் 1008 முறை பாராயணம் செய்பவர்களுக்கு அல்லது ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாக போட்டு நூற்றியெட்டு லைக்கு வாங்குபவர்களுக்கு அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று வேதமார்க சன்மார்க்க போஷித நீடாமங்கல சோதிடர் வ.சுப்பிரமணிய அய்யர் கணிக்கிறார்)

14 மார்ச், 2013

குண்டெல்லோ கோதாரி!


கோதாவரி இந்தியாவின் இரண்டாவது நீளமான நதி. கங்கைக்குப் பிறகு இதுதான். 1465 கி.மீ. தூரம் பாய்கிறது. மகாராஷ்டிராவில் பிறந்து, ஆந்திராவை வளப்படுத்தி, தக்காண பீடபூமியை கடந்து வங்கக்கடலை அடைகிறது. கங்கையைப் போலவே இந்துக்களுக்கு இதுவும் புண்ணிய நதி. தென்னிந்தியாவில் ராமர் கோயிலுக்கு புகழ்பெற்ற புண்ணியத்தலமான பத்ராச்சலம் இந்நதியின் கரையில்தான் அமைந்திருக்கிறது.

வேண்டுவதை தருவாள் கோதாவரி. வேண்டாததை செய்தால் அழித்துவிடுவாள் என்றொரு நம்பிக்கை. 1986ல் அழித்துவிட்டாள். அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையில் கோதாவரியின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. சென்ற இடமெல்லாம் பெரும் நாசம். ஊருக்குள் புகுந்த வெள்ளம் மொத்தத்தையும் துடைத்துச் சென்றது. உயிரிழந்தோர் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. உயிர் பிழைத்தோர் அனைத்தையும் இழந்திருந்தனர். மூன்று நாட்களுக்கும் மேலாக சோறு தண்ணியில்லாமல் பத்ராச்சலம் ஸ்ரீசீத்தாராமச்சந்திர சுவாமி கோயிலில் ஒடுங்கிப் போயிருந்தவர்களை காக்க நேவி ஹெலிகாஃப்டர்கள் விரைந்தன. நகர்ப்புறங்களே நாசமென்றால், கிராமங்களின் கதி? மஞ்சள் நதி இம்மாதிரி சீற்றம் கொண்டு சீனாவை பேரழிவுக்கு உள்ளாக்கிய சம்பவத்தை ‘சீனாவின் துயரம்’ என்பார்கள். கோதாவரியின் கோபத்தை ‘ஆந்திராவின் துயரம்’ என்றும் சொல்லலாம். இருபத்தேழு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அந்நாட்களை நினைத்து மழை பெய்யும் போதெல்லாம் இன்னமும் நடுங்குகிறார்கள்.

கோதாவரி பேரழிவை கவிஞர்கள் கவிதையாக வடித்துத் தள்ளியதைப் போல, எழுத்தாளர்களும் கதைகளாக எழுதித் தள்ளினார்கள். அதில் ஒரு நூல்தான் கோதாவரி கதைலு. பி.வி.எஸ்.ராமராவ் எழுதியிருந்தார். 1989ல் வெளிவந்த இந்த புத்தகம் ஆந்திராவில் சூப்பர்ஹிட். இதை வாசித்த லட்சுமி மஞ்சுவுக்கு கோதாவரி வெள்ளத்தை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது.
                 
ஆந்திர சினிமாவின் அசைக்க முடியாத சக்கரவர்த்தி மோகன்பாபு. இரண்டு முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியிருக்கிறார். முன்னாள் ராஜ்யசபா எம்.பி. பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா என்று ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு ’டஃப் ஃபைட்’ கொடுத்தவர். நம்மூர் நாட்டாமை தெலுங்கில் ’பெத்தராயுடு’வாக படமானபோது இவர்தான் ஹீரோ. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்பக்கால நண்பரும் கூட. ரஜினியை மாதிரியே தமிழில் ஆரம்பத்தில் வில்லனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், தெலுங்குக்கு செட்டில் ஆகி ஹீரோவானார். இவருடைய மூத்த மகள்தான் லட்சுமி மஞ்சு. அடுத்த இரண்டு மகன்களும் கூட ஆந்திராவில் ஹீரோக்கள்தான். குடும்பத்தோடு கலைச்சேவை.

Boss Rajini

ஆந்திரப் பெற்றோர் என்றாலும் லட்சுமி மஞ்சு சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர். சிறுவயதில் நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பார். சினிமா அவருக்கு உயிர். அமெரிக்கா சென்று கலைத்துறையில் பட்டம் பெற்றார். ஏராளமான அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். பெரிய விளம்பரங்களில் தோன்றினார். சில்வஸ்டர் ஸ்டாலோன் போன்றவர்களிடம் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இருந்தும் தாய்மண் ஆந்திரா அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது.

ஹீரோயினாகதான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் (வயதும் முப்பத்தைந்து என்பது ஒரு காரணம்) கிடைத்த வித்தியாசமான வேடங்களில் –வில்லியாக கூட- நடிக்க ஆரம்பித்தார். எம்.பி. கார்ப்பரேஷன் என்று புதிய நிறுவனத்தை துவக்கி படங்களை தயாரித்தார். தம்பிகள்தான் ஹீரோ. ராம்கோபால் வர்மாவின் ‘தொங்லா முத்து’, ‘அனகனகா ஒரு தீரடு’ போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. ‘டிபார்ட்மெண்ட்’ படத்தில் சஞ்சய்தத்தின் மனைவியாக வந்தவர் இவர்தான். சமீபத்தில் நம்முடைய ‘கடல்’ படத்திலும் தமிழில் அறிமுகமானார். தெலுங்கின் மாற்று சினிமா முகமாக லட்சுமி மஞ்சு உருவெடுத்துவிட்டாலும் பெரிய ‘பிரேக்’ ஒன்றுக்காக மெனக்கெட்டுக் கொண்டிருந்தார்.

’கோதாவரி கதைலு’க்கு முறைப்படி பேசி சினிமாவாக்க உரிமை பெற்றார். சினிமாவுக்கு ஏற்றவகையில் கதை மாற்றப்பட்டது. புதுமுக இயக்குனரான குமார் நாகேந்திராவுக்கு வாய்ப்பளித்தார். “அமெரிக்காவில் என்னுடைய திறமைக்காகதான் வாய்ப்புகள் கிடைத்தது. மோகன்பாபுவின் மகள் என்பதற்காக அல்ல. நானும் ஒரு திறமையாளருக்குதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறே” என்றுகூறி குமார்நாகேந்திராவை அறிமுகப்படுத்துகிறார். இவர் விளம்பரப்பட இயக்குனர். இவரது சில விளம்பரங்கள் மஞ்சுவை அசத்தியிருந்ததாலேயே இந்த அரிய வாய்ப்பு வீடு தேடி வந்தது.

gundollo
2011 ஜனவரியில் இந்த படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார் மஞ்சு. இளையராஜாவின் தீவிர ரசிகையான அவர் ராஜாதான் இப்படத்துக்கு இசையமைத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் தவம் கிடந்தார். ஏனெனில் அவரது இசைதான் நதியை அழகாக்கும் என்பது மஞ்சுவின் எண்ணம். நான்கு மாதங்கள் கழித்து ராஜா ஒப்புக்கொண்டார். மூணாறு சென்று பாட்டுக்கு ட்யூன் போட்டார். ராஜாவின் இசை கோதாவரிக்கு ஆக்சிஜென் மாதிரி. அருமையான பாடல்கள் கிடைத்ததுமே படம் மடமடவென்று வளர ஆரம்பித்தது. ராஜா கொடுத்த தெம்பால் தமிழ்/தெலுங்கு இருமொழிகளிலும் படத்தை வெளியிட முடிவெடுத்தார் மஞ்சு. ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்று தமிழ் வெர்ஷனுக்கு பெயர் சூட்டப்பட்டது.

40 ஏக்கர் நிலம் மொத்தமாக வாடகைக்கு எடுத்தார்கள். ராஜமுந்திரிக்கு பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்தை புதுசாக ஆர்ட் டைரக்டர் உருவாக்கினார். ஆயிரக்கணக்கான லாரி தண்ணீரை பயன்படுத்தி மினி-கோதாவரி நதியை செட்டிங்கிலேயே உருவாக்கினார்கள் (லைஃப் ஆப் படத்தில் கடலையே செட்டு போட்டது போல). காட்சிகளை தத்ரூபமாக படம்பிடிக்க மொத்தம் 50 கேமிராக்கள். கிராபிக்ஸுக்கும் வெள்ளமாக செலவழித்திருக்கிறார்கள். கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரத்துக்காக படத்தின் வெளியீடு பல முறை தள்ளி வைக்கப்பட்டது.

படத்தின் கதை என்னவோ சிம்பிள்தான். ஆதி-மஞ்சு இருவருக்கும் திருமணம் ஆகிறது. கோதாவரியில் வெள்ளம் பாய்கிறது. கிராமங்கள் மூழ்குகின்றன. தன்னுடைய முன்னாள் காதலிக்கு என்னானதோ என்று ஆதி அலைபாய்கிறார். மஞ்சுவும் தன்னுடைய முன்னாள் காதலனை நினைத்துப் பார்க்கிறார். ஃப்ளாஷ்பேக்குகளில் காட்சிகள் விரிகின்றன.
இடையில் ஆதி-டாப்ஸி ‘லிப்-லாக்’ காட்சி ஒன்று படத்தில் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. என் வாழ்க்கையிலேயே முதல்தடவையாக இப்போதுதான் இவ்வளவு டீப் கிஸ் அடிக்கிறேன் என்று டாப்ஸியும் வெட்கத்தோடு ஒப்புக்கொண்டார். இந்த ஒரு காட்சிக்காகவே படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்குவோம் என்று சென்ஸார் பயமுறுத்த, கஷ்டப்பட்டு எடுத்த அக்காட்சியை நீக்கி யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
  
இது வெறும் படமல்ல. மஞ்சுவின் கனவு. தன்னை நிரூபிக்க பயன்படும் வாய்ப்பாக இப்படத்தை நினைக்கிறார். அதனால்தான் என்னவோ உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8க்கு படம் வெளியாகியிருக்கிறது. இன்னும் தமிழ் டப்பிங் பணிகள் சரியாக முடியாததால், தமிழ் வெளியீடான ‘மறந்தேன், மன்னித்தேன்’ கொஞ்சம் தள்ளிப் போகிறது.

முதல் பார்வையில் ‘குண்டெல்லோ கோதாரி’ பாஸ்மார்க்தான் வாங்கியிருக்கிறது. விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார் லட்சுமி மஞ்சு. ஆணாதிக்க சினிமாவில் ஒரு பெண் ஜெயித்துதான் காட்டட்டுமே?

(நன்றி : cinemobita.com)

13 மார்ச், 2013

வசந்த மாளிகை

அழகாபுரி ஜமீனின் இரண்டாவது வாரிசு ஆனந்த் ஒரு பெரும் குடி மற்றும் காம வெறியர். ஆனால் நல்லவர். வேலை வெட்டியே இல்லாத அவர் தனக்கு ஒரு பி.ஏ.வை வேலைக்கு வைத்துக் கொள்கிறார். பி.ஏ.வாக வரும் பெண் ஆனந்தை திருத்துகிறார். திருந்திய ஆனந்த் பி.ஏ.வை காதலிக்கத் தொடங்குகிறார். அந்தஸ்து, சுயமரியாதை மாதிரி சில பிரச்சினைகளால் பிரியும் காதலின் கதி என்ன? – ஹீரோயின் ஹீரோவை திருத்துவது என்று கிட்டத்தட்ட ‘புதிய பாதை’ கதை மாதிரிதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

கவுசல்யா தேவி என்பவர் எழுதிய தெலுங்கு நாவலான ‘பிரேமநகர்’ தெலுங்கில் அதே பெயரில் படமாக்கப்பட்டது. டி.ராமாநாயுடு பெரும் பொருட்செலவில் தயாரித்து 1971ல் வெளியானது. நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ நடிப்பில் வெளியான இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட். இதையடுத்து தமிழிலும் அதே படத்தை ‘வசந்த மாளிகையாக’ உருவாக்கினார் ராமாநாயுடு. தெலுங்கினை இயக்கிய பிரகாஷ்ராவே தமிழிலும் இயக்கினார். நடிகர், தயாரிப்பாளர், கேமிராமேன், இயக்குனர் என்று பிரகாஷ்ராவுக்கு நிறைய முகங்கள் உண்டு. வசந்தமாளிகைக்கு பிறகு சிவாஜிக்கு ‘அவன் ஒரு சரித்திரம்’ இயக்கியவரும் இவரே. இவருடைய மகன் ராகவேந்திரராவ் தெலுங்கில் நூறுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய சாதனை இயக்குனர். தெலுங்கின் சூப்பர் ஸ்டார்கள் அத்தனை பேரையும் இயக்கியவர் (ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்த ‘ஹிம்மத்வாலா’ இவருடைய இயக்கம்தான்).

தமிழுக்கு ஏற்ப வசந்தமாளிகையில் சில மாற்றங்கள் செய்துக்கொண்டார் பிரகாஷ்ராவ். குறிப்பாக காமராஜரின் பிரச்சார பீரங்கியான சிவாஜிக்காக சில அரசியல் ‘பஞ்ச்’கள் வசனங்களில் இடம்பெற்றது. சிவாஜி குடிகாரராக நடித்தாலும் அப்போது திமுக அரசு கொண்டுவந்த மதுவிலக்கு வாபஸை கிண்டலடித்து நாகேஷ் பேசுவார். காமராஜரின் பள்ளிச்சீருடை அறிமுகத்துக்கு ஒரு சின்ன பிரச்சாரத்தையும் சிவாஜி செய்வார் (ஸ்ரீதேவி பள்ளிச்சீருடை அணிந்து கிளம்பும்போது). பாட்டாளிகளுக்கு ஆதரவான வசனங்கள் மூலம் ஆளும் திமுகவுக்கு ஆணி அடிக்கவும் முயற்சித்திருக்கிறார்.

பீம்சிங் படங்களில் நடித்து, நடித்து சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்யக்கூடியவர் என்று பெயர் பெற்றுவிட்டார். கலர் படம் என்பதாலோ என்னவோ முடிந்தவரை யதார்த்தமான நடிப்பை வசந்தமாளிகைக்கு வழங்கினார். குடிக்கும் காட்சிகளில் அவரது கண்கள் சிவந்து, கால்கள் லேசாக தள்ளாட்டம் போட, நாக்கு குழறி, நடுங்கும் விரல்களில் சிகரெட் புகைத்து.. சர்வதேச தரத்துக்கு சிவாஜியின் நடிப்பு அமைந்தது. படத்தின் கதையோடு இணைந்தவை என்பதால் பாடல் காட்சிகளுக்கு பிரத்யேகமாக மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் பாடலில் கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்தே நடித்திருக்கிறார். ஒரே படத்தில் இத்தனை டைட் க்ளோசப் வேறு எந்த நடிகனுக்குமே வைக்க முடியாது. அப்படி வைத்தால் விகாரமாகி விடும். சிவாஜி மட்டுமே குளோசப்பிலும் அழகாக தெரிபவர். லாங் ஷாட்களிலும், ஸ்க்ரீனில் தன்னுடைய இருப்பை எப்படியேனும் தெரியப்படுத்துபவர்.

இம்மாதிரி படங்களைப் பார்க்கும்போது கடந்த நூற்றாண்டில் உலகின் தலைசிறந்த நடிகரான விளங்கிய சிவாஜிக்கு உரிய கவுரவத்தை நாம் அளிக்கத் தவறிய அவலம் உறைக்கிறது. வசந்தமாளிகை வெளிவந்ததற்கு முந்தைய ஆண்டுதான் ரிக்‌ஷாக்காரனில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டிருந்தது. வாத்யார் ரசிகனாக இருந்தாலும் நடிப்புக்காக அவருக்கு விருது என்பதை நம்மாலேயே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அப்போதைய இந்திரா காங்கிரஸுடனான திமுக கூட்டணிக்கு கிடைத்த லஞ்சமாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடைசிவரை சிவாஜிக்கு தேசியவிருது கொடுக்காமலேயே அவரை அவமானப்படுத்தி விட்டது இந்திய அரசு. காலமெல்லாம் காங்கிரஸுக்கு தன்னலம் பாராமல் உழைத்த கலைஞனுக்கு கிடைத்த பரிசு இது.

வசந்தமாளிகை வெளியான 1972, சிவாஜியின் ஆண்டு. அவ்வாண்டு குடியரசுத் தினத்துக்கு வெளியான ராஜாவில் தொடங்கி ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே, தவப்புதல்வன், வசந்தமாளிகை, நீதி என்று ஏழு படங்கள். ‘தர்மம் எங்கே’ தவிர்த்து மீதி ஆறு படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. வசந்தமாளிகை இருநூற்றி எழுபத்தைந்து நாள் ஓடி, வசூலில் மாபெரும் சாதனை புரிந்தது. தமிழில் மாபெரும் வெற்றி கொடுத்த தைரியத்திலேயே பிற்பாடு இந்தியிலும் ராஜேஷ்கண்ணா, ஹேமமாலினியை வைத்து வசந்தமாளிகையை எடுத்தார் ராமாநாயுடு. அங்கே எழுநூற்றி ஐம்பது நாள் ஓடியது.

வசந்தமாளிகையின் ஒரிஜினலான பிரேமநகரில் நாகேஸ்வரராவ் இறுதிக்காட்சியில் இறந்துவிடுவார். தமிழிலும் அதேமாதிரி இடம்பெற்று, ரசிகர்களின் கடுமையான எதிர்ப்பை வெளியான நேரத்தில் வசந்தமாளிகை பெற்றதாம். இதனால் தியேட்டர்களில் ஏற்பட்ட வன்முறைச்சூழலை தவிர்க்க, இறுதிக்காட்சியை மீண்டும் மாற்றி சிவாஜி உயிர்பிழைப்பதாக மாற்றப்பட்டதாக ‘பழம்பெருசுகள்’ சிலர் சொல்ல கேள்வி. உண்மையா என்று தெரியவில்லை. இந்தி வெர்ஷனிலும் இதே க்ளைமேக்ஸ்தான்.

72ல் தொடங்கி பலமுறை தியேட்டர்களில் வசந்தமாளிகை ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒவ்வொருமுறையும் வசூலை அள்ள தவறுவதேயில்லை. கடந்த ஆண்டு டிஜிட்டலாக்கப்பட்டு வெளியாகி ‘கர்ணன்’ மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, வசந்தமாளிகையும் மீண்டும் டிஜிட்டல் வடிவில் வெளியாகியிருக்கிறது. ‘டிஜிட்டல் ஆக்கியிருக்கிறோம்’ என்று சொல்லி ரசிகர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார்கள். ஒளி, ஒலியில் பெரிய துல்லியம் ஏதுமில்லை. டிவிடி ரிப்பில் இருந்து உருவி புரொஜெக்‌ஷன் செய்வதைப் போல மங்கலாக திரையில் தெரிகிறது. எது எப்படியிருந்தாலென்ன வசந்தமாளிகையின் வசீகரம் இதனால் எல்லாம் குறைந்துவிடவில்லை. இம்முறையும் அரங்குகளில் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக ரசிகர்கள். விசில் சத்தம், கைத்தட்டல்களால் தியேட்டர் கூரைகள் அதிர்கிறது.

ஆல்பட் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் கலைக்கோயில் சிவாஜி ரசிகர்மன்றத்துடையதும் ஒன்று. கலைக்கோயில் என்கிற பட்டம்தான் அவருக்கு எத்துணை பொருத்தமானது?