8 அக்டோபர், 2013

அத்தை வீட்டுக்கு என்ன வழி?

பட்டாசான மாஸ் ஹீரோவின் படத்துக்கு இப்படியா டைட்டில் வைப்பார்கள்.. தெலுங்கில் வைக்கிறார்களே? இந்த வருடத் தொடக்கத்தில் மகேஷ்பாபுவுக்கு ‘சீத்தம்மா வீட்டு வாசலில் சிறுமல்லி செடி’. இப்போது பவன் கல்யாணின் முறை. ‘அத்தை வீட்டுக்கு என்ன வழி?’

விசு, டி.பி.கஜேந்திரன், வி.சேகர் மாதிரி இயக்குனர்களின் இயக்கத்தில் ரஜினி, கமல் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும்? சிலருக்கு குமட்டலாம். ஹீரோவின் மாஸ், சப்ஜெக்டின் க்ளாஸ் என்று டோலிவுட் இந்த ட்ரெண்டில் அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டர் அடித்துக் கொண்டிருக்கிறது.

கப்பார் சிங்கில் தொடங்கியது பவன் கல்யாணுக்கு வசூல் மழை. அடுத்து ‘கேமிராமேன் கங்காதோ ராம்பாபு’. ஏழெட்டு ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வுகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த பவர்ஸ்டாருக்கு ‘ஹாட்ரிக் ஹிட்’ கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். பொறுப்பை ஒட்டுமொத்தமாக இயக்குனர் த்ரிவிக்ரத்திடம் ஒப்படைத்துவிட்டார்.
த்ரிவிக்ரம் லேசுப்பட்ட ஆளில்லை. சிறந்த வசனகர்த்தாவுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை ஐந்து முறை வாங்கியவர். அணு இயற்பியலில் தங்கமெடல் வாங்கியவர் என்றாலும் சினிமாத்துறையில்தான் ஈடுபட விருப்பம் கொண்டிருந்தார். ஆந்திராவின் காமெடிப் புயலான சுனிலின் கல்லூரித் தோழர் (அவருக்கும் இவருக்கும் கல்யாணம் கூட ஒரே நாளில்தான் நடந்தது). சுனில் மூலமாக டோலிவுட்டில் தொடர்புகள் ஏற்பட உதவி இயக்குனராக ஆனார். இவரது எழுத்துத் திறமையை கண்டுகொண்ட இயக்குனர் விஜயபாஸ்கர் வசனம் எழுதும் பொறுப்பை கொடுத்தார். இவர் வசனம் எழுதிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற, இயக்குனர் வாய்ப்பு கதவைத் தட்டியது. முதல் படமான ‘நுவ்வே நுவ்வே’ மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹிட். படம் பார்த்த மகேஷ்பாபுவுக்கு இவரோடு பணியாற்ற ஆசை. மகேஷ்பாபு – த்ரிவிக்ரம் காம்பினேஷனில் வந்த ‘அத்தடு’ டோலிவுட்டின் எவர்க்ரீன் மூவி. தமிழ், மலையாளம், இந்தியில் எல்லாம் டப் ஆகி ‘டப்பு’ பார்த்தது போக, போலிஷ் மொழியிலும் போலந்தில் வெளியானது. இப்படத்தின் காட்சி ஒன்று பிற்பாடு அப்படியே சுடப்பட்டு, ஹாலிவுட் படமான ‘தி இண்டர்நேஷனலில்’ வந்தது. பொதுவாக ஹாலிவுட் படங்களைதான் நம்மாட்கள் சுடுவார்கள். மாறாக த்ரிவிக்ரம் உருவாக்கிய காட்சியை ஹாலிவுட்காரர்கள் சுட்டிருக்கிறார்கள் என்றால் இவரது திறமையை உணர்ந்துக் கொள்ளலாம். டோலிவுட்டை ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாற்றவேண்டும் என்கிற கனவோடு உழைக்கும் மகேஷ்பாபுவுக்கு த்ரிவிக்ரத்தை பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை. மகேஷ்பாபு நடித்த ’தம்ஸ் அப்’ டெலிவிஷன் கமர்சியலை இயக்கியதும் கூட இவர்தான். ராம்சரண் தேஜா மற்றும் தோனி தோன்றும் பெப்ஸி விளம்பரம், விராத்கோலி மற்றும் தமன்னாவின் செல்கான் விளம்பரம் எல்லாம் இவரது கைவண்ணம்தான்.

அடுத்து பவன் கல்யாணுக்கு ‘ஜல்சா’. ஹிட்டே இல்லாமல் ஈயடித்துக் கொண்டிருந்த பவனுக்கு பம்பர்ஹிட்டாக அமைந்த படம். போக்கிரிக்கு பிறகு அதை மிஞ்சும் வகையில் ஒரு படம் எடுக்க வேண்டுமென்று மகேஷ்பாபுவுக்கு ஆசை வந்ததும், த்ரிவிக்ரத்தைதான் அணுகினார். ‘கலேஜா’, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட படம் ஓபனிங்கில் பின்னி பெடல் எடுத்தாலும், மட்டமான படமென்று விமர்சிக்கப்பட்டு சீக்கிரமே பெட்டிக்குள் முடங்கியது. “கொஞ்சம் அசட்டையா இருந்தாலும் ஊத்திக்கும் போலிருக்கே?” என்று சட்டென்று ஃபார்முக்கு வந்து ‘ஜுலாயி’ என்கிற சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தார். ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’ இயக்குனராக த்ரிவிக்ரமுக்கு ஆறாவது படம்.

கப்பார் சிங்கின் ஃபீலிங்கை அப்படியே ரசிகர்களுக்கு தக்க வைக்க வேண்டும். அதே நேரத்தில் ‘சீத்தம்மா’ மாதிரியான குடும்பக்கதையிலும் பவர் ஸ்டாரை நிலைநிறுத்த வேண்டும். இம்முறை ஒவ்வொரு காட்சியை எழுதும்போதும் த்ரிவிக்ரத்தின் பேனா ஒன்றுக்கு பத்துமுறை யோசித்தது. கப்பார்சிங்கில் ரசிகர்களை சிலிர்க்கவைத்த, சிந்திக்கவைத்த, சிரிக்கவைத்த காட்சிகளுக்கு மாற்றுக்காட்சிகளை அதே உணர்வுகளோடு எழுதினார். மனசுக்குள் நெடுநாட்களாக புதைத்து வைத்திருந்த உருகவைக்கும், கண்களை குளமாக்கும் குடும்பக் கதைக்குள் கச்சிதமான இடங்களில் அதை செருகினார். அவ்வளவுதான். இப்போது தெலுங்கானாவும், சீமாந்திராவும் தங்கள் அரசியல் மாச்சரியங்களை மறந்து ஒன்றுசேர்ந்து த்ரிவிக்ரத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து நடக்கும் போராட்டங்களால் திருப்பதி பிரம்மோற்சவத்துக்கே கூட்டமில்லை என்று ஊடகங்கள் அலறினாலும் தியேட்டர்களில் மட்டும் திருவிழாக்கோலம்.

‘அத்தாரிண்டிக்கி’ கதை ரொம்ப சிம்பிள்.

எண்பதைத் தொட்ட தாத்தா. காதல் கல்யாணம் செய்துகொண்டதால் மகளை துரத்தியடித்தவர். பின்னர் மனம் வருந்தி கடைசிக் காலத்திலாவது மகளோடு சேரவேண்டும் என்பதற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். பேரனின் உதவியை இதற்காக நாடுகிறார். தன்னுடைய அத்தையை எப்படி தாத்தாவோடு மீண்டும் பேரன் இணையவைக்கிறார் என்பதுதான் கதை. யூகித்திருப்பீர்களே.. அதேதான். செம சூப்பர் ஃபிகராக இருக்கும் அத்தை மகள் சமந்தாவை பவன் சைட் டிஷ்ஷாக வளைத்துப் போடுகிறார். சமந்தா பார்வைக்கு சின்னதாக இருந்தாலும் சிலுக்கென்றிருக்கிறார். சுபம்.

கதையை கேட்டால் நான்கு, ஐந்து கோடிகளில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே முடித்திருக்கலாமே என்றுதான் தோன்றும். ஆனால் வாங்கியிருப்பது பவன் கல்யாணின் கால்ஷீட் ஆயிற்றே. எனவே கிளாஸோடு மாஸ்ஸையும் மிக்ஸ் பண்ணி காக்டெயிலாக கலந்துக் கொடுத்து போதையாக்குகிறார்கள். “புல்லட் அரை அங்குலம்தான். அதுவே ஆறடி உசர மனுஷனை சாய்ச்சிடும். அந்த புல்லட்டே ஆறடி உசரத்துலே இருந்தா...” என்று தாத்தா (பொம்மன் இரானி) ‘இண்ட்ரோ’ கொடுக்க, பேரன் பவன் கல்யாண் ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமாகும் ஆக்‌ஷன் காட்சிக்கு மட்டும் இரண்டு கோடி ரூபாய் செலவாம்.
பவனுக்கு அழகான அத்தை. நதியா. அத்தைக்கு அழகான இரண்டு பெண்கள் பிரணிதா, சமந்தா. பிரணிதா ஜோடியில்லை என்றாலும் ஒரு ஜில்பான்ஸான டூயட் பாடுகிறார் பவன். தெலுங்கு சம்பிரதாயத்தின் படி சமந்தாவுடன் ஒரு டூயட், குத்து என்று கும்மாளம்தான். ‘ஆறடி புல்லட்’ ஓபனிங் சாங்கில் தொடங்கி படம் நெடுக தேவிஸ்ரீபிரசாத்தின் இசைவெள்ளம் தாறுமாறாய் ஓடுகிறது. குறிப்பாக கப்பார்சிங்கின் ஃபேபுலஸ் ஹிட்டான ‘கேவ்வூ கேக்கா’ ஐட்டம் சாங்கை, அட்டகாசமான பஜனையாக ரீமேக்கியிருக்கிறார். அதற்கு பவன் போடும் குத்தாட்டமெல்லாம் அநியாயத்துக்கு ஆடம்பரம். ஒரு கிளப் டேன்ஸில் செம ஜில்பான்ஸான ஆண்ட்டியான மும்தாஜ், பவனை பார்த்து கேட்கிறார். “நாம இதுக்கு முன்னாடி எப்பவாவது பார்த்திருக்கோமா?” தியேட்டரே ‘குஷி, குஷி’ என்று ஆர்ப்பரிக்கிறது.

இரண்டாம் பாதியில் கதையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு பிரும்மானந்தத்தை வைத்து நான்கைந்து வெர்ஷனில் ‘அகலிகை’ நாடகம் நடத்துகிறார்கள். வயிற்றைப் பிடித்துக்கொண்டு முன்சீட்டில் தலையை இடித்துக்கொண்டு இடியென விழுந்து, விழுந்து சிரிக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ஒரே ஒரு ஃப்ரேம் கூட போர் அடிக்காதவகையில் பர்ஃபெக்டான செய்நேர்த்தி.

மாஸ் மகாராஜா ரவிதேஜாவின் ‘பலுபு’ புதுசாக ஒரு ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறது. இனிமேல் இது தமிழ், இந்தி என்று தேசியமயமாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். கொடூரமான இரத்த வெறியாட்டம் நடத்திக்கொண்டிருந்த இந்திய ஆக்‌ஷன் சினிமா இனி க்ளைமேக்ஸில் காமெடிப் பந்துகளை உருட்டியே ஆகவேண்டும் என்பதுதான் அந்த ட்ரெண்ட். ‘அத்தாரிக்கி’ அதை அப்படியே கேட்ச் செய்துக்கொண்டது. பவர்ஸ்டாரை அடிக்க இறுதிக்காட்சியில் ஒரு ஊரே கிளம்பி வருகிறது. அவர் ஒரே ஒருவனைதான் போட்டு நையப்புடைக்கிறார். அவன் வாங்கும் அடியைக் கண்டு, அடிக்க வந்தவர்கள் ‘டர்’ராகி அப்படி, அப்படியே செட்டில் ஆகிறார்கள். பீட்டர்ஹெய்ன் அமைத்திருக்கும் இந்த சண்டைக்காட்சி ஆக்‌ஷன் காட்சிகளின் எண்டெர்டெயின்மெண்ட் லெவலை பலபடிகள் முன்னேற்றியிருக்கிறது.

கடைசியில் ஒரே ஒரு ட்விஸ்ட் ஒட்டுமொத்தப் படத்தையும் அஸ்திவாரமாக தாங்கி நிற்கிறது. ‘அத்தாரிண்டிக்கி’ நூறுகோடி எல்லையை அனாயசமாக தாண்ட, இந்த ‘ட்விஸ்ட்’தான் அடிப்படையான காரணம். த்ரிவிக்ரம் எவ்வளவு சிறப்பான சினிமா எழுத்தாளர் என்பதற்கும் இதுதான் சிறந்த உதாரணம்.

அத்தாரிண்டிக்கி தாரேதி - அன்லிமிட்டெட் மீல்ஸ்

5 அக்டோபர், 2013

பசைவாளி தூக்கும் படைப்பாளி!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வெளியான அன்று சாந்தி தியேட்டரில் மாலைக்காட்சியை நண்பர்களோடு பார்த்தோம். திருப்தி தருமளவுக்கு ஓரளவு சுமாரான கூட்டம்தான். படம் முடிந்ததும் டைட்டில் ஓட தொடங்குகிறது. அரங்கில் அப்படியொரு நிசப்தம். அவசரமாக 23-சி பஸ்ஸை பிடிக்க வேண்டியவர்கள் எல்லாம் மவுனமாக அதே நேரம் நிதானமாக கிளம்புகிறார்கள். ஆனால் ஒரு ஐம்பது பேர் அப்படியே திரையைப் பார்த்துக்கொண்டு சிலையாக நிற்கிறார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மெதுவாக ஓடுகிறது. இரண்டரை மூன்று நிமிடம் கழித்து ‘இணை இயக்கம் : புவனேஷ்’, ‘எழுத்து இயக்கம் : மிஷ்கின்’ என்று திரையில் ஒளிர்ந்ததும் ஐம்பது பேரும் கைத்தட்டி, ஆரவாரம் செய்கிறார்கள். படம் முடிந்ததுமே அடித்துப் பிடித்து ஓடும் தமிழ் பாரம்பரிய பழக்க வழக்கத்தினை கைவிட்டு, ஓர் இயக்குனரின் பெயரை பார்ப்பதற்காக கூட்டம் அப்படியே மூன்று நிமிடங்களுக்கு நின்றுகொண்டிருக்கும் காட்சியை என் வாழ்நாளில் இப்போதுதான் பார்க்கிறேன்.

பொதுவாக கமல்ஹாசன் ஒரு கறாரான விமர்சகர். அவ்வளவு சுலபமாக ஒரு இயக்குனரையோ, படத்தையோ பாராட்டிவிட மாட்டார். அப்படிப்பட்டவரே மனந்திறந்து ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ படத்தை பாராட்டியதோடு, மிஷ்கினின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று ஆசைப்படுவதாக சொல்கிறார். மகத்தான நடிகனான கமலை இயக்க முடியுமாவென்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்கள் எல்லாம் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அந்த நடிகரே ஓர் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லுவது எவ்வளவு சிறப்பான விஷயம்?

ஹீரோக்களின் ஓன் பிட்ச்சான தமிழ் சினிமாவில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம் போன்றவர்கள் இயக்கத்துக்கான மரியாதையை ஏற்படுத்தினார்கள். நம் காலத்தில் மிஷ்கின் அந்தப் பணியை தொடர்கிறார்.

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி எனக்கு பிடிக்கவில்லை. அஞ்சாதே அவ்வளவாக அசத்தவில்லை. ஏனெனில் அவரது திரைமொழி தமிழுக்கு புதிது. அந்த மொழியை புரிந்துக்கொள்ள இரண்டு படங்கள் தேவைப்பட்டது. ‘யுத்தம் செய்’ வந்தபோது அசந்துப் போனேன். ‘நந்தலாலா’ பிரமிப்பில் ஆழ்த்தியது. ‘முகமூடி’ அவ்வளவு மோசமான படமில்லை என்பது என் அபிப்ராயம். ஒரு சூப்பர் ஹீரோவை தமிழுக்கு உருவாக்கும் கனவு இன்னமும் முழுமை பெறவில்லை (யதேச்சையாக துரைசிங்கம் அமைந்திருக்கிறார்). முகமூடி மூலமாக அந்த டிரெண்டை முயற்சித்தார் மிஷ்கின்.

மிஷ்கினுக்கு காமிக்ஸ் வாசிப்பு உண்டு. அதன் தாக்கம்தான் அவர் வைக்கும் ஃப்ரேம்கள். கொரிய/ஜப்பானிய படங்களில் சாயல் மிஷ்கினின் படங்களில் இருக்கிறது என்பது தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனமாகவே வைக்கப்படுகிறது. கொரிய/ஜப்பானிய இயக்குனர்கள் முழுக்கவே காமிக்ஸ் தாக்கம் கொண்டவர்கள். தமிழில் அரிதாக மிஸ்கின், சிம்புதேவன், பிரதாப் போத்தன், கமல்ஹாசன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களுக்கே காமிக்ஸ் அறிமுகம் இருப்பதால், இவர்களது படங்களின் காட்சிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நம்முடைய வழக்கத்தை மீறியதாக இருக்கிறது. மிஷ்கினுக்கு காமிக்ஸின் பாதிப்பு மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம்.

மற்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு காட்சி இப்படி ஆரம்பிக்கும். தெருவை ஒரு லாங்ஷாட் காட்டுவார்கள். வீட்டை ஒரு குளோசப் அடிப்பார்கள். வரவேற்பரையில் கணவனும், மனைவி அமர்ந்திருப்பதை மிட்ஷாட்டில் காட்டி குளோசப்புக்கு போவார்கள். மிஷ்கினின் படத்தில் நேரடியாகவே வரவேற்பறைதான். பொது இடங்களில் சர்வைலென்ஸ் கேமிராக்கள் நம்மை எந்த ஆங்கிளில் பார்க்கிறதோ, அதே ஆங்கிளைதான் மிஷ்கின் படங்களில் பெரும்பாலான காட்சிகளில் காணமுடிகிறது. இது காமிக்ஸ் வாசிப்பு தரக்கூடிய தாக்கம். ஏ/4 அளவுள்ள தாளில், ஒரு பக்கத்துக்கு ஆறு அல்லது எட்டு கட்டங்களில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காமிக்ஸ் ஓவியர்கள், இப்படித்தான் ஆங்கிள் வைப்பார்கள்.

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் என்னென்ன சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதை இணைய விமர்சனங்களிலும் (99% பாஸிட்டிவ் ரிவ்யூ என்பதே சாதனைதான்), ஊடகங்களின் விமர்சனங்களிலும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு இண்டெலெக்ச்சுவல் இயக்குனருக்கு எப்போதுமே தன்னுடைய ரசிகன் மீது நம்பிக்கை இருக்காது. ‘அவனுக்கு புரியுமோ, புரியாதோ தெரியலை’ என்று நினைத்துக்கொண்டு அபாரமான காட்சிகளை எல்லாம் மீண்டும் வசனத்தில் டிரான்ஸ்லேட் செய்து, ஸ்ஃபூன் ஃபீடிங் செய்வார்கள். குறிப்பாக கமலஹாசன் இதில் கில்லாடி. முப்பது வருடங்களாக எதையாவது முயற்சித்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் அவருக்கு ரசிகர்களின் ரசனைத்தரத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை.

மிஷ்கின் ரசிகர்களின் தலையில் மொத்த பாரத்தையும் போட்டு விடுகிறார். படம் எடுக்கற நமக்கே புரியுது, ரசிகனுக்கு புரியாதா என்று சுலபமாக இப்பிரச்சினையை கடந்து செல்கிறார். குறிப்பாக தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் கதை சொல்லும் மரபை ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அட்டகாசமாக அடித்து உடைத்திருக்கிறது.

கொசுவர்த்தி சுருளை சுற்றி ஃப்ளாஷ்பேக் சொன்னது ஒரு காலம். பின்னர் டைட்டிலுக்கு முன்பாக மாண்டேஜ் காட்சிகளாக ஹீரோவின் சின்ன வயசு கதையை சொல்வார்கள், சைக்கிள் வீல் சுற்றிக் கொண்டிருக்கும்போதே ஹீரோ பெரியவனாகி விடுவார். ஏதோ ஒரு பாத்திரம், இன்னொரு பாத்திரத்திடம், இன்னொரு பாத்திரத்தின் கதையை ஃப்ளாஷ்பேக்காக பக்கத்தில் நின்று பார்த்தது மாதிரி சொல்லும். கவுதம் மேனனின் ‘காக்க காக்க’ சிங்குலர் நரேஷனில் ஃப்ளாஷ்பேக் சொன்னது. ஓநாய் சொல்லும் ஃப்ளாஷ்பேக் ரொம்பப் புதுசு. ஃப்ளாஷ்பேக்கில் நடந்ததை காட்டாமல், அதே நேரம் கதை கேட்கும் குழந்தைக்கும் புரியும் வண்ணம் (படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாதா?) மூன்று, மூன்றரை நிமிடத்தில் கிட்டத்தட்ட பாதிப்படத்துக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய காட்சிகளை சொல்கிறார்.
மாற்றுப்படமென்றெல்லாம் பம்மாத்து காட்டாமல் க்ளீன் த்ரில்லர் எண்டெர்டெயினராகதான் மகத்தான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் மிஷ்கின். பார்த்த எல்லோருமே நல்ல படம் என்று பாராட்டினாலும், போதுமான திரையரங்குகளில் வெளியாகவில்லை.. வெளியான திரையரங்கங்களிலும் அரங்கு நிறைந்து ஓடவில்லையென்று நிலைமை. பிட்டு படமெடுத்தவனெல்லாம் கூட படைப்பாளி என்று மார்தட்டிக் கொள்கிற சூழலில், நிஜமாகவே நல்ல படைப்பைக் கொடுத்த படைப்பாளியான மிஷ்கின், தன் படைப்புக்காக ஊர் ஊராகப் போய் பசைவாளி ஏந்தி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். போஸ்டர் ஒட்டுவதால் மிஷ்கின் கேவலமாகி விடவில்லை. ஆனால் ஒரு நல்ல படைப்பாளியை போஸ்டர் ஒட்டவைத்த நம் சமூகம்தான் கேவலப்பட்டு நிற்கிறது. மிஷ்கின் போஸ்டர் ஒட்டுவது ஸ்டண்ட் என்றெல்லாம் கூட விமர்சிக்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே? அதுவும் ஓர் கவன ஈர்ப்புதான். பிளாட்ஃபாரக் கடையில் கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரியின் நிலைமைக்கு ஒரு கிரியேட்டரை தள்ளிவிட்ட நாம்தான் வேதனைப்பட வேண்டும்.

பாவத்துக்கு பிராயச்சித்தமாக சினிமா ரசிகர்கள் சிலர் இணைந்து, சென்னையில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்கு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிஷ்கினுக்கு பாராட்டு விழாவோ அல்லது படத்துக்கு வெற்றிவிழா(!)வோ அல்ல. பேசப்பட வேண்டிய ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கான ஏற்பாடு.
படம் பார்த்திருக்க வேண்டுமென்று கூட அவசியமில்லை. நிகழ்வில் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டுக் கூட படத்தைப் பார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வரலாம்.

3 அக்டோபர், 2013

எங்கே போகிறது தமிழ் சினிமா?

அண்மைக்காலமாக வெளிவருகிற திரைப்படங்களில் கதாநாயகனாகத் தோன்றும் இளைஞன் எப்படிச் சித்தரிக்கப்படுகிறான்?

பொழுது விடிந்ததுமே குடிப்பவனாக (சூது கவ்வும்)

கும்பலாக உட்கார்ந்து குடிப்பவனாக (மூடர் கூடம்)

வேலை வெட்டி இல்லாமல், அதைத் தேடும் முயற்சி கூட இல்லாமல், பெண்களைத் துரத்திக்கொண்டு அலைபவனாக (கேடி ரங்கா கில்லாடி பில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்)

சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆள் கடத்துபவனாக (மங்காத்தா, ‘சூது கவ்வும்)

தன் தீய வழக்கங்களைத் திருத்த முயலும் பெற்றோர்களை ஒருமையில் பேசி அவமதிப்பவனாக (தீயா வேலை செய்யணும் குமாரு)

இப்படித்தான் நம் தமிழக இளைஞர்கள் குடிகாரர்களாக, பொறுக்கிகளாக, பொறுப்பில்லாதவர்களாக, பெண்கள் பின்னால் அலைபவர்களாக, அதற்காக எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளும் சோரணையற்றவர்களாக இருக்கிறார்களா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

பாத்திரங்கள் மட்டுமல்ல, அண்மைக்கால சினிமாக்களின் கதைக் கருக்கள் என்ன?

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு முன்பாக திரைக்கு வந்தது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. தமிழகத்தின் சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யும் வேலையை, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ செய்திருக்கிறது.

தர்மபுரியில் தொடங்கி மரக்காணம் வரை என்னென்ன நடந்தன என்பது நாடறிந்த செய்தி. கௌரவக் கொலைகள் எனும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் சமீபமாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று தினமும் செய்தித்தாள் வாசித்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கவலைக்குரிய இந்த விஷயத்தை பகடி செய்து பார்க்கிறது படம்.

வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் ஹீரோயின் அந்த ஊர் முக்கியஸ்தரான சத்யராஜின் பெண். பள்ளி மாணவி. வேலைவெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மீது காதல் எதுவும் இல்லை. ஹீரோயினின் டீச்சர் மீதுதான் அவருக்கு காதல். அந்த டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி விடுவதாலும், ஒரு காட்சியில் ஹீரோயினை புடவை கட்டி பார்த்துவிடுவதாலும் மட்டுமே, வேறு வழியின்றி ஹீரோவுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. காதல்வசப்பட்ட ஹீரோ, ஹீரோயினை வசப்படுத்த ஒரு காட்சியில் சினிமா ஹீரோ பாணியில் உடையணிந்து, கூலிங் கிளாஸ் அணிந்து அசத்துகிறார். பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத ஹீரோயினும் (முன்பு மாப்பிள்ளை பார்த்தபோது படிக்க வேண்டும் என்று சொல்லி கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஹீரோவை காதலிப்பதை உணர்ந்த அவரது அப்பா, வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார். ஹீரோ, ஹீரோயினை அழைத்துக்கொண்டு ஓடிப்போகிறார். தேடிப்போய் தன் பெண்ணை ஹீரோயினியின் அப்பா சுட்டுக் கொன்றுவிட்டார் என்று ஊரில் பேச்சு.

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே கௌரவத்துக்காக தன் பெண்ணைக் கொலை செய்த மானஸ்தர் என்பதாக சத்யராஜின் பாத்திரம் அறிமுகப்படுத்தப் படுகிறது. ஊரிலும் அப்படியொரு பேச்சு இருப்பதை அவர் கௌரவமாகக் கருதுகிறார்.

படத்தில் சத்யராஜ் ஏற்றுள்ள பாத்திரம் என்ன ஜாதியாக சுட்டப்படுகிறார் என்பதை யூகிப்பது அவ்வளவு கடினமல்ல. பெரிய மீசை. நெற்றியில் பொட்டு. திண்டுக்கல் - பழனி வட்டாரக் கிராமம் என்றெல்லாம் நிறைய க்ளூ இருக்கிறது. ஹீரோவின் ஜாதி என்னவாக இருக்கும் என்பதற்கும் க்ளு இருக்கிறது. அவரது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக - குடிசையாக இருக்கிறது. நெற்றியில் பட்டை, மீசை மாதிரியான அடையாளங்கள் இல்லை.

இப்படத்தில் காட்டப்படுவதுதான் தமிழ்நாடா? காதல் திருமணங்கள் குறித்து பிரச்சினை எழுப்பும் சில அரசியல் கட்சி சொல்லிவரும் குற்றச் சாட்டுக்களில் சில...

பணக்கார / பெரிய இடத்துப் பெண்களாகப் பார்த்துக் காதலிக்கிறார்கள். பிற்பாடு,பஞ்சாயத்து வந்தால் பணம் பறிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக. இது நிஜமான காதல் அல்ல. நாடகக் காதல்.

ஜீன்ஸ் பேண்ட்டும், கூலிங் கிளாஸும் அணிந்து அப்பாவி கிராமத்து இளம்பெண்களை ஏமாற்றுகிறார்கள்.

மைனர் பெண்களைக் காதலித்து கர்ப்பமாக்குகிறார்கள்.

இப்போது மேலே சொல்லப்பட்ட படத்தின் பின்னணியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும்.

தர்மபுரி காதல் கலவரம் சமீபத்தில் நிகழ்ந்து இன்னமும் ரத்தக்கறை கூட காயாத நிலையில் காதலையும், கௌரவக் கொலைகளையும் பகடியாகப் பார்த்திருக்கிறது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
வேண்டுமென்றேதான் பகடி செய்தேன். காதலுக்கு ஜாதி/வர்க்கத்தால் எதிர்ப்பு, அதன் காரணமாக கௌரவக் கொலை என்பதெல்லாம் படுமோசமான முட்டாள்தனம். அதைப் பகடி செய்து படமெடுத்திருப்பதும், அத்தீமையை எதிர்ப்பதன் ஒரு வடிவம்தான்" என்கிறார், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குநரான பொன்ராம்.

‘சூது கவ்வும்’ படத்தில் ஓர் அரசியல்வாதி நேர்மையாக இருப்பது தவறு என்பதைப் போல ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மாட்டிக் கொள்ளாமல் ஆள் கடத்துவது எப்படி என்று இளைஞர்களுக்கு வகுப்பெடுக்கப்படுகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் சித்தரிக்கப்பட்ட இளைஞர்களைப் பாருங்கள். பள்ளிப் பெண்ணைக் கூட துரத்தித் துரத்தி, ‘ஈவ் டீஸிங்’ செய்யும் இளைஞராக பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்திருந்தார். வேலை வெட்டி இல்லாத மூன்று இளைஞர்கள் ஒரு பெண்ணை ஈர்ப்பதற்காக, ‘தில்லாலங்கடி’ வேலைகள் செய்கிறார்கள். பல் விளக்குவதைப்போல இயல்பாக தண்ணி அடிக்கிறார்கள். கலாட்டா செய்கிறார்கள். தொடர்ச்சியாக, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, நேற்றைய, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று இந்த போதை இளைஞர்கள்தான் இன்று ஹீரோக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்தால் இப்படி போதை இளைஞனாக, பொறுக்கியாக இருப்பதுதான் ஹீரோவின் அடையாளம் என இளைஞர்கள் மனதில் பதிந்து போகாதா?
எல்லா ஊரிலும் இருப்பதைப் போல இளைஞர்களில் ரவுடிகளும், பொறுக்கிகளும் நம்மூரிலும் இருக்கிறார்கள். ஆனால் அதுவே பெரும்பான்மை குணம் கிடையாது. பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழில் மிகக் குறைந்த படங்களே வருகின்றன. கற்பனை வறட்சி, புதியவற்றை முயற்சிக்கத் தயங்கும் வணிக அழுத்தம் காரணமாக மசாலாப் படங்களில் மட்டுமல்ல, கலைப்படங்களிலும் கூட மிகையாக சித்தரிக்கப்படும் பாத்திரங்களும், காட்சிகளும் இடம்பெறுகின்றன" என்கிறார், திரையார்வலரும், கவிஞருமான சரவண கார்த்திகேயன்.

மது அருந்துவது, புகை பிடிப்பது, சைட் அடிப்பது, அடாவடியாகக் காதலிப்பது, துரத்தித் துரத்தி யாரையோ அடிப்பது, உதைப்பது, வெட்டுவது... இப்படியாகத்தான் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் இளைஞன் சித்தரிக்கப்படுகிறான் அல்லது அரசியல்வாதியாக ஆசைப்படுபவன் வாக்காளர் பட்டியலில் தன் பெயரைப் பதிந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு கூட இல்லாத படுமுட்டாளாக இருக்கிறான்.

சினிமாவில் சித்தரிக்கப்படும் இதே இளைஞன்தான் சமூகத்திலும் இருக்கிறானா? அநேகமாக அரசியல் கட்சிகள் கைவிட்டுவிட்ட நேரத்தில் ஈழப் பிரச்சினைகாகத் தெருவில் இறங்கித் தமிழக மாணவர்கள் போராடியது நெடுங்காலத்திற்கு முன் அல்ல. ஊழல் குறித்து அன்னா ஹசாரேவின் அழைப்பைத் தொடர்ந்து எழுந்த அலையில் இளைஞர்களின் பங்கு கணிசமானது. பாலியல் வன்முறைகளை எதிர்த்து அவர்கள் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தங்கள் கனவுகளைக் கைவிட்டு வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். உடன் பிறந்த சகோதரிகளது திருமணத்திற்காக கூடுதல் வேலைகள் செய்கிறவர்கள் இருக்கிறார்கள்.கடன் வாங்கியாவது படித்து முன்னேற வேண்டும் என்று வங்கியில் கடன் வாங்கிப் படிப்பவர்களில் இந்தியாவிலேயே தமிழ் நாட்டு மாணவர்கள்தான் முதலிடம். யதார்த்தம் இப்படி இருக்க... டாஸ்மாக் பாரில் மது போதையில் முடங்கிப் போனவனாக இளைஞர்களைச் சித்தரிப்பது ஏன்? இதற்குப் பின்னுள்ள நுண் அரசியல் என்ன?
இந்தப் போக்குக்கு படைப்பாளிகளை மட்டும் குறை சொல்லாதீர்கள்" என்கிறார் இயக்குநர் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள் என்று வித்தியாசமான கதைகளைச் சொல்ல முற்பட்ட இவர் கூட தமிழ் சினிமாவின் இந்த லேட்டஸ்ட் டிரெண்ட்டை நியாயப்படுத்திதான் பேசுகிறார்.

அரசு டாஸ்மாக்கை நடத்துகிறது எனும்போது, மது அருந்துவது சட்டப்பூர்வமாக சரி என்கிற மனநிலை நம் இளைஞனுக்கு ஏற்பட்டு விட்டது. சினிமா மட்டும் மாறவில்லை. டாஸ்மாக் கலாச்சாரத்தால் தமிழ் சமூகத்தின், ‘லைஃப் ஸ்டைல்’ மாறியிருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டே தமிழ் சினிமா இயக்குநர்கள் காட்சிகளை அமைக்கிறார்கள். அத்துடன், தான் எடுக்கும் சினிமா, தயாரிப்பாளருக்கு வணிகரீதியான வலுவையும் தரவேண்டும் என்றே ஒவ்வொரு இயக்குநருக்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது" என்கிறார் ராம்.

திரைப்படத்தின் உள்ளடக்கத்தை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு தணிக்கைக் குழுவிற்கு உண்டு. ஆனால் சில படங்களைப் பார்க்கும்போது தணிக்கைக் குழு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தீய பழக்கங்களைப் பெருமையாகச் சொல்லும் படங்களுக்கும், ஆபாசமான இரட்டை அர்த்தப் பொருள் பதிந்த வசனங்கள் நிறைந்த படங்களுக்கும் ‘யூ’சான்றிதழ் வழங்கப்படுகிறது, சமீபத்தில் திரைக்கு வந்த, ‘ஆர்யா சூர்யா’ அப்படிப்பட்ட படம்தான்.
இது திரைப்படத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல, சமுதாயத்தின் வீழ்ச்சி. வலிமைமிக்க ஊடகமான சினிமாவை இன்றைக்கு எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம்? கதாநாயகன் அணியும் கோட், கையில் கட்டியிருக்கும் வாட்ச், முகத்தில் அணிந்திருக்கும் கண்ணாடி மாதிரி கதாநாயகியையும், நாயகனின் விளையாட்டு பொம்மையாக சித்தரிக்கிறார்கள். எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ, அந்த நிலைக்கு இந்த சினிமா ஊடகம் வந்திருக்கிறதே... இந்திய சினிமா குறிப்பாக தமிழ் சினிமா என்கிற வருத்தமும் கோபமும் என்னைப்போல பலருக்கும் உண்டு" என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

ஆனால் இந்த அறிவுஜீவிகளின் கோபம் கையாலாகாத மலட்டுக் கோபம். பெரியார், ராஜாஜி, காந்தி போன்றவர்கள் வெளிப்படையாக சினிமாவை தீமை என விமர்சித்துப் பேசியதுண்டு. எம்.ஜி. ஆர். தன் படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளிலோ, மது அருந்துவது போன்ற காட்சிகளிலோ நடித்தது இல்லை. ஆனால் இன்றைய அரசியல்வாதிகளோ, அறிவுஜீவிகளோ ஏன் ஊடகங்களோ கூட இந்தச் சீரழிவைக் கண்டிப்பதில்லை. குறைந்தபட்சம் ஒரு விவாதத்தைக்கூட முன்னெடுப்பதில்லை. இவர்களில் பலர் சினிமாவால் ஆதாயம் பெறுகிறார்கள் என்பது கூட காரணமாக இருக்கலாம்.

அதனால் மக்கள், குறிப்பாக படித்த இளைஞர்கள், இந்தப் படங்கள் நம்மை இழிவுபடுத்துகின்றன என்பதைக்கூட உணர்ந்துகொள்ள இயலாதவர்களாக இந்தப் படங்களை விழுந்தடித்துக் கொண்டு போய்ப் பார்க்கிறார்கள்.சோஷியல் நெட்ஒர்க் புரட்சியாளர்கள், ‘நல்லாயிருக்கு. நாலு வாட்டி பார்க்கலாம்’ என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். இப்பிரச்சினைகளை இணையங்களில் விவாதிக்கும்போது தீக்குளிக்குமளவுக்கு தீவிரவமாக எழுதியவர்கள் இவர்கள். இளவசரனின் காதலுக்காக தொண்டைத் தண்ணி வறண்டு போகுமளவுக்கு டீக்கடைகளிலும், பஸ்ஸிலும், ரயிலிலும் உரத்துப் பேசியவர்கள், இன்று அச்சூழலை பகடி செய்து வந்திருக்கும் படைப்பை, ‘சூப்பர்’ என்று நீட்டும் மைக் முன்பாக வாய்கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.

தெரியாமல்தான் கேட்கிறேன். தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு சொரணை என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா?

(நன்றி : புதிய தலைமுறை)

27 செப்டம்பர், 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

இடம்:
டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:
  • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
  • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.
நேரம்:
  • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
  • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.

நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.
உங்கள் மடிக்கணினி, Data card, படம்பிடி கருவிகளைக் கொண்டு வந்தால் பயிற்சிகளில் பங்கெடுக்க உதவியாக இருக்கும். எனினும், இவற்றைக் கொண்டு வருதல் கட்டாயம் இல்லை.
நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
  • புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்
    • தமிழ்த் தட்டச்சு
    • தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
    • விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல்
    • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
  • ஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்
    • சிறப்பாக பரப்புரை செய்வது எப்படி?
    • சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி?
    • தானியங்கிகள் பயன்படுத்துவது எப்படி?
    • சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
  • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
  • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
  • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
  • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
  • நன்றியுரை (3 நிமிடங்கள்)
சிற்றுண்டி, தேநீர் வழங்கி நிகழ்வு நிறைவு பெறும்.

25 செப்டம்பர், 2013

உன் ஏரியா எங்கேன்னு சொல்லு!

இரவு ஒன்பதரை இருக்கும். உலகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருக்கும் நந்தனம் சிக்னலில் நத்தையாக ஊர்ந்துக் கொண்டிருந்தேன். ‘பொட்’டென்று பொன்வண்டு சைஸுக்கு ஒரு மழைத்துளி. தலையில் குட்டு மாதிரி விழுந்தது. கொஞ்சநாட்களாக மழையின் வடிவமே மாறிவிட்டது. நமக்கு முன்னெச்சரிக்கை தரும் விதமாக மிதமான தூறல், ஊதக்காற்று எல்லாம் மிஸ்ஸிங். டைரக்டாக அடைமழைதான்.

சிக்னலை கடப்பதற்குள்ளாகவே தொப்பலாகி விட்டது. உள்ளாடைகள் கூட நூறு சதவிகிதம் நனைந்து, குளிரில் ஜன்னி வந்தது போலாகி விட்டது. மவுண்ட்ரோட்டில் மழைக்கு ஒதுங்க ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை. பாலைவனமே பரவாயில்லை. கை, கால் உதறலெடுக்க ஒண்டிக்கொள்ள ஏதாவது இடம் கிடைக்குமாவென்று, மெதுவாக செகண்ட் கீரில் உருட்டிக்கொண்டே வந்தேன்.

பெரியார் மாளிகை எதிரில் ஃபயர் ஸ்டேஷன். உள்ளே நுழைந்துவிடலாம் என்று பார்த்தால், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “இங்கெல்லாம் வரக்கூடாது” என்று மழையில் நனைந்துக்கொண்டே விரட்டிக் கொண்டிருந்தார். கொஞ்சதூரம் தள்ளியிருந்த நிழற்குடையில் சுமார் நூற்றி ஐம்பது பேர் கரும்புக்கட்டு மாதிரி நெருக்கியடித்து நின்றார்கள். வாளிப்பான சில ஆக்டிவா ஆண்டிகளும் அந்த கூட்டத்தில் இருந்ததைக் கண்டு சோகத்துக்கு உள்ளானேன். ஜோதியில் கலந்துக் கொள்ளலாமா என்று வண்டியை மெதுவாக்கியபோது, அந்த எறும்புப் புற்றுக்குள்ளிருந்து ‘சவுண்டு’ வந்தது. “யோவ். இங்க இருக்குறவங்களுக்கே இடமில்லாம நனைஞ்சுக்கிட்டிருக்கோம். வேற இடத்தைப் பாரு”. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.

மழை சனியன் குறைந்தபாடில்லை. குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுக்க ஆரம்பித்துவிட்டது. சைதாப்பேட்டைக்கு முன்பாக பேன்பேட்டை அருகே எதிர்வாடையில் ஒரு டீக்கடை தென்பட்டது. கூட்டமும் குறைவாக இருக்கவே, நமக்கொரு புகலிடம் நிச்சயமென்று ‘யூ டர்ன்’ அடித்துத் திரும்பினேன். கடைக்காரர் கலைஞரின் இலவசத் தொலைக்காட்சியை, வாடிக்கையாளர் சேவைக்காக வைத்திருந்தார்.
“தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு”

“உன் ஏரியா எதுன்னு சொல்லிட்டுப் போ”

ஏதோ ஒரு காமெடி சேனலில் ‘நகரம் மறுபக்கம்’ காமெடி ஓடிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த பதினைந்து, இருபது பேருமே வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சிரித்து மாளாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். ஆனந்தச் சிரிப்பால் அவரது கண்களிலும் நீர் தாரையாக பொழிய ஆரம்பித்தது. வடிவேலு நடிக்காதது நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு?

“ஆனா... இப்படியெல்லாம் நிஜமா நடக்க சான்ஸே இல்லை. சினிமாலே மட்டும்தான் நடக்கும்” என்று பொத்தாம்பொதுவாக என்னைப் பார்த்துச் சொன்னார்.

“இல்லைங்க. நெஜமாவே நடந்திருக்கு. என் ஃப்ரெண்டுக்கே இதுமாதிரி ஆச்சி” என்றேன்.

“நெசமாவா” என்றவரிடம், கதை சொல்ல தயாரானேன்.

இதற்குள் மழையின் வேகம் குறைந்துவிட அந்த தற்காலிக கூட்டிலிருந்து பறவைகள் திசைக்கொன்றாக கிளம்பிவிட்டன. என்னிடம் கதை கேட்க இருந்தவரும், அவருடைய பஜாஜ் எம்.எய்ட்டியை உதைத்துக் கொண்டிருந்தார். வசமாக சிக்கிய ஆடு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டால் கசாப்புக் கடைக்காரனுக்கு எப்படியிருக்கும். அந்த மனநிலைக்கு உள்ளாகி விட்டேன்.

நோ பிராப்ளம். நமக்குதான் ‘ப்ளாக்’ இருக்கே. இங்கே ஆடுகளுக்கும் பஞ்சமில்லை.

அந்த கதை என்னவென்றால்...?

‘வரவனையான், வரவனையான்’ என்றொரு ப்ளாக்கர் இருந்தார். இயற்பெயர் செந்தில். திண்டுக்கல்லில் வசித்து வந்தார். 2006-07களில் தமிழ் இணையத்தளங்களில் இயங்கிவந்த தீவிரவாதிகளில் ஒருவர். ஓட்டுப் பொறுக்கி அரசியலைப் புறக்கணித்து இணையத்திலேயே இயங்கி வந்த அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) என்கிற அரசியல் கட்சியில் நாங்களெல்லாம் மெம்பர்கள்.

திராவிடப் பாரம்பரிய மணம், குணம் நிரம்பிய வரவனையானுக்கு கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே கேலியும், கிண்டலும் பீரிட்டுக் கிளம்பும். தோழர்களை ‘டவுஸர் பாண்டிகள்’ என்று விமர்சித்து எழுதுவார். ஒரிஜினல் டவுஸர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸார் என்பதை நினைவில் கொள்க. தோழருக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதான தோற்றம் தெரிந்ததோ என்ன எழவோ தெரியவில்லை. இவர்களையும் அதே பட்டப்பெயரில் எழுதி வந்தார்.

எவ்வளவு திட்டினாலும் சொரணையே இல்லாமல் ரியாக்ட் செய்யாமல் இருப்பதற்கு தோழர்கள் என்ன திமுகவினரா அல்லது அதிமுகவினரா. மார்க்சிஸ ஏங்கலிஸ லெனினிய மாவோயிஸ நக்ஸலிய பின்னணி கொண்ட தோழர் ஒருவர் (சுருக்கமாக ம.க.இ.க) தொடர்ச்சியான இவரது விமர்சனங்களை கண்டு ‘டென்ஷன்’ ஆனார். உண்மையில் வரவனையானின் குறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஏனெனில் அப்போது அவர்கள்தான் அம்மாவுக்கு சிறப்பாக பஜனை செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நம் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடுக்கு குத்துமதிப்பாக தங்கள் இயக்கத்தைதான் குறிவைத்து வரவனை அடிக்கிறார் என்று தோன்றியிருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் புயலாக எழுந்தார்.

திண்டுக்கல்லில் இருந்த வரவனையானுக்கு போன் வந்தது. போனை எடுத்து ‘ஹலோ’ சொன்னார். பதிலுக்கு ‘ஹலோ’ சொல்லுவதை விட்டு விட்டு க்ரீன் க்ரீனாக அர்ச்சனை விழுந்திருக்கிறது. மேலும் ஒரு பகிரங்க நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

“நீ எங்கே இருக்குன்னு சொல்லுடா. நேர்லே வந்து உன்னை தூக்கறேன்”

“நான் திண்டுக்கல்லே இருக்கேன் தோழர்”

“திண்டுக்கல்லுன்னா எங்கேன்னு கரெக்டா சொல்லு”

“பஸ் ஸ்டேண்டுலே ஒரு ‘பார்’ இருக்கும். அங்கே வந்து செந்தில்னு கேட்டீங்கன்னா சொல்லுவாங்க தோழர்” நம் தோழர் வரவனையான் அப்போது ‘பார்’ நடத்திக் கொண்டிருந்தார்.

“தோ வரேன். ரெடியா இரு”

தோழரை வரவேற்க நம் தோழரும் அவரிட்ட ஆணைப்படி ரெடியாகதான் இருந்திருக்கிறார். டாஸ்மாக் வாசலையே பார்த்து, பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம்.

மறுநாளும் போன்.

“திண்டுக்கல்லே எங்கே இருக்கே?”

“அதான் சொன்னேனே. பஸ் ஸ்டேண்ட் பார்லே இருக்கேன்னு”

“நான் அங்கேல்லாம் வரமுடியாது. வீட்டு அட்ரஸை சொல்லு”

வரவனையானும் சின்ஸியராக அட்ரஸை சொல்லிவிட்டார். “நேர்லே வர்றேன். ரெடியா இரு” என்கிற வழக்கமான பஞ்ச் டயலாக்கை சொல்லிவிட்டு அவரும் போனை வைத்துவிட்டார். மார்க்ஸியம் மீது இவ்வளவு பற்றும், ஈடுபாடும் கொண்ட தோழர் மீது நம் தோழருக்கு காதலே வந்துவிட்டது. தன்னை அஜித்குமாராகவும், தனக்கு போன் செய்த தோழரை தேவயானியாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு ‘போன்’ வந்த எண்ணுக்கு இவரே மீண்டும் முயற்சித்திருக்கிறார்.

“ஹலோ தோழர்... கொஞ்ச நேரம் முன்னாடி இந்த நம்பரிலிருந்து பேசினது...”

“சார்.. இது ஒரு ரூவா காய்ன் பூத்து சார். யார் யாரோ வந்து பேசுறாங்க. யார் யாருன்னு குறிப்பா எனக்கு எப்படி தெரியும்?”

மூன்றாவது நாளும் போன் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்த, வரவனை இந்த கண்டிஷனில் கொஞ்சம் டென்ஷனாகி விட்டார். இம்முறை இவர் தோழர் மீது சொற்வன்முறையை பிரயோகித்திருக்கிறார்.

“வர்றேன், வர்றேன்னு டெய்லி உதார் விட்டுட்டு ஒரு ரூவா காய்ன் பூத்துலேருந்து பேசுறீயேடா வென்று. நான் வர்றேண்டா உன் ஏரியாவுக்கு. நீ எங்கிருக்கேன்னு சொல்லு. உன் அட்ரஸைக் கொடு. என்னத்தை பிடுங்கறேன்னு பார்த்துடலாம்”

க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டதை உணர்ந்த தோழர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முன்வந்தார்.

“டாய். கம்யூனிஸ்டுகளை அசிங்கமா திட்டுற உன்னை விடமாட்டேன். ஆம்பளையா இருந்தா சென்னைக்கு வாடா.. ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்துக்கலாம்”

“சென்னையிலே எங்கே. அட்ரஸை சொல்லு”

“சென்னையிலேன்னா... ஆங்... பனகல் பார்க் வாசல்லே நாளைக்கு காலையிலே பதினோரு மணிக்கு”

வரவனையானுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. எனக்கு போன் செய்து சொன்னார்.

“தலை... எவனோ காமெடி பீஸ் ஒரு ரூவாய் பூத்துலே இருந்து சும்மா உங்களை கலாய்க்கிறான். சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்படி நெஜமாவே இவனாலே ஏதாவது ஆவும்னு நெனைச்சீங்கன்னா லோக்கல் போலிஸ்லே நம்பரை மென்ஷன் பண்ணி, ஒரு கம்ப்ளையண்ட் கொடுத்துடுங்க” என்றேன்.

“அப்படில்லாம் ஒண்ணுமில்லை லக்கி. வேலை நேரத்துலே போனை போட்டு வர்றேன், வர்றேன்னு உதாரு விட்டுக்கிட்டிருக்கான். அவனை புடிச்சி நாலு காட்டு காட்டலாம்னுதான்” என்றார்.

மறுநாள் காலை பத்து மணி. அப்போதுதான் அலுவலகம் வந்திருந்தேன். வரவனையானிடம் இருந்து போன்.

“சென்னைக்கு வந்திருக்கேன் லக்கி”

“என்ன திடீர்னு”

“அந்த டவுஸர் பாண்டியை பார்க்கதான். பனகல் பார்க்குலே நிக்கிறேன்” என்றார்.

ஒரு ரூவாய் காய்ன் பூத் போன்காலை நம்பி திண்டுக்கல்லில் இருந்து ராவோடு ராவாக பஸ் பிடித்து சென்னைக்கு வந்த வரவனையானை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

“கொஞ்சம் வேலையிருக்கு. முடிச்சிட்டு வர்றேன் செந்தில். நடுவுலே அவன் வந்துட்டான்னா மட்டும் கொஞ்சம் ரிங் அடிங்க. உடனே ஓடியாந்துடறேன்” என்றேன்.

மதியம் லஞ்ச் டைமில் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு பனகல் பார்க்குக்கு விரைந்தேன். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பார்க் வாசலில் ஆடாமல், அசையாமல் கம்பீரமாக செந்தில் நின்றிருந்தார்.

“பதினோரு மணிக்கு வர்றேன்னு சொல்லியிருந்தான் லக்கி. இன்னும் காணோம்” அப்போதே நேரம் மூன்று மணியை தொட்டிருந்தது.

“இதுக்கு மேலேயும் வருவான்னு நம்பிக்கை இருக்கா தோழர்?”

“கம்யூனிஸ்ட்டு ஆச்சே.. சொன்ன சொல்லை காப்பாத்துவான்னு நெனைச்சேன்”

மேலும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தோழர் வருவதற்கு அறிகுறியே தெரியவில்லை.

“சரி. நான் இப்படியே கெளம்புறேன் லக்கி. கோயம்பேட்டுலே விட்டுடுங்க. ஒரு நாளை ஃபுல்லா வீணாக்கிட்டான், நான்சென்ஸ்” என்றார். அப்போது வரவனையைப் பார்க்க, ‘தண்டவாளத்துலே படுத்து தூங்கிட்டிருந்தேனா, அப்படியே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலு என் கழுத்து மேலே ஏறிப்போயிடிச்சி’ என்று கழுத்தில் ரத்தத்தோடு வடிவேலுவிடம் சொல்லும் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு ‘ஒரு ரூவா காய்ன் பூத்’தில் இருந்து ஏதேனும் சாதாரண கால்கள் வந்தாலே, பருத்திவீரன் க்ளைமேக்ஸ் பிரியாமணி மாதிரி “டேய் என்னை விட்டுடுங்கடா...” என்று அடுத்த சில நாட்களுக்கு வரவனை கதறிக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் இரவுகளில் அவருக்கு வந்த கனவுகளில்கூட நமீதா வந்ததில்லையாம். ஒரு ரூபாய் போன் பூத்துதான் அடிக்கடி வருமாம். ஆனால் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடிடமிருந்து அதற்குப்பிறகு போன் வந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று சோகம். பதிலுக்கு வரவனையின் ப்ளாக்கில் அனானிமஸ் கமெண்டாக “உன் ஏரியாவை சொல்லுடா, அட்ரஸை கொடுடா” என்று மட்டும் கொஞ்ச நாட்களுக்கு ரெகுலராக கமெண்டுகள் வந்துக் கொண்டிருந்தது.