30 டிசம்பர், 2008

திருவண்ணாமலை

ஆக்‌ஷன் ஜோதியில் ஹாஃப் பாயில் போட்டிருக்கிறார் பேரரசு. ஆக்‌ஷன் தான் வேலைக்காகும். ஆன்மீகத்தால் ஆட்டையைப் போடமுடியாது என்று அழுத்தம் திருத்தமாக மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆக்‌ஷன் கிங் என்றாலே அதிரடி. ஒன்றுக்கு இரண்டு ஆக்‌ஷன் கிங்குகள், நிறைய பெப்பர் போட்டு டபுள் ஆம்லெட். இரட்டை கிங்குகள் இம்சை அரசர்களாக மாறி மாறி வில்லன்களை வதைக்க, பேரரசுவும் தன் பங்குக்கு டாக்டர் சுவாமிமலை என்ற டுபுக்கு வேடத்தில் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி பஞ்ச் ஃபுட்பால் ஆடுகிறார். இங்கிட்டும் அங்கிட்டுமாக அலைபாயும் ஃபுட்பால் தான் ரசிகர்கள். தாங்கலை சாமியோவ்.
 
ரொம்பவும் லோபட்ஜெட்டில் படத்தை முடிக்க கவிதாலயா திட்டமிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு டொக்கு ஃபிகர் தான் ஹீரோயின். ஹீரோயினை விட ஹீரோவுக்கு தங்கச்சியாக வரும் ஃபிகரே டக்கராக இருக்கிறார். கடந்த கால்நூற்றாண்டு காலமாகவே அர்ஜூனின் கட்டுடலை கண்டு கதாநாயகிகள் காமம் கொள்ளும் அல்லது காதல் கொள்ளும் கருமம் இன்னமும் தொடர்கிறது. பேரரசு படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் ஒரு டெம்ப்ளேட்டில் அடக்கிவிடலாம். ஹீரோ, ஹீரோயின் மற்ற கதாபாத்திரங்களை மட்டும் மாற்றி மாற்றி ஃபிலிம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
 
பாவம், நல்ல நடிகரான சாய்குமார் பேரரசுவு படத்தின் வில்லனாகி ஐசியூ பேஷண்ட் மாதிரி பரிதாபமாக ஆகிவிட்டார். கவுண்ட் டவுன் சொல்லி அர்ஜூன் அறிமுகமாகும் ஓபனிங் ப்ளாக்கெல்லாம் அரதப்பழசு. இன்னுமா பேரரசுவை ஊர் நம்பிக்கிட்டிருக்கு? என்று தியேட்டரில் ஒருவரையொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். பட்டாசுக் கிடங்கில் பஸ்பமான அர்ஜூன் டிரைனேஜ் வழியாக க்ளைமேக்ஸில் எழுந்துவருவது நமுத்துப்போன ஊசிப்பட்டாசு.
 
இந்தப் படத்தில் கருணாஸ் காமெடியன். அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த திண்டுக்கல் சாரதியே சக்கைப்போடு போடுகிறது. திருவண்ணாமலை? வையாபுரி என்றொரு காமெடியன் முன்பு இருந்தார் நினைவிருக்கிறதா? அவரும் வந்துப் போகிறார். மருந்துக்கு கூட காமெடி இல்லை. அர்ஜுன் படங்களில் இதுவரை காமெடி மட்டுமாவது உருப்படியாக இருந்தது. இதில் அதுவும் மிஸ்ஸிங்.
 
திக்குத்தெரியாத காட்டில் திசைபுரியாமல் குழம்பிப்போய் தியேட்டரில் உட்கார்ந்திருப்பவர்கள் இண்டர்வெல்லில் படம் திடுக்கென்று யூ டர்ன் அடித்து ஆன்மீகம் பக்கமாக திரும்பும்போது நிமிர்ந்து உட்காருகிறார்கள். அதுக்கப்புறமும் வழவழா கொழகொழா தான். வில்லன்கள் திரும்ப திரும்ப மோதுகிறார்கள். ஆக்‌ஷன் கிங் அடித்து உதைத்து ஓட ஓட விரட்டுகிறார். இந்த காட்சிகளையே இரண்டரை மணி நேரமும் பார்த்துத் தொலைத்தால் மூளைக்குள் மூட்டைப்பூச்சி கடிக்காதா?
 
தமிழினத்தின் பெருமைக்காக தமிழர்கள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். உயிர் துறந்திருக்கிறார்கள். தமிழர்களை மாய்க்கானாக நினைத்து தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பேரரசுவுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையோ, உண்ணாவிரதத்தையோ எந்த தமிழ் அமைப்பாவது முன்நின்று நடத்த முன்வருமா?

23 டிசம்பர், 2008

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - புத்தக வெளியீடு!


கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டை மாடியில் 22-12-08 அன்று மாலை யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' நூலை எழுத்தாளர் சோம.வள்ளியப்பன் வெளியிட விளம்பரத்துறை வல்லுநர் நாராயணன் பெற்றுக் கொண்டார்.

முதல் நூல் மதிப்புரையினை சோம.வள்ளியப்பன் நிகழ்த்தினார். 'தான் கண்டிப்பானவன், விமர்சனமென்று வந்துவிட்டால் கத்தியை தூக்கிவிடுவேன்' என்ற ரேஞ்சுக்கு ஆரம்பித்து அந்நூலை எழுதிய எழுத்தாளரை பேதிக்குள்ளாக்கினார். ஸ்டிலெட்டோவால் அறுவைசிகிச்சை செய்துவிடுவாரோ என்று பீதியுற்ற நிலையில் இருந்தபோது, நல்லவேளையாக மயிலிறகால் தடவிக்கொடுத்தார்.

'ஒரு புத்தகம் என்பதை வாசகன் அணுகும்போது அவனை எழுத்தாளர் முதல் அத்தியாயத்திலிருந்து கையைப் பிடித்து கடைசி அத்தியாயம் வரை அழைத்துச் செல்லவேண்டும். இடையில் தம் அடிக்கலாமா, மூடிவைத்து விட்டு நாளைக்கு படிக்கலாமா என்று தோன்றக்கூடாது. இந்நூலாசிரியர் வாசகனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வதில் வெற்றியடைந்திருக்கிறார்' என்றவர், அவருக்குத் தோன்றிய ஓரிரு குறைபாடுகளை மட்டும் இறுதியாக சுட்டிக் காட்டினார். சோம. வள்ளியப்பன் நிகழ்த்தியது மதிப்புரையாக இல்லாமல் வாழ்த்துரையாகவே பட்டது. பேச்சின் இடையிடையே இயல்பாக நகைச்சுவையை நுழைக்கும் சாமர்த்தியம் அவருக்கு கைவந்த கலை.

அடுத்ததாக வாசகர்களோடு கலந்துரையாடல்.

விளம்பரங்கள் குறித்தே அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு நூலாசிரியர் சுமாராக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நாராயணனும், பத்ரியும், சோம.வள்ளியப்பனும் அவ்வப்போது பதில் சொல்லி யுவகிருஷ்ணாவை காப்பாற்றினார்கள். "அரசியல்வாதிகளை ஏன் விளம்பரங்களுக்கு மாடல்களாக விளம்பர ஏஜென்ஸிகள் ஒப்பந்தம் செய்வதில்லை?" என்ற முத்துக்குமாரின் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் நூலாசிரியர் நொந்து நூடுஸ்லாகிப் போனார். விளம்பரங்களில் 'கருப்பு ஆகாது' என்ற பார்ஷியாலிட்டி இருப்பதாக முரளிகண்ணன் சொன்னார். இதற்குப் பின் அரசியல் இருப்பதாக பா.ராமச்சந்திரன் விமர்சித்தார்.

யுவகிருஷ்ணாவிடம் வாசகர்கள் சிலர் ஆட்டோகிராப் வாங்கியது தான் இரண்டாவது நாள் நிகழ்வில் நடந்த உச்சபட்ச காமெடி. வலைப்பதிவிலிருந்து ஒரு எழுத்தாளர் உருவாகியிருந்ததால் இரண்டாம் நாள் கூட்டத்துக்கு ஏராளமான வலைப்பதிவர்கள் வந்திருந்தார்கள்.

'எழுத்தாளர்கள் வலைபதிவது மிக சுலபம். ஆனால் ஒரு வலைப்பதிவாளர் புத்தகம் எழுதி எழுத்தாளராக உருமாறுவது மிக மிகக்கடினம்' என்பது என் சொந்த அனுபவம். வலைப்பதியும் போது ஒரு பதிவினை எழுதிக்கொண்டிருக்கும் போதே 300, 400 வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டால் மனசுக்குள் ஒரு மணி அடிக்கும், பஞ்ச் லைன் வைத்து முடித்துவிட்டு 100, 200 பின்னூட்டங்களை மிகச்சுலபமாக வாங்கிவிடலாம்.

150 பக்கங்களில் புத்தகம் எழுத 20,000 வார்த்தைகளும், குறைந்தது ஒரு மாத காலமாவது தேவைப்படுகிறது. இந்த ஒரு மாதக்காலத்திலும், எழுதி முடித்த சிறிது காலத்திற்குள்ளும் ஏற்படும் உளவியல்ரீதியான சிக்கல்களை எழுத்துக்களால் விவரிப்பது சிரமமானது. புத்தகம் எழுதுவதற்கு பின்னான உழைப்பு என்பது அசுரத்தனமான சாதகமாக இருக்கவேண்டியது. ஒற்றைக்காலில் நின்று செய்யவேண்டிய தவம். அடிவருடி, சொம்புதூக்கி ரீதியிலான விமர்சனங்கள் ஆரம்பத்தில் மன உறுதியை குலைக்கவும் கூடும். இதுபோன்ற மொள்ளமாறி விமர்சகர்களால் 40 வார்த்தைகளில் வசைபாட மட்டும் தான் முடியும், நம்மால் மட்டும் தான் எழுதமுடியும் என்ற மன உறுதி இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை எல்லாம் முரட்டு வைத்தியம் துணைகொண்டு சமாளிக்க முடியுமானால் நீங்களும் ஒரு வாசகருக்கு கையெழுத்து போடக்கூடிய அந்தஸ்தை பெறமுடியும். கையெழுத்து போடும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் அதிர்வுகளை என்னவென்று சொல்வது? ரிக்டர் ஸ்கேலில் கூட அளக்கமுடியாது. 2009ல் எழுத்தாளர்களாக பரிணாமம் பெறக்கூடிய நிஜமான தகுதியிருக்கும் வலைப்பதிவர்களை இப்போதே வாழ்த்துகிறேன்.

21 டிசம்பர், 2008

ஒரு கடிதம்!

பர்சனல் கேள்விகள் -

லக்கிலுக்,

இப்படி மாய்ந்து மாய்ந்து தமிழ்ப் படங்கள் பார்க்கிறீரே. உலக சினிமா எல்லாம் பார்ப்பதுண்டா? அதைப் பற்றியெல்லாம் எழுதுவதில்லையே!

அடல்ட் விஷயங்கள் எல்லாம் அழகாக எழுதுகிறீர்கள். உங்கள் உறவினர்கள் யாரும் இதையெல்லாம் படித்துக் கண்டனம் தெரிவிப்பதில்லையா?

அப்புறம் உங்க வெப்சைட்டை ஏன் நான் டெய்லி படிக்கிறேன்னு யோசிச்சுப் பார்த்தா உங்ககிட்ட குமுதம் டச் இருக்கு.

என்னமோ காலங்கார்த்தால் இதெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.

- பெயர் சொல்ல விரும்பாத பிரபல எழுத்தாளர் **************


* - * - * - * - * - * - * - * - * - * - * - * -

அன்பின் **************** சார்!


இதுபோல தனிமடலில் அணுகும் உங்கள் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.
இனிமேல் நானும் மற்ற வலைப்பதிவர்களை இம்முறையிலேயே அணுகலாமா என்று யோசிக்கிறேன்.

1) நான் சினிமா பார்ப்பது கொண்டாட்டத்துக்காக. உலக சினிமா பார்த்து நொந்துபோய் மூலையில் உட்கார்ந்த காலமும் உண்டு :-(

2) நான் பிலாக் எழுதுவது என் உறவினர்களுக்கு (குறிப்பாக குடும்பத்துக்கு)
தெரியாது என்பதால் அடிச்சி ஆடமுடிகிறது.

3) நான் குமுதம் வெறியன். தாய்ப்பாலோடு குமுதமும் ஊட்டப்பட்டிருக்கிறது (என்
அம்மா குமுதத்தின் தீவிர வாசகி)

4) நன்றி! :-)

19 டிசம்பர், 2008

திண்டுக்கல் சாரதி!


திண்டுக்கல் என்றதுமே எனக்கு தோழர் செந்திலை தான் இதுவரைக்கும் நினைவுபடுத்தி பார்க்க முடிந்தது. சுண்டக்கஞ்சியிலிருந்து டக்கீலா வரை ஒருவாய் பார்க்கும் வீராதிவீரர். செந்திலுக்கு அப்புறம் என்ன நினைவுக்கு வரும்? ம்ம்ம்... பூட்டு. இனிமேல் சாரதியும் நினைவுக்கு வருவார்.

தன்னம்பிக்கையை அஸ்திவாரமாக்கி பின்னட்டப்பட்ட கதை என்பதால் பில்டிங் ஸ்ட்ராங்காவே இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு தமிழில் கம்ப்ளீட் ஃபேமிலி எண்டெர்டெயினர். அந்தக் காலத்து பாக்யராஜ் படம் மாதிரி பளீரிடுகிறது. திண்டுக்கல் சாரதி குழு திடமாக ஜெயித்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கப் போவது உறுதி.

பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கும் சாரதி கொஞ்சமென்ன நிறையவே கருப்பு. அண்டங்காக்கா நிறத்தில் இருக்கும் பெண்கள் கூட இவரைக் கட்டிக்கொள்ள சம்மதிப்பதில்லை. தரகர் வெயிட் கமிஷனுக்காக எப்படியோ சிவப்பான, அழகான ஒரு பெண்ணை காட்டுகிறார். யாரும் எதிர்பாராவண்ணம் அந்தப் பெண்ணும் சாரதியை கட்டிக்கொள்ள சம்மதிக்கிறார்.

தான் கருப்பாக, சுமாராக இருப்பதால் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் அவதிப்படும் சாரதி சம்பந்தமேயில்லாதவற்றை கற்பனை செய்துகொண்டு மனைவி மீது சந்தேகப்படுகிறார். உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார். க்ளைமேக்ஸ் சுபம்.

சாரதியாக கருணாஸ். வடிவேலுவுக்கு எப்படி இம்சை அரசனோ, அதுபோல கருணாஸுக்கு திண்டுக்கல் சாரதி. ஒரே படத்தில் ஒட்டுமொத்த திறமையையும் காட்டிவிட்டால் எப்படி? அடுத்தடுத்த படங்களுக்கும் மிச்சம் வைக்க வேண்டாமா? நடிப்பு, நடனம், பாட்டு என்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனுஷன். பச்சைத்தமிழன் தோற்றம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ். அதிலும் அந்த ‘சாமியோவ்வ்வ்...’ காமெடி. வயிறு வலிக்கிறது.

ஹீரோயின் கார்த்திகா. டிப்பிக்கல் ஃபேமிலி ஃபிகர். அழகாக சிரிக்கிறார்.

சீனுவாசன் நடித்த ’வடக்கு நோக்கி யந்த்ரம்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். முதல்பாதி காமெடியில் மலையாளம் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க தமிழ்தன்மைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் டைரக்டரிடமே குசேலனையும் இயக்க கொடுத்திருக்கலாம். படத்தின் முதல்பாதியில் உண்டிக்கோல் வைத்து யூத்தை குறிவைக்கும் இயக்குனர், இரண்டாம் பாதியில் துப்பாக்கி வைத்து தாய்க்குலத்தை குறிவைக்கிறார். குறி கச்சிதம்!

நாசரின் க்ளைமேக்ஸ் எக்ஸ்ட்ரா போனஸ்.

“அறிஞர் அண்ணாவை தெரியுமா?”

“தெரியும் டாக்டர். அவரு மேடையிலே நல்லா பேசுவாரு. அவரோட சாவுக்கு வந்தாமாதிரி கூட்டம் உலகத்துலே வேற யாருக்குமே வந்ததில்லை”

“அப்படியா? எனக்குத் தெரிஞ்சு அவரு குள்ளமா, அழுக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு எப்போ பார்த்தாலும் பொடி போட்டுக்கிட்டு...”

“போங்க டாக்டர்”

“இப்போ தெரியுதா? ஒரு மனுஷனை பத்தி நெனைச்சிப் பாக்கணும்னா அவரோட தோற்றம் நினைவுக்கு வரக்கூடாது. அந்த மனுஷனோட புகழ் நினைவுக்கு வரணும்”

படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனுக்கு க்ளைமேக்ஸ் தன்னம்பிக்கை ஹார்லிக்ஸ். சுயபச்சாதாபம் எவ்வளவு மோசமானது என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.

சன் பிக்சர்ஸின் கை ஆங்காங்கே புகுந்து விளையாடியிருப்பதால் ‘ரிச்னஸ்’ தெரிகிறது. இல்லாவிட்டால் ராவாக இருந்திருக்கும். உதாரணம் : திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு பாடல். படம் முடிந்தும் யாரும் தியேட்டரை விட்டு எழுந்துப் போகாவண்ணம் ஒரு குத்து குத்தியிருப்பதில் படத்தின் அபாரவெற்றி தெளிவாகிறது.

திண்டுக்கல் சாரதி - ஐசியூவில் கிடக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்.

17 டிசம்பர், 2008

தமிழக அரசியல் நிலவரம்!

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் !!!!!  - என்ற செந்தழல் ரவியின் பதிவை வாசிக்க நேர்ந்தது. அதிமுக தொண்டர் ஒருவரே திமுக ஆட்சியை பாராட்டும் அளவுக்கு நிர்வாகம் நடந்துவருவது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. ஆனால் இந்த புள்ளி விவரங்களால் திமுக கூட்டணி 2004ல் வென்றதைப் போல 40க்கு 40 வெல்ல வாய்ப்பேயில்லை என்பது தான் நடைமுறை யதார்த்தம். உண்மையில் சொல்லப் போனால் கடந்த மாதம் வரை 40க்கு 40லும் திமுக கூட்டணி தோற்பதற்கான வாய்ப்பு தான் பிரகாசமாக இருந்தது.
 
அதே பதிவில் கார்க்கி என்ற நண்பர் ஒரு அற்புதமான கேள்வியை எழுப்பியிருக்கிறார், மின்சாரம் குறித்து. கார்க்கியின் கடந்த சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும் கவனித்த வகையில் அவருக்கு கலைஞர் தலைமையிலான தமிழ்நாட்டின் முன்னேற்றம் மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிர்ச்சியையே அளித்திருக்கக் கூடும் என்பதை உணரமுடிகிறது. மின்சாரத்தை கையாளுவதில் தமிழ்நாடு பின்தங்கியிருப்பது உண்மைதான்.
 
இதற்காக நிச்சயமாக ஆற்காடு வீராசாமியின் பதவியையும் மாற்றியிருக்க வேண்டியது அவசியம். டேட்டா குவெஸ்ட் சர்வேயில் மின் ஆளுகையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் கூட அந்த நேரத்தில் தினமும் 7 மணிநேர மின்வெட்டு (சென்னையில் ஒரு மணிநேரம் தான்) இருந்ததை மறந்துவிடக் கூடாது. ஆனால் இதுவும் இப்போது பழைய கதையாகி விட்டது. மின்வெட்டை கண்டித்து அதிமுக கூட இப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இயலாத அளவிற்கு மின் ஆளுகை முன்பிருந்த நிலைக்கு வந்துவிட்டது. மின்வெட்டுப் பிரச்சினையிலும் கூட எந்த தமிழனும் 'கருணாநிதி ஒழிக!' என்று சொல்லாமல் 'ஆற்காடு வீராசாமி ஒழிக!' என்று சொல்லுமளவுக்கு கலைஞரின் செல்வாக்கு ஸ்டெடியாகவே இங்கிருக்கிறது.
 
அடுத்ததாக அதே பதிவில் அத்திரி என்ற நண்பரின் பின்னூட்டம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. பாவம், மாறன் சகோதரர்கள் கலைஞர் குடும்பத்தோடு மீண்டும் இணைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னமும் வெளிவராதவர் இவர். அவர் காழ்ப்புணர்வில் கூறிய சில பிரச்சினைகளை தவிர்த்து பார்க்கப் போனால் மீதிப் பிரச்சினைகள் அனைத்துமே இந்தியாவுக்கே பொதுவானவை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளின் பாதிப்பு அதிகம். மக்கள் நிராகரித்துவிட்ட குடும்ப அரசியல் கோஷத்தை அத்திரி போன்றவர்கள் இன்னமும் எவ்வளவு காலத்துக்கு கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.
 
ஓக்கே இவர்களை விட்டுத் தள்ளுவோம். எந்த காலத்திலும் கலைஞரால் இவர்களை திருப்திபடுத்தி விடவே முடியாது. இவர்களைப் போன்றவர்களுக்கு இருக்கும் பிரச்சினை ஆட்சியின் பேரில் அல்ல. கலைஞரின் பேரில். முதல் பத்தியில் நான் குறிப்பிட்டதைப் போல 40க்கு 40ம் தோல்வி என்ற நிலையில் தான் நவம்பர் மாதம் வரை நிலை இருந்தது. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ் - திமுக கட்சிகளின் கூட்டணி ஒன்றுக்கொன்று எந்த அளவுக்கு வலுவாக இருக்கும் என்பதை கணிக்க இயலாதவகையில் நிலை இருந்தது. காங்கிரஸ் நாடு முழுவதும் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து போதித்து வந்தன. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த மாயையை தகர்த்தெறிந்திருக்கிறது. இந்த ட்ரெண்ட் பாராளுமன்றத் தேர்தலுக்கு பொருந்தாது என்று இப்போது அதே ஊடகங்கள் அவசர அவசரமாக ஊளையிட்டு வருகின்றன.
 
இந்த லாஜிக் தென்னிந்தியாவுக்கு தான் பொருந்தும். சட்டமன்ற தேர்தலிலோ அல்லது இடைத்தேர்தலிலோ வென்றவர்கள் அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வும் வகையில் மாற்றி ஓட்டளிப்பது தென்னிந்தியர்களின் இயல்பு. பொதுவாக வட இந்தியர்கள் கடைசியாக நடந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்களோ, அடுத்த தேர்தலிலும் அதே அணிக்கு வாக்களிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எனவே பாஜக மெஜாரிட்டி பெறும் என்றெல்லாம் வாயால் கணிப்பு சொல்லிக் கொண்டிருந்தவர்களின் வாய் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் காங்கிரஸ் பெற்ற இந்த எதிர்பாராத வெற்றி நாடு முழுமைக்குமே காங்கிரசுக்கு ஆதரவான ட்ரெண்டை உருவாக்கக் கூடும். ஆயினும் தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ட்ரெண்டை யாராலும் சுலபமாக கணித்துவிட இயலாத நிலை சிரஞ்சீவியால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
காங்கிரசுக்கு ஆதரவான இந்த ட்ரெண்ட் தமிழகத்தில் திமுகவை காப்பாற்ற உதவும். காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிரான வலுவான கூட்டணியாக பாஜக - அதிமுக கூட்டணி உருவாகி இருக்குமேயானால் அது ஆளும் கூட்டணிக்கு சிக்கலை தந்திருக்கும். ஆனால் ஜெயாவோ யாரும் எதிர்பாராத வகையில் இடதுசாரிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க அணு ஒப்பந்தம் சரியா தவறா என்று மக்களுக்கு முழுமையாக புரியவைக்காத நிலையில் மன்மோகன்சிங்கை கவிழ்க்க நினைத்தனர் இடதுசாரிகள். மக்களிடையே கடும் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்த மன்மோகன் மீது அனுதாப அலையை வீசச்செய்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். எந்த லாப-நஷ்ட அடிப்படையை கணக்கிட்டு ஜெ. இவர்களை சேர்த்துக்கொண்டார் என்பது புரியவில்லை. மதிமுக ஒட்டுமொத்தமாக ப்யூஸ் போன நிலையில் அதிமுக கூட்டணிக்கு அக்கட்சி சுமையாகவே இருக்கும். பாமகவை வளைத்துப் போடுவதின் மூலமாகவே அதிமுக கூட்டணியை ஜெ.வால் வலுவானதாக காட்ட இயலும். ஆனால் பாமகவோ காங்கிரஸ் மீது காதல் கொண்டிருக்கிறது.
 
தேமுதிகவின் விஜயகாந்த் இன்றுவரைக்கும் தனியாக நிற்பேன். எனது தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளோடு தான் கூட்டணி என்று சொல்லிவருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக - அதிமுக இருதரப்புக்கும் பலமான அதிர்ச்சியை அளித்தவர் என்ற அடிப்படையில் விஜயகாந்தை நிராகரித்து இனி தமிழக அரசியல் பேசமுடியாது. 2016ல் கேப்டன் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பாஜக இவரோடு சேரக்கூடும். அப்படி சேரும் பட்சத்தில் அது அதிமுக கூட்டணிக்கு இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்தும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞர் ஆதரவு, கலைஞர் எதிர்ப்பு என்ற இரண்டுரக ஓட்டுக்களை தான் கடந்த தேர்தல்களில் பார்த்து வருகிறோம். கேப்டன் குறிவைத்து அடிப்பது கலைஞர் எதிர்ப்பு ஓட்டுக்களை. ஏற்கனவே இந்த ரக ஓட்டுக்களை கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு எதிரான அம்சம் இது. இதனாலேயே விஜயகாந்தை கலைஞர் உள்ளூர ரசித்து வருகிறார். திருமாவளவனும் இப்போதைக்கு கலைஞரை விட்டு நகர்வதாக இல்லை.
 
மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை இம்மாத வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. பத்து கிலோ அரிசியும், இரண்டாயிரம் ரூபாய் பணமும் சாமானிய மக்களை மெகாசீரியலை கூட மறக்கச்செய்யும் என்பது கடந்தகாலம் உணர்த்திய பாடம். தமிழகமெங்கும் பாகுபாடின்றி வழங்கப்படும் வெள்ள நிவாரணம் திமுக பக்கமாக காற்றடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். அதைவிட முக்கியமான பிரச்சினையாக தமிழகத்தில் திமுகவுக்கு இருந்த சன்குழுமத்துடனான மோதலும் முடிவுக்கு வந்திருக்கிறது. சன்குழுமத்தின் ஊடகப்பலம் திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் வலுசேர்க்கும். இன்றைய நிலவரப்படி 40ல் 25 தொகுதிகளை சிரமமின்றி திமுக கூட்டணி வெல்லமுடியும்.