11 மே, 2009

பிரச்சாரம் - யாரு பெஸ்ட்?


தேர்தலில் வாக்குகளை கவருவதில் பிரச்சாரத்துக்கு பிரதான இடமுண்டு. திமுகவின் பிரச்சாரம் பொதுவாக நடுத்தர வர்க்கத்தை குறிவைத்தே நடத்தப்படும். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் அடித்தட்டு மக்களை அடிப்படையாக கொண்டு பிரச்சாரத்தை நடத்தினார். அடித்தட்டு மக்களுக்கான பிரச்சாரம் தான் எடுபடும் என்பதை தன்னுடைய அறுபதாண்டுக்கால அரசியல் அனுபவத்தில் கடந்த 2006 தேர்தலில் தான் கலைஞர் உணர்ந்தார்.

சிறுவயதில் டி.ராஜேந்தரின் பிரச்சாரத்தை கண்டு அதிசயித்திருக்கிறேன். மேடையில் பேசும்போது விரல் சொடுக்கி பேக்கிரவுண்டு மியூசிக் தந்து ‘லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்.. டண்டனக்கா’ என்று பாடுவார். கூட்டம் சொக்கிப்போய் நிற்கும். தீப்பொறி, வண்ணை தேவகி, வெற்றிகொண்டான் வகையறாக்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு லாயக்கில்லை. இதே லிஸ்டில் வைகோவையும் சேர்த்துக் கொள்ளலாம். லோக்கல் பாலிடிக்ஸ் பேசாமல் உலக அரசியலும், ஈழப்போராட்டமும் பேசி பிரச்சாரம் செய்வதில் அர்த்தமேயில்லை. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரம் இதனால் தான் எப்போதும் விழலுக்கு இறைத்த நீராகிறது. இந்திய கம்யூனிஸ்டாவது விவசாயிகள் பிரச்சினை பற்றிப் பேசுகிறது.

கூட்டங்கள் தவிர்த்துப் பார்த்தால் சுவர் விளம்பரங்கள், பிளெக்ஸ் பேனர்கள் போன்றவை சின்னங்களை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தும் பிரச்சார சாதனங்கள். தேர்தல் கமிஷனின் கெடுபிடியெல்லாம் நகர எல்லைகளோடு முடிந்துவிடுகிறது. தாம்பரத்தை தாண்டினால் எல்லா வருமே ஏதோ ஒரு கட்சி வண்ணத்தை தாங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

ஜெ. பிரச்சாரமே செய்யவேண்டியதில்லை. அவர் வந்து நின்றாலே போதும். இம்முறை ஜெ.வின் பிரச்சாரம் புதுமையானது. டெல்லி தலைவர்கள் பாணியில் பிரச்சாரம் செய்திருக்கிறார். இது தமிழ்நாட்டுக்கு புதியது. ஒவ்வொரு தொகுதியில் ஒரு பிரச்சார மாநாடு. தெருத்தெருவாக வேனில் போய் பேசவில்லை. ஹெலிகாப்டரில் பதவிசாக இறங்கி குவிக்கப்பட்ட பிரம்மாண்ட கூட்டத்தைப் பார்த்து ’தனி ஈழம்’ என்று முழங்கினார். போயஸ் கார்டனிலிருந்து ஆவடிக்குப் போகக்கூட, மீனம்பாக்கம் போய் ஹெலிகாஃப்டரில் பயணித்த அம்மான்னா அம்மாதான். ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டமும் ஒரு மாநிலமாநாட்டுக்கு சமம். இதுபோன்ற கூட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பு குறைவு. அக்கட்சி சார்பான ஊடகங்கள் இதை எப்படி பூஸ்ட் செய்து காண்பிக்கிறது என்பது முக்கியம். ஜெயாடிவி அதை சரியாகவே செய்திருக்கிறது. ஆனால் எத்தனை பேர் ஜெயாடிவியை பார்த்திருப்பார்கள்? என்ற கேள்வியை புறந்தள்ளிவிட முடியாது.

கலைஞரின் பிரச்சாரம் மிகக்குறைந்த அளவே இருந்த தேர்தல் இது. திருச்சியில் நல்லக் கூட்டம். சென்னை தீவுத்திடலில் கூடிய கூட்டம் தேசியமுன்னணிக்கு 89ல் கூடிய கூட்டத்தை நினைவுப்படுத்தியது. ஈழவிவகாரத்தில் கலைஞர் மீது திமுக உடன்பிறப்புகளே கடுங்கோபத்தில் இருந்தார்கள். உண்ணாவிரதம், அப்போலோவில் படுத்துக்கொண்டே உரை என்று அடுத்தடுத்து கலைஞர் போட்ட போடு மக்களை கன்வின்ஸ் செய்ததோ இல்லையோ, திமுக உடன்பிறப்புகளை கன்வின்ஸ் செய்திருக்கிறது. என்ன ஆனாலும் சரி. கலைஞர் இருக்கும் வரை உதயசூரியனுக்கே கண்ணை மூடிக்கொண்டு ஓட்டை போட்டுவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு பல உடன்பிறப்புகள் வந்திருக்கிறார்கள்.

திமுகவின் பிரச்சாரம் தளபதி ஸ்டாலினையே இம்முறை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. சில காலம் முன்பு உடல்நலம் குன்றியிருந்த தளபதி தாங்குவாரா? என்ற கேள்வி திமுகவினருக்கு இருந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித தமிழ்நாட்டை வேனிலேயே சுற்றி வந்து ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரத்துக்கும் மேலாக தினமும் பிரச்சாரம் செய்து திமுகவின் அடுத்தத் தலைவர் என்ற இமேஜை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் தளபதி. இதுவரை இவர் பாமக தலைவர் மருத்துவர் அய்யாவை இந்த தேர்தலில் சீண்டிய அளவுக்கு முன்னெப்போதும் சீண்டியதில்லை. ‘அரசியல் வியாபாரி’ என்று தளபதி விமர்சித்தது என்னைப் போன்ற திமுகவில் இருக்கும் அய்யா அனுதாபிகளுக்கு கொஞ்சம் அதிருப்தியாக தானிருக்கிறது. ஆனாலும் மக்கள் ரசித்து கைத்தட்டுகிறார்களே? என்ன செய்வது?

தளபதியை விட மிக அதிகமாக இத்தேர்தலில் உழைத்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரத்தை எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனிலேயே பயணித்து சிங்கிள் சிங்கமாய் முரசுக்கு வாக்கு கேட்டு வந்தார். கடந்த முறை தினமலர், விகடன் போன்ற ஊடகங்கள் கைகொடுத்தது. இம்முறை ஊடகங்களின் ஆதரவு பெரியளவில் அவருக்கு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு ஊருக்கும் நேரில் சென்று வாக்கு கேட்ட அவரது பண்பு அவருக்கு கைகொடுக்கலாம்.

மருத்துவர் அய்யாவின் பிரச்சாரம் இந்த முறை கொஞ்சம் டல் தான். அவருக்கு வயதாகிறது இல்லையா? சின்ன அய்யாவை களமிறக்கியிருக்கிறார். “கொல்லைப்புற வழியா ஏன் வந்தேன்னு உன் தங்கச்சியை கேளு. முப்பது வருஷமா உன் மாமாவைக் கேட்டியா?” என்று தயாநிதி ரேஞ்சில் ஸ்டாலினை ஒத்தைக்கு ஒத்தை அழைத்தது சூப்பர். ஆனாலும் தமிழ்நாடு முழுக்கச் செல்லாமல் குறிப்பிட்ட தொகுதிகளிலில் மட்டும் லைட்டாக உடலை வருத்திக் கொள்ளாமல் பிரச்சாரம் செய்தார். எப்போதுமே கிராமங்களில் திண்ணை பிரச்சாரம் செய்யும் பா.ம.க. இம்முறை மேடைப்பிரச்சாரங்களிலே அதிகக் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது.

காங்கிரஸின் பிரச்சாரத்தைப் பற்றி என்ன எழுதுவது? சூரியன் உச்சிக்கு வந்ததுமே பிரச்சாரத்தை முடிச்சுக்கலாமா? என்பார்கள். டெல்லியிலிருந்து யாராவது தலைவர் வந்தால் உடல்நோகாமல் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு போதுமென்ற மனதோடு திருப்தியடைந்து விடுவார்கள். கூட்டணிக்கட்சிகள் இல்லாவிட்டால் காங்கிரஸ் பிரச்சார மேட்டரிலும் ஜீரோதான். திருமாவின் பிரச்சார வீச்சு இம்முறை ரொம்பவும் குறைவு. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சீமான் - பாரதிராஜா கூட்டம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என் பார்வையில் இந்த கூட்டம் ஒரு பெரிய காமெடியன்கள் கூட்டமாகவே தெரிகிறது. காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரம் என்று இவர்கள் நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தொண்ணூறு சதவிகிதம் அதிமுக கூட்டணித் தொண்டர்கள். மீதி பேர் சினிமாக்காரர்களை வேடிக்கை பார்க்க வந்தவர்கள். இவர்கள் பிரச்சாரம் செய்யாமலேயே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியடையும் நிலையில் தான் இருக்கிறார்கள். தோற்றதும், எங்களால் தான் தோற்றார்கள் என்று மார்தட்டிக் கொள்ளப் போகிறார்கள்.

பிரச்சாரம் என்ற அடிப்படையில் பார்க்கப் போனால் இந்த முறை அம்மா தான் லீடிங். ஆனால் இத்தேர்தலில் மேடை மற்றும் தெருப்பிரச்சாரத்தைவிட முக்கியமான நவீன பிரச்சார மேட்டர் ஒன்றிருக்கிறது. அரசல் புரசலாக கேள்விப்படுவதில் ஒரு வாக்குக்கு ரூ.200/- என்று தொகுதி தொகுதியாக கட்சிப்பேதமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. எந்தக் கட்சி முழுமையாக இந்த மேட்டரில் கவரேஜ் செய்கிறதோ அக்கட்சிக்கே ’பிரச்சார’ அனுகூலம் அதிகம். தோராயமாக பத்து லட்சம் வாக்காளர்களை கொண்ட ஒரு தொகுதியில் 100% பிரச்சாரத்தை ஒரு கட்சி முடித்துவிட்டதாக கேள்விப்பட்டதில் மயக்கமே வந்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக நேற்று மாலையோடு மற்ற பிரச்சாரங்கள் முடிந்துவிட்டாலும் தேர்தல் நாளான நாளை மாலை வரைக்கும் கூட இந்த நவீனப்பிரச்சாரம் நடந்து கொண்டுதானிருக்கும்.

8 மே, 2009

பசங்க!


தந்தைபெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாவதோ, ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் படம் என்று சொல்லி ஆதம்பாக்கம் ஜெயலட்சுமிக்கு அழைத்துப் போனார்கள். ஒரு தலைக்கு ‘75 காசு’ மானியவிலை டிக்கெட். படத்தின் பெயர் ‘எங்களையும் வாழவிடுங்கள்’ என்பதாக நினைவு. சுமார் ஐந்து, ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையாக நடத்தியே அழைத்துச் சென்றார்கள். அது கூடப்பரவாயில்லை. குழந்தைகளுக்கு இதுதான் பிடிக்கும் என்று நினைத்து அவர்கள் போட்ட அந்த பாடாவதிப்படம். இதைவிட குழந்தைகளுக்கு எதிரான பெரிய வன்முறையை யாரும் நிகழ்த்திவிட முடியாது.

குழந்தைகள் படம் என்றாலே முதலில் தொலைந்துப்போவது யதார்த்தம். குழந்தைகள் வயசுக்கு மீறிய செயல் செய்பவர்களாக காட்டுவார்கள். அல்லது பத்து, பண்ணிரண்டு வயது சிறுவர் சிறுமிகளைகூட நான்கைந்து வயதுக் குழந்தைகளுக்கான மனமுதிர்ச்சியோடு அநியாயத்துக்கு குழந்தைத்தனமாக காட்டுவார்கள். அதிலும் மணிரத்னம் படங்களில் காட்டப்படும் குழந்தைகளை நாலு சாத்து சாத்தலாமா என்று இருக்கும். ’அழியாத கோலங்கள்’ படத்துக்குப் பிறகு யதார்த்தமான ஒரு குழந்தைகளுக்கான படம் வந்ததா என்று யோசித்து யோசித்து மண்டை காய்கிறது. ‘பசங்க’ குழந்தைகளுக்கான எதிர்ப்பார்ப்பை சரியாகப் பூர்த்தி செய்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் காட்சிகள் செம கடுப்பு. அதுவும் போலிஸ் ஸ்டேஷனுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் வந்து பசங்க பற்றி புகார் சொல்லுவதெல்லாம் ரொம்பவும் ஓவர். பில்டப் சாங், ஹீரோ - ஹீரோயின் ஓபனிங்கையெல்லாம் ரசிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கத்திரி போட்டிருந்தால் இயக்குனர் நினைத்ததை விட படம் நறுக்கென்று வந்திருக்கும்.

ஒரு பையன் தான் படிக்கும் ஒரு வகுப்பை மட்டுமன்றி, இரு குடும்பங்களில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறான் தன் ஆட்டிட்யூட்டால் மாற்றுகிறான் என்பதுதான் படத்தின் ஒன்லைனர். ஸ்டார்டிங் ட்ரபுள் இருந்தாலும் ரன்னிங்கில் இயக்குனர் செம ஸ்பீட். ‘பசங்க’ நடிக்காமல் வாழ்ந்திருப்பது ஆச்சரியமோ ஆச்சரியம். இயக்குனர் அப்துல்கலாம் ரசிகர் போலிருக்கிறது. படம் முழுக்க கனவு பற்றி நீதிபோதனை ஏராளம். விக்ரமன் மாதிரி நிறைய குட்டி குட்டி ஐடியாக்களை படம் முழுக்க தூவியிருக்கிறார்.

பசங்க கோஷ்டி சேர்ந்து சண்டை போடும்போது ஒரு புத்திசாலி மாணவி சண்டையை நிறுத்த தேசியகீதம் ஒலிக்கச் செய்கிறார். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அப்படியே ஸ்டேண்டடீஸில் நிற்கிறார்கள். தியேட்டரில் ஒருவர் கூட எழுந்து நிற்கவில்லை என்பது இயக்குனருக்கு கிடைத்த படுதோல்வி. இந்திய தேசிய எதிர்ப்பாளர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.

ஒரு சின்ன காதலும் உண்டு. காதலன் தாடிவைத்திருந்தாலும் அழகாக இருக்கிறார். சுப்பிரமணியபுரம் ஜெய்யை நக்கலடித்து நடிக்கிறார். காதலி வேகா. தமிழன் எதிர்பார்க்கும், திரையை வியாபிக்கும் பிரம்மாண்ட கவர்ச்சி அம்சங்கள் இவரிடம் குறைவு. குறைவு என்பதைவிட சுத்தமாக இல்லவேயில்லை எனலாம். ஹீரோயினின் இடுப்பைக்கூட காட்டாத முதல் தமிழ் சினிமாவென்றும் இப்படத்தைச் சொல்லலாம். ஆனால் அடிக்கடி புருவத்தை வில்மாதிரி அழகாக நெரிக்கிறார். தெரித்துவிடுகிறது மனசு. வேகா மாதிரி ஃபிகர்களை காதலிக்கவே முடியாது. கட்டிக்க மட்டும் தான் தோணும். கண்ட கண்ட படங்கள் பார்த்து ஹீரோயின்களை பார்த்து லிட்டர் லிட்டராக ஜொள்ளுவிடும் லக்கியே, பசங்க படத்துக்கு விமர்சனம் எழுது என்று கோஷமிட்ட சென்னை ‘சுட்டி’ வாசகி மன்னிக்க. நாய்வாலை நிமிர்த்த முடியாது. ஹீரோயின்களை வர்ணிக்காமல் இருக்க என்னால் முடியவே முடியாது.

இடைவேளைக்குப் பிறகு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்தப் படமோ என்று சந்தேகம் வருகிறது. முழுக்க லால்லலாலா தான். ஃபிரேமுக்கு ஃப்ரேம் செண்டிமெண்ட். க்ளைமேக்ஸ், தாங்கலை சாமி. படம் முழுக்க நிறைய மைனஸ் பாயிண்டுகள். டைரக்டரின் முதல் படம் என்ற பதட்டத்தை, படத்தில் நிறைந்திருக்கும் யதார்த்தத்தை மீறியும் கணிக்க முடிகிறது. ஆனால் வலுவான கதை, திரைக்கதை மூலமாக மைனஸ்களை, பிளஸ்களாக்கும் சாமர்த்தியம் இயக்குனரிடம் இருக்கிறது.

வெளிவந்து ஒருவாரமாகியிருக்கும் இப்படத்தின் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. காண்வெண்ட் மோக ‘ஏ’ செண்டர்களில் இப்படம் சாதிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. நான் படம் பார்த்த அர்பன் சிட்டி காஞ்சிபுரம் அருணா காம்ப்ளக்ஸில் இருபத்தைந்து சதவிகித இருக்கைகள் கூட நிரம்பவில்லை. இலவச டிவி தரும் அரசாங்கம் இப்படத்துக்கு இலவச டிக்கெட் தந்தாவது இப்படத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். குறைந்தபட்சம் வரிவிலக்கு அளிக்கவாவது பரிசீலிக்கலாம். குடும்பம் குடும்பமாக பார்த்து மக்கள் ஆராதிக்க வேண்டிய படமிது.

தமிழின் சிறந்த படங்களின் பட்டியலில் ’பசங்க’ளுக்கு கட்டாயம் ஒரு இடமுண்டு.

4 மே, 2009

போயஸ்கார்டன் அங்காள பரமேஸ்வரி மகிமை!


சென்னை போயஸ்கார்டன் திருத்தலத்தில் ஸ்ரீ ஜெயலலிதா அம்மா ஆலயத்தில் ஒரு அற்புதம் நடந்தது. அந்த சமயம் ஒரு தேர்தல் நடந்தது. தேர்தலை கண்ட கோபாலசாமி பூசாரி பயப்படுவதை பார்த்ததும், ”நான் பூமியில் தீயசக்திகளை அழிக்க அவதாரம் எடுத்திருக்கிறேன். தர்மத்தை கெடுக்கும் தீயவன் கருணாநிதியைஅழிப்பேன். இந்த அதிசயத்தை கேட்பவர்கள் தமிழ்நாடு முழுக்க இரட்டை இலைக்கு ஓட்டு போடுமாறு பிரச்சாரம் செய்தால் அவர்கள் நினைத்ததை கூட்டு எண் ஒன்பதாக வரும் நாளொன்றில் தீர்த்து வைப்பேன். இந்த அற்புதத்தை கேள்விப்பட்டும் கூட இன்று, நாளை என்று நாட்களை கடத்தி, பிரச்சாரம் செய்யாவிட்டால் அவர்களுக்கும் கருணாநிதி கதிதான் ஏற்படும்” என்று கனவில் கூறிவிட்டு அங்காள பரமேஸ்வரியின் அவதாரம் ஸ்ரீ ஜெயலலிதா அம்மையார் மறைந்துவிட்டார்.

இந்தக் கனவினை நம்பிய பூசாரி கோபாலசாமி ஊரெங்கும் மேடைபோட்டு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார். அவருக்கு சரியாக ஒன்பதாவது நாளில் ரூபாய் நாற்பது கோடி கிடைத்தது. இந்த விஷயத்தைக் கேட்டு பாரக் ஒபாமா என்பவர் அமெரிக்கா முழுக்க அனுமார் சிலையோடு போய் இரட்டை விரலை காட்டினார். அவர் இரட்டை விரலை காட்டிய தொண்ணுற்றி ஒன்பதாவது நாளில் அமெரிக்க அதிபர் ஆனார்.

விஷயத்தை கேள்விப்பட்ட தமிழக கம்யூனிஸ்டுகள் மேடையில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பதாக கனவு மட்டுமே கண்டனர். அடுத்த ஒன்பதாவது நிமிடத்திலேயே கிடைக்க வேண்டியது வெயிட்டாக கிடைத்து இன்று ஊரெல்லாம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு வருகிறார்கள். ராமதாஸர் என்ற பக்தரும் அம்மாவையும், இரட்டை இலையையும் மனதுக்குள் நினைத்து போயஸ் கார்டனை சுற்றி ஒன்பது முறை அங்கப்பிரதட்சணம் செய்ய என்ன நினைத்தாரோ அது ஒன்பது நாளில் கிடைத்தது.

இந்த அற்புதங்களை எல்லாம் கேள்விப்பட்டும் கூட இரட்டை இலைக்கு வாக்கு கேட்க மறுத்த கருணாநிதிக்கு முதுகுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. எனவே தமிழீழம் வேண்டுமென்ற கனவோடு இருப்பவர்கள் அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்ஸர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வட அமெரிக்காவென அவரவர் இருக்கும் பகுதிகளில் மேடை போட்டு அங்காளப் பரமேஸ்வரியாம் அம்மன் ஸ்ரீ ஜெயாவை பூஜை செய்து வழிபட்டு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டால் தேர்தல் முடிந்த ஒன்பதாவது நாளே தமிழீழம் மலரும்.

இதைப் படித்துவிட்டு உதாசீனம் செய்பவர்கள் பன்றிக்காய்ச்சல் வந்து தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுவார்கள் என்பது அவர்கள் தலையில் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஓம்சக்தி அற்புதம்! ஆனால் உண்மை!! ஆதிபராசக்தி!!! ஜெயாசக்தி!! சசிசக்தி!!

தொடர்புடைய பதிவு :
அம்மா கொடுத்த ஆன்மபலம்!
ஈழத்தாய் அம்மா!

3 மே, 2009

நியூட்டனின் 3ஆம் விதி!


இரட்டை அர்த்த வசனங்கள். ஹீரோயினிடம் காமக்குறும்பு - இவையெல்லாம் எப்போதுமே எஸ்.ஜே.சூர்யா படங்களில் பொதுவாக இருக்கும் அம்சம். ’நியூட்டனின் 3ஆம் விதி’யும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் தமிழ் சினிமாவில் முதன்முறையாக மொத்தப் படமுமே க்ளைமேக்ஸ் என்ற விதத்தில் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது. கில்லிக்கு பிறகு இந்தப் படத்தில் தான் அனாயச வேகத்தை காணமுடிகிறது. கமல்ஹாசன் நடிக்க வேண்டிய கதாபாத்திரம். எஸ்.ஜே.சூர்யாவும் ‘நியூ’வுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படி ஈர்க்கிறார்.

’வேட்டையாடு விளையாடு’ படத்தை டைட்டிலுக்காகவே பலமுறை பார்க்கலாம். உண்மையில் அந்த டைட்டிலுக்கு கவுதம் உழைத்த உழைப்பு ஒரு தனிப் படத்துக்கானது. நியூட்டனின் 3ஆம் விதி டைட்டில் அந்த அளவுக்கு இல்லையென்றாலும் ஏகப்பட்ட ஷாட்களோடு அசத்தலாக ஆரம்பமாகிறது. இப்படத்தின் டைட்டிலை தவறவிடுபவர்கள் நரகத்துக்குப் போவார்கள்.

காதலியைக் கொன்ற வில்லனை ஹீரோ டைம் சொல்லி இரண்டு மணி நேரத்தில் பழிவாங்க வேண்டும். அதே இரண்டு மணி நேரத்தில் ஹீரோவை காலி செய்ய வில்லனும் சதிராட்டம் ஆடுகிறார். இரண்டு மணி நேரமும் கிண்டி பூங்கா சீசா மாதிரி ஹீரோவும், வில்லனும் சுவாரஸ்யமாக ஏறி இறங்குகிறார்கள். ஜெயம் படத்தில் இடைவேளைக்குப் பிறகு முழுமையாகவே க்ளைமேக்ஸ் என்றால், இப்படத்தில் டைட்டிலிலிருந்தே க்ளைமேக்ஸ் தொடங்குகிறது.

காண்டம் மெஷின் காமெடி, பேண்ட் அவிழ்ப்பது என்று வழக்கமான எஸ்.ஜே.சூர்யா கலகல. சூர்யா சீரியஸ் ஆனதுமே ரோபோ மாதிரி ஆகிவிடுகிறார். க்ளைமேக்ஸில் குருதிப்புனல் கமலுக்கு சவால் விடும் நடிப்பு. மீசை வைத்த சூர்யா அழகாகவே இருக்கிறார். இடுப்பு சைஸ் 28 தான் இருக்கும் போலிருக்கிறது. தோற்றம் கல்லூரிப் பெண்கள் காதலிக்கக்கூடியதாகவே இருக்கிறது. மனுஷனுக்கு நாற்பது வயசு இருக்கும் இல்லை?

இந்தக் காட்சியில் சாயாலிபகத் ஏன் கையைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியாதவர்கள் சன்னியாசியாகப் போகக் கடவது!


ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் இவ்வளவு வேகமான ஸ்க்ரிப்டுக்கு அது தேவையே இல்லை. ஓரிரு ஷாட்களில் சுருக்கமாக காண்பித்திருக்கலாம். ஆங்கிலப்படத்துக்கு நிகராக இப்படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் ‘கமர்சியல் காம்ப்ரமைஸ்’ செய்துக்கொள்ள பாடல்களை தேவையின்றி ஸ்பீட்ப்ரேக்கராய் நுழைத்திருக்கிறார். ஹீரோயினின் அதீதக் கவர்ச்சி காது கிழிய விசில் அடிக்க வைக்கிறது. என்றாலும் இந்த ஒரு காரணத்துக்காகவே இவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தூக்கி உள்ளே போடலாம்.

ஹீரோயின் சாயாலி பகத். சில கோணங்களில் சூப்பர் ஃபிகர். பல கோணங்களில் அட்டு ஃபிகர். சுத்தமாக டைஸே இல்லை. கால் கையெல்லாம் முருங்கைக்காய் மாதிரி ஒல்லிக்குச்சியாய் இருக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் இவருக்கு தாராள மனதோ என்று நினைத்து ரசிகர்கள் உவகை அடைகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் க்ளிவேஜ் காட்டும்போது ‘பேட்’ பல் இளித்து ஏமாற்றுகிறது. லென்ஸ் வியூவிலும், மானிட்டரிலும் இதைக்கூட பார்க்காமல் கேமிராமேன் புல் புடுங்கிக் கொண்டிருந்தாரா என்னவென்று தெரியவில்லை.

இயக்குனரின் பெயர் தாய்முத்துச்செல்வன். எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத இந்தப் படத்தை இயக்குனரின் பெயருக்காகவே பார்த்தேன். சண்டை என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. ஹீரோ பத்து பேரை வானில் பறக்கவிடும் ஹீரோயிஸம் இல்லை. ஆனால் இது அக்மார்க் ஐ.எஸ்.ஓ. 9001 ஆக்‌ஷன் படம். காட்சிக்கு காட்சி என்றில்லை. நொடிக்கு நொடி அசுரவேகம். இயக்குனர் குறைந்தபட்சம் 300 அயல்நாட்டுப்பட டிவிடியாவது ஸ்க்ரிப்ட் தயார் செய்வதற்கு முன்பாக பார்த்திருப்பார்.

கேமிரா, இசை, எடிட்டிங் என்று டெக்னிக்கல் விவகாரங்களும் அபாரம். குறிப்பாக பின்னணி இசை. அயன் படத்துக்கு மொக்கையாக பின்னணி அமைத்த இசையமைப்பாளர் ரெஃபரென்ஸுக்கு இந்தப் படத்தை நாற்பது முறை பார்க்கலாம். குறைகளே இல்லாத படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிறைகள் வெகுவாக நிறைந்தப் படம். ஆஹா ஹீரோ ராஜீவ்கிருஷ்ணா தான் வில்லன். ப்ரெஷ்ஷாக இருக்கிறார். என்னா வில்லத்தனம்? வாயை மட்டும் ஆஞ்சநேயர் மாதிரி எப்போதும் வைத்துக் கொள்வதை தவிர்த்திருக்கலாம்.

வெய்யிலுக்கு ஜே!


சுட்டெரிக்கத் தொடங்கியிருக்கிறது வெய்யில். இன்று முதல் கத்திரி வேறு ஆரம்பமாம். தேர்தல் சூடு வேற சேர்ந்துக்கொள்ள பற்றியெறிந்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. அம்மா பிரச்சாரத்துக்கு காலை பத்து மணிக்கே ‘அகதிகளை’ பிடித்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். கட்சிக்காரர்களின் பாதுகாப்பு முகாம் ராஜபக்‌ஷேவின் முகாம்களை விட கொடூரமானது.

பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு அம்மாவின் இன்ஸ்ட்ரக்‌ஷன். சுட்டெரிக்கும் உச்சிவெயில் நேரத்தில் தான், அதாவது ஒரு மணிக்குப் பிறகு அம்மா ஏர்கூலர்களால் குளிர்விக்கப்பட்ட மேடையில் ஏறுகிறார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பாதுகாப்பு வளையத்துக்குள் மாட்டிக் கொண்டவர்களின் நிலை பரிதாபம். ஆண்கள் கூட ஓக்கே. இயற்கை உபாதை தொந்தரவுகளால் அவதிப்படும் பெண்களின் நிலைமைதான் பரிதாபம். சூடான பிரியாணிக்காகவும், ஐநூறு ரூபாய் பணத்துக்காகவும் தமிழினம் இங்கே தேர்தலுக்காக சித்திரவதைப் படுத்தப்படுகிறது. எது எதையோ பற்றியெல்லாம் விசித்திரமான வழிகாட்டுதல்களையும், உத்தரவுகளையும் போடும் தேர்தல் கமிஷன் இந்த மனிதவிரோதப் போக்குக்கு மணி கட்டினால் தேவலை.

நல்ல வெயிலில் மேடையேறி பின்வெயில் என சொல்லப்படும் மாலை நான்கு மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் திரும்புவதற்கு அம்மா சொல்லும் காரணம் வினோதமானது. “என் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருக்கிறது. எனவே தான் ஹெலிகாப்டரில் பயணிக்கிறேன். பகலில் பிரச்சாரம் செய்கிறேன்”. அல்குவைதாவோ, தாலிபனோ அம்மாவின் உயிருக்கு நிச்சயம் குறிவைக்கப் போவதில்லை. பின்பு யார்?

முன்பெல்லாம் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பார். இப்போது தான் தமிழீழத்தாய் ஆகிவிட்டாரே? அப்புறம் எப்படி இவர் உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படும்? இந்த மாதிரி லாஜிக்கலான கேள்வி கேட்டாலும் கூட திமுகவின் அடிவருடி, தமிழினத் துரோகி, இத்யாதி.. இத்யாதியென்று பின்னூட்டம் போட புலம்பெயர் போராளிகளும், நடுநிலை நாயகங்களும் தயாராக இருக்கிறார்கள் என்பதே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சைக்கோக்கள் மாதிரி நாலுக்கு நாற்பது பதிவுகள் கலைஞரை இழிமொழியால் திட்டி இணையத்தில் பதிவிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தலைவர் பிரபாகரனா, இல்லை தலைவி ஜெயலலிதாவா என்று சந்தேகம் வருகிறது.

* - * - * - * - * - * - *

விஜயகாந்தின் பிரச்சார விளம்பரம் சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. “முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்று கட்டிவிட்ட தொண்டையில் கமறலாக பேசுகிறார். கடந்த தேர்தலில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய தேதியில் பிரச்சாரத்தில் கில்லி விஜயகாந்த் தான். ஹெலிகாப்டரில் ஜெ.வும், காரில் ஸ்டாலினும் இன்னமும் பாதி தமிழகத்தை கூட சுற்றிவர இயலாத நிலையில் தமிழகமெங்கும் பிரச்சாரத்தை வேனிலேயே கம்பீரமாக முடித்துவிட்டு ஓய்வு, ஒழிச்சல் இன்றி இரண்டு நாட்களாக சென்னையை சுற்றி வருகிறார். 70களிலும், 80களிலும் கலைஞரிடமிருந்த தேனிக்கு ஒப்பான உழைப்பை இன்றைய விஜயகாந்திடம் காணமுடிகிறது.

* - * - * - * - * - * - *

திமுகவின் பிரச்சாரம் இம்முறை தளபதி ஸ்டாலினையும், பேராசிரியரையுமே நம்பிக்கொண்டு இருக்கிறது. கலைஞரின் திருச்சி பிரச்சாரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்திருக்கிறது. நேற்று மாலை சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்க வேண்டிய நிலையில் உடல்நலக் குறைவால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதன்முறையாக கலைஞரின் பிரச்சாரம் பிரதானமாக இல்லாத நிலையில் திமுக தேர்தலை சந்திக்கிறது. இந்த பேரிழப்பை திமுகவினரால் ஈடுகட்டவே இயலாது. கலைஞரை விட வயதானவராக இருந்தாலும் இம்முறை பேராசிரியர் சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். நல்லவேளையாக ஆற்காட்டார் சென்னையோடு முடங்கிவிட்டார்.

* - * - * - * - * - * - *

தேர்தல் என்றாலே வைகோ தான் நினைவுக்கு வருவார். இம்முறை ஏனோ தொகுதிக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். ’வெற்றி வாய்ப்பு வீக்’ என்ற தகவல் தான் அவரது மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை முடக்கிவிட்டது என்கிறார்கள். ’கை’ சின்னத்துக்கும் ஓட்டு கேட்க வேண்டுமே என்ற சங்கடத்தால் தான் திருமா கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் சிதம்பரமே கதி என்று கிடக்கிறாராம். முதன்முறையாக தேர்தல்களம் காணும் மனிதநேய மக்கள் கட்சியின் சுறுசுறுப்பு அபாரம். இதே வீரியத்தோடு தொடர்ந்து இருந்தால் 2011 சட்டசபைத் தேர்தலின் போது சில அதிர்வு அலைகளை இவர்கள் கிளப்ப முடியும்.

பா.ம.க. நிலைமைதான் படுமோசம். இந்த தேர்தல் பா.ம.க.வின் எதிர்காலத்துக்கு முக்கியமான ஒன்று. மூன்று தொகுதி தேறினாலேயே பெரிய விஷயம் போலிருக்கிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக பா.ம.க.வுக்கு ஆதரவு தந்துகொண்டிருந்த வன்னிய இனம் இம்முறையும் அதே ஆதரவைத் தருமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இந்த தேர்தலில் பெறும் வெற்றியை வைத்து தான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடமோ, அதிமுகவிடமோ பா.ம.க வியாபாரம் பேசமுடியும்.

* - * - * - * - * - * - *

பெரியார் திராவிடர் கழகம் சென்னையில் திமுகவுக்கு எதிரான வன்முறையில் இறங்கியிருப்பது ஆச்சரியம். ஏரியாவுக்கு நாலு பேர் அந்த கழகத்தில் இருந்தாலே அது உலக அதிசயம். ஆளுங்கட்சியான திமுகவின் பிரச்சார அலுவலகத்தை அடித்து நொறுக்குமளவிற்கு இம்ப்ரூவ் ஆகியிருக்கிறார்கள் என்றால் பொருளாதார ரீதியாகவும், ’மற்ற’ ரீதியாகவும் ஈழத்தலைவியிடமிருந்து உதவி கிடைத்திருக்குமென்றே எடுத்துக் கொள்ளலாம். கடைசியில் இக்கழகம் ’அடியாள்’ ரேஞ்சுக்கு ஆகிப்போனது வருத்தமே.