31 மார்ச், 2010

அப்படியொன்றும் அழகில்லை!

இருநாட்களுக்கு முன்பாக மதியம் இரண்டரை மணியளவில் அண்ணாசாலை வழியாக இருசக்கர வாகனத்தில் தோழரோடு சென்றுக் கொண்டிருந்தேன். டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்துக்கு முன்பாக போக்குவரத்து சிக்கல்.

ஊர்ந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு மாதிரியான கவுச்சி வாடை. காவலர்கள் துண்டு எடுத்து முகத்தை மூடிக்கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஒரு ஆயிரம் பேர் சாலையோரம் நின்று வேடிக்கை பார்க்க சாலையோரமாக 'அது' கிடந்தது. ஏதோ கோணி போன்ற சமாச்சாரங்கள் அவசரத்துக்கு மேலே மூடப்பட்டிருக்க அவற்றையும் மீறி சாலையில் கசிந்து கொண்டிருந்தது மனிதக்கூழ்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் சென்னையின் பெரிய பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாராம். 54எச் என்ற மாநகர தொடர்பேருந்தில் அன்று அவர் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்திருக்கிறார். ஓட்டுநர் சடன்பிரேக் போட தவறி கீழே விழுந்தவரின் மீது அப்பேருந்தின் பின்சக்கரம் ஏறி, அவரது தலை கூழாகியிருக்கிறது. பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநரும், நடத்துனரும், பயணிகளும் இறங்கிப் பார்த்திருக்கிறார்கள்.

“செத்துடாம்பா. நீ பஸ்ஸை எடு. அவசரமா போவணும்!” என்று பயணிகள் வற்புறுத்த, 54எச் பிராட்வே நோக்கி சென்றிருக்கிறது. ஒரு நாய் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தால், எந்த மனோபாவத்தோடு கடந்து செல்வோமோ, அதே மனோபாவத்தோடு 54எச் பயணத்தை தொடர்ந்திருக்கிறது.

இரண்டாவது பத்தியில் வந்த கவுச்சிவாடை எங்கிருந்து வந்தது என்று இன்னேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இன்னும் குறைந்தது ஆறு மாதத்துக்காவது அப்பகுதியை கடக்கும்போதெல்லாம் அதே மனித கவுச்சி வாடையை என் நாசிகள் உணரும். உடல் படபடக்கும். மனம் அச்சத்தால் நடுநடுங்கும்.

வேறு ஒரு இடத்திலும் அதே கவுச்சி வாடையை அன்று மாலையே உணர்ந்தேன். குளிரூட்டப்பட்ட அத்திரையரங்கின் திரையில் அதே மனிதக்கூழை முதல் காட்சியின் முடிவில் கண்டேன். படம் முடியும் வரை வாடை போகவேயில்லை. இரண்டு நாட்களாகிறது இன்னமும் தூக்கத்தில் கூட அவ்வாடை என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.

* - * - * - * - * - *

அங்காடித்தெரு அறிவுஜீவிகள் பாராட்டும் வகையில் யதார்த்தப் படமாகவே வெளிவந்திருக்கிறது. அசட்டுஜீவியான எனக்கு என்னவோ அதுகொஞ்சம் ஓவர்டோஸ் யதார்த்தமாகவே படுகிறது. ஏனெனில் படத்தில் அப்பட்டமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் கதைமாந்தர்கள் சிலரோடு எனக்கு நேரடிப் பழக்கம் உண்டு.

இயக்குனரின் தொலைக்காட்சிப் பேட்டி பார்த்தேன். ஒருநாள் ரங்கநாதன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த கதை மாந்தர்களைப் பார்த்ததாகவும், “எங்க இருந்துடா இவ்ளோ பேரு வர்றீங்க?” என்று ஆச்சரியப்பட்டு அவர்களை பின் தொடர்ந்து, பலவருட அவதானிப்புகளுக்குப் பிறகும், அதற்குப் பின்னரான உழைப்புக்குப் பின்னரும் இப்படியொரு காவியத்தை படைக்க முடிந்ததாக சொன்னார். பிரமிப்பாக இருந்தது.

ஆனால் படம் பார்த்த இன்னொரு நண்பர் வேறு மாதிரியாக சொல்கிறார். 2007லேயே இதே கதைக்களத்தோடு, ரங்கநாதன் தெருவுக்குப் பதிலாக மும்பையின் போக்குவரத்து சிக்னல் ஒன்றினை வைத்து 'டிராஃபிக் சிக்னல்' என்ற பெயரில் ஒரு படம் வந்திருக்கிறதாம். அப்படத்துக்கு தேசியவிருதுகள் கூட கிடைத்திருக்கிறதாம்.

* - * - * - * - * - *

மனிதக் கவுச்சி வாசனையை மட்டுமன்றி அஞ்சலியின் வியர்வை மற்றும் மல்லிகைப்பூ கலந்த கவர்ச்சி வாசனையையும் என்னால் உணரமுடிந்தது. அதுபோலவே மகேஷின் ஆண்மையான வாசனையும்.

கதைநாயகன் மகேஷ், கதைநாயகி அஞ்சலி இருவருமே அப்பட்டமாக திரையில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல. கதையின் மற்ற மாந்தர்களிடமும் - ஓரிருவர் தவிர்த்து - நடிப்பு என்பதாக இல்லாமல் இயல்பான வெளிப்பாடு அமைந்திருக்கிறது. குறிப்பாக சூப்பர்வைசராக நடித்திருக்கும் இயக்குனர் வெங்கடேஷ்.

நாயகனின் தோழனாக வரும் டிவி நடிகரின் நடிப்பு கொஞ்சம் நெருடுகிறது. குறிப்பாக ஸ்னேகா விளம்பரக் காட்சிக்காக அவர் செய்யும் அலப்பறைகள் அக்மார்க் மொக்கை. திரைப்படத்தின் நகைச்சுவை பெரும்பாலும் இவரையே சார்ந்திருப்பதால் நகைச்சுவை அவ்வளவாக வேலைக்கு ஆகவில்லை.

‘நான் கடவுள்' படத்தில் நன்கு எடுபட்ட ‘ப்ளாக் ஹ்யூமர்' இப்படத்தில் இயக்குனரின் காலை வாரி விட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அருவருப்பாக கூட இருக்கிறது. குறிப்பாக நாயகனின் முதல் காதல் தொடர்பான காட்சிகள். அந்த காதல் உடைவதற்கு காரணமாக சொல்லப்படும் காரணம். உவ்வே!

* - * - * - * - * - *

படத்தின் முதல் காட்சியே க்ளைமேக்ஸ்தான். ஆடியன்ஸை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்போகும் ஒரு காட்சிக்கு முன்பாக பாட்டு வைத்தே தொலைத்தாக வேண்டும் என்று இயக்குனருக்கு யார் ஆலோசனை சொல்லியிருப்பார்கள் என்று தெரியவில்லை. நியாயமாக கிடைக்க வேண்டிய அதிர்ச்சியின் சதவிகிதம் வெகுவாக குறைகிறது.

அதற்குப் பின்பும் படம் ‘செல்ஃப்' எடுக்கும் என்று நம்பி, நம்பி இடைவேளை வரை ஏமாந்துக்கொண்டே போகிறோம். திராபையாக, மெதுவாக நகரும் காட்சிகள். ஒருவேளை ‘அங்காடித் தெரு' மெகாசீரியலாக வந்திருக்குமானால் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பின்னியிருக்கலாம்.

கலை, ஒளிப்பதிவு, ஒப்பனை என்று இப்படம் முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களின் ராஜ்ஜியம். இசை மட்டும் படுமோசம். என்ன இருந்து என்ன பயன்? அந்த காலத்து ‘துலாபாரம்' ரேஞ்ச் சோகம் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க விடாமல் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் பெரும் வெற்றி பெற்ற யதார்த்தப் படங்களில் சிலவான சேது, பிதாமகன், காதல், சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் இருந்த ‘எண்டெர்டெயினிங் எலிமெண்ட்' சுத்தமாக இல்லாமல் ராவான தார் பாலைவனம் மாதிரி வறண்டுப் போய் கிடக்கிறது அங்காடித்தெரு.

* - * - * - * - * - *

பதினெட்டு பந்துகளில் நாற்பத்தி ஒன்பது ரன்கள் அடித்த ஹர்பஜன்சிங் மாதிரி அடித்து ஆடியிருப்பவர் உரையாடலாசிரியர் ஜெயமோகன். இவரது உரையாடல்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் படம் ஆரம்பித்த முப்பதாவது நிமிடத்திலேயே எழுந்து வீட்டுக்குப் போயிருப்பேன். ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' போன்ற வார்த்தை விளையாட்டுகளை உரையாடல் ஆசிரியர் நிகழ்த்தியிருந்ததால் மட்டுமே ஒப்புக்குச் சப்பாணியாய் ஓரளவு படத்தில் சுவாரஸ்யம் கைகூடுகிறது.

தங்கச்சிக்கு நாய் கடிச்சிடிச்சி. அம்மாவுக்கு மஞ்சக்காமாலை. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். ஆயாவுக்கு பேதி என்று சகலகவலைகளோடு பொழுதுபோக்க திரையரங்குக்கு வரும் அப்பாவித்தமிழனை நிற்கவைத்து சவுக்கால் அடித்திருக்கிறார் இயக்குனர். இப்படம் முப்பது நாட்களை தமிழகத் திரையரங்குகளில் கடந்தால் அதுவே உலக அதிசயம்.

* - * - * - * - * - *

சில வருடங்களுக்கு முன்பாக உதயம் தியேட்டர் அருகில் சாலையில் படுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்து, சரவணா ஸ்டோர் மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பெண், ரயில்வே லெவல் கிராஸிங்கில் ஏற்பட்ட லாரி விபத்து என்று செய்தித்துணுக்குகளை சேகரித்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

படம் முழுக்க விரவியிருக்கும் சிறுகதைகளை நிறைய பேர் சிலாகிக்கிறார்கள். இதைவிட அருமையான ஓ பாசிட்டிவ் சிறுகதைகளை விக்கிரமன் படங்களில் இருபது வருடங்களாக கண்டு களித்துக் கொண்டிருக்கிறோம்.

அங்காடித்தெரு - அப்படியொன்றும் அழகில்லை!

30 மார்ச், 2010

சங்கம்!

மேற்படி வருத்தமில்லா வாலிபர் சங்கத்துக்கு ஆதரவாக கூட்டத்தில் பேசியவன் என்ற முறையில் இப்போது வருந்துகிறேன். உண்மைத்தமிழன் என்ற பதிவர் தற்போது எழுதியிருக்கும் பதிவின் பாணியை வைத்துப் பார்த்தால் சங்கத்தை வைத்து உப்புமா வாங்கி சாப்பிடலாம் என்றுதான் தோன்றுகிறது.

நான் ஆதரித்துப் பேசிய குழுமம் வேறு. உருவாகப் போகும் குழுமம் வேறு என்று தெரிகிறது. அப்பதிவு மூலமாக வெளிப்பட்டிருக்கும் வக்கிர சிந்தனைகள் மிக மோசமானது. இப்படிப்பட்ட ஆட்களின் முன்முயற்சியால் ஏற்படுத்தப்படும் சங்கம் அல்லது குழுமம் என்பதின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை ஜோசியம் பார்க்காமலேயே உணர்ந்துவிடலாம்.

தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்ற முறையில் பேசிக்கொள்ளும் பர்சனல் விஷயங்களை கூட பதிவுகளுக்கு எடுத்துவந்து பொதுவிவாதமாக எடுத்துச் செல்லும் போக்கு மிக மிக மோசமானது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறேன். அதிலும் ஒரு பதிவரின் பணிக்கு வேட்டு வைக்கும் எண்ணத்தோடு விஷமத்தனமான முறையில் அந்த கடைசி பத்திகள் எழுதப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பதிவர் சந்திப்புகளில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது கூட தடைபடும். சந்திப்புகளில் கலந்துகொள்ளவே பலரும் யோசிப்பார்கள்.

ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இவ்வளவு ஆடுபவர்கள், ஆரம்பித்த பின்பு எவ்வளவு ஆடுவார்களோ? :-(

சங்கம், கிங்கம் என்றில்லாமல் வழக்கம்போல பதிவராகவே செயல்பட விரும்புகிறேன். கூட்டத்தில் ‘சங்கம் தேவை' என்று நான் கொடுத்த ஆதரவை, இப்பதிவின் மூலமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று மனவருத்தத்தோடு என்னை கூட்டத்துக்கு அழைத்து கருத்து சொல்லச் சொன்ன மற்ற நண்பர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

29 மார்ச், 2010

வானிலை அதிகாரி விளக்கம்!

கடந்த அக்டோபர் மாதம் வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்பினை கேட்டுவிட்டு ரெயின்கோட் போட்டு வந்து மழையே வராமல், கடுமையான வெயில் அடித்த ஒரு தினத்தில் எழுதிய பதிவு இது.

சென்னை வானிலை ஆய்வு நிலையத்தில் பணிபுரியும் அதிகாரியான திரு கே.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள் இப்பதிவினை வாசித்துவிட்டு, தனது விளக்கத்தினை நம்முடைய மின்மடல் முகவரிக்கு அனுப்பியிருக்கிறார்.

திரு. கே.வி.பி. அவர்களின் கடிதம் கீழே :


திரு யுவகிருஷ்ணா அவர்களுக்கு,

இது தங்களுடைய வானிலை ஆராய்ச்சிமையம் பற்றிய அக்டோபர் மாதம் பதிவு செய்துள்ள செய்தி பற்றிய மின்னஞ்சல், தாமதத்திற்கு மன்னிக்கவும், இடையில் நான் தங்களின் வலைப்பூவில் என்னுடைய கருத்துக்களைப் ஆங்கிலத்தில் பதிவு செய்தேன், ஆனால் அது உங்கள் வலைப்பூவில் பதிவாகவில்லை,  எனவே இந்த மின்னஞ்சல்.

என் பெயர் கு,வை, பாலசுப்பிரமணியன், சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் உதவி வானிலையாளராகப் பணிபுரிகிறேன், முனைவர் எஸ்.ஆர்.இரமணன் வானிலை முன்னறிவிப்பு தொடர்பான பணிகளின் அதிகார பூர்வ ஊடகத் தொடர்பாளர். அவர் விடுமுறையில் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் வெளியில் சென்றாலோ அவருக்குப் பதிலாக முனைவர் எஸ், பாலச்சந்திரன் என்பவரும் திரு ஈ.குழந்தைவேலு என்பவரும் ஊடகத் தொடர்பாளர்களாகப் பணியாற்றுவர்.

வானிலை ஆய்வு மையம் பற்றிய தங்கள் கருத்துக்கள் தவறானவை. பல்வேறு விதமான தலைப்புக்கள் பற்றிய தங்களின் வலைப்பதிவுகளைப் பார்க்கும்போது தாங்கள் அறிவியல் படித்தவராக் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

வானிலை என்பது வளி மண்டலம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிவிக்கும் சொல்லாகும், அதாவது பூமியை ஓட்டியுள்ள காற்று அல்லது வளிமண்டலம் வெப்பமாக உள்ளதா? குளிராக உள்ளதா? ஈரமாக அல்லது உலர்ந்து உள்ளதா? காற்றே இல்லாமல் அமைதியாக உள்ளதா? அல்லது புயல் வீசுகிறதா? வானம் மேகமற்று உள்ளதா அல்லது மேகமூட்டமாக உள்ளதா? என்பதனையே வானிலை என்கிறோம்.

வெதர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘வானிலை மாற்றம். புயல். லேசான மழை. பெருந்துளி மழை.  துன்பங்களைச் சமாளித்தல். காற்றோடு கப்பலைச் செலுத்துதல்’  போன்ற பிற விளக்கங்களும் உள்ளன.

‘வானிலை. தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை. ஈர்ம்பதக்  குளிர்வாடை நிலை. காற்றின் திசை. காற்று விசையாலையின்  பாய்த்திரையின் சாய்கோண அளவு’ என்று பல விதமான பொருள் அளிக்கப்பட்டுள்ளது,

எனவே வானிலை என்பதனை ஓரு குறிப்பிட்ட இடத்தின் ஓரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வானிலைக்கூறுகளின் தொகுப்பு எனலாம். எடுத்துக்காட்டாக சென்னையில் காலை எட்டு மணிக்கு நிலவும் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம், காற்றின் திசைவேகம், பார்வைத்தூரம், மேகங்களின் வகைகள், அளவு, உயரம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் அந்நேரத்தில் மழை, இடி, பனி ஆகியவை உள்ளனவா? போன்ற வானிலைக் கூறுகளின் தொகுப்பே சென்னையின் அப்போதைய வானிலையாகும்.

எனவே வானிலையை அளவீட்டு முறையில் [Quantitative method] சொல்வதானால் இதனை பத்திற்கும் மேற்பட்ட மாறிகளால் [Variables] குறிப்பிடவேண்டும். இந்தியா முழுவதும் 559 தரைநிலைக் கண்காணிப்புக்கூடங்களிலிருந்து பெறப்படும் வானிலைத் தகவல்களை non linear equationஆக மாற்றி, கணினியில் கொடுத்து அடுத்தநாள் வானிலையின் சில கூறுகள் எவ்வாறு இருக்கும் என்று விடைகாண முயன்றால் தற்போது வானிலை ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ள கணினி வகைகள் 3 முதல் 12 மணி நேரத்தில் விடையளிக்கும். இவ்வகை கணினி வழி வானிலை முன் எச்செரிக்கைகளும் தவறாக இருக்கக்கூடும்.

இது தங்களின் குற்றச்சாட்டிற்கு ஓரு சிறிய விளக்கமே.  தாங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் எங்கள் அலுவலகத்திற்கு ஓரு நாள் வாருங்கள், மேலும் அதிக விளக்கங்ளைப் பெறலாம்.

இப்படிக்கு தங்கள்
கே.வி.பாலசுப்பிரமணியன்
M.Sc  (Physics), M.A (Tami), M.A(History,) M. Phil
Assistant Meteorologist,
Regional Meteorological Centre,
Chennai – 600006



கே.வி.பி. சார்!

நான் அறிவியல் படித்தவனல்ல. ஒரு சராசரி மனிதனுக்கு வானிலை ஆய்வு மையம் மீது இருக்கும் அசட்டு கோபமே அப்பதிவில் வெளிபட்டது. அது எவ்வளவு அபத்தமானது என்பதை தங்களது கடிதம் மூலமாக உணர்கிறேன். மத்திய அரசுப் பணிகளில் பணிபுரியும் அதிகாரிகள் இதுபோன்ற அசட்டுக் கோபங்களை கூட சீரியஸாக எடுத்துக் கொண்டு விளக்கம் அளிப்பது என்பது அரசுத்துறை மீதான என்னுடைய மதிப்பினையும், நம்பகத்தன்மையையும்  மேலும் மேலும் கூட்டிக்கொண்டே செல்கிறது. தங்களைப் போன்ற அதிகாரிகளால் தேசம் பெருமையடையும். நன்றி!

சென்னையில்தான் வசிக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை அலுவலகத்தில் வந்து சந்திக்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

27 மார்ச், 2010

இணையக் கவிஞன்!


வண்ண வண்ண
சுடிதார்களில்
செல்லம்மாள் கல்லூரி
மாணவிகள்
பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்துப் பறக்கிறார்கள்
ஒரு இரட்டைசக்கர ஓட்டுனர்
அவர்களை சைட் அடித்தபடியே
சிக்னலை கவனிக்காமல்
தடுத்த போலிஸ்காரனை
இடித்துவிட்டான்
சத்தம் கேட்டு திரும்பிய
வண்ணத்துப் பூச்சிகள்
சத்தம் வராமல் சிரித்தன
அப்போது நான்
பெட்ரோல் பங்குக்கு
பக்கத்தில் இருந்த
பொட்டிக்கடையில்
சிகரெட்டு
பிடித்துக் கொண்டிருந்தேன்!

26 மார்ச், 2010

நீச்சல் கற்றுக் கொள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், என்.ஐ.எஸ். தகுதிபெற்ற அனுபவம் வாய்ந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு சென்னையில் கீழ்க்கண்ட நீச்சல் குளங்களில் ‘நீச்சல் கற்றுக் கொள்' வகுப்பினை நடத்தி வருகிறது.

1. அண்ணா நீச்சல்குளம், மெரீனா

2. வேளச்சேரி நீச்சல்குளம்

3. ஷெனாய் நகர் நீச்சல்குளம்


'நீச்சல் கற்றுக்கொள்' தினமும் ஒருமணிநேர வகுப்பாக காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை 12 நாட்கள் கொண்ட தொகுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு நீச்சல்குள பொறுப்பாளர்களை அணுகலாம்.

அண்ணா நீச்சல் குளம். போன் : 2901250. கைப்பேசி : 9940341476

வேளச்சேரி நீச்சல் குளம். போன் : 22354381. கைப்பேசி : 9940341473

ஷெனாய் நகர் நீச்சல் குளம். போன் : 26474794. கைப்பேசி : 9940341480


முந்தையப் பதிவின் பின்னூட்டத்தில் உலக பிரபல எழுத்தாளர் ரைட்டர் சி.எஸ்.கே. அவர்கள் வலைப்பதிவுகளில் சிட்டிசன் ஜர்னலிசம் இல்லவே இல்லையென்றும், குறிப்பாக அதுகுறித்துப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டிருப்பதாலும் சமூகநலன் நோக்கில் இப்பதிவை இட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது!


:-(