14 மே, 2010

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?


“சமீபத்தில் என்னுடைய சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். மாடி அறையில் இரு பக்கங்களிலும் ஒரு அடி விட்ட்த்தில் ஒரு வட்டமான துளை. அதிலிருந்து ஒரு குருவி வெளியே ‘கிச் கிச்’ என சத்தமிட்டுக்கொண்டே பறந்துவந்தது. அதைக் கண்ட என்னுடைய பேத்தி ‘தாத்தா இது என்ன பறவை?’ என்று கேட்டாள்.

திகைத்துப் போனேன். சென்னையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நிறைய குருவிகளை கண்டிருக்கிறேன். ஆனால் இப்பொழுது எங்குமே காணப்படவில்லை. நகரில் வளர்ந்த என்னுடைய பேத்திக்கு, அந்தப் பறவையின் பெயர் கூட தெரியவில்லை. என் நினைவுக்கு தெரிந்தவரையில் பத்தாண்டுகளாக, குருவிகளை கண்டதாக நினைவில்லை. சிட்டுக்குருவிகள் எல்லாம் எங்கே போனது? ஏன் போனது? யாராவது எனக்கு பதில் கூறுவார்களா?” என்று புதிய தலைமுறைக்கு கடிதம் எழுதியிருந்தார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வாசகர் கே.திரவியம்.

கடிதத்தை கண்டதும் நமக்குள்ளும் ‘சிட்டுக்குருவிகள் எங்கே போச்சு?’ என்ற கேள்வியே எழுந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலரும், இயற்கை உலக நிதியகத்துக்கான (WWF-India) அறங்காவலருமான தியடோர் பாஸ்கரனிடம் வாசகரின் கடிதத்தைக் காட்டினோம். அவர் விரிவாகவும், வேதனையோடும் பேச ஆரம்பித்தார்.

“பறவைகளைப்பற்றி என்னிடம் பேசுபவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி 'சிட்டுக்குருவிகளை இப்போது ஏன் காண முடிவதில்லை? மனிதருக்கு மிக அருகில் உரிமையுடன் வாழும் பறவை. புள்ளினத்தைப்பற்றி ஒன்றும் அறியாதவரும் சிட்டுகுருவியை இனங் கண்டுகொள்ள முடியும்.

சிறிது எண்ணிப் பார்த்தோமானால் சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல.. முன்பு நாம் எளிதில் கண்ட பல பறவைகளையும் கூட இப்போது அரிதாகத்தான் பார்க்க முடிகின்றது. அறுபதுகளில் சென்னை மவுண்ட் ரோடில் இருந்த ஒரு அரசு விடுதியில் நான் தங்கும் போதெல்லாம் காலையில் மெரினாவிற்கு நடந்து போவதுண்டு. அப்போது வாலாஜா சாலையில், அரசு விருந்தினர் விடுதிக்கு அடுத்த ராஜதானி கல்லூரி மகளிர் விடுதியின் முன் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதனடியில் பலர் நின்று கொண்டு கூப்பிய கைகளுடன் மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியை தினமும் பார்த்ததுண்டு. அந்த புளியமரத்தில் அடைந்திருந்த பல செம்பருந்துகள் காலையில் மரத்தை விட்டு பறந்து செல்லும் போது அவைகளைத் தரிசிக்கத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இன்று சென்னையில் செம்பருந்தை யாராவது உங்களால் காண முடிகின்றதா? வெண்கொக்குகள் மாலையில் கூட்டம் கூட்டமாக வடதிசை நோக்கிப் பறப்பதை இன்று நாம் காணமுடிகின்றதா? கிளிகளின் கூட்டம் இன்று எங்கே போனது?

சுற்றுப்புற சூழலின் இயல்பு கெடாமலிருப்பதற்கு பறவைகள் ஒரு குறியீடு. ஒரு வயல்வெளியிலோ அல்லது ஏரியிலோ பறவைகளே இல்லாதிருந்தால் அங்கு சுற்றுச்சூழல் மாசுபட்டிருக்கிறது என்றும், அதனால் நீரில் வேதியல் பாதிப்பு இருக்கிறது என்றும் யூகிக்கலாம். ரசாயன பூச்சிமருந்துகளாலும் வேதியல் உரங்களாலும் நீரும் நிலமும் மாசுபடுத்தப்பட்டுவிட்டன. பறவைகளின் வாழ்விடங்கள் மாசுபடுவதற்கு முக்கிய காரணியான DDT என்ற நச்சு மருந்து 1942இல் பால் முல்லர் என்ற அறிவியலாளர் உருவாக்கி அதற்காக நோபல் பரிசும் பெற்றார்.

நமது நாட்டில் 1949இல் அறிமுகம் செய்யபட்ட DDT சார்ந்த இம்மருந்துகளை ஐம்பதுகளில் வேளாண்மையில் பெருமளவில் பயன்படுத்த ஆரம்பித்தனர். பறவைகளுக்கு பிடித்தது கேடுகாலம். பூச்சிக்கொல்லி மருந்துகள் பல அவதாரங்கள் எடுத்து பல பெயர்களுடன் வெளிவந்தன. இன்று நம்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துத் தொழிலில் மட்டும் 5000 கோடி ரூபாய் புரள்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு ஆண்டிற்கு 60,000 டன் நச்சுமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது என்கிறது ஒரு கணிப்பு.

பயன்படுத்த ஆரம்பித்து இருபது வருடம் கழித்தே இதன் தீயவிளைவுகளை உணர முடிந்தது. இந்த நச்சு மருந்துகளின் - அவைகளில் பெயர்களை விட்டுவிடுவோம் - வேதியல் கூற்றின் அடிப்படை இயல்பு அவைகளின் அழியாத்தன்மை (persistence). எந்த இடத்திலும், எந்த உடலிலும் அது வீரியம் குறையாமல் இருக்கும். நீரிலிருந்து, தவளையில் உடலின் சென்று, பின் அதை இரையாகக்கொள்ளும் செம்பருந்துவின் உடலின் தங்கி அதை அழித்து விடுகின்றது. பருந்துகள் இடும் முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிக்காது. சிட்டுகுருவிக்கும் இதே கதிதான். அது உண்ணும் சிறு தானியங்களிலிருக்கும் நச்சுப்பொருள் அதன் இனப்பெருக்கத்தை தடுக்கின்றது.

பூச்சிமருந்துகள் தீமை இழைக்கும் சிறு உயிரினங்களை மட்டுமல்லாமல் மருந்து தெளிக்கப்படும் இடத்திலுள்ள எல்லா பூச்சி புழுக்களையும் அழிக்கின்றன. மழைக்காலத்தில் இந்த மருந்துகள் நீரில் கரைந்து ஏரிகளையும் குளங்களையும் அடைந்து அங்கு வாழும் சிற்றுயிர்களையும் நாசம் செய்கின்றது. இந்த உயிரினங்களை இரையாகக்கொண்டு வாழும் புள்ளினங்கள் மறைய ஆரம்பிக்கின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், எந்த சமயத்தில் வானத்தைப் பார்த்தாலும் ஏதாவது பறவைகளைக் காண முடியும். இப்போது நிலைமை வேறு. சில வாரங்களுக்கு முன், சித்தாலப்பாக்கம் அருகே ஒரு மாலையில், ஒரு பாறையின் மீது இருந்து சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அரைமணி நேரம் இருந்திருப்போம். அந்தப் பரந்த வானத்தில் அந்த மாலையில் நாங்கள் எந்தப்பறவையையும் பார்க்கவில்லை. இரு வாலாட்டி குருவிகளைத்தவிர. புள்ளினம் எவ்வளவு அரிதாகிவிட்டது என்று புலப்பட்டது. சிட்டுக்குருவியும் இதுபோலத்தான் சுற்றுச்சூழல் மாசுவிற்கு பலியாகி விட்டது.

அதுமட்டுமல்ல. பழைய காலத்தில் ஓட்டு வீடுகள் அதிகம் இருந்த போது அந்த ஓட்டின் இடைவெளியில் கூடிகட்டி பல்கி பெருகிக் கொண்டிருந்தது. ஓட்டு வீடுகள் மறைந்து கான்கிரீட் கட்டடங்கள் வந்த பின் குருவிக்கு கூடு கட்ட இடமில்லை. மூன்றாவது காரணம் செல் தொலைபேசி டவர்கள் என்று சில அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த டவர்களிருந்து உருவாகும் கதிரியக்கம் பறவைகளை இனப்பெருக்கத்தை சீரழிக்கின்றது என்று சென்னையிலுள்ள உயிரியிலாளர் ரஞ்சித் டேனியல் கூறுகின்றார். சென்னை நகரிலிருந்த சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல, புல்புல், மணிப்புறா, செம்பருந்து போன்ற அன்றாடம் எளிதாகக் காணக்கூடிய புள்ளினங்களும் அரிதாகி விட்டன என்கிறார் டேனியல்.

கோவையிலுள்ள சலிம் அலி பறவையியல், இயற்கை வரலாறு மையத்திலுள்ள உயிரியலாளர்கள் ஒரு பரிசோதனை செய்து இதை அறிந்துள்ளனர். ஐம்பது முட்டைகளை செல் டவர் கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமடம் வைத்து பின் பரிசோதித்தில் எல்லா முட்டைகளில் கருக்களும் சிதைக்கப்பட்டிருந்ததை பதிவு செய்திருக்கின்றன.

சிட்டுக்குருவிகளில் ஆண்குருவிக்கும் பெண்குருவிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் உண்டு. ஆண்குருவியின் இறக்கைகளில் சிறிது செங்கல் நிறமிருக்கும். கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே கூடுகட்டும். குஞ்சுகள் பொரித்தவுடன் இரண்டும் இரைதேடிக்கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டி விடும். சிட்டுக்குருவிகள் தானியங்களை உண்டு வாழ்ந்தாலும், குஞ்சுகளுக்கு புழு, பூச்சிகளைத்தான் இரையாகக் கொடுக்கின்றன.

இப்படி ஒன்றாக, ஆணும் பெண்ணும் சேர்ந்து குஞ்சுகளை பராமரிப்பதை சில பறவை இனங்களே செய்கின்றன. மயிலினத்தில் பெண்மயில் மட்டுமே குஞ்சுகளை பராமரிக்கும். மனிதருடன் மிக நெருக்கமாக இருந்த பறவை சிட்டுக்குருவி. வீடுகளிலும் பொது இடங்களிலும் அதன் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். இன்று நம்மை விட்டு விலகிப்போய் விட்டது. பறவை ஆர்வலர் யாரவது சிட்டுகுருவி ஒன்றைக் கண்டால் உடனே மின்னஞ்சலில் tamilbirds என்ற யாஹ¥ குழுவிற்கு செய்தி அனுப்பி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்!” என்று முடித்தார் தியோடர் பாஸ்கரன்.

மனித இனம் எது எதையோ தேடி, தம்மிடம் இருப்பதை இழந்து வருகிறது என்பது மட்டும் அவரது பேச்சில் புரிகிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

13 மே, 2010

கரும்பு தின்ன கூலி! பொறியியல் படிக்க சம்பளம்!

“வேலைபார்க்கத்தான் சம்பளம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கள் நிறுவனத்தில் படிப்பதற்கே நாங்கள் சம்பளம் தருகிறோம்!” என்கிறார்கள் ஸோஹோ (Zoho) நிறுவனத்தினர். ஸோஹோ என்ற பெயர் மென்பொருள் வட்டாரங்களில் உலகப் பிரபலம். “இதென்ன கலாட்டா?” என்று யோசிக்கும்போதே, ஒரு வருடம் படித்து முடித்தவுடன் எங்கள் நிறுவனத்திலேயே தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியும் காத்திருக்கிறது என்று அடுத்த தவுசண்ட்வாலா சரவெடியையும் சரசரவென வெடித்துக் கொண்டே போகிறார்கள்.

விடு ஜூட். ஸோஹோ யுனிவர்சிட்டிக்கு...

சென்னையின் தெற்கு எல்லையான வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிறுத்தத்துக்கு எதிரில் ஒடுங்கியிருக்கும் ஒரு சந்துக்குள் நுழைந்தால்.. பிரம்மாண்டமான வளாகத்தில் வீற்றிருக்கிறது ஸோஹோ கார்ப்பரேஷன். ஒரு கல்லூரிக்குள் நுழைந்தது மாதிரியான அனுபவம். வண்ண வண்ண உடைகளோடு ஊழியர்கள்.

“மைக்ரோசாஃப்டுக்கு நாங்கதான் நேரடி போட்டியாளர் தெரியுமில்லே?” வாசலிலேயே செக்யூரிட்டி கலாய்க்கிறார்.

உள்ளே நுழைந்தால் சாட்டிங், பிளாக்கிங் (Blogging) என்று ஊழியர்கள் பிஸியாக இருக்கிறார்கள். மற்ற ஐடி நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட விஷயங்கள் இவை.

“என்ன இதெல்லாம்?”

“இதெல்லாம் இல்லாம வேலை செய்யுறவங்களுக்கு எப்படிங்க கிரியேட்டிவிட்டி டெவலப் ஆகும்?” சீரியஸாக சொல்கிறார்கள் நிர்வாக ஊழியர்கள். கூகிள் நிறுவனத்தின் பணியாற்றும் பாணி இது என்பதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு இந்திய நிறுவனத்தில் இதுபோன்ற பணிக் கலாச்சாரத்தை பார்ப்பது இதுவே முதன்முறை.

நிஜமாகவே ஸோஹோ ஒரு வித்தியாசமான நிறுவனம்தான். மென்பொருள் என்பது விற்பனைக்கான தயாரிப்பு என்பது இன்றுவரை மென்பொருள் வட்டாரத்தில் சொல்லப்படும் கூற்று. ஸோஹோ நிறுவனத்தின் அடிப்படையே, “மென்பொருள் என்பது வெறுமனே தயாரித்து, விற்கும் பொருளல்ல. மின்சாரம், குடிநீர், கேஸ் போல இதுவும் சேவைசார்ந்த ஒரு தொழில்” (Service oriented profession) என்பதுதான்! அனேகமாக இந்த ஐடியாவோடு இத்துறையில் இருக்கும் ஒரே நிறுவனம் ஸோஹோ கார்ப்பரேஷன் மட்டுமே.

முதல் பாராவில் நாம் குறிப்பிட்ட ‘படிப்பதற்கு சம்பளம்!’ பற்றி கேட்டோம். நம் பின்னால் சாதாரணமாக கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த ஒருவர் சடசடவென்று அருவி மாதிரி பேசத் தொடங்கினார்.

“திறமையான பொறியியலாளர்கள் எங்களுக்கு தேவை. எங்கு போய் அவர்களை தேடுவது என்றே எங்களுக்கு தெரியவில்லை. பொறியியல் படித்தவர்களோ அயல்நாட்டுகளுக்கு பறந்துவிடுகிறார்கள். அல்லது மைக்ரோசாஃப்ட், கூகிள் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அவர்களை கொத்திக்கொண்டு போய்விடுகின்றன.

நாங்கள்தான் பில்கேட்ஸுக்கு போட்டி என்று சொல்லிக்கொண்டாலும், நாங்கள் சிறிய நிறுவனம்தான். என்ஜினியரிங் முடித்தவர்கள் எங்களிடம் வேலை செய்ய போட்டியெல்லாம் போடுவதில்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

\அப்போது உருவானதுதான் இந்த ஐடியா. ஸோஹோ யுனிவர்சிட்டி!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார். ‘ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க வழக்கமான முறையிலேயே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. அதுபோல சிந்தித்துதான் அந்தப் பிரச்சினையே நமக்கு உருவாகியிருக்கும்!’

எனவே மாற்றி யோசிக்க ஆரம்பித்தோம்.

எங்கள் நிறுவனத்துக்கு இருக்கும் ஆள் பற்றாக்குறையைப் போக்க வேண்டும். அதே நேரத்தில் பணிக்கு சேர்பவர்கள் எங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்கு சரியாக பொருந்தவேண்டும். பட்டப்படிப்பு படித்து வருபவர்களுக்கு பயிற்சியளித்து, எங்கள் நிறுவனத்தின் போக்குக்கு கொண்டு வருவதற்குள், இங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து வேறு பெரிய சம்பளத்துக்கு, பெரிய நிறுவனத்துக்கு பறந்துவிடுவார்கள்.

பொதுவாக பட்டம் படித்தவர்கள் அறிமுறை (theoretical) அறிந்தவர்களாக இருந்தாலும், பணிக்கு சேர்ந்து செயல்பட அவர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு பட்டங்கள் மீதே நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. பட்டம் படித்தவர்கள்தான் மென்பொருள் நிறுவனங்களில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்றொரு கூற்று இருக்கிறது. அதுவும் தவறானது. ஏனெனில் இன்று உலகில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் மூன்று பெரிய மென்பொருள் நிறுவனங்களை நிறுவியவர்களைப் பார்த்தோமானால், அவர்கள் பட்டதாரிகள் அல்ல.

இப்படிப்பட்ட சூழலிலேயே பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு எங்களுக்கு வாகாக கல்லூரியில் போதிப்பது மாதிரியே பயிற்சியளித்து, எங்கள் நிறுவனத்திலேயே பொறியியலாளர்களாக பணிக்கு சேர்த்துக் கொள்கிறோம்” என்றார்.

இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தவர்தான் ஸோஹோகார்ப் நிறுவனத்தின் தலைவராம். பெயர் ஸ்ரீதர் வேம்பு. வயது நாற்பத்தி ஒன்று. பட்டங்கள் மீது நம்பிக்கையில்லை என்று சொல்லும் இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்காவில் முனைவர் பட்டமும் பெற்றார்.

எப்படி இயங்குகிறது ஸோஹோ யுனிவர்சிட்டி?

பொதுவாக மேல்நிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே இவர்களது குறி. கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர்களையும் விடுவதில்லை. கிராமப்புறப் பள்ளிகளுக்கு நேரில் சென்று பேசி, (கல்லூரிகளில் பெரிய நிறுவனங்கள் மாணவர்களை தேர்ந்தெடுப்பது போல) தங்களுக்கான மாணவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக பதினாறு வயதிலிருந்து இருபது வயதுக்குள் இருப்பவர்கள் ஸோஹோ யுனிவர்சிட்டியில் படிக்க தகுதியானவர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட என்ன தகுதி?

கணிதத்தில் நல்ல பரிச்சயமும், பேச்சுத் தொடர்பில் வல்லவராகவும் இருத்தல் முக்கியமான தகுதி. நுழைவுத் தேர்வு, மற்றும் நேர்முகம் மூலமாக இத்தகுதிகள் கண்டறியப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்?

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒன்பது முதல் பண்ணிரெண்டு மாதங்கள் வரை கல்லூரிகளில் வழங்கப்படுவதைப் போலவே பேராசிரியர்களை வைத்து கல்வி போதிக்கப்படுகிறது. எட்டு மாணவர்களுக்கு நான்கு பேராசிரியர்கள் என்ற விகிதத்தில் கற்பிக்கிறார்கள் என்றால், கல்வியின் தரத்தை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். இங்கு படிப்பவர்களுக்கு மாதாமாதம் நான்காயிரம் ரூபாய் சம்பளம். மதிய உணவும், இரவு உணவும் இலவசம்.

பயிற்சியை முடித்தவர்கள் ஸோஹோகார்ப் நிறுவனத்தில் டெவலப்பர், டிசைனர், குவாலிட்டி அனலிஸ்ட், ப்ரீ-சேல் சப்போர்ட், கஸ்டமர் சப்போர்ட் என்றிருக்கும் பலதரப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில், அவரவர் தகுதிக்கேற்ற பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சம்பளமும் மற்ற நிறுவனங்களில் கிடைப்பதற்கு இணையானதாகவே கிடைக்கும்.

மாணவர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் கிடையாது. பயிற்சியை முடித்தவர்களுக்கு இங்கே பணிபுரிய விருப்பமில்லை எனில், வேறு நிறுவனத்துக்குப் போய்ச்சேர எந்தவித தடையுமில்லை. அஞ்சல் மூலமாகவோ, பகுதிநேரமாகவோ வேறு படிப்பு படிக்கவும் கட்டுப்பாடு எதுவுமில்லை.

ஒரு பொறியியல் மாணவர் பட்டம் படிக்கும்போது அவர் செலவு செய்கிறார். ஸோஹோ யுனிவர்சிட்டியிலோ படிக்கும் காலத்திலேயே சம்பாதிக்க முடியும். பணி உத்தரவாதமும் உண்டு என்பதே இத்திட்டத்தின் மிகப்பெரிய பலம்.

ஐந்து வருடங்களில் 18 பேட்ச்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஸோகார்ப் பெற்றிருக்கிறது. ஸோஹோ யுனிவர்சிட்டியில் சேர்ந்துவிடுவது என்பது அத்தனை சுலபமானதல்ல. ஒவ்வொரு பேட்சுக்கும் கிட்டத்தட்ட மூன்றாயிரம் பேரிலிருந்து பதினைந்து பேரை மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

வித்தியாசமான இந்த பணியாளர் தேர்ந்தெடுப்பு முறைக்காக நாஸ்காம் நிறுவனத்தின் 2009ஆம் ஆண்டுக்கான புதுமை விருதினை ஸோஹோகார்ப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு :
ஸோஹோ யுனிவர்சிட்டி குறித்த மேலதிக விவரங்களுக்கு :
தொலைபேசி : 044-22431115
மின்னஞ்சல் : univ@zohocorp.com

12 மே, 2010

எஸ்.எம்.எஸ்.


எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகளின் அளவு சிறிதானாலும், சிறப்புகள் பெரிது. எந்த மாகானுபவர் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தாரோ பாவம். விஜய் ரசிகர்களிடமும், அஜீத் ரசிகர்களிடமும் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறது. கடந்த ஏழெட்டு வருடங்களாக இவர்களின் படங்கள் வெளியாகும்போதெல்லாம் எதிர்தரப்பு ரசிகர்களால் அனுப்பப்படும் குறும்பு எஸ்.எம்.எஸ்.களில் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது. ஒரு கட்டத்தில் இவ்வகையில் மொக்கைவகை எஸ்.எம்.எஸ்.களும் பல்கி பெருக ஆரம்பித்துவிட்டதால் மணி அடித்தாலே கிலியாகும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அஜீத்தின் மவுசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டதால் சமீபத்தில் அசல் வெளியானபோது அவ்வளவு தொந்தரவில்லை. ஆனால் விஜய் இன்னும் பீக்கில் இருப்பதால் சுறா வெளியானதில் இருந்து எறாவாக வறுத்துத் தொலைக்கிறார்கள். அந்தப் படம் பார்த்த அனுபவமே திராவகக் குளியல் தரும் எரிச்சலை இன்னமும் தந்துகொண்டிருக்கும்போது, இந்த மொக்கை எஸ்.எம்.எஸ்.களால் கூடுதல் எரிச்சல் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஆயினும் கைதேர்ந்த எஸ்.எம்.எஸ்.ஸர்கள் சிலரின் படைப்புத்திறனை எண்ணி மலைக்காமல் இருக்க முடியவில்லை. உதாரணத்துக்கு ஒன்று கீழே. இதுபோல உங்கள் இன்பாக்ஸ்களில் இருக்கும் எஸ்.எம்.எஸ்.களை (இண்டரெஸ்டிங்கா இருந்தா மட்டும்) பின்னூட்டத்தில் தரலாம். சுறாவின் நூறாவது நாள் விழாவின்போது இவற்றை புத்தகமாக அச்சிட்டு விஜய்க்கு வழங்குவதாக உத்தேசம்.

மருத்துவமனையில் ஒரு பெரியவரும், டாக்டரும் பேசும் வசனங்கள்தான் ஒட்டுமொத்த குறுஞ்செய்தியும்.

பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க.

டாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி...

பெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்?

டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்!

11 மே, 2010

லும்பினி!

சமூகநீதிக்கு குரல் கொடுக்கக்கூடிய இன்னொரு இணையத்தளம் தோழர்களால் தொடங்கப் பட்டிருக்கிறது : http://www.lumpini.in

நமக்கு உவப்பானதா, உவப்பற்றதா என்பது முக்கியமில்லை. ஆயினும் பொதுப்புத்திக்கு எதிரான மாற்று சிந்தனைகளுக்கு நல்ல களமாக லும்பினி அமையும் என்பதை எதிர்ப்பார்க்கலாம். வரும் காலத்தில் மிக முக்கியமான ஆக்கங்களை இத்தளத்தில் எதிர்ப்பார்க்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு இயக்கமாக இயங்கிய இலக்கியப் பத்திரிகையான நிறப்பிரிகையின் சில இதழ்கள் இந்த இணையத்தளத்தில் வாசிக்க கிடைக்கிறது.

பத்து நிமிடத்தில் பார்த்த பறவைப் பார்வையில் பார்த்ததில், தளத்தின் வடிவம் மிக சிறப்பாக, வாசிப்புக்கு ஏதுவாக இருப்பதை உணரமுடிகிறது. வழக்கமான இணையத்தள மரபுக்கு ஏற்ப இங்கும் திராவிடக்குரலுக்கு இதுவரை இடஒதுக்கீடு ஏதுமில்லை. அனேகமாக கீற்று மற்றும் வினவு தளங்களுக்கு மாற்றாக இத்தளம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. அடுத்தடுத்து இத்தளம் செயல்படும் விதத்தை வைத்தே எதையும் தீர்மானிக்க முடியும்.

லும்பினி ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகள்!

மலைபோல நம்பலாம் மருந்தாய்வுத் துறையை!

நல்ல வேலையும், கைநிறைய சம்பளமும் வேண்டுமா? மென்பொருளோ, வன்பொருளோ, ஏதாவதாக இருந்தாலும் சரி. கம்ப்யூட்டர் படியுங்கள். நாளை உலகை ஆளப்போவது தகவல் தொழில்நுட்பத்துறைதான்.

கடந்த பத்தாண்டுகளாக நம் இளைய தலைமுறைக்கு இதைச் சொல்லி சொல்லியே ‘கம்ப்யூட்டர்தான் எதிர்காலம்’ என்ற கருத்தாக்கத்தை ஆழ விதைத்து விட்டிருக்கிறார்கள். இதனால் பெரியளவில் வளர்ந்து வரும் மற்ற துறைகளைப் பற்றியும், அதில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றியும் அறியும் ஆர்வம் மாணவர்களிடையே இல்லை. எல்லோருமே கம்ப்யூட்டரில் வேலை பார்க்கப் போய்விட்டால், மற்ற துறைகளில் பணியாற்றப் போவது யார்?

தகவல் தொழில்நுட்பத்துறையின் அசுரப் பாய்ச்சலை எட்டிப் பிடிக்கப் போகும் மற்றொரு துறை மருந்தாய்வு (Clinical Research). மெக்கன்சி ஆய்வறிக்கையின் படி அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இந்தியாவில் மட்டுமே தோராயமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்பிருக்கும் துறை இது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்திய மருந்துத்துறை ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு 12.3 சதவிகித கூடுதல் வளர்ச்சியை பெற்று வருகிறது. உலகின் முதல் பத்து இடங்களுக்குள்ளாக இந்திய மருந்தாய்வுத் துறையும் இடம்பெறப் போகிறது.

பன்னாட்டு மருந்தாய்வு நிறுவனங்களின் கழுகுப்பார்வை ஏற்கனவே இந்திய சந்தையின் மீது அழுத்தமாக பதிந்திருக்கிறது. ஏனெனில் உலகளவில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மக்கள் தொகை, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம். ஆய்வுகளுக்கு துணை செய்யும் தகவல் தொழில்நுட்பம் குறித்த போதுமான அறிவும் இந்தியர்களுக்கே அதிகம். உலகத் தொடர்புமொழியான ஆங்கிலத்திலும் நாம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளோம். குறைந்த செலவில், தரமாக பணிகளை முடித்துத் தருபவர்கள் என்ற பெயரும் இந்தியர்களுக்கே உரித்தானது.

இன்றைய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாய்வு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் பேர் மட்டுமே இன்றைய தேதியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் மூன்று வருடங்களில் இத்துறையில் பணியாற்ற குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேர் தேவை. உலகளவில் லட்சக்கணக்கானோர் தேவைப்படுவார்கள். ஆட்களுக்கு பற்றாக்குறை இருக்கும் துறை என்பதால் சம்பளம் பற்றி சொல்லவேத் தேவையில்லை.

சமீபத்தில் உலகை தேக்கிய பொருளாதார மந்தத்தால் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. எத்தகைய வீழ்ச்சியையும் தாக்குப்பிடித்து, முன்னேற்றம் கண்டு இயங்கும் துறைகள் மிக சிலவே. உணவு, உடை, கல்வி ஆகியத் துறைகளுடன் மருத்துவத்துறையும் இவற்றில் ஒன்று. எனவே மருந்தாய்வுத் துறையில் பணியாற்றுபவர்கள் Recession என்ற சொல்லுக்கு அஞ்சவேண்டிய நிலையே இருக்காது.

மருந்தாய்வு என்றால் என்ன?

உயிர்காக்கும் மருந்துகள் எப்படி உருவாகிறது தெரியுமா? அவற்றுக்கு செய்யப்படும் செலவு என்ன? ஒரு மருந்தைத் தயாரிக்க எவ்வளவு பேர் உழைக்க வேண்டும்? எவ்வளவு காலம் ஆகும்? யூகித்துச் சொல்லுங்கள், பார்ப்போம்.

நம்புங்கள். ஒரே ஒரு உயிர் காக்கும் மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரை சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. சராசரியாக ஐயாயிரம் பேரின் உழைப்பு இதற்கு பின்னணியில் அவசியமாகிறது. பத்து முதல் பண்ணிரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது. சில மருந்துகளுக்கு பதினைந்து ஆண்டுகள் கூட ஆகலாம்.

சோதனைச்சாலையில் ஒரு மருந்து கண்டறியப்பட்டு விட்டதுமே, அது நேரடியாக மக்களுக்கு சந்தையில் கிடைத்துவிடாது. அது முதலில் விலங்குகளுக்கு தரப்பட்டு பரிசோதிக்கப்படும். பின்னர் தன்னார்வலர்களாக வரும் மனிதர்களுக்கு (நல்ல உடல்நலத்தோடு இருப்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும்) தரப்பட்டு பரிசோதிக்கப்படும். எந்தவிதப் பக்கவிளைவுகளோ, எதிர்விளைவுகளோ ஏற்படாத பட்சத்தில் மட்டுமே பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும். பயன்பாட்டுக்கு முன்னதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம் (Food and Drug Administration) விண்ணப்பித்து சான்றிதழும் பெறவேண்டும்.

இந்த மொத்தப் பணிகளும் அடங்கியதே மருந்தாய்வுப் பணி. இதற்கு ஆகும் செலவு, பணியாளர் எண்ணிக்கை மற்றும் கால அவகாசமே நாம் இரண்டு பத்திகளுக்கு முன்பாக குறிப்பிட்டது.

யாரெல்லாம்?

உயிரியல், உயிர்தொழில்நுட்பம், வேதியியல், பல்மருத்துவம், மருந்தாக்கவியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணைப்பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் அனைவருமே மருந்தாய்வுப் பயிற்சியை முடித்துவிட்டு, இப்பணிகளில் சேரமுடியும். உடல்நலத்துறை வல்லுனர்களுக்கு ஏற்ற சரியான துறை இது.

மருந்தாய்வுப் பயிற்சி

எம்.எஸ்சி., (க்ளினிக்கல் ரிசர்ச்) என்ற முழுநேர, இரண்டாண்டுகள் படிப்பு பல பல்கலைக் கழகங்களால் இந்தியாவில் வழங்கப் படுகிறது. மேலும் பல கல்வி நிறுவனங்கள் முழுநேர, பகுதிநேர, தொலைதூர மற்றும் இணையவழி மூலமாகவும் இப்பயிற்சியினை வழங்குகின்றன.

இதில் சில நிறுவனங்கள் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் வெறும் செயல்முறை விளக்கங்களையும் (Practical), வேறு சில நிறுவனங்கள் கோட்பாட்டு வகுப்புகளையும் (Theory) மட்டுமே தருகின்றன. எனவே இந்த படிப்பிற்கு இரண்டையும் ஒன்றாக சேர்ந்து தரக்கூடிய செயல்முறைப் பயிற்சி மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.

இப்பயிற்சியை அண்ணா பல்கலைக் கழகம், சென்னையும் (AU-KBC Research Centre), அப்பல்லோ மருத்துவமனையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து அளிக்கிறது. தரமான பயிற்சியும், இந்திய மருந்தாய்வுத் தேவையினை பூர்த்தி செய்யும் அடிப்படையில், ஓராண்டு மற்றும் ஆறுமாதங்கள் படிக்கக்கூடிய இரண்டு விதமான மருத்துவ சான்றிதழ் படிப்புகள் இவர்களால் நடத்தப் படுகின்றன.


அண்ணா பல்கலைக்கழகமும், அப்போலோ மருத்துவக் குழுமமும் இணைந்து நடத்தும் பயிற்சி குறித்த விவரங்களை அறிய :

AU-KBC Research Centre, MIT வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. போன் : 044-2223 2711 Extn : 156. கைப்பேசி : 96770/54411/9841744635. மின்னஞ்சல் : ctm@au-kbc.org / aherfcrcourse@gmail.com. இணையத்தளம் : www.au-kbc.org மற்றும் www.apollohospitals.com/research

முழுநேரப் பயிற்சிக்கட்டணம் – ரூ.1,75,000. பகுதிநேரப் பயிற்சிக் கட்டணம் – ரூ.80,000. நான்கு தவணைகளில் செலுத்தலாம். இதே படிப்பிற்கு வேறு சில நிறுவனங்களில் முழுநேரத்துக்கு சுமார் ரூ.3,00,000/- வரையும், பகுதி நேரத்துக்கு தோராயமாக ரூ.85,000/- முதல் ரூ.1,50,000 வரையும் செலவாகும்.

(நன்றி : புதிய தலைமுறை)