‘மோட்டர் சைக்கிள், கார், பஸ், ஆட்டோ ரிக்ஷாவென்று போக்குவரத்துக்கு நிறைய வசதிகள் வந்துவிட்ட காலத்தில் சைக்கிளா.. ச்சே!’என்றுகூட நினைப்பீர்கள். ஆம். சைக்கிள்தான் குறைந்ததூரப் போக்குவரத்துக்கு உகந்த சரியான வாகனமென்று ஐரோப்பாவிலும், சீனாவிலும் முடிவுகட்டி விட்டார்கள். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக மிதிமிதியென்று சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்த நாம்தான் அதை ஒட்டுமொத்தமாக ஏறக்கட்டி வைத்துவிட்டோம்.
புவிவெப்பப் பிரச்சினை அதிகபட்ச சூட்டினை கிளப்பியிருக்கிறது. சுற்றுப்புறச்சூழல் தாறுமாறாக கெட்டு கிடக்கிறது. பெட்ரோல் விலை விண்ணைத் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. எனவே கொஞ்சதூரம் சைக்கிளை மிதிப்பதால் என்ன குடியா மூழ்கிவிடப் போகிறது? சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் நல்ல பயிற்சிதானே?
இன்றைய நிலையில் குறுகிய தூரப் பயணங்களில் நாம் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன?
வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தூரமே அருகிலிருக்கும் ரயில் நிலையத்துக்கோ அல்லது பஸ் நிலையத்துக்கோ செல்வதற்கு குறைந்தபட்சம் 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாவது நாம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
இந்த தூரத்தை கடக்க நாம் பயன்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுப்புறச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகிறது.
பஸ்சுக்காகவும், ஆட்டோவுக்காகவும் காத்திருக்கும் நேரமும் வீண். காத்திருக்கும் நேரம் மட்டுமன்றி சிக்னல்களிலும், போக்குவரத்து சிக்கல்களிலும் கூடுதல் நேரத்தை செலவழித்து அலுவலகத்துக்கோ அல்லது செல்லவேண்டிய இடத்துக்கோ சரியான நேரத்தில் போய்ச்சேர முடியாத நிலை.
இத்தகைய சிக்கல்களுக்கு மாற்றாக மும்பையின் புறநகரான தானேவில் களமிறங்கியிருக்கும் நிறுவனம் ஃப்ரீ-மோ (Fre-mo – Freedom to move). ஒரு நாளைக்கு சுமார் ஏழு லட்சம் பேர் தானே ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் பகுதிகளில் இருந்து வருகிறார்கள். இங்குவர அவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களால் நகரத்தின் போக்குவரத்து சிக்கல் இடியாப்பச் சிக்கலாகி விட்டது. பணமும், அதைவிட பொன் போன்ற நேரமும் தண்ணீராய் செலவழிகிறது. எனவேதான் சைக்கிளை இந்தப் பிரச்சினைக்கு மாற்றாக முன்வைக்கிறது ஃப்ரீ-மோ. இந்தியாவிலேயே முதன்முறையாக தானே நகருக்கு சமீபத்தில் வந்திருக்கும் திட்டம் இது.
ஃப்ரீ-மோ திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்பவர்கள் மேற்சொன்ன பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். சுற்றுப்புறச்சூழலை காப்பதாகவும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். இதற்காக சொந்தமாக சைக்கிள் வாங்க வேண்டியதில்லை. எனவே அதை பராமரிக்கும் சிக்கலும் இல்லை. இதை ஃப்ரீ-மோ பார்த்துக் கொள்ளும்.
மேலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை சைக்கிள் ஓட்டுவதால் பயணத்தோடு சேர்ந்து உடற்பயிற்சியும் இலவசமாக கிடைக்கிறது. ஜிம்முக்கும், பயணத்துக்கும் மாதாமாதம் ஆயிரங்களை கொட்டி அழத் தேவையில்லை.
அலுவலகங்களுக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், குறைந்தபட்ச தூரத்துக்கு பயணிப்பவர்கள் என்று பலருக்கும் இதனால் விளையும் பயன்கள் ஏராளம்.
சரி. இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது?
நகரின் முக்கியமான பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஃப்ரீ-மோ நிறுவனத்தின் சைக்கிள் நிலையங்கள் இருக்கும். ஓர் உறுப்பினர் தன்னுடைய வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நிலையத்திலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கோ, பஸ் நிறுத்தத்துக்கோ அல்லது செல்லவேண்டிய இடத்துக்கு அருகிலிருக்கும் நிலையத்தில் சைக்கிளை விட்டு விட்டு ஹாயாக சென்றுகொண்டே இருக்கலாம். சைக்கிளை இரவு முழுக்க வைத்திருக்கவோ அல்லது தேவையில்லாமல் வீட்டிலோ, தியேட்டரிலோ, வேறு இடத்திலோ நிறுத்தி வைத்திருப்பதற்கு அனுமதியில்லை. பயணத்துக்கு மட்டுமே உறுப்பினர்கள் சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம்.
உறுப்பினராக பதிவு செய்துகொள்ள நிறுவனம் சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை விதித்திருக்கிறது. செல்ஃபோனுக்கு சிம்கார்ட் வாங்குவதைப் போல சுலபமான வழிமுறைகள்தான். நிறுவனம் கேட்கும் தகவல்கள், ஆவணங்கள் மற்றும் உறுப்பினர் கட்டணத்தை செலுத்திவிட்டால் உறுப்பினர் ஆகிவிடலாம்.
உறுப்பினருக்கு கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மாதிரி ஒரு அட்டை கொடுக்கிறார்கள். இந்த அட்டையை பயன்படுத்திதான் சைக்கிளை எடுக்க முடியும். ஐந்து லட்ச ரூபாய்க்கு பர்சனல் ஆக்சிடெண்ட் இன்சூரன்ஸ் பாலிசியும் உண்டு. ஆண்கள் – பெண்கள் இருவருமே ஓட்டக்கூடிய ‘யூனிசெக்ஸ்’ வகை சைக்கிள்களே இங்கு கிடைக்கிறது. ஹெல்மெட் கொடுக்கிறார்கள். மழைக்காலத்தில் ரெயின்கோட் கூட பயனாளிகளுக்கு உண்டு. வசதிகள் இவ்வளவு இருப்பதால் உறுப்பினர் கட்டணம் அதிகமாக இருக்குமே என்று நினைப்பீர்கள்.
அதிகமில்லை ஜெண்டில்மேன்! ஆண்டுக்கு ரூபாய் இருநூறு மட்டுமே. ஆயுள் பதிவுக்கட்டணம் ஐநூறு. திரும்பப் பெறத்தக்க டெபாசிட் ரூபாய் இரண்டாயிரம். இவ்வளவு மட்டுமே!
ஃப்ரீ-மோவை தொடங்கியிருப்பவர் 48 வயதான வி.ரமேஷ். ஒரு பைனான்ஸ் கம்பெனியில் தலைமை செயல் அலுவலராக பணியாற்றியவர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தனது பணியை எழுதிகொடுத்து விட்டு இத்திட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
“2008ஆம் ஆண்டு பார்சிலோனாவுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பியபோது பெட்ரோல் விலை உயர்வை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பெட்ரோல் பயன்படுத்துவதை குறைப்பது தொடர்பாக நிறைய பேர் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த அடிப்படையிலேயே எனக்கு சைக்கிளை போக்குவரத்துக்கு மாற்றாக பயன்படுத்துவது குறித்த யோசனை வந்தது.
சைக்கிளா? என்று ஆரம்பத்தில் கார், மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சுகம் கண்டவர்களுக்கு தயக்கம் இருந்தது. ஆனால் ஒருமுறை எங்களிடம் உறுப்பினராக சேர்ந்துவிட்டவர்கள் சைக்கிள் கொடுக்கும் பரம சுதந்திரத்தை விரும்ப ஆரம்பித்து விடுகிறார்கள்!” என்று தான் ஃப்ரீ-மோ தொடங்கிய கதையை சொல்கிறார் ரமேஷ்.
ஒரு பைனான்ஸ் நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர் சைக்கிள் கடை வைக்க போகலாமா என்று முதுகிற்குப் பின்னால் நிறைய பேர் ஆரம்பத்தில் கேலி பேசியிருக்கிறார்கள். நிறுவனத்தை தொடங்க இரண்டு கோடி ரூபாய் பணத்துக்காக பேயாய் அலைந்திருக்கிறார். தொழிலில் முதலீடு செய்வதில் ஆர்வமிருப்பவர்கள் கூட ஒரு சுற்றுச்சூழலுக்கு ஏதுவான திட்டத்தால் லாபம் என்ன இருக்கப் போகிறது என்று முதலீடு செய்ய மறுத்துவிட்டார்களாம். கடைசியாக பேங்க் ஆஃப் பரோடா கைகொடுக்க ஃப்ரீ-மோ ரெடி.
இத்திட்டம் ஏற்படுத்தப் போகும் சமூக மாற்றங்களை முன்வைத்து பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோருகிறார் ரமேஷ். என்னென்ன மாற்றங்களை விளைவிக்க முடியும் என்று ஒரு பெரிய கனவுப் பட்டியலையும் போடுகிறார்.
- நகரப் போக்குவரத்துச் சிக்கலை குறைக்கலாம். பெரும்பாலானவர்கள் சைக்கிளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் சிக்கல் ஏது? காற்று மற்றும் ஒலியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துவிடுமில்லையா?
- சுற்றுச்சூழல் சீரடைவதால் அனைவரும் சுத்தமான காற்றை சைக்கிள் மிதிக்கும்போது சுவாசிப்பார்கள். சைக்கிள் மிதிப்பது உடற்பயிற்சிக்கு ஒப்பானது என்று மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
- சிறுதூரப் போக்குவரத்துக்கு ஆகும் செலவு கட்டுப்பாட்டுக்குள் வருவதால் மக்கள் இந்த பணத்தை வேறு வகையில் உபயோகமாக செலவழித்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
- இன்று நகரங்களில் இருக்கும் பெரிய பிரச்சினை ‘பார்க்கிங்’ இத்திட்டத்தால் பார்க்கிங் பிரச்சினையை முற்றாக களையமுடியும். இது நகரக் கட்டமைப்புக்கும் வசதியானது.
- கார், பஸ் போன்ற வாகனங்களால் சாலை சீக்கிரம் பாதிப்படைகிறது. சைக்கிள்கள் அதிகம் செல்லும் சாலை நீண்டகாலத்துக்கு பாதிப்படையாமல் இருக்கும்.
- இதனால் சேமிக்கப்படும் நேரத்தை மக்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க முடியும். கூடுதலாக வருவாய் ஈட்டவோ அல்லது குடும்பத்தோடோ மகிழ்ச்சியாக இருக்கவோ நேரம் நிறைய கிடைக்கும்.
- கடைசியாக எந்திரம் போல இயங்கும் நம் வாழ்க்கையை சைக்கிள் பயணம் மாற்றும்.
எல்லாம் சரி. இதுவெல்லாம் ‘தானே’வுக்குதானே? நம்ம ஊருக்கு எப்போ வரும் என்று நீங்கள் ஏக்கத்தோடு நினைப்பது புரிகிறது.
மிகவிரைவில் புதுடெல்லி, புனே, பெங்களூர், சென்னைக்கு ஃப்ரீ-மோ திட்டத்தை விரைவுபடுத்த இருக்கிறார் ரமேஷ். இதையடுத்து இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களையும் சைக்கிள்மயமாக்குவதுதான் அவரது லட்சியம்.
சைக்கிள் மிதித்துக்கொண்டு தோழனோடு ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ என்று நாம் பாடிச்செல்லும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும்.