10 மே, 2012

நெருப்புச்சுவர் தேசம்


சீனாவைக் காக்க அந்தக்கால அரசர்கள் பெருஞ்சுவர் கட்டினார்கள் என்பது வரலாறு. இப்போதைய சீன அரசு நெருப்புச்சுவர் கட்டி தங்களை பாதுகாத்துக் கொள்கிறது. இணையத்தில் குறிப்பிட்ட இணையத் தளங்களை மட்டும் ஒரு நாடோ, நிறுவனமோ தேவைப்பட்டால் ‘ஃபயர்வால்’ எனும் தொழில்நுட்பம் மூலமாக தடை செய்ய முடியும்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வின் படி குறைந்தபட்சம் பதினெட்டாயிரம் இணையத்தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது (மூவாயிரத்துக்கும் குறைவான இணையத்தளங்கள்தான் இங்கே தடை செய்யப்பட்டிருக்கிறது என்று சீனா இந்த ஆய்வை மறுக்கிறது). உலகின் டாப் 100 இணையத்தளங்களில் பத்துக்கும் மேற்பட்டவைக்கு சீனாவில் தடா. அரசியல் சட்டத்துக்கு எதிரானவை, ஆபாசமானவை, வன்முறையைத் தூண்டுபவை, சூதாட்டம் மற்றும் சமூகத்துக்கு எதிரானவை என்கிற பெயரில் இணையத்தள சுதந்திரத்தின் கழுத்து சீனாவில் நெரிக்கப்படுகிறது என்று கருத்து சுதந்திர ஆர்வலர்கள் கவலைப்படுகிறார்கள்.

2001ஆம் ஆண்டு வாங் ஜியானிங் என்பவர் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்கள். இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் யாஹூ ஈமெயில் மூலமாக ‘க்ரூப் மெயில்’ அனுப்பினார்கள். அந்த மின்னஞ்சல் வாயிலாக அரசுக்கு எதிரான சிந்தனைகளை நிறைய பேருக்கு பரப்பினார்கள் என்பது. 2008ஆம் ஆண்டு ஹூவாங்க் கீ எனும் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.  அரசினால் கைவிடப்படும் பள்ளிகள் அதனால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவர் அயல்நாட்டு பத்திரிகையாளர்களிடம் பேசினார், இதுகுறித்த தகவல்களை படங்களோடு இணையத்தளங்களில் பதிந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இந்த இரண்டு சம்பவங்களும் சாம்பிள்தான்.

சில தினங்களுக்கு முன்பாக கூட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சர்ச்சைக்குரிய பதினாறு இணையத்தளங்களோடு தொடர்பு கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த இணையத்தளங்கள் தலைநகர் பீஜிங்கின் வீதியில் இராணுவ வாகனங்கள் உட்புகுந்ததாகவும், இராணுவப் புரட்சி ஏற்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டன. இதையடுத்து சீன ராணுவத்தின் அதிகாரப் பூர்வமான செய்தித்தாளான ‘லிபரேஷன் ஆர்மி டெய்லி’யில் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு எச்சரிக்கை தொனியோடு கூடிய கட்டுரை ஒன்று வெளியானது. அக்கட்டுரையில் இராணுவப் புரட்சி தொடர்பான இணையத்தள வதந்திகளை நம்பவேண்டாம், சீன கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்கிற வேண்டுகோளும் இருந்தது. அரசுக்கு ஆதரவான செய்தித்தளங்களும் கூட கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்கள் மீது சில சமயங்களில் விமர்சனங்கள் வைப்பதுண்டு. சில காலத்துக்கு அம்மாதிரி விமர்சனங்கள் ஏதும் இந்தச்சூழலில் வேண்டாம் என்று இந்த செய்தித்தளங்களுக்கு அரசு ஆணையிட்டிருக்கிறது.

நம் நாட்டில் கத்தரிக்காய் மாதிரி மலிவானதாக கிடைக்கும் கருத்துச் சுதந்திரம், உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட சீனாவில் தங்கம் மாதிரி காஸ்ட்லியான சமாச்சாரமாகி விட்டது. நாம் இங்கே சகஜமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், யூட்யூப், வலைப்பூ, பிகாஸா மாதிரியானவை சீனர்களுக்கு இல்லை. அவ்வளவு ஏன்? நாம் இங்கே தகவல்களுக்காக பயன்படுத்தும் விக்கிப்பீடியாவை கூட சீனர்கள் பயன்படுத்த முடியாது (சீன மொழி விக்கிப்பீடியாவுக்கு மட்டும் விலக்கு). உலகளாவிய நாடுகளின் ரகசியங்கள் அம்பலப்படுத்தப்படுகிறது என்பதால் விக்கிலீக்ஸுக்கு தடை. தங்கள் அரசுக்குப் பிடிக்காதவர்களுக்கு பரிசு வழங்குகிறார்கள் என்பதால் நோபல் பரிசு இணையத்தளத்துக்கு தடை. மனித உரிமையை சீனர்கள் தெரிந்துக் கொண்டுவிடுவார்களோ என்கிற அச்சத்தில் மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலின் தளத்துக்கும் தடையென்று சகட்டுமேனிக்கு கண்ணை மூடிக்கொண்டு ‘தடை’க்கிக் கொண்டே போகிறது சீன அரசு. தங்கள் நாட்டுக்கு எதிரான செய்திகளை பகிரும் தளங்கள் என்று சந்தேகிக்கும் செய்தித்தளங்களுக்கும் தடை. கூகிள் தேடுதளம் மூலமாக எதையாவது விவகாரமாக தேடிவிடுவார்களோ என்று அதைகூட தடை செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

“உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பத்திரிகையாளர்களும், இணையத் தள செயல்பாட்டாளர்களும் சிறையில் இருப்பது சீனாவில்தான்” என்று ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு நேரடியாகவே குற்றம் சாட்டுகிறது. இணையத்தளங்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மட்டுமே முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போலிஸார் சீனாவில் பணிபுரிகிறார்களாம். எகிப்து, லிபியாவில் எல்லாம் நடந்த மாதிரி இணையத்தளங்களால் புரட்சி மாதிரி ஏதாவது ஏற்பட்டுவிடுமோ என்று பகிரங்கமாகவே அச்சப்படுகிறது சீனா.

“காற்றுக்காக கதவைத் திறந்தால் கொசுக்களும், பூச்சிகளும் நுழைவதையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்” என்பது சீனாவில் பிரபலமான வாசகம். இரும்புத்திரை நாடான சீனா சந்தைப் பொருளாதாரத்துக்கான தனது கதவுகளை 90களில் விஸ்தாரமாக திறந்து வைத்தது. அப்போது நுழைந்துவிட்ட கொசுவாகவே ‘இண்டர்நெட்’டை சீனா கருதுகிறது. 1994ல் சீனாவுக்கு இண்டர்நெட் வந்தது. தொடர்ச்சியான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளையடுத்து, தவிர்க்க முடியாத சக்தியாக அது தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. செய்திகளை விரைவாகவும், விரிவாகவும் பரிமாறிக் கொள்ள இணையத்தளங்கள் வகை செய்தன. இந்தப் போக்கினை அவதானித்த சீன கம்யூனிஸ்ட்டு கட்சி, இணையத்தளங்களை கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டு மக்களையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்று கருதியது. வாக்கில் இணையத்தளங்களை தடை செய்யவும், அரசுக்கு எதிராக இவற்றை பயன்படுத்துபவர்களை கைது செய்யவும் தொடங்கியது சீனா. 1998ல் Golden Shied Project என்கிற பெயரில் இணையத்தளங்களை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஒரு மெகா திட்டம் செயல்படத் தொடங்கியது. அதன் விளைவுகள்தான் தற்போது சீனாவில் நடந்துக் கொண்டிருப்பவை. இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் சட்டரீதியாக என்னென்ன நடைமுறைகளை செய்யவேண்டுமோ, அத்தனையையும் சீனா ஏற்கனவே செய்துவிட்டது.

தடை, கைது என்று அரசியல்ரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் என்னதான் சீனாவை பொத்திப் பொத்தி பாதுகாத்தாலும், அதே சீனாவில் தடைகளை உடைக்கும் தொழில்நுட்பவியலாளர்கள் ரகசியப் புரட்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். Bringing transparency to the great firewall of China என்பது மாதிரி புதிய புதிய இணையத்தளங்களை உருவாக்கி, இந்த இணையத்தளங்கள் மூலமாக எல்லா இணையத்தளங்களையுமே தடையின்றி பார்க்க வகை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதையுமே தடை செய்யும்போதுதான், அந்த தடையை மீறவேண்டும் என்று கூடுதல் உத்வேகம் ஏற்படுகிறது. ஐம்பது லட்சம் பேர் இணையத்தளங்களை சீனாவில் பாவிக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியையும் தடைகள் மூலமாக கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதுதான் வரலாறு. இந்த வரலாறு சீனாவில் கட்டுடைக்கப்படுமா என்பது அடுத்து வரும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

(நன்றி : புதிய தலைமுறை)

9 மே, 2012

நித்யானந்தா


தீவிரமாக யோசித்துப் பார்த்தால் நித்யானந்தா ஒன்றும் அவ்வளவு மோசமானவர் இல்லை என்று இப்போது தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் காவியும், ரஞ்சியுமாக மாட்டிக் கொண்டபோது நானும் கும்பலோடு கோவிந்தா போட்டது தவறோ என்று வருந்துகிறேன். இணைய-ஊடக வெளிகளில் தொடர்ச்சியாக இயங்குவதால் ஏற்படும் கோளாறு இது. அற-அதர்மங்களை யோக்கிய கண்ணாடி போட்டு பார்ப்பதால் ஏற்படும் விளைவு.

ஒரு நடிகையோடு உடலுறவு கொண்டார் என்பதற்காக அவர் கெட்டவர் என்று பிரச்சாரம் செய்யப்படுவது சட்டத்துக்கு எதிரானது. வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் ஒத்திசைவோடு பாலியல் உறவு கொள்வதை சட்டம் மட்டுமல்ல, இயற்கையும் அனுமதிக்கிறது. அதை ரகசிய கேமிரா கொண்டு படம் பிடித்ததும், ஊடகங்களில் ஏதோ அநீதிக்கு எதிரான பிரச்சாரம் மாதிரியாக காட்டப்படுவதும் intrusion of privacy ஆக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. இந்திய ஊடகங்கள் ஸ்கூப்புக்காக ‘எதைவேண்டுமானாலும் செய்யத் தயாராகி விட்டார்கள் என்பதற்கு இந்நிகழ்வு நல்ல சான்று. இப்போது மதுரை ஆதீனமாகி விட்டதால் அடுத்த ரவுண்டு ஆடிக் கொண்டிருக்கிறது ஊடகங்கள். நித்யானந்தாவின் பெயரோ, போட்டோவோ அட்டைப்படத்திலும், போஸ்டரிலும் இருந்தால் சர்க்குலேஷன் எகிறுகிறது. இவ்வகையில் இவர் ஒரு வசூல்ராஜா.

இல்லாத கடவுளை காட்டி ஆன்மீகக் கடை விரித்தபோது நித்யானந்தாவுக்கு எதிர்ப்புகள் வந்திருந்தால் நம் மக்களின் சூடு, சொரணையை மெச்சியிருக்கலாம். இப்போதும் கூட குறிப்பிட்ட சாதியை சாராதவர் எப்படி மதுரைக்கு ஆதீனமாகலாம் என்று பொங்குகிறார்களே தவிர்த்து, அடித்தட்டு மக்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஆன்மீக மடங்கள் இருப்பதை குறித்த எந்த ஆட்சேபணையும் மக்களுக்கு இல்லை. காசு கொடுத்து ஆதீனமாகி விட்டார் என்று அடுத்த குற்றச்சாட்டு. மற்ற மடங்களுக்கெல்லாம் என்ன யானை மாலை போட்டா அடுத்த மடாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? இல்லையென்றால் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்களா? திரைமறைவில் ஏதேதோ நடந்து யாரையோ எதற்காகவோ சின்னவா ஆக்குகிறார்கள். நம் மட மக்கள், எந்த அற்புதமும் நிகழ்த்திக் காட்ட துப்பில்லாத அவரது காலில் விழுந்து வணங்குகிறார்கள். அடுத்த மடாதிபதி தேர்ந்தெடுக்கப் படுவதில் என்னென்ன அயோக்கியத் தனங்கள் நடக்கும் என்பதை வெட்டவெளிச்சமாக வெளிக்காட்டிய நித்யானந்தாவுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள். என்னவோ இதற்கு முன்பாக இருந்த மதுரை ஆதீனம் பெரிய யோக்கியர் மாதிரியும், ஆதீனத்தின் பெருமையை நித்யானந்தாதான் குலைக்கப் போகிறார் என்பது மாதிரியும் பேசுவது எத்தகைய அறிவீனம்?

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகத்தீவிரமான பகுத்தறிவுப் பிரச்சாரங்களால் சுலபமாக மாற்றிவிட முடியாத மக்களின் கடவுள்-ஆன்மீகம்-சாமியார்கள் குறித்த மூட மனப்போக்கினில் மிகக்குறுகிய காலத்தில் பெரும் எதிர்மாற்றம் ஏற்படுத்தியவர் என்கிற வகையில் நித்யானந்தாவை பாராட்ட பெரியாரிஸ்டுகள் முன்வரவேண்டும். ஊருக்கு ஒரு நித்யானந்தா உருவாவதின் மூலமாகவே பெரும்பான்மை மக்கள் நாத்திகம் நோக்கி இயல்பாகவே நகரத் தொடங்குவார்கள். கடவுளுக்கும், சாமியாருக்கும் வீணாக்கும் தங்கள் கடின உழைப்பினையும், சிந்தனையையும் உருப்படியான விஷயங்களுக்கு பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். சுலபமாக தகர்த்தெறிந்துவிட முடியாத இந்துத்துவ சனாதன கோபுரத்தை இடியாகப் பாய்ந்து கட்டுடைப்பவர் என்கிற வகையில் நித்யானந்தாவை நாம் பாசிட்டிவ்வாகவும் பார்க்கலாமே... ஒய் நாட்?

8 மே, 2012

வழக்கு எண் 18/9


எக்ஸலெண்ட்... படம் பற்றி இதைவிட வேறென்ன சொல்வது? பாராட்டுவது என்றால் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும், ஏதேனும் ஒரு காரணத்துக்காக பாராட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

குறைகளின்றி எந்த படைப்பையும் முழுமையாக உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கும் வாய்ப்பு இருந்தால், கடவுள் இருப்பதும் உண்மையாகிவிடும். வழக்கு எண்ணும் விதிவிலக்கல்ல. ஆசையாக பெற்றெடுத்த அழகான குழந்தைக்கே ‘திருஷ்டிப் பொட்டு’ வைத்துத்தானே அழகு பார்க்கிறோம். தனக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்று நம்பியோ என்னவோ, நான்கைந்து படமாக எடுக்கவேண்டிய மொத்த சரக்குகளையும் அவசரமாக வழக்கு எண்ணில் வாரி இறைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

டீனேஜ்களில் இருக்கும் விளிம்புநிலை சமூக இளைஞன் – இளம்பெண். அதற்கு நேரெதிர் நிலையில் இருக்கும் அதே வயதுகளில் பணக்கார பையன் – மேல்நடுத்தர வர்க்கத்து பள்ளி மாணவி. இயல்பாக இவர்களது சிலநாள் வாழ்வை படம்பிடித்துக் காட்டியிருப்பதின் மூலம் சமூகம் எவ்வளவு பெரிய இடைவெளிகளோடு நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரியவைக்கிறார் இயக்குனர்.

சாலையோர சாப்பாட்டுக் கடையில் வேலைபார்க்கும் வேலுவின் ரிஷிமூலத்தையெல்லாம் விலாவரியாக காட்டியிருப்பதில் ஆவண நெடி அதிகம். வேலு வடநாட்டு முறுக்குக் கம்பெனியில் வேலை பார்க்கும் காட்சிகள் எல்லாம் வழக்கு எண்ணின் கதைக்கு அனாவசியம். இதெல்லாம் படத்தின் நீளத்துக்கு மட்டுமே உதவும். அக்காட்சிகள் இல்லாமலேயே அப்பாத்திரத்தின் தன்மையை பார்வையாளன் பிடித்துக் கொள்வான்.

இரண்டாம் பாதி டீனேஜ் இன்பாச்சுவேஷன் காட்சிகள் பெரும்பாலும் மிகையாக நாடகத் தன்மையோடே நகர்கிறது. பணக்காரர்கள், போலிஸ்காரர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் கெட்டவர்களாகவேதான் இருந்துத் தொலைக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் கிட்டம் இருக்கிறதா? மாணவ சமூகத்தினரிடையே செல்போன் எத்தகைய கலாச்சார எதிர்விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அக்கறையோடு அணுகியிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். அதே நேரம் செல்போனால் பாசிட்டிவ் விளைவுகளே இல்லை என்று இயக்குனர் நம் தலைமீது அடித்து சத்தியம் செய்கிறாரோ என்றும் அஞ்சத் தோன்றுகிறது.

அரசியல் – காவல்துறை – முதலாளிகள் இவர்களுக்கிடையே தொடர்புக்கண்ணியாக பணம் மட்டுமில்லை, சாதியும் இருக்கிறது என்பதை விளைவுகளை எண்ணாமல் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்திருக்கும் பாலாஜி சக்திவேலின் துணிச்சலை கரகோஷம் எழுப்பி வரவேற்கலாம். இதே சாதியை தனது இரண்டாவது படமான ‘காதல்’-லிலும் வம்புக்கு இழுத்திருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. தென்மாவட்டங்களில் பாலாஜி சக்திவேலை குறிவைத்து போஸ்டர்கள் ஒட்டப்படலாம்.

பாடி மவுண்ட் ரிக் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில காட்சிகளில் அதை பயன்படுத்தி இருப்பதாக தோன்றுகிறது. அக்காட்சிகள் ஏதோ ப்ளூ மேட் போட்டு எடுத்தமாதிரியாக ஒட்டாமல் பல்லிளிக்கிறது. பின்னணி இசை கொடுமை. இதைமாதிரி தீவிர கதையம்சமுள்ள படங்களை எடுத்துவிட்டு, நேராக இளையராஜாவிடம் போய்விடலாம். கண்ணீரை துடைத்துக்கொண்டே கலக்கலாக பின்னணி அமைத்துவிடுவார்.

தியேட்டரில் பார்த்தாலும் கூட என்னவோ வீட்டில் அமர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குனர்’ பார்ப்பதைப் போன்ற உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை. நான்கைந்து குறும்படங்களை மொத்தமாக பார்த்ததைப் போன்ற அனுபவத்தை தருகிறது. சிக்கனமான படமாக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம். வழக்கமான சினிமா ஃபீலிங் சுத்தமாக இல்லை. க்ளைமேக்ஸ் எண்டிங் பாசிட்டிவ்வா அல்லது நெகட்டிவ்வா என்கிற பட்டிமன்றம் இன்னும் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

சர்வநிச்சயமாக ‘வழக்கு எண் 18/9’ தமிழ் சினிமாவுக்கு ஒரு ட்ரெண்ட் செட்டர். உப்புமா இயக்குனர்கள் இதை படுமோசமாக பிரதியெடுத்து அடுத்தடுத்து வெளியிடப்போகும் மொக்கைப் படங்களை நினைத்தால் இப்போதே வயித்தை கலக்குகிறது.

3 மே, 2012

கிருஷ்ணா டாவின்ஸி


அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. தொண்ணூறுகளின் துவக்கம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். வெகுஜன இதழ்கள் மூலமாக வாசிப்புப் பழக்கம் ஏற்படத் தொடங்கியிருந்த பருவம். கடலை மடித்துத் தரும் தாளில் அச்சிட்டிருந்ததைக் கூட விட்டுவைக்காமல் படிக்கும் ஆர்வம்.

நாற்பதாண்டுக்கும் மேலாக குமுதத்தில் அரசாட்சி செலுத்திய எஸ்.ஏ.பி.யின் ஆசிரியர் குழுவினர் வயது காரணமாக ஒவ்வொருவராக ஓய்வு பெற ஆரம்பித்தார்கள். அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஆசிரியர் எஸ்.ஏ.பி., வாசகர்கள் உணர்ந்துக்கொள்ள இயலாத வகையில் இயல்பான முறையில் குமுதத்துக்கு புது ரத்தம் பாய்ச்சத் தொடங்கினார். எஸ்.ஏ.பி.க்கு அடுத்தடுத்து குமுதத்துக்கு ஆசிரியர்களானவர்கள் பெரும் பத்திரிகை ஜாம்பவான்களாக இருந்தபோதிலும், பத்திரிகையின் அடித்தளத்தை ஆக்கிரமித்தவர்கள் துடிப்பான இளைஞர்கள். அவர்களில் ஒருவர் இவர்.

சில பேரை பார்த்ததுமே பிடிக்கும். சிலர் பெயரை கேட்டதுமே பிடிக்கும்.
கிருஷ்ணா டாவின்ஸி என்கிற பெயரை முதன்முறை அச்சில் வாசித்தபோதே நிரம்பவும் பிடித்துப் போனது. குறும்பான இந்தியக் கடவுளின் பெயர் முன்பாதியிலும், இத்தாலிய மேதையின் பெயர் பிற்பாதியிலுமாக கவர்ச்சியான கலவையில் அமைந்த புது பெயர்.

குமுதத்தில் எழுதுவதற்கு முன்பாகவே ‘சாவி’யில் சக்கைப்போடு போட்டிருக்கிறார் கிருஷ்ணா. ஒரே இதழில் அவரது மூன்று சிறுகதைகள் அடுத்தடுத்து பிரசுரிக்கப்படும் அளவுக்கு சாவியை கவர்ந்திருக்கிறார். ஆசிரியர் சாவியே வியந்துப்போய் தொடர் எழுதும் வாய்ப்பையும் இவருக்கு தந்திருக்கிறார். அப்போது கிருஷ்ணாவுக்கு வயது இருபத்தியொன்றோ, இருபத்திரண்டோ இருக்கலாம். வெகுஜன இதழ்களில் எழுதுபவர்களுக்கு தெரியும். தொடர் எழுதும் வாய்ப்பெல்லாம் அவ்வளவு சீக்கிரமாக கிடைத்துவிடாது.

குமுதம் இதழில் கிருஷ்ணா டாவின்ஸியின் பணி பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருந்திருக்கிறது. அரசியல், சமூகம், கலை, நகைச்சுவை என்று எல்லா திசைகளிலும் பவுண்டரி விளாசக்கூடிய பத்திரிகையாளராக இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் ரயில்வேயில் பணிபுரிந்தபடியே, பகுதிநேரமாக குமுதத்துக்கு எழுதிக் கொண்டிருந்தார். பிற்பாடு அரசு வேலையை துறந்து, முழுமூச்சாக குமுதத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

கார்கில் போரின் போது நேரடியாக களத்துக்குச் சென்று செய்தி எழுதியவர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற பத்திரிகையாளர் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படியான சாதனை மைல் கற்கள் அவருக்கு உண்டு. ‘நையாண்டி பவன்’ என்கிற தலைப்பில் குமுதத்தில், கின்ஸி என்கிற பெயரில் கிருஷ்ணா எழுதிய நகைச்சுவைப் பத்தி, இன்றைய வெகுஜன இதழ்களின் போக்குக்கு முன்னோடியாக அமைந்தது. பத்திரிகையுலகில் பணியாற்றுவதை லட்சியமாகக் கொண்டிருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு சந்தேகமில்லாமல் கிருஷ்ணா டாவின்ஸி ஒரு ஹீரோ.

அவருடனான நேரிடை சந்திப்புகள் எனக்கு இரண்டு, மூன்று முறை தான் வாய்த்திருக்கிறது. முதன்முறை நேரில் சந்தித்த பிரமிப்பில் அவர் குறித்த என்னுடைய எண்ணங்களை பாராட்டு மழையாக கொட்டியபோது, அதுகுறித்த எந்த பெருமையும் அவர் முகத்தில் தென்படக் காணோம். “குமுதம் எனக்கு தாய்ப்பால்” என்று எங்கோ, எப்போதோ இணையத்தில் எழுதி, அதை நானே மறந்துவிட்டேன். அதை நினைவுகூர்ந்து, “நல்ல
wordplay. ஆனா, பத்திரிகையில் வேலை பார்க்கிறவன் இப்படியெல்லாம் extreme statement விடக்கூடாது” என்று சொல்லி சிரித்தார்.

கிருஷ்ணா தன்னுடைய கதைகளில் கூட ‘ரிப்போர்ட்டிங்’குக்கான இலக்கணங்களை கடைபிடித்திருப்பார். கிருஷ்ணா டாவின்ஸி குமுதத்தில் தொடராக எழுதிய ‘நான்காவது எஸ்டேட்’ பல வாசகர்கள் இன்றும் நினைவுகூர்வது. டெஹல்கா டாட் காம், சூட்கேஸும் கையுமாக பங்காரு லெட்சுமணனை கேமிராவில் சிறைபிடித்து வெளியுலகத்துக்கு ஸ்கூப் செய்தியாக அம்பலப்படுத்திய நேரம் அது. அந்த சம்பவத்தை கருவாக கொண்டு எழுதப்பட்ட நான்காவது எஸ்டேட்டின் முதல் அத்தியாயம், கலைஞரின் நடு இரவு கைதுக் கொடுமையை உருவகப்படுத்தித் தொடங்கும். அயல்நாட்டுச் செய்தியையே எழுதுவதாக இருந்தாலும், கட்டுரையின் தொடக்கத்தில்  ‘உள்ளூர் டச்’ இருந்தாக வேண்டும் என்பது இதழியலின் எழுதப்படாத வரையறை. கிருஷ்ணா டாவின்ஸியின் எந்த கட்டுரையும், கதையும் வாசகர்களுக்கு அந்நியமாக என்றுமே தோன்றியதில்லை.

குமுதத்தில் இருந்து விலகியபிறகு, சினிமாக்காரர்களோடு நிறைய கதை விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார். இயக்குனராக முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறார். சில படங்களின் ‘டைட்டிலில்’ அவரது பெயரை காணமுடிந்தது.

அருமையாக கிடார் வாசிப்பார். இரவுகளில் தன்னுடைய தனித்துவக் குரலால் பாடி குடும்பத்தாரையும், நண்பர்களையும் மகிழவைப்பார் போன்ற செய்திகளெல்லாம் அவரது திடீர் மரணத்துக்குப் பிறகுதான் எல்லோருக்கும் தெரியவருகிறது. இயக்குனர் ராம் ஏற்பாடு செய்திருந்த கிருஷ்ணாவுக்கான நினைவேந்தல் கூட்டத்தில் கூடியிருந்த பல பத்திரிகையாளர்களுக்கு துரதிருஷ்டவசமாக அன்றுதான் அவரது பத்திரிகை ஆற்றலைத் தாண்டிய தனித்திறமைகள் சில முதன்முதலாக தெரிய வந்தது. கிருஷ்ணா டாவின்ஸி கடைசியாக ஆனந்த விகடனில் எழுதிய சிறுகதையின் தலைப்பே, அவர் வாழ்க்கையை கடைசி நிமிடம் வரை எவ்வளவு நம்பிக்கையோடு எதிர்கொண்டிருக்கிறார் என்பதை புரியவைக்கிறது. “காலா அருகே வாடா”. துரதிருஷ்டவசமாக இக்கதை பிரசுரமானபோது அவர் உயிரோடு இல்லை. . 1968 மே 7 அன்று பிறந்த கிருஷ்ணாடாவின்ஸி, கடந்த ஏப்ரல் 4 அன்று தன்னை இயற்கையோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

மரணத்தை மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும். மரணம் என்பது மற்றொரு வாழ்க்கையின் துவக்கம். மரணித்தவர் தன்னுடைய நினைவுகளை நம்மிடம் வாழவைத்திருக்கிறார் என்பது மாதிரியாக தத்துவங்கள் பேசி மரணித்தவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நாம் ஆறுதல் கூறலாம். ஆறு வயது குழந்தை அப்பாவை இழந்திருக்கிறாள். இச்சூழலில் ஆறுதல்களும், அஞ்சலிகளும் எவ்வளவு அபத்தமானவை என்பதே நமக்கே தெரிந்தபோதிலும், நாமும் அதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது.

“நான் என்றென்றும் இருப்பேன் – மைக்கேல் ஜாக்சனின் பாடல் வரிகளில் ஒன்று. உண்மைதான். அவரது இசை என்றும் மரணமடையாது” - ஜாக்சனின் மறைவின் போது கிருஷ்ணா டாவின்ஸி ஒரு அஞ்சலிக் கட்டுரையில் இவ்வாறாக குறிப்பிட்டிருந்தார். க்ளிஷேவாக இருந்தாலும் இதைத்தான் கிருஷ்ணாவுக்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழ் வெகுஜன பத்திரிகையுலகுக்கான கிருஷ்ணாவின் பங்களிப்பு என்றென்றும் நம் நினைவில் நிற்கும்.

(நன்றி : உயிர்மை, மே 2012)

2 மே, 2012

உலகின் முதல் தொழில்

20 - 20 என்.பி.எல். போட்டிகளில் ஆட்டம் சுவாரஸ்யமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வைசாக் கிங்ஸ் அணியினருக்கு இது மிக முக்கியமான போட்டி. முதலில் ஆடிய மதுரை கில்லி நூற்று இருபது ரன்களுக்குள் சுருண்டு விட்டதால் வைசாக் கிங்ஸ் மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்னமும் ஐந்து ஓவர்கள் கைவசம் இருக்கிறது, ஆறு விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் வைசாக் அணி இன்னமும் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும். இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும்.

பதினாறாவது ஓவரில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். அதுவரை அதிரடியாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்த வைசாக் கிங்ஸ் கேப்டன் நகுல் ஆர்யா சிக்ஸருக்கு முதல் பந்தையே தூக்க, பவுண்டரி லைனில் இருந்தவர் மிக கவனமாக எல்லைக்கோட்டை தொடாமல் அந்த கேட்சை பிடித்தார். இருப்பினும் ஐந்துவிக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் வைசாக் வென்றுவிடும் என்றே அனைவரும் கருதினார்கள். மாறாக அதே ஓவரில் அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் எல்.பி.டபிள்யூ, போல்டு, ரன் அவுட் என்று பொறுப்பில்லாமல் அவுட் ஆக பதினேழாவது ஓவரில் பதினைந்து ரன்கள் வித்தியாசத்தில் மதுரை கில்லி அணி வென்று தன் அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டது. சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவிய வைசாக் அணியினர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு எதிரணியினருக்கு கைகுலுக்கினார்கள்.

பத்திரிகையாளர்கள் வைசாக் அணியின் உரிமையாளரும், ஆசியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான அஜய் புல்லையாவை சூழ்ந்துகொண்டார்கள்.

“என்.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் அணி தான் கோப்பையை வெல்லும் என்று சொன்னீர்களே? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?”

“என் அணி கோப்பையை வெல்லப்போவது இல்லை என்று சொல்லப் போகிறேன்!”

“இருந்த அணிகளிலேயே மிக அதிக விலைக்கு அதாவது ஐநூறு கோடி ரூபாய்க்கு இந்த அணியை வாங்கியிருக்கிறீர்கள். இதர செலவுகளாக ஒரு இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்திருப்பீர்கள். பணம் வீணாகிவிட்டது என்று கவலை கொள்கிறீர்களா?”

“ம்... நான் ஒரு தொழிலதிபர். பண இழப்பு எனக்கு வருத்தத்தை தரவில்லையென்று பொய் சொல்லமாட்டேன். அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவையும், பயிற்சியாளரையும் நம்பி தோற்றுவிட்டேன். நான் தேர்ந்தெடுத்த அணியை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டிருந்தால் என் அணி வென்றிருக்கும்!”

“பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறீர்களே? மீதி இருக்கும் போட்டிகளில் இதனால் உங்கள் அணியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படாதா?”

இதற்குள்ளாக புல்லையாவின் அந்தரங்க பாதுகாவலர்களும், உதவியாளர்களும் அவரை காருக்கு அழைத்துச் சென்றுவிட பத்திரிகையாளர்களின் மற்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க இயலவில்லை. பத்திரிகையாளர்கள் கூட்டமாக வைசாக் அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவை சூழ்ந்தார்கள்.

“உங்களால் தான் வைசாக் அணி தோற்றதாக அணியின் உரிமையாளர் குற்றம் சாட்டுகிறாரே?”

நகுலின் முகம் சிவந்தது. உதடுகள் துடிதுடித்தது. இருப்பினும் ஒரு நொடியில் தன்னை சரிசெய்துகொண்டு புன்னகைத்தவாறே, “அவர் ஒரு நல்ல தொழிலதிபர். இதைத்தவிர சொல்ல வேறொன்றுமில்லை” என்றவாறே மைதானத்தை விட்டு வெளியேறினான்.


ஜய் புல்லையாவின் அந்தரங்க அலுவல் அறை அது. அவரது மகன் தேஜாவை தவிர வேறு யாருக்கும் அந்த அறைக்குள் செல்ல அனுமதியில்லை. தேஜா இருபது வயது இளமைப்புயல். பதினெட்டு வயதிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு தலைவராக பொறுப்பேற்றவன். பிறந்ததிலிருந்தே குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டுமே வாழ்ந்தவன் என்பதால் ரோஜாப்பூ நிறத்திலிருந்தான். தலை கலைந்திருந்ததை கைகளால் சரிசெய்தான். முகம் சற்று வாட்டமாக இருந்தது. கிரிக்கெட் ரசிகன் என்பதால் என்.பி.எல். போட்டிகளில் ஒரு அணியை தங்கள் குழுமம் வாங்குவது என்பது அவன் செய்திருந்த முடிவு.

“அப்பா! விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமானது. தோற்றவுடனேயே நம் அணித்தலைவரின் தலையை நீங்கள் உருட்டியது நாகரிகமானது அல்ல!” கொஞ்சம் சீற்றத்தோடே தந்தையிடம் சொன்னான்.

“வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்ள நாம் விளையாட்டு வீரர்கள் அல்ல. தொழிலதிபர்கள். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பல லட்சங்களை பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தது. விவரம் புரியாமல் வார்த்தைகளை விடமாட்டேன் தேஜா!”

“புரியவில்லை அப்பா. இந்தப் போட்டிகளில் வென்றிருந்தால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். இருப்பினும் இப்போதே கூட ஸ்பான்ஸர்கள் மூலமாக நாம் ஈட்டிய வருவாயை கணக்கெடுத்துப் பார்த்தால் நமக்கு நஷ்டம் எதுவுமில்லை. அப்படியிருக்க ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை நம் அணி தோல்விகளுக்கு பொறுப்பேற்க செய்ததில் நமக்கென்ன லாபம்?” நகுலின் தீவிர விசிறியான தேஜா தன் அபிமான வீரனுக்கு தன் தந்தையாலே ஏற்பட்ட அவமானத்தால் வருத்தத்தில் இருந்தான்.

கனிவாக தன் மகனைப் பார்த்த புல்லையா, “உலகின் முதல் தொழில் எது தேஜா?”

“விபச்சாரம்!”

“இல்லை.. ஊழல்! சாத்தான் ஆதாம் மூலமாக செய்த ஆப்பிள் ஊழல் தான் உலகின் முதல் தொழில்!”

“சரி!”

“ஊழல் என்ற வார்த்தையை சமூகம் அருவருப்பாக நோக்கினாலும் கூட தொழில் செய்பவர்கள் ஊழல் செய்யாமல் எந்த தொழிலையும் செய்யமுடியாது. உண்மையில் சொல்லப்போனால் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களைவிட பன்மடங்கு தனியார் துறைகளில் ஊழல் செய்து சம்பாதிக்க முடியும். சம்பாதிப்பது தானே நமது தொழில்?”

“புரியவில்லை அப்பா. நம் அணித்தலைவர் அவமானப்படுத்தப் பட்டதற்கும் நீங்கள் கொடுக்கும் வியாக்கியானங்களுக்கும் என்ன தொடர்பு?”

“பொறு. அதற்குதான் வருகிறேன். நம் அணியை ஐநூறு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறேன். ஏறத்தாழ இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்து விளம்பரப்படுத்தியிருக்கிறேன். நம் அணி வென்றால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் வரும். அதே நேரத்தில் நம் அணி வெல்லும் என்று தொழில்முறை சூதாட்டக்காரர்கள் கட்டியிருக்கும் பந்தயத் தொகை எவ்வளவு தெரியுமா?”

“ஐயாயிரம் கோடி ரூபாய் இருக்கலாம். இருந்ததிலேயே சிறந்த அணி நம் அணி என்பதால் இவ்வளவு பெரிய தொகை பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக பத்துக்கு எட்டு பேர் நம் அணிதான் கோப்பையை வெல்லும் என்றார்கள்”

“நீ சொல்லுவது சரி. ஆனால் நம் அணி தோற்கும் என்று பண்ணிரெண்டாயிரம் கோடிக்கு பந்தயம் கட்டப்பட்டிருப்பது உனக்குத் தெரியுமா?”

“தெரியாது அப்பா”

“ஆம் மகனே. நம் அணி தோற்கும் என்று நம் ஆட்கள் மூலமாக நான் மட்டுமே பத்தாயிரம் கோடி ரூபாய் கட்டியிருக்கிறேன்! இப்போது சொல். நம் அணி தோற்றால் யாருக்கு லாபம்”

வியப்போடு, “லாபம் இருக்கட்டும் அப்பா. நம் அணி வென்றிருந்தால் நமக்கு தானே கவுரவம்?”

“கவுரவத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு. இங்கே சம்பாதிப்பவன் தான் வெற்றி பெற்றவன். நிறைய பணம் சம்பாதித்தவனை கவுரவமும், புகழும் தானே தேடி வரும்! நம் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறப் போகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஆயிரம் கோடி அளவில் நன்கொடை தந்தாக வேண்டும். நான் முப்பது ஆண்டுகளாக பாடுபட்டு சேர்த்தப் பணத்தை தரச்சொல்கிறாயா? ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை தான் ஊழல்வாதிகளுக்கு தரமுடியும்!”

“என்ன இருந்தாலும் நகுலின் பெயர் அசிங்கப்பட்டது எனக்கு நல்லதாகப் படவில்லை. அவர் நம்முடைய நல்ல நண்பர்!”

“கவலைப்படாதே நகுலின் பெயர் பாதிக்கப்படாது. கடைசி இரு போட்டிகளில் அவன் சதம் அடிப்பான், இழந்த பெயரை மீட்டுக் கொள்வான். அதற்கும் நான் ஏற்பாடு செய்துவிட்டேன்!”

“அதற்கும் கூடவா ஏற்பாடு?”

“ம்ம்.. நகுல் நம் அணியின் தலைமை பொறுப்பேற்க நாலு கோடி பேசியிருந்தோம் இல்லையா? நமக்கு பத்தாயிரம் கோடி அளவிலான லாபத்தை அவன் தந்திருப்பதால் அவனுக்கு பேசியிருந்த தொகையை விட நூறு மடங்கு அதிகம் தருவதாக உறுதியளித்திருக்கிறேன். உனக்கு சந்தோஷம் தானே?”

“சந்தோஷம் அப்பா!” நகுல் ஏன் தன் தந்தையை நல்ல தொழிலதிபர் என்று சொன்னான் என்று புரிந்ததால் அர்த்தத்தோடு சிரித்தான் தேஜா!

(நன்றி : குமுதம்)