14 ஆகஸ்ட், 2012

கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை


உரையாடல் சுகம். உரையாடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருக்கிறது. ஒன்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ, ஆட்சேபிக்கிறோமோ.. எதுவாக இருந்தாலும் அதற்கு உரையாடல் அவசியம். உரையாடுவதற்கான மனப்போக்கு நமக்கு எப்போதும் வாய்ப்பதில்லை. அல்லது நம்மெதிரே உரையாடுவதற்கு எப்போதும் ஆள் கிடைப்பதில்லை. உரையாடல் பலருக்கும் ஒரு கட்டத்தில் சலித்து விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே உரையாடியதையே திரும்ப உரையாட வேண்டி இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது உரையாடலுக்காக செலுத்த வேண்டிய உழைப்பு அயர்ச்சியைத் தரலாம். எது எப்படியோ எல்லோருமே ஏதோ ஒரு காலக்கட்டத்தில் மற்றவர்களுடனான நம்முடைய உரையாடலை, ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்திக் கொள்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் எழுபத்தைந்து ஆண்டு காலமாகவே யாருடனேயோ, எதற்காகவோ எப்போதும் உரையாடிக் கொண்டேயிருப்பது எத்துணை பெரிய சாதனை?

கலைஞர் தன்னுடைய டீனேஜில் தன் சக மாணவர்களோடு உரையாடத் தொடங்கினார். தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அ முதல் ஃ வரை அலசினார். இத்தகைய உரையாடலுக்காகவே இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பினை தோற்றுவித்தார். அழகிரிசாமியின் அபாரப்பேச்சால் ஈர்க்கப்பட்டவர் தன் உரையாடலை கேட்போர் வசீகரிக்கும் வண்ணம் மெருகேற்றினார். தன்னுடைய அமைப்பினை மாணவர் மன்றமாக திராவிட இயக்கத்தின் சார்பு கொண்ட முதல் மாணவர் அமைப்பாக உருமாற்றினார். மன்றத்துக்காக ‘மாணவநேசன்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையை தோற்றுவித்தார். தனக்கே தனக்கான அந்தப் பத்திரிகையில் எழுத்து வாயிலாக உரையாடத் தொடங்கினார்.

பிற்பாடு அந்த கையெழுத்துப் பத்திரிகையை ‘முரசொலி’ என்கிற பெயரில், அவ்வப்போது கட்டுரைகளை எழுதி துண்டுப் பிரசுரமாக, அச்சடித்து வினியோகிக்கத் தொடங்கினார். பின்னர்முரசொலிவார இதழாக மாறி, திருவாரூரில் இருந்து வெளிவரத் தொடங்கியது. சென்னைக்கு இடம்மாறிய பின்னர் நாளிதழாக வளர்ச்சியைக் கண்டது. அன்றிலிருந்து இன்றுவரை தன் உடன்பிறப்புகளோடுமுரசொலிவாயிலாக கலைஞர் உரையாடிக் கொண்டேதானிருக்கிறார். உடன்பிறப்புகளோடு மட்டுமின்றி தன்னை எதிரிகளாக கருதுபவர்களோடும், எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களோடும், வசைபாடுபவர்களோடும், புறம் பேசுபவர்களோடும் கூட அவர் உரையாட மறுத்ததில்லை. கலைஞரே ஒருமுறை சொன்னார். “சவலைப்பிள்ளையாய் இருந்தாலும் முரசொலி என்னுடைய தலைச்சன் பிள்ளை”. மந்திரவாதியின் உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி எங்கோ வசிக்கும் கிளியிடம் இருக்கிறது என்பார்கள். கலைஞரின் இதயம் என்றும் முரசொலியாக துடிக்கிறது. பிற்பாடு முரசொலியின் கிளைகளாக குங்குமம், முத்தாரம் என்று கிளைவிட்ட இதழ்கள் ஏராளம்.

கலைஞரின் உரையாடல் பத்திரிகைகளோடு மட்டும் நின்றுக் கொண்டதில்லை. உரையாடலுக்கு கிடைக்கும் எந்த வெளியையும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. ஓவியம், நாடகம், கவிதை, இலக்கியம், சினிமா, மேடை, சட்டமன்றம், தொலைக்காட்சி என்று எது கிடைத்தாலும், அதில் மற்றவர்களுடனான தன் உரையாடலை கூர்தீட்டிக் கொண்டார். கலைஞர் பங்குகொண்ட திரைப்படங்கள், மேடைநாடகங்கள், புத்தகங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவை வெறும் பொழுதுபோக்குக்கு என்றில்லாமல், அவற்றினூடாக சமூகம் குறித்த தன் சிந்தனைகளை உரையாடலாக எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருந்திருக்கிறார்.

வெளிப்படையாக பதினான்கு வயதில் தமிழ் சமூகத்தோடு உரையாடத் தொடங்கியவர், தன் வாழ்நாளோடே இணையாய் வளர்ந்துவரும் ஊடகத்தின் வடிவங்கள் அத்தனையையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. உதாரணத்துக்கு, தொண்ணூறுகளின் மத்தியில் ‘பேஜர்’ எனும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆர்வமாக அதை வாங்கினார். கலைஞர் வாங்கிய பேஜரில் தமிழில் செய்திகள் வரும் (இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட மிகச்சிலர்தான் தமிழ்பேஜர் பயன்படுத்தினார்கள் என்று நினைவு). கணினியில் தமிழ் உள்ளீடு குறித்து, ஆர்வமாக கேட்டுத் தெரிந்துக்கொள்வார். கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரிகிறது என்கிற காரணத்துக்காகவே நிறைய இளைஞர்களை தன்னுடைய நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்.

இன்றும் தாளில் எழுதுவதுதான் அவருடைய விருப்பமென்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்லும் போக்கு அவரிடம் இல்லவே இல்லை. சமீபகாலமாக இணையத்தளங்களின் வளர்ச்சி, அவை சமூக வலைப்பின்னலாக உருவெடுத்து வருவது ஆகியவற்றையும் நண்பர்கள் மூலமாக அறிந்துக் கொண்டிருக்கிறார். வலைத்தளங்களில் எழுதப்படும் முக்கியமான கட்டுரைகளை அவர் பிரிண்ட் எடுத்து வாசிப்பதாக ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் கலைஞர் டி.வி. vs சன் டி.வி. மோதலையொட்டி, நாம் எழுதியிருந்த கட்டுரை ஒன்றினை (கலைஞர் தொ.கா.வில் பருத்திவீரன் திரைப்படம் திரையிடப்பட்டபோது) கலைஞர் வாசித்ததாக, அத்தொலைக்காட்சியில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் மூலமாக கேள்விப்பட்டிருந்தோம். சமீபத்தில் கூட ‘டெசோ’ குறித்து நாம் எழுதியிருந்த கட்டுரையை அச்செடுத்து, தன்னுடைய கட்சி சகாக்களிடம் கொடுத்து உரையாடியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் தன்னையும், கட்சியையும் பற்றி நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எழுதப்படுவதையெல்லாம் நண்பர்கள் மூலம் அறிந்து வாசிக்கிறார்.

இப்போது உரையாடலுக்கான இந்த களத்தையும் அறிந்துக்கொண்டார் கலைஞர். எனவேதான் ட்விட்டர் இணையத்தளத்தில் தனது உரையாடலை தொடரும் வண்ணம் தன்னுடைய கணக்கினை தொடங்கியிருக்கிறார். தொடங்கிய முதல்நாளே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலைஞரின் கணக்கை பின்தொடரத் தொடங்கியிருக்கிறார்கள். கலைஞரின் ட்விட்டர் கணக்கு : http://twitter.com/kalaignar89. கலைஞர் எதைத் தொட்டாலும் பொன் தான்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய கலைஞரின் உரையாடல், அவரது எண்பத்தி ஒன்பது வயதில் இணையத்தில் ட்விட்டர் கணக்கு வரை தொடர்கிறது. உரையாடலில் இவரளவுக்கு காதல் கொண்ட இன்னொரு மனிதரை நம்மால் காணமுடியுமா என்பதே சந்தேகம்.

7 ஆகஸ்ட், 2012

மூன்று குறுநாடகங்கள்


சமீபத்தில் ஒரே மேடையில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட மூன்று குறுநாடகங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.  எழுத்தாளர் ஆனந்த்ராகவின் மடிநெருப்பு, அந்தரங்கம், இரண்டாவது மரணம் ஆகிய சிறுகதைகளை நாடகவடிவில் சென்னையில் மேடையேறின. ஆனந்த்ராகவின் சில நாடகங்களை ஏற்கனவே கண்டிருக்கிறோம். ‘கிரிக்கெட் பெட்டிங்’ குறித்த அவரது ஒரு நாடகம் அரங்க அமைப்பில் ஓர் அதிசயம். நாடக மேடையிலேயே புத்திசாலித்தனமாக கிரிக்கெட் மைதானத்தை காட்சிப்படுத்தி அசத்தியிருந்தார்.

மடிநெருப்பு
சமகால நிலஅபகரிப்புப் பிரச்சினையை கையாண்டிருக்கும் கதை. அரசியல் செல்வாக்குள்ள ரியல் எஸ்டேட் குண்டர்கள் பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். வயதான மூன்றே மூன்று நண்பர்கள் மட்டும் தங்கள் இடங்களை அவர்களுக்கு தர மறுக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது வெறும் நிலம் மட்டுமல்ல. உழைப்பும், உணர்வும் கலந்து பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. கடைசிக்காலத்தை தங்கள் சொந்த வீட்டில் கழிக்க விரும்பும் அப்பாவி நடுத்தர முதியோர். அவர்களில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். மீதியிருக்கும் இருவர் மனரீதியாக அடையும் உளைச்சல்கள்தான் கதை. காத்தாடி ராமமூர்த்தி ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்து இயக்கியிருக்கிறார்.

அந்தரங்கம்
இரண்டே இரண்டு பாத்திரங்கள் தொடர்ச்சியாக பத்து நிமிடங்களுக்கு மேல் பேசி அலுப்பூட்டும் நாடகம். விகடனிலோ, குமுதத்திலோ இதை சிறுகதையாக வாசித்திருப்பதாக நினைவு. சிறுகதையாக கவர்ந்த கதை ஏனோ நாடகமாக்கலில் அவ்வளவாக பிடிக்கவில்லை. யாருக்கோ அனுப்பவேண்டிய மெயிலை தன்னுடைய கணவனுக்கு அனுப்பி விடுகிறாள் இளம் மனைவி. அந்த மெயிலை தன் கண்முன்னே அழிக்குமாறு கணவனை வேண்டுகிறாள். கணவன் மனைவிக்குள் வெளிப்படைத்தன்மை வேண்டாமா என்று அவன் கேள்வி எழுப்புகிறான். மனைவிகளுக்கான ‘ப்ரைவஸி’ உரிமையை அவள் போதிக்கிறாள். இப்படியாக நீளும் உரையாடலில் இறுதியில் கணவன், மனைவி இருவருமே பெருந்தன்மை காட்டுவதாக நாடகம் முடிகிறது. ஆனால் அது போலி பெருந்தன்மை என்பதை க்ளைமேக்ஸில், அந்த தம்பதியினருக்குத் தெரியாமலேயே ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். “என் அம்மாவோட பேங்க் அக்கவுண்டை கூட அப்பாதான் ஆப்பரேட் பண்ணாரு. அவரே கையெழுத்து போட்டு காசு எடுப்பாரு” போன்ற வசனங்களில் தலைமுறை மாற்றங்களை போகிறபோக்கில் கூர்மையாக பதிந்திருக்கிறார்கள்.

இரண்டாவது மரணம்
இந்த நாடகம் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் அப்படியே இருக்கிறது. இறுதிக் காட்சியில் விழியோரம் நீர் கோர்க்கவில்லை என்றால், நீங்கள் இடிஅமீனாகதான் இருக்க வேண்டும். அப்பா ஐ.சி.யூ.வில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார். அடுத்த ஒரு மாதத்தில் மகன் எதிர்கொள்ளும் மனப்போராட்டம்தான் கதை. அப்பாவுக்கு ப்ரெய்ன் டெட். “வெறுமனே அவரது இதயம் மட்டும் துடிச்சிக்கிட்டிருக்கு. அதுவும் மெஷினோட உதவியாலே. இப்படியே வெச்சிக்கிட்டிருந்தா நிறைய செலவாகும். நிறுத்திடலாமா?” என்கிறார் டாக்டர். முப்பத்தொன்பது ஆண்டுகள் வளர்த்தெடுத்த அப்பாவை அப்படியே விட்டுவிட மகனுக்கு சம்மதமில்லை. ஆஸ்பிட்டலே கதியென்று கிடக்கும் மகனால் தன் குடும்ப, அலுவலகக் கடமைகளை சரியாக செய்ய முடியவில்லை. இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள், கடைசியாக அவனெடுக்கும் முடிவு என்று உருக்கமான, உலுக்கிப் போடும் நாடகம். பிரதானப் பாத்திரத்தில் நடித்திருக்கும் க்ரிஷ் என்கிற நடிகரின் திறமை நாடகத்தை தாங்கிப் பிடிக்கிறது. பேஷண்டின் பல்ஸ் காட்டும் மானிட்டரை நாடகத்துக்கு பேக்கிரவுண்டாக யோசித்தது அபாரம்.


நில அபகரிப்பு, கணவன் மனைவிக்கு இடையேயான எல்லை, அப்பா செண்டிமெண்ட் என்று மூன்று வெவ்வேறு பிரச்னைகளை எடுத்துக் கொண்டாலும் மூன்றையும் இணைக்கும் பிணைப்பாக, நடுத்தர மனங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்போக்கினை விசாரிக்கிறார் ஆனந்த்ராகவ். நாட்டாமையாக மாறி, இதற்கு தீர்வாக எதையும் சொல்லாவிட்டாலும் இவையெல்லாம் ஏற்படும் சூழல்களை சுட்டிக் காட்டுகிறார்.

சினிமா தரும் அனுபவத்தை நாடகம் தராது என்கிறார்கள். எனக்கென்னவோ நாடகங்கள் தரும் காட்சியனுபவம் சினிமாவில் கிடைப்பதில்லை. நமக்கு முன்பாக தோன்றுபவர்கள் ரத்தமும், சதையுமானவர்கள் என்கிற நம்பிக்கை மேடையில்தான் கிடைக்கிறது. திரையில் கிடைப்பதில்லை. வெண்திரையில் கிடைக்கும் லொக்கேஷன், கிராபிக்ஸ் மாதிரியான விஷயங்கள் நாடகங்களில் கிடைக்காதுதான். ஆனந்த்ராகவ் போன்றவர்கள் இந்த குறையை அரங்க அமைப்பினை நவீனப்படுத்தி, ஒலி-ஒளி துல்லியத்தைக் கூட்டி சரிசெய்கிறார்கள்.

ஆனால் சென்னையில் நாடகம் பார்ப்பது என்பது காஸ்ட்லியான பொழுதுபோக்காக மாறிவருகிறது. ஒரு தலைக்கு இருநூற்றி ஐம்பது ரூபாய் மாதிரி டிக்கெட் கட்டணம். ஒரு மினிமம் மெம்பர் குடும்பம் டிக்கெட்டுக்காக மட்டுமே ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும். குறைவான ரசிகர்களே வருகிறார்கள். நாடகச் செலவை, அரங்க வாடகையை ஈடுகட்ட டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது என்பது நாடகம் போடுபவர்கள் சொல்லும் காரணம். இருநூறு ரூபாய் கொடுத்து நாடகம் பார்ப்பதற்கு பதிலாக, ஐம்பது ரூபாய் கொடுத்து சினிமா பார்க்கலாம் என்பது ரசிகர்கள் சொல்லும் காரணம். கோழி-முட்டை கதைதான்.

ஒருமுறை மேடைநாடகத்தை ஒருவன் பார்த்துவிட்டால், திரும்பத் திரும்ப நிறைய நாடகங்களை பார்க்க விரும்புவான். துரதிருஷ்டவசமாக எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளிலும் பிறந்த ஒரு தலைமுறைக்கு நாடகம் என்றாலே இன்று டிவியில் காணக்கிடைக்கும் மெகாசீரியலாகதான் தெரிகிறது. நாடகம் போடுபவர்கள்தான் இந்தப் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். தெருக்கூத்து மாதிரியான நிலைமை மேடை நாடகங்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

4 ஆகஸ்ட், 2012

டெசோ – என்ன பேசப்போகிறது?


ஆகஸ்ட் 12 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ‘டெசோ’ மாநாட்டில் கீழ்க்கண்ட சில விஷயங்கள் விலாவரியாக பேசப்படவிருக்கின்றன என்று தெரிகிறது. தமிழகம், ஈழம் தவிர்த்து குறிப்பிடத்தக்க இந்தியத் தலைவர்களும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்று பேச இருக்கிறார்கள்.

ஐ.நா. மனித உரிமை அமைப்பு, இலங்கை அரசு மீது குற்றம் சாட்டி சுட்டிக் காட்டியிருக்கும் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவராமல் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மீதான சிங்கள அரசின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இப்படியான சூழலில் போரால் நிலைகுலைந்துப் போயிருக்கும் ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச மறுவாழ்வுத் திட்டங்கள் வெறும் கண்துடைப்பாகவே முடியும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேற்பார்வையில் இலங்கையில் சுயநிர்ணய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினை தெற்காசிய மனித உரிமைப் பிரச்சினையாக பாவிக்கப்பட வேண்டும்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே அவர்களுக்கு இந்தியாவில் நிம்மதியான வாழ்க்கைக்கான உறுதியை ஏற்படுத்த முடியும்.

பாரம்பரியத் தமிழ் பெருமை கொண்ட மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இடங்கள் ஈழத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் கலாச்சாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது அவசியம். தம் இனத்துக்கான பிரத்யேக அடையாளம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை இழந்து எந்த ஒரு இனமும் உலகில் நீடிக்க முடியாது. தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் பாதுகாக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. மாறாக அவற்றை அழிக்கும் பணியிலேயே சிங்கள அரசு மும்முரமாக இருந்து வருகிறது.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை சிறைகளில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். முறையான சட்ட விசாரணையின்றி சிறையில் வாடுபவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கும் பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். கல்விநிலையங்கள் பழுதின்றி செயல்படுவது தமிழ் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய அவசியம்.

போர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கல்வி, மருத்துவ உதவிகளை வழங்கிட பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் தாமாக முன்வந்திருக்கின்றன. தமிழ்ப் பகுதிகளில் இவ்வசதிகளை மேம்படுத்த இவர்களை அரசு அனுமதிக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக போரால் மனநலரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், உற்றார் உறவினரை இழந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான மன-உடல்நல சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்ய வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. ஒத்த கருத்துடைய சகநாடுகளுடன் இணைந்து, இதுதொடர்பான பொருளாதார அழுத்தங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் இலங்கை அரசுக்கு ஏற்படுத்த வேண்டும். தம் நிலங்களை தமிழர் திரும்பப் பெறவும், இழந்த பழைய வாழ்வை மீட்கவும் உறுதி செய்யும் விதமாக இந்தியா பல்வேறு நாடுகளோடு இணைந்து ஒரு குழுவினை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மறுவாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற அதேவேளையில், இந்திய தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையின் அட்டூழியத்தால் சந்திக்க நேரிடும் தொடர் உயிரிழப்பு, பொருட்சேதம் ஆகியவற்றையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக இந்தியக் கடற்படை தனுஷ்கோடியிலோ அல்லது மண்டபம் முகாமிலோ நிலைகொண்டு கண்காணிக்க வேண்டும்.

போரால் நாடு, வீடு இழந்து உலகெங்கும் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் தாய்மண்ணுக்கு சுலபமாக வந்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

உடனடியாக பேசப்பட வேண்டிய பிரச்சினைகளாக இவற்றை ‘டெசோ’ அமைப்பினர் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இப்பிரச்சினைகளைத் தீர்க்க டெசோ எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும், குறிப்பாக இந்திய அரசை நெருக்க என்ன வழிவகை வைத்திருக்கிறது என்பதெல்லாம் மாநாடு நடந்த பின்னர்தான் தெரிய வரும்.

ஈழம் என்றாலே வழக்கமாக பாடப்படும் ‘வாழ்க, வீழ்க’ கோஷங்களின்றி, அங்கிருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளின் அடிப்படையில் அறிவார்ந்த வகையில் டெசோ செயல்படுவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் இவையெல்லாம் வெறும் பேச்சுகளாக இல்லாமல், செயல்பாடுகளுக்கு அடிகோலினால் மட்டுமே ‘டெசோ’ வெற்றியடையும்.

டெசோ இணையத்தளம் : http://teso.org.in

3 ஆகஸ்ட், 2012

மதுபானக்கடை

இதிகாசக் காலத்திலிருந்தே பாரதத்தில் ஒழுக்கத்துக்குப் பேர் போனவர்கள் ஸ்ரீராமரும், அவரது சீடர் ஆஞ்சநேயரும். இருவரும் ஒரு மதுபானக்கடையில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். இராமருக்கு சைட் டிஷ்ஷாக மூளைக்கறி. ஆஞ்சநேயருக்கு மிளகாய் தூக்கலாகப் போட்ட ஆம்லெட். பார் பையனிடம், “ஒரு கட்டிங் கடனா கொடேன். நாளைக்கு இன்னொரு கட்டிங் சேர்த்து போட்டு கொடுக்கறேன்” என்று டீலிங் பேசுகிறார். பார் பையன் மறுத்துச் சென்றுவிட ஆஞ்சநேயர், இராமரிடம் கூறுகிறார். “அவங்க சமூகத்துலே வட்டி வாங்குறது தப்பு”

நீண்டகாலம் கழித்து தமிழ் சினிமாவில் ஆண்மையான இயக்குனர் ஒருவரை பழமையான ஸ்ரீநிவாசா திரையரங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட வெண்திரை பிரசவித்துக் கொண்டிருந்த அதிசயத்தை நேரில் காணும் சாட்சிகளானோம்.

“இந்தத் திரைப்படத்தில் கதை என்று ஏதேனும் இருப்பதாக நீங்கள் கருதினால், அது உங்களுடைய கற்பனை” என்று ஸ்லைட் போட்டுதான் படத்தையே தொடங்குகிறார் இயக்குனர் கமலக்கண்ணன். படத்தில் கதை மட்டுமல்ல, கதாநாயகனோ, நாயகியோ கூட இல்லை. எந்த அம்சங்கள் எல்லாம் சினிமா என்கிற கற்பிதம் இருக்கிறதோ, அந்த அம்சங்கள் எதுவும் மருந்துக்குக் கூட இலை. இன்னும் சொல்லப் போனால் இதை திரைப்படம் என்று வகைப்படுத்தியதே கூட இயக்குனரின் கற்பனைதான். மதுபானக்கடை என்கிற களத்தின் ஒரு நாள் ‘டயரி’ தான் ஒட்டுமொத்த ஒன்றரை மணிநேரப் படமுமே.

நான்கைந்து முக்கியமான பாத்திரங்கள். பாத்திரங்களின் பின்னணி அறிமுகம். காதல், பாசம், நட்பு, அன்பு, வன்மம் என்று நவரச கலவையான உணர்வுகளை கலந்த காட்சிகள். ஏதேனும் இரண்டு மூன்று பாத்திரங்களுக்கு இடையேயான பாசமோ, காதலோ, முரணோ அல்லது விரோதமோ. நாலு சண்டை காட்சிகள். ஐந்து, ஆறு பாடல் காட்சிகள். இடைவேளைக்கு முன்பாக ஒரு பிரதான சிக்கல் முடிச்சு. பிற்பாடு அந்த சிக்கலை வளர்த்தோ, அல்லது படிப்படியாக அவிழ்த்தோ இறுதியில் சுபம் அல்லது அசுபமான க்ளைமேக்ஸ்... இவ்வாறாகதான் சினிமா நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. மதுபானக்கடை திரைப்படக் குழுவினர் ஒரு சினிமாவைக்கூட பார்த்ததில்லை போலிருக்கிறது. இயக்குனர் ஒருவேளை மொடாக்குடியராக இருக்கலாம். தான் கண்ட, கேட்ட, அனுபவித்த விஷயங்களை சினிமாவாக்க முயற்சித்திருக்கிறார். இதன் மூலமாக தமிழ் சினிமாவில் புதிய genre ஒன்றினை தோற்றுவிக்கும் பெருமைக்குள்ளாகுகிறார்.

கிட்டத்தட்ட ஒரே செட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆரம்பக் காட்சிகளில் அடிக்கடி ‘ரிபீட்’ காட்சிகள் தோன்றுவதைப் போல ஒரு சலிப்பு ஏற்படுவதால், உடனடியாக படத்தில் ஒன்றமுடிவதில்லை என்பதுதான் ஒரே குறை. போகப்போக பழகிவிடுகிறது. படம் தொடங்கியதிலிருந்து ஏராளமான பாத்திரங்கள். ஒரு காதலன். ஒரு காதலி. டாஸ்மாக் ஊழியர். பார் உரிமையாளர். பாரில் பணிபுரியும் தொழிலாளர்கள். பாருக்கு வரும் நுகர்வோர் அவர்கள் ஒவ்வொருவரும் யூனிக் கூலித் தொழிலாளர்கள், பாடகர், உரிமைகளை தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர், ஆலைத் தொழிலாளர்கள், சாதிசங்கப் பிரமுகர், இத்யாதி.. இத்யாதி.. திரையில் காட்சியாக விரியும் இப்பாத்திரங்களுடைய ஒருநாள் வாழ்க்கையின் சில மணித்துளிகளை மட்டும் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்துகிறார் இயக்குனர். எவருடைய பின்னணிக் கதையையும் நேரடியாக கேமிராவின் பார்வையில் சொல்லாமல், அவற்றை ரசிகனே தன் கற்பனையில் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரத்தை மதுபானக்கடை வழங்குகிறது. காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனும் புத்திசாலி என்று நம்பும் தமிழின் முதல் இயக்குனராக கமலக்கண்ணனை பார்க்க முடிகிறது.

இந்திய-தமிழ் சினிமாவுக்கு பாடல் காட்சிகள் தேவையா என்கிற பட்டிமன்றத்துக்கு வயது நூறு. இப்படத்தில் பாடல் காட்சிகள் யாவுமே இடைச்செருகலாக இல்லாமல் திரைக்கதையினூடே காட்சிகளாய் பயணிப்பதால் அந்தப் பட்டிமன்றத்தின் விவாதமே இப்படத்தைப் பொறுத்தவரை பொருளற்றதாகிறது. பாடல்கள் தொடங்கும்போது ஸ்டெடியாக இருக்கும் ஆடியன்ஸ், ஒவ்வொரு பாடல் முடியும்போது ‘கேர்’ ஆகுவதைப்போல உணர்ந்தே எடுத்திருக்கிறார்கள். வாழ்வில் ஒரு முறையாவது டாஸ்மாக் பாரில் குடித்தவர்கள் படம் பார்க்கும்போது இந்த உணர்வினை தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு பாடல் காட்சியில் மூன்று திருநங்கைகள் நுழைந்ததுமே, அவர்கள் சரக்கு போட்டுவிட்டு குமுக்காக ஒரு குத்துப் போடுவார்கள் என்று வழக்கமான சினிமா பார்வையில் எதிர்ப்பார்க்கிறோம். நஹி. இதுமாதிரி படம் முழுக்கவே நாம் எதிர்ப்பார்க்கும் எல்லாமே நஹி என்றாலும், படம் முடிந்ததும் மனசு முழுக்க பல்வேறு உணர்வுகளால் நிறைகிறது.

குடியின்றி அமையாது உலகு என்றுகூறி ‘குடி நல்லது’ என்று பேசவில்லை. அதேநேரம் குடிக்கலாச்சாரத்தால் சமூகம் எப்படி சீரழிகிறது பாருங்கள். குடும்பம் எப்படி குட்டிச்சுவராகிறது பாருங்கள் என்று கழிவிரக்கம் கோரி, குடிவெறிக்கு எதிரான பிரச்சாரமுமில்லை. நல்லது, கெட்டது என்கிற விவாதத்துக்குள்ளேயே நுழையவில்லை. எட்ட நின்று, ஒரு பீர் அருந்தியபடியே இன்றைய தமிழகத்தின் தவிர்க்க முடியாத சங்கதியான மதுபானக்கடையை, லேசான போதையில் வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார் இயக்குனர். “நாம தள்ளாடினாதான் கவர்மெண்டு ஸ்டெடியா இருக்கும். நாம ஸ்டெடி ஆயிட்டோமுன்னா கவர்மெண்டு தள்ளாடிடும்” நிஜத்தை பிரதிபலிக்கும் இந்த ஒரு வசனம் போதாதா?

பரபரப்பான க்ளைமேக்ஸும் படத்தில் இல்லை. ஒரு நாளில் அதிகபட்சமாக என்ன நடக்குமோ, அதுதான் படத்தில் ஒன்றரை மணி நேரமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. எதையுமே மிகைப்படுத்த இயக்குனர் விரும்பவில்லை. அவர் நினைத்திருந்தால் ஒரு ஃபாரின் டூயட் எடுத்திருக்க முடியும். குறைந்தபட்சம் ஆக்ரோஷமான, ரத்தம் தெறிக்கும் மூன்று சண்டைக்காட்சிகளை அமைத்திருக்க முடியும். கண்கள் சிவக்க யாரையாவது பஞ்ச் டயலாக் பேச வைத்திருக்க முடியும். டூப்ளிகேட் சரக்கு சாப்பிட்டு, அந்த பாரில் குடித்தவர்கள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என்று கதறக் கதற இறுதிக் காட்சியில் சீரியஸ் டிராமா ஆடியிருக்க முடியும். இது எதையுமே செய்யாமல் ‘போங்கடா போக்கத்தவனுங்களா’ என்றுகூறி, இந்தப் படத்தைப் பார்த்தாப் பாரு, பார்க்காட்டி போ என்று அதுப்பு காட்டியிருக்கிறார். அடுத்து தனக்கு கதை சொல்லச் சொல்லி விஜய்யோ, அஜித்தோ, சூர்யாவோ அழைக்க வேண்டும் என்கிற அக்கறை இயக்குனருக்கே இல்லாதபோது, நமக்கென்ன வந்தது?

படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் மிகக்குறைவு. நாயகி மாதிரி தோன்றும் காதலி சினிமாத்தனமின்றி தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரமொன்றின் கல்லூரி யுவதியாக அச்சு அசலாகத் தெரிகிறார். எடுப்பான மார்புகள், ஆழமான தொப்புள், ஆப்பிள்நிற மேனி, செர்ரி சிகப்பு லிப்ஸ்டிக் இதெல்லாம் மிஸ்ஸிங். எனவேதான் லிப்-டூ-லிப் கிஸ்ஸிங் இருந்தும், நமக்கு வழக்கமாக சினிமா பார்க்கும்போது ஏற்படும் காமவெறி ஏதும் ஏற்படுவதில்லை. இன்னொரு பெண் பாரில் துப்புரவுப்பணி செய்யும் மூதாட்டி. இன்னும் இரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் கணவரோடு வந்து லைட்டாக ஒரு ‘கட்டிங்’ விட்டுச் செல்லும் குடிமகள்கள். மதுபானக்கடை முழுக்க முழுக்க சேவல் பண்ணை.

மதுசபையிலும் சாதி பார்க்கும் குடிமகனிடம், சாக்கடை அள்ளும் தொழிலாளி பேசும் வசனங்கள் சாட்டையடி. “சாராயம் எங்க குலசாமி. எங்க சாமியை தொலைக்க வெச்சுட்டீங்களேய்யா. நீங்கள்லாம் சந்தோஷத்துக்கும், துக்கத்துக்கும் குடிக்கறீங்க. நாங்க வேலை பார்க்கவும், அதோட வலிக்கும் குடிக்கிறோம்” அவரது ஆதங்கத்தின் நியாயத்தை ‘மார்பியஸ்’ அருந்தும் நம்மால் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் துல்லியமாக புரிந்துகொள்ளவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.

ஒருவேளை சினிமாவாக மதுபானக்கடை தோல்வி அடையலாம். ஆனாலும் கலைப்படைப்பாக மாபெரும் வெற்றியை எட்டியிருக்கிறது.

27 ஜூலை, 2012

ஒலிம்பிக்ஸ் 2012


தண்ணீராகச் செலவிட்டு விட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
செலவு எவ்வளவு?

லண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்குக்கு தோராயமாக எவ்வளவு செலவாகும் என்று நினைக்கிறீர்கள்..ஆயிரம் கோடி? ஐயாயிரம் கோடி? ஸாரி, நீங்கள் ரொம்ப கஞ்சூஸ். ஏனெனில் செலவாகும் தொகை அப்படி.மெரிக்க டாலரில் 14.5 பில்லியன் அளவிற்குச் செலவாகும் என்கிறது எகானாமிஸ்ட் பத்திரிகை. அதாவது இந்திய ரூபாயில் 800,00,00,00,000. பூஜ்ஜியங்களை எண்ணி, ரொம்பச் சிரமப்படாதீர்கள். ஜஸ்ட் எண்பதாயிரம் கோடி ரூபாய் மட்டும்தான். இன்னும் சிலர் 19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அவை மேலும் சில ஆயிரம் கோடிகள்.

என்ன லாபம்?

பல கோடி ரூபாய் பணத்தைப் போட்டு ஒலிம்பிக் நடத்துவதால் இங்கிலாந்திற்கு என்ன லாபம்? ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சியில் வீழ்ந்துக் கொண்டிருக்கும் தம் நாடு, இதனால் மீண்டும் கம்பீரமாக தலைநிமிர வாய்ப்பிருக்கிறது என்று இங்கிலாந்து கருதுகிறது. லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் டிக்கெட் விற்பனை, தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமை, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) போன்றவை மூலம் நேரடியாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும்.

மறைமுகமான பல லாபங்களும் உண்டு. உதாரணத்துக்கு கிழக்கு லண்டனின் ஸ்ட்ராபோர்ட் பகுதி அவ்வளவாக வளர்ச்சியடையாத பகுதி. ஒலிம்பிக் போட்டிகளை சாக்காக வைத்து, இப்பகுதியை நவீனமாக கட்டமைத்திருக்கிறது லண்டன். இப்பகுதியில் அடுத்த முப்பதாண்டுகளில் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளை கடந்த ஏழே ஆண்டுகளில் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இப்போது நேரடியாக கோடிகள் அனாயசமாக புழங்குவது கட்டுமானத்துறையில்தான். மைதானங்கள் கட்டுவது, சாலை ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது என்று ஜரூராக வேலை நடந்து முடிந்திருக்கிறது. ஒலிம்பிக்குக்கு உருவாக்கிய கட்டமைப்பு நகருக்கு எதிர்காலத்தில் ஏராளமான அனுகூலங்களை ஏற்படுத்தித் தரும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இங்கிலாந்தில் உருவெடுத்திருக்கும் நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது. கட்டுமானத்துறை மட்டுமன்றி போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளிலும் வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறது. 2009 பொருளாதார மந்தத்துக்குப் பிறகு, இப்போதுதான் இங்கிலாந்து சுறுசுறுப்பு பெறுகிறது என்று சொன்னால் அது மிகையான கூற்று அல்ல.

லண்டன் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருப்பவர் செபஸ்டியன் கோ. ஒலிம்பிக்கில் இவர் இரண்டு முறை 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர். “உத்தேசமாக நாங்கள் ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம். இவர்களில் பன்னிரெண்டு சதவிகிதம் பேர் வரை முன்பு வேலையில்லாமல் வாடிக் கொண்டிருந்தவர்கள்” என்கிறார் செபஸ்டியன்.

இம்மாதிரி லாபங்களை பட்டியலிட்டுப் பேசுவது என்பது நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி. ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட இதே அளவு தொகை செலவிடப்பட்டது. ஒலிம்பிக்கின் தாயகம் என்பதால் கவுரவத்துக்காகவாவது மிகப்பிம்மாண்டமான ஏற்பாடுகளை செய்தது க்ரீஸ் அரசு. துரதிருஷ்டவசமாக ஒலிம்பிக் நடத்தியதாலேயே, இப்போது அந்த அரசாங்கத்தின் பொருளாதாரம் வயிற்றுக்கும், வாய்க்கும் போதாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஒலிம்பிக்கால் ஏற்பட்ட பலத்த நஷ்டத்தை தாங்கமுடியாமல் பரிதாபகரமான நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது க்ரீஸ். 1976ஆம் ஆண்டு கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடத்தப்பட்ட ஒலிம்பிக்தான் பொருளாதாரரீதியாக படுதோல்வி அடைந்த ஒலிம்பிக். அப்போது செலவிடப்பட்ட தொகைக்கு, முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போதும் வட்டி கட்டி மாளவில்லயாம் மாண்ட்ரீலுக்கு. இம்மாதிரி லண்டனின் வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய வரலாறும் ஒலிம்பிக்குக்கு உண்டு.

போட்டிகளை நடத்துவதற்கு பெரும் பணம் செலவிடப்பட வேண்டும். ஒலிம்பிக் என்பதால் தரத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள முடியாது. போட்டி நடக்கும் இடங்களை கட்டுவதிலும், அதைச்சுற்றிய போக்குவரத்துக் கட்டமைப்புகளுக்கும் முதல்தர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு செலவு செய்து போட்டிகளை நடத்தும் நகரத்துக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டால் அதைப்பற்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கவலைப்பட்டதாக சரித்திரமே இல்லை. இங்கிலாந்து அரசாங்கம் யாரும் ஏற்பாடுகளில் குறை சொல்லிவிடக்கூடாது என்பதற்காக சுகாதரம், கல்வி மாதிரியான முக்கியமான துறை முதலீடுகளை ஒலிம்பிக்குக்கு திருப்பிவிட்டதாக ஏற்கனவே பிரிட்டன்வாசிகள் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பணமாக செலவிடப்பட்ட கோடிகளை விடுங்கள். அரசுப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோரின் பொன்னான நேரம் இதற்காக செலவிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து, தங்கும் வசதி என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு செலவு செய்து மாளவில்லை லண்டனுக்கு. சர்வதேச ஊடகவியலாளர்கள் மனம் கோணாமல் ‘எல்லா’ வசதிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் தண்ணியாக செலவிட்டு விட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எனினும் கடந்தகால ஒலிம்பிக் செயல்பாடுகளை எடைபோடும்போது லண்டன் ஒலிம்பிக் பொருளாதாரரீதியாகவும் பெரும் வெற்றி பெறும் என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். 84 லாஸ் ஏஞ்சல்ஸ், 88 சியோல் ஒலிம்பிக் போட்டிகளில் கிடைத்த அபரிதமான லாபம் மாதிரி ஒரு மேஜிக்கை 2012ல் லண்டனும் நிகழ்த்தும் என்கிறார்கள்.

லாப, நஷ்டக் கணக்கெல்லாம் ஆகஸ்ட் 12க்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது போட்டிகள் தொடங்கப்போகிறது. அந்த கோலாகலத்துக்கு முதலில் தயாராவோம்.


கொஞ்சம் மலரும் நினைவுகள்...

ஒலிம்பிக் கொடி


நவீன ஒலிம்பிக்கை உருவாக்கியவரான கூபர்டின் 1914ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கென்று பிரத்யேகக் கொடியை உருவாக்கினார். வெள்ளை பின்னணியில் நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிகப்பு நிறங்களில் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிய ஐந்து வட்டங்கள். இந்த ஐந்து வட்டங்களும் ஐந்து கண்டங்களை குறிப்பிடுகின்றன. 1920ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போதுதான் முதன்முறையாக இந்த கொடி ஏற்றப்பட்டது.



தொடக்க விழா

ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டுப் போட்டிகளின் சுவாரஸ்யத்தை தவிர்த்து அனைவரும் எதிர்ப்பார்ப்பது வண்ணமயமான கோலாகலமான தொடக்கவிழாவைதான். 1908ல் இதே லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போதுதான் இந்த சம்பிரதாயம் உருவாக்கப்பட்டது.


முதல் சாம்பியன்
 1896ல் மீண்டும் ஒலிம்பிக் நவீனமுறையில் தொடங்கப்பட்டபோது, முதன்முதலாக சாம்பியன் ஆனவர் என்கிற பெருமை அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரரான ஜேம்ஸ் பி.கனோலிக்கு கிடைத்தது.


நிறுத்தப்பட்ட ஒலிம்பிக்

நவீன ஒலிம்பிக் 1896ல் இருந்து தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காரணமாக மூன்று முறை நடத்தப்படவில்லை. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவில்லை.


ஒலிம்பிக் டென்னிஸ்

1924க்குப் பிறகு ஏனோ தெரியவில்லை, ஒலிம்பிக்கில் டென்னிஸ் சேர்க்கப்படவேயில்லை. பிற்பாடு 1988 ஒலிம்பிக்கில் இருந்துதான் மீண்டும் டென்னிஸ் போட்டிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டது.


ஜிம்னாஸ்டிக்ஸ்

ஜிம்னாஸ்டிக்ஸ் என்கிற சொல் கிரேக்க மொழியின் ‘ஜிம்னோஸ்’ என்கிற வார்த்தையில் இருந்து பிறந்தது. இச்சொல்லுக்கு ‘நிர்வாணம்’ என்று பொருள். ஜிம்னாஸ்ஸியம் என்பது உடைகளற்று விளையாடும் விளையாட்டு. புராதன ஒலிம்பிக்கில் இவ்வாறான முறையில்தான் போட்டிகள் நடந்திருக்கிறது.


சாதனை லண்டன்

லண்டனில் ஒலிம்பிக் நடைபெறுவது மூன்றாவது தடவை. ஏற்கனவே 1908, 1948 ஆகிய ஆண்டுகளில் இங்கே ஒலிம்பிக் போட்டிகள் நடந்திருக்கிறது. மூன்றாவது முறையாக ஒரே நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது இதுதான் முதன்முறை என்கிற சாதனை லண்டனுக்கு சொந்தமாகிறது.


சாம்பியன் பிளேட்டோ
புராதன ஒலிம்பிக்கில் தத்துவமேதை பிளேட்டோ ‘பான்க்ரேஷன்’ (Pankration) என்கிற விளையாட்டில் இரட்டை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

  
நோபல் வீரர்
நோபல் பரிசுபெற்ற ஒரே ஒலிம்பிக் வீரர் பிரிட்டனின் பிலிப் நோயல் பேக்கர். இவர் 1920ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 1500 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இவர் அமைதிக்கான நோபல் பரிசினை 1959ஆம் ஆண்டுக்காக பெற்றார்.


ராணி குடும்பத்து குதிரை வீராங்கனைகள்
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும், வீராங்கனைகளும் ஆணா, பெண்ணா என்பதற்குரிய பாலியல் சோதனை நடத்தப்படுவது வழக்கம். 1976 ஒலிம்பிக்கில் ஒரு வேடிக்கையான விஷயம் நடந்தது. பிரிட்டனின் குதிரையோட்டக் குழுவில் இளவரசி ஆனி இடம்பெற்றிருந்தார். மகாராணி எலிசபெத்-2 அவர்களின் மகள் என்பதால் இவருக்கு அச்சோதனை நடத்துவது அர்த்தமற்றது(!) என்கிற முடிவுக்கு வந்த ஒலிம்பிக் கமிட்டி, ஆனியிடம் சோதனை நடத்தி சான்றிதழைப் பெற திராணியில்லாமல் நழுவிக் கொண்டது. நவீன ஒலிம்பிக் வரலாற்றில் பாலினச்சோதனை நடத்தப்படாத ஒரே வீராங்கனை இவர் மட்டும்தான். தனிநபர் மற்றும் குழுப்போட்டி இரண்டிலுமே ஆனி படுதோல்வி அடைந்தார். இளவரசி ஆனியின் மகள் சாரா பிலிப்ஸும் குதிரையோட்ட வீராங்கனையே. இவர் 2004 மற்றும் 2008 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இருமுறையும் இவரது குதிரைக்கு காயமேற்பட்டு, எந்தவொரு போட்டியிலும் ‘திறமை’ காட்டவில்லை.


சோக ஒலிம்பிக்

1972. ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் மறக்கவியலாத சோகத்துக்கு சான்றாகிவிட்டது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களின் மீது பாலஸ்தீனிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்களோடு, சில பயிற்சியாளர்களும், போட்டி நடுவர்களாக பங்கேற்க வந்தவர்களுமாக சேர்த்து பதினோரு பேர் பலியானார்கள்.


ஒலிம்பிக்கில் தாத்தா, பாட்டி
 ஸ்வீடனைச் சேர்ந்த ஆஸ்கர் ஸ்வான் 1908, 1912, 1920 மற்றும் 1924 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்றவர். 1912ல் தங்கப்பதக்கம் வாங்கியபோது அவருக்கு வயது 65. இன்றுவரை தங்கப்பதக்கம் வாங்கியதிலேயே வயதான வீரர் என்கிற பெருமையை பெறுகிறார். 1924ல் இவரே வெள்ளிப்பதக்கமும் 73 வயதில் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிக வயதில் பதக்கம் வென்றவர் என்கிற சாதனையும் இவருக்கு இன்றுவரை நீடிக்கிறது. அதே நேரம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அதிக வயதான வீரர் என்றும், தன் வயது மூலமாக ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

1972 ஒலிம்பிக்கில் பிரிட்டிஷ் வீராங்கனை லோர்னா ஜான்ஸ்டோன் குதிரையோட்டப் பிரிவில் பங்கேற்றபோது அவருக்கு வயது 71. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அதிக வயதான வீராங்கனை என்கிற சாதனை இன்றுவரை அவரிடம்தான் இருக்கிறது.


குட்டி சாம்பியன்

1936ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் டென்மார்க்கைச் சேர்ந்த இன்கே சோரென்ஸென் வெண்கலம் வென்றார். அப்போது அவருக்கு வயது பதிமூன்று. இன்றுவரை தனிநபர் பிரிவில் இவ்வளவு குறைவான வயதில் யாரும் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதில்லை.


தங்கநாடு

1896ல் இருந்து நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்றுவரை ஒவ்வொரு ஒலிம்பிக்குக்கும் குறைந்தது ஒரு தங்கப்பதக்கமாவது வென்ற நாடு என்கிற பெருமையை இங்கிலாந்து பெறுகிறது.


இரண்டு முறை தங்கம், இரண்டு நாடுகளுக்கு

ஆஸ்திரேலிய ரக்பி வீரர் டேனியல் கேரோல் 1908 ஒலிம்பிக்கில் தன் தாய்நாட்டுக்கு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். 1920லும் அவர் ரக்பியில் தங்கம் வென்றார். ஆனால் இம்முறை அமெரிக்காவின் சார்பில் பங்கேற்றார்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த பலு தூக்கும் வீரர் அகாகைட் காக்கியாஸ்விலி, ஒருங்கிணைந்த ரஷ்ய அணியின் சார்பில் பங்கேற்று பார்சிலோனாவில் நடந்த 1992 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.  மீண்டும் அட்லாண்டாவில் 1996ல் நடந்தப் போட்டியிலும், சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடந்த போட்டியிலும் அடுத்தடுத்து தங்கம் வென்றார். 1996லும், 2000லும் கிரேக்க குடியுரிமை பெற்று க்ரீஸ் நாட்டின் சார்பில் பங்கேற்றார்.
  

ஒலிம்பிக் டிவி

1936ல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை ஹிட்லர் பிரமாதப்படுத்தினார். ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன்முதலாக போட்டிகள் டிவி கேமிராவில் பதிவு செய்யப்பட்டு, பெர்லின் நகர் முழுக்க பிரும்மாண்டமான திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. வீடுகளில் இருந்த டிவி பெட்டிகளில் ஒலிம்பிக் விளையாட்டு 1948 லண்டன் போட்டிகளின் போதுதான் ஒளிபரப்பப்பட்டது. இதை இங்கிலாந்துவாசிகள் மட்டுமே ரசிக்க முடிந்தது. 1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளின் போதுதான் உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் டிவி வாயிலாக விளையாட்டுப் போட்டிகளை தரிசிக்க முடிந்தது.


இரு நாடுகளில் ஒலிம்பிக்

ஒலிம்பிக் வரலாற்றிலேயே ஒரே ஒருமுறைதான் போட்டி நடந்த இடங்கள் இரு நாடுகளில் அமைந்திருந்தது. 1920ல் நடந்த போட்டிகளின் போது படகுப் போட்டிகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாண்டு ஆகிய இரண்டு கடற்பகுதிகளில் நடத்தப்பட்டது.


குட்டிப்பையன்

1896ல் நடந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் போது கிரேக்க ஜிம்னாஸ்டிக் வீரர் டிமிட்ரியோஸ் லவுண்ட்ராஸ் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தார். அப்போது அவருக்கு வயது பத்து மட்டுமே. இன்றுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற மிகக்குறைந்த வயதுடைய வீரர் என்கிற சாதனையை அவர் தக்கவைத்திருக்கிறார்.

(நன்றி : புதிய தலைமுறை)