6 நவம்பர், 2013

எங்க சின்ன ராசா

போனவாரம் ஏதோ ஒரு சேனலில் நைட்ஷோவாக ‘எங்க சின்ன ராசா’ பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதே கிளுகிளுப்பை உண்டாக்கும் தன்மை வேறெந்த படத்துக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். இவ்வளவு துல்லியமான விவரணைகள் கொண்ட காட்சிகளை அமைக்கும் இயக்குனர் இனிமேல் புதிதாக பிறந்துதான் வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் பாக்கியராஜ்.

பாக்கியராஜின் சின்னம்மாவாக நடித்த சரஸ்வதியின் நடிப்பு ரோபோத்தனமாகவும், மேக்கப் மாறுவேடப்போட்டி தரத்திலும் இருந்ததைத் தவிர்த்து பெரிதாக குறைசொல்ல வேறெதுவுமில்லை. படம் வெளியாகி இருபத்தாறு ஆண்டுகள் கழித்தும் இன்னும் ‘கொண்டச் சேவல்’ காதுக்குள்ளே கூவிக்கொண்டே இருக்கிறது. ‘மாமா உனக்கொரு தூதுவிட்டேன்’ மாதிரி மெலடியெல்லாம் இனிமேல் சாத்தியமாகுமா தெரியவில்லை. எனக்கு ஃபேவரைட், க்ளைமேக்ஸ் ஜில்பான்ஸான ‘தென்பாண்டி சீமை ஓரமா’தான். மியூசிக் சேனல்களில் காணக்கிடைக்காத இந்த பாட்டுக்காகவே எப்போது படம் போட்டாலும் முழுசாக பார்த்துவிடுவது உண்டு. பாக்யராஜின் காஸ்ட்யூமும், டான்ஸும் பக்காவாக அமைந்த பாடல் இது.

ரொம்ப நாட்களாகவே இப்படத்தின் இசை இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் பிரமாதமாக இருந்தால் அது இளையராஜாவாகதான் இருக்கும் என்கிற பொதுப்புத்திக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. சங்கர் கணேஷ் என்று கொஞ்ச வருஷம் முன்புதான் தெரிந்தது. ‘கொண்டச்சேவலாக’ ஹிட்டடித்ததைவிட, இந்தி ‘பேட்டா’வில் ‘கோயல் சி தேரி போலி’யாகதான் அந்த ட்யூன் மரண ஹிட்.
முதன்முதலாக இந்தப் படத்தை பார்த்தபோது (அப்போ பத்து வயசு தான்), ராதாவின் இளமைக் கொந்தளிப்பை கண்டு வியந்து அசந்து விட்ட ஜொள்ளின் ஈரம் இன்னமும் காயவில்லை. இப்போது படத்தைப் பார்க்கும்போது அதே அளவிலான ஜொள்ளு வடிகிறது எனும்போது என் இளமை மீதான தன்னம்பிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘தாலி குத்துது. கழட்டி வைடி’ என்று பாக்யராஜ் சொல்லும்போது புரியாமல், சின்ன வயசில் ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தது. பின்னாளில் அனுபவப்பூர்வமாக அதே சூழலை எதிர்கொள்ள நேரிட்டபோதுதான், பாக்யராஜ் ஏன் எண்பதுகளில் தமிழ்ப்பெண்களின் ‘ஐடியல் ஹஸ்பண்ட்’ ஆக பார்க்கப்பட்டார் என்பது புரிகிறது.

வயக்காட்டில் வேலை பார்க்கும் பாக்யராஜ், வேலைக்கு இண்டர்வெல் விட்டு கிணத்துமேட்டு ஷெட் ரூமில் ‘மேட்னி ஷோ’ ஆடுவதை பார்க்கும்போது இப்போதும் வெட்கம் வருகிறது. க்ளைமேக்ஸில் வரும் வாய்ஸ் ஓவர் பார்த்திபனுடையது. படம் முழுக்கவே டயலாக்கில் பாக்யராஜ் பிச்சி உதறியிருந்தாலும், ராதா வாந்தியெடுத்ததுமே அவர் சொல்வதுதான் ஹைலைட்டான டயலாக். “யோவ் மண்ணாங்கட்டி. மாமனார் வீட்டுக்குப் போயி மாப்பிள்ளையோட இந்த வீரதீர செயலை சொல்லிட்டு வாய்யா”

யதேச்சையாக இன்று ‘எங்க சின்ன ராசா’வை கூகிளிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, இது கன்னட ரீமேக்காம். 1969ல் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் ராஜ்குமாரும், சரோஜாதேவியும் நடித்திருக்கிறார்கள். சரோஜாதேவியை கிணத்துமேட்டு ரூமில் ராஜ்குமார் எப்படி புரட்டியெடுத்திருப்பார் என்பதை கற்பனை செய்துப் பார்த்தாலே பகீரென்று கலங்குகிறது அடிவயிறு. ராஜ்குமாருக்கு மூக்கு வேறு முழ நீளத்துக்கு தும்பிக்கை மாதிரியிருக்கும்.
1981ல் ஜீதேந்திரா – ஹேமமாலினி ஜோடியாக நடித்து ‘ஜோதி’யாக இந்தியிலும் வந்திருக்கிறது. நம்மாளு ‘எங்க சின்ன ராசா’வாக்கி எட்டுத் திக்கும் வெற்றிமுரசிட்ட பிறகு மீண்டும் இந்தியில் அனில்கபூர், மாதுரிதீக்‌ஷித் நடிப்பில் ‘பேட்டா’வானது (‘தக்கு தக்கு கர்னே லகா’ மார்பை தூக்கி தூக்கி மாதுரி பாடும் பாட்டு நினைவிருக்கிறதா? அப்போதெல்லாம் சூப்பர்ஹிட் முக்காப்புலாவில் எப்பவுமே டாப்பில் இருக்கும்). தெலுங்கில் வெங்கடேஷ்-மீனா நடித்து ’அப்பாய்காரு’, கன்னடத்தில் மீண்டும் ரவிச்சந்திரன்-மதுபாலா இணைந்து ‘அன்னய்யா’, கடைசியாக 2002ல் ’சந்தன்’ என்று ஒரியாவிலும் இதே ஸ்க்ரிப்ட் தேய தேய ஓடியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாமே வெற்றிதான். ஒரே ஸ்க்ரிப்ட் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, எடுக்கப்பட்டபோதெல்லாம் ‘ஹிட்’டிக்கொண்டே இருந்திருக்கிறது என்பது இமாலய ஆச்சரியம். மறுபடியும் யாராவது இன்றைய வடிவில் ரீமேக்கினாலும் ஹிட்டு நிச்சயம்.

மிக சாதாரணமான ஒன்லைனரை கொண்ட இந்த ஸ்க்ரிப்ட் எப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே குவித்துக்கொண்டிருக்கிறது என்று ஆழமாக யோசித்தால்,  மிகச்சுலபமாக அந்த வெற்றி ஃபார்முலாவை கண்டுபிடித்துவிடலாம். செண்டிமெண்ட் + க்ரைம் + செக்ஸ். இந்த சமாச்சாரங்கள் இல்லாமல் எடுக்கப்படும் படங்கள் வெற்றியடைந்தால், அதற்கு வேறு ஏதோ சிறப்புக் காரணங்கள் இருக்கக்கூடும். வெற்றியடைந்த படங்கள் எல்லாவற்றிலுமே இது இருந்திருக்கிறது என்பதை மல்லாக்கப் படுத்து யோசித்தால் உணர்ந்துக் கொள்ளலாம்.

30 அக்டோபர், 2013

சுட்ட கதை

மன்னர் பீமா, அழகி பிந்து, இன்ஸ்பெக்டர் ஆசாத், சம்பல் பள்ளத்தாக்கு, மார்ஷல், ஷெரீப், செவ்விந்தியர், ‘வோ’, டால்டன் பிரதர்ஸ், இரவுக்கழுகு, பழிவாங்கும் பாவை, முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ்... இதெல்லாம் உங்களுக்கு பரிச்சயமானவையாக இருக்கிறதா? முதலில் கையைக் கொடுங்கள். உங்களுக்கு ‘சுட்ட கதை’ ரொம்பவும் பிடிக்கும்.

ஜெய்சங்கர் – கர்ணன் காம்பினேஷனில் சில படங்கள் காமிக்ஸ் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன. ஹீரோ, வில்லன், துணைபாத்திரங்கள் எல்லாருமே பதினெட்டாம் நூற்றாண்டின் அமெரிக்கப் பாணியில் இருப்பார்கள். இசையும் கூட மேற்கத்திய ஸ்டைல்தான். ‘பழிக்குப் பழி’ என்கிற கவுபாய் காமிக்ஸ்களின் ஆதாரமான ஒன்லைனரையும், ஒட்டுமொத்த ‘லுக்’கையும் தவிர்த்து, இப்படங்களில் பெரிய காமிக்ஸ் தாக்கம் இல்லை. ஒருமாதிரியாக தமிழர் கலாச்சாரத்துக்கு விசுவாசமான படங்களே அவை.
முல்லை தங்கராசன் என்றொருவர் ஒரு காலத்தில் இருந்தார். 1972ல் முத்து காமிக்ஸ் தொடங்கப்பட்டபோது பதிப்பாசிரியராக இருந்தவர். பின்னர் முத்து காமிக்ஸில் இருந்து விலகி தனியாக நிறைய காமிக்ஸ் இதழ்களை உருவாக்கினார். குழந்தைகளுக்காக இதழியல் துறையில் இரவும் பகலுமாக உழைத்தார். தமிழ் சித்திரக்கதை உலகின் தவிர்க்க முடியாத மனிதரான அவருக்கு ஓர் ஆசை இருந்தது. காமிக்ஸ் பாணியில் ஒரு சினிமா. எழுபதுகளின் இறுதியில் பக்காவாக ஸ்க்ரிப்ட் ரெடி செய்துவிட்டு கோடம்பாக்கத்தின் தெருக்களில் அலைந்தார். ஒரு தயாரிப்பாளரும் அவரை சீண்டவில்லை. மும்பைக்கு டிரெயின் ஏறினார். கடுமையான அலைச்சலுக்குப் பிறகு அவருக்கு இந்தியில் வாய்ப்பு கிடைத்தது. அவரது வாழ்நாள் கனவு நிறைவேறப் போகிறது என்கிற குஷியில் இருந்தபோது, அன்றிரவே ஒரு விபத்தில் அகாலமாக மரணம் அடைந்தார்.

அதன்பிறகு இந்தியாவில் யாருக்கும் காமிக்ஸில் சினிமா இருப்பதாக தோன்றவில்லை. எண்பதுகளில் இறுதியிலும், தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் டோலிவுட்டில் மெகாஸ்டார் ஆகிவிட்ட சிரஞ்சீவியை பில்டப் செய்ய இந்திய புராண மரபுக்கதைகள் போதவில்லை. எனவே இயக்குனர்களின் பார்வை ஐரோப்பிய, அமெரிக்க காமிக்ஸ்கள் மீது பாய்ந்தது. ஸோரோ, ராபின்ஹூட், டெக்ஸ்வில்லர் என்று காமிக்ஸ் ஹீரோக்களின் கலவையாக சிரஞ்சீவியின் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. கவுபாய் தொப்பி அணிந்திருப்பார். ஸோரோவின் உடை. ராபின்ஹூட்டின் குணநலன்கள் என்று மிக்சராக சில படங்களில் சிரஞ்சீவி தோன்றினார்.
1990ல் வெளியான ‘கொண்டவீட்டி தொங்கா’ தெலுங்கில் உருவான இந்த காமிக்ஸ் தாக்கத்தின் உச்சம். தெலுங்கின் ஆல்டைம் ப்ளாக் பஸ்டரான இத்திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் எவர்க்ரீன் ஹிட். ‘சுபலேகா ராசுக்குன்னா’வை யூட்யூப்பில் தேடி கேட்டுப் பாருங்கள். ஐஸாக உருகிவிடுவீர்கள். தமிழிலும் இது ‘தங்கமலை திருடன்’ என்று டப்பப்பட்டு, பி & சி தியேட்டர்களில் நல்ல டப்பு பார்த்தது. அதன்பிறகு டோலிவுட் ஹீரோக்களுக்கு இந்த கவுபாய் கெட்டப் மீது பயங்கர மோகம். ஆனாலும் யாரும் சிரஞ்சீவி சாதித்ததில் பாதியை கூட எட்டமுடியவில்லை. 2009ல் ராஜேந்திரபிரசாத் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘குயிக் கன் முருகன்’ ஓரளவுக்கு நல்ல முயற்சி.

தொடர்ச்சியாக 2010ல் தமிழில் வெளிவந்த ‘இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சரமாரியாக சக்கைப்போடு போட்டது. தீவிரமான காமிக்ஸ் ரசிகரும், சில சிறப்பான காமிக்ஸ் கதைகளை வரைந்து, எழுதி உருவாக்கியவருமான சிம்புதேவன், முல்லை தங்கராசனின் கனவை நிஜமாக்கினார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் வெளிவந்த கவுபாய் திரைப்படம் இதுதான். ஜெய்சங்கர்புரம், அசோகபுரம் என்று அவர் உருவாக்கிய பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்க கிராமங்களை, மில்லெனியம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள். காமிக்ஸ் ரூட்டை கரெக்ட்டாக பிடித்து, வெற்றி கண்டு சிம்புதேவன் நிரூபித்துவிட்ட பிறகும் கூட நம் இயக்குனர்களுக்கு ஏனோ காமிக்ஸில் ‘கதை’ இருப்பதாக தோன்றவில்லை.

காமிக்ஸ் வெறியரான மிஷ்கின், தன் பால்யகாலத்து ஹீரோவுக்கு மரியாதை செய்யும் வகையில் ‘முகமூடி’ என்று தன் படத்துக்கு டைட்டில் வைத்தார். இப்படத்தின் ஆரம்பத்தில் ‘முத்து காமிக்ஸ்’ வழங்கும் ‘முகமூடி’ என கிரெடிட் கொடுக்கப் போகிறார் என்றுகூட கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. ஆனால் அப்படம் ஹாலிவுட், சைனீஸ் படங்களின் தாக்கத்தில் இருந்ததே தவிர, காமிக்ஸ் வாசனையற்றதாகவே வந்தது. இத்தனைக்கும் மிஷ்கினின் மற்ற படத்தின் ஷாட்கள், உற்றுப்பார்த்தால் காமிக்ஸ் கட்டங்களின் கோணத்தில்தான் படமாக்கப்படுகிறது என்பதை உணரலாம். இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இந்தியில் சைப்அலிகானின் ‘ஏஜெண்ட் வினோத்’ போன்ற படங்களில் 007 காமிக்ஸ் எஃபெக்ட்டை ஓரளவுக்கு உணரலாம் (அந்தப் படமே கூட காமிக்ஸ் வடிவில் புத்தகமாக வந்தது).
‘சுட்ட கதை’ இந்த வரலாற்றில் முற்றிலும் மாறுபாடான தன்மை கொண்ட திரைப்படம். இதுவரை வந்த படங்களுக்கு காமிக்ஸின் பாதிப்பு இருந்திருக்கிறதே தவிர, இப்படம்தான் முற்றிலும் காமிக்ஸாக உருவாக்கப்பட்டிருக்கிறது. காமிக்ஸ்களில் வரும் டயலாக் கட்டங்களுக்கும், ப்ளர்ப்புகளுக்கும் பழகியவர்கள் சுட்டகதையில் சுலபமாக நுழையலாம்.

டைட்டிலே ‘சில் அவுட்’ 2டி அனிமேஷனில் கட்டம் கட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. சிலந்தி என்கிற பெண் இசைக்கருவியை வாசிக்கும் டைட்டிலின் இறுதிக் கட்டம் 2டியிலேயே ரவுண்ட் ட்ராலி எஃபெக்ட்டில் அனிமேஷன் செய்யப்பட்டிருக்கிறது (அனிமேட்டர் யாரையாவது விசாரித்துப் பாருங்கள் இந்த காட்சியின் சிறப்பை). சராசரி திரைப்பார்வையாளனுக்கு இது எந்த வித்தியாசத்தையும் தராது. ஆனால் நீங்கள் காமிக்ஸ் ஆர்வலராக இருக்கும் பட்சத்தில் இதைக் கண்ட நொடியிலேயே விசில் அடிப்பது உறுதி. ஒவ்வொரு காட்சியுமே காமிக்ஸ் கட்டங்களாகதான் மாறுகிறது. இதுவரை நாம் சினிமாவென்று எதையெல்லாம் நம்பிக் கொண்டிருந்தோமோ அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுபு. தமிழுக்கு முக்கியமான வரவு இவர்.

கோரமலை என்றொரு கற்பனை கிராமம். இங்கே ஆறுவித மக்கள் இருக்கிறார்கள். முதலாம் வகை சோம்பேறி. இரண்டாம் வகை சோம்பேறி. மூன்றாம் வகை சோம்பேறி. நான்காம் வகை சோம்பேறி. ஐந்தாம் வகை சோம்பேறி. ஆறாம் வகை?
அதுவும் சோம்பேறிதான். ரொம்பவும் மொக்கையான காமெடிதான். வெடிச்சிரிப்பெல்லாம் உடனடியாக சாத்தியமில்லை. ஆனால் இந்தரக காமெடிகளுக்கு sustainable ஆன லைஃப் உண்டு. போதுமான காட்சித் தொடர்ச்சியோ, தர்க்கமோ, குறைந்தபட்ச பொதுப்புத்தியோடு ஒத்துப்போகும் காரணங்களோ இல்லாத இவ்வகை காமெடியை absurd comedy என்பார்கள். சுட்டகதை படம் முழுக்கவே இவ்வகை நகைச்சுவையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகள் உங்களை உடனடியாக சிரிக்கவைக்காது. அக்காட்சிகளை உங்கள் சொந்த அனுபவத்தில் கண்ட, கேட்ட காட்சிகளோடு ஹைப்பர்லிங்க் செய்துப் பார்த்தால்தான் சிரிக்க முடியும். இந்த ஞானப்பார்வை வந்துவிட்டால் absurd comedy ரக ஜோக்குகளையோ, காட்சிகளையோ பத்திரிகையிலோ, டிவியிலோ, சினிமாவிலோ பார்க்கும்போது அது கொடுக்கக்கூடிய அனுபவம் அலாதியானது. இதைதான் இலக்கியவாதிகள் ‘சர்ரியலிஸம்’ என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ‘தொங்காபுரம் ஜமீன்’. ஜமீனின் பெயருக்கு கீழே ‘ஆண்மை தவறேல்’ என்று எழுதியிருக்கும். சட்டென்று பார்த்தால் இதுவெறும் நேம் போர்ட்தான். உங்களுக்கு ‘அமலாபுரம்’ தெரிந்திருக்க வேண்டும். அதன் சிறப்புகளை அறிந்திருக்கும் பட்சத்தில் ‘ஆண்மை தவறேல்’ ஏன் இடம்பெற்றிருக்கிறது என்பது புரிந்து புன்னகைப்பீர்கள். தொங்காபுரத்தை எப்படி அமலாபுரத்தோடு ஹைப்பர்லிங்க் செய்யவேண்டுமென்றால் ‘தொங்கா’ என்கிற தெலுங்குவார்த்தைதான் க்ளூ. ஜமீன்களைப் பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் பிம்பங்களோடு (காமவெறியர்கள் மாதிரி) இதைப் பொருத்திப் பார்க்கவேண்டும். பாரடைஸ் டீ ஸ்டால், ஆங்கிலத்தில் PARADESI TEA STALL என்று ஏன் எழுதியிருக்கிறது என்று யோசிக்க வேண்டும். இதையெல்லாம் வசனத்தில் இயக்குனர் சுட்டிக் காட்டமாட்டார். இப்படியெல்லாம் மூளைக்கு வேலை தர தயாராக இருக்கும் பட்சத்தில் ‘சுட்ட கதை’ பார்க்கலாம். இப்படத்தில் சீரியஸாக ஏதோ கதை இருக்குமென்று நம்பிப் பார்த்தால், படத்தில் வரும் மொக்கை கேரக்டர்களில் நீங்களும் ஒரு மொக்கையாக மாறிவிடுவீர்கள். கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மெண்டுக்காக படத்துக்கு தொடர்பேயில்லாமல் செருகப்படும் டாக்குமெண்டரி, டிவி நிகழ்ச்சி பாணியிலான காட்சிகளையெல்லாம் என்னவென்று சொல்வது? அபாரம்.

ஹீரோக்களுக்கு ரஞ்சன் காலத்து மீசை. தபாங் ஸ்டைல் கூலிங் க்ளாஸ். உ.பி. போலிஸார் பாணி உடை. ஊரில் இருக்கும் சோம்பேறிகள் எப்பவும் வீட்டில் அடைந்து ‘மெட்டி ஒலி’ பார்க்கிறார்கள். டீ போடுபவனை தவிர்த்து ஒரு உழைப்பாளியையும் பார்க்க முடியாது. ஒட்டகம், சிலந்தி என்று மலைவாழ் பாத்திரங்களுக்கு விசித்திரமான பெயர்கள், பழக்கவழக்கங்கள். எல்லாவற்றையும் விட மேலாக சாம்பசிவம் க்ரைம் காமிக்ஸ்.
‘சுட்டகதை’ ஒட்டுமொத்தமாகவே எனக்கு வசீகரமாக தெரிந்தது. வாசிப்பின்பம் மாதிரி காட்சியின்பத்தை தந்தது. இதே வசீகர அனுபவத்தை முன்பொருமுறை பெற்றிருக்கிறேன். ஒரு நாவலை வாசிக்கும்போது. அது ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’

26 அக்டோபர், 2013

செவ்வாய்க்கு போகலாமா?

பூமியின் இயற்கைவளங்களை சுரண்டி தீர்த்துக் கொண்டிருக்கும்
மனித இனம் அடுத்து செவ்வாய் மீது கண் வைத்திருக்கிறது.
செவ்வாயில் மனிதன் வசிக்க முடியுமா?


ஊர் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அலுத்துப்போய் உலகத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டார்கள். இனி ஆர்வமூட்டக்கூடிய விஷயம் எதையும் புதுசாய் உலகத்தில் கண்டுவிடமுடியாது என்று சோர்ந்துப் போனார்கள். இப்போது உலகத்தை விட்டு வெளியே போய், வேறு கிரகங்களை பார்க்க முடியுமா என்று யோசிக்கிறார்கள். எனவேதான் ‘செவ்வாய்க்குப் போகலாம் வாங்க’ என்று ஒரு திட்டத்தை ‘மார்ஸ் ஒன்’ என்கிற நிறுவனம் அறிமுகப்படுத்தியதுமே லட்சக்கணக்கானோர் பயணம் செய்ய விண்ணப்பித்திருக்கிறார்கள். பூமி தவிர்த்த வேறொரு கோளில் மனிதன் குடியேற வேண்டுமானால், அது பெரும்பாலும் செவ்வாயாகதான் இருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

சந்திரனுக்கு ‘சந்திராயன்’ அனுப்பி வென்ற இந்தியா, அடுத்து செவ்வாய் கிரகத்துக்கும் வரும் நவம்பர் மாதம் ‘மங்கல்யான்’ என்கிற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருக்கிறது (புதிய தலைமுறை ஜனவரி 03, 2013 இதழில் ‘செவ்வாயிலும் பாரதக்கொடி’ என்கிற விரிவான கட்டுரையை வெளியிட்டிருக்கிறோம்). மங்கல்யான் செவ்வாய் கிரகத்தில் நேரடியாக இறங்காது. சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும். செவ்வாயில் கால் பதிக்க வேண்டுமானால், இதிலிருந்து ஓர் ஊர்தியை அனுப்பிதான் செவ்வாய் நேரடியாக தரையிறங்க முடியும்.

செவ்வாயில் கால் பதிக்க நினைக்கும் மனிதனின் கனவு நிறைவேறுமா?

“வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அறிவியல் கட்டுரைகளை எழுதிருவரும் எழுத்தாளரான பத்ரி.

“சூரிய மண்டலத்தில் எதிர்காலத்தில் வியாழன் வரை மனிதன் போகமுடியலாம். புதன் கிரகத்தில் வெப்பம் அதிகம் என்பதால் வாய்ப்பில்லை. செவ்வாய், வெள்ளி கிரகங்களில் தரை கெட்டியாக இருக்கும் என்பதால் இந்த இரு கிரகங்களுக்கும் மனிதன் போக வாய்ப்பிருக்கிறது. அதிலும் செவ்வாய் கிட்டத்தட்ட பூமியின் அளவுள்ள கிரகம், புவியீர்ப்பு விசையும் ஓரளவுக்கு ஒத்துப்போகும் என்பதால் நாம் சந்திரனை அடுத்து, செவ்வாயிலும் கால் பதிக்க வாய்ப்பிருக்கிறது. காற்றுதான் அடிப்படையான பிரச்சினையாக இருக்கக்கூடும். செயற்கைக் கருவிகளின் துணையோடு சுவாசிக்க வேண்டும். அங்கே கட்டிடங்கள் முதலான கட்டமைப்புகளை உருவாக்கி, பூமியின் சூழலை செயற்கையாக செய்ய முடியும் பட்சத்தில் சில நாட்கள் செவ்வாயில் மனிதன் ‘பிக்னிக்’ மாதிரி தங்கிவர முடியும்” என்று விளக்குகிறார் பத்ரி. ஆனாலும் உலகில் இயங்குவதைப் போல மனிதன் அங்கே இயங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

செவ்வாய்க்கு போக வேண்டுமானால் தோராயமாக ஐந்தரை கோடி கி.மீ பயணிக்க வேண்டும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான தூரம் மாறிக்கொண்டே இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நெருங்கும். அதை கணக்கு செய்து பயணத்திட்டத்தை அமைக்க வேண்டும். செவ்வாயின் தரையில் சோலார் மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு பரவலாக இருக்கலாம். டாக்ஸிக் ரசாயனம் தோய்ந்த தூசுப்புயல் சுழன்றுக் கொண்டிருக்கலாம். உறைந்துப் போகவும் வாய்ப்பிருக்கிறது. சர்வநிச்சயமாக ஆக்சிஜன் கிடைக்கப் போவதில்லை. நாம் வாழ்வதற்கு என்று அல்ல, வெறுமனே தரையிறங்கக் கூட கோடிமுறை யோசித்தாக வேண்டும். ஏனெனில் அங்கே நீர் இருந்ததற்கான தடயங்கள்தான் கிடைத்திருக்கிறது. கடைசியாக கிடைத்த தகவலின்படி அங்கே மிக மிகக்குறைவான அளவு தண்ணீர் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். ஆனால் பாக்டீரியாக்கள் மாதிரியான நுண்ணுயிரிகள் கூட அங்கே வசிக்க வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. புவிச்சூழலில் மண் என்பது வெறும் மண் அல்ல. நுண்ணுயிரிகளும் கலந்தது. செவ்வாய்க் கிரகத்தில் மண் இப்படியான தன்மையில் இருக்காது.

“இதெல்லாம் கூட சமாளித்துவிடலாம். ஆனால் செவ்வாய்ப் பயணம் என்பது ஒன்-வே டிராஃபிக்தான். போகிறவர்கள் திரும்பவே முடியாது” என்றுகூறி அதிரவைக்கிறார் அறிவியல் எழுத்தாளரான என்.ராமதுரை.

“நமக்கிருக்கும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு செவ்வாய்க்கு பயணம் செய்தால் போய் சேருவதற்கே எட்டு மாதங்கள் ஆகும். பஸ்ஸிலோ, விமானத்திலோ, ரயிலிலோ செய்யும் பயணம் போல இது இருக்காது. பயணிப்பவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படலாம். குறிப்பாக அசாத்தியமான மனவலிமை அவர்களுக்கு இருக்க வேண்டும்.

அங்கு தரையிறங்கும்போது கதிரியக்கப் பாதிப்புகள் ஏற்படலாம். அதையும் கூட சமாளித்து விடலாம். தங்குவதற்கு குடியிருப்புகளை கூட ஏற்படுத்தி விடலாம். ஆனால் தரையிறங்கதான் வசதி இருக்கிறதே தவிர, மீண்டும் திரும்புவதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் நம்மிடையே இல்லை. அங்கேயே ராக்கெட் உருவாக்கி, எரிபொருள் நிரப்பிதான் திரும்ப வேண்டும். செவ்வாயில் எரிபொருள் கிடைக்குமா தெரியாது. எரிபொருளை கூட நாம் இங்கிருந்து அனுப்பிவிடலாம். ஆனால் செவ்வாயில் தரையிறங்க நாம் பயன்படுத்திய ராக்கெட்டை அப்படியே மீண்டும் கிளப்பிக் கொண்டு வரமுடியாது. சந்திரனுக்கு போனதையும், செவ்வாய்க்கு போவதையும் ஒன்றாக கருதக்கூடாது. இரண்டும் வேறு, வேறு. இந்த தொழில்நுட்ப சாத்தியத்தை நாம் அடைய ஐந்து ஆண்டுகள் ஆகலாம், பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை போனால் வரமுடியாது என்பதை தெரிந்துக்கொண்டு யாராவது பயணிப்பார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் ராமதுரை.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு உருவான திட்டங்கள் பலவும் தோல்வியிலேயே முடிந்தது. சில திட்டங்கள் மட்டுமே வெற்றி கண்டிருக்கின்றன. இப்போது இந்தியாவின் ‘மங்கல்யான்’ வெற்றிபெறும் பட்சத்தில், விண்வெளித் தொழில்நுட்பத்தில் நாமும் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் மனிதனை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சி அவ்வளவு சீக்கிரமாக நடந்துவிடாது. தொழில்நுட்பரீதியாக அதற்கு நாம் இன்னும் கடக்கவேண்டிய தூரங்கள் நிறைய இருக்கிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

வெறும் கண்ணால் பார்க்கலாம்!

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களை நாம் வெறுங்கண்களாலேயே பார்க்கலாம். பலரும் விடியற்காலை வேளைகளில் ‘விடிவெள்ளி’ எனப்படும் வெள்ளி கிரகத்தை பார்த்திருப்பீர்கள். கிரகங்களும் நட்சத்திரம் மாதிரியேதான் இருக்கும். ஆனால் நட்சத்திரங்கள் மின்னும். கிரகங்களில் அந்த சலனம் தெரியாது. கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில்தான் இருக்கும். இரவுகளில் உற்றுப் பார்த்தால் சிகப்பாக வெள்ளியைவிட கொஞ்சம் சிறியளவில் ஒரு கிரகத்தை நீங்கள் காணலாம். அதுதான் செவ்வாய்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

இந்தியா ரெடி!

தேதி குறித்தாகி விட்டது. அக்டோபர் 28, மாலை 4.15 மணி. எல்லாம் சரியாக அமைந்தால் இந்த நேரத்தில் செவ்வாய்க்கு இந்தியாவின் பயணம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கிவிடும். 1350 கிலோ எடையுள்ள விண்கலத்தை, 110 கோடி ரூபாய் செலவில் உருவான பி.எஸ்.எல்.வி. (சி-25) செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும். சாட்டிலைட்டில் சுமார் 15 கிலோ எடையுள்ள அறிவியல் ஆய்வு சாதனங்கள் இருக்கும். இவை செவ்வாயின் நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளங்களை ஆராயும்.

பூமியின் சுற்றுப்பாதையை விட்டு விலகியதும் சுமார் பத்து மாதங்கள் பயணித்து செப்டம்பர் 2014ல் செவ்வாயின் சுற்றுப்பாதையை இந்த விண்கலம் சென்றடையும். செவ்வாயில் ‘மீத்தேன்’ எவ்வளவு இருக்கிறது என்பதை அறிவது மங்கல்யான் திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. ஆனால் நாம் முன்பே எதிர்ப்பார்த்த அளவுக்கு மீத்தேன் அங்கு இல்லை என்று சமீபத்தில் நாசா ஆராய்ந்து சொல்லியிருக்கிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :

செவ்வாய் குறித்த டிட்பிட்ஸ்

· சூரியனிலிருந்து நான்காவதாக இருக்கும் கிரகம் செவ்வாய். சூரியனுக்கும் செவ்வாய்க்கும் இடையே 141 மில்லியன் மைல் தூரம்.

· ஓரளவுக்கு செவ்வாயின் சூழல் பூமியை ஒத்திருக்கிறது என்று கணிக்கப்பட்டாலும் வெப்பநிலை அங்கே -225 முதல் +60 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கலாம். சராசரி வெப்பநிலையே -67 டிகிரியாக இருக்கக்கூடும் என்று பயமுறுத்துகிறார்கள்.

· சூரிய மண்டலத்திலேயே பெரிய தூசுப்புயல் அடிக்கும் கிரகம் செவ்வாய். இந்தப் புயலின் அளவு சில நேரங்களில் நம் தெரு அளவுக்கு சிறிதாகவும் இருக்கலாம். சில நேரங்களில் கிரகம் மொத்தத்தையுமே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு பெரியதாகவும் அடிக்கலாம்.

· செவ்வாயில் ‘உயிர்’ இருக்கிறதா எனும் கேள்விக்குப் பதில் சொல்வதே, விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு உயிர் போகும் வேலையாக இருக்கிறது. ஐரோப்பாவில் விண்வெளி தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட எழுபத்தைந்து சதவிகித விஞ்ஞானிகள் ஒரு காலத்தி உயிர் இருந்திருக்கலாம் என்றும், மீதி இருபத்தைந்து சதவிகிதம் பேர் இப்போதும் செவ்வாயில் உயிர்கள் வாழலாம் என்றும் நம்புவதாக சொன்னார்கள்.

· டச்சு நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ‘மார்ஸ் ஒன்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் திட்டம் இது. இதன்படி 40 பேர் செவ்வாயில் குடியேற தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் (இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்) செப்டம்பர் 2022ல் பயணத்தைத் துவக்கி செப்டம்பர் 2023ல் செவ்வாயில் குடியேறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய்க்குப் போகிறவர்கள் திரும்பமுடியாது என்று தெரிந்தும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்ய ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

· ‘தி இன்ஸ்பிரேஷன் மார்ஸ் ஃபவுண்டேஷன்’ என்கிற நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்காமல் விண்கலத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சுற்றிவிட்டு (501 நாட்கள் டூர்) திரும்புமாறு ஒரு திட்டத்தை முன்வைத்திருக்கிறது.

· ஈமுக்கோழி திட்டம் மாதிரி ‘செவ்வாய்க்கு ஆள் அனுப்புகிறோம்’ என்று பல்வேறு நிறுவனங்களும் ஆளாளுக்கு கிளம்பிவிட்டதால் ‘நாசா’ கடுமையாக எரிச்சலடைந்திருக்கிறது. கதிர்வீச்சு அபாயம் இருக்கும் என்று சந்தேகப்படும் பட்சத்தில் விண்வெளி வீரர்களையே அப்பகுதிக்கு அனுப்புவதில்லை என்கிற கொள்கையை நாசா கடைப்பிடிக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

24 அக்டோபர், 2013

புவியீர்ப்பு

இந்தியா, செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கல்யான்’ அனுப்பும் காலத்தில் வந்திருப்பதால் ‘கிராவிட்டி’ நமக்கும் முக்கியமான ஒரு படமாகிறது. விண்வெளியில் மனிதர்கள் குறித்த நிறைய படங்கள் வந்திருந்தாலும் யதார்த்தத்துக்கு மிகவும் நெருக்கமாக ‘கிராவிட்டி’ இருப்பதாக விண்வெளிக்கு சென்று வந்த அனுபவஸ்தர்கள் சிலிர்க்கிறார்கள்.

ஒரு விண்நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் பழுதினை சரிபார்க்க ஒரு குழு செல்கிறது. எதிர்பாராவிதமாக ஏற்படும் விபத்தால், குழுவினரில் பலர் உயிரிழக்கிறார்கள். கடைசியாக மிஞ்சிய பெண்ணால் மீண்டும் பூமிக்கு வரமுடிகிறதா என்பதை பரபரப்பான த்ரில்லராக உருவாக்கியிருக்கிறார்கள்.

காற்றோ, ஒலியோ இல்லாத சூனியவெளியில் நெக்குருகச் செய்யும் கதை என்பதுதான் படத்தின் ஐடியா. இருள், சூரியன், விண்கலங்கள், மிகக்குறைவான மனிதர்கள். பத்துக்கும் குறைவானவர்கள். படம் தொடங்கியதுமே எல்லோரும் காலி. மீதியிருக்கும் இருவரில் ஒருவரும் இடைவேளைக்கு முன்பே டிக்கெட் வாங்கிவிடுகிறார். இதை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமாக ஒன்றரை மணி நேரத்துக்கு படமெடுக்கும் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் இயக்குனர்.
ஹாலிவுட்டின் அஜீத் என்பதால் ஜார்ஜ் க்ளூனியின் பெயரை போஸ்டர்களில் பார்த்ததிலிருந்தே கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய தயாராக இருந்தனர் ரசிகர்கள். ஆனால் படம் முழுக்க சாண்ட்ரா புல்லாக்கின் ஷோ. ஹாலிவுட் இண்டிபெண்டண்ட் படங்களின் அரசி. அடுத்த வருடம் வந்தால் அம்மணிக்கு வயது ஐம்பதாம். ஸ்பீடில் கீனுரீவ்ஸோடு பஸ் ஓட்டிய அந்த கத்தி மூக்குப்பெண், கிராவிட்டியில் விண்கலத்தை ஓட்டுகிறார். புவியீர்ப்பைவிட இவரது விழியீர்ப்புதான் நம்மை ரொம்பவும் டிஸ்டர்ப் செய்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் பேரழகியாகவே இருக்கமுடியுமா என்பது இயற்கையின் இயல்பையே கேள்விக்குள்ளாக்கும் சமாச்சாரம். முன்பு ஒல்லிப்பிச்சானாக இருந்தவர் இப்போது செம்ம கட்டையாக ஃபார்ம் ஆகியிருக்கிறார். விண்வெளி உடைகளை கலைந்துவிட்டு, விண்கலத்துக்குள் சின்ன ஜட்டி, டைட்டான மேலாடையோடு அவர் நீந்துகிற காட்சிக்கு விடலைகள் காட்டுமிராண்டித்தனமாக விசில் அடிக்கிறார்கள். தமிழ் சமூகத்தின் இளைஞர்கள், ஐம்பது வயது ஆண்ட்டியைப் பார்த்து கிளர்ச்சியுறுகிய அபாக்கியமான அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சமகால தமிழ்ச்சூழலில் நிலவும் பாலியல் பாலைவன வறட்சியே இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிற கோட்பாட்டு முடிவுக்கு கடைசியாக நாம் வரவேண்டியிருக்கிறது.

படத்தின் இறுதிக்காட்சி பிரசவத்துக்கு ஒப்பானது. சாண்ட்ரா தப்பித்து வரும் ‘கேப்ஸ்யூல்’ தாயின் கர்ப்பக்கிரகத்தை நினைவூட்டுகிறது. ஒரு ஏரியில் விழும் அந்த கேப்ஸ்யூலுக்குள் தண்ணீர்புகுந்து அவர் மூச்சுக்காக சிரமப்படுவது பனிக்குடம் உடைதலுக்கான ஒப்பீடு. ஏரிக்குள் நீந்தி தலையை வெளியே காட்டுவது முதன்முதலாக குழந்தை தலையை உலகத்துக்கு காட்டும் காட்சிக்கு இணையானது. தரைக்கு வந்ததுமே சாண்ட்ராவால் நடக்க முடியவில்லை. புவியீர்ப்பில்லாத விண்வெளியில் நீந்தி பழகியவர், முதல் அடியை எடுத்துவைக்கவே சிரமப்படுகிறார். குழந்தை முதன்முதலாக நடைபழகும் காட்சியோடு இதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இப்படியெல்லாம் கூட ஒப்பிடுதல்கள் அவசியமில்லை. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டும் கூட படத்தைப் பார்த்தால் க்ளியரான ஸ்பேஸ் எண்டெர்டெயினர். மொழிப்பிரச்சினைக்கு வாய்ப்பேயில்லை. முழுக்க ஆங்கில சப்டைட்டிலோடுதான் படம் உருவாகியிருக்கிறது. இல்லாவிட்டால் ராக்கெட் சயின்ஸ் படித்த விஞ்ஞானிகள் மட்டுமே புரிந்துகொண்டிருக்க முடியும். 3டி உதவியோடு ஒன்றரைமணி நேர அசலான விண்வெளி அனுபவத்தை படம் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளரும் அனுபவிக்கிறார்கள். தயாரித்து, இயக்கி, எடிட்டிய அல்போன்ஸோவின் பாக்கெட்டில் இப்போதே ஒரு சில ஆஸ்கர்கள் விழுந்துவிட்டதாக எண்ணிக்கொள்ளலாம்.

12 அக்டோபர், 2013

தரிசனமும், மன எழுச்சியும்!

டிவி வந்த புதுசில் அதை யாரோ ஐரோப்பிய புண்ணியவான் ‘இடியட் பாக்ஸ்’ என்று விமர்சித்தாராம். நல்லவேளை அவர் இண்டர்நெட்டை பார்க்காமலேயே இறைவனடி போய் சேர்ந்துவிட்டார். அபத்தங்களும், முட்டாள்தனங்களும், அற்பவாதிகளும் நிறைந்த இடமாக இணையத்தை சமூக வலைத்தளங்கள் மாற்றி அமைத்திருக்கிறன. கட்டற்ற சுதந்திரம், வெளிப்படையான ஜனநாயகம் போன்ற உன்னதமான உருவாக்கங்களுக்கு வேறொரு முகமும் உண்டு. அதைதான் இப்போது எல்லோரும் ‘தரிசித்து’க் கொண்டிருக்கிறோம். லைக்குக்காக, ரீட்விட்டுக்காக, கமெண்டுக்காக கொலையும் செய்வார்களோ இவர்கள் என்று அஞ்சும் வண்ணம் இணையக் கலாச்சாரம் பரிணாமம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

வம்புக்கு இழுப்பது, வசைபாடுவது என்பதையெல்லாம் தாண்டி மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டியாக இமேஜ் பில்டப் செய்து, ஒரு திருட்டு வாழ்க்கையை ஒருவன் வாழ்வதற்கு சமூகவலைத்தளங்கள் வாய்ப்பளிக்கின்றன. போகிற போக்கில் டிராஃபிக் சிக்னலில் குழந்தை பிச்சையெடுப்பதை பார்த்த ஒரு காட்சியில் ‘படிமம்’ உருவாக்குகிறார்கள். மழை பொழியும் இரவில் ‘மனவெழுச்சி’ கொள்கிறார்கள். யாரோ ஒரு மூன்றாம்தர எழுத்தாளர் எழுதிய ஏதோ ஒரு பிட்டுக்கதையை வாசித்துவிட்டு ‘தரிசனம்’ அடைகிறார்கள். ஆண்மை எழுச்சிக்கு வழிகாட்டும் போஸ்டரை லேம்ப் போஸ்டில் ஒட்டுவது மாதிரி ஆகிவிட்டது ஃபேஸ்புக்கும், ட்விட்டரும், கூகிள்ப்ளஸ்ஸும்.

‘தரிசனம்’, ‘மனவெழுச்சி’ மாதிரி வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி உண்டு. போகிற போக்கில் சப்பை மேட்டருக்கெல்லாம் இதை பயன்படுத்துகிறோமே என்று எந்த குற்றவுணர்ச்சியுமில்லை. ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு மனவெழுச்சியும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாழ்க்கைத் தரிசனமும் கிடைத்துவிடுகிறது. லட்சக்கணக்கானவர்களுக்கு சகட்டுமேனிக்கு இதெல்லாம் கிடைத்துக்கொண்டே இருக்கிற இந்த போக்குக்காக ஜெமோக்களையும், எஸ்ராக்களையும்தான் சுட்டுத் தள்ள வேண்டும். எழுச்சியோ அல்லது தரிசனமோ கிடைக்க நமக்கு போதிமரம் கூட தேவையில்லாமல் போய்விட்டது. அப்படியாப்பட்ட கவுதம புத்தருக்கே வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் இந்த தரிசனமும், எழுச்சியும் கிடைத்தது. நம் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு சம்பவத்தின் போது எழுச்சியோ, தரிசனமோ கிடைத்தால் பரவாயில்லை. தினம் தினமா அமாவசை சோறு கிடைத்துக் கொண்டே இருக்கும்?

சாதாரணப் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படாத இம்மாதிரி வார்த்தைகளை வைத்து, இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த கட்டுரையை மாதிரி சப்பைக் கட்டுரையில் ஆங்காங்கே மானே, தேனே போட்டு தூவிவிட்டால் அதற்கொரு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடுவதாக எழுதிக் கொண்டிருக்கும் மொக்கைக்கு ஒரு காட்சிப்பிழை மூளையில் படிமமாகிவிடுகிறது. வாசிக்கும் மொக்கைகளும் அச்சொற்களின் உண்மையானப் பொருளுக்கான மதிப்பை உணராமல் அனிச்சையாக லைக் போட்டுவிட்டு, ‘அபாரமான எழுத்தாற்றல்’ என்று கமெண்டுபோட்டு உசுப்பேற்றி விடுகிறார்கள். எழுதுபவனும் மொக்கை, வாசிப்பவனும் மொக்கை எனும்போது கொஞ்சமாவது சூடு சொரணையோ, மனிதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான அறிவோ, நாகரிகமோ பின்னுக்கு தள்ளப்பட்டு மலடான ஒரு அறிவுக்குருடு சமூகத்தை நம்மையறியாமலேயே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

பள்ளியில் படிக்கும்போது பாடம் புரியவில்லை என்றால் சந்தேகம் கேட்போம். இணையத்தில் எவனாவது எதையாவது சந்தேகமாக கேட்டு பார்த்திருக்கிறீர்களா? அவனவனுக்கு தெரிந்ததை பீற்றிக் கொள்ளவும், எவனாவது இளிச்சவாயன் மாட்டினால் முழம், முழமாக உபதேசிக்கவும்தான் தயாராக இருக்கிறோம். புரியாமல் பேசுபவனை சமூகத்தில் உளறுவாயன் என்போம். மெய்நிகர் உலகமான இணையத்திலோ அவ்வாறு உளறிவைப்பவனை அறிவுஜீவி என்கிறோம். அவன் பேசுவது நமக்கு புரிகிறதா புரியவில்லையா என்பதெல்லாம் அடுத்தப் பிரச்சினை. ஏதோ ஒன்றினை புரியவில்லை என்று ஒப்புக்கொள்வதே நமக்கு பெரிய கவுரவ இழப்பாக தோன்றுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அறிவுப் பகிரல் எப்படி சாத்தியமாகும்?

பாவனைகளால் நிறைந்திருக்கிறது இணைய உலகம். நான் இதையெல்லாம் படிக்கிறேன். நான் இதையெல்லாம் பார்க்கிறேன் என்று உட்டாலக்கடியாக நம் இமேஜை ஏற்றிக் கொள்வதிலேயே நமக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவையும் செலவிடுகிறோம். ஸ்டான்லி க்யூப்ரிக்கின் ஒரு படத்தைக்கூட பார்க்காதவன் என்ன முட்டாளா. ஒரான் பாமுக்கை படிக்காதவன் எல்லாம் தற்குறியா. இம்மாதிரி டப்பென்று ‘நேம் டிராப்பிங்’ செய்துவிட்டால் போதும். பெரிய இண்டெலெக்சுவல் போலிருக்கே என்று இணையம் மூக்கின் மேல் விரல்வைக்கும். நியாயமாகப் பார்த்தால் இந்த போக்குக்காக சுஜாதாவையும், சாருநிவேதிதாவையும் தூக்கில் போடவேண்டும்.

பாவனைகளாலேயே வாழ்பவன் முதலில் மற்றவர்களை ஈர்க்க கஷ்டப்பட்டு இம்மாதிரி பாவனை செய்யத் தொடங்குகிறான். மற்றவர்களாகவே சேர்ந்து அவனை பெரிய வாசிப்பாளி, அறிவாளி என்று இமேஜை உருவாக்கிக் கொள்கிறார்கள். பொய்யான அந்த தோற்றத்தை சுமந்தவன், ஒரு கட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று நிஜமாகவே நம்ப ஆரம்பித்துவிடுகிறான். உண்மையாகவே விஷயம் தெரிந்த ஒருவனிடம் அவன் உரையாடும்போது, வெறும் ஐந்து நிமிடத்திலேயே அவன் கஷ்டப்பட்டு கட்டி உருவாக்கிய கோட்டை பொடிப்பொடியாய் உதிர்கிறது. அப்போது உளவியல்பூர்வமாக தற்கொலை செய்துக் கொள்கிறான். வாழ்க்கை குறித்த நிஜமான ‘தரிசனம்’ ஒருவேளை அப்போது அவனுக்கு கிடைக்கலாம். தான் ஒரு முட்டாள் என்பதை ஒரு முட்டாள் உணரும் தருணம்தான் அவனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச ‘மனவெழுச்சி’யாக இருக்கக்கூடும்.

புத்திசாலியாக நடிப்பது ரொம்ப ஈஸி. ஆனால் நாம் நிஜமான நாமாகவே இருப்பதில் இருக்கும் சவுகர்யத்துக்கு இணையாக உலகில் வேறெதுவும் இல்லை.

maintaing innocence throughout the journey is the toughest task of the life