4 ஆகஸ்ட், 2014

காமிக்ஸ் காதல்


மிகச்சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பித்தது இந்த காதல்.

தினத்தந்தியிலும், வானொலியிலும் ராணி காமிக்ஸின் முதல் இதழான ‘அழகியைத் தேடி’க்கு அவ்வளவு விளம்பரங்கள். சன் பிக்சர்ஸ் அவர்களுக்கு படங்களுக்கு செய்த அதகளங்களை அப்போதே செய்துவிட்டார்கள் தினத்தந்தி குழுமத்தார். அப்பாவிடம் அடம்பிடித்து அழகியைத் தேடி வாங்கினேன். பளபள வார்னிஷ் அட்டையில் ரூ.1.50 விலையில் அழகி என்னை ஈர்த்துக் கொண்டாள்.

யாரும் பிரித்து பார்க்காதவண்ணம் ஸ்டேப்ளரால் ‘பின்’ செய்யப்பட்டு வந்த புத்தகத்தை அப்பாதான் பிரித்துக் கொடுத்தார். பிரித்ததோடு இல்லாமல் லேசாக புத்தகத்தை புரட்டிப் பார்த்தவர் புருவத்தைச் சுருக்கினார். உள்ளே அழகி உடைமாற்றும் கட்டங்கள் இருந்ததுதான் காரணம். அப்போதெல்லாம் குமுதம் நடுப்பக்கம் எடுக்கப்பட்டுதான் என்னுடைய வாசிப்புக்கு வரும். அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான சென்ஸார் அதிகாரியாக இருந்த அப்பாவுக்கு அழகிகள் அரைகுறை ஆடைகளோடு வரும் காமிக்ஸ், தன் மகனின் வெள்ளை உள்ளத்தில் நஞ்சை கலந்துவிடுமோ (இத்தனைக்கும் அப்போ ஆறேழு வயசுதான்) என்று சஞ்சலம். “இனிமே காமிக்ஸெல்லாம் வேணாம். பாலரத்னாவும், அம்புலிமாமாவும் போதும்” என்று முடிவெடுத்தார்.
ஏற்கனவே அண்ணாக்கள் வாசிக்கும் முத்துகாமிக்ஸால் கட்டம் கட்டமான சித்திரங்களின் வசீகரத்தில் ஈர்க்கப்பட்டுவிட்ட எனக்கு அது ஏமாற்றமான முடிவு. இன்னும் எத்தனை காலத்துக்குதான் விக்கிரமாதித்தன் தோளில் சுமந்துக்கொண்டு போகும் வேதாளத்தோடு மாரடிப்பதோ என்று சோர்ந்துப் போனேன். நல்ல வேளையாக ‘மாடஸ்டி’ காப்பாற்றினாள். ராணி காமிக்ஸ் மாதிரி படோடப விளம்பரங்கள் இல்லையென்றாலும், தரமான காமிக்ஸாக ‘லயன் காமிக்ஸ்’சும் அந்த மாதம்தான் விற்பனைக்கு வந்தது. லயன் காமிக்ஸின் ஆசிரியருக்கு அப்போது வயசு பதினேழுதான். ‘கத்தி முனையில் மாடஸ்டி’ தமிழ் சித்திரக்கதை உலகின் பொற்காலத்துக்கு வித்திட்டாள்.

‘காமிக்ஸ் வேண்டும்’ என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த எனக்கு ராணிக்கு பதிலாக மாதாமாதம் லயன் காமிக்ஸ் வாங்கித்தர ஆரம்பித்தார் அப்பா. அப்பாவுக்கு ஒரு பழக்கம். பரங்கிமலை ரயில்வே நிலையத்தின் புத்தகக்கடையில் தொங்கும் கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களையுமே வாங்கிவிடுவார். அதில் எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும் வெளிவந்த நிறைய காமிக்ஸ்களும் இருந்தது. நான் பிறந்த காலத்திலிருந்தே எதிர்காலத்தில் வளர்ந்து படிப்பேன் என்பதற்காக நிறைய காமிக்ஸ், குழந்தைகள் புத்தகங்களை வாங்கி பரணில் சேமித்துவைத்தவர் அவர். வேறு எந்த அப்பாவாவது மகனின் வருங்கால வாசிப்புக்கு கைக்குழந்தையாக இருந்தபோதே புத்தகங்கள் வாங்கி சேமித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஐந்து, ஆறு வயதில் கூட்டி கூட்டி தமிழ் வாசிக்க ஆரம்பித்தபோது பாடப்புத்தகங்களை தவிர்த்து நான் படித்து முடிக்க மூட்டை மூட்டையாக என் வீட்டில் புத்தகங்கள் இருந்தது. இதனாலேயே வழக்கமான குழந்தைகள் மாதிரி சேட்டை செய்யாமல் சமர்த்தாக எப்போதும், எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். பையன் பெரிய ஐ.ஏ.எஸ்.ஸா வருவான் போலிருக்கு என்று வீட்டில் மூடத்தனமாக நம்பினார்கள். இந்த வாசிப்பு பிற்காலத்தில் விரிவடைந்து மருதம், விருந்து, திரைச்சித்ரா, சரோஜாதேவி ரேஞ்சுக்கு என்னுடைய டீனேஜில் மாறியது.

பழைய கந்தாயங்களை விடுங்கள். காமிக்ஸுக்கு வருவோம். என்னிடம் இருந்த பழைய காமிக்ஸ்களும், குழந்தைகளுக்கான இதழ்களும் நாங்கள் வீடுமாறியபின், முன்பிருந்த குடிசைவீட்டில் கட்டுக்கட்டாக சேகரிக்கப்பட்டிருந்தது. ஒரு தீவிபத்தில் அந்த குடிசைவீட்டோடு சேர்த்து பொக்கிஷங்கள் மொத்தமாக தீக்கிரையானது. கலைமகள், கல்கி, விகடன், அமுதசுரபி என்று எவ்வளவு தீபாவளி மலர்கள். சிகப்புநாடா மாதிரி எவ்வளவு அரிய இதழ்கள். அத்தனையும் காலி. அதற்கு பின்பு வீட்டில் இதழ்களை சேகரிக்கும் பழக்கமே எங்கள் வீட்டில் விட்டுப்போயிற்று. படித்துவிட்டு மாதாமாதம் கடைகளுக்கு போட்டுவிடுவார்கள்.

அப்போதெல்லாம் மடிப்பாக்கம் கூட்ரோடில் இருந்த டி.என்.எஸ். வேஸ்ட் பேப்பர் மார்ட், அரசு நூலகத்தைவிட அரிய சேவைகளை பகுதி மக்களுக்கு செய்துக் கொண்டிருந்தது. படிக்க தவறிய ராணி காமிக்ஸ்களை அங்கேதான் வாசித்தேன். நான், ஆனந்த் அண்ணா, பிரபா அண்ணா மூவரும் கூட்டணி. ஆளுக்கு இருபத்தைந்து காசு போட்டு டி.என்.எஸ். வேஸ்ட் பேப்பர் மார்ட்டில் ஒரு அக்கவுண்ட் துவக்கினோம். ஒரு புத்தகம் எடுத்துப்போக எழுபத்தைந்து காசு. வாசித்துவிட்டு திரும்பித் தந்தால் மீதி ஐம்பது காசு கொடுத்துவிடுவார்கள். கூடுதலாக இருபத்தைந்து காசு டாப்-அப் செய்தால், இன்னொரு புத்தகத்தை எடுத்துவரலாம். பாலாஜி அண்ணா இந்த பார்ட்னர்ஷிப்பில் இல்லை. அவர் சொந்தக் காசில்தான் புத்தகம் எடுப்பார். எங்களுக்கு இலவசமாகவே படிக்க கொடுப்பார். இப்படியாகதான் ராணி காமிக்ஸின் முதல் நூறு இதழ்களையும் படித்தோம்.

எட்டாவது படிக்கும்போது மீண்டும் காமிக்ஸ்களை சேகரிக்க ஆரம்பித்தேன். முத்து, லயன், மினி லயன், ஜீனியர் லயன், ராணி, பொன்னி, மேத்தா, அசோக் என்று கணிசமான இதழ்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் சேகரித்து வைத்திருந்தேன். கட்டு கட்டாக கட்டி பாலிதீன் கவரில் ரசகற்பூரம் எல்லாம் போட்டு வைத்திருந்தேன். ஒருநாள் மதியம் பார்த்தபோது அந்த கட்டுகளில் பெரும்பாலானவை இல்லை. இதயமே வெடித்துவிட்டது. தங்கை, அந்த அரிய பொக்கிஷங்களில் மதிப்பு தெரியாமல் தெருமுக்கில் இருந்த ஒரு வேஸ்ட் பேப்பர் கடையில் எடைக்குபோட்டு, ஏதோ வாங்கி சாப்பிட்டு விட்டிருக்கிறாள். அந்த கடைக்கு போய் கூடுதல் பணம் கொடுத்து இதழ்களை திரும்பப் பெற்றாலும், நிறைய இதழ்கள் மிஸ்ஸிங். திரும்ப கலெக்ட் செய்யும் ஆர்வமே போய்விட்டது. வீட்டுக்கு வருபவர்களும் அவ்வப்போது இரவல் வாங்கிக்கொண்டு போவார்கள். திரும்பத் தரமாட்டார்கள். அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் லயன் காமிக்ஸ் புத்துணர்வு பெற்று அட்டகாசமான கதைகளை கொண்டுவந்தபோது மறுபடியும் சேர்க்க ஆரம்பித்தேன். என்னிடம் இல்லாத இதழ்களை எல்லாம் வெளியே நண்பர்களிடம் எக்ஸேஞ்ச் மூலமாகவும், ப்ரீமியம் விலையிலும் (87 தீபாவளி மலரை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். அசல் விலை பத்து ரூபாய்தான்) வாங்கிக் குவித்தேன். இன்றுவரை சேர்த்து வருகிறேன். இன்னும் சில இதழ்கள் தேவை. தேடிக்கொண்டிருக்கிறேன். என் நூலக சேகரிப்பில் ஒரு செல்ஃப் நிறைய காமிக்ஸ்கள் உண்டு. யாருக்கும் காட்டுவதும் கிடையாது. இரவல் கொடுப்பதும் கிடையாது. இடைபட்ட காலங்களில் என்னுடைய வாசிப்புரசனை வேறு தளங்களுக்கு நகர்ந்துவிட்டாலும், இன்றும் காமிக்ஸ்களுக்குதான் முன்னுரிமை.

இடையில் ராணி காமிக்ஸ் நின்றுவிட்டது. அதற்கு முன்பாகவே பொன்னி, மேத்தா, அசோக் மாதிரி காமிக்ஸ்கள் காலி. லயன், முத்து காமிக்ஸ்களும் சொல்லிக்கொள்ளும்படியாக வருவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘இரத்தப்படலம்’ மெகா கலெக்‌ஷனின் விளைவாக லயன் – முத்து மீண்டும் புத்துணர்வு பெற்று தற்போது தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இதழிலும், மற்ற சகோதர இதழ்களிலும் முத்து-லயன் காமிக்ஸ்கள் தமிழக குழந்தைகளிடையே உருவாக்கிக் காட்டிய வாசிப்புசாதனைகளை கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் கொண்டுவர என்னால் முடிந்த முயற்சிகளை செய்திருக்கிறேன். என்ன செய்தாலும் என்னுடைய சிறுபிராயத்தை சுவாரஸ்யப்படுத்திய லயன் – முத்து குழுமத்தாருக்கு போதாது என்றாலும், சிறியளவிலான நன்றிக்கடன்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஓக்கே, நீண்ட இந்த காமிக்ஸ் புராணத்துக்கு இப்போது என்ன அவசியமென்ற சந்தேகம் வரலாம். லயன் காமிக்ஸ் வெற்றிகரமாக முப்பது ஆண்டுகளை கடந்துவிட்டது. முப்பதாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இரண்டு அதிரடியான நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

லயன் மேக்னம் ஸ்பெஷல் – 1 (விலை ரூ.400)
லயன் மேக்னம் ஸ்பெஷல் – 2 (விலை ரூ.150)

(மொத்தம் 900+ பக்கங்கள்)

இரண்டு ரூபாய்க்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காமிக்ஸ் வாங்கி படித்தவர்கள், இப்போது ஐநூற்றி ஐம்பது ரூபாய்க்கு காமிக்ஸா என்று வாய்பிளக்கலாம். விலை ஒரு பிரச்சினையே இல்லை. புத்தகத்தை புரட்டிப் பாருங்கள். புரிந்துக் கொள்வீர்கள்.

லயன் முத்து குழுமத்தார் மாதாமாதம் குறைந்தது இரண்டு, மூன்று இதழ்களை இப்போது தொடர்ச்சியாக கொண்டு வருகிறார்கள். ரூ.60/- மற்றும் ரூ.100/- விலையில் பளபள ஆர்ட் பேப்பரில், சர்வதேச தரத்தோடு வெளிவரும் இதழ்களுக்கு இந்த விலை ரொம்பவும் குறைவுதான்.

காமிக்ஸ் இதழ்களை தொடர்ந்து வாங்குபவர்கள், லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். பெரும்பாலான வாசகர்கள் இப்போது சந்தா முறையில்தான் வாங்குகிறார்கள். முன்பு போல புத்தகக் கடைகள் மூலமாக வினியோகம் செய்வதில்லை.

Prakash Publishers,
No 8/D-5, Chairman P.K.S.S.A Road, Amman Kovil Patti, Sivakasi, 626189
Phone : 04562 272649, Cell : 98423 19755

சென்னையில் இருப்பவர்கள், கே.கே.நகர் டிஸ்கவரி புக்பேலஸ் மூலமாகவும் காமிக்ஸ் வாங்கலாம். உரிமையாளர் வேடியப்பனுக்கு போன் செய்து சொன்னால், உங்களுக்கு எத்தனை புத்தகங்கள் தேவையோ அதை எடுத்து வைத்துவிடுவார். நண்பர்களுக்கும் சேர்த்து அவரிடம் புக்கிங் செய்துக் கொள்ளலாம் (முந்தைய இதழ்கள் சிலவும் அவரிடம் உண்டு). ‘லயன் மேக்னம் ஸ்பெஷல்’ அவரிடம்தான் ‘அட்வான்ஸ் புக்கிங்’ செய்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் கிடைத்துவிடக்கூடும்.

Discovery Book Palace
No. 6, Mahaveer Complex, First Floor,
Munusamy salai, K.K.Nagar,
Chennai – 600 078 (Near Pondicherry Guest House)
Vediyappan Cell : 9940446650

1 ஆகஸ்ட், 2014

அழைத்தார் பிரபாகரன்

ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ்’வென்று இருக்கும்.

பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அன்றைய நாட்களை எப்படி இவ்வளவு துல்லியமாக நினைவுக்கு கொண்டுவந்து ஜப்பார் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்ற நாளிலிருந்து அவர் சந்திக்க நேர்ந்த மனிதர்கள், இடங்கள், உண்ட உணவு, அடைந்த உணர்வு என்று அனைத்தையுமே அங்குல அங்குலமாக நாமே நேரில் சென்று வந்ததைப் போன்ற உணர்வை தரும் விவரிப்பு. இன மேலாதிக்க மனோபாவ நாடுகளின் சதியால் முற்றிலுமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்டுவிட்ட ‘தமிழ் ஈழம்’ என்கிற தமிழர்களின் நாடு எப்படியிருந்தது என்பதற்கு வரலாற்று சாட்சியாக, ஆவணமாக இந்நூலை கொடுத்திருக்கிறார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தவற்றையெல்லாம் எழுதி பக்கத்தை கூட்டவில்லை. அதையெல்லாம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகைகளில் நாம் வாசித்துவிட்டோம். தொலைக்காட்சியில் பார்த்துவிட்டோம். எனவே அதை மிகக்கவனமாக தவிர்த்திருக்கிறார். இந்நூலின் நாற்பத்தியெட்டு பக்கங்களுமே இதுவரை நாமறியாத சம்பவங்களை எக்ஸ்க்ளூஸிவ் தன்மையோடு கொடுக்கிறது.

அய்யாவுக்கு விருந்தோம்பல் செய்ய பணிக்கப்பட்ட பெண்புலி, ஊன்றுகோல் கொண்டு சிரமப்பட்டு நடந்தாலும் முகத்தில் நிரந்தரப் புன்னகையோடு வலம் வந்த தமிழ்ச்செல்வன், அய்யாவை ஆரத்தழுவி வரவேற்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், அய்யாவை வழியனுப்பி வைக்க பணிக்கப்பட்ட இளைஞர் பவநந்தன் என்று அப்பயணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அழுத்தமான சித்திரங்களை நம் மனதில் உருவாக்குகிறார்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்களில் அய்யா ஜபாரை மட்டும் தனியாக அழைத்து பிரத்யேகமாக சந்தித்தார் பிரபாகரன். “உங்களுடைய ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரோடு பிரபாகரன் நிகழ்த்திய உரையாடல்தான் நூலின் மையச்சரடு.

அந்த அற்புத நேரத்தை இவ்வாறாக விவரிக்கிறார்.

குழந்தையைப் போல ஓடிச்சென்று கடிப்பிடிக்க ஆசை. ஆனால் ஆயுதமேந்திய அந்த இளைஞர்கள் ஒரு கணம் என் எண்ணத்தில் மின்னி மறைந்தனர். என்னையும் எண்ணத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சிலையாக நின்றேன். என்னை நெருங்க, நெருங்க அவருடைய நடையின் வேகம் கூடுகிறது. நெருங்கி வந்து அப்படியே கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்கிறார். அவரது தாடை என் தோளில். இன்னும் பிடி இறுகுகிறது. “நான் உங்கள் பரம ரசிகன் அய்யா” என்கிறார்.

உறவுகளிடம் விடை பெற்று நாடு திரும்பும்போது ஓர் இராணுவ அதிகாரியோடு அய்யாவின் உரையாடல்.

“பிரபாகரன் எப்படி இருக்கிறார்?”

“நன்றாக இருக்கிறார்”

“ஓ. நாங்கள் இலங்கையர். அதனால் சகோதரர்கள். ஆனால் விதியின் குரூரம் நாங்கள் எதிரெதிர் முகாம்களில் இருக்கிறோம்”

“ஆம். அப்படிதான்”

“உங்களுக்கு ஒன்று தெரியுமா, இஸ்ரேலின் மோஷே தயானுக்கு பிறகு ராணுவ திட்டமிடலில் பிரபா வல்லவர். அவரைப்பற்றி நான் பெருமைப்பட வேண்டும்”

அனேகமாக ராஜபக்‌ஷேவும்கூட இந்த அதிகாரியை போலதான் பிரபாகரனை மதிப்பிட்டிருப்பார். இதைவிட வேறென்ன பெருமை வேண்டும் நமக்கு?

நூல் : அழைத்தார் பிரபாகரன்
எழுதியவர் : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
பக்கங்கள் : 48
விலை : ரூ.50
வெளியீடு : தமிழ் அலை, 80/24-B, பார்த்தசாரதி பேட்டை தெரு,
தேனாம்பேட்டை, சென்னை-600 086.
போன் : 044-24340200 மின்னஞ்சல் : tamilalai@gmail.com

நூல் வெளியீட்டு விழா 03-08-2014, ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்துக் கொள்ளலாம்.

28 ஜூலை, 2014

காசு மிச்சம்!

இயக்குனர் சேரன் அறிவித்திருக்கும் ‘வீட்டுக்கே சினிமா’ திட்டம் திரையரங்கங்களின் அநியாய கட்டணக் கொள்ளையிலிருந்து மக்களை காக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்குகிறது.

சினிமாக்காரர்கள் திருப்பி அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வீடியோ கேசட் காலத்திலிருந்தே வீடியோ பைரஸிகாரர்களுக்கும், சினிமாக்காரர்களுக்கும் தொடர்ந்து வரும் போர்தான். நியாயமாக சினிமா தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சிறியளவிலான லாபத்தை கூட பைரஸி குண்டர்கள் அபேஸ் செய்துக் கொண்டிருந்தார்கள். இதற்காக சினிமாத்துறையினர் அவ்வப்போது ஏதாவது கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவார்கள். கோட்டைக்கு போய் முதல்வரிடம் மனு கொடுப்பார்கள். க்ரூப் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான்.

கமலஹாசன் போன்றவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது, அதை பைரஸி ஆட்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு பதிலாக நாமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீண்டகாலமாக கொடுத்து வரும் குரலுக்கு திரையுலகினர் செவி சாய்த்ததில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை நேரிடையாக டி.டி.எச். முறையில் வெளியிட்டு பரவலாக கூடுதல் மக்களிடம் கொண்டு சென்று லாபம் பார்க்கும் திட்டத்தை அறிவித்தார். திரையரங்கு உரிமையாளர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அதை செயல்படுத்த முடியவில்லை.

அவரவர் படத்துக்கு பாதிப்பு எனும்போது திருட்டு வீடியோவுக்கு எதிராக கொதித்தெழுபவர்கள், அப்புறம் அதோடு அப்படியே அடங்கிப் போய்விடுவார்கள். இதுதான் திரையுலக சம்பிரதாயம். படம் திரையரங்கில் வெளியிடப்படுவதற்கு முன்பேகூட திருட்டு டிவிடியாக மக்களிடையே கொண்டுவந்து பைரஸி குண்டர்கள் அபார சாதனை படைத்ததும் உண்டு. இத்தனைக்கும் தமிழ் திரையுலகில் சக்திவாய்ந்த மனிதராக கருதப்படும் சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்’ திரைப்படமே கூட திரைக்கு வருவதற்கு முன்பாக திருட்டு டிவிடியாகதான் வெளிவந்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பைரஸி போரை முடிவுக்கு கொண்டுவர இயக்குனர் சேரன் முடிவெடுத்திருக்கிறார்.

சேரனின் திட்டம் என்ன?

கமல்ஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்துக்காக டி.டி.எச். என்கிற தளத்தை மட்டும்தான் பயன்படுத்த நினைத்தார். C2H (Cinema to Home) என்று பெயரிட்டு சேரன் முன்வைக்கும் திட்டத்தில், ஒரு சினிமாப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் அதே நேரத்தில் டி.டி.எச்., இன்டர்நெட், கேபிள் டிவி முறைகளிலும், உரிமம் பெற்ற ஒரிஜினல் டிவிடியாகவும் வெளியிடப்பட்டு வீடுகளுக்கே நேரடியாக சப்ளை செய்யும் திட்டம் இது.

இந்த ஆண்டு மொத்தமாக 298 படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. அதில் 159 திரைப்படங்கள் மட்டுமே திரைக்கு வந்தன. மீதி படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள், பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும்/வினியோகிக்கும் திரைப்படங்கள் தவிர்த்து மற்ற படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைப்பதில்லை. எடுத்து முடித்த படத்தை வெளியிட முடியாவிட்டால் தயாரிப்பாளருக்கு பெரியளவில் இழப்பு ஏற்படும். பைனான்ஸ் வாங்கி படமெடுத்தவர்கள் வட்டி கட்டியே ஓய்ந்துப் போகிறார்கள். இந்த பிரச்சினையை C2H மூலம் தீர்க்க முடியுமென்று சேரன் சொல்கிறார்.

ஒரு திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்திலேயே அப்படத்தின் ஒரிஜினல் டிவிடியை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறோம் என்று சேரன் கூறுகிறார். இதற்காக தமிழகம் முழுக்க 7000 முகவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஏஜெண்டும் சுமார் 4000 வீடுகளுக்கு டிவிடிகளை வினியோகிப்பார்கள்.

C2H திட்டம் அறிவிக்கப்படும்போதே அதில் சேரன் இயக்கியிருக்கும் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, அண்ணே, சிவப்பு எனக்கு பிடிக்கும், மேகா, அப்பாவின் மீசை, வேல்முருகன் போர்வெல் போன்ற திரைப்படங்கள் இணைந்திருக்கின்றன. இப்படங்கள் அனைத்துமே திரையரங்கில் மட்டுமல்லாது டிவிடி வெளியீடாகவும் மக்களுக்கு சுடச்சுட கிடைக்கும்.

மக்களுக்கு என்ன லாபம்?

நிறைய காசு மிச்சம். இதுதான் லாபம். திரையரங்குகள் எல்லாவகையிலும் மக்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள் என்பதை புதிய தலைமுறை ஜூன் 2014ல் வெளியான அட்டைப்படக் கட்டுரையில் விரிவாக வெளியிட்டிருந்தோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட மதிக்காமல், அரசின் வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு கூட மக்களிடமிருந்து இன்னமும் அநியாயமாக காசு பறித்துக் கொண்டிருக்கும் திரையரங்குகளின் கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும். பார்க்கிங் கட்டண கொள்ளை, அதிகபட்ச சில்லறை விலையை கண்டுகொள்ளாத கேண்டீன் கொள்ளை என்று தியேட்டர்கள் மக்களுக்கு மொட்டையடிக்கும் போக்கினை C2H மாற்றும் என்று நம்பலாம். ஐம்பது ரூபாய்க்கு ஒரிஜினல் டிவிடி வாங்கி குடும்பமே படம் பார்க்க முடியும் என்பது நல்ல விஷயம்தானே?

வரவேற்பும், எதிர்ப்பும்!

ஹாலிவுட்டின் வீடியோ ஆன் டிமாண்ட் போன்ற நல்ல முயற்சி இது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இப்படியொரு வாய்ப்புக்காகதான் காத்திருக்கிறார்கள் என்கிறார் திரைப்பட ஆய்வாளரும், எழுத்தாளருமான ‘கருந்தேள்’ ராஜேஷ்.

“கமல் ஏற்கனவே விசுவரூபத்துக்கு இதன் சற்றே மாறுபட்ட வடிவத்தை முயன்றார். தியேட்டரில் வெளிவர வாய்ப்பே இல்லை என்று முடங்கிவிட்ட பல திரைப்படங்கள் (எந்த சிப்பிக்குள் முத்து இருக்கும் என்று யாருக்கு தெரியும்) மக்களை சென்றடையும். திருட்டு டிவிடி, டாரண்ட் பிரிண்டுகளை இனி புறக்கணித்து படமெடுத்தவர்களின் அனுமதியோடு வரும் இந்த படங்களை குடும்பத்தோடு அமர்ந்து வீட்டில் பார்த்து மக்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். குறிப்பாக தமிழ்ப்படங்களை வெளியானவுடனேயே பார்க்க முடியாத அயல்நாட்டு தமிழர்கள் இம்முயற்சிக்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள்.

சினிமாவில் புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதை தக்கவைத்துக் கொள்வதில்தான் சேரன் கவனம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் தரமான படங்கள் இருக்குமாறு அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். மோசமான படங்கள் நிறைய வந்துவிடும் பட்சத்தில் சேரன் தொடங்கியதின் நோக்கம் நிறைவேறாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது” என்கிறார் ராஜேஷ்.

கனடாவில் வசிக்கும் நட்ராஜ் ஸ்ரீராம், இந்த திட்டத்தால் எதுவும் மாறப்போவதில்லை என்கிறார்.

“அமெரிக்கா, கனடா நாடுகளில் வசிக்கும் பாதி தமிழர்களின் வீடுகளில் ஐ.பி.டிவி இருக்கிறது. தமிழ் டிவி சேனல் நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றை இங்கே நாங்களே தேர்ந்தெடுத்து பார்த்துக்கொள்ள முடிகிறது. தமிழ் மூவிஸ் என்றொரு சேனல் வைத்திருக்கிறார்கள். அதில் எல்லா படத்தையுமே வெளிவந்து ஒன்று, இரண்டு வாரங்களுக்குள் பார்த்துவிடுகிறோம்.

ஐ.பி. டிவிக்கு மாதாமாதம் பணம் செலுத்திவிடுவதால் அவர்கள் உரிமம் பெறாமல் படங்களை ஒளிபரப்பினாலும் அது எனக்கு எவ்வித குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்த போவதில்லை. அது போலவே தகுந்த உரிமம் பெற்ற டிவிடியை பார்ப்பதால் பெருமிதம் எதுவும் கூடுதலாக ஏற்படுமென்றும் தோன்றவில்லை.

யூட்யூப் மாதிரி வீடியோ ஷேரிங் தளங்களை சேரன் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று தெரியவில்லை. இவர் கொடுக்கும் ஒரிஜினல் டிவிடியின் ஒரு காப்பியை அப்படியே இண்டர்நெட்டில் ஏற்றி, உலகத்துக்கே ஓசியாக கொடுக்கப் போகிறவர்களை எப்படி சமாளிக்கப் போகிறார்?” என்று இத்திட்டம் குறித்து கொஞ்சம் அவநம்பிக்கையோடே பேசுகிறார் நட்ராஜ்.

சுற்றுச்சூழலுக்கு கேடு?

மக்களுக்கு நேரிடையாக டிவிடி விநியோகிக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ‘பகீர்’ கிளப்புகிறார் எஸ்.கே.பி. என்ஜினியரிங் கல்லூரியின் தலைவரான எஸ்.கே.பி.கருணா.

“சேரன் என்னுடைய நண்பர்தான். திரையுலக நன்மைக்காக அவர் முன்னெடுக்கும் முயற்சியை வரவேற்கிறேன். ஆனால் அவரே சொல்லுவதை போல ஒரு திரைப்படத்துக்கு 25 லட்சம் டிவிடி வினியோகிக்கப்படுமானால், நூறு படத்துக்கு 25 கோடி டிவிடிக்கள். இந்த எண்ணிக்கையில் பாதி நிறைவேறினாலும் 12 கோடி டிவிடி குப்பைகள் தமிழகத்தில் குவிந்துவிடும். ஆறு மாதத்துக்கு 100 படம் என்றால் வருடத்துக்கு 24 கோடி டிவிடிகள்.

டிவிடி என்பது மனிதனுக்கு, நிலத்துக்கு, நீர்நிலைகளுக்கு கடும் அபாயம் விளைவிக்கக்கூடிய இரசாயனப் பொருட்களை கொண்டது. C2H திட்டம் மூலம் உருவாக்கப்படும் கோடிக்கணக்கான டிவிடிக்கள் நம்முடைய கிராமப்புற, சிறுநகர சாலையோரக் குப்பைகளிலும் குளம் குட்டைகளிலும் கொட்டப்படும் அபாயம் இருக்கிறது. குப்பை மேலாண்மை, நீர் நிலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு போன்ற அத்தியாவசியமான பல விஷயங்களுக்கு இன்னமும் அர்த்தமே தெரியாத அரசும், மக்களும் இருக்கும் நமது மாநிலத்தில் இது போன்ற திட்டம், நாமே வலியச் சென்று வம்பை விலை கொடுத்து வாங்குவது போலாகும்.

இந்தியாவின் மிகப் பெரிய தற்போதைய சவால், ஈ வேஸ்ட் எனப்படும் லட்சக்கணக்கான செல்போன்கள், கம்ப்யூட்டர், பிரிண்டர், டெலிவிஷன், எல்சிடி திரைகள், கீ போர்டுகள், டிவிடி, சிடிக்கள் போன்ற குப்பைகளை பத்திரமாக சேகரித்து, பொதுமக்களிடம் இருந்து அப்புறப் படுத்தி, அவற்றை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என்பதே? வழக்கம் போலவே, இதில் நாம் பெரிய தோல்வியை கண்டு வருகிறோம். ” என்று எச்சரிக்கிறார் கருணா.

தியேட்டர்கள் நிலை?

இதுபோல முன்பு முயற்சிக்கப்பட்ட திட்டங்களை எதிர்த்து, எப்படியெல்லாமோ தடுத்து நிறுத்திய தியேட்டர் உரிமையாளர்கள் நடப்புகளை கவனமாக உற்றுநோக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இம்முறை தயாரிப்பாளர்களும், படைப்பாளிகளும் சேரனுக்கு உறுதியான ஆதரவினை வெளிப்படையாக முன்வைத்திருப்பதால் அவசரப்பட்டு எதிர்நிலை எடுத்துவிட வேண்டாம் என்று தியேட்டர்காரர்கள் நினைத்திருக்கலாம். 3டி, ஐமேக்ஸ், டி.டி.எஸ், நவீன புரொஜெக்டர் திரையிடல் என்று விரைவாக தொழில்நுட்பரீதியில் மேம்பட்டு வரும் திரையிடல் தொழிலை வீட்டுக்கே சினிமா திட்டம் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்போதைக்கு C2H கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை மாதிரிதான். பிறக்கட்டுமே, பார்ப்போம்.

------------------------------------------------------------------

எல்லாரும் நல்லா இருப்போம்!
இயக்குனர் சேரன் பேட்டி
தியேட்டர்களின் அதிகாரத்தை படைப்பாளிகள் கட்டுப்படுத்த நினைக்கிறீர்களா?

எவ்வகையிலும் தியேட்டரின் வியாபாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை. திரையரங்கில் படங்கள் வெளிவந்தாலும், இப்போதும் திருட்டு டிவிடி பரவலாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. இம்மாதிரி தியேட்டர் தாண்டி வெளியிடங்களில் எங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட, குறைக்க நினைக்கிறோம். ஏற்கனவே ‘லைசென்ஸ்’ இல்லாமல் நடைபெறும் தொழிலுக்கு, ‘லைசென்ஸ்’ வழங்கி திரையுலகில் ஏற்பட்டுவிட்ட ஓட்டையை அடைப்பதால் யாருக்கும் பாதிப்பு இருக்கப்போவதில்லை. இதுவரை திரையரங்கு தொடர்பானவர்கள் யாரும் எங்களை எதிர்க்கவில்லை. அப்படியிருக்கையில் இது எப்படி அவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சினிமா என்பது பெரிய திரையை மனதில் வைத்து உருவாக்கப்படுவது. அதை பரவலாக சின்னத்திரைக்கு கொண்டுச் செல்ல சினிமாக்காரர்களே முயற்சிப்பது சரியா?

ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு படத்தில் ஒரு கதை சொல்கிறோம். பெரிய திரை, சின்னத்திரை அனைத்திலும் மக்களை கவரும் விதமாகதான் ஒரு நல்ல படைப்பாளி சிந்திக்கிறான். திரை சிறியதாக இருந்தால் எங்கள் கலையின் தரம் குறையுமென்று நான் நம்பவில்லை.

இப்போதே டிவியில் திருட்டு டிவிடி வழியாகவோ, சேனல் வழியாகவோ பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படாத இந்த படைப்பு தொடர்பான கலை நெருடல், நாங்கள் முறைப்படி தயாரிப்பாளரின் அனுமதியோடு கொண்டுவரும்போதுதான் ஏற்படும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல.

தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே டிவிடி கொண்டுவந்து விட்டால் சேட்டிலைட் ரைட்ஸ் மதிப்பு படங்களுக்கு குறைந்துவிடாதா?

ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இருக்கிற படங்களுக்குதான் தியேட்டரும் கிடைக்கிறது. சேட்டிலைட் ரைட்ஸில் நல்ல தொகையும் கிடைக்கிறது. இப்போது சிறிய படங்களுக்கு என்ன தொகை சேட்டிலைட் ரைட்ஸில் கிடைக்கிறதோ, அதே தொகைதான் C2H திட்டத்தில் சேர்ந்தாலும் கிடைக்கும். யாரும் யாருக்கும் அள்ளி அள்ளி கொடுத்துவிடுவதில்லை. நாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிய லாபத்தை நாங்கள் நியாயமான முறையில் பெற விரும்புகிறோம். திருட்டு டிவிடியில் பரவலாக விற்கப்பட்ட படங்களுக்கு சேட்டிலைட் ரைட்ஸ் விலை குறைக்கப்பட்டதாக ஏதாவது உதாரணம் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். நாங்கள் ஒரு முயற்சியை முன்னெடுக்கும் போது மட்டும் ஏன் இவ்வளவு லாஜிக் பார்க்கிறீர்கள்?

இத்தனை நாட்கள் இல்லாமல் திடீரென்று ஏன் இந்த திட்டம்?

எல்லோருமே தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். தவித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. இப்போதுகூட நீந்த முயற்சிக்காவிட்டால், எப்போதுமே நாங்கள் எதையும் செய்ய முடியாமல் போய்விடும். தமிழ் சினிமா துறை ஆரோக்கியமாக இல்லை. கடந்த ஆண்டு வெளியான படங்களில் வெறும் பத்து சதவிகித படங்கள்தான் லாபம் பார்த்தது அல்லது இழப்பை சந்திக்காமல் இருந்தது. நாங்கள் எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அனைத்துத் தரப்பினரிடம் கலந்து பேசி நல்ல முடிவாக எடுத்திருக்கிறோம். C2H மூழ்கிக் கொண்டிருக்கிறவர்களை கரை சேர்க்கும் என்று நம்புகிறோம். நாங்கள் வாழ நாங்களே உருவாக்கியிருக்கும் திட்டம். இது யாருக்கும், எதற்கும் எதிரான திட்டமல்ல என்பதை அனைவரும் புரிந்துகொண்டால் போதும்.

மக்களுக்கு என்ன லாபம்?

படம் பார்க்கும்போது, பார்த்துக் கொண்டிருப்பது திருட்டு டிவிடி அல்ல என்கிற உணர்வோடு சந்தோஷமாக பார்க்கலாம். இந்த உரிமைகள் எல்லாமே படத்தின் தயாரிப்பாளருக்கே என்பதால், அவருக்கு நல்ல லாபம் கிடைத்து மக்களுக்கு நல்ல படங்களை தொடர்ந்து தர முயற்சிப்பார். நேரமில்லாததால்தான் நிறைய பேர் தியேட்டருக்கு வருவதில்லை என்று எங்கள் ஆய்வாளர்கள் சொன்னார்கள். அவர்களுக்கு நேரம் இருக்கும்போது, அவர்கள் விரும்பும் படம் தியேட்டரில் இருப்பதில்லை. மக்களுக்கும், சினிமாவுக்கும் இருக்கும் இடைவெளி எங்கள் திட்டத்தால் குறையும்.

------------------------------------------------------------------

திட்டம் குறித்த சினிமா பிரபலங்களின் கருத்து :

சீமான்
எடுத்த படத்தை திரைக்கு கொண்டுவருவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. சிதைந்து அழிந்துக் கொண்டிருக்கும் திரையுலகை காப்பாற்ற வேண்டும். இந்த திட்டம் மூலமாக சேரன் மிகப்பெரிய புரட்சியை முன்னெடுக்கிறார்.

பாரதிராஜா
என்னுடைய படங்கள் வந்த தடம் தெரியாமல் போவதற்கு காரணம் தியேட்டர்களில் நடக்கும் அரசியல்தான். படைப்பாளி என்பவன் சுதந்திர சிந்தனையாளன். நாம் எதை கொண்டு வந்தோம். அதை இழக்க. இது புதிய முயற்சி. முயற்சித்து வெற்றி காண்போம்.

பாக்யராஜ்
பூனைக்கு மணி கட்டி இருக்கிறார் சேரன். சினிமா மோசமான சூழலில் இருக்கிறது. சினிமா எடுப்பவர்கள் படுமோசமான நிலையில் இருக்கிறார்கள். அனைவரும் கரை சேரவேண்டும். இந்த முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு தரவேண்டும்.

அமீர்
இது யாரையும் எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட முயற்சி இல்லை. வெளிவராமல் அவதிப்படும் திரைப்படங்களை இதன் மூலம் வெளியிட முடியும். திரையரங்கு கிடைக்காத படங்களை C2H தான் காப்பாற்ற முடியும்.

கேயார்
அருமையான பாதையை அமைத்திருக்கிறார் சேரன். இத்திட்டம் மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும். திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் இதை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது.

(நன்றி : புதிய தலைமுறை)

5 ஜூலை, 2014

அடுத்த பின்லேடன்!

“அப்புறம் உங்களை எல்லாம் நிச்சயமாக நியூயார்க்கில் வந்து சந்திக்கிறேன்”

நீண்டகாலம் சிறைபட்டு கைதியாக இருந்து வெளியில் வந்து சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நாளில் யாருமே உணர்ச்சிவசப்பட்டுதான் இருப்பார்கள். எதுவுமே பேசமாட்டார்கள். ஆனால் இந்த வார்த்தைகளை அமெரிக்க அதிகாரிகளை நோக்கி அபுதுவா சொல்லும்போது அவர் முகம் இறுகியிருந்தது. கண்களில் கொலைவெறி இருந்தது.

முப்பத்தி நான்கு வயதில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர், அடுத்த நான்கு ஆண்டுகளை ஈராக்கின் பக்கா கண்காணிப்பு முகாமில் கைதியாக கழித்தார். கண்காணிப்பு காலத்தில் அல்லாவே என்று அமைதியாக கிடந்த இவர் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக எல்லாம் இருக்கக்கூடியவர் அல்ல என்று அதிகாரிகள் அவர்களாகவே முடிவெடுத்தார்கள்.

சிறைகாலத்தில் அபுதுவா எந்த வம்புதும்புக்கும் சம்பந்தமில்லாதவராகவே தெரிந்தார் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். ஏதோ ஒரு மசூதியில் கிளெர்க் ஆக பணியாற்றியதாகவும், துப்பாக்கியையும் வெடிகுண்டையும் சினிமாவில் மட்டுமே பார்த்திருப்பதாகவும் கற்பூரம் ஏற்றி அடிக்காத குறையாக சத்தியம் செய்தார். சந்தேகத்தின் பேரில் அமெரிக்காவின் வதைமுகாம்களில் கண்காணிப்புக்கு உட்பட்டு காரணமே இல்லாமல் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதுமாதிரி அப்பாவிகளில் ஒருவர்தான் அபுதுவாவும் என்று அதிகாரிகள் கருதினார்கள்.

2009ல் தாங்களே ரிலீஸ் செய்த அபுதுவாவின் தலைக்கு, அடுத்த இரண்டு ஆண்டில் பத்து மில்லியன் டாலரை (தோராயமாக அறுபது கோடி ரூபாய்) விலையாக அறிவிப்போம் என்று அமெரிக்கா கனவிலும் நினைத்ததில்லை. அமெரிக்க அரசின் இந்த சிறப்புப் பரிசுத் திட்டத்தில் அபுதுவாவைவிட ஒரே ஒருவர்தான் விலை விஷயத்தில் லீடிங்கில் இருக்கிறார். அவர் அல்குவைதாவின் தற்போதைய தலைவர் அய்மன் அல்-ஸவாரி. விரைவில் அல்-ஸவாரியை முந்தி, நெம்பர் ஒன் இடத்தை அபுதுவா பெறக்கூடும் என்று கருதப்படுகிறது. அன்று சொன்னமாதிரி நிஜமாகவே அபுதுவா நியூயார்க்குக்கே வந்துவிடுவாரே என்று அமெரிக்கா அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக ஈராக்கின் பல நகரங்களை பின்லேடன் ஆதரவுப்படைகள் கைப்பற்றி வருவதாக செய்தித்தாள்களில் படித்து வருகிறீர்கள் இல்லையா, அந்த அமைப்பின் தலைவர்தான் இந்த அபுதுவா.

யார் இவர்?

அமெரிக்க இராணுவ ஆவணங்களின்படி ஈராக்கின் சமாரா நகரில் 1971ல் பிறந்தவர் என்று நம்பப்படுகிறது. இப்ராஹிம் அவ்வாத் இப்ராஹிம் அலி அல் பத்ரி அல் சமாரி என்பது முழுப்பெயர். அபுபக்கர் அல் பாக்தாதி என்றே ஊடகங்கள் இவரை எழுதுகின்றன. இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் இடையே பிரபலமான டாக்டர் இப்ராகிம் என்கிற பெயர் இவரைதான் சுட்டுகிறது என்கிறார்கள். மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கும் பெயர் அபுதுவா.

2003ல் ஈராக்கில் அமெரிக்க ஊடுருவல் நிகழ்ந்தபோது மிகச்சிறிய அளவிலான சில போராளிக் குழுக்களை அபுதுவா தலைமையேற்று நடத்தியதாக சொல்கிறார்கள். அல்குவைதாவின் ஈராக் கிளையான ஐ.எஸ்.ஐ. (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக்) அமைப்பிலும் அவர் கவுன்சில் உறுப்பினராக இருந்ததாக தகவல். 2009ல் அமெரிக்க கண்காணிப்பு முகாமில் இருந்து விடுதலை ஆனவருக்கு சில மாதங்களிலேயே அதிர்ஷ்டம் அடித்தது. ஐ.எஸ்.ஐ. தலைவர் அபு ஓமர் அல் பாக்தாதி திடீரென்று கொல்லப்பட, அவருடைய இடம் இவருக்கு 2010 மே மாதம் கிடைத்தது. அதன்பிறகு ஈராக்கில் நடந்துவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் இவரே காரணமாக இருக்கிறார். 2011ல் அல்குவைதா தலைவர் பின்லேடன் அமெரிக்காவால் கொல்லப்பட்டபோது, அதற்காக தகுந்த முறையில் பழிவாங்கப்படும் என்றும் அமெரிக்காவை ஓர் அறிக்கை மூலம் எச்சரித்தார் அபுதுவா.

அல்குவைதாவோடு முரண்பாடு

2013 ஏப்ரலில் சிரியாவில் உள்நாட்டு கலவரம் வெடித்தபோது, அதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அபுதுவா முடிவெடுத்தார். ஐ.எஸ்.ஐ. அமைப்பை கொஞ்சம் விரிவுபடுத்தி சிரியாவையும் சேர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் சிரியா) என்று அமைப்பின் பெயரை மாற்றி, சிரியாவின் கலகத்தில் தானும் ஈடுபட்டார். தன்னுடைய சிறிய இராணுவத்துக்கு தலைமையேற்று போரிட்டு சிரியாவின் பல நகரங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். அபுதுவாவின் இந்த தான் தோன்றித்தனமான போக்கை அல்குவைதா தலைமை ரசிக்கவில்லை. ஈராக்கோடு உங்கள் வேலைகளை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று எச்சரித்தபோது, இனிமேல் தாங்கள் அல்குவைதாவின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்திர இஸ்லாமிய அமைப்பு என்று அபுதுவா அறிவித்து விட்டார்.

மாயாவி ஷேக்

அபுதுவா மதக்கல்வியில் பி.எச்.டி. முடித்தவர் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு இடங்களுக்கு சென்று மதப்பிரச்சாரத்தையும், தீவிரவாத வெறியை ஊட்டுவதிலும் தன் வாழ்நாளை செலவழிக்கிறார். உலகளவிலான ஜிகாதி அறிவுஜீவிகளின் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. பின்லேடன் மரணத்துக்கு பிறகு அல்குவைதா மீதிருந்த நம்பிக்கை இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களிடையே குறைந்துவரும் நிலையில், அவர்களின் கலங்கரை விளக்கமாக அபுதுவா உருவெடுத்திருக்கிறார். குறிப்பாக ஈராக்கில் அடுத்தடுத்து சிறைகள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விடுதலை செய்த இவரது நடவடிக்கைக்கு சன்னி இஸ்லாம் வகுப்பினரிடையே நல்ல வரவேற்பு.

அல்குவைதாவின் செயல்பாடுகளுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் செயல்பாடுகளுக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. வீடியோ டேப்புகள் மூலமாக தங்கள் நடவடிக்கைகளை உலகறியச் செய்வது அல்குவைதா பாணி. ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு அம்மாதிரி விளம்பரங்கள் மீது நம்பிக்கை இல்லை. உயிருக்கு அஞ்சாத சுமார் ஏழாயிரம் போராளிகள் அபுதுவாவின் கட்டளைக்காக எப்போதும் காத்திருக்கிறார்கள். தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது கண்கள் மட்டுமே தெரியும் வண்ணம் ஒரு முகமூடி அணிந்திருப்பாராம் அபுதுவா. அதனாலேயே இவரை ‘மாயாவி ஷேக்’ என்று ஜிகாதிகள் அழைக்கிறார்கள். அமெரிக்க கண்காணிப்பு முகாமில் இருந்தபோது எடுத்த ஓரிரண்டு போட்டோக்கள் மட்டும்தான் இவரை அடையாளப்படுத்தி அறிந்துகொள்ள இருக்கும் ஒரே ஆதாரம்.

நோக்கம் என்ன?

இஸ்லாமியர்களின் எல்லை என்றொரு கனவு அபுதுவாவுக்கு உண்டு. ஐரோப்பாவில் ஸ்பெயினின் வடக்கு எல்லையில் துவங்கி, வட ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா முழுக்க ஒரே இஸ்லாமிய குடையின் கீழ் அமையவேண்டும் என்று விரும்புகிறார் (ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கனவு வரைபடத்தை காண்க). இஸ்லாமிய ஆளுகைக்குள் இருக்கும் பிரதேசங்களை ஷரியத் சட்டம்தான் ஆளவேண்டுமாம். இந்த லட்சியத்துக்கு முதல் படியாகதான் சிரியா, ஈராக் இரண்டு நாடுகளையும் கைப்பற்றி ஒரே ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டுமென்று சமீபமாக போராடி வருகிறார்கள். சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் இவர்களது பங்கு கணிசமாக இருந்தது. ஈராக்கிலும் பல்வேறு சிறுநகரங்களை வென்று பாக்தாத்தை நெருங்கி விட்டார்கள்.

முதற்கட்ட வெற்றியை ருசித்தபின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் விரிவுப்படுத்தப்படுமாம். இந்தியா முழுக்க இஸ்லாமிய தேசம் என்று அபுதுவாவின் ஆதரவாளர்கள் நம்புவதால், முளையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமக்கு மிகப்பெரும் தலைவலியாக வளர்ந்து நிற்கப்போவது இவர்கள்தான்.

நிதி நிலவரம் எப்படி?

கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் நிதி திரட்டியதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. அல்குவைதாவுக்கு முன்பு நிதி கொடுத்துக் கொண்டிருந்த புரவலர்கள் பலரும் இப்போது புதிய செல்லப்பிள்ளையான அபுதுவாவையும் வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவுமின்றி தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் இருக்கும் செல்வங்களை அப்படியே சூறையாடும் பழங்கால இராணுவபாணியை இவ்வமைப்பு பின்பற்றுகிறது. சமீபத்தில் ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியபோது, அங்கிருந்த வங்கியை சூறையாடியதின் மூலமாக மட்டுமே சுமார் நானூறு மில்லியன் டாலரை கொள்ளையடித்திருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு இப்போது இரண்டு பில்லியன் டாலர் சொத்துமதிப்பு இருக்கலாம் என்றொரு கணக்கீடு.

இன்றைய நிலையில் உலகின் மிக ஆபத்தான மனிதராக அபுதுவாவை மேற்கத்திய ஊடகங்கள் விமர்சிக்கின்றன. இதுவரை உலகம் கண்டிராத வகையில் வீரமும், அறிவும் ஒருங்கே அமைந்திருக்கும் தீவிரவாத தலைவர், மிகக்குறுகிய காலத்திலேயே அற்புதங்களை நிகழ்த்த வல்லவர் என்பதால் அமெரிக்கா முள்ளின் மீது விழுந்த சேலையை எடுக்கும் கவனத்தில் இவரை கையாள நினைக்கிறது.

கடைசி செய்தி :

‘இஸ்லாமிய தேசம்’ உருவானது!

சிரியா மற்றும் ஈராக்கில் இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றி இருக்கும் பகுதிகளை தனிநாடாக அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்த நாட்டுக்கு ‘இஸ்லாமிய தேசம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதற்கு கலிபாவாக (மன்னராக) அபுதுவா இருப்பார் என்று அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இனி ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற பெயரில் தாங்கள் இயங்கப்போவதில்லை, தங்களுடைய அமைப்பையே ‘இஸ்லாமிய தேசம்’ என்கிற பெயரில்தான் நடத்தப்போகிறோம் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

(நன்றி : புதிய தலைமுறை)

1 ஜூலை, 2014

போலாம் ரைட்!

“மோசமான சர்வீஸ்” என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள். “எவ்வளவு உழைச்சாலும் நல்ல பேரே இல்லைங்க. ஜனங்களுக்கு நன்றியே கிடையாது” என்று போக்குவரத்துத் துறையினரும் புலம்புகிறார்கள். பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டாலும் தமிழகத்தை பொறுத்தவரை பொது போக்குவரத்தின் சூப்பர் ஸ்டார் பஸ்தான்.

நாட்டிலேயே அதிக அரசுப் பேருந்துகள் தமிழகத்தில்தான் ஓடுகிறது. 1972ல் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்டதில் தொடங்கும் இத்துறையின் வரலாறு படைத்திருக்கும் மகத்தான சாதனைகள் ஏராளம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வெறும் முப்பது பஸ்களோடு சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்ட சேவை இது. இன்று தோராயமாக இருபதாயிரம் பேருந்துகள். ஒரு லட்சத்து முப்பதாயிரம் தொழிலாளர்கள். நிர்வாக வசதிக்காக எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் அரசுப்பேருந்து போக்குவரத்துத் துறை தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரம், கேரளா, கர்னாடகா, பாண்டிச்சேரி என்று அண்டை மாநிலங்களுக்கும் பஸ் விட்டு தென்னிந்தியாவுக்கே பெரும் சேவை செய்து வருகிறது.

அதிலும் தமிழக அரசு நடத்திவரும் சேவையில் இருக்குமளவுக்கு வகை வகையான பேருந்துகள் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை. நகர நெரிசலை கணக்கில் கொண்டு நகரப்பேருந்து மற்றும் தாழ்தளப் பேருந்து, புறநகர்ப் பகுதிகளை நகரோடு இணைக்கும் புறநகர்ப் பேருந்து, பெரிய நகரங்களுக்கு இடையே ஓடும் வீடியோ கோச் மற்றும் டீலக்ஸ் பேருந்து, பிசினஸ் ட்ரிப் அடிக்கும் தொழிலதிபர்களின் தேவையை மனதில் நிறுத்தி அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து, பெருநகரங்களை இணைக்கும் வண்ணம் சொகுசான பயணம் தரும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட செமி ஸ்லீப்பர் கோச் பேருந்து, வால்வோ பேருந்து என்று டிசைன் டிசைனாக பட்டையைக் கிளப்புகிறார்கள்.

“எல்லாம் சரிதான். ஆனால் கஸ்டமர் சர்வீஸ் படுமோசம். கண்டக்டர்கள் பயணிகளுக்கு மரியாதையே தருவதில்லை. வயதான பயணிகளையும் கூட ஒருமையில் ஏய்ச்சுகிறார்கள். டிரைவர்கள் வேண்டுமென்றே ஸ்டாப்பிங்கை விட்டு தள்ளிதான் நிறுத்துகிறார்கள். எப்போதுமே சரியான சில்லறையை பையில் வைத்திருக்க முடியுமா. சில்லறை இல்லையென்றால் ‘வள்’ளென்று விழுகிறார்கள். நேரத்துக்கு வண்டிகள் வருவதில்லை. சாதாரண ஒயிட் போர்ட் பேருந்துகள் அபூர்வம். சொகுசுப் பேருந்து என்று போர்ட் மாட்டி கொள்ளை அடிக்கிறார்கள். இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். முதல்வரோ, போக்குவரத்துத்துறை அமைச்சரோ ஒருமுறை மாறுவேடத்தில் பஸ்ஸில் பயணித்தால்தான் மக்களின் கஷ்டம் அவர்களுக்கு தெரியும்” என்று பொறிந்துத் தள்ளுகிறார் சென்னையில் பணிபுரியும் ஆக்னஸ். வழக்கமாக பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அத்தனை பேருமே சொல்லி வைத்தாற்போல இதேபோலதான் பொங்குகிறார்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. குறுகிய தூர பயணமோ அல்லது நீண்டதூர பயணமோ, பயணம் என்பது பணிகள் தடையற நடப்பதற்கும், தொழில்வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. சமூகமும், பொருளாதாரமும் இணையும் புள்ளி போக்குவரத்தில் இருக்கிறது. சாலைவழி போக்குவரத்துதான் பிரதானம் எனும்போது பேருந்து போக்குவரத்தில் இருக்கும் பிரச்சினைகள் எல்லாத் தரப்பினரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய தன்மை கொண்டவை.

பொதுவாக தமிழக போக்குவரத்துத்துறை மீது பயணிகளால் சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?

* அடிக்கடி பேருந்து வருவதில்லை. குறிப்பாக காலை அலுவலகம்/பள்ளி/கல்லூரி நேரங்களில் போதுமான இடைவெளியில் பேருந்துகள் தேவை. குறைவான வண்டிகள் இயக்கப்படும் பகுதிகளில் கூட்டம் அதிகமாகி பயணிப்பவர்களுக்கு நரகவேதனையாக அமைகிறது.

* பெரும்பாலான பேருந்து வழித்தடங்கள் வசூலை மனதில் கொண்டே திட்டமிடப்படுகின்றன. இதனால் செல்லவேண்டிய இடத்துக்கு இரண்டு, மூன்று பேருந்துகள் பிடித்து செல்லவேண்டியதால் ஏற்படும் காலதாமதம், போக்குவரத்து நெரிசல், மனவுளைச்சல்.

* சமீப காலங்களில் அரசு போக்குவரத்து நிறுவனங்களில் கட்டண உயர்வு இரண்டு மூன்று மடங்காக ஏறிவிட்டது. சாதாரணப் பேருந்துகளையே கூட சொகுசுப்பேருந்து என்று பெயர் மாற்றி அநியாயமாக கொள்ளையடிக்கிறார்கள்.

* பேருந்து நிலையங்கள் குறைந்த இடைவெளி இல்லாமல் மிக தூரமாக அமைக்கப்படுகின்றன. இதனால் நீண்டதூரம் நடந்துவந்து பஸ் ஏறவேண்டியிருக்கிறது. சில குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் எல்லா பஸ்களும் நிற்பதில்லை.

* குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ்கள் வருவதில்லை. வருமென்று உறுதிசொல்ல ‘டைம் கீப்பர்கள்’ இருப்பதில்லை. எனவே நீண்டநேரம் காத்திருத்தலிலேயே ஒரு பயணி காலம் கழிக்க வேண்டியிருக்கிறது.

* இரவு நேரங்களில் பேருந்து நிலையங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை. சமூக விரோதிகளிடமிருந்து பயணிகளை பாதுகாக்க போக்குவரத்துத்துறை எந்த ஏற்பாடும் செய்வதில்லை.

* பேருந்து நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அழுக்காக, சுகாதாரமற்ற நிலையில் இருக்கின்றன.

* மோசமான நிலையில் பராமரிக்கப்படும் பேருந்துகளால் விபத்துகள் நேருகின்றன.

“இதில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளக் கூடிய குற்றச்சாட்டுகளே அல்ல. இவை உலகளவில் எல்லா நாடுகளிலுமே பஸ் போக்குவரத்து குறித்து சொல்லக்கூடிய பொதுவான விஷயங்கள்தான். மற்ற மாநிலங்களுக்கு போய் பஸ்ஸில் பயணித்துப் பார்த்தால், தமிழகம் எவ்வளவு மேல் என்பதை அறிவீர்கள். நம்முடைய பேருந்துகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் மக்கள் தொகைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும் மேலும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போகுமளவுக்கு சாலை வசதிகள் இல்லை. இப்போதே போக்குவரத்துச் சிக்கலில் முழி பிதுங்குகிறது. எனவேதான் சிறியரக பேருந்துகளை சென்னையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். படிப்படியாக இச்சேவை எல்லா நகரங்களுக்கும் விரிவாக்கப்படலாம்.

சேவைதான் என்றாலும் நாங்களும் அரசுக்கு லாபம் காட்டவேண்டிய அல்லது குறைந்த நஷ்டத்தை கணக்கு காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே வசூலையும் கூட மனதில் வைத்து பேருந்து வழித்தடங்களை முடிவு செய்கிறோம். அதிலென்ன தவறு. இத்தனைக்கும் கட்டணத்தைப் பொறுத்தவரை லாப நோக்கில் நாங்கள் நிர்ணயிக்கவில்லை. எரிபொருள் விலையேற்றம், வாகனங்களின்/உதிரிபாகங்களின் விலையை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட நாங்கள் செய்துவரும் சேவை மிகக்குறைந்த விலை சேவைதான்.

சில டிப்போக்களில் சாதாரணப் பேருந்துகளின் போர்டை சொகுசுப் பேருந்து என்று மாற்றி ஓட்டுகிறார்கள். அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்தந்த டிப்போ மேலாளர்கள் அதிக வசூல் காட்டி சாதனை புரியவேண்டும் என்கிற ஆர்வக்கோளாறில் செய்யும் செயல் இது. தகுந்த ஆதாரங்களோடு செய்யப்படும் புகார்களுக்கு அவ்வப்போது நடவடிக்கை எடுத்துதான் வருகிறோம்.

மேலும் குறைகளே இல்லாமல் இயங்குவதற்கு அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் இல்லை. இப்போது இருக்கும் கட்டமைப்பை வைத்து, எவ்வளவு சிறப்பாக செய்யமுடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்கிறோம். பொதுபோக்குவரத்து குறித்து அரசின் கொள்கைகளிலேயே மாற்றங்கள் கொண்டுவந்தால்தான் சரிசெய்ய முடியும். இவற்றையெல்லாம் செய்ய பெரும் நிதி தேவைப்படும். நம்முடைய நிதி ஒதுக்கீட்டில் போக்குவரத்துக்கு பெரிய ஒதுக்கீடும் இல்லை” என்றார் போக்குவரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

சென்னை தவிர்த்து தமிழகத்தின் மற்ற ஊர்களில் தனியார் பஸ்கள் ஓடுகின்றன. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களின் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை தனியார் மீதும் வைக்கலாம். ஆனால் மக்களோ தனியாரை ‘அட்ஜஸ்ட்’ செய்துக் கொள்கிறார்கள்.

“திங்களூரிலிருந்து தினமும் ஈரோடுக்கு தனியார் பஸ்ஸில்தான் போகிறேன். முன்பு எங்கள் ஊருக்கு நிறைய பஸ் விடவேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் தனியார் வண்டிகள் நிறைய வந்தபிறகு அந்த கோரிக்கைக்கு தேவை இல்லாமல் போய்விட்டது. நடுத்தர வர்க்கத்துக்கு பஸ் ஒரு வரம். இருசக்கர வாகனமோ/காரோ பயன்படுத்தினால் நம்முடைய வருமானத்தில் பெரும் பகுதியை அது எடுத்துக் கொள்ளும்” என்கிறார் ஈரோட்டில் வீடியோகிராபராக பணியாற்றும் மூர்த்தி.

“அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் பேருந்தையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. சென்னை நகரில் மட்டும் சுமார் மூவாயிரம் பேருந்துகள் ஓடுகின்றன. இந்த எண்ணிக்கை இன்னும் இரண்டு மடங்காக வேண்டும். அதற்கேற்ப நகரின் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இருக்கும் நாம், நம்முடைய பேருந்துகளில் ஜி.பி.எஸ் போன்ற வசதிகளை ஏற்படுத்தினால் பயணம் என்பது குறைகளற்ற நல்ல அனுபவமாக மக்களுக்கு அமையும்” என்கிறார் சென்னை கனெக்ட் அமைப்பின் திட்ட இயக்குனரான ராஜ் செருபால்.

சிறப்பான பேருந்து சேவையை மேம்படுத்தி மக்களுக்கு அளிக்க அரசு இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்?

* உலகளாவிய தர அளவுகோல்களையொட்டி வடிவமைக்கப்படும் பேருந்துகளை அரசு வாங்க வேண்டும். நிற்பதற்கு வசதியாக நிறைய இடம், உடல் ஊனமுற்றோர் பயன்படுத்த வாகான படிக்கட்டு மற்றும் இருக்கைகள், லக்கேஜ் வைக்க வசதி, சைக்கிள்களை ஏற்ற இடம் போன்றவை ஒருங்கே அமையுமாறு பேருந்துகளை உருவாக்க வேண்டும்.

* உள்ளாட்சி அமைப்புகளை நம்பாமல் பேருந்து நிறுத்தங்களில் நிலையங்களை போக்குவரத்து நிறுவனமே கட்ட வேண்டும். வெயில்/மழை படாமல் இருக்க தரமான மேற்கூறை, அமருவதற்கு வசதி, இரவுகளிலும் பயணி பாதுகாப்பை உணர மின்னொளி வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றுக்கு முறையான பராமரிப்பு ஆகியவற்றை உருவாக்க வேண்டும். முக்கியமான பேருந்து நிலையங்களில் நவீன கழிப்பறை வசதி கட்டாயம் அமையவேண்டும்.

* பயணிகளோடு டிரைவர்/கண்டக்டர் ஆகியோருக்கு நல்லுறவு கட்டாயம். இதை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். கண்டக்டர்களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் ஸ்மார்ட்கார்ட் போன்ற டிக்கெட் முறைகளை அறிமுகப்படுத்தலாம்.

* பெரும்பாலான மக்கள் நீண்டதூர பயணங்களை திட்டமிடும்போது போய் சேரவேண்டிய இடங்களுக்கு பஸ் வசதி இருக்கிறதா, இருந்தால் எத்தனை மணிக்கு கிளம்பும் போன்ற விவரங்கள் தெரியாததாலேயே ரயில் போக்குவரத்தை பெரிதும் விரும்புகிறார்கள். அரசு போக்குவரத்து சேவை குறித்த தகவல்களை இருபத்து நான்கு மணி நேரமும் இலவசமாக தர ‘கால் சென்டர்’ போன்ற அமைப்பை நிறுவலாம்.

* பேருந்து வழித்தட சேவையை பொறுத்தவரை கருத்தியல்ரீதியாக அந்தந்த பகுதி மக்களின் பங்கேற்பும் இருந்தால் நல்லது. போக்குவரத்து அதிகாரிகள் தாம் பணிபுரியும் பகுதிகளில் இருக்கும் மக்கள் நல அமைப்புகளோடு நல்லுறவில் இருக்க வேண்டும்.