18 ஜூலை, 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - ட்ரைலர்

இயக்குனர் வி.சி.வடிவுடையானின் முந்தையப் படமான ‘சாமிடா’ பார்த்து, அதன் மேக்கிங் பர்ஃபெக்‌ஷனில் அசந்திருக்கிறேன். அது மொக்கைப்படம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனாலும் அப்படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் சரக்கிருக்கும் ஆட்கள் என்பதை உணர முடிந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரது அடுத்த படமான ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ திரைக்கு தயாராகி இருக்கிறது. படத்துக்கு டைட்டிலை ‘நறுக்’கென்று ஏன் இவர் பிடிக்க மாட்டேன் என்கிறார் என்று வருத்தமாக இருக்கிறது. வடிவுடையான் அதிரடி மலையாள இயக்குனர் ஷாஜியிடம் (வாஞ்சிநாதன் ஓபனிங் சீன் நினைவிருக்கிறதா) உதவியாளராக பணியாற்றியவராம். குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தான் ஜெயிக்க தன் ஊர் கதையையே படமாக்கி ‘ரிஸ்க்’ எடுத்திருக்கிறார்.

கன்னியாகுமரி – கேரள எல்லையில் நடைபெறும் குற்றச் செயல்கள் கதையின் பின்னணி என்று போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. படித்தவர்கள் அதிகமிருக்கும் மாவட்டமான குமரியில்தான் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பது ஒரு நகைமுரண்.

வசனகர்த்தா நமக்கு வேண்டியவர் என்பதால், படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டுக்கு 3டி லேமினேஷன் செய்யப்பட்ட இன்விடேஷன் வந்தது. “உள்ளே விடுவாங்கள்லே?” என்று ஒன்றுக்கு, இரண்டு முறை உறுதிப்படுத்திக் கொண்டே. ஏனெனில் வசனகர்த்தாவின் முந்தையப் பட ரிலீஸின் போது, ஒரு பத்திரிகையாளனுக்கு கிடைக்கவே கூடாத அவமானம் ஒன்றினை, ஒரு மொக்கை பி.ஆர்.ஓ.விடம் அடைந்திருந்தோம். படத்தின் இயக்குனரும் “எல்லோரும் வாங்க” என்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆல்பட் திரையரங்கில் ஆடியோ வெளியீடு. அனேகமாக இதுதான் அங்கே நடைபெறும் முதல் ஆடியோ வெளியீடாக இருக்குமென்று நினைக்கிறேன். இந்தக் கூட்டத்தை இயக்குனரோ, தயாரிப்பாளரோ, யூனிட்டோ சத்தியமாக எதிர்ப்பார்த்திருக்காது. ஹவுஸ்ஃபுல்.

இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்கவியலாத இயக்குனர்கள் அத்தனை பேரும் ஆஜர். நடிகர்களும், சினிமா வி.ஐ.பி.களும் நெரிசலில் சிக்கிக் கொள்ள, உதவி இயக்குனர்கள் அவர்களை கஷ்டப்பட்டு மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியும் திரண்ட இதுபோன்ற நிகழ்ச்சி சமீபகாலங்களில் நடைபெற்றதாக நினைவில்லை.

நிகழ்வுக்கு முன்னதாக ட்ரைலரும், மூன்று பாடல்களும் திரையிடப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டது.

ட்ரைலர் கட்டிங் அட்டகாசம். ‘அந்த பத்து ரூவா கண்ணாடியை தூக்கிப் போட்டுடு என்னை நல்லா முழுசாப் பாருய்யா’ என்று உடலை வளைத்து, குலுக்கி கொஞ்சும் அஞ்சலியை, திரையில் கண்டாலே ஓடிப்போய் இழுத்து அணைத்து முத்தமிடத் தோன்றுகிறது. ம்ஹூம். கரண் அசமஞ்சமாக ரியாக்‌ஷன் கொடுக்கிறார். அவரது கேரக்டர் அப்படி போலிருக்கிறது.

“கேரளாவிலிருந்து ஸ்ப்ரிட்டு கடத்தல், அரிசி கடத்தல், இது கடத்தல் அது கடத்தல். கடத்தல் தான்யா இங்கே தொழிலே” – சரவணனின் வசனம் படத்தின் அவுட்லைனை தெளிவாக்குகிறது. “ஸ்ப்ரிட்டு உறையணும்னா மைனஸ் 120 டிகிரி குளிர் வேணும். பத்தாங்கிளாஸ் புக்குலே படிச்சிருப்பீயே? படிக்கலையா? – கரண். ஓக்கே. கதை இதுதான். கரண் ஒரு வாத்தியார். ஏதோ ஒரு காரணத்தால் (வில்லனால் வஞ்சிக்கப்பட்டு?) தாதாவாகிறார். அவர் தாதாவாக இருப்பது அவரை காதலிக்கும் அஞ்சலிக்கு தெரியாது. ஒரு பக்கம் போலிஸ், ஒரு பக்கம் வில்லன், இன்னொரு பக்கம் காதலி. கரண் வென்றாரா தோற்றாரா என்பதை வண்ணத்திரையில் காண்க.

ஒரு டூயட், ஒரு குத்துப் பாட்டு, ஒரு ‘பஞ்ச்’ பாட்டு என்று கலந்துகட்டி மூன்று பாடல்களை திரையிட்டார்கள். அந்த ‘பஞ்ச்’ பாட்டின் எடிட்டிங் அபாரம். ஒரு படத்துக்குதான் 75 சீன்கள். இவர்கள் இந்தப் பாட்டுக்கே 75 சீன் படம் பிடித்திருப்பார்கள் போல. படம் வெளிவருவதற்கு முன்பாக இப்பாடல் மியூசிக் சேனல்களில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப் பட்டால், நல்ல ஓபனிங்கை படம் அள்ளுவதற்கு வாய்ப்பிருக்கிறது. படத்தை காணவேண்டும் என்கிற க்யூரியாசிட்டியை ஏற்படுத்துகிற பாடல் இது. டூயட் பாடலில் சில ஷாட்களில் அஞ்சலி பேரழகி. சில ஷாட்களில் ரொம்ப சுமார் ஃபிகர். ஆனால் கரண் ஆச்சரியப்படுத்துகிறார். அவ்வளவு குண்டான உடம்பை எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆக்கினார் என்று தெரியவில்லை. இளமைக்கால பிரபுவை அச்சு அசலாக திரும்பப் பார்ப்பது போலவே இருக்கிறது.

டிரைலர், பாடல்களை பார்த்தவரை கேமிரா ஒரு திருஷ்டிப் படிகாரம் என்று தோன்றுகிறது. டூயட் பாடலில் வரும் சூப்பர் ஸ்லோ காட்சிகள் செம மொக்கையாக எடுக்கப்பட்டிருக்கிறது. நிறைய அவுட் ஆஃப் போகஸும் கூட.

நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கும் புது தயாரிப்பாளர். வெற்றியடைந்தே தீரவேண்டும் என்று கடுமையாக உழைத்த இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிக நடிகையர். இப்படம் வெற்றியடையும் பட்சத்தில் தயாரிப்பாளர் அடுத்த படத்தை தயாரிக்கலாம். இயக்குனருக்கும், குழுவினருக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல நடிகரான கரண் இன்னொரு இன்னிங்ஸ் தெளிவாக விளையாடலாம். அஞ்சலிக்கு அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட் ஆகலாம். நாலு பேரு வாழ்ந்தால் எதுவுமே தப்பில்லை. எனவே இப்படம் வெள்ளிவிழாப் படமாக அமைய வாழ்த்துகிறேன்.

4 கருத்துகள்:

  1. ரொம்ப மோசம்.... வந்த படம் தெய்வத்திருமகளுக்கு விமர்சனம் செய்திருப்பீர்கள் என்று வந்து பார்த்தால் இன்னமும் திரைக்கு வராத படத்திற்க்கு விமர்சனம். ஏன் வசனம் எழுதியவர் தெரிந்தவர் என்பதாலா? காகம் கரையும் சத்தம் எங்கோ கேட்கின்றது....

    பதிலளிநீக்கு
  2. உங்களை அவமானப்படுத்திய பி.ஆர்.ஓவின் பெயர் "வி" என்று முடியுமா?

    பதிலளிநீக்கு